07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 7, 2013

தேசம் ஸ்தம்பிக்கும் நேரம்





இந்த மாதம் பிப்ரவரி 20, 21 தேதிகள் இந்திய உழைக்கும் மக்களுக்கு முக்கியமான நாட்கள். கிட்டத்தட்ட பத்து கோடி தொழிலாளர்கள் நாற்பத்தி எட்டு மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். ஏன், எதற்கு என்பதை பிறகு பார்ப்போம்.

அதற்கு முன்பாக சில அறிமுகங்கள்.

இவருக்கு அறிமுகம் அவசியமில்லை. நான் மிகவும் ரசிக்கும் கவிதைகளுக்கு சொந்தக்காரர். தென்றலாய் இதயத்தை இவரது கவிதைகள் வருடிச் செல்லும். எந்த ஒரு கவிதைக்கும் நான் இணைப்பு தரவில்லை. எதை தருவது, எதை விடுவது என்ற குழப்பம்தான் காரணம். என் மனதில் கல்வெட்டாய் பதிந்த ஒரு கவிதையை மட்டும் இங்கே எழுதுகிறேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்
உன்னிடமிருந்து வந்தது
வெற்றுக் காகிதம் என்றாலும்
எனக்கு அது
பொக்கிஷமே.

ஜூன் 1992 முதல் ஆகஸ்ட் 2002 வரை இருந்த என மன நிலையை படம் பிடித்த கவிதை இது. ( திருமண நிச்சயம் தொடங்கி திருமணம் வரை)

பைசைக்கிள் தீவ்ஸ் என்ற உலக திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே திரை பறை வலைப்பக்கத்தில் பாருங்கள், த.மு.எ.க.ச வின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருணாவின் பக்கம் இது. இன்னும் பல உலகத் திரைப்படங்களின் அறிமுகம் இங்கே கிடைக்கும். கொஞ்சம் தேடிப் பாருங்கள், திருவண்ணாமலையில் ஒருவர் துரத்தப்பட்டார். அந்த அனுபவமும் இங்கே படிக்கலாம்.

இந்த களம் வழங்குபவரும் த.மு.எ.க.ச காரர்தான். எல்.ஐ.சி ஊழியரும் தொழிற்சங்க பொறுப்பாளரும் கூட. விஜய் டி.வி நீயா நானா – பத்து சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டவர். இங்கேயும் திரைப்பட விமர்சனம் கிடைக்கும். ஆனால் கடல், லட்டு எல்லாம் எதிர்ப்பார்க்காதீர்கள். உலகப் படங்கள்தான். துரோணரும் ஏகலைவனும் பற்றிய ஒரு  புதியபார்வையை இங்கே படியுங்கள்.

நான் வலைப்பக்கம் தொடங்கிய நாள் எனது பதிவுகளைப் பார்த்து மிகச் சரியாக பின்னூட்டம் இடுபவர் திரு இக்பால் செல்வன். அவரது பக்கங்களான கோடங்கியும்  கவிவனமும் சிறப்பானவை. அவசியம் படியுங்கள். அதிலும் கோடங்கி விமர்சனபூர்வமானது.

சரி இப்போது நாற்பத்தி எட்டு மணி நேர வேலை நிறுத்தம் ஏன்
என பாருங்கள்.

எங்கள் சங்க இதழ் இன்சூரன்ஸ் வொர்க்கர் தலையங்கத்தின்
தமிழாக்கம்

 நாற்பத்தி எட்டு மணி நேர வேலை நிறுத்தம்
மூலம் பதிலளிப்போம்

சாமானிய மக்களின் துயரங்களையும் பிரச்சினைகளையும் பற்றி சிறிது கூட அக்கறை இல்லாததாக மன்மோகன்சிங் அரசு மாறி விட்டது. டீசல் விலை கட்டுப்பாடுகளை அகற்றி எண்ணெய் நிறுவனங்களே அவ்வப்போது விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற முடிவு உழைக்கும் மக்களின்  சுமையை மேலும் அதிகப்படுத்தும். மொத்தமாக வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டருக்கு  பத்து ரூபாய் உயர்த்தியுள்ள எண்ணெய் வினியோக நிறுவனங்கள், சந்தை விலைக்கேற்ப மற்றவர்களுக்கும் மாதாந்திர அடிப்படையில் விலையை உயர்த்தவுள்ளனர். ரயில்வே, மாநில போக்குவரத்து நிறுவனங்கள், சிமெண்ட் உற்பத்தியாளர்கள் போன்ற மொத்த கொள்முதல் செய்பவர்கள் இந்த கூடுதல் சுமையை நுகர்வோரிடமே தள்ளி விடப் போவதாய் சொல்லி விட்டனர். ட்ராக்டர்களையும் ஆழ்துளைக் கிணறுகளையும் நம்பியிருக்கிற விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள். ஒட்டு மொத்தமாக இந்த செய்கையினால் பணவீக்கம் மேலும் உயரும். மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் அரிக்கப்படும்.

டீசல் விலை உயர்வின் மூலம் பண வீக்க நிலையில் சாதகமான விளைவு ஏற்படும் என்றதொரு வினோதமான காரணத்தை மத்தியரசும் திட்டக் கமிஷனும்  சொல்லி வருகிறது. “ டீசல் விலை உயர்வினால் மற்ற பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கையில் குறைவான பணமே இருக்கும். அதனால் மற்ற பொருட்களின் விலைகள் சந்தையில் குறையும் “ என்று திட்டக் கமிஷன் துணைத்தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா கூறியுள்ளார். டீசல் விலையை உயர்த்துவதினால் பண வீக்கம் குறையும் என்று திட்டக் கமிஷனின் துணைத்தலைவர் தேசத்திற்கு தெரிவிக்கிறார். இவர்களது பொருளாதர உத்திகளும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளும் சாதாரண மக்களின் வாழ்வினை எப்படியெல்லாம் துயரமாய் தாக்கிடும் என்பது இப்போது தெளிவாகி விட்டது.

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் கூட மத்தியரசு உயர்த்தி விட்டது. பயணிகள் கட்டணத்தை ரயில்வே உயர்த்திய உடனே இந்த கட்டண உயர்வு நிகழ்ந்துள்ளது. இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான திட்டச் செலவினத்தையும் வெட்டியுள்ளது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் முன்பு சொல்லப்பட்ட பயன்களில்  சிலவற்றைக் கூட குறைப்பதற்கு யோசித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் பிரச்சினையை வெறும் நிதி பற்றாக்குறையாக மட்டுமே பார்க்கிற நிதித்துறை அடிப்படைவாதிகளின் பிடியில் மத்தியரசு சிக்கியுள்ளது என்றே தோன்றுகிறது. நிதி நெருக்கடியை சரி செய்வது தொடர்பான கேல்கர் குழு அறிக்கையே மத்தியரசின் புனித நூலாகி விட்டது.

இந்த அறிக்கை ஏழை மக்களுக்கான அனைத்து மானியங்களும் திட்டமிட்ட முறையில் ஒரு காலவரையறைக்குள் அகற்றப்பட்டு விட வேண்டும் என்று சொல்கிறது. நிதி நெருக்கடியை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்று பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான சமிஞ்சையை அளிக்க மத்தியரசு முயல்கிறது. அதற்காக மிகப் பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையான மானியங்களையும் சமூக  நலத் திட்டங்களின் மீதும் தாக்குதல் தொடுக்கிறது. ஆனால் கூடுதல் நிதியாதாரத்தை திரட்ட,  இந்த நிதி அடிப்படைவாதிகள், பெரிய செல்வந்தர்கள் மீது கூடுதல் வரி விதிக்கவோ, அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை வெட்டவோ தயாராக இல்லை.

பண வீக்கத்திற்கு பொருளுக்கான கிராக்கி மற்றும் அளிப்பு (Demand and Supply) பிரச்சினையோ, பொருளாதாரப் பிரச்சினைக்கு அடிப்படை  முதலீடுகள் இல்லாமை என்பதோ காரணமல்ல என்பதை  கடந்த பல ஆண்டுகளின் அனுபவம் உணர்த்துகிறது. கிராக்கி குறைவாக உள்ளதாலாயே பொருளாதாரம் சிரமத்தில் உள்ளது. இந்த சூழலை சரி செய்து கிராக்கியை உருவாக்க மிகப் பெரிய அளவில் அரசு செலவு செய்திட வேண்டும்.  பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்கிற மன்மோகன் அரசைப் போன்ற ஒரு அரசை இந்த தேசம் விடுதலை பெற்றதிலிருந்து இது வரை பார்த்ததே இல்லை.

பொருளாதாரக் கொள்கைகளை முடிவு செய்ய மத்தியரசு பெரும் தொழில் நிறுவனங்களோடும் பல்வேறு முதலாளிகள் கூட்டமைப்புக்களோடும் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திக்கொண்டே இருக்கிறது. இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மையாக இருக்கிற உழைக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்ளவோ அல்லது புரிந்து கொள்ளவோ அவர்களின் பிரதிநிதிகளான தொழிற்சங்கங்களோடு பேச மட்டும் இந்த மத்தியரசுக்கு அவகாசமே இருப்பதில்லை.

நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் சாமானிய மனிதர்களின் வாழ்வை துயரம் மிக்கதாய் மாற்றி விட்டது. அரசு தனது பொருளாதாரக் கொள்கைகளை மறு பரிசீலனை செய்து உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களும் ஏராளமான துறைவாரி தொழிற்சங்கங்களும் 20,21 பிப்ரவரி 2013 ஆகிய இரு நாட்களில் நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்துவது என அறைகூவல் விடுத்துள்ளன.

உழைக்கும் மக்களின் மிக நியாயமான நடவடிக்கை இது. இருபது ஆண்டு கால நவீன தாராளமயமாக்கல் கொள்கைகள் பெரும்பான்மையான இந்திய மக்களின் வாழ்வில் பேரிடியாய் தாக்கியுள்ள போது சொற்பமான சிலரின் லாபங்களையும் செல்வத்தையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் சராசரியாக எட்டு சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளதாக பெருமைப் பட்டுக்கொள்ளும் மத்தியரசு இந்த வளர்ச்சியின் பயன்கள் சாதாரண மக்களை சென்றடையவில்லை, மாறாக இந்தியாவை சமமற்ற ஒரு சமூகமாக மாற்றியுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

உலகிலேயே மிகவும் அதிகமான  கல்வியறிவற்ற, ஏழை, பட்டினிப் பட்டாளம் கொண்ட நாடாக இந்தியாதான் திகழ்கிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட சத்துக் குறைவான குழந்தைகள் உலகிலியே மிக அதிகமாக உள்ள நாடு இந்தியா. பொருளாதார நெருக்கடி காரணமாக 2,50,000 விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ள வைத்த நாடு வேறு எதுவும் கிடையாது. இந்திய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரும் சுகாதாரமான கழிப்பறை வசதிகளும் கூட இன்னமும் மறுக்கப்பட்டுள்ளது. எனவே மத்தியரசுக்கு நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை நிறுத்தி வைத்து முறையான திருத்தங்களை மேற்கொண்டு அனைத்து மக்களுக்கும் நியாயமான அடிப்படை வசதிகள், அதை விட முக்கியமாய் சம நீதி கிடைத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அப்படிப்பட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்திட வேண்டும் என்று 20,21 பிப்ரவரி 2013 இரண்டு நாள் வேலை நிறுத்தம் மூலம் நிர்ப்பந்திக்க வேண்டும். தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதோ பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய முதலீட்டையே அதிகமாக நம்பிக் கொண்டிருப்பதோ சரியான வழிமுறை இல்லை என்பதை அரசுக்கு உறுதியாக சொல்லிட வேண்டும். சமூக நலப் பயன்களை  மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பினை அரசு தட்டிக் கழிக்க அனுமதிக்க முடியாது.

பொருளாதார வளர்ச்சியில் நிதித்துறைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. இத்துறையில் தாராளமயமோ அல்லது அன்னிய மூலதனத்தின் இருப்பை அதிகப்படுத்துவதோ தேசத்தின் பொருளாதாரத்திற்கு மிகவும் ஊறு விளைவிக்கும். இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவின் மீதான கடுமையான எதிர்ப்பை இந்த இரு நாள் வேலை நிறுத்தத்தில் முன்னிறுத்த வேண்டும். பென்ஷன் நிதிகளை அன்னிய மூலதனத்திடம் ஒப்படைப்பதையும் வங்கி சட்டத் திருத்தங்களை அமுலாக்குவதையும் கடுமையாக எதிர்த்திட வேண்டும்.

உழைப்பாளிகள், விவசாயிகள் மற்றும் இந்திய சமூகத்தின் இதர முற்போக்கு சக்திகள் ஆகியோரின் ஒன்று பட்ட உரிமைக்குரல் ஒன்று பட்டு ஒலித்து மத்தியரசு தனது கொள்கைகளை மாற்றிக் கொள்வதற்கான தளத்தை உருவாக்க வேண்டும். எனவே 20,21 பிப்ரவரி இரண்டு நாள் வேலை நிறுத்தம் நாம் இதுவரை காணாத மகத்தான வெற்றியை அடைய வேண்டும்.  இதர பகுதி உழைப்பாளிகளோடு இன்சூரன்ஸ் ஊழியர்களும் உறுதியோடும் எழுச்சியோடும் வேகத்தோடு இந்த வேலை நிறுத்ததில் பங்கேற்க வேண்டும். பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் தேசத்தின் பொருளாதார இறையாண்மையையும் பாதுகாக்கிற கடமையை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.

உறங்கச் செல்லும் முன் இந்த அற்புதப் படைப்புக்களை
பார்த்து விட்டு செல்லுங்களேன்














 






6 comments:

  1. உங்களின் தொகுப்பு விமர்சனமும் அருமையாக உள்ளது.படங்கள் அத்தனையும் அருமை.

    ReplyDelete
  2. ராமன் சார் கலக்கிட்டீங்க! விரிவாழ் பிறகு பதிவிடுகிறேன்!

    ReplyDelete
  3. அருமையான பதிவர் அறிமுகம் , சிறப்பான செய்தி ,அற்புதமான படங்கள் மனதையும் கண்ணையும் கவந்துவிட்டது உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கவின் கலைப்படங்கள் அருமை.
    அறிமுகவாளர்களிற்கும், தங்களிற்கும் இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  5. நல்ல பகிர்வுகள்..! அற்புத படைப்புகள் மனம் கவர்ந்தது!

    ReplyDelete
  6. தென்றலான அறிமுகமும் , அருமையான படங்களின் பகிர்வுகளுக்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது