07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அமைதிச்சாரல். Show all posts
Showing posts with label அமைதிச்சாரல். Show all posts

Sunday, January 9, 2011

ஸ்டாப் வந்துட்டுது...... இறங்கிக்கறேன்!!..

கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு எப்படி ஓடிப்போச்சுன்னே தெரியலை..  இந்தவாரத்தைச்சொன்னேன். என்னையும் நம்ம்ம்ம்ம்ம்பி இந்த பொறுப்பை ஒப்படைச்ச சீனா ஐயாவுக்கும், வலைச்சரக்குழுவினருக்கும், மொதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

ஏன்னா,.. வழக்கமா படிக்கிற பதிவுகள் தவிர நெறைய புதிய பதிவுகளையும் கண்டுக்கிடறதுக்கு, எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா இருந்திச்சு. அதையெல்லாத்தையும், பிரபலம்,புதுசுன்னு கதம்பமா தொடுத்துட்டேன். ஜூரமெல்லாம் ஒண்ணும் வரலை. மத்தபடி பரீட்சைக்கு படிக்கிறமாதிரி ஜாலியா படிச்சுட்டே இருந்தேன் :-))). வலைச்சரப்பொறுப்பை சாக்குவெச்சு, கணினியை ஆக்கிரமிக்க முடிஞ்சது. இல்லைன்னா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல எனக்கு அனுமதிகிடைக்காது :-))

பின்னூட்டமிட்டு 'ஊக்கு'வித்த உங்கள் அனைவருக்கும், பின்னூட்டம் போடலைன்னாலும்..  தினமும் படிச்சுட்டுப்போன மற்ற அனைவருக்கும்,  'லேட்டானாலும் லேட்டஸ்டா, நமக்கெல்லாம் தளம் கொடுத்து உதவிய கூகிளம்மனுக்கும்(இதெல்லாம் ரொம்ப ஓவருன்னு ஆரும் திட்டப்டாது:-)) நன்றி'.... ('சொல்ல மறந்தா,  பாஸ்வேர்டு மறந்துபோகக்கடவதாக' அப்படீன்னு யாரோ சொல்றமாதிரியே.. காதுக்குள்ள கேட்டுக்கிட்டிருக்கு). 

எங்கூடு இங்க பக்கத்துலதான் இருக்கு.. வீட்டுக்கு முன்னால சின்னதா ஒரு முற்றமும் இருக்கும். நேரம் கிடைச்சா எட்டிப்பாருங்க..

மறுபடியும்,..  அடுத்து வரப்போற ஆசிரியருக்கு வாழ்த்துக்களும், எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும், வரப்போற பொங்கலுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களும் சொல்லிக்கிறேன்.வாய்ப்பு கிடைச்சா, மறுபடியும் சந்திக்கலாம்.. நன்றி, வணக்கம்.




மேலும் வாசிக்க...

Saturday, January 8, 2011

கத்துக்கலாம்..வாங்க..

"வாங்கக்கா.."

"வரச்சொன்னியாமே... குழந்தை வந்து கூப்பிட்டா.."

"ஆமாங்க்கா.. புதுச்சா கணினி வாங்கியிருக்கோம். எனக்கு அதப்பத்தி ஒண்ணும் தெரியாது. அதான் உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு கூப்பிட்டு வரச்சொன்னேன்."

"நானும் உன்னைமாதிரிதான்.. ஆனா, தெரியாததை இணையத்துல தேடிப்பார்த்து தெரிஞ்சுக்குவேன். தமிழ்ல நிறைய வலைப்பூக்கள்ல எக்கச்சக்கமான விபரங்களெல்லாம் கொட்டிக்கிடக்கு .."

"வலைப்பூக்கள்ன்னா என்னக்கா.... ரோஜா, மல்லிகை மாதிரியா.."

"அசடே... வலைப்பூக்கள்ன்னா கூகிள் இலவசமா கொடுக்கிற தளம். இதுல நாம என்னன்னாலும் எழுதலாம். நமக்கு தெரிஞ்சதை மத்தவங்களோட பகிர்ந்துக்கலாம். இப்ப தமிழ்ல கூட எழுதலாம் தெரியுமோ!!..  அது யாருக்காவது பயன்பட்டா நமக்கு சந்தோஷம்தானே..

கதை, கவிதை, அறிவியல் மற்றும் மருத்துவம் சம்பந்தமான கட்டுரைகள் அப்புறம் குழந்தைகளுக்கு பயன்படறமாதிரியான தகவல்கள் எல்லாமும் எழுதலாம்."

"மருத்துவத்தைப்பத்தியும் எழுதறாங்களா..."

"ஆமாம்,.. அதிலும் தொழில்முறை வல்லுனர்களான டாக்டர்களும் எழுதறாங்க. டாக்டர்.சுனில்கிருஷ்ணன் ஆயுர்வேதத்திலிருந்து சிலகுறிப்புகளை எழுதியிருக்காரு. இவரோட தளத்துல நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்குது.

"சரி.. மத்த விபரங்களையும் ஒண்ணொண்ணா சொல்றேன்...

நம்ம கம்ப்யூட்டரைப்பத்தி ஆதியோடந்தமா,.. எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கணும்ன்னா ஜியாத் அஹமத் எழுதியிருக்கிறதை பார்க்கணும்.
உனக்கு தமிழ்ப்பாட்டுகள்ன்னா ரொம்ப பிடிக்கும் இல்லே!!. அதை இப்போ இணையத்திலிருந்தும் நீ தரவிறக்கிக்கலாம். அதுக்கான சில தளங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கார்.

பனங்குடிலிலிருந்து எழுதப்பட்டிருக்கிற சில இடுகைகள் ரொம்பவே பயனுள்ளதா இருக்குது.

வெறும்பயன்னு பேருவெச்சுக்கிட்டிருக்காரு. ஆனா, இணையத்தை வேகமாகவும், எளிதாவும் எப்படி பயன்படுத்தறதுன்னு அழகா சொல்லிக்கொடுத்துருக்காரு. கணினியை எலியைமட்டும் வெச்சு இயக்காம, கீபோர்டையும் வெச்சு இயக்கலாம். இதுக்கான குறுக்குவழி பொத்தான்களைப்பத்தியும் சொல்லியிருக்கார். படிச்சு தெரிஞ்சுக்கோ..

இனிமே, நீ உன்னோட ஃப்ரெண்ட்சுக்கு ஜிமெயிலிலேயே கடிதம் போடலாம். அதுவும்,.. உன்னோட கையெழுத்தோட.. ஒரு பேனாவோ, இல்லை வேற ஏதாவது பொருளோ, உன்னோட கையெழுத்தை போட்டுக்காமிச்சா எவ்வளவு அழகாயிருக்கும். அதை எப்படி செய்யறதுன்னு ஜி.எஸ்.ஆர் சொல்லிக்கொடுத்திருக்கார்.

இணையத்தை பயன்படுத்தும்போது வைரஸ் தாக்குறது ஜகஜம். மழையில நனைஞ்சா காய்ச்சல் வருதுல்லியா.. காய்ச்சல் வந்தா தடுப்பூசி போட்டுக்கிறோமில்ல.. அதுமாதிரி கணினிக்கும் தடுப்பூசி போடணும். அப்படியொரு தடுப்பூசியப்பத்தி மகாதேவன் சொல்லியிருக்காரு. மறக்காம ஊசி போட்டுடு.

இணையத்தில் தமிழ்ப்பக்கங்களும் நிறைய இருக்கு. அதுகள்ல உன்னோட கருத்தை எழுதணும்ன்னு நினைச்சா, எப்படி எழுதணும்ன்னு Aaqil Muzammil லோட இந்த தளத்தில் வழி சொல்லிருக்காரு.

பொழுதன்னிக்கும் கணினி முன்னாடி உக்கார்றவங்களுக்கு, மூட்டுவலி, மணிக்கட்டுவலி, முதுகுவலியெல்லாம் ஏற்படறது ஜகஜம்.. சரியானபடி உக்கார்ந்தா இதை கொஞ்சமாவது தவிர்க்கலாம். இதைப்பத்தி பொன்மலர் சொல்லியிருக்காங்க. அப்புறம்... யம்மாடி!!,.. சொல்றேனேன்னு தப்பா நெனைச்சுக்காதே. நெருப்புன்னா வாய் வெந்துடாதுன்னு சொல்லுவாங்க. இப்ப, ஏதாவது காரணத்துனால உன்னோட கணினியை விக்கிறேன்னு வெச்சுப்போம். அப்ப, இதுல இருக்கிற விவரங்களை முக்கியமா, புகைப்படங்கள், ஃபைல்களை தவறா பயன்படுத்தறதுக்கு வாய்ப்பிருக்கு. இதை எப்படி தடுக்கணும்ன்னும் சொல்லியிருக்காங்க... பத்திரமா இருந்துக்கோ"

"அக்கா... நீங்க சொல்லித்தந்த அழகுல, இப்ப எனக்கும் ஒரு ஆசை தோணிப்போச்சு.. எல்லாத்தையும் கத்துக்கிட்டு நானும் ப்ளாக் எழுதப்போறேனே...."

"எழுது.. எழுது..  உன்னைமாதிரி நிறையப்பெண்கள் எழுதறதுக்கு முன்வரணும். உன்னோட ப்ளாக்குல எந்தெந்த விஷயங்களைப்பத்தி எழுதப்போறே"

"அது சஸ்பென்ஸ்......."



மேலும் வாசிக்க...

Friday, January 7, 2011

ஃபோகஸ் லைட்...

'எக்ஸ்போ-11' என்று சீரியல் பல்புகளாலேயே வடிவமைக்கப்பட்டிருந்த வளைவு நுழைவாயிலின் அருகே, நடந்துபோய்க்கொண்டிருக்கும் அந்த தம்பதியையும், கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்களே,..  அந்தக்குழந்தையையும் நல்லா பார்த்துவெச்சுக்கோங்க. பொருட்காட்சியில் ஒவ்வொரு இடங்களாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டமா இருக்கிற இடங்கள்ல குழந்தைகளை பத்திரமா கையில் பிடிச்சுக்கவேண்டாமோ!!.. இவங்க கையிலிருந்து நழுவி அவன் ஓடறதும், துரத்திப்பிடிக்கிறதுமா இருக்குது.

"அப்பா... எனக்கு பட்டம் வேணும்,.. வாங்கித்தாங்க"

"நீ சின்னக்குழந்தைடா.. உனக்கு பட்டமெல்லாம் விடவருமா.. சும்மா பிச்சுப்போட்டுடுவே.. என்னங்க,.. அதெல்லாம் வாங்கவேணாம்"

"பரவாயில்லைம்மா, குழந்தை ஆசைப்படுறானில்ல.. இருக்கட்டும். சின்ன வயசுல பட்டம்ன்னா எனக்கு உசிரு. அந்த ஜாலியே தனி. வெங்கட் நாகராஜ்ங்கிறவர் அதப்பத்தி என்னமா எழுதியிருக்காரு தெரியுமா"

வாமன் ஹரி பேட்டே ஜூவல்லர்சின் ஸ்டாலை கடந்துபோகும்போது, வெளியே ஃப்ளக்ஸ் பேனரில் வரையப்பட்டிருக்கும் ஜிமிக்கிகள்,  ஒரு நிமிஷம் கடைக்குள்ள வந்துதான் பாரேன்னு கூப்பிடுது. ஆபத்தை உணர்ந்த கணவன், 'என்னத்த பெரிய ஜிமிக்கி!!!.. உன்னோட முகத்துக்கு ஜிமிக்கியைவிட தோடுதான் நல்லாருக்குது. அப்படியே அம்மன் சிலை மாதிரி இருக்கே தெரியுமா?..' என்றான் அவசரமாக.

"எந்த முகத்துக்கு எந்த ஜிமிக்கி பொருந்தும்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்??.. ம்..  தக்குடுமாதிரி நீங்களும் ரொம்பவே ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க போலிருக்கு...." ஒரு நிமிஷம் நின்று,  இடுப்பில் கைவைத்துக்கொண்டு முறைத்துவிட்டு நகர்கிறாள்.

பேசிக்கொண்டே, புடவைகள் இருக்கும் ஸ்டால்பக்கம் வருகிறார்கள்.

"என்னங்க.. வந்தது வந்தோம். அப்படியே பொங்கலுக்கு நல்லதா ஒரு புடவை எடுத்துட்டுப்போயிடலாம். செலக்ட் பண்றதுல ஹெல்ப் பண்ணுங்களேன்"

"ஆத்தா.. இந்த விளையாட்டுக்கு நா வரலை. உங்ககூட கடைக்கு வந்தா என்னாகும்ன்னு ஆர்.வி. எஸ் அண்ணன் அப்பவே எச்சரிச்சுட்டாரு. நா இப்படியே வெளியில தந்தைக்குலங்களோட ஐக்கியமாயிடுறேன். எத்தனை நாளானாலும் பரவாயில்லை. உனக்கு பிடிச்சதா எடுத்துட்டு வா.."

"ம்க்கூம்... ஒரு ஹெல்ப் கேட்டா செய்யத்தோணுதா??.. எந்தகலர் எனக்கு நல்லாருக்கும்ன்னு என்னைவிடஉங்களுக்குத்தானே தெரியும்.."

"உனக்கென்ன செல்லம்... எந்தப்புடவை கட்டினாலும் அழகாத்தானிருப்பே.."

"வர்றப்ப உங்களுக்கு ஒரு கர்ச்சீப் வாங்கிட்டு வரேன். அசடை துடைச்சுக்கோங்க.. குழந்தையை பார்த்துக்கோங்க. சேர்ல உக்காந்ததும், ஆபீஸ் ஞாபகத்துல தூங்கிடாதீங்க.."

"இல்லைம்மா,.. இதோ டி.வி இருக்கே. பொழுது போகும். நீ போயிட்டுவா"

ஜவுளிக்கடலில் நீந்தி முத்தெடுத்து வந்தவள், கணவனை மட்டும் பார்த்து துணுக்குறுகிறாள்.

"என்னங்க... குழந்தை எங்கே?.."

"இங்கேதானே இருந்தான்.. 'தோசை சுடுறது எப்படி'ன்னு ஒரு நிகழ்ச்சி. ராமசாமி கண்ணன் அழகா நகைச்சுவையோட விவரிச்சுக்கிட்டிருந்தார். அதப்பாத்துட்டு, தோசை வேணும்ன்னு நை..நைன்னுட்டுருந்தான். வீட்டுக்குப்போகையில ரெஸ்டாரண்டுல சாப்பிடலாம்ன்னு உக்கார வெச்சுருந்தேனே.."

"அய்யய்யோ... குழந்தையை தொலைச்சிட்டீங்களா... நீங்க அந்தப்பக்கம் தேடுங்க.. நான் இந்தப்பக்கம் தேடுறேன். குழந்தை கிடைச்சதும், மொபைல்ல தகவல் கொடுத்துப்போம்... ஓடுங்க"

ஆளுக்கொரு பக்கமாக ஒருமணி நேரம் தேடியபின்னும் கிடைக்காமல், மனைவியிடம் கேட்பதற்காக மொபைலை எடுத்தபோதுதான், கிளம்பும் அவசரத்தில், சார்ஜ் இருக்கிறதா என்பதை கவனிக்கமறந்தது உறைத்தது. 'இப்ப என்ன செய்ய...' ஒரு ரூபாய் நாணயம் போட்டு வேலைசெய்யும் போன்கள் எங்கிருக்குன்னும் தெரியலை. சட்டுன்னு,..  கூடவேலைபார்க்கும் ஹரி ஒருதடவை,  பத்துரூபாய் நோட்டைவெச்சு மொபைலை சார்ஜ் செஞ்சது ஞாபகம் வந்தது. ம.தி. சுதா சொல்லிக்கொடுத்தாராம். சந்தேகத்துடனேயே செஞ்சு பார்த்தான். ஹைய்யா..!!! ஒர்க்அவுட் ஆகிடுச்சு. உடனே மனைவிக்கு போன்செய்தான்.

"அதிகம் பேச நேரமில்லை.. நீ முகப்புல இருக்கிற தற்காலிக காவல் நிலையத்துக்கு வந்துடு..."

பொறுப்பிலிருந்தவர் பையனின் அங்க அடையாளங்களை கேட்டுத்தெரிந்துகொண்டு மைக்கில் அறிவிக்க ஆரம்பித்தார். பையனின் உயரம், நிறம், உத்தேசமா என்னவயதிருக்கும், போட்டிருந்த சட்டையின் நிறம்ன்னு பயோடேட்டாவை ஒவ்வொண்ணா சொல்லச்சொல்ல, ஜெயலலிதாவின் பயோடேட்டாவை கே.ஆர்.பி சொல்றமாதிரியே இருந்தது.

அவர்களைப்போலவே அங்கே இன்னும் இரண்டொரு நபர்கள் கவலையுடன் காத்திருந்தார்கள். அவர்களைப்பார்த்துக்கொண்டே, "ஏம்மா,.. மியூசிக் சீசன் மாதிரி இது என்ன!!..குழந்தைகள் காணாம போகும் சீசனா.. ஆனா ஒண்ணு. எனக்கு மஹேஷ் மாதிரியெல்லாம் வர்ணனை செய்யவராது.." என்றவனை முறைத்தாள்.

அப்போது ஒரு காவலர், ஒரு சிறுவனை கையில் பிடித்துக்கொண்டு வந்தார். பையனைப்பார்த்ததும், 'இதுதான் எங்க குழந்தை..' என்றபடி பாய்ந்து கட்டிக்கொண்டனர். சம்பிரதாயமெல்லாம் முடித்து வெளியே வந்ததும், 'அப்பாகிட்டேதானே இருந்தே.. எங்கேடா போயிட்டே..' என்று கேட்டபடி வாரியணைத்துக்கொண்டாள்.

"ஸ்டால் பக்கத்துல ரெண்டு பாப்கார்ன் கடை இருந்திச்சும்மா.. கிட்ட போய் வேடிக்கைபார்த்துட்டு திரும்பறப்ப, எந்தக்கடைக்கு பக்கத்துல அப்பா இருந்தாருன்னு குழப்பத்துல வழி தவறிட்டேன்.."

ஆஹா!!... இது உழவனோட அனுபவம் மாதிரியே இருக்கே. மாதிரியென்ன!! அதேதான்.

"இப்படியெல்லாம் தனியா போகப்படாது. உன்னைக்காணோம்ன்னதும் எப்படி தவிச்சுப்போயிட்டோம் தெரியுமா?.."

"இதுக்குத்தான் குடும்பப்பாட்டுன்னு ஒண்ணு வேணும்கிறது. தொலைஞ்சுபோனா கண்டுபிடிக்க வசதியா இருக்குமில்லே.. அட்லீஸ்ட் துளசியக்கா அவங்களோட மீனைக்காணோம்ன்னதும் பாடுனாங்களே, 'கண்ணாமூச்சி ஏனடா?..'ன்னு... அதுமாதிரியாவது பாடியிருக்கலாம்". கிண்டல் செய்த கணவனை முறைத்தாள் மனைவி.



மேலும் வாசிக்க...

Wednesday, January 5, 2011

பாப்பா.. பாப்பா.. கதை கேளு..

அன்றைக்கு குழந்தைகளின் கும்மாளம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர்களின் அம்மா சவிதா. . , "என்ன!!.. ஒரே சத்தக்காடா கெடக்குது?" என்று கேட்டபடி வீட்டுக்குள் நுழைந்தார் மரகதம்பாட்டி.

பாட்டியின் கையிலிருந்த கூடையிலிருந்து குங்குமப்பிரசாதத்தை எடுத்துக்கொண்டபடியே சவிதா," ஏம்மா இவ்ளோ நேரம்??.. கோயில்ல ரொம்ப கூட்டமா?" என்று கேட்டாள்.

"கோவில்ல நம்ம சௌந்தரம்மா(கேணிப்பித்தன்) மகளைப்பார்த்தேன். ஊருக்கு வந்திருக்கா போலிருக்கு. ஹூம்!!.. எப்படியிருந்த குடும்பம்.."

"என்ன பண்றது!!.. காலம் யாரை எங்க கொண்டுபோய் வைக்கும்ன்னு யாருக்குத்தெரியும்!!.."

அப்படியே, வர்ற வழியில ஜெயந்தியையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்தேன். அதான் இம்புட்டு நேரமாயிடுச்சு.இந்தப்பொண்ணோட ரௌத்திரத்துக்கு பின்னாடி இருக்கிற கதை(ராகவன்)யை நினைச்சா மனசு அப்படியே கலங்கிப்போகுது.."

இதற்கிடையில் பசங்களின் கூச்சல் அதிகமானது."அது என்னங்கேன்.. .. ஒரே வாக்குல" செல்லமாக அதட்டினாள் பாட்டி.

" பாட்டி.. அம்மாட்ட கதை சொல்லச்சொன்னோம். அம்மா எனக்கு கத சொல்லத்தெரியாதுன்னு சொல்றாங்க" என்று புகார் வாசிக்கப்பட்டது.

"கதைதானே... பாட்டி சொல்றேன். கேட்டுக்கிட்டே சாப்பிடுவீங்களாம். சரியா?.."

எல்லோரும் வட்டமாக அமர்ந்துகொள்ள, சாத உருண்டையை குழந்தைகளின் கைகளில் வைத்தவாறே பாட்டி கேட்டாள்.

"ஏண்டா தங்கம்... மூன்று சல்லடைகள்ன்னு ஒரு கதை.. யோகானந்தன் கணேசன் சொன்னது. அதை  சொல்லட்டா?.."

"அது ஏற்கனவே சொல்லியாச்சு"

"அப்ப.. கைப்புள்ள சொல்லித்தந்த கிராமிய பாடல்கள் ஏதாவது பாடட்டுமா?.."

"அது தூங்கப்போகும்போது பாடுங்க பாட்டி.. "


"குறும்புக்காரபசங்கடா நீங்க.. அது கிடக்கட்டும்.. நீங்கல்லாம் வளந்தப்புறமும் அப்பாம்மா கிட்ட பாசமா இருப்பீங்கதானே?.."

" நிச்சயமா இருப்போம். ஏன் அப்படி கேக்கிறீங்க?.."

ஒண்ணுமில்லை.. ஒரு அப்பா மகனுக்கிடையேயான உறவை 'கொத்துபுரோட்டாவும் பழையசோறும்' ன்னு ஒரு கவிதையில பசுபதி ரொம்ப அழகா சொல்லியிருக்காரு.. அது ஞாபகம் வந்துச்சு.."


"பாட்டி,  நாமெல்லாம் ஒரு நாளைக்கு கன்னியாகுமரி போலாமா?.. சூரிய உதயம், அஸ்தமனம், விவேகானந்தர் பாறை எல்லாம் பாத்துட்டு வரலாம்"

"அதுக்கென்ன.. போலாமே.. ஆனா,  அர்ஷியாசுக்கு நடந்தமாதிரி நடக்காம
இருக்கணும் :-).."

"பாட்டி.. எனக்கும் ஒரு கவிதை தெரியும்!!.."செல்போனில் காதலிக்கிறவங்களைப்பத்தி அஹமது சுஹைல் எழுதியிருக்காரு சொல்லட்டுமா?.." என்று குறும்புடன் குரல் கொடுத்தான் கல்லூரியில் படிக்கும் மூத்த பேரன்.

இடையில் குறுக்கிட்டது ஒரு வாண்டு. " பாட்டி .. நீங்களும் சின்னவயசுல உங்கபாட்டிகிட்ட கதையெல்லாம் கேப்பீங்களா.. " என்றான்.

மீனா சொல்லியிருக்கிறமாதிரி பாட்டிவீடு இருந்தா,.. யாருக்குத்தான் பிடிக்காது. ஹூம்.. அதெல்லாம் ஒரு பொற்காலம். வயசானவங்களை சுமையா நினைச்சு திண்ணை(சிவகுமாரன்)க்கோ முதியோரில்லத்துக்கோ அனுப்பாம மரியாதையா நடத்தின காலம்..". ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு பாட்டி தொடர்ந்தார்,"அவங்களோட பேர்ல வாங்கின மொதச்சொத்தைப்பத்தி எப்பவும் பேசுவாங்க.நம்ம சே.குமார்கூட அதைப்பத்தி ஒரு கதை எழுதியிருக்காரு. பாட்டிவீட்ல எப்பவும் விளையாட்டும் கும்மாளமும்தான்."

"படி.. படின்னு சொன்னதேயில்லியா அவங்க?/.."

"ஊஹூம்.. இப்ப நம்ம நாணல் சொல்லியிருக்கிறதை அப்பவே கடைப்பிடிச்சவங்க அவங்க"

பேச்சு சுவாரஸ்யத்தில் குழந்தைகள் சாப்பிட்டுமுடிக்கவும், சுபாவின்குறிப்புகளை பார்த்து செஞ்ச பேரீச்சம்பழ கேக்கை அம்மா கொண்டுவந்து வைக்க, ஆளுக்கொரு துண்டு எடுத்துக்கொண்டார்கள்.



மேலும் வாசிக்க...

Tuesday, January 4, 2011

புதுப்படம்...

 நகரின் நடுவில் அமைந்திருந்த அந்த பெயர்போன ஹோட்டலின் பன்னிரண்டாவது மாடியில், பன்னிரண்டாவது அறை. சோபாக்கள் எதுவுமில்லாமல் தரைத்தளத்துக்கு அமைக்கப்பட்ட திவான்கள். அதன்மேல் இரண்டுமூன்று உருட்டுத்தலையணைகள். அறைக்குள் சுமார் ஏழெட்டுப்பேர் அவரவர் சௌகரியத்துக்கேற்ப சாய்ந்துகொண்டும், உட்கார்ந்துகொண்டும், மடியில் தலையணைகளை வைத்துக்கொண்டும் இருந்தார்கள். நடுநாயகமாக ஒருத்தர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். ஒரு புதுப்படத்துக்கான கதைக்கலந்துரையாடல் அங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தது . கதை காற்றுவாக்கில் கசிந்துவிடாமலிருக்க, அறையின் ஜன்னல்கள் இறுக மூடப்பட்டிருந்தன.

டயரக்டர்: நாலு நாளா ரூம்போட்டு யோசிச்சும் நம்ம படத்துக்கு ஒரு கதை சிக்க மாட்டேங்குதே. வாங்கிட்டு வந்த டிவிடியெல்லாம் வீணாப்போச்சே..  ஸ்விட்சர்லாந்துல போய் யோசிச்சாத்தான் கதை சிக்கும்போலிருக்கு.

உதவி டயரக்டர் 1: சார்.. நான் ரொம்ப நாளா ஒரு கதையை யோசிச்சு வெச்சிருக்கேன். நீங்க சரீன்னா சொல்லுவேன்..

டயரக்டர்: சொல்லு.. சொல்லு.

உ.டயரக்டர் 1:ஓப்பன் செஞ்சா.. ஒரு காலேஜ். ஆண்டுவிழாவுக்கு ஹீரோ வந்திருக்கார். அப்ப, படிக்கிறகாலத்துல வாங்குன பல்பெல்லாம் ஞாபகம்வருது. யாருமே ஆட்டோக்ராப் கேக்காத சோகத்துல வீட்டுக்கு வந்தா அவரோட பையன் ஒரு மெகாபல்பு கொடுக்கிறான்.

இணை இயக்குனர்: டயரக்டர் சார்.. இதை R.கோபி எழுதியதிலிருந்து காப்பியடிச்சு சொல்றார்.. நான் ஒரு கதை வெச்சிருக்கேன். நான் சொல்றேன் சார்.

பதிலுக்கு காத்திருக்காமல் சொல்லத்துவங்குகிறார்.

"கட் பண்ணா.. ஒரு அப்பார்ட்மெண்ட். அதுல ஒரு வீடு. அந்தவீட்டுல இருக்கிற பையனுக்கு ஒரு புதுவிதவியாதி வந்துருக்கிறதா டாக்டர் சொல்லிடறாரு. அந்த வியாதி குணமாகணும்ன்னா என்ன செய்யணும்ன்னா..

இன்னொரு இ.இ. இடைமறிக்கிறார்..,' மீதியை நான் சொல்றேன். அவனை சூரியவெளிச்சம் படும்படியா வாக்கிங் கூட்டிட்டு போகணும்ன்னு டாக்டர் சொல்றாரு.. சரியா!!..

"உனக்கெப்படி தெரியும்"

"மோகன் எழுதுனதை நானும் படிச்சிருக்கேன்.."

ஆளாளுக்கு பேசத்துவங்க டயரக்டர் எல்லோரையும் அமைதிப்படுத்துகிறார்.

டயரக்டர்: ஒண்ணு செய்யலாம்.. ஆளுக்கொரு சீன் சொல்லுங்க.. எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா கலக்கிடுவோம்.

"கதையில த்ரில்லிங் வேணும்.. அதுக்கு ஜீ எழுதுன இந்தக்காட்சியை சேர்த்துக்கலாம்"

"ரெண்டு தோழிகள் கொடுத்த பல்பை பாரத்பாரதி அப்படியே வெச்சிருக்காரு. அந்த சீன்ல தியேட்டர்ல விசில் சும்மா பிச்சிக்கிட்டுப்போகும் சார்"

"இப்பல்லாம் பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்யுறகாலம். நாமளும் புவனேஸ்வரி ராமநாதனோட தொகுப்பை சுட்டு ரீமிக்ஸ் செஞ்சுக்கலாம்"

"பாடல்களுக்கு நம்ம சுந்தர்ஜியை கூப்பிட்டுக்கலாம். அருமையா கவிதைகள் எழுதுறார்"

"குழந்தைகளின் உலகம் பாழாவதை கணபதி அழகா சொல்லியிருக்கார். அதை கடைசியில் ஹீரோ மக்களைப்பார்த்து சொல்றமாதிரியும், மக்களெல்லாம் அதைக்கேட்டவுடனே திருந்திடறமாதிரியும் காட்டிடலாம்... எல்லாவயசுலயும் ஆடியன்சை கவர்றமாதிரி கதை இருக்கணும். அதுக்கு ஜெயராமன் சொன்ன கதைகள்லேருந்து சிலபல கதைகளை, குழந்தைகளுக்கு ஹீரோ சொல்றமாதிரி காட்டலாம் "

டயரக்டர்: "ராஜி  ஈரமனசுன்னு சொல்லியிருக்கிறது நம்ம ஹீரோவுக்கு ரொம்ப பொருத்தமாயிருக்குது.. அந்த கேரக்டரை அப்படியே டெவலப் பண்ணலாம்.."

அனைவரும் கோரஸாக அதிர்ச்சியடைகிறார்கள்.

டயரக்டர் புன்னகையுடன்: ' நீங்க மட்டும்தான் ப்ளாக் படிச்சு ஐடியா சொல்லுவீங்களா.. நானும் படிப்பேனில்ல"

எல்லோரும் அவரவருக்கு தோன்றிய காட்சிகளையெல்லாம் சொல்ல ஒருத்தர் மட்டும் அமைதியாக இருக்கிறார்.

டயரக்டர்: "உனக்குத்தோணிய கருத்தையும் சொல்லலாம்.. இங்க எல்லோருக்கும் கருத்துசுதந்திரம் உண்டு"

"உங்க அளவுக்கு எனக்கு சிந்திக்க தெரியாதுங்க"

டயரக்டர்: "வேலை செய்யாம சம்பளம் மட்டும் வேணுமா.. இவரை கணக்குத்தீர்த்து அனுப்புங்க"

"சார்.. சார்.."... மேனேஜர் பதறுகிறார்.." ஒரு நிமிஷம் நான் சொல்றதைக்கேளுங்க.."

டயரக்டர்: " நீங்க ஏன் பதட்டப்படுறீங்க??..  எனக்கு சிபாரிசெல்லாம் பிடிக்காது. தெரியுமில்ல , மொதல்ல சொன்னதைச்செய்யுங்க.."

பையன் போனபின்னும் மேனேஜர் கலக்கமாகவே இருக்கிறார்.

டயரக்டர்: "ஏன் சார்.. வேலைசெய்யத்தெரியாதவங்களையெல்லாம் எங்கிட்ட அசிஸ்டெண்டா கொண்டுவர்றீங்க?..."

மேனேஜர்" "அய்யோ சார்.. அந்தப்பையன் அசிஸ்டெண்ட் இல்லை....டீ கொண்டுவந்தவன்".




மேலும் வாசிக்க...

Monday, January 3, 2011

தலைப்புச்செய்திகள்..

அன்பார்ந்த வலையுலக நேயர்களே...

இன்னும் சிறிது நேரத்தில், நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலையுலகச்செய்திகள் ஆ.... ரம்பமா..க உள்ளன...

ஸ்டார்ட் ம்யூசிக்...



வலையுலக நேயர்களுக்கு வணக்கம்,..

இன்றையசெய்திகள்... வாசிப்பது அமைதிச்சாரல்.

தலைப்புசெய்திகள்:

வெங்காயவிலை இறங்காமல் இருப்பதால், கத்தரிக்காய்க்கு பதிலாக அவியல்,எரிசேரி என்று எளிய உணவுகளை சமைத்து சமாளிக்க வேண்டியிருப்பதாக கோலிவாடா கோமளா அங்கலாப்பு.

தான் கவிதை எழுதவந்தது எப்படி: கவிஜருடன் நமது நிருபர் நேர்முகப்பேட்டி.
கற்களின் திடீர் விலையேற்றத்திற்கும், இதற்கும் சம்பந்தமுண்டா என்று அறிய சி.பி.ஐக்கு உத்தரவிடவேண்டும். எதிர்க்கட்சி வேண்டுகோள்.

விரிவான செய்திகள்:

இந்த வருடத்தின் சிறப்பான சிறுகதையாக, 'ஒரு கதை'  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் மஹாராஷ்ட்ராவில் பொங்கல் கொண்டாட சென்றுள்ளபடியால் வந்தவுடன் பாராட்டுவிழா நடத்தப்படும்.

உலகம் உருண்டையானது என்பது மறுபடியும் அரும்பாடுபட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

சில்லறைத்தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தாத அரசை கண்டித்து இன்று மாலை கடற்கரையில் டீகுடிக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.

 எதிர்காத்து மிக வேகமாக வீசும் அபாயமுள்ளதால், தத்தம் மனைவிகளை பாதுகாத்துக்கொள்ளும்படி, கணவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சாகசப்பயணம் புரிந்து வெற்றிகரமாக வீடு வந்தடைந்த இளைஞருக்கு திருஷ்டி சுற்றப்பட்ட இரண்டு மெகா பூசணிக்காய்கள், அதே சாலையில் உடைக்கப்பட்டன.

இத்துடன் இன்றைய சிறப்புச்செய்திகள் முடிவடைகின்றன.

வலைச்சரத்தில் புத்தாண்டின் முதல்பூவாய் என்னை தேர்ந்தெடுத்த, நிலைய இயக்குனர் சீனா ஐயா அவர்களுக்கும், சகோதர சகோதரிகளான உங்கள் அனைவருக்கும் வணக்கமும், புதுவருட வாழ்த்துக்களும் கூறி விடைபெறுவது... அமைதிச்சாரல்.





மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது