பொங்கல் பண்டிகையும் கிராமத்து வாழ்க்கையும்
➦➠ by:
கவிப்ரியன்,
மறக்க முடியாத நினைவுகள்,
வலைச்சரம்
பொங்கல் பண்டிகையை கிராமத்தில் கொண்டாடி சுமார் இருபது வருடங்களாகிறது. சென்னை வாழ்க்கையில் பொங்கல் அத்தனை சுவாரஸ்யமாய் இருந்ததில்லை. கடந்த இரண்டு வருடங்களாக ஒடிஸாவில்தான் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினோம். தமிழர்கள் யாருமே இல்லாத அந்த இடத்தில் நாங்கள் மட்டும் மொட்டை மாடியில் பொங்கல் வைத்து, சூரியனுக்குப் படைத்து எங்கள் ஆத்ம திருப்தியைத் தீர்த்துக் கொண்டோம்.
ஒரு காலத்தில் கிராமத்தில் பொங்கல் பண்டிகை என்றால் ஊரே குதூகலமாக இருக்கும். வீட்டு வாசலில் சாணத்தால் மெழுகி, செம்மண் பூசி மாவிலைத்தோரணங்களுடன் எல்லா வீடுகளும், ஊர்க்கோவிலும் அட்டகாசமாக இருக்கும். புதுப்பாணைகள் எடுத்து வந்து புதுத்துணி அணிந்து மாமன் மகள்களும் வீட்டுப்பெண்களும், அக்கம் பக்கதினரும் பொங்கல் வைக்கும் காட்சியே அழகுதான்.
ஒலி பெருக்கியின் ஓயாத அலறலும், உறியடித்தலும், சறுக்கு மரம் ஏறுதல், மாடு விடும் திருவிழா என இளைஞர்களாகிய எங்கள் பங்கு கணிசமாக இருக்கும். உள்ளூரிலேயே இருந்தாலும் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்வதும், யாரெல்லாம் நமக்கு வாழ்த்து அனுப்பியிருக்கிறார்கள் என்று தபால்காரரை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த காலங்கள் உண்மையிலேயே மறக்கக்கூடியவை அல்ல.
இப்போது இந்தக் காட்சிகள் எதுவுமே இல்லை. ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆண்கள் இல்லாத கிராமமாக இருக்கிறது. எல்லோருமே பிழைப்புக்காக வெளியூரில் இருக்க புதிதாய் வந்த நாகரிக மருமகள்கள் மட்டும் நைட்டி எனும் தேசிய உடையில்...
ஏண்டா கண்ணு துரும்பா இளைச்சிட்ட.. என்று குசலம் விசாரிக்கும் பெருசுகள் எதுவும் உசிரோட இல்லை. நில புலன்கள் எல்லாம் காய்ந்து போய்க்கிடக்கிறது. காளை மாடோ இல்லை பசுமாடோ சுவடே தெரியாமல் காணாமல் போயிருக்கிறது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. இதற்கு சென்னையோ அல்லது ஓடிஸாவோ மேல் என்றுதான் தோன்றியது. என் மகள்களுக்கு சொந்த ஊரின் பெருமையைப் பேச எதுவுமே இல்லை என்ற ஏக்கம் எழுகிறது.
இருந்தும் வாழ்த்து சொல்ல மனம் ஏங்குகிறது.
அடித்தள மக்களிடமோ
அறியாமை இருட்டு
போதை மயக்கத்திலோ
இளைய தலைமுறை
எங்கும் எதிலும்
இலஞ்சமும் ஊழலும்
மனக்குமுறலை உரமாக்கி
வீரத்தை நீராக்குவோம்
சுயமரியாதை உணர்த்திய
பெரியாரின் கொள்கையால்
மேதைகள் போற்றிய
பொதுவுடைமைச் சிந்தனையால்
சமுதாய சீர்திருத்த
அறுவடை செய்வோம்
இதயம் நிறைந்த
பொங்கல் வாழ்த்துக்கள்!இன்றைய அறிமுகங்கள்;
காவிரிப்படுகையில் மீத்தேன் எடுக்கும்
திட்டத்தின் விளைவாய் ஏற்படும் அபாயங்களை விளக்கும்
அருமையான பதிவை நயனம் என்ற தளத்தில் நாக.இளங்கோவன்
அவர்கள் எழுதிய 'தஞ்சை நெற்களஞ்சியம் கரிக்களஞ்சியமாகலாமா?' என்ற பதிவில் பாருங்கள்.
'பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்' என்ற தளத்தில் பி.கே.சிவகுமார் என்பவர் 'ஜெயமோகனின்' வெண்முரசு - உவமைகள் வர்ணணைகள்' என்ற பதிவில் வெண்முரசின் பிடித்த வர்ணணைகள் உவமைகளை முன் வைக்கிறார். ஜெயமோகனின் எந்த நூலையும் இதுவரை வாசித்ததில்லை. இந்தக்கட்டுரையை வாசித்த பிறகு படிக்க வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது. உங்களுக்கும் ஏற்படலாம்....
ஒரு மனிதனின் மரணம் அன்பையும், நட்பையும், பாசத்தையும் உணர்ந்தபடி நிகழவேண்டும். யாருமற்ற அனாதையாக, யாருக்கும் தேவையற்று மிருகத்தைப்போல செத்துப்போவது எத்தனை கொடுமை! சித்தரக்கூடத்தின் சந்தனமுல்லை அவர்கள் 'தேவதாஸ்-சரத் சந்திர சட்டோபாத்யாய' என்ற தன் பதிவில் கல்கத்தா பயணத்தின் வழியே வரலாற்றையும் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய பதிவு.
சின்னு டேஸ்டி வலைத்தளத்தில் மாதேவி வாய்க்கு ருசியான விதவிதமான சமையல் குறிப்புகளை எழுதி வருகிறார். என்னைப் போன்ற தனிக்கட்டையாக வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு இது போன்ற தளங்கள்தான் சமயத்தில் உதவுகின்றன.
நீங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவராக இருப்பின் பனைமரத்தின் பலன்களான நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியவற்றைச் சுவைத்திருப்பீர்கள். எனது மறக்க முடியாத நிகழ்வுகளில் எனது கிராமத்து நினைவுகளை இன்னும் அசைபோடவே இல்லை. கிராமத்து வாழ்க்கையில் பனம்பழத்தை சேகரித்து பூமியில் புதைத்து கிழங்காகும் வரை காத்திருந்து, பின் அதை எடுத்து வேகவைத்து சாப்பிட்ட அந்த நினைவுகளை மிக அருமையாக 'தலைநகர் பார்க்கவந்த தங்க விக்கிரகங்கள்' என்ற இந்தப் பதிவில் நினைவு கூறுகிறார்.
நமக்குத் தெரியாத வரலாற்று நிகழ்வை சொல்வதோடு மூன்றாவது உலகப் போருக்கு காரணமாகவிருக்கும் ஒரு சமாதி குறித்த ஒரு புதிய தகவலைக் கொடுக்கிறார் உலகின் புதிய கடவுள் தளத்தின் கே.செல்வன்.
மின்வெட்டில்லாத மிகை மின் மாநிலமான நம் தமிழ்நாட்டில் காலையிலிருந்தே 'கரண்ட்' இல்லை. அதான் கொஞ்சம் காலதாமதம்.
அன்புடன்,
கவிப்ரியன்.


