தில்லி ஸ்பெஷல் – 7
➦➠ by:
ஆதி வெங்கட்
சரம் – மூன்று! மலர் – பதினான்கு!
அன்பின் நட்புகளே,
கடந்த ஒரு வாரமாக தில்லியின் சுற்றுலாத் தலங்கள் சிலவற்றையும், பண்டிகைகளையும் பார்த்தோம். வலைச்சர வாரத்தின் கடைசி நாளான இன்று தில்லியில் இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. அவற்றை பற்றிப் பார்க்கலாம்.
லஷ்மி நாராயண் மந்திர் – மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு, B.K.BIRLA என்பரால் அமைக்கப்பட்ட
இந்தக் கோவில் பிர்லா மந்திர் என்றும் அழைக்கப்படும். தில்லியின் ”மந்திர் மார்க்”
பகுதியில் அமைந்துள்ளது. மார்பிள் கற்களாலான மகாவிஷ்ணு இங்கே அருள்புரிந்து கொண்டிருக்கிறார். கரோல் பாக் அருகிலேயே அமைந்துள்ள இந்தக் கோவில் தில்லியின் சிறப்பம்சங்களுள் ஒன்று. இது எங்கள் வீட்டின் பின்புறச் சாலையில் தான் அமைந்துள்ளது என்பது கூடுதல்
தகவல்.
தில்லி உயிரியல் பூங்கா:- (CH)சிடியா (G)கர் என்று அழைக்கப்படும் இது 214 ஏக்கர் பரப்பளவில் தில்லியின்
பிரதான பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 1959ம் வருடம் அமைக்கப்பட்ட இந்த உயிரியல் பூங்காவில்
வெள்ளைப் புலி, ஒட்டகச்சிவிங்கி காண்டாமிருகம் போன்ற ஏராளமான மிருகங்களையும், பறவைகளையும்
கண்டுகளிக்கலாம். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறுவர்களுக்கு
5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
JANTAR MANTAR:- ராஜா இரண்டாம் ஜெய்சிங்
அவர்களால் அமைக்கப்பட்டு பாராளுமன்ற சாலையில் அமைந்துள்ள இந்த ஜந்தர் மந்தரில் கிரகங்களின்
துல்லிய நிலையை கண்டறியும் யந்திரம் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று இந்தியாவில் ஜெய்ப்பூர்,
மதுரா, வாரணாசி, உஜ்ஜைன் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படும்.
அக்ஷர்தாம் கோவில்:- உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில்
என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 86,342 சதுர அடி பரப்பளவில்
அமைந்துள்ள இந்தக் கோவிலை நீங்கள் அவசியம் ஒருமுறையாவது பார்க்கத் தான் வேண்டும்.
இது போக தில்லியில் பார்க்க வேண்டியவை
என்றால் கரோல் பாக், கன்னாட் பிளேஸ், சாந்தினி செளக் போன்ற ஷாப்பிங் ஏரியாக்கள்.
கரோல் பாகில் மிகப்பெரிய ஆஞ்சநேயர்
சிலை உள்ளது. காலடியில் இருக்கும் ராட்சதனின் வாயில் நுழைந்தால் உள்ளே கோவில் இருக்கும்.
மேலே மெட்ரோவில் பயணித்துக் கொண்டே ஆஞ்சநேயரைப் பார்க்கலாம். இது போக தலைவர்களின் சமாதிகள்,
அருங்காட்சியகம் போன்றவை உள்ளன.
தில்லி மெட்ரோவில் பயணித்தால் அந்த அனுபவமே அருமையாக
இருக்கும். வருடங்கள் பல ஆனப் பின்னும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.
வர்த்தக கண்காட்சி:- வருடந்தோறும்
தில்லியின் பிரகதி மைதான் என்ற இடத்தில் குழந்தைகள் தினமான நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெறும் இந்த கண்காட்சியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்.
பட்டம் விடும் திருவிழா:- ஆகஸ்டு மாதம் வந்துவிட்டாலே எல்லோரும் பட்டம் விட ஆரம்பித்து விடுவார்கள். சுதந்திர தினத்தன்று பட்டம் விடும் போட்டியும் நடைபெறும். பல லட்ச ரூபாய் வரை பரிசுகள் அறிவிக்கப்படும்.
உணவுகள்:- இங்கு பால் தரமாக இருக்கும். அதனால் பாலில் செய்யப்பட்ட பெரும்பாலான இனிப்புகளே இங்கு காணப்படும். தோடா, பேடா, ரசகுல்லா, ரசமலாய், காஜூ கத்லி போன்று ஏராளமான வகை உண்டு.
தஹி பல்லே பாப்டி, கோல் கப்பா, டிக்கி, பனீர் பக்கோடா என்று நொறுக்குத் தீனி வகைகளும் இங்கு அதிகம்…
கோடைக் காலங்களில் அதிகபட்ச வெய்யிலும், குளிர்காலங்களில்
அதிகபட்ச குளிரும் கொண்ட ஊர் இது…:) அந்தந்த வெப்பநிலைக்கு ஏற்ப காய்கறிகளும், பழங்களும்,
துணிமணிகளும் கொட்டிக் கிடக்கும் இங்கு. பல மாநிலத்தவர்கள் வசிக்கும் இடமாதலால் பலவிதமான
மொழிகளைத் தெரிந்து கொள்ளலாம். ஆக மொத்தம் நல்ல அனுபவிக்கத் தெரிந்தவர்கள் இங்கு வசிக்கலாம்….:)
சரி! வலைச்சரத்தின் இறுதிநாளான இன்று சில அறிமுகங்களைப் பார்க்கலாம்.
எண்ணங்கள் தளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகிர்வுகளை தந்திருக்கும் கீதா மாமி மார்கழியின் சிறப்பான திருப்பாவைக் கோலங்களை பகிர்ந்து வருகிறார் பாருங்கள்.
திருச்சியைச் சேர்ந்த தமிழ் இளங்கோ ஐயாவின் தளமான எனது எண்ணங்களில் தங்கள் வீட்டுக்கு விருந்தாளிகளாக வந்துள்ள பூனைக்குட்டிகளையும், அதற்கு நண்பனாக மாறியுள்ள நாய்க்குட்டியை பற்றியும் இங்கே பகிர்ந்து இருக்கிறார்.
கற்றலும் கேட்டலும் தளத்தில் தோழி ராஜி கணினியாயணம் பற்றி எழுதி இருக்கிறார் பாருங்கள். அழகான எழுத்துக்கு
சொந்தக்காரரான இவர் தொடர்ந்து பல கதைகளை தர வேண்டும் என்பது என் விருப்பம்.
கீதமஞ்சரி அவர்களின் அழகுத் தமிழ், வாசிக்க எப்போதுமே இனிமையாக இருக்கும். இவர் உறவுகளின் உன்னதத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார் பாருங்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பாக ”என்றாவது ஒரு நாள்” நூல் வெளியாகி உள்ளது.
ஸ்கூல் பையன் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் சரவணன் அவர்களின் காதல் போயின் சிறுகதையை வாசித்துப் பாருங்களேன்.
இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஆசிரியப் பணியாற்றி என்னால்
முடிந்த அளவு தரமான பதிவுகளாக தந்திருக்கிறேன் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து
விடைபெறுகிறேன். ஆதரவு தந்த அன்புள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். வாய்ப்பளித்த
சீனா ஐயாவுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு பெரிதும் உதவியாகவும்,
உறுதுணையாகவும் இருந்த என்னவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். தொடர்ந்து எனது பக்கமான கோவை2தில்லியில் சந்திப்போம் நட்புகளே….
நன்றி.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்
திருவரங்கம்.




























