07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 31, 2012

எங்கள் சரவெடி 3

                     
15) தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்களின் கவிதைத் தளம். வித்தியாசமான சிந்தனைகளால் நம் சிந்தனைகளைத் தூண்டுபவர். அன்றாட வாழ்வின் செயல்களை,செயல்களின் மூலகாரணத்தை அலசும் கவிதைகள் இவருடையது. பதிவர்கள் பற்றிய இவரது அறிமுகம் இது!
           
16) நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் எக்ஸ்ப்ரஸ் என்ற பெயரில் வலைப்பக்கம் எழுதும் இவர் லேசான நகைச்சுவைக் கலந்து சுவாரஸ்யமாக எழுதக் கூடியவர் சமீப காலமாக மிகக் குறைந்த அளவிலேயே எழுதி வருபவர். 
           
17) திடங்கொண்டு போராடு சீனு சமீபத்தில் வலைப் பக்கம் தொடங்கி ஐம்பது பதிவுகள் முடித்து விட்டவர். சமீபத்தில் நடந்து முடிந்த சென்னைப் பதிவர் மாநாட்டில் சுவாரஸ்யமாகக் கலந்துகொண்டு பணியாற்றியவர் இளையவர். இனியவர். சினிமா விமர்சனம், பயணக் கட்டுரை என்று சுவாரஸ்யமாக எழுதி வருகிறார் 
                 
18) ராமலக்ஷ்மி பெயர் சொன்னால் போதும். தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவரது எழுத்துகள் பேசுமளவு இவரது புகைப்படங்களும் பேசும். கல்கி விகடன், தினமணிக் கதிர் போன்ற பத்திரிகைகளில் இவரது கதைகள் கவிதைகள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. PiT போன்ற புகைப்படத் தளங்களிலும்வலை இதழ்களிலும் பங்கேற்று, பல்வேறு தளங்களிலும் மிகச் சிறப்பாக இயங்குபவர். பல்சுவையில் பதிவுகள் எழுதி வருகிறார்.
                   
19) வேர்களைத் தேடி முனைவர் குணசீலன் பதிவோடு சேர்த்து அகநானூறு, புறநானூறு,ங்குறுநூறு என்று என்று பாடல்கள் எடுத்து, கொடுத்து அமிழ்தினும் இனிய தமிழைப் பகிர்கிறார் 
                  
20) திண்டுக்கல் தனபாலன் சந்திரனில் காலடி எடுத்து வைத்ததும், அங்கே நம்ம ஊரு ஆளு டீக்கடையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு விடுவார் ஆர்ம்ஸ்ட்ராங் என்றொரு ஜோக் உண்டு. அதுபோல நாம் கஷ்டப்பட்டுத் தேடி ஒரு புது ப்ளாக் செல்வோம். நமக்குத்தான் அது புது ப்ளாக்! அங்கு இவரின் பின்னூட்டம் ஏற்கெனவே இருக்கும்! பாடல்வரிகளைத் தொகுத்து இவர் வழங்கும் பதிவுகள் சுவாரஸ்யமானவை. ஐ எஸ் ஓ பற்றி மற்றும் நம்பிக்கையூட்டும் பதிவுகள் இவர் ஸ்பெஷல்.  
           
21) தக்குடு எழுத்தில் சரளமான நகைச்சுவை கலந்து எழுதுபவர். படித்து சிரிக்காமல் இருக்க முடியாது. ஒன்று, இரண்டு சாம்பிள்கள்! 
      
22) பாமரன் பக்கங்கள் வானம்பாடிகள் பாலா சார்... கொஞ்சநாள் முன்பு வரை நிறைய எழுதி மகிழ்வித்துக் கொண்டிருந்தார் சமீபகாலமாக யோசித்து யோசித்துப் பதிவுகள் போடுகிறார். இவரது கேரக்டர் பதிவுகள் மனதைத் தொடுபவை. நிச்சயம் நீங்கள்கூட இந்த மாதிரி ஆட்களை உங்கள் வாழ்வில் சந்தித்திருக்கக் கூடும் என்பதை நினைவுகூர வைக்கும் எழுத்துகள்.
           
23) கசியும் மௌனம் ஈரோடு கதிர். ஈரோடு பதிவர்கள் சந்திப்பு (சங்கமம்) நடத்தும் முக்கிய நாயகர். அழகிய கவிதைகளும் எழுதுவார். மனதைத் தொடும் பதிவுகளும் எழுதுவார். பல்சுவைப் பதிவர். 
          
24) என்பக்கம், நான் நானாக ஹேமா(HVL) சென்ற வருடம் வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் வென்று இவரின் சிறுகதை அவர்கள் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் வெளிவந்தது. இந்த வருடம் கல்கி சிறுகதைப் போட்டியில் இவரின் கதை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியானது. கவிதைகளும் எழுதி பரிசு வெல்வார்!    
            
25) வானவில் மனிதன் மோகன்ஜி. பண்பட்ட எழுத்துகளுக்கும் ஏராளமான ரசிகர்களுக்கும் சொந்தக்காரர். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு, இல்லையில்லை இரு சோறு பதம்!    
             
26) அப்பாவி தங்கமணி மனதைத் தொடும், மனதை வருடும் சிறுகதைகள் எழுதுவார்.
தொடர்கதைகள் எழுதுவார். நகைச்சுவை கலந்தும் எழுதுவார். நாங்கள் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்  
            
27) பாகீரதி எல் கே என்று அன்புடன் அழைக்கப்படும் கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன். தொடர்கதை தொடங்கி பாதியில் நிறுத்தியிருக்கிறார் தொடர்வார் என்று நம்புகிறோம்! கவிதை எழுதுவார். ஆன்மிகம் தொழில்நுட்பம் என்று சகலமும் எழுத்தில் தொடும் பதிவர். 
           
28) பூவனம்   ஜீவி - மூத்த பதிவர்களில் ஒருவர். பழம்பெரும் எழுத்தாளர்களைப் பற்றி எழுதுகிறார் சுஜாதா பற்றி இவர் எழுதியது. எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் என்ற வகையில் சுஜாதா பற்றிய பதிவுக்கு இங்கு லிங்க் தந்திருந்தாலும் நிறைய எழுத்தாளர்கள் பற்றி இவர் எழுதியிருப்பது அவசியம் படிக்க வேண்டியது. சிந்தையைத் தூண்டும் சிறுகதைகளுக்குச் சொந்தக்காரர்.  சமீபத்திய இவர் தொடர்கதை 'பார்வைகள்'. இலக்கிய இன்பம்சுய தேடல், ஆத்மாவைத் தேடி போன்ற பதிவுகள் சுவாரஸ்யம் சுவை மிக்கவை. படிக்க, ருசிக்க, ரசிக்க நிறைய வாய்ப்பு இருக்கின்ற வலைப்பக்கம்.  
      =================   ==============   ===============  

வலை செய்திகள்: 

தமிழ் வலைப்பூக்கள் 2003 ஆம் ஆண்டிலிருந்துதான் தலை எடுத்தன. 

இதுவரை அதிகம் பதிவிடப்பட்ட தளம், கடலூர் மாவட்டச் செய்திகள் தளம். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள். ஆனால் இந்தத் தளத்தில் பின்னூட்டங்கள் மிக மிகக் குறைவு. பின்னூட்டமிடும் வசதி தற்போது இருக்கிறதா என்றும் தெரியவில்லை! 

நூற்றுக் கணக்கில் பதிவுகள் இருந்த போதும், பூஜ்யம் கருத்துரைகள் கொண்ட இரு தளங்கள்: ராம்   ,  விவசாயத் தகவல்கள்  

அதிகக் கருத்துரைகள் பெற்ற தளங்கள்: இட்லிவடை, வலைச்சரம் (எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க!) துளசிதளம், வாத்தியாரின் வகுப்பறை. 
   =================   ==============   =============== 
           
நாளை சந்திக்கலாமா? 
                       
மேலும் வாசிக்க...

Tuesday, October 30, 2012

எங்கள் சரவெடி 2


    
வலைச்சரம் வாசகப்  பெருமக்களுக்கு    ... 
  
மீண்டும் நினைவுறுத்துகின்றோம், நாங்கள் செய்வது அறிமுகங்கள் அல்ல. பெரும்பாலும் நீங்கள் நன்கு அறிந்த முகங்களை, எங்கள் பார்வையில் எங்கள் கோணத்தில் உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துள்ளோம். 

அ  வில் தொடங்குகிறோம். ஆனால், எந்த வரிசையும் கிடையாது! ராண்டம் தாட்ஸ்! ரண்டக ...  ரண்டக....  ரண்டக  .... ஸ்டார்ட் மியூசிக்!! 
   

மிகவும் ரசிக்கும்வண்ணம் கவிதைகள் எழுதுகிறார். உதாரணத்துக்கு மகள் திருமணம் முடிந்து சென்றதும் வீட்டில் ஏற்பட்ட வெறுமையை, தாய்மையின் தவிப்பைச் சொல்லும் கவிதை. 
      
2) பழனி.கந்தசாமி மூத்த பதிவர்களில் ஒருவர். ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர். லேசான நகைச்சுவையுடன் நல்ல பல பதிவுகள் கொடுப்பவர். இவர் கேட்கும் இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்! இவர் பக்கத்தில் ஆற, அமர படித்து ரசிக்க நிறைய விஷயங்கள் இந்தப் பதிவு  உட்பட!  

3) அமுதவன் பக்கங்கள்     [இவர்களை எல்லாம் பிரபலங்கள் பக்கங்கள் என்ற கேடகரியில் சேர்க்கலாம். இவர் ஒரு எழுத்தாளர் இவருடன் வேணுவனம் சுகா, கடுகு அகஸ்தியன், ஜெயமோகன் போன்றோரைச் சேர்க்கலாம்]
  
சாவி'யால் அறிமுகப் படுத்தப் பட்டு, பல பிரபல பத்திரிகைகளிலும் எழுதிய எழுத்தாளர். சுவாரஸ்யத் தலைப்புகளில் நிறைய எழுதியுள்ளார்.சாம்பிள்.
                
4) வேணுவனம் நெல்லை கண்ணன் புதல்வர் சுரேஷ் கண்ணன் என்கிற சுகாவின் பக்கம். இவர் ஒரு இயக்குனர், பாலு மகேந்திராவின் சிஷ்யர், எழுத்தாளர், இளையராஜாவின் ரசிகர். இவர் எழுதிய அம்மன் சன்னதி'யும், விகடனில் எழுதிய மூங்கில் மூச்சும் படித்தவர்கள் இவர் எழுத்தை மறக்க மாட்டார்கள் 
              
5) சொல்வனம் மாதமிருமுறை சிற்றிலக்கிய மாத இதழ். நீங்கள் கூட உங்கள் படைப்புகளை இங்கு அனுப்பலாம் வேணுவனம் சுகா இங்கு(ம்) எழுதுகிறார். தரமான படைப்புகளை இங்கு படிக்கலாம்.
                  
6) மூன்றாம் பிறை என்கிற இந்தப் பெயரே இது யாருடைய பக்கம் என்பதைச் சொல்லி விடும். ஆம், இயக்குனர், (சுகாவின் குரு) பாலு மகேந்திராவின் வலைப் பக்கம். மிகச் சமீபத்தில் தொடங்கியுள்ளார். 
ஜெயகாந்தன் பற்றிய அவர் எழுத்துகளை இங்கு படிக்கலாம்!
                
7) ஜெயமோகன் பக்கங்கள். அவர் எழுத்தையும், கருத்துகளையும் குறிப்பாகச் சில கதைகளை படிக்க விரும்புபவர்கள் இங்கு சென்று படிக்கலாம். 
               
8) தமிழ் உதயம் சமீபத்தில் இவர் எழுதவில்லை. யோகி என்ற பெயரில் விகடனிலும் கல்கியிலும் கதைகள் எழுதியுள்ளார். மன நலக் கட்டுரைகள், திரைப் பாடல்கள் உட்பட சுவாரஸ்ய எழுத்துகளுக்குரியவரான இவர் சமீபத்தில் ஒன்றும் எழுதவில்லை என்பதோடு, இவர் வலைப் பக்கம் உள்ளே நுழையவே முடியவில்லை. ஏன்  என்று தெரியவில்லை.
               
9) ரிஷபன் இவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. பல்வேறு பத்திரிகைகளிலும் இவரது கதைகளைப் படிக்கலாம். சிறுகவிதைகள் இவரது ஸ்பெஷல். சமீபத்து ஸ்பெஷல்.
               
10) வை கோபாலகிருஷ்ணன் பல்கலை வல்லுநர். இவர் வலைப்பூவில் விருது மழை. தான் பெற்றவற்றை இதுவரை யாரும் செய்யாத அளவில் 108 பதிவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த வள்ளல்! சிறுகதை, நீண்ட கதை எழுதுவார். ஓவியங்கள் வரைவார். திருமணம், விழாக்களுக்குப் பரிசளிக்க தானே புதுவிதமாக யோசித்துப் பரிசுகள் தயார் செய்வார். ஆன்மீகப் பதிவுகள் இடுவார். சாப்பாட்டு ரசிகர். பிரமிக்க வைப்பவர். இவரின் இந்த உப்பு சீடைக் கதை சம்திங் ஸ்பெஷல்!    
                  
11) நாச்சியார் மூத்த பதிவர். அன்புக்கு ஒரு எடுத்துக் காட்டு ஒவ்வொரு பதிவையும் 'எல்லோரும் இனிதாக வாழவேண்டும்' என்ற வாழ்த்துடனேயே முடிப்பது இவரின் சிறப்பு. பின்னூட்டங்களிலும் இவரது அன்பு வெளிப்படும்.  இவருடன் பேசியவர்களுக்குத் தெரியும் இவரின் குரலில் இருக்கும் அக்கறையும், அன்பும். சமீபத்திய பதிவர் மாநாட்டில் மூத்த பதிவர் விருது வாங்கியவர்.  துளசி கோபால் தம்பதிகளின் அறுபதாம் திருமணத்தை பொறுப்பேற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தவர். இவரது பதிவுகளைப் படிக்கும்போது உடன் அமர்ந்து உரையாடுவது போன்ற உணர்வு ஏற்படும்.
      
12) 13) 14) வெங்கட் நாகராஜ் தலைநகரிலிருந்து தமிழ் பரப்பும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் இவர்துணைவியாரும் ஒரு வலைப்பதிவர். ஏன், மகளும் கூட! இவரது ஃப்ரூட் சாலட்பயணக் கட்டுரைகளும்  சுவையானவை. 
               ==========   =========== =============
பதிவுலகம் பற்றி சில ருசிகரத் தகவல்கள்: 
               
தமிழ் வலைப் பூக்கள் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி): ப்ளாகர் தளங்கள் : 6800. 
      
அவற்றில் ஒரே ஒரு பதிவு மட்டும் பகிர்ந்து, பிறகு எழுதாமல் விடப்பட்ட தளங்கள் சுமார் 2500. 
     
ஒற்றை இலக்க  பதிவிட்டவர்கள் மேலும் 2500. 
               
நாளை பார்க்கலாமா? 
                      
மேலும் வாசிக்க...

Monday, October 29, 2012

எங்கள் சரவெடி 1

           
வலைச்சரத்தில் சரம் தொடுக்க, சாரம் கொடுக்க, எங்களுக்கு அழைப்பு விடுத்த 'அன்பின் சீனா' அவர்களுக்கு முதற்கண் எங்கள் நன்றி. அவரிடம் மின்னஞ்சலிலும், மெயிலிலும், அலைபேசியிலும் எங்கள் ஐயங்களைக் கூறினோம்; எங்கள் நிலை பற்றி எடுத்துக் கூறினோம். ஒன்றே ஒன்று கூற சுத்தமாக மறந்துவிட்டோம். அது, நாங்கள் யாரும் முறைப்படி தமிழ் கற்றவர்கள் இல்லை என்பது. எங்கள் தமிழை, அவரும், வலைச்சர வாசகர் பெருமக்களும் மன்னித்தருள வேண்டிக் கொள்கின்றோம். 

எங்கள் ப்ளாக் வலைப்பதிவை, வலைச்சரத்தில் அறிமுகம் செய்த முந்தைய ஆசிரியர்கள்சிவஹரிஞ்சுபாஷினி, அப்பாதுரைராமலக்ஷ்மிமிடில்கிளாஸ் மாதவிஆர் வி எஸ்,மோகன்ஜி, இராஜராஜேஸ்வரிஜலீலாகமால்அப்பாவி தங்கமணிமாதவன்,வானம்பாடிகள், மற்றும் பலருக்கு - யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் எங்களுக்குச் சொல்லுங்க. இதில் யாராவது எங்களை அறிமுகப்படுத்தாதவர்கள் என்றால், வாய்ப்புக் கிடைக்கும்போது அறிமுகப்படுத்திடுங்க!) அனைவருக்கும் எங்கள் நன்றி. 
       
எங்கள் ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டது, இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு, ஜூன் மாதம் இருபத்தெட்டாம் தேதி.   

'புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்வது போல' என்று சொல்லுவார்கள். நாங்க இட்லி(வடை)யைப் பார்த்து வெள்ளாவி பிடித்துக் கொண்டோம் என்று சொல்லலாம். 

கூட்டுறவே நாட்டுயர்வு என்று நாம் எல்லோரும் கேள்விப் பட்டிருக்கின்றோம். கிராஸ் ஃபங்க்ஸனல் டீம் (தமிழில் குறுக்குவேலைக் குழு?),  டீம் வொர்க் (குழுப் பணி) பற்றியும் பல கார்பொரேட் அலுவலகங்களில் போதனை வகுப்புகள் நடத்துவார்கள். எங்கள் ப்ளாக் அந்த வகையில் டீம் வொர்க் முயற்சி. பதிவு எழுதுபவர் ஒருவர், படம் இணைப்பவர் ஒருவர், மெருகு ஏற்றுபவர் மற்றவர் - பதிவை வெளியிடுபவர் ஒருவர் என்று சில சமயங்களில் எங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொண்டது உண்டு. 

எங்கள் ஆசிரியர்கள் எல்லோருமே பதின்ம வயதில் கையெழுத்துப் பத்திரிகை, துண்டுப் பிரசுரங்கள் எழுதி (அல்லது சில காகித கைவேலைகள் / மெழுகு பொம்மைகள் செய்து) அவைகளை தெருப்பையன்கள் வீட்டில் கொடுத்து, அவர்கள் சந்தோசப்படுவதைக் கண்டு ஆனந்தித்தவர்கள். எல்லாமே இலவச சேவைகள். அதே மனப்பான்மை இப்பொழுதும் தொடர்கின்றது. 

எங்கள் ப்ளாக் மூலமாக, பதிவு படிக்கின்ற வாசகர்களுக்கு, சில பயனுள்ள சில விவரங்களை(யாவது!) அளிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசிரியர்களின் குறிக்கோள். 

படைப்பாற்றல் பற்றிய எங்கள் பதிவுகள் சிறந்த உதாரணங்கள். அவைகளை இனிப்பு தடவிய மருந்தாக கொடுக்க முயற்சி செய்து வருகின்றோம். 

சுவாரஸ்யம்தான் நாங்கள் தடவுகின்ற இனிப்பு. சில (பல?) பாப் கார்ன் பதிவுகளும் அவ்வப்போது வெளியாகும். 

பதிவுலகில் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள்தாம் அதிக பட்ச தட்டல்கள் பெறுகின்றன என்பது, பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. நாங்களும் சினிமா சம்பந்தப்பட்ட விவரங்களை அவ்வப்போது ஊறுகாயாக பதிவிடுவது உண்டு. ஆனால் ஊறுகாயையே உணவாகப் படைப்பதில்லை. 

எங்கள் ப்ளாக் வலைப்பதிவில் நாங்கள் அரசியலும் பதிவதில்லை. சில கிண்டல்கள் (ஒரு வரி / இரண்டு வரிகள்) அரசியல் தலைகளைப் பற்றி எப்பொழுதாவது இடம் பெறுவது உண்டு. அதில் ஒருதலைப் பட்சமாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் யாரையாவது தாக்கியோ எழுத மாட்டோம். 

ஒருவாரத்தில் மூன்று முதல் ஆறு பதிவுகள் வரை இடம் பெறுமாறு பார்த்துக் கொள்வோம். 

எங்கள் ப்ளாக் பதிவுகள் நேற்று வரை : 1101. 

எங்கள் பதிவுகளில் அதிகம் பேர் பார்த்து, படித்து ரசித்த ஐந்து பதிவுகள், இங்கே: 







அதிகம் கருத்துரைகள் பெற்ற பதிவுகளில் சில : 




வலைப்பூக்கள் படிக்கின்ற பல வாசகர்களுக்கு, பலப்பல சிந்தனைகள், யோசனைகள் தோன்றக்கூடும். அவற்றை எல்லாம் கொட்ட வழி தெரியாமல், அல்லது வலைப்பூ தொடங்க தெரியாமல், அல்லது அதிக பட்ச வாசகர்களிடம் அதை கொண்டு செல்லத் தெரியாமல் தவிக்கக் கூடும். எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு, இந்தக் குறை இல்லாமல் இருப்பதற்காக, நாங்கள் தொடங்கியது, 'நம்ம ஏரியா !' வலைப்பூ. 
      
எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் இரண்டு (கௌதமன்) பேர்கள் அவர்கள் பெயரிலேயே ஒரு வலைப்பூ (காசு சோபனா) (இது ஆங்கில வலைப்பூ) வைத்திருக்கின்றார்கள். அவைகளை, அவர்களே மறந்துவிட்டார்கள். நாம் இங்கே நினைவுறுத்த வேண்டுமா !!

வலைச்சரம் பக்கங்களை நெடுநாட்களாக ரசித்து வருகிறோம். எங்களையும் பலர் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் பலரை நாங்களும் தொடர்ந்து வாசிக்கிறோம். 

நாங்கள் அறிமுகப்படுத்த இனியும் யாரும் இல்லை என்று நினைக்கிறோம். அறிமுகப்படுத்துகிறோம் என்று சொல்வதை விட நாங்கள் வாசிப்பவர்களை, ரசிப்பவைகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 

நிறைய பக்கங்களைச் சொல்லும்போது அவற்றை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டு செல்பவர்களே அதிகம். அவர்கள் இதுவரை பார்க்காத, தெரியாத பக்கங்கள் இருந்தால் ஒருவேளை பார்க்கலாம். அதற்கும் 25% வாய்ப்பே என்றும் தோன்றுகிறது. 

நாம் ரசித்தவற்றை மற்றவர்களும் ரசித்திருக்கிறார்களா என்பதும், நம் பக்கம் சொல்லப்பட்டு இருக்கிறதா என்பதுமே இங்கு கவனிக்கப் படுபவை என்பதைப் பார்த்திருக்கிறோம். 

நாங்கள் ரசித்த, ருசித்த படிக்கும் பதிவுகளின் விவரம் இனிவரும் நாட்களில் பகிர்ந்துகொள்கிறோம்!  

மீண்டும் நாளை சந்திப்போம். 
                  
மேலும் வாசிக்க...

Sunday, October 28, 2012

சென்று வருக சிவஹரி - வருக வருக ”எங்கள் பிளாக்” கௌதமன் 

அன்பின் சக பதிவர்களே !

இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சிவஹரி - பணிச்சுமையின் காரணமாக இன்று 
 நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 
பணிச்சுமைக்கு இடையேயும் - தான் ஏற்ற பொறுப்பினை - இடை விடாத முயற்சியுடனும் கடும் உழைப்புடனும் - வெற்றிகரமாக - மன நிறைவுடன் நிறைவேற்றி இருக்கிறார். வலைச்சரத்தில் இத்தனை பதிவர்களையோ - இத்தனை பதிவுகளையோ யாரும் அறிமுகப் படுத்தியதில்லை என நினைக்கிறேன் . 

இவர் எழுதிய பதிவுகள் : 9 ( ஆறு நாட்களீல் ) 
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 101
அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகள் : 370
பெற்ற மறுமொழிகள் : 250

இவர் எழுதிய விதமும் புதுமையாக இருந்தது. ஒவ்வொரு பதிவும் புதுப் புது தலைப்புகளைக் கொண்டது - அத்தலைப்புகளின் அடிப்படையில் பதிவர்களும் பதிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்தனை பதிவர்களும் புதிய பதிவர்கள் - அவர்களீன் தளங்களோ பெரும்பாலும் புதிய தளங்கள் - இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப் படாத தளங்கள் .  உண்மையிலேயே இணையத்தில் அதிக நேரம் செலவழித்திருக்கிறார். தேடிக் கண்டு பிடித்து அறிமுகப் படுத்திய சாதனை பிரமிக்க வைக்கிறது. 

நண்பர் சிவஹரியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

வருகிற 29.10.2012 திங்கள் முதல் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் கே ஜி கௌதமன். இவர் எங்கள் பிளாக் என்னும் தளத்தினில் உறவினர்களுடன் சேர்ந்து எழுதி வருகிறார்.  


இவர் முதலில் பெற்றது பொறியியல் டிப்ளமோ. பிறகு அசோக் லேலண்டில் சேர்ந்து, அதற்குப்  பின் A M I E (Appeared Many times In Exams) பகுதி நேர படிப்பாக எடுத்து, போராடி வென்று, அசோக் லேலண்டில் அப்ரெண்டிஸ் முதல் மேலாளர் பதவி வரை வந்து, பிறகு விருப்ப ஓய்வு பெற்றவர். 

அசோக் லேலண்டில் ஆராய்ச்சி & அபிவிருத்திப் பகுதியில் முப்பத்து இரண்டு வருடங்கள் குப்பை கொட்டியவர். 

படித்த காலத்திலும், வேலை பார்க்க ஆரம்பித்த காலத்திலும் கையெழுத்துப் பத்திரிகை எழுதி, நண்பர்களிடம் படிக்கக் கொடுத்து, அவர்களின் பாராட்டைப் பெற்றது, பின்னாட்களில் வலைப்பூ ஆரம்பிக்க ஊக்கம் அளித்த விஷயம். 

இருப்பது - மார்கழி தவிர மற்ற மாதங்களில் பெங்களூர்;.மார்கழியில் சென்னை. இசைவிழா கச்சேரிகளில் காதால் இசை பருகி (ஆமாம், ஆமாம், பெரும்பாலும் ஓ சி கச்சேரிகள்தாம்), காண்டீன்களில் செவிக்கு உணவு இல்லாத நேரங்களில் வயிற்றுக்கு ஈந்து (ஹூம் இங்கே ஓ சி சாப்பாடு எல்லாம் கிடையாதுங்கோ) வாழ்ந்து கொண்டிருப்பவர். 

” எங்கள் ப்ளாக் ” தளத்தின் சக ஆசிரியர்களான ராமன், கே ஜி, ஸ்ரீராம், காசு சோபனா எல்லோரும் இவரின் சொந்த, பந்தங்களே.

அருமை நண்பர் கவுதமனை வருக வருக என வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பினில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் சிவஹரி

நல்வாழ்த்துகள் கே ஜி கவுதமன்

நட்புடன் சீனா 
மேலும் வாசிக்க...

Friday, October 26, 2012

ஐந்தாம் நாள் - சிவஹரி - ஏழு பருவங்கள்


காலங்கள் நமக்காக ஒரு போதும் காத்துக் கொண்டிருப்பதில்லை. இதனை கிராமங்களில் பழமொழியாக ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காதுஎன்று சொல்வார்கள்கால தேவனின் சக்கரம் என்றுமே உருண்டு கொண்டிருக்கக் கூடியது.  

அதே கால சூழலில் நற்காவியங்களும் வளரலாம், கருஞ்சுவடுகளும் எழலாம். நம்மை வந்தடைவது எதுவானாலும் அதனையே தாங்கிடும் வல்லமை தந்திட இறைவன் தான் அருள வேண்டும்.

சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள் பருவங்களை ஏழு வகைகளாகப் பிரித்திருக்கின்றார்கள்.  
அவையன

பருவங்கள் (பெண்கள்)
வயது எல்லை
பருவங்கள் (ஆண்கள்)
வயது எல்லை
பேதை
ஐந்து முதல் எட்டு வரை
பாலன்
ஒன்று முதல் ஏழு வரை
பெதும்பை
ஒன்பது முதல் பத்து வரை
மீளி
எட்டு முதல் பத்து வரை
மங்கை
பதினொன்று முதல் பதிநான்கு வரை
மறவோன்
பதினொன்று முதல் பதிநான்கு வரை
மடந்தை
பதினைந்து முதல் பதினெட்டு வரை
திறவோன்
பதினைந்து மட்டும்
அரிவை
பத்தொன்பது முதல் இருபத்தி நான்கு வரை
விடலை
பதினாறு மட்டும்
தெரிவை
இருபத்தைந்து முதல் இருபத்தொன்பது வரை
காளை
பதினேழு முதல் முப்பது வரை
பேரிளம்
முப்பது முதல் முப்பத்தி ஆறு வரை
முதுமகன்
முப்பதிற்கு மேல்

பருவங்களைப் பார்த்து விட்டோம். அடுத்து வலைப்பூக்களைப் பார்ப்போமே!

என் மனம் தான் எனக்கு கோயில். அங்கு உணர்வுகள் தான் எனக்கு கடவுள். என் பெயர் தான் எனக்கு மதம். நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. 

பாண் சுற்றிவரும் பத்திரிகை கூட என் பையில் பவுத்திரமாய் இருக்கும் என்று தன்னைப் பற்றி அறிமுகப் படலம் தந்திருக்கும் இலங்கை எழுத்தாளார் ம. தி. சுதா அவர்களின் மதியோடை என்னும் வலைப்பூவினில் கவிதைளும், 
கதைகளும் நிரம்பி வழிகின்றன.

வெளியாகியுள்ள பதிவுகளில் நான் ரசித்ததை பகிர்கின்றேன்.

இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் பத்திரிக்கையில் விட்ட குறையும், தொட்ட குறையும் என்ற தலைப்பில் வெளியாகிய சிறுகதையானது கதை நாயகர் தானே நமக்கு கதையைச் சொல்லிடும் விதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. படிப்பதற்கு ஏற்ற சுவையினையும் கொண்டிருக்கின்றது.

அறிவூட்டும் கவிதைகள் என்ற தலைப்பிலே நாயகரின் காதல் வரிகளை நாமும் சுவைக்கலாம்.

பெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய் - உணர்ச்சி ததும்பிடும் உன்னதமான கட்டுரை. 


இலங்கையைத் தாயகமாய்க் கொண்டு மலேசியாவிலிருந்து நம்மோடு இதந்தரு தென்றல் வடிவிலே உரையாடும் சகோதரம் ரூபன் அவர்களின் வலைப்பூவிற்குள் தற்போது நுழைந்திருக்கின்றோம்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்

கெழுமையும் ஏமாப் புடைத்து 
                            என்ற அப்பத்வாசுகி வீட்டுக்காரரின் வரிப்பொருளை நமக்கு சொல்லாமல்  ிப்பு மட்டும் என்னோடு இருக்கின்ற என்ற சொல்லியிருக்கின்றார்கள். கல்வி ஒன்றே அழியாச் செல்வம், எழுதப்படும் எழுத்துக்கள் என்றும் தரமானவையாக இருந்திட நம் சிந்தையில் தெளிவிருந்தால் போதும் என்று நண்பருக்கு நாம் இங்கே ஒரு உதவிக்குறிப்புரையினை அளித்து விட்டு மேலே செல்வோமே.

நவயுகக் காதலுக்கு சரியான சாட்டையடியாய் முகவரி அறிந்து காதல் செய் என்ற தலைப்பிலான கவிதை விளங்குகின்றது. மேலும் கூடுதல் சுவையாக இந்த பதிவைத்தான் சகோதரம் ரஞ்சனி நாராயணன் அவர்களும் தன் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மேற்கோளிட்டிருக்கின்றார்கள்.

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் வளரும் “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற வரிகளை நினைவு கூற வைத்து விட்டீர்களே. 

எப்போது விடியும் எம் வாழ்வு தலைப்பிலமைந்த கவிதை நெஞ்சில் துயரலைகளை மெல்லிய கீற்று கொண்டு வருடிவிட்டுச் செல்கின்றது. இந்த நிலையும் மாறிவிடும்” என்ற எண்ணம் ஒன்றே நம்முடைய தற்போதைய சமாதானப் பொருள் என்பதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

நல்ல சுயசார்புச் சிந்தனை எழுத்தாளர். மென்மேலும் வளர்ந்திட என் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

எனக்குப் பிடித்த சில வலையகங்களில் தனிப்பட்ட பதிவினை குறித்துச் சொல்லிடாமல் அந்த வலையகத்தினையே மொத்தமாய் குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.

அவையன: 
அடுத்த தலைமுறையினருக்கு நாம் நல்ல பெற்றோராகவும், வழிநடத்திச் செல்லக் கூடிய ஆசானாகவும் விளங்கிட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்திடும் வலைப்பூ.

 நாம் அங்கே இணைந்து நம் கருத்துகளை மற்ற பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் பயன்படும் வண்ணம் சேவை செய்யலாம்.


******************************************************

என் மதிப்பிற்குரிய அற்புதமான நபர். வலைத்தளம் சார்பான எனது இடக்கை, வலக்கை, வழுக்கை எல்லாம் இவரையே சாரும். என் வலைப்பூவில் ஏற்படும் அவ்வப்போதான சிக்கல்களை தீர்த்து வைப்பதில் வல்லவரின் வலைப்பூ. 

நண்பர் அப்துல் பாஷித் அவர்களின் வலைப்பூவானது கணினி உலகில் ஒரு அமுத சுரபி என்றால் வியப்பில்லை.

 ********************************************
 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் வரலாறினை K.Kamaraj – by Kamaraj’s family – விருதுநகர் என்ற வலைப்பூவானது தாங்கி நிற்கின்றது.

 தமிழக ஆட்சியிலே காமராசரின் ஆட்சிக் காலத்தில் விளந்திருகும் நன்மைகள் குறித்து தனியே நான் சொல்லுவதை விட சான்றோர்கள் உரைத்தால் பொருளின் சுவை கூடும் அல்லவா. எளிமையாய் வாழ்ந்த தியாகச் செம்மல் குறித்த வலைப்பூவினை இங்கே அறிமுகப்படுத்தியதில் மகிழ்வெனக்கு. 

***************************************
 எழுத்தாளர்களின் பெட்டகமாய் விளங்கும் இவ்வலையிலே நாம், கவிதை, கட்டுரை, கதை, புத்தக விமர்சனம் என பல்நோக்குச் சுவைகளை இனிமையுடன் சுவைத்திட முடியும். 

வாசகர் மறுவினைப் பகுதியில் நம்முடைய எண்ணச் சிதறகளையும் அள்ளித் தெளித்திட இடமளித்திருக்கின்றார்கள்.

 *******************************
எழுத்தறிவித்தவன் இறைவனே. அந்த இறைவனின் மகிமையைச் சொல்லிடும் அற்புதமான தளம் ஆன்மீகக் கடல். ஆன்மீகம் சம்பந்தமான பல கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார்கள். படித்துப் பயனடைவீர்களாக.

 *******************************
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று அண்ணல் மொழிந்திருக்கின்றார்கள். அந்தக் கிராமங்களின் அடிப்படை ஆதாரம் விவசாயம் தான்.

அந்த விவசாயம் செழித்தால் தான் நாமும் முன்னேற முடியும். ஆனால் விவசாயின் வாழ்க்கை நிலை ஒரு போதும் மேல் நோக்கிய பயணத்தை தொடங்குவதே இல்லை. விவசாயம் குறித்து நல்ல அறிவுரைகளை வழங்கியிருக்கும் இத்தளத்தினை கண்டு நாமும் பயன்பெறுவோமாக. 

*******************

நகைச்சுவை என்ற உணர்வு மனிதனுக்கு இல்லையெனில் என்றோ மக்கிப் போயிருப்பான். அத்தகைய நகைச்சுவை உணர்வானது பார்த்தல், கேட்டல், படித்தல் ஆகிய வழிகளில் நம்மை அடைந்து கொண்டே இருக்கின்றது. அத்தகைய நகைச்சுவை உணர்வினை நமக்கு அள்ளித்தரும் வலைப்பூவாக எங்கள் ப்ளாக் அமைந்திருக்கின்றது.


***************
கதைகள், அனுபவங்கள், சினிமா, விமர்சனம், இசைஞானி குறித்த கருத்துகள் என பல சுளைகளோடு இப்பலா வேரில் பழுத்து நிற்கின்றது. நாம் புசித்திட வேண்டியது தான் பாக்கி.! சுளை பிரித்து புசித்திட கிளம்புவோமாக.

 ***********
இணைய உலகிலே கவிச்சக்கரவர்த்திகளில் ஒருவர். ஈகரை என்னும் வலைத்தளத்தின் மூலமாக இவரது தனித்திறமைகளை முன்னர் அறிந்திருக்கின்றேன்.

அவரது இவ்வலைப்பூவினை இங்கே அறிமுகப் படுத்திடுவதில் மகிழ்வெனக்கு.

**********
கார்த்திக் அவர்கின் தகவல் குறிப்புகள் வலைப்பூவினிலே நாட்டு வைத்தியம், அழகு, அமுத மொழி, சமையல் குறிப்பு என பல குறிப்புகள் விரவி கிடக்கின்றன. 

அனைத்தும் நம் பார்வைக்காக தொகுத்தளித்திருக்கின்றார்கள். கண்டு நாமும் பயன்பெறுவோமே!


*******
புதுக்கவிதை படைத்திட்டேன் என்று புலவர் பலர் இன்று உரைநடையை ஒடித்து மடக்கி கவிதை மழை பொழிந்து கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் புதுக்கவிதைக்குரிய இலக்கிய நயம் நோக்கியும், இதமான வரிகளில் இடித்துரைத்தல் செய்து நல்வழிப்படுத்திடலும் ஒரு கலை தான்.

 அதன் வழியிலே கவிதை வாசலின் ஆசிரியர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்களின் வலைப்பூவானது முழுமையுமே கவிதை மலர்களால் நம்மை அகமகிழ வரவேற்கின்றது.

வாசலில் நுழைந்து நாமும் தேன் பருகி திளைத்தின்பம் கொள்வோமே!


*****
தமிழ் பதிவர் உலகிலே தன்னிகரற்ற இடம் பிடித்த வலையாசிரியர். இவரது பின்னூட்டங்களை நான் பல இடங்களில் கண்டு ரசித்ததுண்டு

அத்தனை வலைப்பூக்களிலும் இருக்கும் கருத்துகளை ரசித்து சுவைபட இரத்தினச் சுருக்க பின்னூட்டம் இடுகின்றார்கள் என்றால் சாதனை மகத்தானது தானே!

 அவருடைய வலைப்பூவிலே நமக்கு சிந்தனைத் துளிகளை பல்வித ஊட்டிகளின் மூலமாக ஊட்டுகின்றார்கள். ISO பதிவானது நம்மை நாமே 
சீர்படுத்திக் கொள்ள உதவிடும் படைப்பு என்பேன். 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது