07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பா.ராஜாராம். Show all posts
Showing posts with label பா.ராஜாராம். Show all posts

Saturday, July 3, 2010

வலைச்சரம் - ஏழாம் நாள் - ஞாயிறு


சேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ், ஆறுமுகம் முருகேசன், சு.சிவக்குமார்

1. சேரல்

வெளியில் நனையும் மழை

மழை வந்துவிட்டது
போலிருக்கும் பொழுதின்
முந்தைய கணங்களில்
வீடு சேரும்
முனைப்பிலிருக்கிறேன்

மழை,
மழை கோட்,
ரோஜா வர்ணக்குடை,
மழைக்கதை பேசும் தோழி,
எப்போதோ மறந்துவிட்டு
நனைந்துபோன
கொடியுலர்த்திய ஆடைகள்,
என்பதாக வியாபிக்கிறது
மழை,
நினைவெங்கும்

முதல் துளி,
தலையோ,
தரையோ தொடுமுன்
பத்திரப்படுத்துகிறேன்
கூரைச்சுவற்றின் கீழ்
என்னை

வெளியில்
தன்னையே நனைத்துக்கொண்டிருக்கும்
மழை குறித்துச்
சிந்தனையில்லை

இனி நான்
நிம்மதியாகத்
தேநீர் அருந்தலாம்

***
(மழை, தேநீர், தேநீர் மழை, உள்ளும் வெளியும். வாவ், சேரல்!)
***

2. kartin

வட்டங்கள்

ங் அல்லது ல் அல்லது ப்
என்று முடியும்
சத்தத்தோடு
நீரில் அமிழ்கிறது கல்

நிலவைத் தழும்பச் செய்கிறது
முதல் வட்டம்

அலைக்கழிக்கின்றன
அடுத்தடுத்த வட்டங்கள்

தாலாட்டிப் போகின்றன
தொடர்பவை

தழுவித் துயில்கிறது
முடிவிலொன்று

நான் அடுத்த கல்லுக்கு
ஆயத்தமாகும் முன்
நீ வந்து விடுகிறாய்..
நிலா நகர்ந்து விடுகிறது

ங் அல்லது ல் அல்லது ப்
என்று முடியும்
சத்தத்தோடு
மீண்டும் தொடங்குகின்றன
வட்டங்கள்

***
(ஜலதரங்கம் பாஸ்!)
***

3. இளங்கோ கிருஷ்ணன்

ஒரு இரவல் காதல் கதை

இந்த வானத்தில் ஒரு நிலவுண்டு
பாதிநாள் வளர்வதும்
பாதிநாள் தேய்வதுமாய்
தன் பைத்தியத்தில்
அலைகளுக்குப்
பேய் பிடிக்கச் செய்யும்

இந்த ஊரில் ஒரு அக்கக்கா குருவியுண்டு
அக்கூ அக்கூ எனக் கதறி
காகத்தையும் உறவு சொல்லி
ஏமாந்து புலம்பும்

இந்த நிலத்தில் ஒரு மரம் உண்டு
கூடடையும் பறவைக்கு
தன் சதை பறித்து கனி திரட்டி
யாருமற்ற நேரத்தில்
பாம்பிற்கு முட்டை தரும்

இந்த நெஞ்சில் ஒரு முத்தமுண்டு
நிகழ்ந்த கணத்தின் பரவசத்தில்
மலர்ந்த பூக்களின் நறுமணத்தை
கனவில் எண்ணி
நீருலர்ந்த உதடுகளை வருடிக்கொள்ளும்

***
(அப்பா! புரட்டி அடிக்கிறீங்களே, இளங்கோ!)
***

4. சுந்தர்ஜி

எல்லா இடங்களிலும்
ஒருவனால்
பேச முடிவதில்லை.
பேச நினைக்கும்
இடங்களில்
இரைச்சல் மிகுந்தோ
பேரமைதியாகவோ
தடைசெய்யப்பட்டோ
பேசமுடியாது போகிறது.
பேச ஆசைகொள்ளும்
நள்ளிரவில்-
நூலக அலமாரிகள் இடையே-
ஒரு கலவிக்குப் பின்னே-
சாவு வீட்டில்-
ஏதோ ஒரு ஆசிரமத்தில்-

பேசமுடியாது போகிறது.
யாருமற்ற தனிமையில்
புற்களைப் பிடுங்கியபடி
பதட்டத்தாலோ
வசீகரத்தாலோ
மறதியாலோ
பேசமுடியாது போகிறது.
ஒரு தோல்விக்குப் பின்னே-
காரணமற்ற கோபத்தால்-
நியாயமற்ற பொய்களால்-
பல நேரங்களில்
பேச முடிவதில்லை.
எல்லாம் அமையும்போது
பேச எதுவுமில்லாது
போய்விடுகிறது.

***
(மௌனத்திற்கு ஒரு மொழி, நிறம், வாசனையுண்டு. வாய்ச்சுருக்கு உங்களுக்கு, சுந்தர்ஜி! )
***

5. கமலேஷ்

மெய்பொருள் காண்பதறிவு......

கொடிமரத்தை பற்றியதொரு
கவிதை எழுதியிருந்தேன்.
கவிதையில்
வந்தமர்ந்த ஓர் பறவை
வெகுநேரம் எதையோ தேடிவிட்டு
பறக்கும் போது சொன்னது,
உன் மரத்தில்
பழங்களே இல்லை....

***
(தேட தருவது தேடலுக்கு இணையானதே. பழமரத்தில் அப்பறவை கொடி தேடலாம், கமலேஷ்!)
***

6. ஆறுமுகம் முருகேசன்

அலட்சியமற்ற
இரு சக்கரமொன்றின்
டயர்கள் முகர்ந்த
நாய்குட்டியொன்றின்
இரத்தம் நுகர்ந்த நாசித்துளை
எதற்கேனும் எழுதி தீர்த்திருக்கலாம்
சாவுகவிதையொன்றை இந்நொடி .
கவன ஈர்ப்பற்ற
நாய்குட்டி கதையெழுதும்
விரல்களின் நகங்கள்
கண்ணீர் பீய்ச்சியடிக்கும் இவ்வேளை..
எதிர்பக்கமாய்
பிறிதொரு நாய்குட்டிக்கு
பிறிதொருவன் வழிவிடுவதையும்
சொல்லியே ஆகவேண்டும் ..!

***
(என்ன அருமையாய் balance பண்ணியிருக்கிறீர்கள் மாப்ள. ரொம்ப பிடிச்சிருக்கு!)
***

7. சு. சிவக்குமார்

முதற் குறிப்பேட்டிலிருந்து

கற்றுக்கொண்டிருக்கலாம்
குறிப்பெடுக்குமளவில்.
மின்சார கம்பிகள் மீது
இசைக்குறிப்புகளென அமர்ந்திருக்கும்
அந்த கருங்குருவிகளை ஓர்த்தாவது...

***

உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்

***

பெருமழை பெய்யும் நாட்களிலும்
ஒயும் நாட்களிலும் முகிழ்க்கும்
சில நினைவுகள்..
ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்.

***
(குருவி, நிழல், மழை, ஆன்மாவில் தத்தி தத்தி அமர்கிறது சு.சி!)
***

ஆஹா! ஒரு வாரம் போனதே தெரியல. முழுப் பரீட்சை லீவை வீராயி அம்மாச்சி வீட்டில் முடித்து, புறப்படுகிற நாளின் மன நிலை.

பதிவுலகத்தில், சிற்றிதழுக்கு இணையான படைப்பிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பருகித் தீரல. தீரவும் தீராது. இந்த ஒரு வருடமாய், நான் வாசித்த எவ்வளவோ விஷயங்களை, படித்த மனசுகளை இங்கு பதிய முடியாமல் போயிருக்கிறது. காரணம், ஒரு வாரம் என்பது.

இந்த ஒரு வாரம் என்பதில் என்னை வெகுவாக சுறுக்கிக் கொண்டேன். கவிதை மட்டும் பேச முடிந்த காரணம் இதுவே. என் ஆதர்ச தளங்கள் என நிறைய...அவற்றைக் கூட பகிர்ந்து கொள்ள இயலவில்லை.

நண்பர்கள் சண்டைக்கு வருவார்கள். சட்டையை கழட்டி நின்றபடி,"ஒத்தைக்கு ஒத்தை வாடா" என்பார்கள். நானும் தயார்தான். ஆனால் இங்கில்லை. நாளை, கருவேல நிழலில்! (ஹி..ஹி..எங்க ஏரியாவுக்கு வாங்கப்பு வச்சுக்கிறேன்)

எல்லாவற்றையும் இழுத்து வைத்துக் கொண்டு பேசினால், எனக்கும் கீறியது போல் இருக்காது. உங்களுக்கும் வலிச்சது போல் இருக்காது. (இசுவினி?). இல்லையா?

சீனா சாரும் செறுமிக் காட்ட தொடங்கிவிட்டார். இதோ ஆச்சு சார்...

உங்கள் கைகளை பற்றியபடியான, மனசு நிறைந்த, நன்றி சீனா சார்!
வரப் போகும் நண்பருக்கும் என் வாழ்த்துகளை சொல்லுங்கள்...

ப்ரியங்களில் நிறைந்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்!

***
மேலும் வாசிக்க...

Friday, July 2, 2010

வலைச்சரம் - ஆறாம் நாள் - சனி

செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா

1. செல்வநாயகி

அவன் சென்றபின் பெய்த மழை

தலைவன்களும் பல்லக்கத்தூக்கிகளுமாய்
ஊர்வலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊரிலிருந்து

இவ்வனத்திற்குள் வந்து நாட்கள் பலவாகியிருந்தன

வனம் நிறையப்புற்களோடும் கொஞ்சம் மான்களோடும்
அழகாயிருந்தது.
தேன்சொரிந்தாலும் காய்கனிந்தாலும் வந்துபோக
பட்டாம்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும்
அங்கே சுதந்திரம் இருந்தது.

இயற்கையின்மொழி இதயமெங்கும்
கவிதைகளை நிறைத்துக்கொண்டிருந்தபொழுதில்
அவன் தயங்கித் தயங்கி வந்து நின்று
தானுமொரு வனம்விரும்பி என்றான்
வனம்விரும்பிகளின் ரட்சகன் என்றான்
மொழிக்காதலனுமென்றான்
நான் வனம் நிறைத்திருந்த கவிதைகளை
அவனுக்குச் சொல்லலானேன்
பூக்களில் தேன் சொரிந்திருந்தும்
அன்று பட்டாம்பூச்சிகள் வருகையை நிறுத்திக்கொண்டன

தன்பரப்பில் வாழும் உயிர்களுக்கான
வனச்சுனையின் பேதமற்ற நீரளிப்பை
நெக்குருகிச் சொல்லிக்கொண்டிருந்தபோது
தலையைச் சிலுப்பிக்கொண்டே
"இப்படித்தான் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்
அல்லது பேசிக்கொண்டிருப்பதே நம் பண்பாடு"
தன் அபிமான நடிகன்கூட
ஒருபடத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என்றான்
பறவைகள் அக்கணம்
வனத்திற்கெதிரான திசையில் பயணிக்கக் கண்டேன்

தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்
கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்
நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்
உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட
பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்
கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்
சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்
முகில்களோ, மான்களோ எதுவும்
தட்டுப்படாத வெறுமை சூழந்தது

அவனுடனான உரையாடலில்
என் சொற்கள் தீர்ந்துபோன சமயத்திலும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்
தான் இச்சமூகத்துக்கு
ஏதேனும் செய்தே தீருவேன் என்றான்
கலைரசிகர்கள்
வனம்வாழ்வது தகாதென்றான்
இலக்கியம், கலை, மொழிபரப்புதலில்
தானொரு தலைவனாவதற்கு
ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்
தன்பின்னே வந்தால் எதிர்காலம் சிறக்குமென்றும்
தன்னைச் சுமப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானவனென்றும்
இடைவெளிகளற்றுப் பேசிக்கொண்டேயிருந்தான்

மௌனத்தை மொழிபெயர்க்கத் தெரியாதவன்
பதிலுக்கு நச்சரித்தபோது நான்
நோய்க்கூறுகள் உருவானது இப்படித்தானென்றேன்
அவன் கோபம் கொப்பளிக்க என்னை
ஒரு சமூகத்துரோகியென முடிவுசொல்லி விடைபெற்றிருந்தான்
ஒரு நீள இரவு கடந்து
விழித்துக்கொள்கையில்
மழைபெய்திருந்தது
மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன
என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது.


***

(வணக்கம் டீச்சர்!) :-)

***

2. வித்யா(விதூஷ்)

மனக்கரை

வானைக் கிழித்த விமானக் கோடு
முயலாகும் மேகங்கள் - கருநீல அடிவானம்
திரும்பி வரும் தூரத்துப் படகுகள்
கை கோர்த்து கால் நனைக்கும்
காதல் மறக்காத மூத்தோர்
அவள் காலடி துரத்தும் காதலன்
கால் துடைத்த அலை நீர்
வாவென்றது மேகம் - கடல்
மூழ்கியது வெப்ப நிலா
அலை பேசியபடி காலணிக்குக்
காவலாய் மணலில்தான் அமர்ந்திருந்தேன்!

***

(காவலில் இருக்கும் போது போனில் என்ன பேச்சு சகோ?) :-)

***

3. தமயந்தி

தேர்

வெற்றிட‌த்தின் ஒலியை
இன்னும் யாரும் கேட்ட‌தாயில்லை.

ரெட்டை விநாய‌க‌ர் கோவில்தெருவில்
மின் க‌ம்ப‌ம் ச‌ரிந்து இர‌ண்டு நாளாகி விட்ட‌து.

ச‌ந்திபிள்ளையார் கோவில் ஸ்டாப்பில்
காந்தி சிலை உள்த‌ள்ளி நிற்கிற‌து.

க‌ட‌னில் ஊர் விட்டு ஓடிய‌ ப‌ர‌ணி
க‌டை முன் ஆடு ப‌டுத்திருக்கிற‌து.

என்றாலும்
நெல்லைய‌ப்ப‌ர் கோவில் தேர் ந‌க‌ர்கிறது
வ‌ருடாவ‌ருட‌ம்.

***

(வசூலிக்க வந்த ஆடு போல, தமயந்தி! ரொம்ப பிடிச்ச தேர்/ஆடு/ ச்சே..கவிதை/ பாஸ்!

***

4. கௌரி ப்ரியா

மார்கழி முன்னிரவில்
பனியொழுகும் தலைகளுடன்
படர்ந்திருக்கின்றனர் மக்கள்
கண்காட்சி யொன்றில்..
ஏந்தியவன் கழுத்தின்
இருமருங்கிலும் கால்களிட்டு
தோளமர்ந்திருக்கிறது குழந்தை.....
தந்தையின் கற்றைமுடியை
இறுகப் பிடித்திருக்கும் உள்ளங்கை
காற்றிலாடும் செடியொன்றின்
கிளை பற்றிய அணில்குஞ்சென
மிருதுவாய் இருக்கக்கூடும்...

கவியொழுகும் தலையுடன்
கடந்து செல்கிறான்
கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும்

***

(இப்படி, நிறைய தடவை அப்பா தலையை பற்றியிருக்கிறேன் கௌரிப் ப்ரியா. அப்பாவும் இல்லை. அவ்விரல்களும் இல்லை) :-(

***

5. அமிர்தவர்ஷிணி அம்மா

ஒப்புக்கு அழு

தூக்கு போட்டு செத்த
நாகராஜன் அண்ணா
சாவுக்கு அழவேயில்லை
ஜானகி அக்கா
மனைவியாக இருந்தபோதும்

தம் அப்பா செத்ததற்கு
அழவேயில்லை
ராணியும், ராஜேஸ்வரி அக்காவும்

எதிர்வீட்டு பெண்ணின்
அம்மா மஞ்சள் காமலையில்
செத்த போது
அந்தச் சின்னப்பெண்ணின்
அழுகையே அன்று முழுவதும்
பேச்சாக இருந்தது.
பிணத்துடன் மாலை மாற்றிக்கொண்ட
போதுமட்டும் கடைவிழி நீர் உகுத்த
கணவனை
வசைபாடித் தீர்த்தனர் பெண்கள்

அத்தை சொன்னாள்
செத்துப்போனது
அம்மா, அப்பாவாக
இருந்தால்
இடுகாடு எடுத்துபோகும்போது
தரையில் உருண்டு
அழவேண்டுமாம்
பொறந்த பெண்கள்
அந்தக் கஷ்டத்தை கூட
எனக்கு கொடுக்கவில்லை
என் அப்பா

செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு

யார் எப்படி அழுகிறார்கள்
என்ன சொல்லி அழுகிறார்கள்
என்ற ஒப்பீடு
சாவு வீட்டில் பின்னர் பேசப்படும்

வந்தா, ஒக்காந்தா
ஒப்புக்கு அழுதா
அப்படின்னு

இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்னு.

ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.

***

(ரிகர்சல் சக்சஸா அமித்தம்மா?) :-)

***

6. அனிதா

உருமாற்றம்

பனி படர்ந்த படித்துறையில்
என்னுடன் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவன்
எதிர்பாராததொரு கணத்தில்
பாசி வழுக்கி குளத்தில் விழுந்தான்

மூழ்கி அமிழ்ந்து திணறி தத்தளித்து
அலை வட்டங்களும் இல்லாது மறைந்தவன்
கரையோரம் என் கால் நிமிண்டி
தான் மீனாக மாறிவிட்டதாய் சொன்னான்

உடலெங்கும் படர்ந்த செதில்களையும்
திணராமல் நீந்தும் லாவகத்தையும் பார்த்து
சற்றே ஆசுவாசமானேன்

பறவைகள் கூடு திரும்பும் மங்கலில்
எனக்கு சொல்ல ஆயிரம் கதைகள் வைத்திருந்தான்
விருப்பம்போல சுற்றுகிறானென்றும்
பசி என்பதே இல்லையென்றும்
சலிக்காத அழகுகள் நிறைந்த குளமென்றும்
குளிர் கூட சுகமாயிருப்பதாயும்
நிறைய சொல்வான்
கேட்டுக்கொண்டிருப்பேன்

உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க‌
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள்
கிசுகிசுத்துக்கொண்டன‌.

போய் பார்க்கதான் நேரம் ஒழியவில்லை.

***

(மிரட்டல் பாஸ்! fantastic!)

***

7. தீபா

தளும்பித் தளும்பி
வழிந்த பாத்திரம் அது...
மூட முடியாமல்,
தீரவே தீராதோ எனும்படியாக.

என்றோ ஒரு நாள்
தடாலென்று கவிழ்ந்தது...

மிச்சம் மீதி இருந்ததும்
இன்னொரு பொழுதில் காய்ந்து போனது

வாசமாவது மிஞ்சட்டும்
என்று மூடி மூடி வைக்கிறேன்

***

(format சற்று மாற்றினேன் தீபா, மன்னியுங்கள். அருமையான கவிதை!)

***

அற்புதமான பெண் பதிவர்கள் நிரம்பிய உலகு இது. தேடுங்க மக்களே...

***


சரி, இன்னும் ஒரு எழுவர் பாக்கி. கூடவே விடை பெறலும்.

தூக்கத்தில் இருக்கும் போது, சீனா சார் கட்டை விரலை பத்திரத்தில் உருட்டி இவ்வீட்டை எழுதி வாங்கிரலாம்ன்னுதான் வருது. அவ்வளவு காற்றோட்டம், கிளி சத்தம், திறந்த ஜன்னலில் கசியும் பிச்சிப்பூ வாசனை.

ஆனாலும், அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா fool என எம்.ஜி. ஆர். சொல்லி தந்திருப்பதால், வரும் கருணாநிதிக்கோ/ ஜெ-விற்கோ விட்டுத்தந்திரலாம்.

***

நாளை சந்திக்கலாம் மக்களே..

***
மேலும் வாசிக்க...

வலைச்சரம் - ஐந்தாம் நாள் - வெள்ளி

நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா

போதும்! நாலு நாள் நான் பேசியாச்சு. இனி, நண்பர்கள் பேசட்டும். உம் கொட்டுறது என்னோட பொறுப்பு. சரியா?

1.நேசமித்திரன்

பின்ன உடலின் ஸ்கலிதங்கள்

நிலவில் ஹைட்ரசில் திரளும் கிரகண
மகாயாண இறுதியில்
திரிந்த விந்து மிடோசிஸ் பின்னி வளர்ந்து
பெஞ்சமினின் அளவுகோலுக்குள்
பொருந்தக் கண்டது உடல்

பியானோ கடல் மீட்டும்
இலக்கம் வளரும் மழை கருவிரல்
எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்
பாறைகளின் கிராபைட் நுனி ஒளிர
புலால் உண்ணும் தாவரம்
வசியம் முகிழ்த்து

உதிரத்துரு வாசம் வீசும் டிராகன் நாக்கு
வெப்புடனுப்புமிழ் காய சண்டிகை

குறுக்கு வெட்டாத கோளங்கள்
மடங்குகளாக தலை கீழ் விகிதங்கள்

குவாண்டம்
பெல்லிடம் தோற்ற
காந்தம் திருப்பிய அணுத்துகள்
தானறிகிறது திசை

யுரேனிய விரைப்பைகள் நீலம் பாரிக்க சுமக்கும்
கோமாளி மீனுக்கு பெண்ணுறுப்பு வால்புறம்

பின்ன உடலின் ஸ்கலிதங்கள்
துடிப்பிசை மாறும் கரு மற்றும்
அதைத்தாங்கும் உடல்

***

(நீ திறப்பு தந்துதான் இதற்குள் நுழைய முடிந்தது நேசா. திறந்த பிறகு வலி நிறைந்த அசைவு!)

***

2. அய்யனார்

கண்டறிதல்

இரண்டு பியர்களுக்கு மேல் குடித்துவிட்டால்
பழைய காதலிகளுக்குத் தொலைபேசி
இன்னும் அவள் நினைப்பிலேயே இருப்பதாய்
சத்தியம் செய்யலாம்..
உடன் வந்தவனை
ஐ லவ் யூ மச்சி
என குழறலாய் நேசத்தை சொல்லலாம்

என்ன செய்வது?
குடித்த பின்பெழும் நேசங்களை மட்டும்
சொல்லாமலிருக்க முடியவில்லை...

***

(ஐ லவ் யூ மச்சி, அய்ஸ்!) :-)

***

3. யாத்ரா

எதுவுமே நிகழவில்லை இன்று

புன்னகை ஒட்டிய முகங்கள்
நெகிழ வைத்த மேலாளர் நண்பர்கள்
காத்திருக்க வைக்காமல்
வந்துவிட்ட இவள்
காலியாயிருந்த பேருந்து
ஆழ்ந்து யோசிக்கிறேன்
ஒரு அவமானம்
ஓரேயொரு ஏமாற்றம்
வன்சொல்
எதிர்ப்பட்ட லாரிக்காரனும்
சாவுகிராக்கியெனவில்லை
இது ஒரு நாளா
மன்னிக்கவும்
இன்றைக்கு
கவிதையேதுமில்லை
உங்களை வெறுமனேயனுப்புவதில்
துயரம் மெல்ல கவிகிறது.

***

(சந்தோசமா இருங்க யாத்ரா! வெறுங்கையோடு ஒன்னும் திரும்பல)

***

4. மண்குதிரை

ஒரு கவிதை

என்னால் எதுவும் இயலாது
என்று அவர்கள் கூறுவதனால்தான்

கைமாறிப்போன சொந்த நிலத்தை
மீட்க முடியதனால்தான்

இரண்டுவருடமாக அடைகாத்த காதல்
ஒரு நொடியில் உடைந்து போனதால்தான்

எல்லா இடங்களிலும் தொடர்ந்து
நிராகரிக்கப்பட்டு கொண்டேயிருப்பதனால்தான்

நானும்
இந்தக் கவிதையை எழுதுகிறேன்.

***

(அதனால்தான் நானும் வந்து வாசிச்சேன் மண்குதிரை)

***

5. ஜ்யோவ்ராம் சுந்தர்

வயதான வண்டியிது
மிக மோசமான முறையில்
கழுத்தறுக்கும்
அடைய வேண்டிய இலக்கு
தொலைவில் இருக்க
இருக்கும் நேரமோ மிகச் சொற்பம்
மெதுவாகத்தான் செலுத்த இயலும்
இந்த வண்டியை
பாதியில் நின்றுவிடும்
என்னுடன் சண்டை போடும்
தூக்கியெறியும்
இது குடிக்கும் பெட்ரோலுக்கென
என் வியர்வையில் பாதியை அழுதிருக்கிறேன்
சோனியாக இருக்கும் இவ்வண்டி
துருப்பிடிக்கவும் ஆரம்பித்தாகிவிட்டது
என்றாலும்
எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது
இன்னொன்று
இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி

***

( குர்குரே மாதிரி கோணலா இருந்தாலும், உன்னுடையதாக்கும்?..கலக்குற சுந்த்ரு!) :-)


***

6. அனுஜன்யா

அழைப்பு மணி

அழைப்பு மணி ஓசை
பால் வந்து விட்டது
பேப்பர் போடப்படுகிறது
பணிப்பெண் வந்தாயிற்று
அடுத்தத் தெரு கலா
கியாஸ் சிலிண்டர்
அலுவலகத்திலிருந்து கணவன்
என்றெல்லாம் துல்லியமாகக்
கண்டுபிடித்து விடுவாள்.
அழுத்தும் விதம்,
அழுத்தப்பட்ட நேரம்
உள்வாங்கிய மனக்கணக்கில்;
மற்றவர்க்கெல்லாம்
மாயக்கண்ணாடியில் பார்த்தல்;
சிலருக்குச்
சங்கிலியைக் கோர்த்தல்
போன்ற சடங்குகளும்;
அவனும் கலா போலவே
மணி அழுத்துவான் என்று
கசிந்த உதிரத்தினூடே
நினைவு பிரிகையில்
அவளுக்குப் புரிந்தது.

***

(கொல்றீங்களே பாஸ்!..) :-)

***
7. நந்தா

மழை கேட்டல்

வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheetகளை
அவசரமாக வாசித்துக் கொண்டே போனது
அவ்வப்போது கேட்ட அசரீரிகளை
துக்க செய்தி கேட்டது போல பயந்தார்கள்
மண்ணில் வெடித்தது
தூள் தூளாய் சரிந்தது
கிணற்றில் குதித்தது
நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளி வடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசி தீக்குச்சியைப் பற்ற வைக்கும்
கவனத்தோடு.

(ரொம்ப பிடிச்ச கவிதை இது நந்தா! இப்பதான் ரொம்ப உயரமா போய்ட்டீங்க நந்தா. எட்டி தொட முடியல.)

***

நாளை இன்னும் ஏழு பேர் பார்க்கலாம் மக்கள்ஸ். கவிதைக்கென மிக சிறப்பான தளங்கள் இருக்கிறது. இனி வரும் இரண்டு நாட்களுக்குள் அவ்வளவையும் இங்கு சேர்க்க இயலாது. சாத்தியமும் இல்லை. போக, விரும்பியதை தானே தேடி அடைவதில் ஒரு சுகம் இருக்கிறது. அந்த உங்களின் சுகத்தை/ சுதந்திரத்தை நான் திருடலாகாது..

நாளை பேசுவோம்...

***
மேலும் வாசிக்க...

Wednesday, June 30, 2010

வலைச்சரம் - நான்காம் நாள் - வியாழன்

மதனும் ஆட்காட்டி விரலும்

மதன்,

நாங்க அஞ்சுபேர் மதன். நான் நடுவில். ரெண்டு அக்காக்கள், ரெண்டு தங்கைகள். ("போச்சுடா.. ஆரம்பிச்சிட்டார்யா, வெண்ரு" வென.. மணிஜி, d.r. அசோக் மாதிரி ஆட்கள் செறுமிக் காட்டுவார்கள்...காதில் வாங்க வேணாம். சரியா?) நாங்க அஞ்சு பேரும் கையில் உள்ள விரல்கள் போல என எடுங்களேன்.

நான் நடு விரல். கட்டையும், ஆட்காட்டியும் அக்காக்கள். மோதிரமும், சுண்டும் தங்கைகள். அதாவது மற்றவர்களை விட நான் உசரம். இப்படித்தான் ரொம்ப நாளாக நினைச்சுக்கிட்டு இருந்தேன். இதற்கு ஆப்பு வைத்தாள் புனிதாக்கா. ரெண்டாவது அக்கா (ஆட்காட்டி).

இருவருக்கும் நடந்த சண்டையில் நான் சிலேட்டை வச்சு மண்டையில் போட்டுட்டேன். ரத்தம் வரும் என்றெல்லாம் அப்போ தெரியாது மதன். காப்பித்தூள், சீனி என என்னென்னவோ அணை போட்டு பார்த்தாள் அம்மா. ஜம்பம் பலிக்கலை. தையல் போட வேண்டியதாகிப் போனது.

அப்பா வந்ததும் 'முள் கிரீடம்' தரித்த இயேசுவை பார்த்து விட்டார். " சேந்தியில் இருந்த வாளியை இழுத்திருக்கா, மண்டையில் விழுந்திருச்சு" என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அக்கா (ஆட்காட்டி) கட்டுச்சோற்றை அவிழ்த்து விட்டாள். சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்த அப்பா, நிதானத்திற்கு வந்தார்.

"வாடா" வென கை பிடித்து அழைத்துப் போனார். நடு ஹாலில் அமரச்செய்தார்(சம்மணம் கூட்டி). சகோதரிகளையும் அழைத்தார். "கையை கட்ரா" என்றார். நானும் விவேகானந்தர் சைசுக்கு கட்டி வைத்தேன். ஒரு சாதனத்தை எடுத்து அக்காவிடம் கொடுத்தார். (சாதனமா?.. தென்ன ஓலையின் நடுவுல குச்சி இருக்கும்ல பாசு... எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து கட்டி வச்சுருப்பாங்களே...அட, வீடு கூட கூட்டுவாங்களே...(ஹி..ஹி..இப்பவும் பெயர் சொல்ல கூச்சம்தான் மதன்)

"நச்சுன்னு நடு மண்டையில் போடு" என்றார்.

அக்கா அழத் தொடங்கிவிட்டாள். மற்ற சகோதரிகளும்! ஏன்...அம்மாவும் கூட! "நீ போடலைன்னா நான் போடுவேன்" என்றார். அக்கா பொத்தினாப்பில் போட்டாள். "இதுவா நச்சு?" என்றவர், "சத்தம் எனக்கு கேட்கணும்" என்றார். ஏழெட்டு அடி அக்கா அடித்துப் பார்த்தாள். அப்பாவிற்கு திருப்தியாகல போல. சாதனத்தை வாங்கிய அப்பா, போட்டார் ஒரு போடு.

சித்தம் கலங்கிப்போனது.

"நாலு புள்ளைகளும் எனக்கு எப்படியோ, அப்படித்தான் நீயும்" என்றார். அன்று தொட்டு இன்று வரையில் விரல்களையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் மதன். எந்த விரல் நான் என? (சித்தம் கலங்கியதால் கூட இருக்கலாம்).

அப்படி, ரியாத்திற்கு பயணமான ஒரு நாளில், காரில்... சும்மா அசால்ட்டா, உங்க 'உறங்கி விழித்த வார்த்தைகளை' கையில் எடுத்தேன். பயணத்தில் இருப்பது, கூட வந்த பிலிப்பினோ நண்பர்கள், முன்பு பார்த்த ரோடு, பாலை, ஒட்டகங்கள், பெட்ரோல் பல்க், இப்படி எல்லாமே out of focus ஆக தொடங்கியது.
அக்காவும், அப்பாவும் அடித்தது போல் அடித்துக் கொண்டே வந்தீர்கள். அதே சாதனம். அதே அடி.

ஒரு கவிதையில் இருந்து மற்றொரு கவிதைக்கு தாவ இயலவில்லை. மூணரை அல்லது நாலுமணி நேரம் ஆகும் கோபாரில் இருந்து ரியாத்திற்கு. தொகுப்பும், அதிர்வும் முடிஞ்ச பாடில்லை. ரியாத்தில் இறங்கியதும், அழை பேசியில் உங்கள் குரல் கேட்டதும் தான் ( அந்த நேரத்தில் அவ்வளவு தேவையாக இருந்தது உங்கள் குரல்) உதறல் சமனுக்கு வந்தது. முதல் தொகுப்பாயா இது உமக்கு?

hats off madhan!

***

சரி, இனி தொகுப்பிற்கு வரலாம்.

"அன்றாடங்கள் பரிசளிக்கும் கோபம், பரிதாபம், இயலாமை, ஆற்றாமை, இன்ன பிற போன்றவைகளக் கொட்டி வைக்க கவிதைகளை விட தோதான இடம், பாதுகாப்பான இடம் வேறேதும் இருக்க முடியுமா?" என்கிற உங்கள் 'என்னுரை' கேள்வி ரொம்ப பிடிச்சிருந்தது.

"மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் செல்லும் பாங்குடன் சில கவிதைகளும், அன்றாட சுக துக்கங்களின் பிதுங்கலோடு வெளிப்படும் சில கவிதைகளும், இந்த தொகுப்பில் என்னை கவர்கின்றன." என்றும், இன்னும் அழுத்தமாகவும், ஊடுருவும் திறனோடும் கவிதைகளை அணுகி இருந்த வா. மணிகண்டனின் முன்னுரை பார்த்து ஒரு மாதிரியான கிடு, கிடு எனக்கு.

இனி, இவரின் மூன்று கவிதைகள் ("என்னடா இவருக்கு மட்டும் மூணு?" என்று கேட்கலாம் லா & வி! போகட்டும்...கடைக்குட்டி! means, கடைசி புத்தகப் பார்வை...)

***

குறிப் பிறழ்வும் குப்புற படுத்தலும்

அவசரமாய் பகுடர் அப்பி
உதட்டில் இழுக்கியிருக்கும்
அடர் சிவப்பு கன்றாவி தொட்டெடுத்து
நெடுஞ்சாலை முற்சந்தின் மங்கல் இருட்டில்
தொழிலுக்கு முதல் போடுகிறார்கள்
ஒரு ஆறேழு திருநங்கைகள்.

பிறழ்ந்த குறியால்
நிகழ்ந்த குற்றத்தை
கழுவ வழியில்லாக்
கேடு அவர்களுக்கு.

சமூகம் செத்தால் சாகட்டும்.

பெற்றவர்களும் புறந்தள்ளிய வலி
குப்புற படுத்தெந்திருப்பதை விட
அதிகமில்லை.

***

இன்று காலை காற்றடித்ததே பார்த்தீர்களா ?


வெயிலில்லாத இன்று காலையில்
நான் காற்றடித்ததை பார்த்தேன்.

ஓடி வந்து கட்டிக் கொண்ட
குழந்தையை ஒத்து
மெதுவாய் துவங்கி
ஆவர்த்தன வேகமெடுத்து
ஆச்சரியம் சுரந்தூரியது எனக்குள்

உங்களுக்கு தெரியாது...

எத்தனை ஆண்டுகளுக்குப் பின்
இன்று காற்றடித்தது என்று
அதுவும் அத்தனை இதமாக
அத்தனை மிருதுவாக
சுற்றியிருத்த செடி கொடி மரங்களின்
காற்றுக்கு ஆடும் தன்மை
எனக்கு நினைவுக்கு வந்துவிட்டது.

அவைகளும் சந்தொஷித்தன
காற்றைக் கண்டு
எப்படி வளர்ந்து விட்டது
தெரியுமா அது
இத்துனூண்டில் பார்த்தது

அப்படியே பாவாடையைப்
பரப்பிக் கொண்டு வந்து
இருப்பது இல்லாதது
என்று எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டு போனது.

காற்றை நோக்கிய
இன்று காலைய புன்னைகதான்
என்னுடைய மிக அழகானதாக
இருக்கக் கூடும்.

அதுசரி...
நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் காற்றை பார்த்தீர்களா?

***

பாடம்

சொட்டிச் சொட்டி
வீணாகாமல் இருக்க
நீர்க் குழாயின் கைப்பிடியை
இறுக்கி இறுக்கி
மூடி வைத்ததிலோ என்னவோ
திடீரென ஓர் நாள்
மரை தளர்ந்து விட்டது.

குழாயை மூடுகையில்தான் புரிகிறது
எந்தப் புள்ளியில்
இறுக்குதல் நிறுத்தப்பட்டிருந்தால்
நீரும் ஒழுகாது
மரையும் மழுங்காது
என்பது.

***

ஆயிற்று. இன்னும் கைவசம் காந்தியின் கூர்தலறம் பாக்கி. இன்னும் வாசிக்கலை என்பதால் பகிர இயலாது. வாசித்ததும் பகிரலாம்.

"நம்மாளுங்களும் அச்சில் பார்க்கட்டும் அவர்கள் எழுத்தை" என நினைத்த, முனைந்த, நண்பர்/பதிவர்/பதிப்பகர் வாசு (எ) அகநாழிகை பொன். வாசுதேவன் அவர்களுக்கு மிகுந்த நன்றியும் அன்பும் மக்கா!

பதிவ நண்பர்களான நர்சிம், கேபிள்ஜி, பரிசல் தொகுப்புகள் நண்பர் சரவணனிடம் இருக்கிறது. அவர் வாசித்து, கைவசம் வந்ததும் பகிர விருப்பம். பார்க்கலாம். எல்லாம் கூடி வரட்டும்.

சரி மக்கா, நாளை பார்க்கலாம்...

***
மேலும் வாசிக்க...

Tuesday, June 29, 2010

வலைச்சரம் - மூன்றாம் நாள் - புதன்

வினாயகமுருகனும் அழகர்சாமி தாத்தாவும்

கோவில் மிருகம்! (என்னா தலைப்பு பாஸ்!)

அழகர்சாமி தாத்தா பெரிய இக்கு பிடிச்ச மனுஷன் என்று அப்பாதான் அடிக்கடி சொல்வார். அப்பாவிற்கு ஒரு வேலை சொல்லியிருக்கிறார் தாத்தா. செய்ய தவறி இருக்கிறார் அப்பா. ஏன் என்று கேட்டதற்கு அப்பா சிரித்துக் கொண்டே ஏதோ மழுப்பி இருக்கிறார். அப்பதான் அப்பாவிற்கு இந்த கதையை சொன்னாராம் தாத்தா.

ஒரு அன்றாடங்காய்ச்சி. தனியன். அன்று வயித்துப் பாடு ஓடி அடையவில்லை, இரவு வரையில். மண்பானை நீரை மொண்டு குடிச்சு, வயிறு நிறைப்பி படுத்துவிட்டான். குடிசை வீடு. அங்கும் இங்குமாக கூரை விலகியதில் நிலவொளி வீட்டிற்குள் சிந்திக் கிடக்கிறது. கண்ணயரும் நேரத்தில் கூரையில் ஏதோ சத்தம். விழித்துப் பார்க்கிறான். கயிறு போட்டு திருடன் ஒருவன் இறங்கிக் கொண்டிருக்கிறான்.

தனியனுக்கு மனசிற்குள் கெக்கலிப்பு. "தாய்லி, நம்ம வீட்லயும் திருட ஒருத்தன் வர்றானேயா?" என்பதாக. "வாடி, வா.." என்று இருட்டுக்குள் படுத்திருந்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறான். இறங்கிய திருடன் அங்குமிங்குமாக தேடியதில் ஒன்றும் சிக்கவில்லை. கடைசியாக அடுக்கு பானையை உருட்டுகிறான். கைப்பிடி கேப்பை(கேழ்வரகு) அதில் இருக்கிறது. கொண்டு போக எதுனா கிடைக்குமா என தேடுகிறான். சிந்திக் கிடக்கிற நிலவொளியை, துணி என நினைத்து அதில் கொட்டுகிறான். துணியை முடிஞ்சு முடிஞ்சு பார்த்துக் கொண்டிருந்த திருடனை பார்த்ததும் சிரிப்பு அடக்க முடியவில்லை தனியனுக்கு. வாய் விட்டு சிரித்து விடுகிறான்.

ஸ்தம்பித்த திருடன், இருட்டில் கிடந்த தனியனை பார்த்து சொன்னானாம்," வீடு வச்சுருக்கிற லெச்சனத்துக்கு சிச்சுக்கிறீர்களோ?"

இந்த அழகர்சாமி தாத்தாவின் தொணியை , அப்படியே விநாயகத்தின் கவிதைகளில் பார்கிறேன். எள்ளல், நையாண்டி, நமுட்டு சிரிப்பு, ஊம குசும்பு, இப்படி எல்லாவற்றையும் எட்டு பத்து வரிகளுக்குள் நிகழ்த்தி விடுகிறார். உண்மையில் வாசிக்கிற எனக்கு அவ்வளவு வலி ஏற்படுத்துகிறது. அவ்வலியில் இருந்து விடுபடவென விரக்தியாக சிரிக்கிறேன். பாருங்களேன், வலி ஒரு வகையான அனுபவம் எனில், எதிர் வினையாக எப்படி என்னால் சிரிக்க முடிகிறது? இந்த முரண்தான் நூலாசிரியரின் வெற்றியாகிறது.

மனித நேயமிக்க கோவில் மிருகம் என்று தொடங்குகிற கவிஞர் நிலா ரசிகன், என். விநாயக முருகனின் கோவில் மிருகம் நம் கண்முன்னே நடக்கும் அவலங்களை, நாம் மறந்து விட்ட மனித நேயத்தை எள்ளல் கலந்த கவித்துவத்துடன் விவரித்து செல்கிறது. எள்ளல் தன்மையுடன் எழுதப் பெற்றாலும் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும் சுழலும் வலி வாசகனையும் முழுவதுமாக ஆட்கொள்ளுகிறது" என்று முன் வைக்கிறார்.

"கவிதைக்கான பாடு பொருளுக்கு நான் அதிகம் சிரமப் படவில்லை. பெரு நகரில் அலையும் முகம் தொலைத்த மனிதர்கள், மின்சார ரயிலில் பிச்சை எடுக்கும் சிறுமி, தொலைகாட்சி அபத்தங்கள், முடிவற்று நீளும் இரவு நேர பெரு நகர சாலைகள் என்று அன்றாடம் கவனிக்கும் எளிய அவதானிப்புகளை பாசாங்கு இல்லாமல் கவிதைக்குள் இழுத்துக் கொண்டேன்." என்று முன்னுரையில் பேசுகிறார் நூலாசிரியர்.

இந்த பாசாங்கு இல்லாமல் என்கிற வார்த்தையை மனசில் இருந்து எடுத்திருக்கவேணும். மனசில் இருந்து எடுக்கிற எதுவும் எளிதாக மனசுகளுக்கு கடத்த முடியும். இல்லையா?

இது நூற்றுக்கு நூறு நிகழ்ந்திருக்கிறது விநாயகம்!

இனி, இவரின் இரண்டு கவிதைகள்,

***

பூங்குழலி


மின்சார ரயிலில்
பார்வையற்ற சிறுமியொருத்தி
பாட்டுப் பாடியபடியே
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்

பூ முடித்தால் இந்தப் பூங்குழலி
புதுச் சீர் அடைந்தாள் வண்ணத்
தேனருவியென்று தொடங்கினாள்
தேனருவியின் வேகம் குறைந்தது
அம்மம்மா தம்பி என்று நம்பி
அடுத்த பாடல் பைசா பெறவில்லை
பூங்குழலி அசரவில்லை
மூன்றாவது பாடல் பாடினால்
தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா
ஜன்னல் பக்கம் சிலர்
திருப்பிக்கொண்டார்கள் முகத்தை.

பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக
நீரோடும் வகையிலே நின்றாடும் மீனே
வரிசையாக பாடினால்.

திடீரென நிறுத்தினாள்
இரண்டு நிமிடம் கனத்த மௌனம்
பாட்டு தீர்ந்துவிட்டதா
பதறிப்போனது எனக்கு.

சற்று நேரம் தயக்கம் அவளிடம்
என்ன நினைத்தாளோ
பூங்குழலி உற்சாகமாய் பாடினாள்
பூ முடித்தால் இந்தப் பூங்குழலி
புதுச்சீர் அடைந்தாள் வண்ணத் தேனருவியென்று
மீண்டும் ஆரம்பித்தாள்
நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை.

***

குடைக்காம்பு


அப்பாவின் மரணத்திற்குப்பின்
புது வீடு மாறி வந்ததில்
இடப் பிரச்சினை நிறையவே.

தேவையற்ற தட்டுமுட்டு சாமான்கள்
கந்தல் துணிகள்
பழைய வாரப்பத்திரிக்கைகள்
யார் யாரோ அனுப்பிய
திருமண அழைப்பிதழ்கள்
துருவேறிய டிரங்க் பெட்டியொன்று

கூடவே முன்பொருநாள்
அம்மாவை அடிக்க
அப்பா பயன்படுத்திய
குடைக்காம்பு

எல்லாம் எடை போட்டு
சில்லரை வாங்கியதில்
குடைக்காம்பு மட்டும்
செல்லாதென்று திருப்பி தந்தான்
பழைய பேப்பர்க் காரன்

அம்மாவும் ஏனோ
அன்றைக்கும் தடுக்கவில்லை.

(உண்மையில், இந்த கவிதை வாசித்ததும் அழுதேன் விநாயகம்)

***

இத்தொகுப்பிற்கான சிறப்பான பார்வையை "இங்கு" பதிந்திருக்கிறார், கவிஞர் நாவிஷ் செந்தில்குமார்.

சரி மக்கா, நாளை பார்க்கலாம்...

***
மேலும் வாசிக்க...

Monday, June 28, 2010

வலைச்சரம் - இரண்டாம் நாள் - செவ்வாய்

நீர்க்கோல வாழ்வை நச்சி-ஒரு அனுபவம்

நினைத்தது போல் ஒரு கவிதையை எழுதி முடிக்கிற சந்தோசத்தை விட, ஒரு கவிதையின் வாசிப்பில் நினைத்து பார்க்க முடியாத சந்தோசம் கிடைக்கிறது. அந்த சந்தோசத்தை, அனுபவத்தை அப்படியே பகிர முடிஞ்சதில்லை. சரி, நீங்களே சொல்லுங்களேன்..எப்படி பகிரலாம் சந்தோசத்தை? சட்டென ஒரு தேக்க நிலை, தலை சொறிவு நேர்கிறதா? இதே பிரச்சினைதான் எனக்கும்.

கவிதையில் என்னால் இதுவரை குறை கண்டு பிடிக்க முடிந்ததில்லை. அதாவது குறை என்று சொல்ல தெரிந்ததில்லை. "ஆம்புள்ள அத்தான் ஆவர்களுக்கு" என்று வருகிற லதாவின் கடிதத்தை, அன்புள்ள அத்தான் அவர்களுக்கு என்று ஆட்டோ மேட்டிக்காக கன்வர்ட் செய்து கொள்ள முடிகிறது. மனசு கொண்டு பார்த்தால் அ-னா, ஆவன்னா ஆகிறது. ஆவன்னா அ-னா ஆகிறது. இதை நீங்கள் என் பலம் என்றால், அதை நான் என் பலஹீனம் என்கிறேன். இதை நீங்கள் என் பலஹீனம் என்றால் வேண்டும் என்றே கூட அதுவே என் பலம் என்பேன்.

இப்ப நீங்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். இவனால், கவிதைகளுக்கு விமர்சனம் பண்ண முடியாது / தெரியாது என. இதுவே எனக்கும் வேணும். இந்த என் குறை அல்லது நிறை ரொம்ப சந்தோசமானது எப்ப தெரியுமா?

நேசன் தளத்தில், அண்ணன்/கவிஞர் ராஜசுந்தரராஜன் இப்படி உடைக்கிறார், "ஒரு கவிஞன் ஒரு நாளும் விமர்சகன் ஆக முடியாது. ஆகி விட்டால் அவனுக்கு கவிதையை பற்றி ஒரு இழவும் தெரியாது என்பதே சத்தியம். ஆனதினால், அதில் வரும் வார்த்தைகளை கொண்டல்லால் விளக்குவதற்கு வேறு வழி ஒன்னும் இல்லை" என்றதை வாசித்த போது, "என்னைப் பெத்தாரு" என்று அண்ணனை மானசீகமாக இரு கன்னம் வழித்து சொட சொட வென சொடக்கிக் கொண்டேன்.

அண்ணனை சொடக்கிக் கொண்டது போலவே, 'நீர்க்கோல வாழ்வை நச்சி' வாசித்து நிறையும் போது தங்கை லாவண்யாவின் கன்னங்களையும் அதே மானசீகமாக வழித்து சொடிக்கிக் கொண்டேன்.

அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் தனித்தனி சொடுக்கா இருக்கு?

இவ்வளவுதான் இத்தொகுப்பு குறித்த என் பார்வை, விமர்சனம், அனுபவம்.

ஆதர்சர்களில் ஒருவரான கலாப்ரியா,"அன்பு, ப்ரியம், சிநேகம், ஆகியவற்றுடன், அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியிருக்கிறது லாவண்யாவின் இந்த தொகுப்பு. அதனால்தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது" என்று தொடங்கி தருகிறார்.

"எழுதுவதற்கான சூழலை வாய்க்க செய்து, மறு அன்னையாய் என்னை கவனித்துக் கொள்ளும் கணவர் மனோகரன், அன்பான அம்மா மனோன்மணி, பாசத்திற்குரிய வனிதா அக்கா, எனது பிரியங்களை உணர்த்த முடியாமல் போய்விட்ட அப்பா சுந்தரராஜன், என் நினைவில் வாழும் சித்ரா அக்கா, ஆகியோருக்கு துளி கண்ணீருடன் கலந்த அன்பு" என்று நூலாசிரியரும் கசியும் போது (purpose-ஆகவே இங்கு தங்கையை விலக்குகிறேன்) பின்வரும் கவிதைகளின் அடர்த்தி தொடங்க தொடங்குகிறது.

இனி, இவரின் இரண்டு கவிதைகள்...

***

என்னிடமிருந்து
நீ பறித்தெறிந்த வெட்கத்தை
திரைச்சீலை சூடிக்கொண்டது

விரலில் தொடங்கி விரல்வரை
முடித்திருந்த முத்தங்கள்
உயிரோடு முடிந்திருந்தது.

பாதியில் நீ முணுமுணுத்த
பாடலொன்று மீண்டும் மீண்டும்
எனக்கானதாகிப் போனது.
மிகப் பிடித்த மலரொன்றின் மணம் போல
உன் பாரம் என் மனதை
கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.

உன் மூச்சை உள் வாங்கி
ஒரு மோன நிலையில்
நான் இறந்திருந்தேன்.

மறுபடி நான் கண் விழ்த்தபோது
உன் பெயரை மட்டும்
உச்சரித்துக் கொண்டிருந்ததாகவும்
விழியில் வழிந்திருந்த துளி நீரை
நீயே துடைத்து விட்டதாகவும்
"ஏன் அழுதாய் என்றாய்?"

திரைச்சீலையிடமிருந்து வெட்கத்தை
மீண்டும் அள்ளியெடுத்துக் கொண்டு
"அழுதேனா என்ன?" என்றேன் சிரித்தபடி.

***

எதிர்பாராத நேரத்தில்
விசிலடிக்கும் குக்கருக்கும்

எதிர் பார்த்தே ஆனாலும்
கண் அயரும் ஒரு கணத்தில்
கூவும் இரயிலுக்கும்

குளியல் அறையில்
திடுமெனக் குதித்து
அகால ஒலியெழுப்பும்
குழாய் நீர்களுக்கும்

பண்டிகை தினத்தில்
எதிர்பாராத தருணங்களில்
வெடிக்கும் பேரொலிக்கும்

தினம் தினம் பயணித்தும்
வாகன முந்துதலில்
திடீரென நிறுத்தப்படும்
வாகன அதிர்வுகளுக்கும்

எத்தனை முறை பயந்தாலும்
பயம் மட்டும் பழுகுவதில்லை.

***

இக்கவிதை நூல் குறித்தான மிக சிறப்பான விமர்சனத்தை நந்தினி, லாவண்யாவின் தளத்தில் வைத்திருக்கிறார்கள். அதை வாசித்த போது எனையறியாது பொங்கி, பொங்கி வந்தது...அது, இங்கு.

இதே போல், நண்பர் நிலாரசிகனின், இத்தொகுப்பிற்கான நேர்மையான விமர்சனம் இது.

சரி மக்கா, நாளை பார்க்கலாம்...

***
மேலும் வாசிக்க...

Sunday, June 27, 2010

வலைச்சரம் - முதல் நாள் - திங்கள்

வணக்கம் சீனா சார்!

நல்லாருக்கீங்களா?

ஒரு வாரத்திற்கு, நண்பர்களுடன் நண்பர்களாக அமர்ந்து கொண்டு பேசுவதற்கு இவ்வளவு பெரிய வீட்டை ஒதுக்கி தந்ததற்கு ரொம்ப நன்றி சார்!
"முதல் நாள் உங்களைப் பற்றியும், உங்கள் தளம்/இடுகை பற்றியும் பேசிக் கொள்ளலாம்" என சொன்னீர்கள்தான். 'இங்கு' ஒரு பட்டனை அமுக்கினா அங்கு போய் விழுந்திரலாம். அப்புறம் எதுக்கு சார் அங்குள்ளதை இங்கு பேச?
பத்திரிக்கை வச்சதும் ரொம்ப சந்தோசமாய் இருதது சார். போலவே, சற்று குழப்பமும். சந்தோசம் - "அட நம்மையும் சீனா சார் கூப்பிடுறாரே" என்பது. குழப்பம் - "யாரைப் பேச, யாரை விட?"

மாப்ள மதார் சிக்கந்தர் குடும்பம் மாதிரி ஆகிப் போச்சு சார், நம்ம குடும்பமும். மதார் சிக்கந்தருக்கு கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் பத்து பேர். இவனையும் சேர்த்து பதினொன்னு. "மாப்ள, ஒரு கிரிக்கெட் டீமே வீட்ல இருக்கீகளேடா" என்போம். திருமணத்திற்கு அழைப்பு வைக்கிற எல்லா நண்பர்களும் அனேகமாக சொல்வதுண்டு, "மாப்ள பத்திரிக்கை உனக்கு மட்டும்தான், குடும்பத்திற்கு இல்லை. மறு உலை வைக்க வச்சுராத மாப்ள" என்று. மாப்பிள்ளை சிரிப்பான். மாப்பிள்ளைகள் பேசி, மாப்பிள்ளைக்கு ஒரு போதும் வலிச்சதில்லை. அப்படி வலிச்சா அவன் மாப்பிள்ளையா?

போலவே, அப்பா, சித்தப்பா, சித்தப்சு, மாமா, மாம்சு, அண்ணா, அண்ணே, பங்காளி, பங்கு, என்ற குய்யோ முறையோ குடும்பஸ்தன் சார் நான். ஒரு குரல் விட்டால், குரல் குரல் குரல்... என எக்கோ வரும் குடும்பஸ்தன்.

ஒண்ணு செய்யலாம் சார்,

படிக்கிற காலத்தில், தலையணையை நெட்டு வாக்கில் உடம்பு சைசில் வச்சு, பொத்தினாப்ல போர்த்தி, சுவர் ஏறிக் குதிச்சு, செகன்ட் சோ பார்க்கப் போறது போல வாரேன். குடும்பத்திற்கு தெரியாமால் பார்த்துக்கிறது உங்க பொறுப்பு.

தீர்மானத்திற்கு வந்துரலாம் சார்!

இந்த ஒரு வாரம் நான் இதைத்தான் செய்யப் போறேன். நண்பர் சரவணன் ஊரில் இருந்து வரும் போது, மணிஜீ வாங்கித் தந்த முறுக்கு சீடைகளுடன், நம் பதிவ நண்பர்களின் முதல் குழந்தைகளை கூட்டி வந்தார். முதல் மூன்று நாள் அக்குழந்தைகளை கையில் எடுக்கிறேன். பிறகு நாலு நாள். தினம் ஏழு பேர் என இருபத்தி ஒருவர் பற்றி பேசலாம் என்பதாக அபிப்ராயம்.

இவ்வளவும் குடும்பத்திற்கு தெரிய வேணாம் சார். குய்யோ முறையோ என்ற என் குடும்பத்திற்கு. மதார் மாப்பிள்ளைக்கு சொல்றதுதான் சார் உங்களுக்கும்.

மறு உலை வைக்க வச்சுறாதீங்க சீனா சார்.

மீண்டும் நன்றி சார்!


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது