ஒன்று, இரண்டு, மூன்று என்று இறைவனை வரிசைப்படுத்திப் பாடு என்று முருகப்பெருமான் ஒளவையாரைக் கேட்டாராம். அது மாதிரி நானும் புராணம் (பழைய கதை) பாடிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் இந்த ஏழு நாளைக்குத்தான் ஆட்டம். அதுக்கும் கிடைக்கின்ற நேரத்தைத் தான் பயன் படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் எப்போவாவது ஒரு பதிவு போட்டு தப்பித்துக் கொள்ளலாம். அப்படி போட வில்லை என்றாலும் கூட யாரும் கேட்கப் போவதில்லை.
மூன்றாவது நாளுடன் விருந்தையும் மருந்தையும் முடித்துக் கொள்வதாக முந்தைய பதிவில் உறுதி கூறி இருந்தேன். கொடுத்த வாக்கு தவறுவதாக இல்லை. இருந்தாலும், இனி நான் இடும் இடுகைகளை மருந்து போல் கருதாமல் விருந்தாகக் கருதுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
எட்டாத எட்டு
நான்காவது நாள்,
சிங்கையில் சீனர்களுக்கு நான்கு என்றாலே ஆகாது, நான்கு வந்தால் டை(Die) என்பார்கள். நாலாவது மாடியில் வீடு வாங்கப் பயப்படுவார்கள். வாகனங்களுக்கு வாகன எண் நான்கு வராமல் பார்த்துக் கொள்வார்கள். இது லாட்டரி சீட்டு முதலான எல்லா விசயங்களுக்கும் பொருந்தும். ஆனால் எட்டு என்றால் அவர்களுக்குச் செல்வம். எட்டா நம்பர் எட்டாத இடத்தில் இருந்தாலும் விடமாட்டார்கள். ஆனால், நம் தமிழ் மக்கள், எட்டு வந்தால் குட்டிச் சுவரு என்று நினைத்துகொள்பவர்கள். எந்த செயலைச் செய்தாலும் எட்டு வரக்கூடாது என்று வேண்டிக் கொள்பவர்கள். இந்த விசயம் இங்கு சௌகரியமா இருக்கு. நான்கை நாங்க எடுத்துக்குறோம். எட்டை எட்டாதவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்.(சீனர்களில் பெரும்பாலானவர்கள், உயரம் குறைவானவர்கள்தான்) தமிழகத்தில் செழித்த அளவில் நூற்றில் ஒரு பங்கு கூட புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் நாத்திகம், பகுத்தறிவு, போன்ற விசயங்கள் எடுபடவில்லை அல்லது பெரியாரைப் போல் யாரும் அங்கு பிறக்கவில்லை. அயலகத்தில் இட ஒதுக்கீடு போன்ற வேறு சில விசயங்களுக்கு தேவை இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் இதைத் தேவையில்லாமல் இங்கு இழுக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா? நியாயந்தான்.
காயலாங்கடை
காயலாங்கடை! காயலாங்கடை!! என்று நம்மவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஒரு கார் கொஞ்சம் பழசாத் தெரிஞ்சா, இனி காயலாங்கடையில தான் போடனும்னு கிண்டாலாகச் சொல்வதைப் பார்த்திருக்கிறோம். கரகாட்டக் காரன் படத்துல பேரீச்சம்பழத்துக்கு ஆசைப்படும் செந்தில், பழைய இரும்பு வாங்குபவரிடம் காரைப் போடச் சொல்வது, அருமையான நகைச்சுவையைக் கொடுத்தது. காயலாங்கடைன்னா என்ன? என்று நம்மவர்களில் பலபேருக்குத் தெரியாது. அந்த காலத்தில் பெரும்பாலும் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள காயல்பட்டிணம் என்னும் பகுதியில் உள்ளவர்கள் பழைய இரும்பு மற்றும் பழைய பொருட்களை வாங்கும் கடைகளை தமிழகமெங்கும் வைத்திருந்திருக்கின்றனர். குறிப்பாக சென்னை மண்ணடி போன்ற பகுதிகளில் காயல் பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் பழைய இரும்பு மற்றும் பொருட்கள் வாங்கும் கடைகளை வைத்திருந்ததாகவும் சொல்கிறார்கள். அதனாலேயே பழைய இரும்பு மற்றும் பொருட்களை வாங்கும் கடையை நாம் இன்னும் காயலாங்கடை! காயலாங்கடை!! என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
பூச்சாண்டி
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க-உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே-நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே-நீ வெம்பி விடாதே!
எத்தனை பட்டுக்கோட்டையார் வந்து சொன்னாலும் நாம் இன்னும் நம் குழந்தைகளைப் பூச்சாண்டி காட்டிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுல நாம அதிகமாகக் காட்டுவது பழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் விக்கிறவரைத் தான். பட்டுக்கோட்டையார் சொல்றபடி செய்யலாம்னு நினைச்சாலும், பிள்ளைங்க பண்ணுகிற டார்ச்சர்ல பூச்சாண்டி காட்டலன்னா, எங்க அடங்குறாங்க? இது வெளிப்படையான கருத்து. சிலர், "என் குழந்தையை எந்த பூச்சாண்டியும் காட்டாமத்தான் வளர்க்கிறேன்" என்று சொன்னால்....! சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன். சொல்பவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தான் பழைய இரும்பு, ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம் விக்கிறவரைக் காட்டிப் பயமுறுத்தினோம் என்றால் , இங்கு சிங்கையில் இருக்கிற தமிழர்கள் கூட பழைய பொருட்கள் வாங்கும் காராங்கூனி(Salvage அல்லது நம்ம காயலாங்கடை மாதிரிதான்) -யைத்தான் காட்டிப் பயமுறுத்துகிறார்கள் . காராங்கூனி என்பது மலாய்ச் சொல் . மலேசியா மற்றும் ஈழத்தில் யாரைக் காட்டி பயமுறுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இப்ப நான் உங்களை எல்லாம் பயமுறுத்துவது மாதிரி தெரியுது.
ஒன்பது ரூபா நோட்டு அல்ல ஐந்நூறு ரூபாய் நோட்டு(காந்தி படம் போட்டது)பொதுவாக, நம்மவர்கள் குழுவாகச் செல்லும் போது, ஒருவர் சிறுநீர் கழிக்க கழிப்பறை சென்றால், மற்றவர்களும் பின் தொடர்வது வழமை. அதில் தவறொன்றும் இல்லை. நேர விரயத்தைத் குறைக்கலாம்.
தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டிற்கு மொரீசியஸ் நாட்டிற்கு தமிழக அரசு அனுப்பிய குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருக்கிறார். அங்கு புழக்கத்தில் இருக்கும் பணத்தாள்களில் தமிழ்மொழியும் இடம்பெற்றிருப்பது கண்டு மகிழ்ந்திருக்கிறார். அத்துடன், அவர் பார்த்த ஐந்நூறு ரூபாய்த் தாளில்
"ஐநூறு ரூபாய்" என்று எழுதி இருந்ததை தவறு என்று சுட்டிக் காட்டி இருக்கிறார். அதற்கு அங்குள்ளவர்கள், இந்தியாவிலுள்ள
ஐந்நூறு ரூபாய் நோட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவத்தை அப்படியே பயன் படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதைக் கேட்டு திரு.நன்னன் அவர்கள் வெட்கத்துடன் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டாராம்.
யாரோ ஒருவர் செய்த பிழை, சரி என பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாழையடி வாழையாக வந்துகொண்டிருப்பது வேதனையான செய்தியாக இருக்கிறது.
தொல்காப்பியச் சட்டம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
- நூறு முன் வரினும் கூறிய இயல்பே.460
- மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும்.461
- நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா. 462
தொல்காப்பிய எழுத்ததிகாரம் குற்றியலுகரப் புணரியலில் 462-ம் நூற்பாவில்
"நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா" என்கிறார் தொல்காப்பியர். அதன் படி
ஐந்து+நூறு =ஐந்நூறு என்பது சரி என்று நாச்சினார்கினியர் விளக்கம் தருகிறார்.
பின்பு வந்த நன்னூலிலும் உயிரீற்றுப் புணரியலின் 192 -ம் நூற்பாவில் "
ஐந்தனொற் றடைவதும் இனமுங் கேடும்" என்று கூறப்பட்டிருக்கிறது.
ஒன்றன் புள்ளி ரகர மாக இரண்ட னொற்றுயி ரேகஉவ் வருமே | 189 |
| மூன்றனுறுப்பு அழிவும் வந்தது மாகும் | 190 |
| நான்கன் மெய்யே லறவா கும்மே | 191 |
| ஐந்தனொற் றடைவதும் இனமுங் கேடும் | 192 |
| எட்ட னுடம்புணவ் வாகும் என்ப 193 |
அதற்கு சிவஞான முனிவர் பின் வருமாறு விரிவுரை கூறுகிறார்.
"அடைவதும் இனமும் என்றமையின் அருந்தாப்பத்தியால் ஐந்நூறு, ஐந்தூண் என்புழி ஒற்றுத் தன்னியல்பில் நிற்றல் கொள்க". அதனால்
ஐந்நூறு என்பதே சரி என்று
நாம் எடுத்துக் கொள்ளலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?
கொசுறு (கொசுறு என்றால் பிசுவுதல் அல்லது இலவச இணைப்பு மாதிரி, நாமெல்லாம் காய்கறி வாங்குனா, கடைக்காரர் கருவேப்பிலை, மல்லித்தழை சும்மா கொடுக்கிறது இல்லையா? கொடுக்காட்டியும் பிசுவி வாங்க மாட்டோமா? அதேதான் விட்டுறாதீங்க)என்ன கொசுறுன்னு சொல்லாமலே கொசுறுக்கே விளக்கமான்னு கேட்பது எனக்குப் புரிகிறது. தமிழறிஞர் மா.நன்னன் அவர்கள், தமிழக ஆளுநராக இருக்கும் சுர்ஜித் சிங் பர்னாலாவிற்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டின் நிரந்தர ஆளுநர் பர்னாலா!
அறிமுகம்வாங்க! வாங்க!! என்று கூவி அழைக்கிறார் ஒருவர். கணக்கு பிணக்கு ஆமணக்கு என்று சொல்லுவோம். இலக்கணம் சொல்லித் தருகிறேன் என்கிறார். இலக்கணம், தலைக்கனம் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால், இங்கு அப்படியில்லை. வெண்பா விருந்துக்கு இரு கரம் கூப்பி வரவேற்கிறார். டியூஷன் பீஸ் எல்லாம் அவர் கேட்கவில்லை. வெண்பா இலக்கணம் கற்றுக்கொண்டு
வெண்பா எழுதலாம் வாங்க, அப்படிங்கிறார்
அகரம்.அமுதா. கண்டிப்பாக அகர வரிசையில் இருந்துதான் தொடங்குவார்/தொடங்குகிறார். இளம் கவிஞர்கள் வெண்பா எழுத விருப்பம் உள்ளவர்கள், கவலைப்படாமல் அவருடைய பதிவுகளைப் படித்து பயன் பெறுங்கள். சந்தேகம் இருந்து கேட்டால், பதில் சொல்கிறார். வெண்பா எழுதும் நண்பா என்றழைக்கலாம். இளைஞர்தான்! பெண்கவிஞர் அல்ல!
தாயைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இருக்க முடியுமா?
திரு மோகனன் அவர்கள் தனது
வலைக்குடிலில் மரபுக் கவிதை பற்றி தெரிந்து கொண்டு தனது தாய்க்கு முதல் பா வடித்திருக்கிறார். அவர் எழுதி இருக்கும் மற்ற
புதுக்கவிதைகளையும் படியுங்கள். இவரைத் திரைப்படத்துக்கு பாடல் எழுத அழைத்தால் அழகாக எழுதிக் கொடுப்பார் போலும். மெட்டுக்குப் பாட்டெழுதும் வித்தையையும் கற்று வைத்திருக்கிறார்.
நிலவொளியில் ஒரு வெண்ணிலா, வலைப்பூவைத் திறந்தவுடன் மிளிர்கின்றன வெண்ணிலவும் விண்மீன்களும்.
நிலாவே, நிறைமதியைப் பற்றி கவிதை எழுதினால் எப்படி இருக்கும்? மாதம் ஒரு பூ பூக்கும் மகிழம்பூவைப் போல் இருக்கின்றன ஒவ்வொரு கவிதைகளும். நீங்களும் அந்த சுகமான அனுபவத்தைப் பெற வேண்டாமா? இப்பவே நிலவுக்குப் பயணப்படுங்கள்!
வெண்ணிலாவின் வரிகளைத் தேடி...!
பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள் என்கிற வலைப்பூவில்
மதி என்கிற மதன் அவர்கள் பிரிதலைப் பற்றி எழுதித் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார். இன்னும் வலிமையான கவிதைகள் பல வார்த்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு கவிதையும் தீட்டப்பட்ட கூரிய கொம்பு, அதை இன்னும் தீட்டியிருக்கிறார் வண்ணமாய்! வாசிக்க போகலாமே!
அடுத்தப் பதிவில் சி(ச)ந்திப்போம்...!
அன்பன்,
ஜோதிபாரதி.
ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!
வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்
பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்