07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 28, 2015

விடை பெறுகிறார் மூத்த பதிவர் G.M. பாலசுப்பிரமணியம், நன்றி அய்யா!!!


பொறுப்பேற்கிறார் இளம்பதிவர் பூ.கார்த்திக்,  வருக நண்பரே!

அன்பின் இனிய வலைப் பதிவர்களே! வணக்கம்!
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற, 
மூத்த பதிவர் அய்யா !
G.M. பாலசுப்பிரமணியம் அவர்கள் தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
அவர் தனது வலைச்சர வாரத்தில் மனதைத் தொட்ட பல பதிவர்களின் இடுகைகள்  பலவற்றை  நமக்கெல்லாம் பகிர்ந்தளித்து 

சுமார், 350 க்கும் மேற்பட்ட மறுமொழிகளும், 
71 தமிழ் மணம் வாக்குகளையும்,
1575 மேற்பட்ட பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.
தான் ஏற்றப் பணியை வெகு சிறப்பாக பதிவர்களை பகுந்தாய்வு செய்து வலையுலகிற்கு அவர் அடையாளம் காட்டிவிட்டு சென்றுள்ளார்.
தமது வலைச்சர வாரத்தை அழகாக வடிவமைத்து தொடுத்த அய்யா G.M.B அவர்களை நன்றி பாராட்டி, வணக்கம் செலுத்தி, வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
சென்று வருக அய்யா G.M. பாலசுப்பிரமணியம் அவர்களே!
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க....
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில், 1988ம் ஆண்டு பிறந்த 
வலைப் பதிவரும், நண்பருமான பூ.கார்த்திக். அவர்கள் விருப்பம் தெரிவித்து முன்வந்துள்ளார்.
"காற்றில் எழுதியவன்" என்ற வலை வாசகத்தோடு வலம் வரும்,
கார்த்திக் புகழேந்தி என்ற புனைப்பெயரில் எழுதி வரும்  இவர்
தமிழ் படைப்புலகில் 2011ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட வட்டார மொழிநடையில் சிறுகதை எழுத்தாளராக அறியப்படும் இவருடைய முதல் புத்தகம் "வற்றாநதி" என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அகநாழிகை பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது
இவர் தனது உயர் கல்வியை பாளையங்கோட்டையில் உள்ள கதீட்ரல் மேனிலைப்பள்ளியில் முடித்து,  தற்போது சென்னையில் பணியாற்றுகிறார். கரிசல்காட்டு இலக்கிய கர்த்தா திரு.கி.ராஜநாராயணன் ஆசிரியராகவும், திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் இணை-ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியராக வெளியிடும் கதைசொல்லி கத்தாய/ நாட்டுப்புற சிற்றிதழின் ஆலோசகராகச் செயல்படுகிறார். 

பொருநை-பொதிகை-கரிசல் அமைப்பின் பொருநை-கரிசல் பதிப்பகத்தின் நிர்வாகம் மற்றும் பதிப்பகப் பணிகளை கவனித்து வருகின்றார். 

தினமணி, அந்திமழை, ஆகிய இதழியல் ஊடகங்கள் இவரது படைப்புகளுக்காக தங்கள் பாராட்டுகளை வழங்கியுள்ளன.
சாகித்ய அகாதமி விருதுபெற்ற திரு.கி.ராஜநாராயணன், திரு.ஜோ டி குருஸ் ஆகிய படைப்பாளிகளை தன்னுடைய ஆதர்ச எழுத்தாளர்கள் என்று குறிப்பிடுகின்றார்.
தென்மாவட்டங்களின் வரலாற்றுக்கு ஊடுபொருளாக இருக்கும் நாட்டுப்புறக் கதைகள், தொல்பொருள் ஆவணங்கள், வட்டார வழக்கு மொழிகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றின் மீது ஆர்வமும், பயணங்கள், புகைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், திரைக்கதை, எழுத்து, வானொலி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகியவற்றில் ஈடுபாடும் கொண்டவர்.
இவரது அடுத்த சிறுகதைத் தொகுப்பு ஆரஞ்சு முட்டாய்என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.
பூ.கார்த்திக் அவர்கள் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பினை சிறப்புடன் செய்வதற்கு வலைச்சரம் குழு அன்போடு அழைத்து மகிழ்கிறது!
பூ.கார்த்திக் (கார்த்திக் புகழேந்தி) அவர்களை,  இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி! அவர்களை,  "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துகள்  G.M. பாலசுப்பிரமணியம் அவர்களே !
நல்வாழ்த்துகள் பூ.கார்த்திக் (கார்த்திக் புகழேந்தி) அவர்களே !
நட்புடன்,
புதுவை வேலு
மேலும் வாசிக்க...

வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 7-ம் நாள்


                          வலைச்சரத்தில் ஜீஎம்பியின்  7-ம் நாள்
                          ---------------------------------------------------------
ஏழாம் நாள்


வலைச்சரத்தில் இன்று என் ஏழாவதும் கடைசி நாளுமாகும் இது வரை பதிவர்களில் பலரை வகைப்படுத்தி அறிமுகம் செய்து வந்தேன் இன்று அறிமுகமாகும் பதிவர்களை நான்  வகைப் படுத்தவில்லை.
முதலில் சமுத்ரா வார்த்தைகளில் இருந்து மௌனத்துக்கு என்னும் தளத்தில் எழுதி வரும் மது ஸ்ரீதர் அசாத்திய திறமையும் ஞானமும் உள்ளவர். அவரும் பெங்களூர் வாசி. ஒரு முறை அவரை என் வீட்டுக்கு வரவழைத்தேன் அவரது எழுத்தையும் பொருள் மிகுந்த கருத்துக்களையும் வாசித்திருந்த நான் ஒரு பௌதிக பேராசிரியரை நடுத்தர வயதில் குறுந்தாடியுடன் கூடிய ஒரு நபரை சந்திப்பேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் கண்களில் மினுக்கும் ஒரு வாலிபரைச் சித்தரித்துப் பார்க்கவே இல்லை முதலில் கொஞ்சம் சங்கோஜமாகப் பேசியவர் விஷய ஞானம் மிக்கவர். அது என்னவோ தெரியவில்லை. நான் அறியும் பல பதிவர்களுக்கு சங்கீத ஞானமும் இருக்கிறது சமுத்ராவின் எழுத்துக்கள் அணு, அண்டம் அறிவியல் என்று என்னை பயமுறுத்தியது என்னைப் போன்றவர்களுக்காகவே கலிடாஸ்கோப் என்னும் தலைப்பிலும் ஜனரஞ்சகமாக எழுதி வந்தார். அவர் ஒரு சிறுகதை எழுதி இருந்தார் அதன் சுட்டியே நான் இப்போது கொடுப்பது நைவேத்தியம்படித்துப் பாருங்கள் ரசிப்பீர்கள்.

இன்றைய அறிமுகத்தில் அடுத்தவர் வாசன் என்பவர். எரிதழல் என்னும் வலைப்பூவில் அனல் பறக்க எழுதி வருபவர். ஒரு முறை சென்னைக்கு நான் சென்றிருந்தபோது சிரமம் பார்க்காமல் என்னை வந்து சந்தித்து இருக்கிறார்.அவ்வப்போது பதிவுகள் எழுதி வருகிறார் இவரது ஓரிரு பதிவுகள் படித்தால் போதாது ஒரு சாதாரண மனிதனின் உள்ளக் கிடக்கைகளை எந்த ஒரு காம்ப்ரமைசும் இல்லாமல் வெளியிடுவார் இந்த ஓப்பன்னெஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் மாதிரிக்கு ஒரு பதிவு டாஸ்மாக் பற்றியது தனிமனிதத் தாக்குதல் இல்லாமல் எழுதும் இவர் அவசியம் படிக்கப்பட வேண்டும்

அடுத்த அறிமுகம் அமுதவன். சொந்த ஊர்ர் திருச்சி. தற்சமயம் பெங்களூர் வாசி. நான் பூர்வ ஜெம கடன் என்னும் ஒரு பதிவு எழுதி இருந்தேன் . அதில் பின்னூட்டம் எழுதியதன் மூலம் நான் அறிய வந்தேன் இவருக்கு திரைப்பட மற்றும் எழுத்துலக பிரபலங்கள் பலரும் அறிமுகம் இவர் தமிழ்மண நட்சத்திரப் பதிவராக இருந்தபோது அவர் எழுதிய பல பதிவுகளைப் படித்துள்ளேன் பெரும்பாலும் இசையைப் பற்றி அதுவும் தமிழ்த் திரை இசையைப் பற்றி எழுதியது கண்டிருக்கிறேன் எனக்கு தமிழ்த் திரை இசையில் ஞானம் குறைவு என்பதாலும் இவர் அதுபற்றி விளக்கமாகப் பதிவிடுவதாலும் அடிக்கடி நான் இவர் தளத்துக்குப்போவதில்லை. இருந்தாலும் தமிழ்ப் பதிவுலக வாசகர்களுக்கு தமிழ்த் திரை இசை பற்றியும் திரையுலக நட்சத்திரங்கள் பற்றியும் இவர் பதிவுகள் மூலம் அறியலாம் அமுதவன் பக்கங்கள் என்னும் தளத்தில் எழுதி வருகிறார். இவர் எழுதி இருந்த பெண்கள் விரும்பும் பாடல்களின் சுட்டி உங்களுக்காக. . 

அடுத்ததாக காரிகன்  இவரும் அநேகமாக இசையைப் பற்றியே எழுதுகிறார் எனக்குச் சில நேரங்களில் இத்தனைப் பாட்டுகளை நினைவில் வைத்திருக்க வேண்டுமெனில் திரையிசைப் பாடல்களில் இவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு வியக்க வைக்கும் ஒரு முறை வாழ்வியலில் திரையிசைப்பாடல்கள் என்னும் பதிவினைப் பார்த்துக் கருத்துக்கூற காரிகனை அழைத்திருந்தேன் நான் கோர்த்த பாடல்களில் ஒன்றிரண்டு அவருக்குப் பிடிக்கவில்லை போலும் பின்னூட்டம் எழுதாமல் மெயிலிலோ இல்லை அவரது பின்னூட்டத்தில் மறுமொழியாகவோ எழுதி இருந்தார் சரியாக நினைவில்லை இசை விரும்பிகளுக்காக இதோ ஒரு சுட்டி

ன் வலைச்சர அறிமுகங்களில் கடைசியாக பரிவை.செ குமார் நான் எழுதி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்புக்கு சிறிதும் எதிர்பாரா வகையில் இவர் விமரிசனம் எழுதி இருந்தார். நண்பர் கில்லர்ஜீ அவருக்கு அந்த நூலைப் படித்துப் பார்க்க கொடுத்திருந்தாராம் என் பதிவுகளுக்கு அவ்வப்போது வருவார் . நானும் அவர் தளத்துக்குச் செல்வதுண்டு அவரை அறிமுகப் படுத்தும் பதிவாக அவர் என் நூலுக்கு எழுதி இருந்த

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னைப் பற்றியும் என் பதிவுகள் பற்றியும் குறிப்பிட்டு வந்திருக்கிறேன் . எல்லாம் ஒரு சுய தம்பட்டம்தான் இந்த ஒரு வாரகாலப் பதிவுகளில் உங்களை எல்லாம் திருப்தி செய்திருபேன் என்று நம்புகிறேன் SO LONG  BYE,,,,!  
 



 
  
மேலும் வாசிக்க...

Saturday, June 27, 2015

வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 6-ம் நாள்


                      வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 6-ம் நாள்
                      ----------------------------------------------------------


ஆறாம் நாள்.
 திரு ராதாகிருஷ்ணன் என் வலைப்பூவின் ஆரம்ப இணைப்பாளர் என்று எண்ணுகிறேன் இங்கிலாந்திலிருந்து எழுதி வருகிறார். சில புத்தகத் தொகுப்புகளும் வெளியிட்டிருக்கிறார் என்று தெரிகிறது  அதீதக் கனவுகள் என்னும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார்.நான் அவ்வப்போது அவர் தளத்துக்குச் செல்வேன் அவரும் எப்போதாவது வருவார். நான் பொதுவாகச்செல்லும் தளங்களில் இவரைக் காண்பது இல்லை. பலருக்கும் இவர் தளம் புதிதாய் இருக்கலாம் இவரது பதிவு ஒன்று மாதிரிக்கு.இறைவனும் இறை உணர்வும் 


திரு பக்கிரிசாமி நீலகண்டன் ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதுகிறார். அண்மையில் சில காலமாக இவரைப் பதிவுகளில் காண முடிவதில்லை. ஆனால் பதிவுகளை வாசித்துப் பின்னூட்டங்கள் ஆங்காங்கே இட்டு வருகிறார். இவரது தளத்தில் இவர் ஸ்டாட்டின்  எனும் மாத்திரையால் அவதிக்குள்ளானவர் என்று தெரிகிறதுஇந்த மாத்திரை கொலோஸ்திரலைக் கட்டுப்படுத்த கொடுக்கப் படுகிறது. என்னுடைய சாதாரணன் ராமாயண்ம் படித்து அதை நாந்தான் எழுதினேனா என்று கேள்வி கேட்டு இருந்தார். அவரது பிறவி மர்மங்கள் என்னு நீண்ட தொடரில் பல பதிவுகளைப் படித்து இருக்கிறேன் அவை முற்பிறவி எண்ணங்கள் பற்றி ஒரு மருத்துவர் தன் நோயாளியிடமிருந்து பெரும் செய்திகளைத் தாங்கியவை வித்தியாசமான பதிவுகள். முகவுரை மட்டும் இங்கே கொடுக்கிறேன் 

அடுத்த அறிமுகம் ஃப்ரான்ஸ் நாட்டில் இருந்து எழுதும் அருணாசெல்வம் ஆரம்பகாலத்தில் இருந்தே இவரது பதிவுகள் எனக்குப் பழக்கம் கவிதைகள் பல தாங்கி வரும் இடுகைகள். இவர் பெயர் பற்றிக் கேள்விப்பட்டவர்களுக்கு இவர் ஆணா பெண்ணா என்று சந்தேகம் இருந்தது போலும் ஒரு பதிவில் அவரே அதைத் தீர்த்து வைத்தார் அவர் ஒரு பெண்மணிதாங்கோ.மரபுக் கவிதைகள் எழுதும் இவர் ஒரு அகவல் வெளியிட்டிருந்தார். அதன் சுட்டி இதோ அகலிகை செய்தது சரியே

மதி சுதா ஸ்ரீலங்காவிலிருந்து எழுதுபவர். பல பதிவுகள் அங்கிருக்கும் நிலையைப்பிரதி பலிக்கும் பதிவெழுதுவது குறும்படங்களைத் தயாரித்து வெளியிடுவதிலும் ஆர்வமுள்ளவர் ஒரு வித்தியாசமான சிந்தனைப் பகிர்வு இதோ உங்களுக்காக..குறியீட்டு சினிமாவை ரசிக்கத் தெரியாத தமிழ் ரசிகர்கள் 


தஞ்சையம்பதி என்னும் தளத்தைப் பற்றி பதிவுலகில் அறியாதவர் இருக்க முடியாது தஞ்சையை சொந்த ஊராகக் கொண்டவர் தற்போது குவைத்தில் வாசம் அவர் அங்கிருந்தாலும் ஆன்மீக சம்பவங்கள் எங்கு நடந்தாலும் சுடச்சுட பதிவெழுதி விடுவார். பல ஆன்மீகக் கதைகள்நமக்குத் தெரிந்தாலும் அவற்றை இவர் சொல்லிச் செல்லும் நேர்த்தியே அலாதி. நல்ல கதை சொல்லி/ நிகழ்வுகளின் புகைப்படங்களும் காணொளிகளும் இவர் பதிவில் நிச்சயமிருக்கும் அண்மையில் தஞ்சயில் நடந்த தேரோட்டம் பற்றி விலாவாரியாக எழுதி இருந்தார் ஒரு மாற்றத்துக்கு ஆன்மீகமில்லாத ஒரு பதிவு இப்போதைக்கு   


 
 

மேலும் வாசிக்க...

Friday, June 26, 2015

வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 5-ம் நாள்


                              வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 5-ம் நாள்.
                              ----------------------------------------------------------


ஐந்தாம் நாள்
இன்று இப்பதிவில் காணப்படுபவர்கள் எல்லாம் பதிவுலக ஜாம்பவான்கள் நான் ஜாம்பவான்கள் என்று கூறப் பிரத்தியேகக் காரணமுண்டு. ஜாமபவான் அனுமனை ஊக்குவித்து அவரது திறமையை உணரச்செய்தார் என்பது கதை, அதுபோல் இதில் வரும் பதிவர்கள் எழுதுபவருக்குக் கிரியா ஊக்கிகள் என்றால் தவறாகாது. இவர்களது எழுத்தில் ஒரு முதிர்ச்சி இருக்கும் அனுபவம் இருக்கும் ஆதரவு இருக்கும் சிலநேரங்களில் சுயப் பிரதாபமும் இருக்கும் இவர்களை எழுதுவிப்பது எது. இவர்களுக்கு இருக்கும் நேரம் , திறமை,என்று சொல்லிக் கொண்டு போகலாம் எல்லாவற்றையும் விட இளைஞர்களோடு பந்தயத்தில் ஓடும் திறனும்தான்  ஆம் இன்று நாம் பார்க்கப்போவது மூத்தபதிவர்கள் பற்றி. மூத்தவர்கள் முதியவர்களாயும் இருப்பது சிறப்பு
சரி விஷயத்துக்கு வருவோம்.தமிழ்ப் பதிவுலகில் என் கண்ணில் பட்ட எழுபது வயதைத் தாண்டியவர்கள் யார் யார் என்று பார்ப்போமா. முதலில் இந்தப் பதிவுக்கு வழிவகுத்தவர் சூரி சிவா. அவ்வப்போது அவர் எழுதியதைப் படித்ததில் இருந்து அவரது வயது 73 அல்லது 74 இருக்கலாம். மிகுந்த நகைச் சுவை மிகுந்தவர். இசையில் ஆர்வம் கொண்டவர். மெத்தப் படித்தவர். பல விஷயங்களில் யாரும் எண்ணாத கோணத்தில் எழுதுபவர்.அவரை அவர் வீட்டிற்குச் சென்று சந்தித்து இருக்கிறேன்  அவர் நினைத்தாலும் பாடுவதை அவரால் தவிர்க்க முடியாது என்று எழுதி இருந்தார். சிவகுமாரன் கவிதைகள் பலவற்றைப் பாடி ஆடியோ வாக அனுப்புவார். ஒரு முறை கன்னட நாட்டுப்பாடல்  ஒன்றைத் தமிழ்ப்படுத்தி ( மாத்தாடு மாத்தாடு மல்லிகே) எழுதி  

இருந்தேன் . அதைப் பாடி எனக்கு ஆடியோ அனுப்ப வேண்டி இருந்தேன். எந்த ஒரு தகவலும் இருக்க வில்லை. பிறிதொரு சமயம் நான் எழுதிய ஒரு பாட்டுக்கு மெட்டமைத்துப் பாடி அதன் ஆடியோவை அனுப்பி இருந்தார். முன்பு நான் கேட்டு எழுதிய பாடல் பாட மனம் ஒப்பவில்லை என்று எழுதி இருந்தார்.அப்பாதுரையின் பதிவுகளுக்கு அவர் எழுதும் பின்னூட்டங்களை நான் ரசித்துப் படிப்பேன்.அவர் பதிவில் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது இன்றைய நாளை இனிதே கழிக்க இரண்டே வழிகள். உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் நாளை நன்றாகவே இருக்கும் என்று நம்புங்கள் ஏறத்தாழ இதுவே அவரை அடையாளம் காட்டும். அவர் ஒரு முறை சொன்னது. மூத்தது மோழை இளையது காளை என்பர். இன்றைய பதிவுலகம் காளைகளின் சிலம்பாட்டம். மூத்த பதிவர் எனைப்போன்று வயதில் மூத்தவர் பலர் உளர் . இல்லை எனச்சொல்ல வில்லை எனினும் எண்ணங்களிலும் எழுச்சிதரும் எழுத்துக்களின் முதிர்விலே முன்னணியில் நிற்பவர் என்னைக் கவருபவர்கள் இளைஞர்கள் தான் .அவர் எழுதி இருந்த ஒரு பதிவு உங்கள் பார்வைக்குசுப்புத் தாத்தாவின் வலைக்கு வாருங்கள்  


அடுத்ததாக திரு காஷ்யபன்  . நாக்பூரில் வசிக்கிறார்.என்னைவிட இண்டு வயது மூத்தவராக இருப்பார் என்று தோன்றுகிறதுஇந்த வயதிலும் இவரை எழுத வைப்பது எது என்று சிந்திக்கையில் அவர் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். எழுதுவது அவர் தொழிலாக இருந்தது.இருந்தாலும் இப்போது எழுத வைப்பது அவரது கொள்கைப் பிடிப்பே என்று தோன்றுகிறது. பொதுவுடமைவாதி. முன்பொரு பதிவில் சில நடைமுறை வழக்கங்களுக்குத் தெளிவு கேட்டு எழுதி இருந்தேன். அதன் பின்னூட்டத்திலவர் “I am a non believer, but I believe those who believe in God, because of the simple reason , they are my fellow beings” என்று எழுதி இருந்தார்.இந்தக் கருத்து ஏறக்குறைய என் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறது .. என்னுடைய சில எழுத்துக்களை இன்னார் படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்போது அவருக்கு அந்தப் பதிவை அனுப்பி வைப்பேன். அது மாதிரி கடவுள் அறிவா உணர்வா என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்கு அவரது கருத்தை கேட்டு எழுதி இருந்தேன். கடவுள் என்பது ஒரு கான்செப்ட் என்று தொடங்கி விரிவான பின்னூட்டம் எழுதி இருந்தார்.மற்றும் ஓரிரு பதிவுகளுக்கு கருத்து கேட்டு எழுதியிருந்தேன். எனக்கு அஞ்சலில் அந்தப் பதிவுகள் திறப்பதில்லை என்றும் கணினிக்கு எதிராகப் பல வருஷங்கள் போராடியவர். இப்போது அதனுடன் மல்லுக் கட்ட சிரமமாய் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார்.அவரது பதிவு ஒன்று மாதிரிக்கு ஒன்று இட ஒதுக்கீட்டை ஏற்கும் மனவளம் வேண்டும்  மனவளம் வேண்டும்


அடுத்து நான் கூறப்போவது கோவையில் இருந்து சாமியின் மன அலைகள் என்ற வலைப்பூவில் எழுதிவரும் டாக்டர். பழனிச்சாமி கந்தசாமி என்பவரைப் பற்றி. நான்  வலையில் எழுதத் துவங்கிய காலம் முதல் என் பதிவுகளைப் படித்துக் கருத்து எழுதுபவர்.  ஊக்கம் கொடுத்து வருபவர். பின்னூட்டங்கள் மிகவும் க்ரிஸ்ப்பாக ஓரிரு வார்த்தைகளில் இருக்கும். எந்த விஷயமாவது யாராவது சொல்லி விட்டால் அது பற்றி அவர் பதிவு எழுதி விடுவார். நாம் மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் பல விஷயங்களைஅதன் முக்கியத்துவம் தெரிந்து எழுதுவார். போர்த்திக்கொள்ளும் போர்வையின் தலைமாடு கால்மாடு அடையாளப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர் பாணியில் எழுதி விடுவார். சில நேரங்களில் அவர் எழுதியது குறித்து சில சர்ச்சைகள் எழுவதுண்டு. மனிதர் கவலைப்படவே மாட்டார். வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த மனிதர் என்பதே என் அனுமானம்.ஒரு கருத்தை எழுதிப் போட்டுவிடுவார். பின்னூட்டங்களில் சரவெடி வெடிக்கும். மாதிரிக்கு அண்மையில் வெளியான ஒரு பதிவுதீண்டாமையைவளர்ப்பது யார் 

பலருக்கும் பரிச்சயமான மூத்த எழுத்தாள்ர்.புலவர் இராமானுசம் முன்பெல்லாம் என் பதிவுகளுக்குத் தவறாமல் வருகை தந்து ஊக்கப் படுத்துவார். எனக்கு நான் எழுதுவது கவிதையில் சேராது என்ற எண்ணம் கவிதையின் இலக்கணங்களையாவது கற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. கவிதை கற்கிறேன் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதற்குப் பின்னூட்டமாக பாதை தெரிந்து விட்டது. பயணம் போகத் தயங்காதீர் என்று எழுதி உற்சாகப் படுத்தினார். பின்னொரு பதிவின் பின்னூட்டமாக நான் புலவன் சொல்கிறேன் நீங்கள் எழுதுவது கவிதைதான் என்று எழுதி ஊக்கப் படுத்தினார்.அடுத்த முறை சென்னை செல்லும்போது அவரை சந்திக்க விரும்புகிறேன் அவருடைய அண்மைப் பதிவு ஒன்று இன்றைய பள்ளிகள் பற்றி


எனக்கு ஒரு மூத்த பதிவரின் வலைத்தளத்தை  கீத மஞ்சரி அறிமுகப் படுத்தினார் . அவர் பெயர்  சொ.ஞானசம்பந்தன்.என்னைவிட  வயது மூத்தவர். இலக்கியச் சாரல் என்னும் வலைப்பூவில் எழுதுகிறார் ஆங்கிலம் ஃப்ரென்ச், லத்தீன் போன்ற பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற தமிழறிஞர்.பிறப்பொக்கும் என்று கூறி நாளும் எங்கும் உயர்வு தாழ்வுகளையே பார்க்கிறோம்  பிறப்பிலேயே உயர்வு தாழ்வு பண்டைக்காலத்தில் இருந்தது என்று பழைய பாடல்களை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார். பெரும்பாலும் இலக்கியப் பதிவுகளே. மிகவும் குறைவாகவே எழுதுகிறார். இந்த வயதிலும் எழுதும் ஆர்வம் போற்றத்தக்கது.இதோ ஒரு கருமி பற்றிய குட்டிக்கதை

நாளை இன்னும் சில பதிவர்கள் அறிமுகத்துடன் சந்திப்போம்
 
 


 

மேலும் வாசிக்க...

Thursday, June 25, 2015

வலைச் சரத்தில் ஜீஎம்பியின் 4-ம் நாள்


                     வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 4-ம் நாள்
                     ---------------------------------------------------------


நான்காம் நாள்
இன்று நான் பதிவுலக சக்திகளில் சிலரை அறிமுகப் படுத்துகிறேன் முதலில் திருமதி கீதா சாம்பசிவம் ஆன்மீக விஷயங்களில் இவர் கரை கண்டவர் என்று கூறப்பட்டதுண்டு 2000-க்கும் அதிகமான பதிவுகளை எழுதி இருக்கிறார். இன்ன தலைப்புதான் என்றில்லை. அவர் வீட்டில் குருவிகளைப் புகைபடமெடுத்தது முதல் திருமண சம்பிரதாயங்கள் சடங்குகள் போன்றவற்றில் தனக்கிருக்கும் நம்பிக்கைகளையும் எழுதுபவர். தான் கொண்டுள்ள சில கொள்கைகளில் அசையாப் பிடிப்பும் கொண்டவர். திருச்சி சென்றால் நான் சந்திக்க விரும்பும் ஒரு ஆற்றல் மிக்க பெண்மணி.இவரது பதிவுகளில் எதைக் குறிப்பிடுவதுஎதை விடுவது தெரியவில்லை இருந்தாலும் ஒரு ருசிக்காக இதோ 

தொழில் நுட்பத் திறனில் திருமதி ராமலக்ஷ்மி கோலோச்சுகிறார் குறிப்பாகப் புகைபடக்கலையைச் சொல்லலாம் இவரை பெங்களூரில் நடந்த ஒரு சிறிய பதிவர் சந்திப்பில் கண்டேன் கவிதைகள் எழுதுவார். ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார்.இவரை பதிவுலகில் தெரியாதவர் இருக்க வாய்ப்பில்லை போர்ட்ரெய்ட் பற்றிய இவரது பதிவைப் பாருங்கள் பலவிஷயங்கள் புரியும் 

அடுத்த சக்தி கீதமஞ்சரி என்னும் தளத்தில் எழுதி வரும் திருமதி கீதா மதிவாணன்  ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவர் திருச்சியைச் சேர்ந்தவர். சிறுகதைகளின் நீள அகல ஆழங்களைக்கண்டு விமரிசனம் செய்யும் திறன் வாய்ந்த வித்தகி ஆஸ்திரேலியாவின் சரித்திரம் முதல் அங்கு வாழும் சகல ஜீவராசிகளைப் பற்றியும் தாவரவகைகளைப்பற்றியும் எழுதி இவர் ஒரு தகவல் களஞ்சியமே உருவாக்கி இருக்கிறார். ஒரு முறை என் தோட்டத்தில் பெயர் தெரியாமல் வளர்ந்திருந்த சில வாசமில்லப் பூக்களின் பெயர் தெரியவில்லை என்று எழுதி அவற்றின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தேன். தகவல் களஞ்சியமல்லவா. எங்கெல்லாமோ தேடிக் கண்டு பிடித்து அது பற்றய விளக்கங்களும் கொடுத்திருந்தார். இவரது ஒரு பதிவுசாம்பிளுக்காக




அடுத்த சக்தி திருமதி ஷைலஜா. இவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு குட்டிப் பதிவர் மாநாட்டில் பங்கேற்கப் போனேன் . அப்போது நேரில் அறிமுகம்இவரும் பன்முகத் திறனாளி என் வீட்டுக்கும் திரு ஐயப்பன் கிருஷ்ணனோடு வந்திருக்கிறார் எழுதுவது அவர் உடலில் ஓடும் ஜீன்ஸிலேயே இருக்கும் போல. தந்தையும் பிரபல எழுத்தாளர். பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி இவருக்கு உறவு எழுத்துக்கள் பெரும்பாலும் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் இருக்கும் மாதிரிக்கு ஒன்று.”கொஞ்சம் சீரியசா'

பதிவுலகில் சக்திகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் நான் பதிவுலகில் ப்ரவேசித்தபோது எனக்கு ஊக்கம் அளித்தவர் சக்திப்ப்ரபா. இவரை நான் பெங்களூர் பதிவர் சந்திப்பின் போது  நேரில் அறிமுகமானேன் பெங்களூரில் இருந்தவர் இப்போது சென்னைவாசி ஆகிவிட்டார். பதிவர் திரு அப்பாதுரை ஒரு முறை புத்தாண்டு ப்ரமாணமாக இவரது பதிவுகளை விடாமல் படிக்கவேண்டும் என்று கூறி இருந்தார் சிலகாலம் சோவின் எங்கே பிராமணன் என்னும் கருத்தை இவர் பாணியில் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார். இப்போது பதிவுப்பக்கம்  எப்போதாவதுதான் வருகிறார் இவரது தளம் மின்மினிப்பூச்சிகள் இவரது அண்மையப்பதிவு ஒன்று உங்கள் கவனத்துக்குகுரு வந்தனம் 
 இனி இன்னும் வேறு சில அறிமுகங்களோடு நாளை சந்திக்கலாம்
 

 
 
மேலும் வாசிக்க...

Wednesday, June 24, 2015

வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 3-ம் நாள்


                          வலைச்சரத்தில் ஜீஎம்பியின் 3-ம் நாள்
                          -----------------------------------------------------------


மூன்றாம் நாள்
இன்றும் சில பதிவர்களை வகைப் படுத்தி அறிமுகப்படுத்துகிறேன்
முதலில் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டு வலைப்பூவில் தமிழில் எழுதிக் கொண்டு வரும் துளசிதரன் மற்றும் கீதா அவர்கள். இருவரும் கல்லூரி நண்பர்களாம் ஒருவர் சென்னையிலும் மற்றொருவர் பாலக் காட்டிலும் வசிக்கின்றனர். இருவருக்கும் ஒரே வலைத் தளம் துளசிதரன் தில்லையகத்து என்னும் பெயரில் இருவருக்கும் நல்ல கோ ஆர்டினேஷன் ஓரோர் சமயம் இது யாருடைய கருத்து என்னும் ஐயம் எழுவதுண்டு,.மின் அஞ்சலானாலும் ஒருவரை ஒருவர் உடனுக்குடன் தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாறி எழுத்துக்கள் வந்துவிடும். இவர்களுக்கு எழுதுவது மட்டும் போதாது என்று குறும் படமும் தயாரிக்கிறார்கள். பதிவுலகில் எனக்குப் பின் வந்தாலும் என்னைவிட அதிகம் அறியப் பட்டவர்கள் என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைச் சிறிதும் வெளிக்காட்டாமல் அனைவரையும் ஊக்குவித்துக் கருத்திடுவார்கள்  இதற்கு பல ஆதங்கப் பதிவுகள் எழுதி இருந்தாலும் எல்லோருக்கும் கருத்து வேறுபாடு இருக்காத ஒருபதிவு.


தமிழ் தமிழ் அதிலும் பண்டையத் தமிழையே அனுபவித்து ஒருவர் பதிவிடுவதென்றால் அவரது திறமையிலும் எழுத்திலும் அவருக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுவதாகும் ஊமைக் கனவுகள் என்னும் தளம் படித்தால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கலாம் கவிதை எழுதக் கற்கலாம் பண்டைய இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுக்க உதவுவார் மரபுக் கவியின் இலக்கணங்களையும் கற்பிப்பார் ஜோசப் விஜு இவரது பெயரை அறியவே எனக்கு நாளாயிற்று.  , நான் நீதிகேட்கிறேன் என்னும் ஒரு பதிவை எழுதி இருந்தேன்.அதற்கு பின்னூட்டமாக இக்குரல் பழங்காலத்திலேயே ஒலித்திருக்கிறது என்று எழுதி இருந்தார்.அதுவே ஒருவேளை அவரை இப்பதிவை வெளியிடச் செய்ததோ என்னவோ தெரியவில்லை உலகாயுதம்-கடவுளைக்கொன்றவனின் குரல்  படித்துப் பாருங்கள் ரசிப்பீர்கள்.

வலையுலகில் நான் சந்தித்த முதல் பதிவர். அவரை என் வீட்டுக்கும் அழைத்து வந்திருக்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவராக எனக்குத் தோன்றினார். இளம் பருவத்தினரை விழிப்புணர்வோடு இருக்கக் களப்பணிகளுக்கெல்லாம் கூட்டிச் செல்வார். அண்மையில் மந்திரியிடம் பாராட்டு வாங்கியவர் கதை எழுதுவார் கவிதையும் எழுதுவார். ஆனால் சில நேரங்களில் இந்த பெங்களூர் தந்தையையும்  மறந்து விடுவார் போலும்....! இவர் எழுதிய ஒரு கவிதை. படித்துப்பாருங்கள்மதுரை சரவணன் கை வண்ணத்தை. கடவுள் காஞ்சனா வாகிவிடுகிறார்




அடுத்ததாக செழுங்காரிகை என்னும் தளத்தின் உரிமையாளர். ஒரு விதத்தில் என் ஆசான் எனக்கு மரபு வழிக்கவிதை எழுத விருப்பம் இருந்தது. ஆனால் விதிமுறைகள் தெரியாதே. கணினியில் மேய்ந்தபோது இவரது சில பதிவுகள் தென்பட்டன. அவரைத் தொடர்பு கொண்டு நான் அறிந்தது எழுதுவதைச்சரிபார்க்கக் கேட்டுக் கொண்டேன் எனக்கு மரபுக் கவிதை வசம் நாட்டம் செல்லவில்லை. முயற்சியை நிறுத்திவிட்டேன் இவருக்கும் திருமணம் நிகழ்ந்தது அதன் பின் வலைப் பதிவில் தென்படுவதே இல்லை. இருந்தாலும் என் ஆசானையும் அறிமுகப் படுத்துகிறேன் பெண்கள் பற்றி அவர் எழுதிய ஒரு கவிதை நிச்சயம் ரசிப்பீர்கள் ரஜனிப்ரதாப் சிங் கேள்விப்பட்டிருக்க வேண்டுமே கேட்கலாமா கேர்ல்ஸ் சின்னதாசில டௌட்ஸ்.


இன்றைய அறிமுகங்களுள்  இறுதியாக கரந்தை ஜெயக்குமார். நான் அவரை கரந்தையில் ஒருமுறையும் மதுரைப்பதிவர்விழாவில் ஒரு முறையும் சந்தித்து இருக்கிறேன் எனக்குப் பயணங்கள் என்றால் பிடிக்கும் அவருக்கும் பிடிக்கும் என்று தெரிகிறது. பதிவர்களுள் நட்பை விரும்பும் ஒரு அதிசய மனிதர். பதிவுலகில் அவருக்கு என்று ஒரு பாணி உண்டு பெய்ர் போன மனிதர்களின் கதைகளை அவர் சொல்லிப் போகும் விதமே அலாதி. இவரைப்பற்றி நான் கூறுவதை விட நம் பதிவர்கள் அறிவார்கள் இருந்தாலும் அறிமுகத்தில் நான் ஒரு பதிவையாவது சுட்டிக் காண்பிக்க வேண்டுமே. அதுதான் எனக்கு சிரமம் தருகிறது எதைச் சொல்ல எதை விட. அவரது தள முகவரி தருகிறேன் எந்தப் பதிவை வேண்டுமானாலும் படிக்கலாம் அல்லது எல்லாமே நீங்கள் படித்ததாயிருக்கும் இன்று இத்துடன் முடிக்கிறேன் மீண்டும் நாளை சந்திப்போம்.
இவர்களை எந்த முறையில் வகைப்படுத்தி இருக்கிறேன் தெரிகிறதா? 




 .


 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது