07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label இமா க்றிஸ். Show all posts
Showing posts with label இமா க்றிஸ். Show all posts

Sunday, June 15, 2014

விடைபெறுமுன்...

இது என் இறுதி ஆசிரியர் தினம் இங்கு.
எல்லோரும் நலமோடிருத்தல் அன்றி வேறொன்றும் வேண்டாத... விஸ்வநாத் கிறுக்கல்களிலிருந்து... என் எதிரில் ஒரு சிங்கம்,  உறங்க விடு என்கிறது. 'ஆசிரியர் தினம்', சிரிக்க மட்டும். மீதி இரண்டும் கவிதைகள்.
~~~~~~~~~~
மலேஷிய மண்ணிலிருந்து எழுதும் பச்சைபாலன் அவர்களது சுயவிபரம் கண்ணிற் படவில்லை. ஆசிரியராக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு தடவையும் தாய்நாடு சென்று நான் வாழ்ந்த வீட்டைக் கடக்கும் போது... மெல்லிதாய்... ம்ஹும்! பலமாய் ஒரு வலி தாக்கும் உள்ளே. வீடு திரும்புதல் அந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. கட்டாயம் படித்துப் பாருங்கள். இது... வேறு ஒரு உலகம்.
 
//புதிய மன்னருக்குத் தமிழ் உச்சரிப்பு தகராறு பண்ணியது. மூன்று நாள் பயிற்சி கொடுத்தால் மன்னரைத் தேற்றலாம் என நினைத்தேன். அது அவ்வளவு எளிதில்லை என்பது புரிந்தது. இன்னும் கொஞ்சம் மிரட்டினால் மன்னர் அழுதுவிடுவார் போலிருந்தது.// என்னதான் சொல்லுகிறார்!! :-) நீங்களே அரங்கினுள் நுழைந்து பாருங்கள். நேரம் தாராளமாக இருக்கும்போது படியுங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள்.
 
முகம் பற்றி ரசனையாக ஒரு குட்டி ஆராய்ச்சி செய்திருக்கிறார். இவர் ஆடு மேய்த்த நாட்கள் இங்கே. மலேஷிய மண்ணிலிருந்து வந்து, தமிழ்க் காற்று வெளியில் நிறைந்தவர் இங்கே கவிதையாக.
 
வேண்டாத அலங்காரங்களற்ற மிக எளிமையான வலைப்பூ அமைப்பு, அற்புதமான, தெளிவான, கண்ணுக்கும் மனதிற்கும் இதமான எழுத்து நடை.... அதிக சிரத்தை எடுத்துப் பதிவிட்டுள்ள இடுகைகள்... நாம் பார்த்துக் கற்க நிறைய இருக்கிறது பச்சைபாலனிடம்.
~~~~~~~~~~
பென்சில் கொண்டு எழுதும் (எழுதிய) ஆ.சுதா, 'எழுத்துப்பிழை இருக்கும். முடிந்த வரை சொல்லிக் கொடுங்கள் கற்றுக் கொள்கிறேன்.' என்று வேண்டுகோள் வைத்துவிட்டே கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார். அதனால்... சுதா எழுதியுள்ள கொடிய பகலின் விசும்பல்களிலோ "தொடர்" என்னும் வண்டி கவிதைகளிலோ குற்றம் பாராது அழகை மட்டும் ரசியுங்கள். அலைகளையே கூடக் கொலை செய்தாலும்  அவர் கனவுகளை வெளியெறிதல் ஆகாது.

பத்திரிகைகளுக்கு
அனுப்பும் ஆக்கம் என்றால், தரமானதாக இருந்தால் போதும். எப்படியும் அங்கு பிழைதிருத்தம் செய்வதற்கு ஆட்கள் இருப்பார்கள். வலையுலகில் அப்படி இல்லை. கணனி தானாகச் செய்யும் தவறுகள் வேறு. ஒவ்வொரு வலைப்பூவுக்கும் சரிபிழை பார்க்க ஒருவரை நியமிக்க இயலுகிறதா என்ன! 
 
இங்கு எல்லோரும் என்னைவிட அதிகமாக வலை மேய்பவர்களாக இருக்கிறீர்கள். வலைச்சரத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட இந்தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரேயொரு வலைப்பூவையாவது அறிமுகம் செய்திருந்தால்... மகிழ்ச்சி.
 
கிளம்பும் முன் முக்கியமான விடயம் ஒன்று சொல்ல வேண்டும். நேரம் கிடைக்கும் சமயம் எல்லாம் வலைச்சரத்திற்காக சுட்டிகள் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு உண்மை புரிந்தது.
 
அரியது கேட்கின் வலையுலகோரே
அரிது அரிது வலைப்பூ பராமரிப்பு
அதனினும் அரிது படித்துக் கருத்து இடுதல்
அதனினும் அரிது வலைச்சரம் நடாத்தல்
அதனினும் அரிது DD காணாத
வலைப்பூ ஒன்றினைக் காண்பதுதானே!

'தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான்' போல எங்கும் பின்னூட்டம் கொடுத்திருப்பார் சகோதரர் திண்டுக்கல் தனபாலன். வாழ்த்துக்கள் தனபாலன். வலைப்பூவிலுமா! என்னும் இந்த இடுகையை புதிதாக வலைப்பூ ஆரம்பிக்க இருப்பவர்கள், ஆரம்பித்திருப்பவர்களுக்காக இங்கு பகிர்கிறேன்.
~~~~~~~~~~
இரண்டு முறை "அதுதான் எனக்குத் தெரியுமே!" என்பது போல பின்னூட்டம் பதிவு செய்திருந்தார். நானும் தீயாக வேலை செய்து... கண்டுபிடித்தேன் தனபாலன் காணாத வலைப்பூவொன்றை. :-) ஒரு கீவி 'யுரேக்கா!' என்று கூ..விற்று. புனிதாவின்... கீவியின் கூவல்! இதோ. இப்போது தனபாலன் வந்து, "அதுதான் எனக்குத் தெரியுமே!" என்று சொல்ல முடியாதே! :-)

இந்த ஒரு வாரத்தில்... எனக்கும் சிலர் & சில வலைப்பூக்கள் அறிமுகமாகியிருக்கின்றன(ர்).  வலைச்சரம், இமாவின் உலகம் தொடர்ந்து சுழல வேண்டும் என்கிற உணர்வைக் கொடுத்திருக்கிறது. ஆமாம், நானே என் உலகை மறந்திருக்கும் போது யாராவது வலைப்பூவில் அறிமுகம் செய்து வைப்பார்கள். ஒருவிதமான குற்ற உணர்வு தோன்றும். இனி பெரிதாக இடைவெளி விடாது எழுதுவேன்... என்று நினைக்கிறேன். :-)

அருமையான இந்தச் சந்தர்ப்பத்தைக் கொடுத்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சர துணை ஆசிரியர்களுக்கும் ஆதரவளித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
அடுத்து வரும் ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
_()_

- இமா க்றிஸ்
மேலும் வாசிக்க...

பொழுது போகிறது!

இன்னும் சில மணி நேரங்கள்தான் இந்த நாற்காலி. :-) அதுவரை... பொழுது போகட்டும் உங்களுக்கும்.
இன்று கைவினை, ஓவியங்கள் தொடர்பான வலைப்பூ இடுகைகளைக் கோர்த்துக் கொடுக்கலாமென்றிருக்கிறேன். பலரது வலைப்பூக்களை வேறு தலைப்புகளின் கீழ் அறிமுகம் செய்தாயிற்று. இன்னும் சிலர் இங்கே...
உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகளில் பானை நிறைய நகைகள் இருக்கின்றன. மாதேவி கலைவாணி...கேரளா ம்யுரல், சரஸ்வதி - ஒரு தஞ்சாவூர் பாணி ஓவியம் இரண்டும் இருக்கிறது. பஞ்சமுக கணபதி வெகு அழகாக இருக்கிறார். மூங்கில் தட்டில் பிள்ளையார்  செய்வதற்கு திறமை எல்லாம் வேண்டாம். வெகு சுலபமாக சட்டென்று செய்துவிடலாம். அப்படியே இதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


திருமதி ஸ்ரீதரின் வலைப்பூ இது. கரடிப் பொம்மை செய்முறை ஒன்று இங்கு பகிர்ந்திருக்கிறார். இங்கு சேலையில் கைவண்ணம் காட்டுகிறார். இங்கு... உபயோகமில்லாத உடையில் பை தயாரிப்பது பற்றிச் சொல்கிறார்.

பெண்கள்தான் அனேகம் கைவினை இடுகைகள் கொடுக்கிறார்கள். ஆண்களது வலைப்பூக்கள் காணக் கிடைக்குமாவென்று தேடினேன். முன்பு ஒருசிலரது ஓவிய வலைப்பூக்கள் பார்த்திருக்கிறேன். சுட்டிகள் பழைய கணணியோடு காணாமல் போய்விட்டது. இப்போது தேடினாற் கிடைக்கவில்லை. இது... உங்கள் வேலை. :-) தேடிப் பிடித்துக் கொடுப்பீர்களா!

என் நினைவில் நிற்பவர் VGK அண்ணா மட்டும்தான். அண்ணாவையும் அவர்களது வலைப்பூவையும் தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள். அவரது மயக்கும் எழுத்தாற்றல் அனைவருக்கும் அறிமுகமானதே. இங்கே அவரது கைவினையும் ஓவியங்களும்.

பூந்தளிர் தியானா... இரண்டு குட்டிப்பெண்களின் தாய். விதம் விதமான விடயங்களின் கலவை இவர் வலைப்பூ. அங்கு அம்மாவும் பெண்களுமாகச் சேர்ந்து செய்யும் வேலைப்பாடுகளை இங்கே பகிரப் போகிறேன். காஃபி பெய்ண்டிங் கேள்விப்பட்டிருகிறேன். சர்க்கரைப் பாகில் கூட பெய்ண்டிங் செய்யலாமாம். காஃபி பில்டரில் அலங்காரம் இங்கே. வெகு அழகாக இருக்கிறது. முயற்சி செய்து பார்க்க நினைத்திருக்கிறேன். க்ரயான்களை மீண்டும் பாவிப்பது எப்படி என்பதையும் ப்ளே டோ செய்முறை ஒன்றையும் கொடுத்திருக்கிறார். இன்னும் இருக்கிறது. கைவினை தவிர்த்து அங்கு படித்ததில் பிடித்தது இது.

உங்களுக்கு தோட்டம் செய்வதில் ஈடுபாடு இருக்கிறதா! சிவாவின் இந்த வலைப்பூ நிச்சயம் உதவும். வலைப்பூ என்பதற்கு மேல்... உபயோகமான குறிப்புகள் நிறைய இருக்கின்றன. தான் சந்தித்த பிரச்சினைகள், அவற்றுக்காக மேற்கொண்ட தீர்வுகள் என்று பலதும் கலந்து பேசுகிறார். சந்தேகங்கள் இருந்தால் கூட கேட்டுத் தெளிந்துகொள்ளலாம். எனக்குத் தோட்டவேலை பிடிக்கும். 'எப்படி வரும் என்றே தெரியாமல் முயற்சிப்பதிலும் ஒரு த்ரில்லிங் இருக்கு.' :-) என்னைப் போலவே இவர் நினைப்பும் இருக்கிறது. எதையாவது புதிதாக முயற்சி செய்கிறார். கருணைக் கிழங்கு வளர்ந்த கதை, சிவாவின் ரசனைக்கு ஒரு உதாரணம்.  முதல் இடுகையிலிருந்து விடாமல் படித்துப் பாருங்கள். அருமையான வலைப்பூ இது.

மெதுவாக ஒவ்வொன்றாகப் படியுங்கள்.
மீண்டும் வருவேன். :-)
_()_
மேலும் வாசிக்க...

Saturday, June 14, 2014

பூக்கள் நான்கு

'ஒளியுடையோன்' பிரசன்னா இராசன் 'நானும், ப்ளாக்கும், பின்னே மொக்கை மாயாண்டியும்' என்று சின்னதாக ஒரு இடுகை பதிவிட்டிருப்பார். முதல் பந்தியை அவசியம் ஒரு தடவை படித்துப் பாருங்கள். :-) பிறகு அப்படியே மீதி வலைப்பூவை மேயலாம்.  
சுஜாதாவின் இரண்டாவது சரித்திர நாவலான 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ படித்ததில்லை. பிரசன்னா இராசனின் இந்த இடுகை, கதையைத் தேடிப் படிக்கத் தூண்டியிருக்கிறது. 
பல்வேறு விதமான இடுகைகள் இவரது வலைப்பூவிலிருக்கின்றன. இடுகைகளூடே ஆங்காங்கே தந்தை மகன் பாசம் பரவலாகத் தூவித் தெரிகிறது. அவரது "ட்ரான்சிஸ்டர், தேங்காய், வறுகடலை"க்கு  "ட்ரான்சிஸ்டர், அப்பா, மகன்" என்று தலைப்பு வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.  அருமையான சிறுகதை இது. ஏற்கனவே வலைச்சரத்தில் அறிமுகமாகி இருக்கிறது.
'தொலைந்த விநாடிகளில்'... 'வாசிப்பு விஷயத்தில் லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை,' என்கிறார். என் எண்ணமும் அதுதான். வாசிப்புச் சுவை பிடிபட்டால் பிறகு குழந்தைகள் தாங்களாகவே தேடிப் படிக்க ஆரம்பிப்பார்கள்.  

பனையூரான் வலைப்பூ இது. நண்பர்கள் யாரையாவது விளையாட்டுக்கு ஏமாற்றியிருக்கிறீர்களா? ஏமாற்றினால் என்ன ஆகும்! ஒரு சின்ன அனுபவம்... அனுபவமல்ல பாடம் இது.

முனைவர் மு. இளங்கோவன் அவர்களது வலைப்பக்கம் இது. இந்தச் சுட்டி உங்களைத் தமிழறிஞர்கள் பற்றிய இடுகைகளுக்கு அழைத்துச் செல்லும். சுவாமி விபுலாநந்தர், பாவேந்தர் பாரதிதாசன் தொடங்கி தற்காலத் தமிழ் அறிஞர்கள் சிலர் பற்றிய விபரங்களையும் அழகாகக் கொடுத்திருக்கிறார்.

தாகூரின் கையெழுத்தில் ‘கீதாஞ்சலி’ – ஓர் அபூர்வ வெளியீடு - கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு அபூர்வ இடுகை.  கவிஞர்  இராய.செல்லப்பா அவர்களது தமிழ் டயரியில் பதிவாகி இருக்கும் ஆங்கில நூல் அறிமுகங்களில் இதுவும் ஒன்று.
தமிழ் நூல் வரிசையில் இடம்பெற்றுள்ளவற்றுட் தவறவிடக் கூடாதது... '150 பக்க நூலுக்கு பாரதியாரின் 57 பக்க முன்னுரை' என்னும் கட்டுரை. நிறைய நேரத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாவகாசமாக ரசித்து வாசிக்கவேண்டிய வலைப்பூ கவிஞர் செல்லப்பா அவர்களது.
அவர் எழுதிய 'ஈரம் கசியும் இதயங்கள்' என்னும் நான்கு பகுதிகளாலான நீண்ட குறுநாவல் இங்கே ஆரம்பிக்கிறது. படித்து பாருங்கள்.
நான் கோர்த்த சரம் கையளவு.
 மீதியோடு நாளை வருகிறேன்.
_()_
மேலும் வாசிக்க...

Friday, June 13, 2014

சின்னதாய்ச் சில அறிமுகங்கள்

_()_
முன்னுரை, முகவுரை ++ எதுவுமில்லாமல் நேரடியாக அறிமுகத்திற்கு வருகிறேன்.
இன்று பகிர்ந்துகொள்ளவென்று தேடிப் பிடித்த வலைப்பூக்களும் இடுகைகளும்....
வாகீசன் தான் படித்துச் சுவைத்த கவிதைகளை வாகீசனின் கிறுக்கல்களில் பகிர்ந்து கொள்கிறார். 'பொன்மாலைப் பொழுது' பாடலின் விட்டுப் போன வரிகளை இங்கே காண்பீர்கள். காசி ஆனந்தன் அவர்களது நறுக்குகளிலிருந்து கூண்டு என்னும் கவிதையை இங்கே இணைத்திருக்கிறார்.

கணனித் தொழில்நுட்பம் பற்றியது பொன்மலர் பக்கம் அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்,  வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள் என்று பல உபயோகமான தகவல்கள் கொடுத்திருக்கிறார்.  என்றாவது பயன்படும் என்று குறித்து வைத்திருக்கிறேன்.

கிருஷ்ணமூர்த்தியின் 'வானம் எப்போதும் நீலம்'. அங்கே வெகு தனியாய் இவர். அதே கிருஷ்ணமூர்த்தியின் முதல் கோணல் இது. தனது அனுபவங்களை சுவாரசியமான பதிவுகளாக்கியிருக்கிறார். சம்மர் க்ளாஸ் பூதங்கள் தினமும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் என்னைக் கவர்ந்தது.

பாதி விரிந்த வலைப்பூக்கள் இனி.

குமாரமுதம் குமார் அவர்கள், 'ஆசை கொள்' என்கிறார். என் ஆசை என்னவென்றால்... புதிதாகக் கிடைக்கும் பின்னூட்டங்கள் சிலவே ஆனாலும் இவர்களை மீண்டும் எழுதத் தூண்டாதா!
அவர் மகள்... தோழி கவிசிவா நடத்திய வலைப்பதிவர் சந்திப்பு இங்கே.

Inspired Tresures - இங்கு சாரதாஞ்சலி இடுகையிட்டிருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் அவரால் எழுதப்பட்டு ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியானவை. கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-5,  கற்பனை வளத்தை பெருக்கும் வாசிப்புத்திறன், இவ்விரண்டு கட்டுரைகளும் என்னைக் கவர்ந்தன. 'குழலி தொடர்வாள்' என்னும் ஒரு குறிப்போடு தொடராமல் நிற்கிறது வலைப்பூ.

மகி குட்டியின் பேரங்கள்  பாருங்கள். எங்கள் விடுமுறை நாட்கள் படித்தேன், ரசித்தேன். எல்லா விடுமுறைகளும்...  //அவதாரில் தொடங்கி குங்ஃபூ பாண்டா வில்  தான் முடிகிறது.// :-) இப்போ குட்டிக் கிராமங்களில் கூட இந்த நிலைதான் என்று நினைக்கிறேன்.
அனைவர்க்கும் மகிழ்நிறை நாளாக இன்றைய நாள் அமையட்டும்.

மீண்டும் சந்திக்கும் வரை...
_()_
மேலும் வாசிக்க...

Thursday, June 12, 2014

இடுக்கண் களைவது... நட்பு. இது நேச வலைச்சரம்

இது... இமாவின் உலகின் இன்னொரு பக்கம்.
இமாவில் உலகம் உதித்த சமகாலத்தில், நண்பிகள் சிலரது வலைப்பூக்களும் மலர்ந்தன. ஆளை ஆள் மாற்றி, தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கலாய்த்துக் கருத்துச் சொல்லுவோம். அது ஒரு அழகிய காலம்.
அந்தக் கூட்டத்தில் நான்தான் சற்றுப் பெரியவளாக இருந்திருப்பேன். வலையுலகில் வயது மனதுக்குத்தான். இவர்களோடு சேர்த்து நானும் குழந்தையானேன். பின்பு ஒருவர் மற்றொருவரை அறிமுகம் செய்ய.. ஒருவர் இன்னொருவருக்கு ஏதாவது ஒன்றில் உதவ என்று எங்கள் வட்டம் பெரிதாகிற்று. எல்லோரையும் அறிமுகம் செய்ய விரும்பினாலும்... இடுகை நீண்டுவிடும் என்னும் காரணத்தால் மிகச் சிலரை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.

என் பக்கம் அடிக்கடி வரும் செல்ல மியாவுக்குப் பிடித்ததெல்லாம் உங்களுக்கும் பிடிக்கிறதா! இங்கே புதுமையான ஒரு வகை ரொட்டிக்கான சமையற்குறிப்பு கொடுத்திருக்கிறார். என் எழுத்து இதுவென்றாலும்... உண்மையில் தலைப்பு  'பெண் எழுத்து' என்று நினைவு. எப்போதும் நகைச்சுவையைக் கூடவே கொட்டி எழுதி வைப்பதால் இவர் வலையில் நான் தேடிய இடுகை, இந்த இடுகை வெளியாகும்வரை என் கண்ணில் படவேயில்லை. :-)

எனக்கு 'ஐரிஸ் ஃபோல்டிங்' வேலைப்பாட்டை அறிமுகம் செய்து வைத்தவர் வானதி. சுவையாகக் கதை சொல்லும் இவர்... 100% கற்பனையாக எழுதிய கதை.. சோளப் பொரிக்கு சண்டை போடுவியா? வேலை கிடைத்தும் வலைப்பூவைக் கைவிடவில்லை. மாறாக அங்கு கிடைக்கும் அனுபவங்களையே கதைகளாக்கிவிடுகிறார். யாயாவா? சுறாவா? என்று ஒரு கதை, படித்துப் பாருங்கள்.


மகிஸ் ஸ்பேஸ் மகிக்கு மஞ்சள் நிறம் பிடிக்கும். இயற்கை பிடிக்கும். சமையல் அதிகம் பிடிக்கும். 
எனக்குப் சரம்கட்டக் காட்டிக் கொடுத்தவர் இவர். மாட்யூலர் ஒரிகாமியும் செய்திருக்கிறார் இங்கே... சுட்டி அந்தப் பிரிவுக்கே கொண்டுபோய் விடும், பாருங்கள்.

என்னை ஈர்த்தது.... இவர்கள் குழந்தை மனம். மழலைகள் என்று எண்ணித் தவிர்த்தால் தப்பு. திடீரென்று 'அட!' என்கிற மாதிரி அழகாக ஒரு இடுகை வரும். கிராமத்து கருவாச்சியையும், அன்பை விட ஆயுதம் எதுவுமில்லாத சிவாவையும்தான் சொல்கிறேன். கலைநயத்துடன் கலையின் மனவலி... என்னை மன்னித்துவிடு சகோதரி. & தெருவோரச் சிறார்கள் . சிவாவின்.. தேடல் இங்கே. 
பிரியசகி சமீப காலமாக சங்கீதத்தில் மூழ்கியிருக்கிறார். :-) முன்பு!! வேலியும் மரங்களும் பற்றிச் சொன்னார். இவர் இடுகைகள் அனேகம் ஜெர்மன் அனுபவங்கள் பற்றியதாக இருக்கும் அல்லது தன் கைவேலையை இடுகையாகக் கொடுத்திருப்பார். பிரியா செய்த அழகிய காகிதப் பூக்கள் இங்கே காண்க.

நிஜமான காகிதப் பூக்கள் இங்கே கிடைக்கும். மங்குஸ்தான் பழம், சணல், வெண்ணெய் சுற்றி வந்த காகிதம் என்று எதை வேண்டுமானாலும் மீள்சுழற்சி செய்வார். 

இங்கே... இளையநிலா பொழிகிறது, ஏராளமான கவிதைகளும் க்வில்லிங் கலையுமாக. சில மாதங்கள் நாம் வலையுலகில் காணாதிருந்த இளமதி, அன்னையின் பிரிவுத்துயரிலிருந்து மெதுவே மீண்டு அன்னைக்குச் சமர்ப்பணமாக சில குறட்பாக்களோடு இந்த இடுகையை வெளியிட்டிருக்கிறார். மீண்டும் ஒளிவீச வருக இளமதி. 
வேலைகள், குடும்பச் சூழல் என்று ஏதோவொரு முக்கிய காரணத்தால் வலைப்பூக்களுக்கு விடுமுறை விட்டிருக்கும் நட்புக்களும் இருக்கிறார்கள். பொழுது இல்லையென்பது இல்லை. வலையுலகு வந்தால் வலையில் மாட்டிக்கொள்வோம், இருக்கும் நேரம் பனியாய்க் கரைந்து போகுமே என்னும் எண்ணம். :-)

ஜீனோ... பிரம்மா சுஜாதா. :-) ஜீனோ தமிழ் வலையுலகில் தனக்கென ஒரு குட்டி மூலையை வைத்திருந்தது. ஜீனோ பாடிய வாத்துப் பாடல் இங்கே. ;) இப்போ ஒரேயடியாக எங்கோ ஒளிந்திருக்கிறது ஜீனோ. 
ரத்தமின்றி.. கத்தியின்றி.. விஞ்ஞான புனைகதையொன்றை இயற்றிய பூங்கதிர்தேசத்தைச் சேர்ந்த சந்தனா மூன்றாம் முறை ஊர் சுற்றி வந்ததன்பின் சத்தமின்றி ஒளிந்துகொண்டார். ;(

இப்போது... இமாவும் ஒளிந்துகொள்ளவா!
மீண்டும் நாளை சந்திப்போம்.
இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் நாளாக அமையட்டும்.
_()_
மேலும் வாசிக்க...

Wednesday, June 11, 2014

க_, க__. க____ க____

_()_ 
வணக்கம் எப்படிச் சொல்லட்டும்!!
இங்கு Māori மரபுப் படியானால்... மூக்கும் மூக்கும் முட்டிக்கொள்வார்கள்.
தமிழர் முறைப்படி!!!
கைகூப்பினால் மட்டும் வணக்கம் தெரிவிப்பதாகிவிடுமா!
'கௌஷி' - சந்திரகௌரி சிவபாலன், யாருக்கு எப்படி வணக்கம் தெரிவிக்கவேண்டுமென்று விளக்குகிறார் இங்கே. அவரது உதிர்ந்த ரோஜாக்கள் கண்கலங்க வைக்கும். எல்லாமே அருமையான இடுகைகள் என்பேன்.
 
நானும்... ரசிக்கிறேன்.. ருசிக்கிறேன்..  மாதவன் இளங்கோவின் வலைப்பூவை. எளிமையான, எழுத்துப் பிழையில்லாத அழகுதமிழுக்கு ஒரு உதாரணம் இவர் வலைப்பூ. இடுகை அமைப்பில் ஒரு நேர்த்தி இருக்கும். எழுத வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை விட, எதையும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்னும்  சிரத்தையும் ஈடுபாடும் உள்ளவர் என்பதைப் படித்துப் பார்த்தால் புரிந்துகொள்வீர்கள். என் பார்வையில் பட்ட இவரது நிறங்கள் - ஒரு பார்வை சிறுகதை வெகு அருமை. ஏராளமான கட்டுரைகளும் இவரது தளத்தில் சிதறிக் கிடக்கின்றன.

'தேவை எனில் ...இனிய உளவாக இன்னாத கூறலும் ...இனிது' என்று நினைக்கும் கன்யாகுமரியைச் சேர்ந்த பிரபுதாஸ், வலைப்பூ இடுகைகள் கொஞ்சம் முரண். ஒரு படம்... பொருத்தமாக ஒரு குறிப்பு. நீளமாக இராது இடுகைகள். இவர் வலைப்பூவில் உலவினால் இன்னதுதான் என்றில்லாமல் எதிர்பாராதது கண்முன்னே வந்து நிற்கும்.  நிச்சயம் ஒவ்வொருவருக்கும் சுவைக்க எதுவாவதொன்று இருக்கும். பிரபுதாஸ் அணில் வளர்த்த அனுபவம் சோகம். ;( ஆனால் அவர் பேகனாக மாற முனைந்த அனுபவம்... புன்னகைக்க வைக்கிறது. :-)
//நிஜமாவே பேகன் மயிலுக்கு போர்வை போர்த்தினாரா ?// ஆமாம், போர்த்தினார். ஆதாரத்தோடு நிரூபிக்கட்டுமா! :-)
அருகே போர்த்தக் கேட்டு ஆடிக்கொண்டு அமர்ந்திருந்த ஆட்டைக் கூடக் கவனிக்காமல் மயிலுக்கு மட்டும் போர்த்தினார். :-) 
பிரபுதாஸின், 'வாழ்க்கை அதனினும் சிறிது' என்னும் கவிதை, இந்த 'டைரி'... இரண்டையும் மறக்காமல் படித்துவிடுங்கள்.

செல்வாவின் கவிதைகள் வெகு அற்புதமாக இருக்கும். பாசமான பாட்டிக்கு என்றொரு கவிதை... அது கவிதையல்ல, பாட்டிக்குப் பேத்தியின் கடிதம். நிச்சயம் உங்கள் மனதைத் தொடும்.
 
அப்படியே கிளம்பிப் போய்... தமிழ்வாசலைத். திறந்து உள்ளே நுழைந்து பாருங்கள். தன்னைக் கவிஞர் வைரமுத்து அவர்களின் ஏகலைவன் என்கிறார் நாகபட்டினத்தில் வசிக்கும் இரா. ச. இமலாதித்தன். அவரது கிறுக்கல்கள்... கிறுக்கல்களா அவை! இங்கே. இலக்கியவாதி என்பவர்... நாங்கள்தான் என்கிறார். :-) (இந்த... 'எங்களைப்' பற்றி என் தனிப்பட்ட கருத்து ஒன்று இருக்கிறது. இங்கு வேண்டாம். எப்போதாவது இமாவில் உலகில் பகிர்கிறேன்.) சமயத்தில்...  எனக்கொன்றும் தெரியாது என்றும் சொல்லுவார். 'இதை விட இது நன்று,' என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாதவை இவரது கிறுக்கல்கள்.

வலைப்பூவின் பெயர்... 'விசு Awesome' அவர்களது துணிக்கைகளா! அல்லது விசுவின் awesome மின் துணிக்கைகளா!! எதுவாக இருந்தால் என்ன! வலைச்சரத்திற்காக இவர் சரம் வாங்கிய கதை அதாவது... காதில் சரம் வாங்கிய கதை சுவாரசியம். இவர் கலாய்க்க ஆரம்பித்து எட்டே எட்டு மாதங்கள்தான் ஆகின்றன. என் சந்தேகம்... இவர் தனிமை விரும்பியோ!!

இடுகைக்கான தலைப்பு... கதை, கவிதை, கட்டுரைக் கதம்பம். சரியாக ஊகித்தீர்களா! :-)
"ஹ்ம்! போயும் போயும்... கடைசி பெஞ்ச் மாணவி மாதிரி இருக்கிற இமாவைப் போய் ஆசிரியர் நாற்காலியில் அமர்த்தினேனே!" - இது சீனா ஐயா mind voice. :-)
சிரியுங்கள், சிரியுங்கள், சிரித்துக்கொண்டே இருங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
மேலும் வாசிக்க...

Tuesday, June 10, 2014

செவ்வாய் இன்று வாய்க்கு ருசியாக...

சென்ற வாரம் விஞ்ஞான ஆசிரியர் ஏழாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் சமயம் ஒரு வேலையாக உள்ளே நுழைந்தேன். மணம், சுவை இரண்டுக்குமான தொடர்பு பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். 
பார்வைக்கும் சுவைக்கும் தொடர்பு எதுவுமே இல்லையா! அழகாகத் தெரிந்தால்தானே சாப்பிட ஆசை வரும்!

சிலர் சுவைபடச் சமைத்து கூடவே அழகாகப் படமும் பிடித்திருப்பார்கள். சித்ராவின் வலைப்பூ அப்படியொன்று. பெயர் Chitra's Easy recipes என்று ஆங்கிலத்திலிருந்தாலும் குறிப்புகளனைத்தும் தமிழிலில்தான் இருக்கின்றன. படங்களெல்லாம் பளிச். முருங்கை தொக்கு குறிப்பில் அவர் சேர்த்திருக்கும் படங்கள் சமைப்பதை நேரில் பார்ப்பது போலவே இருக்கின்றன.
இமாவுக்கு ஒரு குட்டி சந்தேகம்!!
பச்சை பீட்ரூட் சாப்பிடும் போது... வாய், எப்படி செவ்வாயாகிறது!! :-)
சற்று வித்தியாசமாகத் தெரியும் சித்ராவின் பீட்ரூட் கட்லட் சுவையாகவும் இருக்கும். ஒரு முறை சமைத்துப் பார்த்திருக்கிறேன். சின்னவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
'அப்பொழுதெல்லாம் பெரியளவில் இனிப்புகள் வாங்கித் தரமாட்டார்கள். ஏதாவது ருசிக்குச் சாப்பிட வேண்டும் அதுவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்றால் மில்க் டொஃபிதான்,' என்று சுவை வலைப்பூ உரிமையாளர் இந்திராணி சொல்லியிருப்பது உண்மைதான். இப்போது போல எங்கள் சின்னக் காலத்தில் விதம் விதமாக கொறிப்பதற்கு இருக்கவில்லை.
பல இடங்களில்  மில்க் ரொபி குறிப்பு பார்த்திருக்கிறேன். குறிப்பில் செய்யப்படிருக்கும் மாற்றங்கள், 'இனிப்புக்குப் பெயரை மாற்றலாம்,' என்று நினைக்க வைத்திருக்கிறது. நானறிந்தவரை... 'சுவை' வலைப்பூவிலுள்ளதுதான் சரியான குறிப்பு. கஜு சேர்ப்பது மட்டும் அவரவர் விருப்பம். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு இது. அடுப்பில் பதம் வரும் சமயம் கமகமவென்று வாசனை வீசி பக்கத்து வீட்டுக்கும் தகவல் சொல்லும்.
வெள்ளை அப்பம் குறிப்பை அழகாக இலங்கைத் தமிழில் கொடுத்திருக்கிறார் இந்திராணி. 'முட்டையப்பம்... மஞ்சள், வெள்ளை, தவிட்டு நிறமென பார்க்கவும் அழகாகவும் இருக்கும்.' என்னும் அவர் ரசனை பிடித்திருந்தது. இந்திராணி கொடுத்திருக்கும் 'மாலுபாண்'  குறிப்பும் வெகு அருமையாக இருக்கிறது. மாற்றங்கள் எதுவும் செய்யாமல் சரியான அடிப்படைக் குறிப்புகளை மட்டும் கொடுத்துவந்த இவர் என்ன காரணத்தாலோ தெரியவில்லை, 2009 இற்குப் பின்னே குறிப்புகள் எதுவும் கொடுக்கவில்லை.

பால் பர்ஃபியில் பால் சேர்ந்திருக்கும்; முட்டைக் குழம்பில் முட்டை இருக்கும்; குக்கர் அல்வாவில் குக்கர் இருக்குமா! :-)
அல்வாவை 'குக்' போல அலங்கரித்து வைத்திருக்கிறார் பாருங்கள் 'ராதாஸ் கிச்சன்' ராதாராணி. கருவேப்பிலை ஜுஸ் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? இங்கு சுத்தமான கறிவேப்பிலை கிடைக்கவில்லை இதுவரை. யாராவது முயற்சி செய்து பார்த்துவிட்டு சுவை எப்படி இருந்தது என்று சொல்லுவீர்களா?


சித்ரா சுந்தர் சௌசௌ கூட்டுக்காக அலங்காரமாக பயறு வறுத்து வைத்திருக்கிறார். இது போல சின்னச் சின்ன ரசனைகள் எனக்கும் இருக்கிறது. இங்கே விதம் விதமான பொரியல் சாத வகைகள் பற்றி விபரிக்கிறார். ஆரவாரமில்லாத, எளிமையான அந்தப் படங்களைப் பார்க்க சாப்பிடத் தோன்றுகிறதா இல்லையா!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5-SE0bNm_WjI9P8b1b_F-bmwEDCjHa3M1RhS8WFGZZbbwihyRMSs22fw6x6bXd_X-50w86caQIeNo_hmXXns0uuOuJG5DLw-L3744uyulK6sDlE4_w68rJhiHQBftVWGTUoW8OnWeIS3l/s640/101_8326.JPG
தினமும் 5+ சாப்பிடச் சொல்வார்கள். 5+ !!??  ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று கை அளவு கீரை காய்கறிகளும் இரண்டு கையளவு பழங்களும் சாப்பிட வேண்டுமாம். வாங்க... சமைக்கலாம்! என்கிறார் ஜொலி ராமசந்திரன். ஆரோக்கியமான, ஏழு வித சாலடுகள் கொடுத்திருக்கிறார். வாரம் இரண்டு சாலடாவது சாப்பிடுங்கள்.

சுவைக்க இன்னும் நிறைய இருக்கிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. எவ்வளவுதான் அருமையானதாக இருந்தாலும்... அளவோடு உண்போம்; ஆரோக்கியமாக வாழ்வோம்.

மீண்டும் நாளை காண்போம்.
_()_
மேலும் வாசிக்க...

Monday, June 9, 2014

இது... இமாவின் உலகம்

வலைச்சர வாசகர்களுக்கு இமாவின் அன்பான வணக்கங்கள். _()_

என் உலகம்... அழகான குட்டி உலகம்.  குடும்பம், வீடு, பாடசாலை, நட்பு, பொழுது போக்குகள், அறுசுவை இணையத்தளம், 'இது இமாவின் உலகம்'.... இன்று இங்கு வந்திருகிறேன். சந்தர்ப்பம் கொடுத்த வலைச்சரத்தினர்க்கு என் நன்றிகள்.

சுருண்டது போல் வெளியே வரும் பன்னக்குருத்து ஒவ்வொரு இலையாய் விரிந்து முழுவதாய் இலை அமைப்புப் பெறுமுன் அடுத்த குருத்து தலை காட்டுவது போல்தான் என் ரசனைகளும், நிலை இல்லாதவை. தினம் ஒரு ரசனை.

முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆவல்தான் இமாவின் உலகிற்கு அடிக்கல். எழுத ஆரம்பித்துவிட்டு... வலைப்பூ அமைப்பை, குழந்தையொன்று 'லெகோ செட்' வைத்து விளையாடுவது போல பிரித்துப் பிரித்து அடுக்கினேன். ஒரு நாள் பாதி வேலையோடு ஏதோவொரு தடங்கல். அப்படியே விட்டுவிட்டேன். பிறகு இதற்கென நேரம் ஒதுக்க இயலவேயில்லை. நாயும் கல்லும் போல நான் தட்டிச் சேமித்துள்ள என் இடுகைகளும் எங்கோ சேமிப்பிலுள்ள நானெடுத்த புகைபடங்களும். ஒன்றைக் கண்டால் மற்றது கண்ணில் படாது. :-) அப்படியே இடுகைகளும் குறைந்து போயிற்று. எப்பொதாவது மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

இமாவின் உலகில் எனக்கு அதிகம் பிடித்தவை... என் ஆரம்பகால இடுகைகள். ரசித்துப் பதிவிட்டவை அவை. பெரிதாக ஏதாவது விடயம் இருக்கும் என்று நினைத்து வந்தால் ஏமாறுவீர்கள்.

உங்களுக்கும் தெரிந்திருக்கும்... உயிர்ச்சத்து சீ உடம்புக்கு நல்லது என்று. அது பழங்களில் கிடைக்கும். பழங்களை வாயால் மட்டும் சாப்பிடாமல் கண்ணாலும் சாப்பிடவேண்டும். விருந்தினர் வந்தால்தால் மேசை அலங்காரமா! உங்களுக்காகவும் ஒருமுறை அலங்கரிக்கலாம். :-) அலங்கரித்துத்தான் பாருங்களேன்.

ஒருவேளை... திராட்சைப் பழம் கிடைக்காவிட்டால்!!
கிடைக்காத பழம் புளிக்காதா!
இந்தப் படமும் புளித்தது எனக்கு, பப்பியும் திராட்சைக் குலையும் வரும் முன்னால்.  எழுத்து... சிதம்பரசக்கரத்தைப் பார்த்தது போல இருக்கிறதா!! சுஜாதா அவர்களின் 'என் இனிய இயந்திரா' படித்தவர்களுக்கு இந்த மொழி புரியும்.
இமா இப்படித்தான். யாருக்கும் புரியாத விதமாக எழுதி குழப்பி வைப்பேன். :-)

வேறு என்ன சொல்லலாம்!!!
ம்!!! நான் தினம் தினம் ரசிக்கும் வலி ஒன்று இருக்கிறது வீட்டில். இங்கே... என் வலி, அது தனி... வலி.

போதும் உலகம் சுற்றியது. படிப்பவர்கள் மேல் என் ரசனையை!! திணிக்க விரும்பவில்லை. நீங்களே நேரம் கிடைக்கும் பொழுது பிடித்ததைப் படித்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இங்குள்ளதை மட்டும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

இப்போது... என் பேனாவுக்கு மை தீர்ந்து விட்டது. :-) கிளம்புகிறேன் என் தாயாரைப் பார்க்க. நீங்களும் விரும்பினால் வரலாம்.

மீண்டும் நாளைய இடுகையில் சந்திப்போம்.
இன்றைய நாள் அனைவர்க்கும் இனியதாக அமையட்டும்.

_()_
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது