பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாத ரறிவை கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.
இது பாரதி வாக்கு, அவனது ஆசை இப்போது நிறைவேறியிருக்கிறது. ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லையென பெண்கள் தினம் தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் எல்லா துறைகளிலும். அதே சமயம் பெண்களின் உணர்வையும், திறமையையும் பார்க்காமல் உடலை மட்டுமே கொண்டு பெண்களை போதை பொருளாக தினம், தினம் இழிவுபடுத்தி கொண்டிருக்கிருக்கும் திரையுலகின் போக்கு வன்மையாக கண்டிக்க பட வேண்டியது. அது அவர்களின் தவறு மட்டுமல்ல. அவர்கள் செய்வதை ஊக்குவிக்கும் ரசிகர்களாகிய நமது தவறும் கூடத்தான், அது முற்றிலும் நீங்க வேண்டும் என்பதையும் இங்கு ஆதங்குத்துடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.
எழுத்துலகை பொறுத்த வரையில் ஔவையார் தொடங்கி காக்கை பாடினியார், வெண்ணிக்குயத்தியார், பாரி மகளிரான அங்கவை சங்கவை என பலரும் ஆண்களுக்கு நிகராக சங்க காலத்தில் இருந்தே எழுதி கொண்டிருக்கிறார்கள்.
நம் பதிவுலகிலும், ஆண்களுக்கு நிகராக சமூக கருத்துக்கள் சொல்வதிலும், கதை, கவிதை படைப்பதிலும், விகட எழுத்திலும் கோலோச்சி வருகிறார்கள். அவர்களில் சிலரது பதிவுகளை இங்கு பார்ப்போம்.
வீட்டுப்புறா:- சக்தி..சுவைகுறைந்த என் சமையலை நீ
சுவைத்து உண்பாய் அதன் உண்மை
சுவை நானறிந்த போது உன்
கன்னத்தில் இதழ் பதிக்க தோன்றும்!!!
யாவரும் கூடி நிற்கும் சபையில்
என்னை ரகசியமாய் நீ பெயரிட்டு
அழைக்கையில் உன் தோள் வளைவில்
முகம் சாய்க்க தோன்றும்!!!
உன் மேல் நான் கொண்ட காதல்
ஊமையாய் என் மனம் முழுவதும் வியாபித்திருக்க
உன் சாயல் கொண்டு பிறந்த நம் மழலையோ அதை
உலகறியச் செய்திடும்!!!
சக்தி அக்கா இல்லத்தரசி..இவரை நான் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை..இருப்பினும் இவரது கவிதைகள் அனைத்தும் எனக்கும் பிடிக்கும்..சமீபகாலமாக வேலை நிமித்தம் காரணமாக எழுதவில்லை...விரைவில் எழுதுவார் என எதிர்பார்க்கிறேன்..
எழுத்தோசை:- தமிழரசி..ஒற்றை கால்மனிதனை கண்டேன்
அவன் கட்டைகால் மேல்
நம்பிக்கையையும் கண்டேன்....
ஊமை ஆனது மனம்
மௌனம் ஆனது மொழி
ஊனம் ஆனேன் நான்...
இவர்களும் இல்லத்தரசியே...இவரது எழுத்துகள் மிகவும் பிடிக்கும்...அன்பாக பழக்கூடியவர்....
பிரிவையும் நேசிப்பவள்:- காயத்ரிவயதில் இளையவர், ஆனால் கவிதைகள் அட! ரகம்.
நமக்கான உலகத்தில்
உன்னை மட்டும்
வெளியே அனுப்பிவிட்டு
இருந்த ஒரு
வழியையும் இறுக
அடைத்துக்கொண்டு விட்டது
நம் காதல்..
இனி உன் புன்னகைகளின்
சாரலோடும்..
உன் நினைவுகளின்
தூரலோடும் . .
வாழ்வதை தவிர
வேறென்ன செய்ய முடியும் நான்.
காதலை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் கவிதையாக்குவதில் கை தேர்ந்தவர்.
தொடரும் நினைவுகள்:- வியா..உன் விழிக்குள் இமையாக
நான் கொண்ட காதல்..
உன்னை நான் உணர்ந்த
நாள்..என்னை நான் மறந்த நாள்..
நீ எனக்கு தந்த முதல்
முத்தத்தை இன்றும்
சேமித்து வைத்துள்ளேன்..
என் காதலின் புனிதமான
சின்னமாய்..!
காதல் பிரிவின் வேதனைகளை மிகவும் அருமையாக கவிதையாக எழுதுபவர்...பழக இனிமையானவர்..
மேற்கூறியவர்களின் அனைத்து பதிவுகளுமே பிடிக்கும் என்பதால் குறிப்பிட்டு சொல்லவில்லை...