சிரித்து வாழவேண்டும்! – ஏழாம் நாள் – விடை பெறும் நாள்
➦➠ by:
வே.நடனசபாபதி
சிரிப்பு என்பது
மனித குலத்துக்கே கிடைத்த ஒரு பெருங்கொடை.இது மற்ற எந்த உயிரினங்களுக்கும் கிடைக்காத
ஒரு பெரும்பேறு.
சிரிப்பதால் பல நன்மைகள்
உண்டு என சொல்லக் கேட்டிருக்கிறோம். சிரிப்பதால் உடல் வலி மற்றும் மன அழுத்தம் குறைகிறதாம். மேலும் சிரிப்பு, மன அழுத்தம் தரும் ஹார்மோன்களைக்
குறைக்கிறதென்றும், தடுப்பாற்றல் உள்ள திசுக்களை அதிகரிக்கிறதென்றும், இரத்த நாளங்களின் செயலாற்றல்களை செம்மைபடுத்தி,
இரத்த ஓட்டம் சீராக வழி செய்வதால் இதய வலி வருவதையும் தடுக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
எனவே நாள்தோறும்
சிரிப்போம் நலமுடன் வாழ!
சிரித்து வாழவேண்டியதுதான்
ஆனால் அந்த சிரிப்பை பிறர் மனத்தை நோகடித்து அல்ல. நம்மில் பலர்
மாற்றுத்திறனாளிகளை நையாண்டி செய்தும், பிற மொழியை, பிற மதத்தை,பிற
சாதியை அல்லது அவர்களது நம்பிக்கையை
கிண்டல் செய்தும் நகைச்சுவை என்ற பெயரில் சொல்லியும் எழுதியும் வருகிறோம்.
சமீபத்தில் எனக்கு
வந்த மின்னஞ்சலில் வந்த ஒரு நிகழ்வு பற்றிய தகவலை இங்கு பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன். ( அநேகம் பேருக்கு இது தெரிந்திருக்கலாம். இருப்பினும் நல்லதை திரும்பவும்
சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.)
“தென்னிந்தியாவிலிருந்து
விடுமுறையை கழிக்க தில்லிக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் சிலர் தில்லியை
சுற்றிப்பார்க்க ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த டாக்ஸின் ஓட்டுனர் ஒரு வயதான சீக்கியராக இருந்ததால் அவரை
கிண்டல் செய்யும் நோக்கில் அன்று முழுதும் சர்தார்ஜி நகைச்சுவையை சொல்லி அவரை
வெறுப்பேற்ற நினைத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்
ஒன்றும் சொல்லவில்லையாம்..அவர்களது சுற்றிப்பார்க்கும் வேலை முடிந்தவுடன் அவர்கள்
அவரிடம் வாடகைப் பணத்தை தந்திருக்கிறார்கள்.
அவர் பாக்கியை
திருப்பித்தரும்போது,
ஒவ்வொருவருக்கும் பத்து ரூபாய் தாட்களை கொடுத்துவிட்டு சொன்னாராம்.’தம்பிகளா! இன்று முழுதும் நீங்கள் சர்தார்ஜி நகைச்சுவை என்ற பெயரில் சொன்ன
ஜோக்குகளில் சில அசிங்கமானவை. இருப்பினும், எனக்கு கோபம்
வரவில்லை. காரணம் நீங்கள் இளைஞர்கள். இன்னும் வெளி உலகை அறியாதவர்கள் என்பதால் தான்.
ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் உங்களிடம் வைக்கிறேன். நான் கொடுத்த இந்த பத்து ரூபாய்
தாளை இந்த ஊரிலோ அல்லது வேறு எந்த ஊரிலோ நீங்கள்
சந்திக்கும் ஒரு பிச்சைக்கார சர்தாரிடம் கொடுங்கள் அது போதும்.’ என்றாராம்.
பிச்சையெடுக்கும் சர்தார்
எவரையும் இதுவரை காணமுடியாததால் அவர்களிடமே அந்த பணம் இருக்கிறதாம்!”
எனது நண்பர் ஒருவர் சொன்னார். இலண்டனில் வேலை தேடி அலையும்
இந்தியர்கள் (சொன்னால் நம்பமாட்டீர்கள். இதில் டாக்டர்களும் அடக்கம்) வேலை
கிடைக்கும் வரை அங்குள்ள குருத்துவாராவில் தான் இலவச உணவை சாப்பிடுகிறார்களாம்!
இதோ ஒரு புள்ளி
விவரம். இந்தியாவில் கட்டப்படும் வருமான வரியில் 33 சதம் கட்டுவோரும், அறக்கட்டளைக்கு செலவிடுவோரில் 67
சதம் செலவிடுவோரும் இராணுவ சேவையில் இருப்போரில் 45 சதமும் தினம் 60 இலட்சம் மக்களுக்கு 59,000
க்கு மேற்பட்ட குருத்துவாராக்கள்
மூலம் இலவச உணவு தருவோரும் இந்திய மக்கட் தொகையில் 1.4 சதம் உள்ள சீக்கியர்களே
என்பதை அறியும்போது இவர்களையா நாம் கேலி செய்கிறோம் என வெட்கப்படத்தான்
வேண்டும்.
சக மனிதனுக்கு
உதவிடும் சர்தார்ஜிக்களைப் பற்றி மனம் போன போக்கில் நகைச்சுவை என்ற பெயரில்
நையாண்டி செய்து சிரிப்பது சரியா என சிந்திக்க வேண்டும். இந்த இழி செயலை யார் எப்போது ஆரம்பித்தார்கள்
என்பது தெரியவில்லை. இனி பதிவுலகத்தில்
நாமாவது அதை எழுதாமல் விடுவதன் மூலம் அவர்களுக்கு
மரியாதை தருவோம்.
--------
இனி சில நகைச்சுவை மற்றும் பல்சுவைப் பதிவர்கள் பற்றி இன்று
பார்ப்போம்.
1.வாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ‘மின்னல் வரிகள்’ வலைப்பதிவின் பால
கணேஷ் அவர்கள் அசாதாரணமானவர். இவர் சினிமாவில் தொடங்கி கதை, சிறுகதை, நகைச்சுவை,நூல் மதிப்பீடு,
ஆன்மீகம், எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதைகள் வரை அலசாத
விஷயங்களே இல்லை.இருந்தாலும் இவரது நகைச்சுவை பதிவுகள்தான் எல்லாவற்றையும் விட பிரபலமானவை
மொறு மொறு மிக்ஸர் என்ற தலைப்பில் இவர் எழுதும் பதிவும். சரிதாவும் நானும், நடைவண்டிகள் என்ற தொடர்களும் எல்லோராலும் மிகவும் விரும்பிப்
படிக்கப்பட்டவை. பதிவுலகில் உள்ள மிகச்
சில நகைச்சுவை பதிவர்களில் இவரும் ஒருவர். இவரது நகைச்சுவைக்கு ‘சாம்பிள்’ கேட்டால் பல்’லவனோடுஒரு யுத்தம் என்ற இந்த பதிவை சொல்லுவேன். இவரின் இன்னொரு வலைப்பதிவு மேய்ச்சல்மைதானம் ஆகும்
2.
தினம் ஒரு தகவல் தந்த திரு தென்கச்சி
சுவாமிநாதன் அவர்கள் போல், தினம் ஒரு சுவாரஸ்யமான
தகவல்களைத் தருவதில் இவர் மன்னர். தனது இருப்பிடமான அரசர்குளம் பெயரிலேயே அரசர்குளத்தான்
என்ற வலைப்பதிவில் பதிவிட்டு வரும் ரஹீம் கசாலி அவர்கள் 2010 ஆம்
ஆண்டிலிருந்து இதுவரை 500க்கு மேற்பட்ட பதிவுகளைத் தந்திருக்கிறார். என்னைப்பற்றி என்ன சொல்ல என்று
அவர் சொன்னாலும், வேறொரு இடத்தில் பதிவில் வெளியாகும்
கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்துக்கள்
என்றும், தன் மனதில் தோன்றியதை எழுதியிருப்பதாகவும் , தவிர யார் மீதும் திணிக்க அல்ல என்று கூறி தான் யார் என்பதை சொல்லிவிட்டார்.
இவரது பதிவில் அரசியலும் உண்டு. சினிமாவும் உண்டு. ஆனால் இவருக்கு விளையாட்டு
பிடிக்காததால், விளையாட்டு சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டும் இருக்காது.
மின்வெட்டை சமாளிக்க சுலபமான வழிகளும் ஜெயலலிதாவின் அறிக்கையும் என்ற பதிவு போதும், நையாண்டி செய்து பதிவிடுவதில் இவருக்கு நிகர் இவர் தான் என்பதை
நிரூபிக்க.
3. ‘படிக்க ... ரசிக்க ... சிரிக்க ... சிந்திக்க
கடைசியாக தலையில் அடித்துக்கொள்ள வாருங்கள்’ என அவர்கள்
உண்மைகள் என்ற வலைப்பதிவுக்கு நம்மை அழைக்கும் மதுரை தமிழன்( Madurai Tamil
Guy ) இருப்பது ஐக்கிய
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில். இலவசமாக பல்சுவை தகவல்களைத் தந்து இதயங்களை கொள்ளை அடிக்கும் இணையதளம் என தனது
வலைப்பதிவு பற்றி இவர் சொல்வது உண்மைதான். பல் வேறு தலைப்புகளில் 600
க்குமேல் பதிவிட்டிருக்கும் இவர் நகைச்சுவை என்ற தலைப்பில் இட்ட பதிவு மட்டும் 178. இவரது நகைச்சுவை பதிவுகள் பெரும்பாலும்
அங்கதம்(Satire) வகையை சேர்ந்தவை. உலகம் ஏண்டா அழியலை.....
என்ற இந்த பதிவும் அந்த வகைதான்.
4. ஜோக்காளி
என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருக்கும் திரு K.A.பகவான்ஜி அவர்கள்
2012 ஆம் ஆண்டிலிருந்து சிரிங்க ... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க
என்று பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார்.. இந்த பதிவில் வெவ்வேறு தலைப்புகளில்
எழுதினாலும் தின ’சிரி’ ஜோக் என்ற
தலைப்பில்தான் அதிகமாக பதிவிடுகிறார். இனி சர்தார்ஜி ஜோக்குகளை பதிவிடாதீர்கள் என்பதுதான்
இவரிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள்.
5. படைப்பாளி
என்பதை புனைபெயராகவும் வலைப்பதின்
பெயராகவும் வைத்திருக்கும் பாலாஜி அவர்கள் ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA)
படித்தவர். கதை, கவிதை என்ற பெயரில் சில
‘கிறுக்கல்களை’ (இது உண்மை அல்ல!)
படைப்பதாக சொல்லும் இவர் முதலில் ஒரு ஓவியன் என்று சொல்லிக்கொள்வதில்
பெருமைப்படுகிறார். வண்ணங்கள் என்ற தலைப்பின் கீழ் இவர் வெளியிட்டுள்ள வெண்தாடிவேந்தர் என் கை வண்ணத்தில் என்ற படமும், மொபைல் போன்இலவசம் என்ற இந்த கேலிச்சித்திரமும் இவர் ஓவியன் என்று பெருமைப்படுவது சரிதான்
என்று சொல்லாமல் சொல்கின்றன.
6. மைத்துளிகள் என்ற வலைப்பதிவில் 2010 ஆம்
ஆண்டிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் இளைய பதிவர் மாதங்கி மௌலி அவர்கள் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார். Music method and madness
மற்றும் LIGHTER SIDE என்ற இரண்டு வலைப்பதிவுகளிலும் எழுதிக்கொண்டு
இருக்கிறார். இது என் எழுத்து. இது என் கருத்து. இவை என்
மைத்துளிகள்... என அழுத்தம் திருத்தமாக சொல்லும் இவரது மைத்துளிகள் என்ற முதல் பதிவே இவர் ஒரு வித்தியாசமாக
சிந்திக்கக்கூடியவர் என எண்ணத்தோன்றுகிறது.
7. இந்த
பதிவுலகில் காலடி எடுத்து வைக்க உதவியவர் மதிப்பிற்குரிய அப்துல் சலாம் மஸ்தூக்கா
அவர்கள்
என்றால், தமிழில் தட்டச்சு செய்ய உதவியவர் சூர்யா கண்ணன் அவர்கள். அவர் பெயரிலேயே உள்ள வலைப்பதிவில்
கணினிசார்ந்த தொழில்நுட்ப பதிவுகளை இட்டு வந்தார். 2௦09 ஆம் ஆண்டிலிருந்து
பதிவிட்டு வந்தவர் ஏனோ தெரியவில்லை 2012 ஆம் ஆண்டுக்குப்பிறகு எதுவும்
பதிவிடவில்லை. "லதா" எழுத்துருவை பயன்படுத்தி
நமக்கு தேவையான தமிழ் கோப்புகளை உருவாக்க, மைக்ரோசாப்ட்
நிறுவனம்
உருவாக்கிய இலவச
Microsoft Indic Language Input Tool பற்றிய Microsoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி! என்ற பயனுள்ள
பதிவால் என்னால் சுலபமாக தமிழில் நினைத்ததை எழுத முடிகிறது. உங்களில் சிலருக்கும்
அது உபயோகமாக இருக்கலாம். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
-----------
நண்பர்களே! விடை
பெறும் நேரம் வந்துவிட்டது. விளையாட்டாக ஒரு வாரம் ஓடிவிட்டது. நண்பர் திரு சீனா அவர்கள்
கொடுத்த பணியை சிறப்பாக செய்தேனா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் நான்
அதை சிரத்தையாய் செய்தேன் என்பது மட்டும் உறுதி.
இந்த பொறுப்பை தந்த
நண்பர் திரு சீனா அவர்கட்கும், இந்த வாரம் முழுதும் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப் படுத்திய நண்பர்கள்
அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நாளை வலைச்சரம்
ஆசிரியராக பணியேற்கும் நண்பரை வரவேற்று, உங்களிடமிருந்து
விடை பெறுகின்றேன்.
வணக்கம்!


