07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சிகரம்பாரதி. Show all posts
Showing posts with label சிகரம்பாரதி. Show all posts

Sunday, July 6, 2014

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

என்னடா இது? ரெண்டு நாளா நம்ம சிகரம்பாரதிய காணோமேன்னு நீங்க எல்லோரும் யோசிச்சிருப்பீங்க. முதலில் இரண்டு நாட்களாக இடுகை இடாமல் இறுதி இடுகைக்கு மட்டும் வந்திருப்பதற்கு மனதார மன்னிப்பைக் கோருகிறேன். பல்வேறு சிக்கல்கள் சூழ்ந்த சூழ்நிலையில் என்னால் பதிவிட முடியவில்லை. சோதனைகளிடம் தோற்றுவிட்டேன். வென்றிருந்தால் வலைச்சரம் வந்திருப்பேன்.  வரமுடியாமைக்கு வருந்துகிறேன்.

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே....


இன்று எனக்குப் பிடித்த, நான் வாசிக்கும் வலைப்பதிவுகள் வலைச்சரத்தில் அணிவகுக்கப்போகின்றன. வாருங்கள்... ..போகலாம்....

முதலாவது - திண்டுக்கல் தனபாலன். தனது பெயரிலேயே தனது தளத்தையும் அமைத்திருக்கின்ற இவரை முதலில் அறிமுகம் செய்யக் காரணம் இவரது குணம் தான். ஆம். தனது பதிவுகள் மூலமாக மட்டுமின்றி பிற வலைத்தளங்களுக்குச் சென்று கருத்துரைகளை இடுவதன் மூலமும் நம் அனைவரையும் ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் இவரது செயலைப் போல பிற பதிவர் எவரையும் கண்டதில்லை. வலைப்பதிவுகளை அடைவதில் சிக்கலா? உடனே பின்னூட்டம் மூலம் தகவல் தருவார். வலைச்சர அறிமுகமா? தகவல் சொல்வது தனபாலன் தான். உதவி என்று சொன்னால் தன்பணி போல் செய்து முடிப்பார். வாழும் தெய்வத்திற்கு நன்றிகள் பல. என்னைக் கவர்ந்த இவரது பதிவுகள் சில:




அடுத்தது - இரவின் புன்னகை. வலைத்தளத்தின் மூலம் அறிமுகமாகி தொலைபேசி நட்புவரை தொடர்ந்த ஒரே வெளிநாட்டு நண்பர். என்னோடு சம வயதுகளில் இருப்பவர். மிகச்சிறந்த தேடல் உள்ளவர். இப்போது "வானவல்லி" என்னும் சரித்திர நாவலை எழுதி வருகிறார். சக பதிவர்கள் அனைவரையும் சி.வெற்றிவேல் படைக்கும் இந்நாவல் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு அன்போடு அழைக்கிறேன்.

மூன்றாவது புலவர் சா.இராமாநுசம் ஐயா அவர்களின் புலவர் குரல். சமூக அநீதிகளை தன் கவி வரிகள் மூலம் சிறப்பாக எடுத்துரைப்பவர். குப்பையை அகற்ற வேண்டாமா , திருக்குறள்  மற்றும் ஓயாத அலை போல முயற்சி வேண்டும் போன்ற பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.

********

இதுவரை எனது பதிவுகள் அனைத்தையும் படித்து ஆதரவும் ஊக்கமும் அளித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள். எனது பதிவுகளுக்கு வலைச்சரத்தில் கருத்திட்டவர்களுக்கு பதிலளிக்க நேரமில்லாது போய்விட்டது. அவர்கள் அனைவர்க்கும் பதிலளிக்கப்படும் என்பதுடன் முக்கியமான கருத்துரைகளுக்கு எனது வலைத்தளத்தில் தனிப்பதிவின் மூலம் பதிலளிக்கப்படும்.



இலங்கைப் பதிவர்களை அறிமுகப்படுத்த கடுமையான தேடலை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனாலேயே அதிக பதிவுகளை இட முடியாமல் போனதும் அதிக பதிவர்களை அறிமுகப்படுத்த முடியாது போனதும். 

வாய்ப்பளித்த "வலைச்சரம்" குழுவினருக்கு நன்றிகள். மீண்டும் வாய்ப்புக் கிடைத்தால் இதைவிட இன்னும் சிறப்பாகச் செய்யக் காத்திருக்கிறேன்.

இதோ மீண்டும் எனது வலைப்பதிவுகளின் பட்டியல்.




எனது நண்பியின் வலைத்தளம் 


அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி 


அன்புடன் 

சிகரம்பாரதி.
மேலும் வாசிக்க...

Friday, July 4, 2014

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 03

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

இலங்கைப் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது "சிகரம் 3" தளத்தில் வெளியான "இலங்கைத் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு" என்னும் பதிவை பதிவுலகின் பார்வைக்கு மீண்டும் சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

இன்றும் இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் அறிமுகம் தொடர்கிறது.

"ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வலைப்பதிவுகளில் எழுதிவரும் புலம்பெயர் தமிழரான கானா பிரபா "மடத்துவாசல் பிள்ளையாரடி" , "ரேடியோஸ்பதி" மற்றும் "உலாத்தல்" ஆகிய வலைத்தளங்களின் சொந்தக்காரர். "வாண்டுமாமா - எங்கள்  பால்ய காலத்துக் கதை சொல்லி" , "மனதோடு பேசிய ஸ்வர்ணலதா" மற்றும் "திடீர் திருப்பூர் பதிவர் சந்திப்பு" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.

"ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவானது ஈழத்து வலைப்பதிவர்களால் நடாத்தப்படும் ஒரு குழும வலைப்பதிவாகும். சுமார் 40 பேரளவில் இவ்வலைப்பதிவுக்கு தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றனர். "பெண்களும் நகைகளும்" மற்றும் "நாளை ஒரு பொழுது புது விடியலை நாடும்" ஆகிய பதிவுகள் குறிப்பிட்டுக் கூறக் கூடியவை. பங்களிப்போர் பட்டியல் நீளமாக இருக்கும் அளவுக்கு படைப்புகள் வெளிவராததும் ஏனோ?

நம்முடைய கருவறைப் பயணம் எப்படி இருக்கும்? உங்களில் யாருக்காவது தெரியுமா? தெரியாதவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது ஹாரியின் "ஹாரி 2G" வலைத்தளத்தின் "எமது கருவறை படி நிலைகள்" என்ற பதிவைத்தான். மேலும் இவரது "IDEAS OF ஹாரி" தளத்தில் எழுதியுள்ள "கோச்சடையான் (2014) பொம்மை படம் பம்பர் ஹிட் ஆன கதை" ஒரு கைதேர்ந்த திரை விமர்சகனின் பதிவாக அமைந்துள்ளது.


மேலும் இலங்கை சாராத தளங்களில் வெளிவந்துள்ள ஆனால் மலையகம் மற்றும் ஈழம் சார்ந்த வாசிப்புக்குட்படுத்தக்கூடிய பதிவுகள் சில இதோ உங்கள் பார்வைக்கு.

"மலையக தமிழர்கள் மலைகளை கழனிகளாக்கி காபி, புகையிலை பயிர் செய்தனர். அதில் கொழுத்த ஆங்கிலேயர்க்கு அதிர்ச்சி பூச்சிகள் மூலம் வந்தது. பூச்சிகளால் காபி தோட்டம் அழிந்தன. கூடவே மலையக தமிழர்களையும் நோய் தாக்கியதால் 1834 முதல் 1843 வரையில் மலையக தமிழர்கள் மலேரியா, பசியால் சுமார் 90 ஆயிரம் பேர் மாண்டனர். அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மகாராணி இலங்கையில் 2,047,128 ஏக்கர் நிலங்களை வாங்கியவர். அதை பின்பு 1 ஏக்கர் 5பைசா என்ற விலையில் நிலங்களை விற்க செய்தார். ஓரே ஓரு பிரிட்டிஷ்காரர் மட்டும் 825 ஏக்கர் வாங்கி உள்ளார்." என்று சொல்கிறது "மனசாட்சி" தளத்தின் "மலையக மக்களின் வாழ்வும் துயரமும் (சிலோன் முதல் ஈழம் வரை) தொடர்".

ஈழ வரலாற்றுத் தொடர் - ஈழத்தின் உருவாக்கம் தொடங்கி ராஜீவின் மரணம் வரை - "ஈழம் : முகப்புப் பக்கம்"

"ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா ?" என்று வினா எழுப்புகிறது "வியாசன்" தளம்.

இன்னும் இருக்கிறது. நேரம் போதாமை காரணமாக மிகுதி அடுத்த பதிவில்...

அதுவரை ,

அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி
மேலும் வாசிக்க...

Thursday, July 3, 2014

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

நமது நேற்றைய பதிவைப் படித்து விட்டீர்களா? படிக்காதவர்களுக்காக இதோ இணைப்பு : இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 

நேற்றைய பதிவில் நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே அறிமுகங்களைத் தொடங்கியிருந்தேன். இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே என்பதான தோற்றமே உலகின் பார்வையில் இருக்கிறது என்பதே அது. நேற்றைய பதிவுக்கு வாசகர்கள் வழங்கிய கருத்துரைகள் அதனை உறுதிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன. "இன்று தான் மலையகத்தைப் பற்றி அறிந்து கொண்டேன்" என்ற கூற்றைக் கண்டபோது மனம் வருந்தினேன்.
ஆனால் துவண்டுவிடாமல் மலையகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்

 இலங்கைப் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது "சிகரம் 3" தளத்தில் வெளியான "இலங்கைத்  வலைப்பதிவர்கள் கவனத்திற்கு" என்னும் பதிவை பதிவுலகின் பார்வைக்கு சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

"இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல், வரலாறு அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப் படவில்லை. ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் எடுத்து சொல்லப் பட்ட அளவு கூட இந்த தமிழர்களின் வாழ்வியல் போராட்டம் எடுத்து சொல்லப் படவில்லை. இலக்கியங்கள், கல்வித்துறை என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு முன்னெடுக்கப் பட மிகநீண்ட காலம் எடுக்கக் காரணங்கள் என்ன?" என்று கேள்வியெழுப்பி அதற்கு "மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்" என்னும் பதிவின் மூலம் விடை தருகிறார் நமது செ.அருண்பிரசாத். இவரது "வரிக்குதிரை" வலைப்பதிவின் மூலம் மலையகம் தொடர்பிலான பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அது மட்டுமா, "சில்ட்ரென் ஒப் ஹெவன் (Children Of Heaven)" என்று உலக திரைப்படங்களையும் ஒரு கை பார்க்கத் தவறவில்லை. இவர் எனது பள்ளிக்கால நண்பரும்  கூட. இந்த ஆண்டு இவ்வலைத்தளத்தில் ஒரு பதிவேனும் வெளிவரவில்லை.


தமிழின் மீது அளவற்ற பற்று கொண்டவர். "உலகமெலாம் தமிழோசை பரவும் வகை செய்தல் வேண்டும்" என செயல்படுபவர். யாழ்பாவாணன் அவர்களை அறிந்தவர்கள் பலர் இருக்கலாம். "யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்" என யாப்பிலக்கணத்தை நம்வீட்டுக் கணினிகளின் வழியாகவே கற்றுத் தந்தவர். "எதுகை, மோனை விளையாட்டு" மற்றும் "கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்" போன்ற பதிவுகள் சிறப்பானவை.

மலையகத்தின் பிரபல, மூத்த எழுத்தாளர். இன்றும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்  தெளிவத்தை ஜோசப் அவர்கள். "தெளிவத்தை ஜோசப்" என்னும் பெயரிலேயே தன் வலைப்பதிவை வழங்கிய அவர் 2011 இல் 21 பதிவுகளை இட்டதோடு தனது வலைப்பதிவை கண்டுகொள்ளவேயில்லை. ஆனாலும் இதனை இங்கு பகிரக் காரணம் இத்தளத்திலுள்ள பெறுமதியான பதிவுகள் தான். "மனிதர்கள் நல்லவர்கள் - சிறுகதை" மற்றும் "மழலை - சிறுகதை" ஆகியன குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.


இவரை விட்டுவிட்டு நான் இலங்கைப் பதிவர் அறிமுகத்தை முடித்துவிட முடியாது. பதிவுலகின் மூலம் என் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டவர். ஈழத்தின் கவிதை முத்து. கருத்துக்களில் தெளிவும் எண்ணங்களில் துணிவும் கொண்டவர். இவர் தனது பதிவுகளுக்கு எப்படிப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அத்தனைக்கும் முகம் சுழிக்காமல் பதிலளிப்பார். நீங்கள் அறிந்தவர்தான். அதிசயா. "மழை கழுவிய பூக்கள்" வாயிலாக தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தவர். இவரது "ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்" மற்றும் "இன்னும் சொல்லுவேன் சத்தமாய்" போன்ற பதிவுகள் ஆழ்ந்த வாசிப்பிற்குரியவை.

இன்று அறிமுகப்படுத்திய பதிவுகள் குறைவுதான் என்றாலும் அத்தனையும் கனதியானவை என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். மீண்டும் நாளையும் மேலும் சில அறிமுகங்களுடன் சந்திப்போம்.

அதுவரை ,

அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி
மேலும் வாசிக்க...

Tuesday, July 1, 2014

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01

வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே! நமது நேற்றைய "என்னோடு நான் - சிகரம்பாரதி" அறிமுகப் பதிவைப் படித்தீர்களா? இன்று ஏனையோரை அறிமுகம் செய்யும் நாள். வலைச்சரம் ஆசிரியப் பொறுப்புக்கு அழைக்கப்பட்ட நாளில் இருந்தே இலங்கை வலைப் பதிவர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே என் அவாவாக இருந்தது. அதனை இப்பதிவின் மூலம் நிறைவேற்றவுள்ளேன். இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் என்பதில் இலங்கையில் வசிப்பவர்கள் மட்டுமின்றி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் வலைப்பதிவுகளும் உள்ளடங்கும்.

இலங்கையைப் பொருத்தவரை மலையகத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உண்டு. தமிழகத்துடன் மிக நெருங்கிய தொப்புள்கொடி உறவைக் கொண்டது மலையகம். சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த உறவுகள் தான் இன்றைய இந்திய வம்சாவளி மக்கள் என குறிப்பிடப்படும் மலையகத் தமிழர்கள். இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை , தேயிலைப் பயிர்ச்செய்கை மற்றும் இரயில் பாதை அமைத்தல் , உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்டனர். இன்றும் அடிமைகள் போலவே நடத்தப்படுபவர்கள். உலகினால் அதிகம் அறியப்படாதவர்கள். ஈழத் தமிழர்கள் பற்றிக் கூற வேண்டியதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே என்று உலகம் கூறும் அளவுக்கு உலகின் கருணைப் பார்வைக்கு உட்பட்டிருப்பவர்கள். இன்று இரு சமூகங்களுமே இலங்கை அரசின் இரும்புப் பிடிக்குள்..

இவை உங்கள் அறிவுக்காக. இனி உங்கள் அறிமுகத்திற்காக...

"இந்து சமுத்திரத்தின் முத்து" என அழைக்கப்படும் நாடு இலங்கை. 1948 வரை ஆங்கிலேயரிடமும் அதன் பின் சிங்கள இனவாதிகளிடமும் அடிமைப்பட்டுக்கிடக்கும் நாடு. இந்நாட்டின் தமிழ் வலைப்பதிவுகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதே நமது பதிவின் நோக்கம்.

மலையகம் குறித்த வரலாற்றையும் செய்திகளையும் ஒரு சேர தொகுத்துத் தரும் தளம். மலையகத்தின் பொக்கிஷம் என்று கூட இத்தளத்தை குறிப்பிடலாம். சி.வி.வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் மற்றும் கோப்பிக்கால வரலாறு ஆகிய பதிவுகள் கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை. மொத்தத்தில் "நமது மலையகம்" மலையகத்தின் அடையாளம்.


"ஒன்று தமிழ் பேசணும் இல்லை தப்பில்லை ஆங்கிலம் பேசணும். அதென்ன “டூ வீக்ஸ்ல கொஞ்சம் கொஞ்சமாய் கெட்டிங் டாா்க் யா..!“. அவள் பேச்சில், பாவம் தமிழ் மூச்சுவிட கஸ்டப்பட்டுக்கொண்டிருந்தது. “கொஞ்சம் தமிழில பேசலாமே..” என நான் கேட்ட போது அவள் என்னை ஒரு மாா்க்கமாய்ப் பாா்த்தாள். “பட்டிக்காடு.. இந்த சிம்பிள் இங்லீஸ் கூட இதுக்கு விளங்கல போல.. இதெல்லாம் எப்புடி உருப்படப்போகுது..!“ என்று  நினைத்திருப்பாளோ? இருக்க, நானோ அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை." என்று "கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்" இல் ஆதங்கப்படுகிறவர் ஈழத்து வலைப்பதிவர் அமல்ராஜ். இது மட்டுமா? பெண்கள் மீதான இராணுவக் கெடுபிடிகள் பற்றிய தனது "பழகிப்போச்சு" என்ற கவிதையில் 
"அவர்கள் கண்கள்
எங்கள்
கண்களை மட்டும்
பார்த்ததே இல்லை.

தையல் அக்கா
தைக்க எடுக்கும் அளவை - இவர்கள்
கண்களாலேயே முடித்து விடுகிறார்கள்." - என்று லாவகமாக வார்த்தைகளைக் கையாள்கிறார்.


மலையகத்தின் இளம் சிட்டு. முன்னேறத்துடிக்கும் மங்கை. கவிதைகளின் காதலி. தோட்டத் தொழிலாளியின் மகளாகப் பிறந்தாலும் சாதிக்க முடியும் என்று திடமாக நம்புகிறவர். பிரியதர்ஷினி என்னும் இயற்பெயரைக் கொண்ட செ.கவீதா. கூடிய விரைவில் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிடும் முயற்சியில் உள்ளார். "கவிதாவின் பக்கங்கள்" இவரது கவிதைகளின் களம்.

குறிப்பு: இப்பக்கம் செல்பவர்கள் "இடுகையிட்டது சிகரம்பாரதி" என்றிருப்பதைக் கண்டு எனது படைப்புகள் தான் அங்கும் இருக்கின்றன என நினைத்துவிட வேண்டாம். செ.கவீதா சார்பாக நான் பதிவிடுகிறேன். அவ்வளவே. என்றேனும் ஒரு நாள் வலைப்பதிவை முழுமையாக அவர் கைகளில் ஒப்படைக்க முடியும் என நம்புகிறேன்.

 இலங்கையின் பிரபல ஊடகவியலாளர். சூரியன், சக்தி, வெற்றி ஆகிய வானொலிகளில் பணி  புரிந்தவர். தற்போது மீண்டும் சூரியனில்... முன்பு அடிக்கடி எழுதியவர் இப்போது அத்தி பூத்தாற்போல் அவ்வப்போது தான் எழுதி வருகிறார். அவர் வேறு யாருமல்ல. ஏ.ஆர்.வி.லோஷன். அவரது தளம் லோஷனின் களம். விளையாட்டுச் செய்திகளை தொகுத்து வழங்குவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. கால்பந்து கோலாகலம் ஆரம்பம் என்று உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவைப் பற்றி எழுதிய இடுகை அதற்கு சாட்சி. ஈழம் தந்த முத்துக்களில் ஒன்று.

மலையக மக்கள் அபிவிருத்தி ஆய்வு மையம் இனது வலைப்பக்கம் மலையக மக்களின் பல்வேறு தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளது. மலையக மக்களின் நாட்டாரியல் பாடல்கள் முதல் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் மற்றும் காண்பதற்கரிய புகைப்படங்கள் இங்கே காணக்கிடைக்கின்றன. ஆயினும் வலைதளத்தின் வடிவமைப்பும் இடுகைகளின் ஒழுங்கின்மையும் வாசகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. எது எப்படியிருப்பினும் இங்குள்ள தகவல்கள் பெறுமதியானவை என்பதில் சந்தேகமில்லை.

 

"பச்சை வேலிகள்
போட்டுக்
கட்டப்பட்ட
உலகின் மிகப் பெரிய
திறந்த வெளி
சிறைச்சாலை " என்று மலையகத்தை வர்ணிக்கும் தெளிவத்தை ஜோசப் எழுதிய கவிதையோடு அவர்பற்றிய தகவல்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

ஈழத்து குறுந்திரைப்படவியலாளர், வலைப்பதிவர் என பன்முக ஆளுமை கொண்டவர். மதிசுதா. ஈழத்தின் மைந்தன்.48 மணித்தியால சர்வதேச குறுந்திரைப்படப் போட்டி மற்றும் அனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி ஆகிய பதிவுகள் குறுந்திரைப்படம் பற்றிய இவரது ஆளுமைகளைப் பறை சாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் நிறைய இருக்கின்றன. இலங்கை மண்ணில் உதித்த தமிழ் வலைப்பூக்களின் அறிமுகம் நாளையும் தொடரும்.

அதுவரை ,

அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி
மேலும் வாசிக்க...

Monday, June 30, 2014

என்னோடு நான் - சிகரம்பாரதி.

வணக்கம் வலைத்தள வாசகர்களே!

                       "சிகரம்பாரதி" ஆகிய என்னை அறிந்தவர்கள் சிலர், அறியாதவர்கள் பலர். பாடசாலைக் காலகட்டத்தில் "சிகரம்" என்ற கையெழுத்து சஞ்சிகை வாயிலாகவும் தொடர்ந்து இலங்கையின் தேசிய நாளேடுகள், சஞ்சிகைகளுக்கும் எழுதி வந்தேன். பின்பு வலைத்தளத்தின் பக்கம் "தூறல்கள்" வலைப்பதிவின் வாயிலாக கால் பதித்தேன். "சிகரம்" வலைப்பதிவின் ஊடாக என்னை நிலை நிறுத்தினேன். இன்று "சிகரம்3" உடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.


                    வலைச்சரம் ஒரு ஆரோக்கியமான முயற்சி. தமிழில் வலைப்பதிவுகளையும் வலைப்பதிவர்களையும் அறிமுகப்படுத்துவதிலும் ஒன்றுபடுத்துவதிலும் வெற்றிபெற்ற முயற்சி. வலைச்சரத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் ஏராளம். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள். அத்தனையும் வலைப்பதிவர்கள் தந்த அறிமுகங்கள்! ஆங்கிலத்தில் கூட இப்படி ஒரு முயற்சி இருக்குமா என்பது சந்தேகமே!

                   வலைச்சரத்தில் மூன்று முறை அறிமுகம் பெற்றுள்ளேன். இன்று வலைச்சரத்தில் ஆசிரியராக... நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு அழைப்பு வர சில தினங்களுக்கு முன்னதாகத்தான் மனதினுள்ளே 'வலைச்சர ஆசிரியப் பொறுப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்' என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அழைப்பு வந்ததும் நினைத்ததும் நடந்துவிட்டதே என்று ஆச்சரியமாக இருந்தது.

                  பணி நெருக்கடி மற்றும் சில சிக்கல்கள் காரணமாக முறையான தயார்படுத்தல்கள் ஏதும் என்னிடம் இல்லை. அதற்காக ஏனோ தானோ என்று எழுதப்போவதுமில்லை. ஏனையோரை விட வித்தியாசமான முறையில் எனது அறிமுகங்கள் இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

               முதலில் எனது வலைத்தளங்களில் நான் எழுதிய நட்சத்திரப் பதிவுகள் சிலவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

> வலைச்சர ஆசிரியப் பணி குறித்து எழுதியது:
   * வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!

"சிகரம்" வலைத்தளம்.
* எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல

* வேலைக்கு போறேன்!

* கற்பிழந்தவள்

* பிரிவோன்றே முடிவல்ல

* கவிதைகள்

* #100 மகிழ்ச்சியான நாட்கள்

* மீண்டும் அதிசயா

* அகவை ஒன்பதில் சிகரம்!

* கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல்    

இவை மட்டுமல்ல இன்னும் பல பதிவுகள் இருக்கின்றன. ஒரு முறை எனது வலைத்தளம் சென்று பாருங்களேன்!

மேலும் எனது "தூறல்கள்" மற்றும் "சிகரம்3" வலைத்தளங்களிலும் பல்வேறு பயனுள்ள பதிவுகளைக் காணலாம். ஒரு வலைப்பதிவை தொடர்ந்து நடாத்துவது என்பது மிகச் சிரமமான பணி. அப்பணியை முன்கொண்டு செல்வதில் நாமனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம் . எத்தனை இடர்கள் வந்தாலும் இப்பணியை தொடர்ந்து செய்ய முன்வருமாறு தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். மேலும் வலைப்பதிவர்கள் ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களைக் குறைத்து "இயன்றவரை தமிழ்" என்ற கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


மீண்டும் நாளை முதல் வலைப்பதிவு அறிமுகங்களுடன் சந்திக்கலாம்.

அதுவரை
அன்புடன்

சிகரம்பாரதி.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது