07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 5, 2015

பிரியாவிடை


ஒரு நீண்ட பயணம் இங்கே நிறைவுறுகிறதாக எண்ணுகிறேன். வலைச்சரத்தின் வாசகர்கள், பயனர்கள் வட்டத்திற்கு நடுவிலே அமர்ந்து கொண்டு இளையவனொருவன் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகளை யெல்லாம் செவிமடுத்துக் கொண்டிருந்தீர்கள். சொல்லப் போனால் சில திருத்தங்களையும் செய்துகொள்ளச் சுட்டிக் காட்டினீர்கள். இது ஒரு நல்ல அனுபவமாகவே எனக்கு அமைந்துவிட்டது.

ஒரு நல்ல பயணம் எந்தவித அலுப்புமில்லாமல் இங்கிருஎது கையசைக்கத் துவங்குகிறேன். கடைசி இரண்டு நாள் மட்டும் பரிட்சைக்குப் பிந்திய மாணவன் போல காலதாமதமாக எழுதியிருக்கிறேன். டெட்லைன் கயிற்றை என் கழுத்துக்கு நேரே வீசிக்கொண்டிருந்த “அந்தகண்”ணுக்கு (காயத்ரி தேவி) நன்றிகள் கோடி. அந்தகண் என்பதற்கு யாரும் அர்த்தம் சொல்லிக் கொடுத்துவிடாதீர்கள்.

முரட்டுக் கன்றுக்குட்டிக்கு மூக்கணாங்கயிறு மாட்டுவதில் உள்ள சிரமங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இங்கே இணைத்துவிட்ட தமிழ்வாசி அண்ணனுக்குத்தான் எவ்வளவு மனோதிடம் ஹஹ. நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னை ஊக்குவிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றியைச் சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன். எவ்வளவு எளிதாக இந்த ஏழு நாளும் முடிந்துவிட்டது.

நெல்லையப்பர் தேருக்குப் பின்னே காந்திமதியம்மன் தேர் புறப்பட்டாகும். அம்பாளுக்குத் தனித் தேர் இருந்தாலும், நெல்லையப்பருக்கு வலதுபுறம் காந்திமதி தாயார் “பிரியாவிடை” என்ற பெயரில் நாதனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதாக ஓதுவார் ஒருவர் தகவல் சொன்னார். மட மடவென தேவாரமும் திருவாசகமும் பாடக் கூடியவர் அவர் தான் நெல்லையைப் பற்றி பலத் தகவல்களைச் சொன்னவர். இந்த பிரியாவிடை என்ற சொல்லாடல் மிகப் பிடித்துப் போனது எனது. வலைச்சரத்திலிருந்து கிளம்பும் போது இந்த தலைப்பில் எழுதிக்கொள்ளலாம் என்று தோன்றியது கூட முற்காரணங்கள் இன்றி முடிவு செய்யப்பட்டது தான்.

அநேகமாக நான் வாசிக்கும் வாசிக்கின்ற வெகுசில தளங்களையும், அறிமுகம் மிகுந்த நண்பர்களையும் பற்றி மட்டுமே நான் இங்கு எழுதியிருக்கிறேன். புதிய பயனர்களையோ, நல்ல பெரும் பதிவுகளையோ நான் இங்கே அடையாளம் காட்டத் தவறியிருக்கலாம். இருக்கலாமென்ன அதுவேதான் உண்மையும் கூட. ஆனால் இந்த வாய்ப்பு இங்கேயன்றி வேறெங்கும் அமைந்துவிடுவதில்லை. முதல்வன் படத்தில் அர்ஜூனுக்குக் கிடைத்த ஒரு நாள் முதல்வர் போல இங்கே ஒரு வாரம் முதல்வர் பதவி. ஒரு வரலாற்றுச் சங்கதி என்னவென்றால் அந்த படத்தில் அர்ஜூன் கதாப்பாத்திரத்தின் பெயரும் புகழேந்தி.

**************
வலைச்சரம் பற்றிய ஆக்கப்பூர்வமான விமர்சனம் அல்லது கருத்து என்றால் ஒன்றைச் சொல்லத் துணிகிறேன். வலைப்பூ வாசிப்பு வட்டத்தின் சிலபல பழமைத் தனங்கள் இங்கே களையப் பட்டிருக்கின்றதென்றே எண்ணுகின்றேன். தனித்தனியாக ஆளுமைகளாகத் திகழும் பலரும் ஒருங்கிணையும் இடமாக வலைச்சரத்தை வடிவமைத்திருப்பதும், முன்னிருத்தும் வாய்ப்பினை வழங்குவதும் சமத்துவமான திட்டமிடலாகவே கருதுகிறேன். நான் இங்கே பயணித்த வகையில் எந்தவித குறுக்கீடல்களையும் எதிர்கொள்ளவே இல்லை. வாளைக் கொடுத்துவிட்டு கைப்பிடியைத் தான் பிடித்துக் கொள்கிறவர்கள் மத்தியில் இந்த அணுகுமுறையை வலைச்சரத்தின் ஆணிவேராகவே எண்ணுகின்றேன்.

மற்றபடி வாழ்த்துகள் கேட்டே ஏழுநாளும் ஓய்ந்து போவதைத் தான் நான் எதார்த்தத்தின் மற்றொரு கரையாகக் கருதினேன். அனேகமான வாழ்த்துகள் சம்பிராதயமாக ஒலிப்பதைக் கேட்க முடிந்தது. இல்லையென்பீர்களானால் மாறுபட்டுக் கொள்கிறேன். பரந்த மனத்துடன் எழுதும் ஒற்றை வரி கேள்விகளும் விமர்சனங்களும் தரும் வலிமையை வேறெதாலும் தந்துவிட முடிவதில்லை. நெல் விளையும் வயலுக்கு புல்லை இறைத்து என்ன பயன்.


நிறைய பேசுகிறேன் போல, ஆகட்டும் கிளம்புகிறேன் இது இத்தோடு இங்கேயே முடிந்துவிடுவதில்லை தானே. பின்னாட்களில் உங்களில் பலரை இங்குவந்துச் சந்திக்க/ எழுத/படிக்க விருப்பம் கூடுகிறது. டிட்டோவாக எதையும் தனித்தனியே துண்டாடிப் பேசுவது என் சுபாவமாக இருப்பதால் நிறைய கசப்புகளைக் கடந்திருக்கலாம் என்னிடத்திலிருந்து நீங்கள். பாகற்காய் தான் சக்கரைக் கட்டுப்பாட்டுக்கு நல்லதென்று நான் சொல்லவேண்டியதில்லை ஹஹ.


*****

என்ன இன்றைக்கும் ஒரு வலைதளப் பதிவரை அறிமுகப் படுத்த வேண்டுமா. அப்படியும் இப்படியுமாக பத்து பேரைக் கண்டுபிடித்தெழுதவே நாக்கு தள்ளிவிட்டது எனக்கு. ஆகட்டும் இருக்கவே இருக்கிறார்கள் காயத்ரி தேவி. கோவை ஆவி (ரைமிங்கைப் பாருங்க). அரசன் எழுதுகிறாரா தெரியவில்லை. எழுதுவார் என்றே நினைக்கிறேன். பிறகு ஆத்மார்த்தி அவர்களுடைய தளம் இவையெல்லாம் தான் இன்றைக்குச் சொல்ல நினைப்பது.


ஆத்மார்த்தி அவரது தளம், எழுத்து அனைத்தையும் தாண்டி கர்ஜனையாக எழும் அவரது குரலுக்கும், பேச்சுக்கும் மயங்கினவன் நான். எனது முதல் புத்தகத்தை மதுரை வீதிகளில் அவரிடம் காண்பித்த போது, வாங்கின மாத்திரத்திலே ஒற்றைக் கதையைப் படித்துவிட்டு, “இந்த புத்தகம் காசுகுடுத்து வாங்குவதற்குப் பெறும்” என்று சட்டைப் பாக்கெட்டுக்குள் கைவிட்டுவிட்டு சில ரூபாய்த் தாள்களைக் கையில் தினித்தார். ஒரு படைப்பாளனுக்கு போலித்தனமில்லாத இப்படியான சில பாராட்டுகளும் தானே தீனியாக முடியும். பாராட்டுகளும் என்று குறிப்பிட்டதை நீங்கள் கவனிக்க வேண்டும் மை லார்ட். அந்த “ளும்”ற்குள் இன்னும் பல சங்கதிகளும் அடங்கும். அவரது தளத்தில் நீங்கள் வாசிப்பதற்குரிய சங்கதிகள் ஏகத்திற்கு கிடைக்கிறது. ஆகவே இங்கிருந்து ஆத்மார்த்தியை வாசிக்கத் துவங்கலாம் நீங்களும்…

***
ஆவி டாக்கீஸ் வெளியிடும் மலையாளப் படங்களின் விசிறி நான். தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம். ஒழிமுறி, த்ரிஷ்யம் போன்ற படங்களைப் பற்றிச் சொன்னேன் நான். ஆவிப்பாவிலிருந்து இவருடனான தொடக்கம் காதல் போயின் காதல் ட்ரெய்லருக்குக் குரல் கொடுத்தவரைக்கும் மைதீர்ந்த பேனாக்கிறுக்கல் போல விட்டு விட்டு எழுதப்பட்டு வருகின்றது. பழகின வரைக்கும் நல்ல மனிதர். புன்னகையொன்றை முகத்தொல் எப்போதும் தாங்கி இருக்கும் இந்த ஆளவந்தானின் தளம் நல்ல படங்களைப் பற்றி அறிந்துகொள்ள எட்டிப் பார்ப்பது.

***

காயத்ரியை ஐந்து ஆண்டுகளாகத் தெரியும். வெளியுலகின் பட்டாம்பூச்சியும் என்வீட்டு மூட்டைப் பூச்சியுமானவர். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் கைகோர்த்துக் கொண்டு பயணிக்க வேண்டிய அவஸ்தைக்கு என்னைத் தள்ளிவிட்டதில் இந்த பெண்ணிற்கு எவ்வளவு ஆனந்தம் இருக்குமோ அவையத்தனையும் எனக்குமுண்டு. ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது என்பார்கள். ஆனால் ஒரு கத்தியும் ஒரு குறுவாளும் இருக்கலாம் போல. நான் இங்கே குறுவாள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமா என்ன.


சொந்த வீட்டுச் சுவருக்கு விளம்பரமென்ன செய்வது என்று விட்டுவிட முடியாத அளவுக்கு நல்ல எழுத்தாளராக நான் காயத்ரியைப் பார்த்ததுண்டு. ஒரு நல்ல மாணவியாக, ஆசிரியையாக, ஆலோசகராக, அன்புமிகுந்த குடும்பத்தின் இளவரசியாக, அப்பாவின் தோள்களை இறுக்கப் பற்றிக்கொண்டுறங்கும் பால்யம் மறக்காத மகளாக, தன் தம்பியின் தின்பண்டங்களைத் திருடித் தின்னத்துடிக்கும் அதே சேட்டத்தனங்களை மிச்சம் வைத்துக்கொண்ட அக்காளாக பல பரிமாணங்களில் காயத்ரியைப் பார்த்தவன் என்றாலும் இந்த எழுத்துகளுக்கான தார்மீக மரியாதை எப்போதும் எனக்குண்டு. உணர்வுகளைக் காட்சிப் படுத்தும் இந்த நடை எனக்கும் கூட சில நேரம் பொறாமை கிளம்பிச் செல்வதில் ஆச்சர்யம் இல்லை. அவரது வலைதளம் நீங்கள் எல்லாம் வாசித்திருப்பீர்கள். மெய்யாகச் சொன்னால் நான் தான் இனிதொட்டு அவற்றை எல்லாம் வாசிக்க வேண்டும்.

****

அன்பின் வலைச்சரத்திற்கு,

நிறைய கருத்து சொல்லி உன்னைச் சாகடிக்கத் துணிந்த பாவத்திற்கு என்னை மன்னித்து அருள்வாயாக ஆமென்.


-கார்த்திக் புகழேந்தி





22 comments:

  1. ஹப்பாடா, ஒருவழியா பிரியாவிடை குடுத்தாச்சு. இத வச்சே வலைச்சரமும் கார்த்திக் புகழேந்தியும், பின்னாடியே நானும்னு ஒரு போஸ்ட் எழுதிடுவேன் போலிருக்கு.

    அப்புறம், என்னோட blog இதுவரைக்கும் நீங்க படிச்சதில்லன்னு உண்மைய ஒத்துகிட்டதுக்கு நன்றி.

    யாரும் நம்ப மாட்டாங்க, ஆனா அதான் உண்மைன்னு எனக்கு தான தெரியும். வேணும்னா பாருங்க, என் blog உக்காந்து ஒருநாள் வாசிக்க வைக்குறேன். சவால்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலைப்பூவை நாங்கள் படித்திருக்கிறோம் காயத்ரி தேவி

      Delete
    2. என் ப்ளாகை வாசிக்காவிட்டால் கரம் கோர்க்க மாட்டேனடா பாதகனே அப்படின்னு 40களின் கதாநாயகி மாதிரி சவால்விட்டு கோவிச்சுக்கப் போறியா காயூ..?

      Delete
    3. ஹாஹா அண்ணா, இது நல்ல ஐடியால. சூப்பர், தேங்க்ஸ். இப்படி தான் மிரட்டுறதுக்கு அப்பப்ப ஹிண்ட்ஸ் எடுத்துக் குடுக்கணும்

      Delete
    4. நீங்க எல்லாரும் படிச்சிருக்கீங்க, ஆனா அவர் படிச்சது இல்லையே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று

      Delete
    5. பார்க்கலாம் பார்க்கலாம்...

      Delete
    6. சகோதரி காயத்ரி தேவி உங்க ப்ளாகை நாங்களும் வாசித்திருக்கோம் பின்னூட்டமும் கூட இட்டதுண்டு. இப்ப கொஞ்ச நாளா வரல்தான்...இனி வருகை தருவோம்ல....அட! அது சரி கார்த்திக் புகழேந்தி உங்க கையைப் பிடிக்கறதுக்கு முன்னாடி அட்லீஸ்ட் ஒரு போஸ்டாவது வாசிச்சுருக்கணும்னு கண்டிஷன் போட்டுருங்க...

      Delete
  2. தேவி, ஆவி... ஆஹா.. கவுத கவுத... பின்னுறே கார்த்திக்கு...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு முதல்ல அவர் எழுதியிருந்தது புரியல இப்ப தான புரியுது

      Delete
  3. இப்போதுதான ஒருவார காலத்தில் நீங்கள் அறிமுகப் படுத்தியுள்ளவற்றைபார்த்தேன். அவற்றில் பெரும்பாலானவைக்கு நான் சென்றதில்லை. இனி சென்று பார்க்கிறேன்.
    வாழ்த்ஹ்டுகள் நன்றி

    ReplyDelete
  4. என்னுடைய இந்த வலைதளத்தை முதன் முதலில் அறிமுகப் படுத்திய பெருமை உங்களையே சேரும் கார்த்திக்..! கோடானு கோடி நன்றிகள்..! :)

    ReplyDelete
    Replies
    1. ஆவி இப்பல்லாம் நன்றி சொல்றதெல்லாம் கூடகோடிக்கணக்கிலே தான் ;)

      Delete
  5. இன்றைய அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    தங்களுக்கும் உதவின சகோதரி காயத்ரி தேவி அவர்களுக்கும் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  6. ஆத்மார்த்தியின் தளம் சென்றதில்லை! மற்ற இரு தளங்களுக்கும் செல்வதுண்டு. அதிலும் ஆவி எனது இனிய நண்பர்களில் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி! தினம் தோறும் ஒன்றிரண்டு பதிவர்களே அடையாளம் காட்டப்பட்டாலும் அவர்கள் தளத்தினையும் பதிவுகளையும் பற்றி விரிவாக விளக்கியமை நன்று. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. தினம் சில பதிவுகள், ஆனால் நச்சென்று அறிமுகப்படுத்திய விதம் நன்று. சிறப்பாக பணியை நிறைவு செய்தமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாரம் முழுவதும் உங்கள் பதிவுகளைப் படித்து பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நண்பரே. நன்றி.

    நீங்கள் சொல்லிப் போகும் விதம் எனக்கு பிடித்திருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நன்றியும்..

      Delete
  9. பல நல்ல புதிய விஷயங்கள் கிடைத்தன தங்கள் பதிவுகளில் இருந்து.....உங்கள் எழுத்து நடை மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

    வாழ்த்துகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது