07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 31, 2012

அறிமுகம் - ஜோதிஜி திருப்பூர்


எனக்கு சீனா அய்யா கடிதம் அனுப்பியதும் இரண்டு நிமிடம் வரிகளை படித்து முடித்து விட்டு யோசித்துக் கொண்டே இருந்தேன்.  ஏற்கனவே இதே வலைச்சரத்தில் நாம் ஆசிரியராக இருந்துள்ளோம். பலரும் நம்மை இதே வலைச்சரத்தில் அறிமுகமும் செய்துள்ளார்கள். மீண்டும் நாம் வருவதை விட வேறு எவரையாவது பரிந்துரைக்கலாமா? என்று யோசித்தபோது அப்போது வேறு சில நினைவுகளும் வந்தது. நான் பரிந்துரைத்தவர்கள் நேரமில்லை என்று அப்போது மறுத்து விட்டார்கள்.

சின்ன வயதில் முயல் ஆமை ஓட்டப்பந்தயம் கதை படித்து இருப்பீர்கள் தானே?

என் வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரையை வெளியிட்டுக் கொண்டேயிருப்பேன். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு என்று மாற்றுவேன். திடீரென்று ஒரு மாதம் முழுக்க அந்த பக்கமே செல்வதில்லை. காரணம் தொழில், குடும்பம் என்ற இரண்டு தண்டவாளத்தில் மேல் ஓடினால் தான் இந்த எழுத்து என்ற பயணம் சுகமாக இருக்கும். தண்டவாளங்கள் சரியில்லை என்றால் வண்டி எப்போதும் கடமுடா தான்.

குறிப்பிட்ட சில பதிவுகளை தவிர்த்து மற்ற அத்தனை ஒவ்வொரு பதிவுகளும் 20 நாளைக்கு முன் திட்டமிடப்படுகின்றது 15 நாட்களுக்கு முன் எழுத்தாக மாறுகின்றது. அடுத்த 10 நாளில் அதை மற்நது விடுவேன். அதன் பிறகே சமயம் பார்த்து வெளியிடப்படுகின்றது. .பத்து நாளைக்கு முன்பாக என் எழுத்துப் பயணம் இருந்து கொண்டேயிருப்பதால் எந்த எழுத்துப் பயணம் இனிதாக இன்று வரையிலும் இருக்கின்றது.

இதே போல் தினந்தோறும் கிடைக்கும் ஒய்வு நேரத்தில் ஏதோவொன்றைப் பற்றி அறியத் தொடங்கும் போது அது குறித்த புரிதலுடன் என் பயணம் தொடங்குகின்றது. புரியாத விசயங்களுடன் சண்டை போட்டு அதனை எப்படி மற்றவர்களுக்கு புரிய வைக்கலாம் என்பதில் கவனம் செலுத்த நானும் இந்த சமயத்தில் பலவற்றையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. 

பத்திரிக்கைகள் கட்டுரையில் பக்கம் முக்கியம். அதை விட அவர்களின் கொள்கை முக்கியம். எனக்கோ வலையுலக வாசிப்பில் வந்த விமர்சனங்கள் முக்கியம். எவர் என் தளத்தில் படிக்கின்றார்கள். அவர்கள் விமர்சனம் எப்படி இருக்கின்றது என்பதை வைத்து என்னை நானே ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொண்டே வருகின்றேன்.  ஆனால் உண்மைகளை முடிந்த வரைக்கும் புடம் போட்டுப் பார்கின்றேன். முழுமையாக இல்லாவிட்டாலும் கூட என் அனுபவ அறிவுக்கு எட்டியவரைக்கும் முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றேன். என் குடும்ப, தொழில், எழுத்து வாழ்க்கையில் முயலாமை, இயலாமை என்ற வார்த்தைகளுக்கு இடமே இருந்ததில்லை.

தேடல் தான் நம்மை மனிதராக வைத்து இருக்கின்றது. 

உண்மையான மனிதராகவும் மாற்ற முயற்சிக்கின்றது.

சீனா அவர்களை முதன் முதலாக டீச்சர் துளசி கோபால் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சியில் சந்தித்தேன். உள்ளே நுழைந்த நான் முன்னால் அமர்ந்திருந்த அவர் இருந்த இருக்கைக்கு அருகே சென்று அமர்ந்தேன். என்னை அவருக்குத் தெரியாது. ஆனால் அவரை நன்றாக எனக்குத் தெரியும். என்னுடன் நண்பரும் வந்திருந்தார். 

நண்பரிடம் சீனா அவர்கள் காதில் கேட்கும்படி வலையுகில் நீங்கள் பார்த்தவரைக்கும் நேர்முறை எண்ணங்கள், அமைதியான ஆர்ப்பபாட்டம் இல்லாத நதி போல ஒரே நேர்கோட்டில் அடுத்தவருக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்து எவரையாவது பார்த்து இருக்கின்றீர்களா? என்று கேட்டு விட்டு அவர் தான் இவர் என்று சீனா அவர்களிடம் கைகுலுக்கி நான் தான் ஜோதிஜி என்றேன். ஒரு கணம் திகைத்து நெகிழ்ந்து விட்டார்.

அப்போது தான் என் முகம் அவருக்குத் தெரிந்தது.

பொறுமை, விடாமுயற்சி, ஆழ்கடல் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை என்றால் அது எப்படி இருக்கும் என்பதை சீனா அவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரின் வயதில் நாம் இப்படி ஆரோக்கியமாக இருக்க முடியுமா? என்று பலமுறை யோசித்துள்ளேன். 

அவரிடம் அவருக்குத் தெரியாமலேயே நான் நிறைய கற்றுக் கொண்டிருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கிகளை தீர்த்து விடும் பொருட்டு இந்த வாய்பை எடுத்துக் கொண்டுள்ளேன்.

இந்த வலைச்சரத்தில் அறிமுகமான, அறிமுகமாகப் போகும் பலருக்கும் என்னை அறிமுகம் செய்து கொள்வதை விட என்னை இந்த வலைச்சரத்தின் வாயிலாக அறிமுகம் செய்துவைத்த திரு. அப்பாத்துரை அவர்களின் வரிகளை இந்த இடத்தில் இணைத்து விட்டுச் செல்கின்றேன். 

கடந்த நான்கு வருடங்களாக வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு கிடைத்த பல அங்கீகாரத்தில் இந்த இடத்தில் இதைத் தவிர வேறு எதையும் சுட்டிக்காட்ட தெரியவில்லை. இந்த சமயத்தில் தேவியர் இல்லம் திருப்பூர் என்ற வலைபதிவிற்கு கோடை விடுமுறை. சீனா அவர்கள் கடிதம் அனுப்பிய நாள் முதல் எழுதி வைத்து விட்டேன்.  

இந்த வாரம் முழுக்க இங்கே இரவு நேரத்தில் மட்டுமே இங்கே வர முடியும். ஒவ்வொரு நாளும் என் பதிவில் உள்ள சிலவற்றை ஒவ்வொரு நாளும் தரும் எண்ணமும் உண்டு. என் வலைபதிவு அனுபவங்களையும் தினந்தோறும் எழுதி வைத்து விடுகின்றேன். தினந்தோறும் நான் அறிமுகம் செய்யப் போவது இரண்டு பதிவுகள் மட்டுமே. ஆனால் அதனை என் விமர்சனப் பார்வையில் வைக்கப் போகின்றேன். பஞ்சாயத்தை கூட்ட விரும்பவர்கள் திருப்பூரில் காந்தி நகரில் உள்ள காந்தி வஸ்திராலயம் அலுவலகத்தில் உள்ள ஆலமரத்தடிக்கு அருகே வந்து விடவும்.

உணர்ந்தவர்கள் பெறுவீர்களாக.

வலை என்றால் இணையம். அதென்ன பதிவுகள் என்றொரு வார்த்தை வருகின்றதே என்று யோசித்து இருக்கின்றீர்களா

ஒரு தகவல் நம் மனதில் ஆழ்மனத்தில் பதிவாக படிந்து போய் இருந்தால் அதை எந்த காலத்திலும் அழித்து விட முடியாது.  நவீன விஞ்ஞானம் இதை மனநல மருத்துவத்தில் வைத்து பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றது. நம் விருப்பங்களை, ஆசைகளை, எண்ணங்களை, நோக்கத்தினை நம்மால் எழுத்துப் பதிவுகளாக மாற்ற முடியும். 

காகிதம் எதிர்காலத்தில் அழிந்தாலும் இந்த வலைபதிவுகள் இன்னும் பல தலைமுறைகள் கழித்தும் பலரின் கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த அரிய வசதியை கண்டு பிடித்து தந்தவர்களுக்கும் இதை இன்று பரவலாக்கிய கூகுள் என்ற அமைப்பை உருவாக்கித்தந்தவர்களுக்கும், இந்த வலைபதிவுகளை அதன் பரிணாம வளர்ச்சியை தந்தவர்களுக்கும்முதலில் நாம் வணக்கத்தை வைத்து விடுவோம்.  

ஆனால் இந்த தமிழை உலகமெங்கும் கொண்டு சேர்ந்த ஈழத் தமிழர்களை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

வலைபதிவுகளில் யார் எழுதுகின்றார்கள்? யாருக்குப் போய்க் சேர்கின்றது? யாருக்கு முக்கியமானது? என்ன பலன்? எப்படி மாறும்?

1. அலுவலகத்தில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் பாதி நேரம் பயத்தோடு, பல நேரம் உழைக்க அக்கறையின்றி இருக்கும்  புத்திசாலிகளுக்கு .....

2. என் எழுத்தை அங்கீகரிக்க பத்திரிக்ககை உலகம் மறுக்கின்றது. நானே எனக்கு ராஜா. என் திறமையை இந்த உலகத்திற்கே கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்று நம்பி எழுதுபவர்களுக்கு...........

3. உண்மையான விசயங்களை பத்திரிக்கை உலகம் பொருட்படுத்துவதே இல்லை. அவரவர் சுயநலம் தான் முக்கியமாக இருக்கின்றது. போட்டு உடைத்து கிழித்து மேய்ந்து எழுத கற்றுக் கொண்டவர்களுக்கு.........

4. என் ரசனைகளுக்கு பத்திரிக்கைகள் தீனி போடுவதில்லை. ஒவ்வொருவர் அனுபவங்களையும் அவர்கள் எழுத்தின் மூலமாக நான் அதிகம் வாசிக்க விரும்புகின்றேன்..........

5. உலகம் முழுக்க பரவியுள்ள தமிழர்களைப் பற்றி நான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்ள....

6. எனக்கு வயதாகி விட்டது. ஓய்வு பெற்று விட்டேன். பரபரப்பான உலகில் பேச பழக ஆட்கள் கிடைப்பதில்லை. நான் வாசிக்கும் புத்தகங்களையும் மீறி எனக்கு ஒரு ஆறுதல் வேண்டும் என்பவர்களுக்கு...

7. பதிவுகள் என்பதெல்லாம் ஒன்றுமில்லை.  எனக்கு எப்போதுமே ஜாலியோ ஜிம்கானாதான்.  நானும் நல்ல விசயங்களை தேடிப்போக மாட்டேன். தேடிவருபவர்களையும் முழு நேரமாக கலாய்த்துக் கொண்டிருப்பதே எனது முழு நேர தொழில் என்பவர்களுக்கு................

8. எனக்கு தினந்தோறும் அலுவலகம் முடியும் போது முடிந்த பிறகு ஒரு மணி நேரம் தான் கிடைக்கும். அந்த சமயத்தில் எவன் சொல்லும் அறிவுரையும் எனக்குத் தேவையில்லை.  நான் எப்போதுமே கும்மி ஆதரவாளன். மொக்கை சங்கத்தின் பொதுச் செயலாளர். அந்த சமயத்தில் தூள் கிளப்பிட்டு தூங்க போயிடுவேன் என்பவர்களுக்கு.....

9. பெற்ற அம்மா ஒரு பெண் என்ற போதிலும் உடன் வாழும் மனைவி, கூடப்பிறந்த சகோதரி, பெற்ற மகள்கள் இருந்த போதிலும் பெண்களை ரசிக்க, ரசித்ததை வார்த்தைகளில் கூச்சமின்றி எழுத அதை பீற்றிக் கொள்ள கூடவே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு.....

10. ஆழமான கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளைத் தேடுவேன். அற்புதமான தொழில் நுட்ப வசதிகளை அறிந்து கொள்ள விரும்புவேன். ரசனையான படங்களை பார்க்க விரும்புவேன். அரசியல், ஆன்மீகம், சமூகம் குறித்த அக்கறையை எழுத்துக்களின் மூலம் உள்வாங்க விரும்புகின்றேன் என்பவர்களுக்கு......

11. அலுவலகத்தில் வீட்டில் இணையம் வசதி படைத்தவர்களுக்கு .................. தமிழ்நாட்டில் யூபிஎஸ் வசதி பெறற புண்ணிய ஆத்மாக்களுக்கு...........

12. பொழைக்கின்ற பொழைப்பை பார்ப்பதை விட்டு விட்டு கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு கண்டதை பார்த்துகிட்டு இருக்கானே(ளே) என்று திட்டு வாங்கிக் கொண்டும் இந்த உலகில் பயணிக்க ஆசைப்படுவர்களுக்கு..................

13. தற்போது இணையத்தில் அரசாங்கத்திற்கு பிடிக்காத கருத்துக்களை(?) எழுதுபவர்களை அடக்க 66 ஏ என்ற சட்டம் தற்போதைய புனித தலைவியின் ஆட்சியில் குண்டா சட்டமாகவும் மாறியுள்ளது. அய்யோ நாம் எழுதினால் களி திங்க வைத்து விடுவார்களோ என்று மனதளவில் பயந்து கொண்டே வேடிக்கை பார்க்க மட்டும் நினைப்பவர்களுக்கு ......

14. யாருக்கு ஓட்டுப் போட்டால் நமக்கு வந்து போடுவார்கள். யாருக்கு பகிர்வுக்கு நன்றி எழுதி வைத்தால் நம் பதிவுக்கு வருவார்கள் என்ற பிழைப்புவாதிகளுக்கு................

எதிர்கால உலகம் இந்த வலையின் பின்னால் மட்டும் அணிவகுத்து நிற்கும் போது பலருக்கும் பலவிதமான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.

தகுதியிருப்பவர்கள் பிழைப்பீர்களாக.

அடுத்த வருடம் சந்திப்போம்.
ஜோதிஜி திருப்பூர்.
படங்கள் 4 தமிழ்மீடியா.காம்


37 comments:

  1. வருக ! வருக! நான் தங்களை வலைவழி கண்டவன்! மின் விசை பற்றிய தங்களின் தொடர் கட்டுரையை விடாது தொடந்து படித்தவன் என்ற முறையில், தங்கள் பணி சிறக்கவென வாழ்துகிறேன்!

    ReplyDelete
  2. ஜோதிஜி,

    ஒரு வாரத்து வேலையை இரண்டு வருஷம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  3. வணக்கம் ஜோதிஜி,

    வலைப்பதிவுலகில் எழுதி வரும் பலரில், நடப்புக்கால நிகழ்வுகளைக் கவனித்து, உணர்ச்சி வயமான மனநிலையுடன் எதையும் எழுதாமல் சற்று உரிய தரவுகளுடன் துவைத்து காயவைத்து தருவதில், ஒரு சாமானியனாய் என் பார்வையில் எப்போதும் முதலிடம் ஜோதிஜிக்கே!

    இந்த ஒருவார காலமும் அரிய, முக்கிய தகவல்கள் தோலுரிக்கப்படும் என்று நம்புகிறேன்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. கடந்த ஓராண்டாக இருந்தும் உங்கள் பதிவுகளை பற்றி தெரியாமல் இத்தனை நாள் வீணடித்து விட்டேனே என்று வருந்துகிறேன். புத்தகம் சிறப்பான முறையில் வெளிவர வாழ்த்துக்கள்.
    வலைசரத்திற்கு நன்றி.

    ReplyDelete
  5. உங்களது பல எண்ணங்கள் எனது மன நிலையையும் பிரதிபலிக்கின்றன.

    வாருங்கள்.
    விளாசுங்கள்.

    உண்மையிலேயே நான் எதிர்பார்ப்பது கிடைக்கும்போல் இருக்கிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  6. @ :)))))))))))))

    @ ஜோதிஜி.. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள். சீனா அய்யா பதிவுலகத்தில் சத்தமில்லாமல் சாதனைகள் படைத்துக்கொண்டு இருப்பவர்.

    அதற்கு வலைச்சரம் இந்த பக்கமே சாட்சி :)

    ReplyDelete
  7. முதல் சிரிப்பான் வவ்வாலுக்கு :))

    ReplyDelete
  8. தொழில், குடும்பம் என்ற இரண்டு தண்டவாளத்தில் மேல் ஓடினால் தான் இந்த எழுத்து என்ற பயணம் சுகமாக இருக்கும். தண்டவாளங்கள் சரியில்லை என்றால் வண்டி எப்போதும் கடமுடா தான்.

    அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

    ReplyDelete
  9. ஜோதிஜி உங்களை இங்கு வலைத்தள ஆசிரியராக சீனா அவர்கள் நியமித்து இருந்தால் அவருக்கு எனது கண்டணங்கள். காரணம் நீங்கள் சாதாரண ஆசிரியர் அல்ல மிக நல்லாசிரியர் அதனால் அவர் உங்களை இங்கு தலைமை ஆசிரியராக நியமித்து இருக்க வேண்டும். அவ்வளவுதான்.... நான் சொல்ல வருவது ஹீ.ஹீ.ஹீ

    ReplyDelete
  10. அன்பின் ஜோதிஜி - அருமையான் அறிமுகம் - பொறுமையாகப் படிக்க வேண்டும் - செய்கிறேன் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. இந்த வார வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள். சுவாரசியமான அறிமுகத்துடன் ஆரம்பித்திருக்கிரீர்கள்.தொடருங்கள். பின் வர காத்திருக்கிரோம்.

    ReplyDelete
  12. வணக்கம் ஜோதிஜி,

    உங்கள்ளுடைய வலைப்பதிவை படிக்க நான் எடுத்துக்கொள்ளும் நேரம் மிக மிக அதிகம். காரணம் எந்த ஒரு பதிவாக இருந்தாலும் அதை முழுமையாக, பொறுமையாக சொல்ல நினைத்ததை சொல்லி முடித்திருபிர்கள். எப்படி இவர் மட்டும் இவ்வளவு சிறப்பாக எழுதுகிறார் என்று வியப்பாக இருக்கும்.

    எப்படி இவருக்கு இவ்வளவு எழுத நேரம் கிடைக்கிறது. முழுநேர வலைப்பதிவரா என்றுகூட நினைத்ததுண்டு. என் மனதில் பல கேள்விகள் இருந்தன இப்போது அதில் கொஞ்சம் அகன்றது. இன்னும் நிறைய இருக்கிறது.

    ஒவ்வொருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.அதுபோல் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அருமையான அறிமுகம்.

    இந்த ஒரு வார ஆசிரியர் பொறுப்பில் இருந்து எங்களுக்கு எவ்வளவு விஷயங்களை கற்றுக் கொடுக்கப் போகிறீர்கள்? என்பதை விட நான் உங்களிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ள போகிறேன் என்பதே எனது கவலை.

    காத்திருக்கிறேன் நாளைய பாடம் வரை.

    இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

    (நான் என் மனதில் படுவதை யோசிக்காமல் அப்படியே எழுதுபவன், ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே!)

    ReplyDelete
  13. வவ்ஸ் ... :))

    முண்டாசு கலக்கு சொல்லுதேன்!

    ReplyDelete
  14. மிக அருமையான அறிமுகம் ஜோதிஜீ
    வாழ்த்துக்கள்

    http://samaiyalattakaasam.blogspot.com/2012/12/blog-post_30.html

    ReplyDelete
  15. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்..!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
  17. வலைபதிவுகளில் யார் எழுதுகின்றார்கள்? யாருக்குப் போய்க் சேர்கின்றது? யாருக்கு முக்கியமானது? என்ன பலன்? எப்படி மாறும்?

    என்ற தங்களின் அலசல் கண்டு வியந்து போனேன்.

    அதிலும் வரிசை எண் 1 மற்றும் 9 பற்றி தாங்கள் எடுத்துரைத்துள்ள கருத்துக்களும், அதை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொல்லியுள்ள விதமும் என்னை மிகவும் கவர்ந்தது.

    தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்.

    மனமார்ந்த வாழ்த்துகள்.

    வலைச்சர ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கும், நியமித்துள்ள அன்பின் திரு சீனா ஐயா அவர்களுக்கும் என் வாழ்த்துகள், பாராட்டுக்கள், நன்றிகள்.

    நாளை துவங்க உள்ள ஆங்கிலப் புத்தாண்டு 2013 க்கு எல்லோருக்கும் என் இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  18. ஆசிரியர் பணி செய்ய வலைச்சரம் வந்த ஜோதிஜி திருப்பூர் அவர்களை (தேவியர் இல்லம் http://deviyar-illam.blogspot.in) அன்புடன் புத்தாண்டு (2013) வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்!

    ReplyDelete
  19. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    வலை என்றால் இணையம். அதென்ன பதிவுகள் என்றொரு வார்த்தை வருகின்றதே என்று யோசித்து இருக்கின்றீர்களா?//

    அருமையாக விளக்கம் தந்து விட்டீர்கள்.


    காகிதம் எதிர்காலத்தில் அழிந்தாலும் இந்த வலைபதிவுகள் இன்னும் பல தலைமுறைகள் கழித்தும் பலரின் கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த அரிய வசதியை கண்டு பிடித்து தந்தவர்களுக்கும் இதை இன்று பரவலாக்கிய கூகுள் என்ற அமைப்பை உருவாக்கித்தந்தவர்களுக்கும், இந்த வலைபதிவுகளை அதன் பரிணாம வளர்ச்சியை தந்தவர்களுக்கும், முதலில் நாம் வணக்கத்தை வைத்து விடுவோம்//

    ஆம், அவர்களுக்கு நம் வணக்கத்தை கண்டிப்பாய் சொல்வோம்.
    வாழ்க வளமுடன்.



    //எதிர்கால உலகம் இந்த வலையின் பின்னால் மட்டும் அணிவகுத்து நிற்கும் போது பலருக்கும் பலவிதமான வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.//

    உண்மைதான்.


    வலையில் எழுதுபவர்களை பத்திரிக்கை உலகம்,அரசியல்வாதிகள் கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
    அதனால் நல்லதை சொல்லி எல்லோருக்கும் பயன்பெற செய்வோம்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  20. வணக்கம்
    ஜோதிஜி

    இன்று நல்ல அறிமுகத்துடன் மிகவும் பிரமாண்டமாக வலைப்பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் இன்று வலைச்சர பொறுப்பேற்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் தொடருகிறேன் உங்கள் பதிவுகளை

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,

    -நன்றி-
    -அன்புடன்-

    ReplyDelete
  21. ஜோதிஜி!பட்டியலிட்டதில் எதிலும் நான் சேரலையே:)

    நீங்க திட்டமிடலோடு பதிவுகளை தருகிறீர்கள் என்கிறீர்கள்.ஏதாவது ஒரு உணர்வில் அப்போதே அப்படியே வந்து உட்கார்ந்து கொள்வதே என் எழுத்துக்கள்.

    வலைச்சர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. அன்புள்ள ஜோதிஜி,
    தாமதமான வருகைக்கு முதலில் மன்னிப்பு.
    எத்தனை ஆழமாக சிந்தித்து செயல் படுகிறீர்கள் என்று உங்கள் ஒவ்வொரு வரியும் உணர்த்துகிறது.
    அறிமுகத்தையே பலமுறை படித்தேன்.
    உங்களது அர்பணிப்பு ஆச்சர்யப் பட வைக்கிறது.

    இரண்டாம் முறையாக ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

    உங்களது நிதர்சனமான எழுத்துக்களுடன் புத்தாண்டைத் துவக்குவது மன நிறைவான விஷயமாக இருக்கிறது.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete


  23. முதல் வாழ்த்துக்கு நன்றி சீனி.

    வணக்கம் அய்யா புலவர் சா இராமநுசம்.

    உங்கள் கவிதைகளை விட வலையுலகில் நீங்கள் காட்டும் அளவுக்கு அதிகமான சகிப்புத்தன்மை, மற்றவர்களை மனதார பாராட்டும் பாங்கு, மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும் போது அதை கண்டு கொள்ளாமல் ஓதுங்கி நிற்கும் பாங்கு என்று பலவற்றையும் உங்கள் மூலம் கற்றுக் கொண்டு வருகின்றேன். உங்கள் வாசிப்புக்கு என் வணக்கம்.

    வவ்வாலு உங்களுக்கு பின்னால் வந்த விமர்சனங்களை சமர்ப்பிக்கின்றேன். நாளைக்கு வச்சுக்குறேன். வாங்கப்பூ வாங்க..........

    சத்ரியன் சிறந்த கவிஞராக இந்த வருடம் மாறியுள்ளீர்கள். சிறப்பான வடிவமைப்பில் உங்கள் புத்தகத்தை கொண்டு வந்தமைக்கு என் தனிப்பட்ட பாராட்டுரை.

    உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி முரளிதரன்.

    சிவா இன்று சீனா அய்யாவுக்கு உடல் நலம் சரியில்லை. தொழிற்களம் விழாவிற்கு இதன் காரணமாக வர முடியவில்லை என்றார். அவரின் உடல் ஆரோக்கியம் சிறந்து 2013 வருடம் முழுக்க இந்த வலைச்சரத்தை சிறப்பாக நடத்தி பலரையும் வெளியுலகத்திற்கு கொண்டு வர என் வாழ்த்துகள்.

    உங்கள் சிரிப்பானுக்கு என் ஊக்கப்பரிசு நிச்சயம் உண்டு.

    ReplyDelete
  24. வணக்கம் குணா. இந்த வருடம் உங்கள் மூலம் தமிழ்ச்செடி மூலம் பல நல்ல விசயங்களை இந்த இணையத்தில் கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளோம். உங்கள் ஒத்துழைப்பை அவசியம் எதிர்பார்க்கின்றோம்.

    அவர்கள் உண்மைகள்.

    இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த நல்ல நட்பு நீங்களும் தான். தேவியர் இல்லத்திற்கும், ஞானாலயா வலைதளத்திற்கும் தாங்கள் செய்த உதவி என்பது என்றென்றும் எங்கள் நினைவில் இருக்கும். என் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போல ஆகிவிட்டீங்க. உங்கள் குடும்பத்திற்கு தேவியர் இல்லத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா.

    வணக்கம் சீனா அய்யா

    உடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளவும். சென்ற தடவை போலவே சிறப்பாக ஒரு வாரத்தை உங்கள் பாரத்தை இறக்கி வைத்து விட்டு வேடிக்கை பாருங்க. நம்மள சுத்தி பங்காளிங்க நிறைய பேரு இருக்காங்க. சென்ற தடவை ஹாலிவுட் பாலா இருந்தார். இந்த தடவை நம்மை கலாய்க்க வவ்வுஜீ இருக்கார்.

    வணக்கம் லஷ்மி அம்மா. மிக்க நன்றி.

    ReplyDelete


  25. semmalai akash

    உங்கள் தொடர் வாசிப்பு பலமுறை ஆச்சரியப்படுத்தியுள்ளது. உங்கள் அக்கறை சார்ந்த விமர்சனங்கள் அதிசியப்டுத்தியுள்ளது. உங்களைப் பற்றி நான் மனதில் வைத்திருந்த பிம்பத்தை உங்கள் எழுத்தின் மூலம் கண்டது எனக்கு ஆச்சரியமல்ல. விமர்சனக்கலையைப் பற்றி இதில் ஒரு நாள் எழுதுகின்றேன். உங்கள் அக்கறைக்கு என் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தேவியர் இல்லத்தின் இனிய ஆங்கில வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

    தெகா

    ஏன்னடி ஓடிட்டேய். வவ்ஸ் பார்த்து மனசுக்குள் நக்கலு விக்கலு. இருடி வச்சுக்குறேன்.

    ஜலலிலா தங்கள் வருகைக்கு நன்றி.

    வணக்கம் நலமா? இராஜேஸ்வரி. அமைதியான நதி போல எப்போதும் உங்கள் வாசிப்பு இருக்கும் என்பது என் யூகம்.

    வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன்.அய்யா

    வலைச்சரத்தில் உங்களின் அதகளத்தை ரசித்ததில் நானும் ஒருவன். பாராட்டுவதில் வஞ்சகம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் போட்டு திணற அடித்து வைத்து விடுவதில் நீங்க கில்லாடி தான். உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. உண்மை தான். அனைவருக்கும் தேவியர் இல்லத்தின் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. தி தமிழ் இளங்கோ

    குறிப்பிட்ட தளங்கள் மட்டும் வாசிக்கும் நீங்க உங்கள் வாசிப்பில் இருக்கும் எனது தளத்திற்கும் தவறாமல் கொடுக்கும் உங்கள் விமர்சனத்தையும் கண்டு பல முறை ஆச்சரியப்பட்டுள்ளேன். எங்கள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. வணக்கம் கோமதி அரசு

    நான் சொல்ல வந்த விசயத்தை குறள் போல தெளிவாக சுருக்கமாக சொல்லிவிட்டீங்க. மிக்க நன்றி.

    வலையில் எழுதுபவர்களை பத்திரிக்கை உலகம்,அரசியல்வாதிகள் கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    ReplyDelete
  28. வணக்கம் ரூபன்

    நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  29. ராஜ நடராஜன்

    நான் வலையுலகில் பார்த்தவரையிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய முழுமையான பதிவின் சாரம்சத்தையும் படித்து விட்டு அழகான விமர்சனத்தின் மூலம் எழுதியவரை திக்குமுக்காட வைப்பதில் நீங்களும் வவ்வும் ஒரே தராசில் இரண்டு தட்டுகள்.

    ஜனவரி மாதம் இந்திய பயணம் உண்டா.

    ReplyDelete
  30. சுப்பு தாத்தா

    ஆச்சரியப்படுத்துறீங்க.

    ReplyDelete
  31. பெண்களில் அதிக ஆச்சரியத்தை தந்தவர் நீங்க தான் ரஜ்ஜினி அம்மா. மிக்க நன்றி.

    ReplyDelete
  32. //வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன்,ஐயா

    //வலைச்சரத்தில் உங்களின் அதகளத்தை ரசித்ததில் நானும் ஒருவன்.//

    ஆஹா, தன்யனானேன். இதை தங்கள் மூலம் கேட்பதே மனது மகிழ்ச்சியாக உள்ளது.

    //பாராட்டுவதில் வஞ்சகம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் போட்டு திணற அடித்து வைத்து விடுவதில் நீங்க கில்லாடி தான்.//

    நம் அன்பின் சீனா ஐயா, என் நண்பர்.

    அவருக்கு உதவுவதற்காக மட்டுமே, அதுவும் நெருக்கடி ஏற்படும் சமயங்களில் அவர் என்னை அலைபேசி + மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே, நான் ஒரு சில பதிவர்களை [அவர்களின் சம்மதம் வாங்கிய பின்பு] வலைச்சர ஆசிரியராக நியமிக்க பரிந்துரை செய்வேன்.

    அதுபோல என் பரிந்துரையில் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொள்பவர்களுக்கு, ஓர் உற்சாகம் தர வேண்டியது என் கடமையாகிறது.

    அதுபோல உற்சாகம் தர வேண்டியே என் நகைச்சுவை உணர்வுகளையும் கூட்டி, நிறைய பின்னூட்டங்கள் வலைச்சரத்தில் தருவது என் வழக்கம்.

    அதுபோல மட்டுமே சென்ற வாரம் ஆசிரியர் பொறுப்பேற்ற திருமதி உஷா அன்பரசு, வேலூர் அவர்களுக்கும் உற்சாகம் கொடுத்தேன்.

    //உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி. உண்மை தான்.//

    என் நகைச்சுவைகளுக்கு நடுவே, நானே பதிவு செய்துள்ள என் ஆதங்கத்தையும், அக்கறையையும், தாங்கள் நிச்சயமாக கவனித்திருப்பீர்கள்
    என்று நம்புகிறேன்.

    அவை கீழ்க்கண்ட இணைப்பில் நான் என் அன்புத்தம்பி “அவர்கள் உண்மைகள்” அவர்களுக்குக் கொடுத்துள்ள மூன்று பதில்களில் உள்ளன.

    அதையே தான் தங்களின்
    POINT NUMBER [NINE] ஒன்பதில் சொல்லியுள்ளீர்கள்.

    http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_27.html


    //அனைவருக்கும் தேவியர் இல்லத்தின் நல் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி, ஐயா.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  33. ஜோதிஜி,

    //அழகான விமர்சனத்தின் மூலம் எழுதியவரை திக்குமுக்காட வைப்பதில் நீங்களும் வவ்வும் ஒரே தராசில் இரண்டு தட்டுகள்.//

    நன்றி! விமர்சனத்தினை ஏற்கும் உங்கள் பக்குவம் தெரிகிறது.

    நாம கொஞ்சம் இடம்,பொருள்,ஏவல் பார்க்காமல் பேசிடுற ஆளு,அதான் பிரச்சினையே மற்றபடி நாம் விவாதம் செய்வதெல்லாம் கருத்து ரீதியாகமட்டுமே.அதனை நீங்கள் புரிந்து கொண்டவர் என்பதை உங்களின் பதிவுகள் மூலம் முன்னரே உணர்ந்துள்ளேன்.

    ராச நட, பவ்யமா விமர்சனம் செய்வார் ஆனால் நம்ம கிட்டே மட்டும் கோணங்கி தனம் காட்டுவார் :-))


    ---------

    விஷ்வரூபம் போல பயங்கரமா டிரய்லர் காட்டுறிங்க, என்ன வரப்போகுது?

    தெ.கா வாங்க ஒரு கைப்பார்த்துடலாம் ஜோதிஜிய :-))

    ReplyDelete
  34. ஆழமான சிந்தனைகளுடன் அறிமுகம்.
    தொடர்க.

    ReplyDelete
  35. யாருக்கு ஓட்டுப் போட்டால் நமக்கு வந்து போடுவார்கள். யாருக்கு பகிர்வுக்கு நன்றி எழுதி வைத்தால் நம் பதிவுக்கு வருவார்கள் என்ற பிழைப்புவாதிகளுக்கு.......
    /////////////////////////////////
    வவ்வூ,நட்டு இரண்டு புலிகள் வலைச்சரத்தில் மையம் கொள்ள காரணம் ஜோதிஜி என்கின்ற புயல் காரணமோ? நானும் ஐக்கியமாகிக்கொள்கின்றேன்!

    மேலே நான் மேற்கோள் காட்டியதை நன்றாக படிக்கவும் அஹா...அருமை சிறப்பான பகிர்வு எனும் கமெண்ட் போடும் நல்லவர்களே! உங்கள் கவனத்திற்கு

    இது புலிகள் விளையாடும் இடம் கொஞ்சம் ஓரமா உக்காந்து வேடிக்கை மட்டும் பார்க்கவும்! என்ன வவ்வூ ஓகேவா?

    ReplyDelete
  36. உங்கள் எண்ணமும் எழுதும் பேசும் பேச்சும் சம நிலையில் இருப்பதாய் கண்டு வியக்கிறேன் .......எல்லோருக்கும் வாய்ப்பதில்லை அந்த திறன் வாழ்த்துக்கள் தமிழ் பணியை சிறப்பாக ஆற்றும் ஜோதிஜி அவர்களுக்கு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது