07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 21, 2008

நான் நண்பன்


நான் நண்பன்


தன்னை சுயமாக முன்னிலைப் படுத்தும் எந்த ஒரு செயலையும் செய்வதில்லையென்பதில் இத்தனை நாட்களும் உறுதியாக இருந்தேன் - இன்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறேன். யாரிடமும் சொல்லாமல் தனித்து இயங்கிக் கொண்டிருந்த எனது விருப்பங்களைப் பிறருக்கும் அறிமுகம் செய்யும் ஒரு வாய்ப்பைத் தந்து செய்யுமாறு நண்பர்கள் வேண்டிக் கொண்ட பொழுது, ஒதுங்கிப் போவது எப்போதும் போல அத்தனை எளிதாக இல்லை. எனது விருப்பமாக நான் மட்டுமே படித்துக் கொண்டிருந்த சிலவற்றைச் சொல்லிக் கொள்வதற்கு கிடைத்த இந்த வாய்ப்புகளோடு, என்னைப் பற்றியும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான், நண்பன்.

என்னைப் பற்றிய அறிமுகத்தை எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குவது? என்னைப் பற்றிய முன்முடிவுகள் ஓரளவிற்காவது சிலரிடம் இருக்கக் கூடும். எந்த அடையாளாங்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதில் பெருவிருப்பமிருந்தாலும், எனது பெயரே என்னை ஒருதளத்தில் அடையாளப்படுத்துகிறது. பிறப்பினாலே இயல்பாக என்னுடனே பிறந்துவிட்ட இந்த அடையாளம் என்னை ஒருவித அந்நியப்படுத்தலுக்கே இட்டுச் சென்றது. எனது வாசிப்பும், அனுபவங்களும் இந்த அடையாளத்தை மீறியவை. என்னை நேரிலே அறியாதவர்கள் இந்த அடையாளத்தின் மூலமாகவே காண்கின்றனர் என்பது எனது விருப்பத்தையும் மீறி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த அடையாளத்தைக் கொண்டு நான் அந்நியப்படுத்தப்படுவதை வன்மையாக மறுக்க வேண்டிய கட்டாயச் சூழலில், எனது மொழியும் அவ்வப்பொழுது கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் போல், என்னிடத்தில் பதிலை எதிர்பார்ப்பவர்களின் வன்மத்தையே முன்வைத்தது. இந்த அந்நியப்படுத்தும் அடையாளங்களை விட்டு விலக வேண்டும் என்ற முனைப்புடன் மீண்டும் மீண்டும் விலகி வெளியேறித் திரும்புகிறேன் - புதிதாக என்னை உணர்ந்தவனாக.

மனுஷ்யபுத்திரன் தனது நீராலானது என்ற கவிதைத் தொகுதியின் முன்னுரையில் எழுதுகிறார், 'கவிதைக்கான புலன்கள் அழிந்து என் படைப்பியக்கத்தின் அந்திமப் பருவத்தை எய்திவிட்டேனோ எனத் தோன்றும் படியாக எல்லாமே சலனமற்றுப் போயிருந்தன. என் மொழியின் வழியாக எப்போதும் வெளியேறிக் கொண்டிருப்பவனாக இருந்தேன். தற்செயலாக நான் வர நேர்ந்துவிட்ட ஒவ்வொரு இடத்திலிருந்தும், நாற்காலிகளிலிருந்தும், முடிவுகளிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் முடிவில்லாமல் வெளியேறிக் கொண்டேயிருப்பது தான் எனது எழுத்தின் பயணவழியாக இருந்திருக்கிறது. எழுத முடியாது என்பது வெளியேற முடியாது என்பதையே குறித்தது'

மனுஷ்யபுத்திரனுக்கு படைப்புச் சக்தியின் அந்திமப் பருவத்தை எய்தி விட்டேனோ என்ற அச்சத்தைத் தருகிறது சலனமற்ற பொழுதுகள். எனக்கு படைப்பு சக்தி என்ற பிரம்மைகள் அல்லது மாயையைகள் எல்லாம் கிடையாது. நான் சலனமற்றுப் போவதெல்லாம், இயல்பை மீறி அந்நியப்படுத்தப்படும், சிதைக்கப்படும் எனது அடையாளங்கள் பற்றிய கவலைகள் எழும் பொழுது தான். அப்பொழுதெல்லாம் என்னை நானே சற்று வெளியேற்றிக் கொள்கிறேன் - புதிதாக ஒன்றைக் கண்டு கொள்ள அல்லது இந்த அடையாளச் சிதைவுகளிலிருந்து மீண்டு எழ. நீண்ட மௌனங்களுள் அமிழ்ந்து போகின்றேன் என்னுள்ளே அடைந்து கிடக்கும் தேவையற்ற பிம்பங்களையும் அசூயைகளையும் தொடர்ந்து வெளியேற்றிக் கொள்ள. நீண்ட மௌனங்கள் இந்த வெளியேறுதலுக்கான ஒரு அஞ்சலியாகவே அமைகின்றன. இந்த தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதன் மூலமே, எனது அடையாளங்களை மறுக்க நான் விரும்புகிறேன்.

மனுஷ்யபுத்திரனின் இந்த வார்த்தைகளைப் படிப்பதற்கு முன், எனது இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளச் செய்யும் அனுபவங்கள் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. (இலக்கியம்) வாசித்தல் என்னிடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மாற்றங்களில் ஒரு துளியையேனும் தொட்டிருப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வாசித்தல் என்னை ஒன்றிலிருந்து வெளியேற்றி மேலும் மேலும் புதிய பாதைகளில் பயணிக்க வைக்கிறது. புதிய புதிய அறிமுகங்களை தேடி இட்டுச் செல்கிறது. வாசித்தலைப் போலவே பார்த்தலிலும் திருப்பங்களைத் தந்திருக்கிறது. வெறுமனே வாசித்தல் - பொழுதுபோக்கிற்கான வாசித்தல், பார்த்தல் என்ற தளத்திலிருந்து வெளியேற்றி, என்னை நானே உணர்ந்து கொள்ள வைக்கும் பாதைகளுக்கான வாசித்தலை, பார்த்தலைத் தேடச் சொல்லி அலைக்கழிக்கிறது.

இலக்கியம் வாசித்தலால் என்ன பயன் என சொல்பவர்களுக்கு எனது பதில் மேலே சொன்னவை தான். இந்த வாசித்தலால், பார்த்தலால், வெளியேறுதாலால், புதிதாக வாழ்க்கையை வாழும் ஒரு புது அனுபவம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆக, இவன் தான் நண்பன் என நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் பொழுது, நான் அங்கிருந்து வெளியேறி மற்றொரு தளத்திற்குப் போயிருப்பேன். நிறைய எழுதி, நிறைய பேசி, என்னைப் பற்றி எல்லோரையும் நிறைய பேச வைப்பதை விட, நிறைய பார்த்து, நிறைய எழுதி, நிறைய என்னைப் பற்றிப் புரிந்து கொண்டவனாக இருப்பேன்.

ஆக, நான் எங்கும் தங்காமல், போய்க் கொண்டே இருப்பவன். வெளியேறிக் கொண்டே இருப்பவன் - ஒரு நதி தடையற்று ஓடிக் கொண்டேயிருப்பதைப் போன்று.

நான் நண்பன்.

நான் எழுதிக் கொண்டிருக்கும் தளங்கள் கீழே:

நண்பன்
மாற்றுத்தடங்கள்
Nanban

6 comments:

  1. உங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தேன்.

    முதல் முறையாக சிறப்பான தன்னிலை விளக்கத்தோடு கூடிய அறிமுகம்.
    நன்று.
    ஆவலோடு இருக்கிறோம்.

    ReplyDelete
  2. //இவன் தான் நண்பன் என நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் பொழுது, நான் அங்கிருந்து வெளியேறி மற்றொரு தளத்திற்குப் போயிருப்பேன்.//

    நடையை நிரம்பவே ரசித்தேன். வளர்க ...

    ReplyDelete
  3. தம்பி, தருமி - மிக்க நன்றி.

    தம்பி,

    நீங்கள் என்னை சற்றுக் கவனித்திருந்தால், தெரிந்து கொண்டிருப்பீர்கள் - எல்லாவற்றையும் பற்றி விவாதிக்க, பேச நான் தயங்குவதில்லை என்றாலும், என்னைப் பற்றியோ, அல்லது நான் சார்ந்திருப்பவர்களைப் பற்றியோ எதையும் வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டேன்.

    இந்த அறிமுகம் கூட, என் சுயம் செயல்படக்கூடிய இடமாக மட்டும் தான் இருக்க வேண்டியது தவிர, வேறெந்த செய்திகளையும் சொல்வது கூடாது என்ற உறுதிபாட்டில் மாறாது எழுதப்பட்டது தான். இத்தகைய அறிமுகம் இது தான் முதல் என்று சொல்வது, வலைச்சரம் தொடர்ந்து படித்து வருபவர்களுக்குத் தான் தெரியும். என்னை வலைச்சரம் எழுதக் கேட்டுக் கொண்ட பொழுதிலிருந்து, இன்று வரையிலும் வலைச்சரம் படிக்கவில்லை. I turned to be very conscious. வலைச்சரங்களில் பிறர் என்ன செய்கிறார்கள் என்ற பாதிப்பு என்னுள்ளே எழுவதனால், வரக்கூடிய பாதிப்புகள், நான் எழுதுபவற்றையும் தொடும் என்பதனால் வாசிக்கவில்லை. இது புதுமையான அனுபவம் என்று நீங்கள் சொல்வது மிக்க மகிழ்வாக இருக்கிறது.

    தருமி,

    முதலில் மிக்க நன்றி. வளர்க... என்ற வாழ்த்துதலுக்கு. இன்னும் சொல்லப்போனால், தமிழின் ஆதிகால வரவேற்பு முறை அல்லவா, அது!

    நடையில் மாற்றங்கள் இருக்கின்றன என்ற பாராட்டுதல் உற்சாகமாக இருக்கின்றன. அதன் காரணம் - இது வரையிலும், அரசியல் சார்ந்த இறுகிய நடையில் எழுதப்பட்ட புத்தகங்களைத் தான். அதனாலேயே, என்னுடைய நடை முன்னர் மிக இறுக்கமாகவும், 'politically correct' என்று சொல்லுமளவுக்கு சாமார்த்தியமாகவும் இருந்திருக்கின்றன.

    இப்பொழுது, மிகவும் நேர்த்தியான எழுத்தாளர்களால், செய்யப்பட்ட அல்லது எழுதப்பட்ட இலக்கியங்கள் - ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் வாசிப்பதால், மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன. என்னாலும் கூட அதை உணர முடிகிறது. முன்னெல்லாம், நிறைய ஆக, ஆதாலால், என்றால், அதனால் என்ற வார்த்தைகளை நிறையப் பயன்படுத்துவேன். ஆங்கிலத்தின் 'if' 'but' 'hence' 'therefore' 'because' என்ற தப்பித்துக் கொள்ள நிறைய வழி வகுத்துக் கொண்டே செல்லும் 'political writing'. அதை மாற்ற சுயபுரிதலோடு முயற்சிக்கவிட்டாலும், the changes are taking place at a sunconscious level.

    நன்றி - தொடர்ந்து வாசித்து கருத்து சொல்லுங்கள்...

    ReplyDelete
  4. வருக வருக நண்பரே!!
    வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மிக அழகான மொழியில் எழுதப்பட்ட தன்னிலை விளக்கம்..தன் பற்றிய அறிமுகங்கள் மிகவும் ஆபத்தானவை...அந்த ஆபத்தை இயல்பாக தாண்டியிருக்கிறது உங்களின் இவ்வறிமுகம்...

    ReplyDelete
  6. சீனா, அய்யனார் -

    நன்றி.

    தனனைப் பற்றி பேசும் ஆவல் ஆபத்தானது என்பது உண்மை தான். ஆனால், அதைப் பேசுவதற்கும் அலாதி ஆர்வமுடையவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர்.

    அத்தியாவசியமான தேவைகளின் போது மிகைப்படுத்தாத வகையில் குறைந்தபட்ச தகுதிகளை முன்வைத்து அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது என்பதில் தெளிவாக இருப்பது நல்லது.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது