07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 9, 2013

அனைவர்க்கும் கல்வி – ஆறாம் நாள்

அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதைத் தர அரசு மட்டுமே முயற்சி எடுக்கவேண்டும் என நினைத்தால், அந்த இலக்கை நாடு அடைய பல ஆண்டுகள் ஆகலாம். நாமும் அரசோடு கை கோர்த்து உதவினால் மட்டுமே  நமது கனவு மெய்ப்பட வாய்ப்புண்டு.

நமது நாட்டில் படிப்பறிவோர் பற்றிய புள்ளி விவரத்தை நோக்கும்போது, ஆங்கிலேயர் காலத்தில் 12 சதமாக இருந்த படிப்பறிவு உள்ளோரின் விகிதம் 2011 மக்கள் கணக்கெடுப்புப்படி 74.04 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியைத் தந்தாலும் இது உலக சராசரியான 84 விழுக்காடை விட குறைவு என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

சரியான உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகளும், தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் இல்லாததே இந்த சுணக்கத்திற்கு காரணங்கள் என சொல்லப்படுகிறது.

மய்ய அரசு, எல்லோருக்கும் கல்வியைத் தரவேண்டும் என்பதற்காக ஆகஸ்ட் 2009 இல் இந்திய பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது இலவச மற்றும் கட்டாய கல்வி என்று பெயரிடப்பட்ட  இந்த சட்டத்தின்படி, 6 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வியைத் தருவது என்பது அடிப்படை உரிமை  ஆகியது.


இந்த கல்வி உரிமை சட்டம் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அமலுக்கு வந்த போது, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக உள்ள 135 உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக ஆனது.

ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வந்து ஓராண்டுக்குப் பிறகு இது எந்த அளவில் இருக்கிறது என  அரசு  ஆய்வு செய்தபோது  6 லிருந்து 14 வயதிற்கு உட்பட்ட 8.1 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கே  வருவதில்லை என்றும் நாடு தழுவிய அளவில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை ஐந்து இலட்சத்திற்கு மேல் உள்ளதாக தெரிந்தது.

மேலும் கிடைத்த புள்ளி விவரங்கள் நகர்ப்புற குழந்தைகளில்  54 விழுக்காடு பிள்ளைகள்  தனியார் பள்ளிகளில் பயில்கின்றன என்றும், இந்த விகிதம் ஆண்டுக்கு 3 விழுக்காடு வீதம்  வளர்ந்து வருவதாகவும் ஏழை குழந்தைகள் கூட ஆசிரியர்கள் வராததால் அரசு பள்ளிகளுக்கு வருவதில்லை என்ற அதிர்ச்சியான தகவலையும் தெரிவித்தது.

2015 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கு கல்வி தரவேண்டும் என்ற  அரசின் இலக்கு நிறைவேறுவது அரசின் கையில் மட்டுமல்ல நம் அனைவரின் கையிலும் உள்ளது என்பதுதான் உண்மை.  

நாடு விடுதலை அடைந்தபோது கல்விச்செலவு இப்போது போல் இல்லை. ஏன் குறிப்பிட்ட வகுப்புகள் வரை கட்டணமில்லாமலேயே பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்பட்டன. அதற்கு காரணம் அரசே கல்விக்கூடங்களை நடத்தி வந்ததால்.

அரசால் அனைவருக்கும் கல்வி தர இயலாத நிலையில், புற்றீசல் போல் முளைத்த கல்விக்கூடங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கல்வியை வணிகமாக்கி காசு பார்க்க தொடங்கிவிட்டனர். மேலும் ஆங்கிலமொழி வழி கல்வி முறையை தங்கள் பிள்ளைகளுக்கு தர பெற்றோர்கள் விரும்பி தனியார் பள்ளிகளை நாடும்போது அங்கே அவர்கள் வைத்ததே சட்டமாகிவிட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், நாட்டில் உள்ள சில பள்ளிகளில் சிறுவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஆண்டுக்கு 3.3 இலட்ச ரூபாய்கள் முதல் 9 இலட்ச ரூபாய்கள் வரை வசூலிப்பதாக செய்தி வந்திருப்பதை பார்த்தபோதும், சென்னையில் சில பள்ளிகளில் LKG எனப்படும் மழலையர் வகுப்புக்கு மட்டுமே ஓராண்டு கட்டணம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல்  என கேள்விப்படும்போதும் ஏழைகள் எங்கே  இங்கு எழுத்தறிவு பெறமுடியும் என்ற கேள்வி எழுவது இயற்கை.

அரசு நீதிஅரசர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் உறுதி செய்யப்பட்ட பிறகும், பெற்றோர்களிடமிருந்து பணத்தை வேறு வகையில் வசூலித்துக்கொண்டு இருக்கின்ற காட்சியை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

எல்லோருக்கும் கல்வியைத் தர அரசால் மட்டும் முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த சமயத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் தங்களுடைய இலாபத்தில் ஒருபகுதியை இந்த மாபெரும் முயற்சி வெற்றிபெற ஒதுக்கி தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நல்ல தரமான கல்வியை குறைந்த செலவில் தந்தால் தான் எல்லோருக்கும் கல்வி என்ற இலக்கை எட்டமுடியும்.


"அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்,
அன்னயாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"


என்ற தேசியக்கவி பாரதியாரின் விருப்பம் அதுவரை நிறைவேறாத கனவாகவே இருக்கும்.

இந்த பேராசை நடக்கும் என நம்புவோம்.  

                              ----------------


இன்று நாம் பார்க்க இருக்கும் வலைப்பதிவுகள்

1. தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல் போன்ற தலைப்புகளில் பதிவிடும் World is not Enough என்ற வலைப்பதிவில் நம்புங்கள்..! இது ஒரு அரசு ஆரம்ப பள்ளி என்ற பதிவைப் படித்தபோது  ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இவ்வளவு வசதிகள் உள்ளனவா என்று  என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட ஐயம் உங்களுக்கும் வரும் இந்த பதிவைப்படித்தபின். இந்த பதிவுக்கு சொந்தக்காரர் யாரெனத் தெரியவில்லை. அவருக்கு நன்றி இந்த  தகவலை தந்தமைக்கு.  

2. மணிராஜ் என்ற பெயரில் உள்ள  வலைப்பதிவில் தினம் தெய்வங்களின் அழகான திருவுருவப் படங்களை வெளியிட்டு, அதோடு பொருத்தமான பாசுரங்களையும் ஸ்லோகங்களையும் விளக்கத்தோடு தருவதில் வல்லவர் இராஜராஜேஸ்வரி அவர்கள். அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆயுர் தேவி என்ற தலைப்பில் வந்த பதிவே அதற்கு சான்று.

3. 2010 ஆம் ஆண்டிலிருந்து வரிக்குதிரை என்ற பெயர் கொண்ட வலைப்பதிவில எழுதிவரும் அருண்குமார் அவர்கள் எழுதியவைகளில் எனக்குப் பிடித்தது தமிழர் எண் முறை பற்றிய பதிவு. தமிழில் எண்களை எப்படி எழுதுவது எனத் தெரியாதவர்களுக்கு இது ஒரு பால பாடம்.  

4. நியூசிலாந்தில் வசிக்கும் துளசி கோபால் அவர்கள்  பதிவுலகத்தினருக்கு புதியவரல்லர்.இவரது துளசிதளம் வலைப்பதிவில் இவர் பதிவிடும் பயணக் கட்டுரையைப் படித்தால் வேறு வழிகாட்டியே தேவையில்லை.செல்லும் ஒவ்வொரு இடத்தையும் அழகாய் படம் பிடித்து அருமையாய் விளக்கம் தருவது இவரது சிறப்பு. சமீபத்தில் புள்ளிருக்கு வேளூர் போகலாமா? என்று நவக்கிரகத் தலமான  வைத்தீஸ்வரன் கோயில் பற்றி எழுதியிருந்ததை படித்ததும் பலமுறை சென்ற எனக்கே இவைகளையெல்லாம் நாம் பார்த்தோமா என ஐயம் ஏற்பட்டது.அந்த அளவுக்கு துல்லியமாக ஒவ்வொன்றையும் விடாமல் குறிப்பெடுத்து தருபவர்.

5. வரலாறு,அறிவியல், மருத்துவம் ஆகிய மூன்று தலைப்புகளிலும் இவர் 38 பதிவுகள் எழுதியிருக்கிறார்.ஆனால் ஒவ்வொன்றும் தகவல் சுரங்கம். ஒவ்வொரு பதிவை எழுதுவதற்கு இவர் எவ்வளவு மெனக்கிட்டிருக்கிறார் என்பதை பதிவை படிக்கும்போதே தெரிந்துகொள்ளலாம். படங்களையும் வரைப்படங்களையும் புள்ளி விவரங்களையும் தந்து எல்லோரும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையாக பதிவைத் தருவது இவரது பாணி. புவி வெப்பமடைதலால்ஏற்படும் விளைவுகள் என்ன?  என்று கடைசியாய் டிசம்பரில் எழுதிய வரலாற்று சுவடுகள் பதிவின் நண்பர்  பிறகு ஏனோ தொடர்ந்து பதிடவில்லை. இந்த ஆண்டு இனி தொடருவார் என நம்புகிறேன்.


6. 2011 ஆம் ஆண்டிலிருந்து பதிவுலகில் எழுதிக்கொண்டு இருக்கும் ரெவரி  அவர்கள் தன்னை யாரென்று வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும், அவரது எழுத்துக்கள் அவர் யாரென்று காட்டிவிடுகின்றன. சமூக அக்கறையுடன் எழுதும்  இவரது சில பதிவுகள் நம்மை சிந்திக்க வைப்பது நிஜம். தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் யாரென  சொல்லும் இந்த பதிவே அனைத்திலும் சிறந்தது.

7. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து இளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ!  என்ற வித்தியாசமான சொற்றொடருடன் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் என்ற வலைப்பதிவில் எழுதிவரும் குட்டன் அவர்கள்,  இதுவரை  167 பதிவுகள் தான் எழுதியுள்ளார். ஆனாலும் தமிழ்மணம் வரிசைப் பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருப்பதிலிருந்தே இவரது வலைப்பதிவு எந்த அளவுக்கு பிரபலம் என்று தெரிந்துகொள்ளலாம். குட்டன் என்றால் சிறு பிள்ளை என்று பொருள். ஆனால் இவர் எழுதும் விஷயங்கள், தரும் செய்திகள் சிறுபிள்ளைத்தனமானது அல்ல  பாம்பும் மேலாண்மையும்  என்ற பதிவே இதை உறுதி செய்யும்.மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது அல்லவா?

8. விருதுநகரிலிருந்து சிட்டுக்குருவி  என்ற வலைப்பதிவில் இதுவரை 400 பதிவுகளுக்கு மேல் பல தலைப்புகளில் பதிவிட்டிருக்கிறார் விமலன் அவர்கள். இருந்தாலும் சமூகம் என்ற பிரிவின் கீழ் பதிவிட்டுள்ள  50 இடுகைகளில், ஏழையிடம் கூட பணம் பிடுங்கும் பணந்தின்னிகள் பற்றிய நடப்பு என்ற பதிவு ஆதங்கத்தையும் இயலாமையையும் வெளிபடுத்துகிறது என்பதால் இதை தேர்வு செய்துள்ளேன்.  

9. ரம்யம்’, சின்னு ரேஸ்ரி  என்ற இரு வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரரான மாதவி அவர்கள் 2008 லிருந்து பதிவிட்டு வருகிறார். ரம்யம் வலைப்பதிவில் எல்லா தலைப்புகளிலும் பதிவிடும் இவர், சின்னு ரேஸ்ரியில் சமையல் குறிப்புகள் பற்றி மட்டுமே எழுதுகிறார். இவரது பதிவுகளின் சிறப்பு, அழகான புகைப் படங்களும் அவைகளோடு இவர் தரும் விளக்கங்களுமே. இவருக்கு பூக்கள் என்றால் கொள்ளைப் பிரியம் போலும். பூப்பூக்கும்ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்ற பதிவை பாடலோடு ஆரம்பித்து பல்வேறு பூக்களின் படங்களைத் தந்து இறுதியில் பூக்களின் சமையலுக்கு பூக்களைப் பறியுங்கள் என்ற சமையல் குறிப்புப் பதிவை திறக்க சொல்லும் திறமையே திறமை.
 

இனி விடைபெறும் நாளான நாளை, மற்ற பதிவர்களைப் பார்ப்போம்.


44 comments:

  1. வணக்கம்
    வே,நடனசபாபதி(ஐயா)

    இன்று வலைச்சரம் ஆறாவது நாளில் உள்ளது கல்வி சம்மந்தமான பதிவுகள் அருமையாக உள்ளது நல்ல முகவுரையுடன் அமைந்துள்ளது தொடருகிறேன் பதிவுகளை அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வரிக்குதிரை அருண்குமார் எனக்குப் புதியவர். மற்றவர் அனைவரும் படித்து ரசிக்கிற பட்டியலி்ல இருக்கிறவர்கள். கல்வியுடன் சேர்ந்து வந்த ஆறாம் நாள் பதிவுகள் அனைத்தும் அருமை ஐயா! அனைவருக்கும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி...வே,நடனசபாபதி அய்யா...

    உங்கள் மோதிரக்கையில் குட்டுப்பட்ட சக பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...

    உங்கள் வங்கிப்பதிவுகள் சிறுவயதில் என் தந்தையாருடன் கை பிடித்து வங்கி சென்ற சனிக்கிழமைகளை அடிக்கடி நினைவூட்டும்...

    மறுபடியும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. எமது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  5. கொடுத்துள்ள அனைத்து தளங்களும் நன்கு பரிச்சயமானவை...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. பாராட்டுக்கு நன்றி திரு ரூபன் அவர்களே!

    ReplyDelete
  7. வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கு நன்றி திரு ரெவரி அவர்களே!

    ReplyDelete
  9. நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!

    ReplyDelete
  11. ஐய்யா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் கூறும் அனைவருக்கும் கல்வியை பற்றிய கட்டுரை நல்லதே எனினும் மக்களால் இதில் எந்த மாற்றமும் கொண்டுவரமுடியாது. ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் சரியாக அல்ல நேரம் கடந்து பள்ளிக்கு வந்தால்கூட என்ன நடக்கும் என்று அனைவருக்கும் தெறியும். ஆனால் அரசு பள்ளியில் ? அரசின் கடுமையான சட்டங்களின் மூலமே அனைவருக்கும் தரமான கல்வியை தரமுடியும். வாத்தியார் வேலை கிடைக்கவேண்டும் என்றால் அரசு பள்ளியில் அரசு உழியராக சேர தவிக்கும் அதே நபர் தன் பிள்ளைக்கு மட்டும் தனியார் பள்ளிகளில் சீட்வாங்க துடிப்பது ஏன்? ஒரே ஒரு சிறந்த தீர்வு உண்டு அது அரசின் கையில் மட்டுமே உள்ளது. முதலில் pre kg, lkg, ukg முறையை தனியார் பள்ளியிடம் இருந்து அகற்றவேண்டும். 1.ஆம் வகுப்பில் இருந்து மட்டுமே குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படவேண்டும். கார்பரேசனில் குப்பைவாருபவனின் குழந்தைமுதல் கலெக்ட்டரின் குழைந்தை வரை கட்டாயம் அரசு பள்ளியில் தான் பயிலவேண்டும். தன் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைப்பவருக்கும் அரசு பள்ளியில் படித்தவருக்கும் மட்டுமே அரசு பனிகளில் சேரவும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கவேண்டும். இந்த அரசாங்கமே தான் முதல் முதலில் கல்வியில் பாகுபாடுகளை ஏற்படுத்தியது . மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குக்கான கேந்திர வித்யாலயா பள்ளி, மேலும் ரயில்வே, பி எச் இ எல் போன்ற நிறுவனங்களின் தொழிளாலர்களின் குழந்தைகளுக்கென தனி பள்ளிகள். இந்த பள்ளிகளே மக்களை தனியார் பள்ளிகளின் மேல் கவனத்தை திருப்பியது.

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா.

    தங்கள் கவனத்தில் இருக்கிறேன் என்பதே அளவிலா மகிழ்வைத் தந்தது.

    அறிமுகத்துக்கு நன்றி

    இதுவரை அறிமுகமானவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு புரட்சி தமிழன் அவர்களே! நீங்கள் சொல்லும் கருத்தோடு நானும் உடன்படுகின்றேன். நாங்கள் படித்தபோது SSLC வரை அரசுப் பள்ளிகளில், அதுவும் தமிழ் வழிக்கல்வியில் தான் படித்தோம். இடையிலே ஏற்பட்ட அரசின் கல்விக் கொள்கையால்தான் இந்த வேறுபாடுகள். நீங்கள் சொல்வதுபோல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பள்ளிகள் ஒரே பாட திட்டங்கள் இருந்தால் இந்த கல்விக்’கொள்ளைகள்’ இருக்காது. அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு முன்னுரிமை என்று கொண்டு வருமுன் அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்புகளும் நல்ல ஆசிரிய பெருமக்களும் இருக்கவேண்டும். அப்போதுதான் எல்லோரும் அரசுப் பள்ளியை நாடி வருவர்.

    ReplyDelete
  14. நன்றி திருமதி துளசி கோபால் அவர்களே!

    ReplyDelete
  15. When I was a student, few very good students, after primary school discontinued their education, due to poverty. As you said education, must be birth right. Easier said than done. Hope a day will come all the children will have equal opportunity irrespective of their background. Thanks.

    ReplyDelete
  16. திரும்பி பார்க்க வைக்கும் அசத்தலான அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா! தங்கள் வலைச்சர பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.!

    ஏனைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. இன்றைய வலைச்சரத்தில் தங்களால் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து பதிவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    வலைச்சரத்தினை அழகாகத் தொடுத்துள்ள தங்களுக்கும் என் இனிய நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. சிறப்பான அறிமுகங்கள் !...அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    ஐயா உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரவும் என்
    வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பக்கிர்வுக்கு .

    ReplyDelete
  19. வலைச்சரத்தில் எனது பதிவை அறிமுகப்படுத்தியதற்கு , என் மனமார்ந்த நன்றி, ஐயா! தங்கள் கட்டுரை மிக அருமையாக உள்ளது.

    With kind regards,

    Rishi
    World is not enough
    (www.livingextra.com)

    ReplyDelete
  20. ஐய்யா அரசின் உயர்பதவியில் இருப்பவர்களின் குழந்தைகள் படிக்கும்போது அடிப்படைவசதி என்ன குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் வரை தானக ஏற்படுத்திவிடுவார்கள். நமது பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கவில்லை அது எக்கேடு கெட்டால் என்ன என்ற நிலைதான் இப்போது இருந்துவருகிறது.

    ReplyDelete
  21. இன்றும் பரிச்சயமான பலர் உள்ளனர் பார்க்க மகிழ்வாக உள்ளது. எல்லேருக்கும், தங்களிற்கும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நாம் நினைப்பது நடக்கும் என நம்புவோம்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கு நன்றி வரலாற்று சுவடுகள் நண்பரே!

    ReplyDelete
  24. பாராட்டுக்கும் பதிவர்களை வாழ்த்தியமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கு நன்றி திருமதி அம்பாளடியாள் அவர்களே!

    ReplyDelete
  26. பாராட்டுக்கு நன்றி திரு ரிஷி அவர்களே!

    ReplyDelete
  27. கருத்துக்கு நன்றி திரு புரட்சி தமிழன் அவர்களே! ஒரு மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்த நிகழ்வும் இங்கே நடந்திருக்கிறது. எனவே காலம் ஒரு நாள் மாறும் என்று நம்புவோம் நண்பரே!

    ReplyDelete
  28. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    ReplyDelete
  29. தங்கள் பகிர்வில் கடின உழைப்பு தெரிகிறது. புதிய அறிமுகங்கள் நன்றிங்க.

    ReplyDelete
  30. எனக்கு ஒரு புதிய அறிமுகம் என்பதை டைப் செய்ய மறந்துவிட்டேன். மற்றவர்கள் தெரிந்தவர்களே.

    ReplyDelete
  31. ஒரு வாரமாக பணிச்சுமை காரணமாக வலைப்பக்கமே வராமல் இருந்து விட்டு இன்று வந்து வலைச் சரத்தைப் பார்த்தால் உங்கள் மூலம் என் அறிமுகம்;மேலே பறக்க வைத்திருக் கிறீர்கள். நேர்த்தியாகசரம் தொடுப்பதில் மிக அதிக கவன்ஃம் எடுத்துச் செய்திருக்கிறீர்கள்.நன்றி களும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  32. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    ReplyDelete
  33. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே!

    ReplyDelete
  34. கல்வி பற்றிய உங்கள் கருத்து நன்று.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. படித்த பெற்றோரின் குழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு ஏரளாமான பணமும் பெற்றுக்கொண்டு மதிப்பெண் பெற வைக்கும் இயந்திரமாக செயல்படும் தனியார் பள்ளிகளையே மக்கள் தரமானது என்று கொண்டாடுகிறார்கள்.
    கல்விப் பின்னணி இல்லாத குழந்தைகள் சேர்த்துக் கொள்ளும் தனியார் பள்ளிகள் எனக்குத் தெரிந்து இருப்பதாகத் தெரியவில்லை.
    தற்போது கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீதம் வாய்ப்பு மறுக்கப் பட்டவர் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு இப்பள்ளிகள் இடம் வழங்க வேண்டும். இதைக் கட்டாயம் பின்பற்ற வழிவகை செய்யவேண்டும். ஆனால் உண்மையில் இந்த சலுகை இப்பிரிவினரில் வசதி உள்ளவர்களே அனுபவிக்கக் கூடும்,
    பின்னணியை ஆராயாமல அரசு பள்ளிகளையும் ஆசிரியர்கள் அனைவரையும் குறை சொல்வது வழக்கமாக உள்ளது. இது பற்றி எழுதுவதற்கு இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன.

    ReplyDelete
  36. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!

    ReplyDelete
  37. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே! நீங்கள் சொல்வதுபோல் இது பற்றி இன்னும் நிறைய எழுதலாம். பதிவின் நீளம் கருதி சுருக்கமாக எழுதும்படியாகிவிட்டது.

    ReplyDelete
  38. தங்களின் அறிமுகத்திற்கு சிறந்தாழ்ந்த நன்றி.

    ReplyDelete
  39. நன்றி திரு விமலன் அவர்களே!

    ReplyDelete
  40. கணனி பக்கம் வரமுடியவில்லை. இப்பொழுதுதான் கண்டுகொண்டேன்.

    ரம்யம்,சின்னுரேஸ்ரி அறிமுகங்களுக்கு மிக்க நன்றி.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. இன்றுதான் உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். நன்றி திருமதி மாதேவி அவர்களே!

    ReplyDelete
  42. திரு.நடனசபாபதி அவர்களுக்கு.... உங்கள் அறிமுகத்துக்கு நன்றி பாராட்டாமைக்கு மன்னிக்கவும். பல்கலைக்கழக கல்விக்கு மத்தியில் பதிவுகளில் கவனம் செலுத்த முடியாமல் இடைநிறுத்தி வைத்திருக்கிறேன். ஆதலால்தான் உங்கள் அன்புக்கு நன்றி கூறத் தவறி விட்டேன் . என் பெயர் அருண் பிரசாத். குமார் அன்று. உங்கள் அறிமுகத்துக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  43. நன்றி திரு அருண் பிரசாத் அவர்களே! தவறுதலாக அருண் குமார் என குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது