Old is...வெறும் gold ஆ?
➦➠ by:
மயிலன்
அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களுக்கு,
நேற்று கொஞ்சம் மென்மையான அறிமுகங்கள்.. வாசித்தவர்கள் இளகி போயிருப்பீர்கள்.. உங்களில் கவிதை விரும்பிகள் சிலரைக் கண்டுகொண்டேன்.. மகிழ்ச்சி..
இன்றைய அறிமுகங்கள்..இரண்டு சீனியர் பதிவர்கள்.. சீனியர் என்பதற்கு அர்த்தம் வலையுலகில் நீண்ட நாட்களாய் எழுதிகொண்டிருப்பவர் என்ற பொருளில் சொல்லபடுகிறது.. நான் சொல்லும் சீனியர்கள் வயதளவில்...இந்த genre ல் பிரபலமான சென்னை பித்தன் ஐயாவை மிக சமீபத்தில்தான் பின்தொடர ஆரம்பித்தேன்.. இங்கே நான் சொல்லபோவது நான் நீண்ட நாட்களாய் பின்தொடரும் இருவர்.. என்னவென்று சொல்ல தெரியாத ஏதோ ஒரு காரணத்தால் இவர்கள் மீது எனக்கு எக்கச்சக்க ஈடுபாடு..
இருவரும் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்.. கவிதை, கதை, கட்டுரை, அனுபவ பகிர்வு என பல ஏரியாக்களிலும் அனாயசமாக புகுந்து விளையாடுவார்கள்.. இருவரும் வள்ளுவன்,பாரதி, பாரதிதாசன்,ஷெல்லி என்று பேசும் எழுத்தாளர்கள்.. நவீன எழுத்தாளர்களின் தாக்கம் இவர்களிடம் குறைவு...இவர்களை வாசித்தால் இவர்களின் தாக்கம்தான் நமக்கு ஒட்டிக்கொள்ளும்.. என்னுடைய வலையில் ஏதோ ஒரு பதிவிற்கு இவர்களின் கமென்ட் வந்துவிட்டால் எனக்கு தலைகால் புரியாது.. ஒருவர் நாத்திகர்.. மற்றொருவர் பக்தர்.. ஆழ்மன அழுத்தம்,சமுதாய அக்கறை எல்லாம் ஆங்காங்கே பீறிடும் எழுத்துக்கள்.. இருவருக்குள்ளும் நான் கவனித்தவரை பகிர்தல் புரிதல் ஏராளம்..
எழுத்தை கவனிக்கும் பலருக்கு இவர்களை ஏற்கனவே தெரிந்திருக்கும்... அதையும் மீறி தெரியாதவர்களுக்கு இன்று நான் இங்கே காட்டிகொடுக்கிறேன்...
அறிமுகம் # 6
பதிவர்: இரா.எட்வின் (நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை)
இணைப்பு: http://www.eraaedwin.com/
எழுத்துதான் எனக்கான இவரது முகவரி.. என்றோ ஒரு நாள் இன்ட்லியில் பிடித்தேன்.. எப்போதும் முதல் அறிமுகத்தில் ஒருவர் நம்மை ஆட்கொள்ளும் இடத்தை நாம் மறப்பதில்லை.. wills world cup'96 ல் சச்சினின் மேகிந்திய தீவுகளுக்கு எதிரான 70, கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரிந்துகொண்ட போட்டியது..விம்பிள்டன் டென்னிஸ் கோர்டில் சாம்ப்ராஸ் எனும் ஜாம்பவான், விதிமுறை புரிந்து நான் முதன் முதலாய் பார்க்க போகும் டென்னிஸ்..யாரோ ஒரு குடுமி ஐந்தாவது செட் வரை இழுத்து அவரை காலி செய்கிறான்..அருகிலிருந்த நீண்ட நாள் சாம்ப்ராஸ் இரசிகர்கள் கடுப்பாகிறார்கள்..நான் அந்த குடுமிக்கு அந்த கணமே இரசிகனாகிறேன்..பெயர் ஃபெடரராம்.. இப்படிதான் நிகழ்கிறது அந்த first shot..first impression என்பதெல்லாம்..
இங்கேயும் அதுதான் நடந்தது..முதல் இடுகையாக இவர் தளத்தில் நான் வாசித்தது அந்நியம்.. சிலருக்கு இதை வாசித்து பார்க்கும்போது..நான் மிகைபடுத்துகிறேனோ என்று தோன்றலாம்..நான் சொல்வது அதுதான் இவரது பதிவுகளில் எனக்கான first shot.. உங்களுக்கு இன்னும் இருக்கிறது..
ஷெல்லியை ஷெல்லியாக..ஒரு கிளாசிக் பதிவு.. நாத்திகராயினும் அதுதான் சரி என்று இவர் போதிப்பதில்லை..கடவுள் வழிபாட்டை விமர்சிப்பதில்லை..அதுதான் அழகு..ஆனால் தனது கொள்கைக்கு யாரேனும் வெளியாள் எந்த போர்வை போர்த்தகூடாது என்று சொல்லும் அவரின் இந்த கரு சாதாரணம்..ஆனால் நடை.. நம்மை மிதக்க வைக்கும்..
பாரதியார் பாரதிதாசன் சம்பந்தமான இலைமறைவு காட்சிகள் ஏராளம்..அவ்வளவும் அத்தனை சுவாரஸ்யம்..அப்படியொரு சம்பவம்தான் உச்சங்களின் முதல் சந்திப்பு..
இன்னொரு முக்கிய பதிவு எனில்..அது பெயரில் இருக்கிறது..எடுத்துக்கொண்ட கருபொருளை முற்றுபுள்ளியை நோக்கி இவர் கொண்டும் செல்லும் வரை மூச்சுவிடாமல் வாசித்துவிடலாம்..நிச்சயம் வாசிக்க வேண்டிய பதிவு..
விக்டோரியா, கிஷோர், கீர்த்தி என்று இவரது பகிர்வுகளில் வரும் பெயர்கள் முறையே அவரது மனைவி,மகன் மற்றும் மகள்.. இந்த கட்டுரையில் அவரது வீட்டினில் நடந்த ஓர் காட்சியை முன்நிறுத்தி எழுதியிருப்பார்..நமக்கில்லை கடவுள் கவலை...படிக்க தொடங்கி இரண்டு பத்திகளை கடந்தால் நிறுத்த மாட்டீர்கள்..
இவரது தளத்தில் நான் நூறாவது follower.. அவ்வளவு late...அதற்கு முன்னான எத்தனையைத் தவறவிட்டேனோ? நீங்க தாமதிக்காதீங்க...
அறிமுகம் #7
பதிவர்: ஹரணி- (ஹரணி பக்கங்கள்)
இணைப்பு: http://thanjavur-harani.blogspot.in/
முன்னவரின் ஸ்பெஷல் கட்டுரை பதிவுகள் என்றால்,இவருடையது கதைகள்...ரொம்பவும் குழப்பாத lucid language இவருடைய சிறப்பு..தனிமனித அழுத்தம்,சோகம்,அக்கறை எல்லாமே அந்த எழுத்துக்களில் விரவிக்கிடக்கும்.."பேருந்து" என்ற தலைப்பில் பல அத்தியாயங்களாய் நாவல் ஒன்றும் எழுதி வருகிறார்..அதை இன்னும் வாசிக்கவில்லை..நேரம் ஒதுக்கணும்..
டிசம்பர் பன்னிரெண்டாம் நாள் தமிழ் வலையுலகம் கன்னடர் இரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடி கொண்டிருந்த போது இவர் எழுதியிருந்த பாரதி பற்றிய "நினைபடுத்தல்" என்ற பதிவு கவனஈர்ப்பு...அதேபோலதான் சமீபத்தில் வாசித்த பாரதி தரிசனம்..என் மனதிற்கு மிக பக்கமான ஒரு இடுகை..
தவறவிடக்கூடாத சிறுகதை என்றால் அது மனமே எல்லை.. ஒரு மனிதன் மற்றொருவன் மீது வைக்கும் நம்பிக்கை எதை பொறுத்தது? எப்படி அளப்பது? எங்கேயோ மேயும் மன எண்ணங்களை ஏதோ ஒரு சம்பவம் புரட்டிபோடும்..அப்படியான ஒரு நிகழ்வை பேசும் இந்த சிறுகதை...
அவள் அவளாகவே..தாயைப் பற்றி எழுதப்பட்ட மற்றொரு கவிதை என்று மட்டும் இதை சொல்ல முடியாது...கணவரை இழந்த அவரது தாயின் வைராக்கியம் வரிகளில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும்...
கதை வனம்..வலைச்சரம் எழுதும்போதுதான் இதைப் படித்தேன்...இரண்டு சிறுகதைகளை ஒரே இடுகையில் கொடுத்திருக்கிறார்..இரண்டையும் அடுத்தடுத்து வாசித்தாலும் இரண்டின் ஜீவனும் அப்படியே உங்களுக்கு உள்ளிறங்கும்..எழுத்தாளனின் வேதனை ஒன்று, ஒரு வாழ்ந்து முடித்தவரின் மரியாதையை இன்னொன்றிலும் இழைத்திருக்கிறார்..புக்மார்க் செய்துகொண்டாவது நேரம் இருக்கும்போது வாசித்துவிடுங்கள்..
என்ன யோசனை? விரையுங்கள் இவர் தளத்திற்கு..
இன்று இந்த சீனியர்கள் இருவரையும் வலைச்சரத்தில் இந்த சிறுவன் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..சீனியர்கள் என்று சொன்னால் கோபிப்பார்களோ? :) எட்வின் ஐயாவை "ஐயா" என்றால் தோழர் அல்லது எட்வின் என்றே கூப்பிடுங்கள் என்பார்..அப்பா என்றால் 'எனக்கு சித்தப்பா வயதுதான் ஆகிறது' என்பார்.. வம்படியாக நான் ஐயா என்றுதான் அழைப்பேன்..:)
சொல்ல போனால் வயதானவர்,முதியவர் என்ற நிலை எல்லாம் பெருமைக்குரிய விஷயம்..நிறைய பேருக்கு அந்த பாக்கியம் எல்லாம் இந்த இயந்திர உலகில் கிடைப்பதில்லை..
ஹ்ம்ம்...ஏழு முடிந்தது.. பாதி கிணறு தாண்டிவிட்டேனா? பலே..
நாளை சந்திப்போம்...
என்றும் நன்றியுடன்..சி.மயிலன்





