Thursday, September 10, 2015

வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள்

எல்லோருக்கும் வணக்கம் !

நாம் இப்போது உத்திரை வீதிகளில் உலா வருகிறோம்.  இங்குதான் உடையவர் இருந்த மடம் இருக்கிறது. கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ வேதவ்யாஸ பட்டர் திருமாளிகைகள் இருக்கின்றன. ஸ்ரீ மணவாள மாமுனிகள் சந்நிதியும் இங்குதான் இருக்கிறது. இனி அடுத்த கட்டம் கோவிலுக்குள் செல்வதுதான்.. இத்தோடு வீதிகள் முடிகின்றன.

நடுவில் கோவில்.. சுற்றிலும் நான்கு மாட வீதிகள் என்கிற அமைப்பில் திருவரங்கம் மிக அழகாய் அமைந்திருக்கிறது. உத்திரை வீதிகளின் இன்னொரு விசேஷம் ஒரு புறம் மட்டுமே வீடுகள்.. எதிரே மதில் மட்டுமே.

ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சுவாரசியமான ஒரு தகவலைச் சொன்னார்.

இராமனுக்கும் கண்ணனுக்கும் என்ன வித்தியாசம்.. தெரியுமா ? 
இராமனிடம் போகும்போது மிக மரியாதையாய்ச் செல்ல வேண்டும் ஏனென்றால் அவர் ராஜா. கண்ணனிடம் அப்படி இல்லை.. விளையாட்டுத் தனமாய் அவனுடன் இருக்கலாம். அதுவே கண்ணனிடம் ஏதாவது தப்பு செய்தால் உடனே தண்டனைதான்.. பொறுத்துக் கொள்ள மாட்டான்.. வேடிக்கையாய்ப் பழகுவது போலிருந்தாலும். ஆனால் இராமனோ ‘தெரியாமல் செய்து விட்டான்.. மன்னிக்கலாம்’ என்பார்.. ஏனென்றால் மன்னிப்பு ராஜநீதியில் உண்டு.

இனி இன்றைய பதிவர்கள்..



வானவில்லில் தோய்வதான் கனவிலிருக்கும் தூரிகை  தியாகு அவர்களின் வலைத்தளம்.. எலிக்குஞ்சுகளோடு எனக்கு விரோதமில்லை என்கிற கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கும் அவரது கவிதைகள் அவரது தனித்துவத்தை பறைசாற்றும்.

ஸ்நேகம்

தினம் ஒருபிடி தானியம் எடுத்து
வாசலில் இறைப்பேன்
வானத்திலிருந்து இறங்கி வந்து
கொத்தித்தின்று பசியாறி
பறந்து போகும் குருவிகள்

தினம் வாசலில் வந்து இறையும்
ஒருபிடி தானியம் போலும்
என் மனத்தின்
முல்லை மொக்கையொத்த
மென் அலகால்
வலிக்காமல் தம்மை
கொத்தித் தின்னவிட்டு
ரசனையின் பசியாற்றிப்
பறந்து போகும் குருவிகள்

வாழ்த்துகள் தியாகு..

அடுத்து என் மனதைக் கவர்ந்த எழுத்தாளர்..



இவரை நான் அறிமுகப்படுத்துவதாகச் சொன்னால் அது அதிகப் பிரசங்கம்.
வண்ணதாசன் அவர்களின் வலைத்தளமான சமவெளி இலக்கிய ரசனைக்காரர்களின் மேய்ச்சல் நிலம்.  கதைகளில் வண்ணதாசனாய்.. கவிதைகளில் கல்யாண்ஜியாய் அறியப்படும் இவர் எழுத்துக்களில் தோய்ந்து போகாத வாசகர்களே இருக்க முடியாது.

முகநூலில் இப்போது அவரது படைப்புகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன.

ஒரு கவிதையை
அதன் மூன்றாம் பத்தியில் இருந்து
வாசிப்பது போல இருந்தது
ஆலங்கட்டிகள் முந்திய தினம் விழுந்த
ஒரு பிற்பகலில் நாம் சந்தித்தது.
நான் உனக்கான தேநீரைக்
கொதிக்கவிட்ட போது
நீ என் அறையின் மீன் தொட்டிக்குத்
தண்ணீர் மாற்றிகொண்டிருந்தாய்.
நீ தேநீர் பருகும்போது
முற்றத்தில் உதிர்ந்த இலை மேல்
ஊர்ந்தபடி இருந்த புழுவுடன் காட்டினேன்.
மழை தினங்களில் அணிந்த
என் காலணி ஜோடியில் படர்ந்திருக்கும்
பூஞ்சாண் குறித்து நீ பேசத் துவங்குகையில்
உன்னை முத்தமிடும் இச்சை
எனக்குக் கனன்று வந்திருந்தது.
இலையை விட்டு இறங்கிய புழு
இப்போது நகர்ந்துகொண்டிருந்தது
வாசிக்காமல் விட்ட கவிதையின்
முதல் இரு பத்திகளின் மேல்.



தற்செயலாய்க் கண்ணில் பட்ட இன்னொரு பதிவர் இவர்.. பிரியத்தின் இசை
இவரது வலைத்தளம். வழிகாட்டி வெளிச்சம் கவிதையில்

தனது சிறகுகளைப் பிடுங்கி
தினம் ஒன்றெனெ
நாட்காட்டியில் சொருகத்தொடங்குபவளின்
வானம் கரைந்து புள்ளியாகிறது  

என்கிற வரியில் அதன் அர்த்தச் செறிவில் ஒரு திடுக்கிடல்.  சுஜாதா செல்வராஜ் அவர்களின் பதிவுகள் எண்ணிக்கையில் அளவோடிருந்தாலும் அவரது எழுத்தில் ஒரு உயிரோட்டம்..






கைகள் அள்ளிய நீர் திரு சுந்தர்ஜி அவர்களின் வலைத்தளம்.. முகநூலிலும் இவர் பிரபலம். வாசிப்பில் மிக முன்னோடியாய் நிற்கும் இவரது பயண அனுபவங்கள் அவருடன் செல்ல மாட்டோமா என்று ஏங்க வைக்கும். கதை.. கவிதை.. கட்டுரை.. மொழிபெயர்ப்பு.. இசை.. என சகல கலா வல்லவர்.

இவரைப் படிக்க ஆரம்பித்தால் நம் பிரமிப்பிற்கு பஞ்சம் இருக்காது..

இந்த நாற்காலி
யாருக்காகவும் காத்திருக்கவில்லை.
அதன் இருக்கை யாரும் அமரா
வெற்றிடத்தைப் பருகியபடி இருக்கிறது.
உங்கள் பார்வைக்குத் தப்பிய கண்ணாடியில்
தன் முகத்தை நீண்ட நாட்களுக்குப் பின்
பார்த்து ரசிக்கிறது.
பின்னும் முன்னும்
பேசப்படாத வார்த்தைகளையும்
பேசப்பட்டவைகளையும்
அசை போடுகிறது.
பரபரப்பின் வெம்மையைத் துறந்து
நிதானத்தின் துள்ளலைப்
பூசிக்கொண்டிருக்கும்போது
உள்ளே நுழைந்து விடாதீர்கள்.
எந்த இசையும் ஒலிக்கப்படாத நிசப்தத்தை
அது அனுபவிக்க விடுங்கள்.
இங்கிருந்து நாளையோ மறுதினமோ
அது அகற்றப்படும் வரை
இந்த ஏகாந்தத்தை
அது அணிந்து மகிழட்டும்.


இது நாற்காலியைப் பற்றிய கவிதை மட்டுமல்ல என்பதை தேர்ந்த வாசகன் சுலபமாய் யூகித்து விடக் கூடும்.  நீங்களும் வாசிக்க அவரது வலைத்தளத்திற்கும் முகநூலுக்கும் அழைக்கிறேன்.

எழுதத் தெரிந்த கை ஓய்வெடுப்பதில்லை.. அதன் மேடை எதுவாயினும்.. வலைத்தளமோ.. முகநூலோ.. தமது எண்ணங்களை.. படைப்புகளைப் பகிர்ந்தபடியேதான் இருக்கிறார் ஒரு படைப்பாளி.  வாசிப்பின் சுவை அறிந்த நாம் தேடிப் பிடித்து படிப்பதில் இருக்கிறது நம் ரசனையை மேம்படுத்தும் சூட்சுமம்.

நாளை தொடரலாமா..

17 comments:

  1. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  2. வணக்கம்! அழகான கவிதைகள்! அவர்களுக்கும் நன்றிகளும் தங்களுக்கு வாழ்த்துகளும் நன்றி!!!

    ReplyDelete
  3. அறிமுகங்கள் அனைவரின் தளமும் அறிவேன். வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி..இனிய வணக்கம்

      Delete
  4. திருஅரங்கத்தைப் பற்றிய தகவல்களுடன் கூடுதலாக -
    ஸ்ரீராமனையும் ஸ்ரீகிருஷ்ணனையும் அறிமுகம் செய்திருந்தது அருமை!..

    அவனும் கோன்!.. இவனும் கோன்!..

    ஆனாலும் - எத்தனையெத்தனை வாத்ஸல்யம்!..

    ReplyDelete
  5. வணக்கம்,
    அரங்கனைப்பற்றிய செய்தி அருமை,,,,,
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துககள்.
    நன்றி.

    ReplyDelete
  6. உங்கள் கவி(ன்) மனம் கமழ ரசிக்கிறேன் பதிவை.

    ReplyDelete
  7. புதிதாக முயற்சி செய்யுங்கள்.... நன்றி...

    ReplyDelete
  8. அனைவரும் கவிஞர்கள் போல! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. திருவரங்கத்தைப்பற்றிய வரிகளை படிக்கும்போது அங்கேயே நடந்து செல்வது போன்றதோர் அழகிய நினைவுப்பா ரிஷபா...

    இன்றைய ஜாம்பவான்கள் அனைவருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

    ReplyDelete
  10. வண்ணதாசனையும் படிச்சிருக்கேன், கல்யாண் ஜியையும் படிச்சிருக்கேன். சுந்தர் ஜி(பிரகாஷா) இவரா? அதிகம் அறிமுகம் இல்லை எனினும் ஒரு முறை இவர் வலைப்பக்கம் போயிருக்கேன்னு நினைக்கிறேன். சுஜாதா செல்வராஜைத் தெரியாது.

    ReplyDelete
  11. சுந்தர்ஜி பிரகாஷ் !!

    பெயர் குறிப்பிடுவது போலவே

    அழகு , உயிர், ஒளீ, மூன்றும் ஒருங்கென குடியிருக்கும்
    வலை இவர்தாம்.

    இவரது, சுபாஷிதானி எனக்கு ஒரு ரெபரன்ஸ் பாய்ன்ட் ஆக இருக்கிறது.
    கைகள் அள்ளிய நீர் . ஆமாம். அவர் பதிவு அது.
    அங்கே சென்று நம் கைகளை வைத்து அள்ளினால்,
    நமக்குக் கிடைப்பது
    வெறும் நீர் அல்ல.

    கங்கை நீர்.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  12. கண்ணன் போதும். அடி வாங்கிட்டால் பாபம் குறைஞ்சுரும்:-)

    ReplyDelete
  13. கண்ணனும், ராமனும்,அரங்கனும் மனதை நிறைக்க, கவிதைப் பதிவுகள்
    பாரதியின் திருனாள் இன்று நினைவூட்ட நீங்கள் வலைச்சரத்தை
    கவிச்சரமாக்கிவிட்டீர்கள் .மிக நன்றி ரிஷபன் ஜி.

    ReplyDelete