சில பட்டங்களும், விமரிசனங்களும், ஒரு திருத்தமும்!
என்னுடன் தீராத சண்டை போடும் "டாம்" ஆகிய அம்பியின் அண்ணா தான் டுபுக்குனு எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன். இந்தப் பதிவுலகில் தங்கமணி, ரங்கமணி என்னும் இரண்டு வார்த்தைகளைப் பிரபலப்படுத்தியவர்,அபி அப்பாவுக்குக் குரு, நம்ம டிடி அக்காவின் குரு, என்று பல பட்டங்களைச் சுமக்க முடியாமல் சுமந்துட்டு இருக்கார், (கீழே இறக்கி வைச்சுடுங்க டுபுக்கு), நகைச்சுவையின் சக்கரவர்த்தி என அனைவராலும் ஏகமனதாய் ஒப்புக் கொள்ளப் பட்டவர், திருவாளர் "டுபுக்கு" அவர்கள் போட்டியில் முதன்மையில் இருக்கின்றார். "லண்டனுக்குப் போவது" பற்றிய அவரின் பதிவு படிச்சதிலே இருந்து வாசகர்கள் அனைவரும் லண்டன் செல்வது பற்றி யார் சொன்னாலும் கேலியுடனேயே பார்ப்பார்கள் எனவும் அனைவரும் அறிவார்கள். அந்தப் பதிவின் லிங்க் கிடைக்கவில்லை. டுபுக்கு, நீங்களே வந்து கொடுத்துடுங்க, 2 நாளாத் தேடறேன், உங்க பதிவுகளிலே, அலசிப் பிழிஞ்சு, துவைச்சுக் காயப்போட்டாச்சு, கிடைக்கலை! முக்கியமான பதிவுகள் ஜொள்ளித் திரிந்ததொரு காலம், இதோ இங்கே!டுபுக்கு , மூல்தானி மெட்டி, ரயில்
ஸ்நேகங்கள் ஆகியவை. என்னுடைய சில பதிவுகள் இவரால் "தேசி பண்டிட்"டில் இடம் பெற்றிருக்கின்றது. இவருக்கே "நகைச்சுவைச் சக்கரவர்த்தி" என்ற பட்டத்தை மனமுவந்து அளிக்கின்றேன்.
என்னோட திருமண நாள், பிறந்த நாள் அன்று இது வரை "டாம்" வந்து வாழ்த்துச் சொன்னதே இல்லை, அடுத்து என்ன வலை வீசலாம்னு யோசிச்சுட்டு இருக்கும். ஆனால் அவர் அண்ணாவான "டுபுக்கு" சரியா எதுக்கோ மூக்கிலே வேர்க்குமாமே அது போல் வந்து தாமதமாகவாவது வாழ்த்திட்டுப் போவார்.
அடுத்து, என்ன இருந்தாலும் டுபுக்கு மாதிரி நம்மாலே எழுத முடியலையே என்று புலம்பும் அபி அப்பா! இவரைப்பத்தி நான் ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை. அவரே எல்லாம் சொல்லிக்கிறாரே? :P இதோ பாருங்கள்!அபி அப்பா
விஜய்டிவியில் அபி அப்பா குடும்பம்" பற்றிய இந்தப் பதிவை எல்லாரும் படிச்சிருப்பீங்க, நானும் படிச்சேன், ஆனால் பின்னூட்டம், முன்னூட்டம் ஒண்ணும் கொடுக்கிறதில்லைனு முடிவு பண்ணிட்டேன். அது என்னங்க, கல்யாணப் பந்தியிலே பாயாசம் பரிமாறுகிறவங்களுக்குக் கரெக்டா நம்ம இலைக்கு வரும்போது பாயாசம் தீர்ந்து போகுமே? தெரியும் இல்லையா, அது போலத் தான் இந்த அபி அப்பாவும். திரும்பப் போய்ப் பாயாசம் எடுத்துட்டு வரவங்க, கவனமா எப்படி நம்ம இலையை விட்டுட்டு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., (அதுவும் முக்கால் வாசிக் கல்யாணங்களிலே நல்லாவே பால் பாயாசம் வச்சிருப்பாங்க) அடுத்த இலையில் இருந்து ஆரம்பிப்பாங்க, ஒரு முறை, இப்படி ஆயிடுச்சு, என்னோட ம.பா.பார்த்துட்டுப் பரிதாபப் பட்டு, சர்க்கரைக்கே தித்திப்புப் போடலையானு கேட்கும் என்னோட அல்பத்தனத்தை நினைவு வச்சுட்டு, என் இலையைக் காட்டிப் பாயாசம் கொடுங்கனு கேட்டதுக்கு, அவங்க, அதை விட அல்பத் தனமா, அட, அதுக்குள்ளே சாப்பிட்டுட்டாங்களா? இன்னொரு முறை கேட்கிறாங்கனு வியந்து ஆச்சரியப் பட நொந்து நூலாகிப் போன நான் அப்புறம் பாயாசத்தைக் கையாலேயே தொடவேண்டாம், ஸ்பூனாலேயே எடுத்துச் சாப்பிட்டுக்கலாம்கிற முடிவுக்குக் கஷ்டப் பட்டு வரவேண்டி இருந்தது. அது மாதிரி அபி அப்பாவும் செய்வார், சரியா என்னோட பின்னூட்டத்துக்கு முன்னால் வரை பதில் கொடுத்துடுவார்.ரொம்பவே வரிசையாகவும், ஒழுங்காவும் பின்னூட்டங்கள் கொடுத்திருக்கும் எல்லார் பேரும் சொல்லியும் பதில் கொடுப்பார். அப்புறம் வந்திருக்கும் என் பின்னூட்டம் அதை விட்டுடுவார் கவனமா. அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் இருந்து ஆரம்பிச்சிருப்பார் பதில் சொல்ல. இதைக் கேட்டால், "இல்லைம்மா, நீங்க கடைசியிலே வந்து சொன்னீங்க இல்லை, அதான் என்பார். எனக்கு அப்புறம் சொல்லி இருக்கிற 999 பேரின் பின்னூட்டமும் எப்படித் தான் கண்ணிலே படுதோ தெரியலை, அதான் இப்போப் போய்ச் சொல்றதே இல்லைனு வச்சுட்டேன். சரினு எப்போவாவது முன்னால் கொடுத்துட்டேன்னு வைங்க, அப்போ நம்ம பின்னூட்டத்தை மட்டும் கவனமா விட்டுட்டு அடுத்ததில் இருந்து ஆரம்பிப்பார், பந்தியிலே ஓரத்தில் உட்கார்ந்து இருக்கிறவங்களைக் கவனிக்காமலே போகிற பாயாசம் கொடுக்கிறவர் போல. நமக்கு எல்லா இடத்திலும் உட்கார்ந்து ஒண்ணும் கிடைக்காமல் இதே பழக்கமாகி, இப்போ வீட்டிலேயே பால் பாயாசம் வச்சுச் சாப்பிட்டுட்டுக் கல்யாணத்துக்குப் போக வேண்டியதாய் இருக்கு! என்ன செய்ய எல்லாம் அஜித் லெட்டர்! :( இருந்தாலும் சிரிச்சு வைங்க! அதுக்காகப் பாருங்க, இப்போ நம்ம பதிவுக்குக் கமெண்ட் போடக் கூட ஆளில்லை! :P
அபி அம்மா தான் பாவம், இந்த அபி அப்பா கிட்டேயும், அபி பாப்பா கிட்டேயும் மாட்டிட்டுப் படற அவஸ்தை, இங்கே பாருங்க! :)))))))))))
அபி அப்பா சிதம்பரத்துக்குப் போன அப்பா(டா)சாமி!!! இப்படிக்கு அபி பாப்பா!
அபி அம்மா கிட்டே நானும் தொலைபேசியில் எப்படி எல்லாமோ சொல்லிப் பார்த்தேன், அபி அப்பாவை மிரட்டறதுக்குச்சொல்லிக் கொடுத்துப் பார்த்தாச்சு. :P அபி அப்பா கிட்டேயே இருந்துட்டு அவங்களை மிரட்டிட்டு இருந்தார் போலிருக்கு, பாதியிலேயே "இதோ கோபி வரார், சாட்டிங்கிற்கு"னு நான் சொன்னதும் பயந்துட்டாங்களா இல்லை அபி அப்பா பயமுறுத்தினாரா புரியலை, உடனேயே தொலைபேசியை வச்சுட்டாங்க! இன்னிக்கு வரையிலும் திரும்பப் பேசலை. முந்தாநாள் பேசினப்போ கூட அபி அப்பா மட்டுமே பேசினார் அதுவும், ரொம்ப ஜாக்கிரதையா என் கிட்டே அபி அம்மாவா? அவங்க வீட்டிலே இல்லைனு சொல்லிட்டார். நிஜமா அபி அம்மா? :P
அபி அப்பாவை ஏக மனதாய் டுபுக்குவின் அடுத்த வாரிசாகத் தேர்ந்தெடுக்கிறேன்.
அடுத்து வரார், நம்ம அம்மாஞ்சி, அம்மாஞ்சி என்ற அம்பியை எனக்குப் பதிவு எழுத ஆரம்பிச்ச புதுசுலே இருந்தே தெரியும். நான் தமிழ் எழுத முடியாமல் திண்டாடும்போது வெ.பா.வ. ஜீவ்ஸ், பொறுமையாகவந்து செய்ய வேண்டியதைச் சொல்லிட்டுப் போக, இந்த டாம் மட்டும், "கையைப் பிடிச்சாச் சொல்லித் தர முடியும்?"னு அதட்டிட்டுப் போயிடுச்சு! :P அதுக்கு அப்புறமும், எல்லாப் பதிவுகளும் தொலைந்து போய்க் கஷ்டப் பட்டேனே அப்போ கூட, இந்த டாம், ஜெரியாகிய என்னைப் பார்த்துச் சிரிச்சுட்டுத்தான் இருந்தது. தெரியாமப் போயிடுச்சு எனக்கு இந்த டாமைப் பத்தி! :P இப்போக் கூட எனக்கு வந்த வைரல் ஜூரம் என் கணினியையும் பீடிக்க, எங்கெங்கிருந்தோ உதவிக்கரம் வர, இந்த டாம், அட, இத்தனை பேரா வந்திருக்காங்கனு, கணக்கு மட்டும் போட்டுப் பார்த்துட்டுப் போயிருக்கு. இப்போ ஊரில் இல்லை, வரட்டும், அதுக்குள்ளே, நான் வலைச்சரத்தை விட்டுப் போயிடுவேன், இந்த டாமை வேறே வழியில்லாமல், நகைச்சுவை இளவரசனாய்த் தேர்ந்தெடுக்கிறேன். இவரின் சமீபத்திய சில பதிவுகள்:
அம்பி
ரெட்டை ஜடை வயசு 1&2
அம்பி
அம்பி
தினத்தந்தியில் வரும் சிந்துபாத் கதை மாதிரி அம்பிக்கும், எனக்கும் சண்டை தொடரும் என திரு திராச அவர்கள் ஒருமுறை திருவாய் மலர்ந்தருளி உள்ளார். அது நிஜமோ?
அடுத்து இசை இன்பம் பற்றிய சில பதிவுகளும், முக்கியமான நண்பர் இருவரும் நாளை இடம் பெறுவார்கள். அதற்கு முன்னர், சமீபத்திய தொலைக்காட்சித் தொடர் ஆன "சிம்ரன் திரை" பற்றிய ஒரு சிறு விமரிசனம். உண்மையில் தொடர்கள் பார்க்கும் அளவுக்குப் பொறுமை எல்லாம் இல்லை, என்றாலும், முதல் கதை சுஜாதாவின் கதை என்பதால் பார்த்தேன். ரொம்ப அருமைனு சொன்னால் அது பத்தாது. சிம்ரனின் நடிப்பு மட்டுமில்லை, வண்ணாத்திப் பூச்சியாகவே வாழ்ந்த அவள் கணவன் ஆக வரும் ராகவும், அப்படியே இயல்பாய் வாழ்ந்திருந்தார். சிம்ரனின் ஒவ்வொரு அசைவும் பிரமாதம், இத்தனை நடிப்பை எங்கே ஒளித்து வச்சிருந்தார்? என்று கேட்கும்படியாகவே இருந்தது. எடுத்திருக்கும் விதமும் அசர அடிக்கின்றது. நேர்த்தியான ஒளிப்பதிவு, சற்றும் குறைவில்லாத லொகேஷன்கள், என்று தேடிப் பிடித்துப் பொருத்தமாய்ப் போட்டிருக்கின்றார்கள். யதார்த்தத்திற்கு மாறாமல் இருக்க வேண்டும் என்பதில் செலுத்தியுள்ள கவனம் நன்கு புலப்படுகின்றது. அதுதான் சுஜாதா கதை என்பதால் அப்படி இருந்ததுனு நினைச்சால், அதற்குப் பின்னர் வந்தது ஸ்ரீப்ரியாவின் கதையில், ராதிகா சஷாங்கின் திரைக்கதையில், "அனுவும், நானும்" அகத்தியன் இயக்கத்தில். சிம்ரன் நடிக்கவே இல்லை. வாழ்ந்தார் அந்தக் கதா பாத்திரத்தில்.
இன்னொரு "கேளடி கண்மணி"யோ என நினைத்த போது முற்றிலும் புதிய கோணம். 7,8 வயதுப் பெண்ணிற்கு, மாற்றாந்தாய் ஆக மனமுவந்து வரும் சிம்ரனுக்கு ஏற்படும், ஒவ்வொரு பிரச்னைகளும் எந்த நடுத்தரக் குடும்பத்திலும் ஏற்படுவதே. கணவன் வீட்டை விட்டுப் போ எனக் கோபத்தில் சொன்னதும், சிம்ரன் கதறிய கதறல், ரொம்பவே இயல்பான ஒன்றாகும். மறுநாள் அனைத்தையும் துடைத்துவிட்டுத் திரும்பக் கணவனிடமே செல்வது, சிரிக்கும்போதும், அழும்போதும், தெரியும் அவரின் கன்னக் குழி கூட நடிப்பில் வியக்க வைக்கின்றது. கண் பேசுமா என்றால் பேசியது மிக அருமையாகவே. அந்தக் கண்களில் எத்தனை உணர்ச்சிகளைக் கொட்டுகின்றார். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு பாவம் தெரிகின்றது. கதையோடு ஒன்றுவது மட்டுமல்லாமல் பார்க்கும் நம்மையும் அதே போல் உணர வைத்தார். ஒவ்வொரு நாளும் தொடர் முடிந்ததும், மனதில் பாரம் ஏறும். இன்றுதான் முடிவு பார்த்ததும் பாரம் இல்லாமல் இருக்கின்றது. அனைவரும் பார்க்க வேண்டிய தொடர் சிம்ரன் திரை என்பதில் சந்தேகமே இல்லை, இது வரை. இனி வரும் தொடர்கள்????? தெரியவில்லை!!!!!உண்மையில் பெண்களுக்குப் பெருமை தரும் இத்தகைய தொடர்கள் வந்தால்?????? அப்புறம் பாருங்க, இந்த கோபி எனக்கு லிங்க் கொடுக்கத் தெரியாதானு கேட்டுட்டு இருக்கார். அதுக்காக இந்தப் பதிவுக்கு நேரம் செலவழிச்சு லிங்க் எல்லாம் கொடுத்திருக்கேன். அது தவிரவும் கீழே பாருங்க!