07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, June 14, 2012

Old is...வெறும் gold ஆ?



அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களுக்கு,

நேற்று கொஞ்சம் மென்மையான அறிமுகங்கள்.. வாசித்தவர்கள் இளகி போயிருப்பீர்கள்.. உங்களில் கவிதை விரும்பிகள் சிலரைக் கண்டுகொண்டேன்.. மகிழ்ச்சி..

இன்றைய அறிமுகங்கள்..இரண்டு சீனியர் பதிவர்கள்.. சீனியர் என்பதற்கு அர்த்தம் வலையுலகில் நீண்ட நாட்களாய் எழுதிகொண்டிருப்பவர் என்ற பொருளில் சொல்லபடுகிறது.. நான் சொல்லும் சீனியர்கள் வயதளவில்...இந்த genre ல் பிரபலமான சென்னை பித்தன் ஐயாவை மிக சமீபத்தில்தான் பின்தொடர ஆரம்பித்தேன்.. இங்கே நான் சொல்லபோவது நான் நீண்ட நாட்களாய் பின்தொடரும் இருவர்.. என்னவென்று சொல்ல தெரியாத ஏதோ ஒரு காரணத்தால் இவர்கள் மீது எனக்கு எக்கச்சக்க ஈடுபாடு..

இருவரும் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்.. கவிதை, கதை, கட்டுரை, அனுபவ பகிர்வு என பல ஏரியாக்களிலும் அனாயசமாக புகுந்து விளையாடுவார்கள்.. இருவரும் வள்ளுவன்,பாரதி, பாரதிதாசன்,ஷெல்லி என்று பேசும் எழுத்தாளர்கள்.. நவீன எழுத்தாளர்களின் தாக்கம் இவர்களிடம் குறைவு...இவர்களை வாசித்தால் இவர்களின் தாக்கம்தான் நமக்கு ஒட்டிக்கொள்ளும்.. என்னுடைய வலையில் ஏதோ ஒரு பதிவிற்கு இவர்களின் கமென்ட் வந்துவிட்டால் எனக்கு தலைகால் புரியாது.. ஒருவர் நாத்திகர்.. மற்றொருவர் பக்தர்.. ஆழ்மன அழுத்தம்,சமுதாய அக்கறை எல்லாம் ஆங்காங்கே பீறிடும் எழுத்துக்கள்.. இருவருக்குள்ளும் நான் கவனித்தவரை பகிர்தல் புரிதல் ஏராளம்..



எழுத்தை கவனிக்கும் பலருக்கு இவர்களை ஏற்கனவே தெரிந்திருக்கும்... அதையும் மீறி தெரியாதவர்களுக்கு இன்று நான் இங்கே காட்டிகொடுக்கிறேன்...

அறிமுகம் # 6

பதிவர்: இரா.எட்வின் (நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை)
இணைப்பு: http://www.eraaedwin.com/

எழுத்துதான் எனக்கான இவரது முகவரி.. என்றோ ஒரு நாள் இன்ட்லியில் பிடித்தேன்.. எப்போதும் முதல் அறிமுகத்தில் ஒருவர் நம்மை ஆட்கொள்ளும் இடத்தை நாம் மறப்பதில்லை.. wills world cup'96 ல் சச்சினின் மேகிந்திய தீவுகளுக்கு எதிரான 70, கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரிந்துகொண்ட போட்டியது..விம்பிள்டன் டென்னிஸ் கோர்டில் சாம்ப்ராஸ் எனும் ஜாம்பவான், விதிமுறை புரிந்து நான் முதன் முதலாய் பார்க்க போகும் டென்னிஸ்..யாரோ ஒரு குடுமி ஐந்தாவது செட் வரை இழுத்து அவரை காலி செய்கிறான்..அருகிலிருந்த நீண்ட நாள் சாம்ப்ராஸ் இரசிகர்கள் கடுப்பாகிறார்கள்..நான் அந்த குடுமிக்கு அந்த கணமே இரசிகனாகிறேன்..பெயர் ஃபெடரராம்.. இப்படிதான் நிகழ்கிறது அந்த first shot..first impression என்பதெல்லாம்..

இங்கேயும் அதுதான் நடந்தது..முதல் இடுகையாக இவர் தளத்தில் நான் வாசித்தது அந்நியம்.. சிலருக்கு இதை வாசித்து பார்க்கும்போது..நான் மிகைபடுத்துகிறேனோ என்று தோன்றலாம்..நான் சொல்வது அதுதான் இவரது பதிவுகளில் எனக்கான first shot.. உங்களுக்கு இன்னும் இருக்கிறது..

ஷெல்லியை ஷெல்லியாக..ஒரு கிளாசிக் பதிவு.. நாத்திகராயினும் அதுதான் சரி என்று இவர் போதிப்பதில்லை..கடவுள் வழிபாட்டை விமர்சிப்பதில்லை..அதுதான் அழகு..ஆனால் தனது கொள்கைக்கு யாரேனும் வெளியாள் எந்த போர்வை போர்த்தகூடாது என்று சொல்லும் அவரின் இந்த கரு சாதாரணம்..ஆனால் நடை.. நம்மை மிதக்க வைக்கும்..

பாரதியார் பாரதிதாசன் சம்பந்தமான இலைமறைவு காட்சிகள் ஏராளம்..அவ்வளவும் அத்தனை சுவாரஸ்யம்..அப்படியொரு சம்பவம்தான் உச்சங்களின் முதல் சந்திப்பு..

இன்னொரு முக்கிய பதிவு எனில்..அது பெயரில் இருக்கிறது..எடுத்துக்கொண்ட கருபொருளை முற்றுபுள்ளியை நோக்கி இவர் கொண்டும் செல்லும் வரை மூச்சுவிடாமல் வாசித்துவிடலாம்..நிச்சயம் வாசிக்க வேண்டிய பதிவு..

விக்டோரியா, கிஷோர், கீர்த்தி என்று இவரது பகிர்வுகளில் வரும் பெயர்கள் முறையே அவரது மனைவி,மகன் மற்றும் மகள்.. இந்த கட்டுரையில் அவரது வீட்டினில் நடந்த ஓர் காட்சியை முன்நிறுத்தி எழுதியிருப்பார்..நமக்கில்லை கடவுள் கவலை...படிக்க தொடங்கி இரண்டு பத்திகளை கடந்தால் நிறுத்த மாட்டீர்கள்..

இவரது தளத்தில் நான் நூறாவது follower.. அவ்வளவு late...அதற்கு முன்னான எத்தனையைத் தவறவிட்டேனோ? நீங்க தாமதிக்காதீங்க...

அறிமுகம் #7


பதிவர்: ஹரணி- (ஹரணி பக்கங்கள்)
இணைப்பு: http://thanjavur-harani.blogspot.in/

முன்னவரின் ஸ்பெஷல் கட்டுரை பதிவுகள் என்றால்,இவருடையது கதைகள்...ரொம்பவும் குழப்பாத lucid language இவருடைய சிறப்பு..தனிமனித அழுத்தம்,சோகம்,அக்கறை எல்லாமே அந்த எழுத்துக்களில் விரவிக்கிடக்கும்.."பேருந்து" என்ற தலைப்பில் பல அத்தியாயங்களாய் நாவல் ஒன்றும் எழுதி வருகிறார்..அதை இன்னும் வாசிக்கவில்லை..நேரம் ஒதுக்கணும்..

டிசம்பர் பன்னிரெண்டாம் நாள் தமிழ் வலையுலகம் கன்னடர் இரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடி கொண்டிருந்த போது இவர் எழுதியிருந்த பாரதி பற்றிய "நினைபடுத்தல்" என்ற பதிவு கவனஈர்ப்பு...அதேபோலதான் சமீபத்தில் வாசித்த பாரதி தரிசனம்..என் மனதிற்கு மிக பக்கமான ஒரு இடுகை..

தவறவிடக்கூடாத சிறுகதை என்றால் அது மனமே எல்லை.. ஒரு மனிதன் மற்றொருவன் மீது வைக்கும் நம்பிக்கை எதை பொறுத்தது? எப்படி அளப்பது? எங்கேயோ மேயும் மன எண்ணங்களை ஏதோ ஒரு சம்பவம் புரட்டிபோடும்..அப்படியான ஒரு நிகழ்வை பேசும் இந்த சிறுகதை...

அவள் அவளாகவே..தாயைப் பற்றி எழுதப்பட்ட மற்றொரு கவிதை என்று மட்டும் இதை சொல்ல முடியாது...கணவரை இழந்த அவரது தாயின் வைராக்கியம் வரிகளில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும்...

கதை வனம்..வலைச்சரம் எழுதும்போதுதான் இதைப் படித்தேன்...இரண்டு சிறுகதைகளை ஒரே இடுகையில் கொடுத்திருக்கிறார்..இரண்டையும் அடுத்தடுத்து வாசித்தாலும் இரண்டின் ஜீவனும் அப்படியே உங்களுக்கு உள்ளிறங்கும்..எழுத்தாளனின் வேதனை ஒன்று, ஒரு வாழ்ந்து முடித்தவரின் மரியாதையை இன்னொன்றிலும் இழைத்திருக்கிறார்..புக்மார்க் செய்துகொண்டாவது நேரம் இருக்கும்போது வாசித்துவிடுங்கள்..

என்ன யோசனை? விரையுங்கள் இவர் தளத்திற்கு..

இன்று இந்த சீனியர்கள் இருவரையும் வலைச்சரத்தில் இந்த சிறுவன் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..சீனியர்கள் என்று சொன்னால் கோபிப்பார்களோ? :) எட்வின் ஐயாவை "ஐயா" என்றால் தோழர் அல்லது எட்வின் என்றே கூப்பிடுங்கள் என்பார்..அப்பா என்றால் 'எனக்கு சித்தப்பா வயதுதான் ஆகிறது' என்பார்.. வம்படியாக நான் ஐயா என்றுதான் அழைப்பேன்..:)

சொல்ல போனால் வயதானவர்,முதியவர் என்ற நிலை எல்லாம் பெருமைக்குரிய விஷயம்..நிறைய பேருக்கு அந்த பாக்கியம் எல்லாம் இந்த இயந்திர உலகில் கிடைப்பதில்லை..

ஹ்ம்ம்...ஏழு முடிந்தது.. பாதி கிணறு தாண்டிவிட்டேனா? பலே..

நாளை சந்திப்போம்...

என்றும் நன்றியுடன்..சி.மயிலன்



                                                
மேலும் வாசிக்க...

Wednesday, June 13, 2012

எதிரும் புதிரும்... ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...

அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களுக்கு,

நேற்று இரண்டு heavy weight பதிவர்களை அறிமுக படுத்தியதிற்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை துளிரிளிருந்து இன்றைய அறிமுகங்களை நோக்கி நடக்கலாகிறேன்...

கவிதைகள் பிடிக்காதவர்கள் இங்கேயே கழன்றுகொள்ளுங்கள்... ஆம்.. இன்று அறிமுகமாகும் இருவரும் "எழுதுவதெல்லாம் கவிதை, கவிதையைத் தவிர வேறொன்றும் இல்லை".. இவர்களுக்குள் ஒற்றுமை என்று ஒன்றுமே இல்லை.. பாலினம் முதற்கொண்டு... ஒருவர் கொஞ்சம் தொன்மையான மொழியை கையாளுபவர்.. மற்றொருவர் புது கவிதை மட்டுமே.. எப்போதாவது காதல் / காதல் மட்டும், சமயங்களில் ஐந்தாறு பத்திகளைத் தாண்டும் / அதிக பட்சம் நாலு வரியைத் தாண்டாது...என்று இவர்களுக்குள் முரண்பாடுகள் ஏராளம்.. இரண்டிற்கும் கவிதை இரசிகர்கள் சொக்கிபோவார்கள் என்ற ஒரே புள்ளிமட்டும்தான் இவர்களுக்கான பொதுநிலை...




மழைச்சாரல், மொட்டைமாடி, மாலைநேர தேநீர்.... இந்த மாதிரியாக பிதற்றும் என்னை மாதிரி நண்பர்களுக்கு இதோ இந்த இரு அறிமுகங்கள்...

அறிமுகம் #4

பதிவர்: கௌரிப்பிரியா (தூரல்வெளி)
இணைப்பு: http://thooralveli.blogspot.in/

நான் வலைத்தளத்தில் சந்தித்தவரை பெண் பதிவர்கள் நிறையப்பேர் கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்..அவர்களும் சமுதாயம் சார்ந்த கோபம் கொப்பளிக்கும் புரட்சி கவிதைகள் நிறைய எழுதுகிறார்கள்.. நிறைய வாசித்திருக்கிறேன்.. இரசிக்கும்படி சிலர் காதல் கவிதை எழுதியிருக்கிறார்கள்.. ஹேமா அவர்களை நிறைய பேர் வாசித்து இருப்பீர்கள்..கவிதை பதிவுகளில் எனக்கு மிக விருப்பமான பதிவர் அவர்.. அதே அலையை,அதே ஆளுமையை,அதே மொழி வீரியத்தை நான் பார்த்தது இவருடைய கவிதைகளில்தான்..

மருத்துவர், என்னுடன் கல்லூரியில் ஒரு வருடம் சீனியர்... என்ற போதெல்லாம் இவர் கவிதை எழுதுவார் என்பதே எனக்கு தெரியாமல் போனது, வருத்தம் கலந்த ஆச்சர்யம்... இளநிலை கல்லூரி முடித்து, முகநூல் வாயிலாகத்தான் இவரது வலைத்தளம் பார்த்தேன்.. கவிதைகள் எல்லாமே "சுரீர்" இரகம்...விகடன், உயிர்மை, அகநாழிகை என்று பல அங்கீகாரங்கள்... பேசிக்கிட்டே இருக்கேனா? சரி அவங்க கவிதைகள பாப்போம்...

மழையைப் பார்த்தாலே...அவள்,நான்,மண்வாசனை என்று காதல் கவிதைகள் மட்டுமே தோன்றுமிடத்தில், இயற்கை அன்னை மழை, வளம், வயல், பாசனம் என்று பசுமை விகடனுக்கு கவிதை எழுதுமிடத்தில், "மழையினில் இப்படி ஒரு கவிதையா? ச்சே... " என்று தோன்றவைத்த இவரது பொதுமைய வட்டங்கள்.. இந்த ஒரு சோறு பதம் போதும் என்றாலும் இன்னும் இருக்கிறது...

இறுதிச் சொல்..."நீ எழுதுறதுக்கு பேரெல்லாம் கவிதைன்னு இனிமே சொல்லிக்கிட்டு திரியாத..."ன்னு எனக்கு நானே சொல்லி கொண்ட கவிதை இதுதான்..நிச்சயம் முதன்முறை வாசிக்கும்போது புரிய தாமதமானது..புரிஞ்சதும் அந்த கவிதையை விட்டு வெளியே வர மனம் தாமதித்தது..

அதே போலதான் காணாமல் போனவை..இதில் புரிந்துகொள்ள பெரிதாய் ஒன்றுமில்லை...ஆனால் வரிகளாய் வெளிகொணர்ந்த சரமான வார்த்தைகள் அவ்வளவு அழகு...

மற்றொரு பதிவான ஒரு ஓவியம் ஒரு கவிதை..ஒரு முறை வாசிப்போடு உங்களை விட்டுவிடாது..எப்படி இந்த வரிகள்? எங்கே அதற்கான கரு...? வியப்புதான்..

சதிகாரி, இராட்சசி, மது, மரணம் என்று விரியும் காதல் பிரிவு கவிதைகள் வாசித்தே வெறுத்துபோனவரா நீங்கள்..? மாறுதல் வேண்டின் வெற்றிட நிரப்பிகள்.. கணினி திரை முன் சிலர் கைதட்டிவிடுவீர்கள்...:)

இங்கே வலைச்சரத்தில் அவர்களை அறிமுகம் செய்வதில் பேருவகை...

அறிமுகம் # 5

பதிவர்: கோவி (govi poems- காதல்) 
இணைப்பு: http://govipoems.blogspot.com/

எப்படி ஓவியம் பழக நினைப்பவனுக்கு சூரியனும், தென்னை மரமுமோ அதேபோல்தான் கவிதை கிறுக்க நினைப்பவனுக்கு "காதல்".. அன்பே, அட்டு பீசே, கொலுசே, நீ, நான், மேகம், வானம்... என்று மடக்கி மடக்கி எழுதி ஒரு ஆச்சர்யகுறியைப் போட்டுவிட்டால் கவிதை ரெடி.. இப்படிதான் பள்ளி நாட்களில் நானும் கிறுக்க பழகினேன்.. பாரதிதாசன் கவிதைகள் புத்தகம் வாசித்ததும், மிக மரியாதையுடன் காதல் கவிதை எழுத நிறுத்திகொண்ட என்னை மீண்டும் எழுத உசுப்பிவிட்டவர் தபூ சங்கர்... காதலை காதலிக்க வைத்தவர்.. அவர் பாணியில் எழுதுவதற்கு பெரிய இலக்கணம், சொல்லாடல், எதுவும் தேவையில்லை.. இரசனை..இரசனை இருந்தால் போதும்...பேச்சு வழக்கில்தான் இருக்கும்... ஆனால் அது நிச்சயம் கடினம்...லிட்டர் கணக்கான காதல் கவிதைகளைவிட இந்த சாஷே வடிவங்கள் அட்டகாசம்...

நிறைய பேர் இந்த பாணியில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள்.. நண்பர் பிரேம் நிறைய எழுதி இருக்கார்.. சமீபத்தில் என் பங்குக்கு நான் எழுதுனது இது...


நண்பர் கோவி அவர்கள்,ஒரு வலைத்தளம் முழுதும் அதே வகையறா காதல் கவிதைகள் மட்டுமே தீட்டிக் கொண்டிருக்கிறார்... ஆரம்பிப்பதற்குள் முடிந்துவிடும் வகைதான் எல்லாமே..சிலவை ஒரு வரி மட்டும்தான்.. ஆஹா ஓஹோ என்றெல்லாம் பொதுவாக இவ்வகை கவிதைகள் இருக்காது.. படிக்கும்போது உதட்டோரம் ஒரு சிரிப்பு வரும்.. நல்லாயிருக்கு என்பதற்கு அதுதான் அடையாளம்..

குட்டி குட்டி கவிதைகள் எல்லாமே, என்பதால் link எல்லாம் கொடுக்காமல் sampleகளை நேரடியாக இங்கேயே வழங்குகிறேன்...

நான் என்ன எழுதினாலும்
நீயும் காதலும்
அதில் எங்கேனும்
வந்துவிடுகிறீர்கள்..

அழகாய் இருக்கிறாய் என்பதற்காக மட்டுமல்ல
அழகாகவும் இருக்கிறாய் என்பதற்காக உன்னை காதலிக்கிறேன்..

சத்தம் வராமல்
முத்தம் தர சொல்கிறாய்..
உனக்கு தந்துவிட்ட
சந்தோஷத்தில் முத்தம்தான்
சத்தமிடுகிறது..

அநேகமாக நடக்க தெரிந்த கவிதை நீயாகத்தான் இருப்பாய்..
இன்னும் எத்தனை கவிதைகளைத்தான் உன்னுள் தேக்கி வைத்திருக்கிறாய்?

நீ குளித்தபின் காற்றிடம்
கெஞ்சிகொண்டிருக்கிறது கூந்தலின் ஈரம்
உலர்த்தி விடாதே என்று..

எப்டி..? புடிச்சவங்க சீக்கிரம் கோவியின் வலையை நோக்கி படையெடுங்க...

எஞ்சிய எட்டு பேர் யார் யார்? தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே.. நாளை சந்திப்போம்..

என்றும் நன்றியுடன்.. சி.மயிலன்







மேலும் வாசிக்க...

Tuesday, June 12, 2012

குப்பனோ சுப்பனோ அல்ல..


அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே...

இந்த பதிவினை வாசிக்க தொடங்கும் முன் முந்தைய பதிவினை வாசிக்காதவர்கள் கொஞ்சம் அதனை எட்டிப் பார்த்துவிட்டு வரவேண்டுகிறேன்... ஏற்கனவே எனக்கான அறிமுகத்தை எழுதி இப்போது எஞ்சிய பிற பன்னிரண்டு பதிவர்களை நோக்கிய நடை இங்கே தொடங்குகிறது...

அங்கீகாரம்.. ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு முக்கியம்..? அதுவும் தரமான எழுத்தாளனுக்கு...? இன்று நான் உங்கள் முன் நிறுத்தும் இருவரும் தங்களின் எழுத்துக்கான அங்கீகாரத்தை இன்னும் பெறவில்லை என்பது என் வருத்தம்.. "அதான் இவ்வளவு ஹிட்ஸ் உள்ளதே,அவர்களது தளத்தில்? அப்பறமென்ன?" என்று நீங்கள் கேட்கலாம்.. அதற்கு இரண்டு பதில்கள் என்னிடம் உள்ளது..

ஒன்று, நான் சொல்வது "வெறும்" அங்கீகாரம் இல்லை.. "இவர்களுக்கான" அங்கீகாரம்..
இரண்டு, "ஹிட்ஸ்" என்பதை பெரும்பாலும் நிர்ணயிப்பது தலைப்புதான்... உள்ளே வரவைத்துவிடும் தலைப்பு.. அதனைத் தாண்டி வாசிப்பு என்பதை பெரிதும் தீர்மானிப்பது பதிவின் நீளமும், வகையறாவும்தான்.. நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல கட்டுரை வகையறாகளுக்கு இங்கே வரவேற்பு இல்லாததும் கூட இங்கே ஒரு காரணம்.. இவர்கள் இருவருக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் என்று சொல்லவேண்டுமென்றால் இருவரும் சுஜாதா இரசிகர்கள், கட்டுரை பிரியர்கள், அவ்வபோதான இலக்கியவாதிகள்...

பலர் ஏற்கனவே இவர்களை அறிந்திருக்கலாம்.. எஞ்சியவர்களுக்கு..yes..Go for it...



அறிமுகம் # 2

பதிவர் ஜேகே ( வலைத்தளம்- வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை)
இணைப்பு: http://www.padalay.com/

இவர் எந்த மாதிரி பதிவர்..? அவரை மாதிரி, இவரை மாதிரி என்று எவரோடும் ஒப்பிட முடியாத எழுத்தாளர்... ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் வாழும் யாழ்பாணத்து பூர்விகவாதி இந்த படலை.. பெரும்பாலும் கதைகள், கட்டுரைகள் மட்டும் கலாய் கவிதைகள்தான்.. எழுத்து நடை விறுவிறுப்பை தூண்டும் அதே நேரம் கொஞ்சம் கவனத்தை விட்டோம் என்றால் அந்த பதிவே நமக்கு புரியாமல் போகும்.. நான் சலிக்கவே மாட்டேன்.. இரண்டுமூன்று முறை வாசித்தாவது உள்ளே நுழைந்துவிடுவேன்.. காரணம் அவரது எழுத்தில் இருக்கும் intrinsic flavour.. எழுத்தை முழு நேர பணியாக எடுத்து கொண்டாலோ இல்லை புக்கர் கிடைத்தாலோ, துளியும் ஐயமில்லை... பெரிய ஆளாய் வருவார்.. சச்சின், ஃபெடரர், சுஜாதா என்று எனக்கும் அவருக்கும் கொஞ்சம் favourites sharing இருப்பதும் கூட அவருடைய நடைக்கு நான் இசைந்துபோனதிற்கு காரணமாய் இருக்கலாம்..

அவரது பதிவுகளைப் பற்றி எழுத தொடங்கும் போது முதலில் வந்து நிற்பது வியாழ மாற்றம்என்ற அவரது தொகுப்பு பதிவுகள் தான்...தவறாமல் எல்லா வியாழ கிழமைகளிலும் எப்படி அப்படி ஒரு தொகுப்பினை அவரால் தொடுக்க முடிகிறது என்று பல முறை பொறாமை பட்டுள்ளேன்... குறிப்பாக அதில் துவக்கத்தில் அவர் எழுதும் "டேய் ஜேகே" பகுதி.. இது கிட்டத்தட்ட விகடனில் வரும் "நானே கேள்வி,நானே பதில்" பாணி தான்.. என்றாலும் "ஹாய் மதன்" பாணியில் பதில்களில் ஒரு research பெரும்பாலும் இருக்கும்... பதிவு மிக நீளம்.. ஒரே ஷாட்டில் படிக்கமுடியாது சமையங்களில்.. அவரிடமே இதை தெரிவித்து இருந்தேன்... அதற்கு சொன்ன பதில் நான் அறியாமல் என்னை inspire செய்துவிட்டதா என்று தெரியவில்லை.. அதற்கு பின் என் பதிவுகளின் நீளத்தை நானும் பொருட்படுத்துவதை நிறுத்திவிட்டேன்...

அந்த பதில்,

நூறு பதிவுகளைத் தாண்டி எழுதி கொண்டிருக்கிறார்... இவரது நூறாவது பதிவு: சச்சின்.. பெயரை கவனித்தீர்களா? "நூறு" என்பதற்கு பதிலாக அப்படி வைத்திருக்கிறார்.. இந்த பதிவின் நடுவில் வரும் "இது நூறாவது பதிவு" என்ற வரிக்கு முன்னான பத்திகளை இதுவரை ஒரு 'சச்சின்' முறை வாசித்து இருப்பேன்.. அவரது அக்மார்க் நடை அது.. இந்த குறிப்பிட்ட பகுதி போதும் அவரை உங்களுக்கு பிடித்துபோக...

சிறுகதைகள்..அதை எப்படி வகைப்படுத்துவது தெரியவில்லை.. பெரும்பாலும் fiction இனத்தில் சேர்க்கலாம்.. என்னை பிரமிக்க வைத்த அவரது சிறுகதை கதை சொல்லாத கதை.. பிரமிப்பு என்பதை விட மிரட்சி சரியான வார்த்தை.. தவிர,அவருக்கே பிடித்த சிறுகதையாக அவர் சொல்லியிருப்பது மேகலா.. ஒரு நகைச்சுவை சிறுகதையும் உண்டு...கக்கூஸ்..(எனக்கு இது சிரிப்பு மூட்டியது.. சிலருக்கு அருவருப்பு கூட வரலாம்..)


terror kummi யின் சென்ற ஆண்டிற்கான "சிறந்த அறிமுக பதிவர் யார்?" என்று கணிக்கும் போட்டி வைத்திருந்தால் அதில் நான் ஜெயித்திருப்பேன்.. மிக எளிதாக இவர் பெயரை சொல்லி... அந்த அங்கீகாரத்தை மீறியும் இவருக்கு வரும் வாசகர்கள் குறைவே என்று எனக்கு தோன்றுவதால் (அவருக்கும் அப்படி தோன்றுவதை அவ்வபோது உணர்ந்திருக்கிறேன்) என் பங்கிற்கு இவரை இங்கே முன் நிறுத்துகிறேன்..

அறிமுகம் # 3

தளம்: chilled beers- மச்சி ஓபன் தி பாட்டில்..
இணைப்பு http://chilledbeers.blogspot.in/

இவரை பற்றி சொல்லணும்ன்னா திருநெல்வேலிகாரர்.. வசிப்பது பெங்களூரில்... பெயரையோ முகத்தையோ வெளியிடாமல் திரிந்ததால் ஆரம்ப நாட்களில் பதிவுலகில் இருக்கும் ஏதோ அனுபவசாலியின் இன்னோர் வலைத்தளம் என்றே சந்தேகித்து வந்தேன்.. காரணம் ஆரம்பமே நெத்தியடி பதிவு...டாஸ்மாக்கில் எம் பி ஏ.. அதனை அவர் முடித்த விதம்தான் கவன ஈர்ப்பு...

ஒருவர் வலைத்தளத்தில் இருக்கும் அணைத்து பதிவுகளையும் நான் வாசித்திருக்கிறேன் என்றால் அது இவருடையதுதான்.. 33 பதிவுகள்தான் எழுதியுள்ளார் என்பது மட்டும் காரணம் இல்லை.. ஒவ்வோர் பதிவின் இடைவெளி அதிகம் இருப்பதாலோ என்னவோ எல்லாமே மெருகேறிய இரகம்.. சினிமா விமர்சனம் அவருக்கே உரிய பாணியில் எழுதுவார்..மௌனகுரு- விமர்சனம்..வாசிச்சு பாத்திங்கன்னா புரியும்...

இதுல என்ன இருக்கு? இதத்தான் வலையுலகுல நிறைய பேர் பண்ணிட்டு இருக்காங்களேன்னு நீங்கள் நினைத்தால் இவரின் இலக்கியதுவத்தை வைத்து இவரை தனிமைபடுத்தி காட்டமுடியும்...குறிப்பாக இரண்டு இடுகைகள்..
இரண்டும் மனுஷன் சும்மா மிரட்டியிருப்பார்...

ஆராய்ச்சி அலசல் கட்டுரைகளும் அவ்வபோது ரிலீஸ் ஆகும்.. ஏழாம் அறிவு படம் வெளியான சமயம் கிட்டத்தட்ட சினிபதிவுலகமே அந்த போதிதர்மரை U-turn எல்லாம் எடுத்து கலாய்த்து கொண்டிருந்த நேரம் இவர் எழுதிய போதிதர்மன் சூத்திரம்- ஓஷோ விளக்கம்.. 'செம்ம' இரகம்.. அதே போல இப்போது சமீபத்தில் வெளியான '3' படத்தினை தொடர்ந்து அவர் எழுதியிருந்த மன சிதறல் தொடர்பான கட்டுரையும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று..

terror kummi அறிமுக பதிவருக்கான இரண்டாம் பரிசிற்கு நான் கணித்து இருந்தது இவரைத்தான்.. அங்கே அது நடக்கவில்லை.. ஆனந்த விகடனில் திருச்சி பதிவு வலையோசையில் என்னுடைய தளம் வெளியான அதே நாளில் சென்னை பதிப்பில் இவருரைடைய தளம் வெளியானதில் பெரும் மகிழ்ச்சி...

ஹப்பா...இதுவும் நீளமான பதிவா போயிருச்சு.. இவர்களைப் பற்றி எழுத இந்த ஒரு பதிவு ஒதுக்கியதில் ஏதோ ஒரு பெரிய பொறுப்பை இறக்கி வைத்த திருப்தி..

நாளை சந்திப்போம்..

என்றும் நன்றியுடன்...சி.மயிலன்
மேலும் வாசிக்க...

Monday, June 11, 2012

ந்தோ வந்துட்டேன்...


வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

"ஆசிரியர்"... எவ்வளவு பெரிய வார்த்தை அது...?
வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியர் பணி ஏற்கிறீர்களா? என்று வந்த மின்னஞ்சல் நிச்சயம் என்னை நெகிழ செய்தது...
பெருமையுடன் ஏற்றுகொண்ட பொறுப்பை இங்கே இனிதே துவக்குகிறேன்..



இதுநாள் வரை நான் அவதானித்தபடி, பதிவுலகில் பல குழுமங்கள், அணிகள் இருக்கத்தான் செய்கிறது.. அதோடு அந்தந்த குழுமம் தாண்டிய வாசிப்பு கொஞ்சம் குறைவே... எனக்கு, என் தளத்திற்கு என்று ஒரு இருபது பேர் இருக்கிறார்கள்.. நிச்சயம் நான் எந்த பதிவு (அது குப்பையே ஆயினும்) போட்டாலும் வாசித்துவிடுவார்கள்.. ஆனால் அந்த குழுமம் தாண்டிய ஒரு reach கிடைக்கும் பதிவுகளைத்தான் அதிகம் சிலாகிக்கிறேன்.. இதே நிலைமைதான் எல்லா இடத்திலும்.. நமக்கு தெரிந்த வலையுலகம் தாண்டி நாம் பயணிப்பதில்லை.. வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்கும் பலரையும்,அவர்கள் அறிமுகப்படுத்துபவர்களையும்,இங்கே பின்னூட்டம் இடுபவர்களையும் வைத்து பார்க்கும் போது இந்த குழுமத்தில் நான் அன்னியப்பட்டு நிற்கிறேன்..
எனவே முதல் வேலையாக வலைச்சர குழுமத்தில் இருக்கும் நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன்...

எழுத்தார்வம் எங்கு துவங்கியது என்று சரியாக சொல்ல முடியாது.. சீனா ஐயா முன்னுரையில் சொல்லியிருந்ததுபோல பாடம் தாண்டிய தமிழை முதலில் வாசிக்க தொடங்கியது விகடனில்தான்.. விகடன்தான் பள்ளி நாட்களில் சுஜாதாவை எனக்கு காட்டிகொடுத்தது, கல்லூரி நாட்களில் தபூ சங்கரை அறிமுகம் செய்து வைத்தது, மிக சமீபத்தில் ராஜு முருகனை முன் நிறுத்தியது... இது போல ஒவ்வோர் சமயமும் என் வாசிப்புகள் அங்கிருந்துதான் விரிந்தது....சுஜாதா என்ற genius முதல் சாரு நிவேதிதா போன்ற குப்பைவரை நவீன எழுத்தாளர்களைத்தான் நிறைய வாசித்திருக்கிறேன்.. இலக்கிய வாசிப்புகள் மிக குறைவு...

தேர்ந்தெடுத்த துறையின் அழுத்தம் காரணமாய் எழுதுவதற்கான நேரம் ஒரு பெரும்பற்றாகுறைதான். காகிதங்களில் எழுதி எழுதி காணாமல் போன எழுத்துக்களை எண்ணி வருத்தப்படும் வேளைதான் பதிவுலகம் கண்ணில் பட்டது.. எழுத தொடங்கி ஒரு வருடம் கூட இன்னும் நிறையவில்லை.. அதற்குள் கிடைத்திருக்கும் இந்த ஒரு வார பொறுப்பு மகிழ்ச்சிக்கு குறைவாய் எதுவும் தந்துவிடவில்லை.

இதுவரை எழுபத்தி எட்டு பதிவுகள் எழுதியுள்ளேன்.. கழிசடைகளை நீக்கினால் ஒரு பத்து பன்னிரண்டு நல்ல பதிவுகள் எழுதிய திருப்தி இருக்கிறது...

என்னுடைய எழுத்துக்களில் எனக்கு விருப்பமான சிலவற்றை இங்கே உங்கள் வருகைக்கு சமர்ப்பிக்கிறேன்...

விருப்பமான சிறுகதை: இரவானவள்

கொஞ்சம் சின்ன சின்ன கவிதை(!) துளிகள்... தேவதை பிம்பங்கள்

விருப்பமான கட்டுரை: கவனத்திற்குரிய இரங்கற்செய்தி

எழுதிய ஒரே ஒரு சினிமா விமர்சனம் : வழக்கு எண் 18/9

ஜாலி பதிவுகளில் சில :



இவற்றைக் வாசித்து பார்த்தால் எனது அலைவரிசை உங்களுக்கு கொஞ்சம் புரிந்து போகும்..


பதிவுலகம் பற்றிய ஓர் சிறு வருத்தம்..
கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் இங்கே அதிக வரவேற்பு கிடையாது.. சினிமா தாக்கம்தான் அதிகம்.. அதுவும் நேர்த்தியான சினிமா விமர்சனங்கள் எழுதும் நிறைய பதிவர்களை விட செய்தித்தாள் விளம்பர தலைப்பு போல எழுதப்படும் துணுக்கு செய்திகளுக்கு இங்கே கவர்ச்சி அதிகம்.. அது தவறு என்று சொல்லவரவில்லை.. அதை தாண்டியும் இன்னமும் நிறைய நண்பர்கள் தங்கள் வாசிப்பினை அதிகமாக்க வேண்டும் என்று விரும்புவேன்..அவ்வளவே...

தவிர, வலைச்சரத்தை நான் கவனித்து வந்துள்ளேன்.. என்னை முதன் முதலில் இங்கே "வீடு" சுரேஸ்குமார் அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.. அறிமுகம் செய்த அன்று என் தளத்தில் சம்பந்தப்பட்ட இடுகையின் கீழே எனக்கான அறிவிப்பையும் கொடுத்து இருந்தார்... அப்போது அந்த குறிப்பிட்ட இடுகைக்கான வருகையாளர் எண்ணிக்கையை குறித்து வைத்துக் கொண்டேன்... எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.. பின்னாளில் இரண்டு மூன்று முறை அவ்வாறே சில நண்பர்களால் அறிமுக படுத்தப்பட்ட போதும் இதே நிலைதான்...ஆனால் இங்கே வலைச்சரத்தில், "அருமையான அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்ற டெம்ப்ளேட் கமெண்டுகள் பிரித்தெடுத்தது...சிரிப்புதான் வந்தது...

இரண்டு காரணங்கள் இருக்கலாம்... அறிமுக படுத்த பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பல அறிமுகங்கள் கவனிக்க படாமல் போயிருக்கலாம்... அல்லது வெறும் டெம்ப்ளேட் கமெண்டுகள் மட்டும் போடுவது சில நண்பர்களின் பொழுதுபோக்காய் இருக்கலாம்..

எனவே இங்கே இந்த ஒரு வாரத்திற்கான இரு அறிவிப்புகளை இங்கே முன் நிறுத்துகிறேன்..

அதிக அறிமுகங்கள் செய்ய போவது இல்லை..குறைந்தது இரு அறிமுகங்களாவது ஒரு பதிவிற்கு இருக்கவேண்டும் என்று சீனா ஐயா சொல்லியிருந்தார்கள்... அந்த குறைந்த பட்சத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள போகிறேன்...எனவே இந்த வாரம் பதிமூன்று (என்னையும் சேர்த்து) அறிமுகங்கள் மட்டும்தான்...அறிமுகம் தேவையற்ற என் மனம் கவர்ந்த பிரபல பதிவர்களை ஆங்காங்கே குறிப்பிடுவேன்..அவ்வளவே..

தயவு செய்து ஒவ்வோர் பதிவிலும் நான் அறிமுகம் செய்யும் அந்த இரு பதிவர்களையும் அவர்களது குறிப்பிட்ட பதிவினையும் வாசித்தவர்கள் மட்டும் பின்னூட்டம் போடுங்கள்... உங்கள் வருகையை பதிவு செய்யும் டெம்ப்ளேட் கமெண்டுகள் தேவையற்றது....

வலைச்சரதிற்கான நோக்கம் மிகவும் பெரியது..அதற்கு மரியாதை செய்ய வேண்டியே இந்த இரு அறிவிப்புகள்...

எழுத்தாளர்கள் காசுபணம் என்ற எல்லையைத் தாண்டி பெரிதாய் மதிப்பது அங்கீகாரத்தை மட்டுமே.. அதனை தாமாய் முன்வந்து, வாரம் ஒருவரை நியமித்து பதிவர்கள் பலருக்கு கிடைக்கசெய்யும் வலைச்சரத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

எல்லாம் வல்ல தமிழே போற்றி...!

என்றும் நன்றியுடன்.. சி.மயிலன்..










மேலும் வாசிக்க...

Sunday, June 10, 2012

முரளிதரன் மரு.சி.மயிலனிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் டி.என். முரளீதரன் , தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடு பாட்டுடனும் ஆர்வத்துடனும் மிகச் சிறப்பாகச் செய்து முடித்து, மனமகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் , சுய அறிமுகம், சிறுகதைகள், கவிதைகள், எதிர்மறைத் தலைப்புகள், நகைச்சுவை, 3 ஆண்டுகட்கு மேலாக சிறப்புடன் எழுதி வரும் பதிவர்கள், இரண்டே ஆண்டுகளீல் தனக்கென தனி இடம் பிடித்து வெற்றி பெற்ற பதிவர்கள், நன்றி என்ற தலைப்புகளில் 8 பதிவுகள் எழுதி இதுவரை 155 மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

அறிமுகப்பட்ட பதிவர்கள் 76
அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் - சுய அறிமுகம் உட்பட 112

டி.என் முரளிதரனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் மரு.சி.மயிலன் .

இவர் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் என்ற ஊரில பிறந்தவர். தந்தை பிழைப்பின் காரணமாக புலம் பெயர்ந்த ஊர் மயிலாடுதுறை. பள்ளி கல்வி அங்கும், இளநிலை மருத்துவம் சென்னையிலும் முடித்து முதுகலை மருத்துவம் இறுதியாண்டு தஞ்சையிலும் பயில்கிறார்.

தந்தை மொழி ஆசிரியராக இருந்த காரணத்தால் - வீட்டில் குவிந்து கிடந்த ஆங்கிலப் புத்தகங்களை ஆரம்ப காலத்தில் இவர் வாசிக்க ஆரம்பித்தார். தமிழ் வாசிப்பு ஆரமபித்தது விகடன் - சுஜாதா என விரிந்தது. வாசிப்பனுபவம் எழுதத் தூண்டி - மயிலிறகு என்ற வலைப்பூ ஆரம்பித்து அழகாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

மரு.சி.மயிலனை வருக வருக என வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் டி.என்.முரளிதரன்
நல்வாழ்த்துகள் மரு.சி.மயிலன்

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது