07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 19, 2013

2. வலைச்சரம் இரண்டாம் நாள்: கவிதைகளுக்கு வரவேற்பு



நான் இலக்கியக் கட்டுரைகளை மட்டுமே வலைப்பதிவில் எழுத வேண்டும் என்று இருந்தேன். ஏனென்றால் வலைப் பதிவுலக வாசகர்கள் எந்த அளவுக்கு கவிதைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. சகோதரி தென்றல் சசிகலா,  கவிஞர் ரமணி போன்றவர்களின் கவிதைகளை தமிழ் மணத்தில் அடிக்கடி படிக்கும்போது அவர்களது கவிதைகளுக்கு இருந்த வரவேற்பினை தெரிந்து கொண்டேன். நானும் சில கவிதைகளை எனது வலைப் பதிவில் தந்துள்ளேன்.

இன்றைய  எனது அறிமுக வலைப்பதிவுகள்:

பதிவின் பெயர்: தீதும் நன்றும் பிறர் தர வாரா.  http://yaathoramani.blogspot.in  ( கவிஞர் ரமணி )

இந்த வலைப் பதிவில் எழுதிவரும் கவிஞர் ரமணி அவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. இவரும் திரு VGK அவர்களைப் போன்று பல பதிவர்களையும் உற்சாகப்படுத்துபவர். இவருடைய கவிதைகளை நான் பாரதியாரின் வசன கவிதைகள் போன்று பார்க்கிறேன். “ கவிதைச் சித்தாந்தமும் அரசியல் வேதாந்தமும்(http://yaathoramani.blogspot.in/2012/01/blog-post_24.html ) என்ற தலைப்பில் இவர் தந்த வரிகள் இவை

படிமங்கள் குறியீடுகளென
எப்படித்தான் பம்மாத்து செய்தாலும்
கருவற்ற சொல்லடுக்குகள் கவிதையாக முடியாது
அது கந்தன் மூக்கன் இயற்றியதாயினும் சரி
கவி அரசர்கள் இயற்றியதாயினும் சரி


பதிவின் பெயர்: தென்றல்
http://veesuthendral.blogspot.in ( சசிகலா )
சகோதரி தென்றல் சசிகலா கவிதைகளில் உள்ள எளிமையான சொற்கள், கவிதைநடை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு கவிதைகளை நினைவூட்டுகின்றன. சகோதரியின் அருமையான கவிதை வரிகள்....
நானும் எனது ஊரும் என்ற தலைப்பில்

        மாமரத்து குயில் ஓசை,
       
மஞ்சு விரட்டிய மைதானம்,
       
மலர் தேடும் வண்டுகள்,
       
ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரம்,
       
ஒரே ஒரு முறை ஊருக்குள் வந்து
       
போகும் ஒற்றை பேருந்து!
       
குதிக்க பயந்து குதித்தோடிய
       
குட்டித் திண்ணை!
       
திருவிழாக் கூட்டத்தில்
       
தொலைத்த பகைமை!
       
தினம் தினம் நீச்சல்
       
பழகிய ஆழ்கிணறு!
       
ஆற்றங்கரையில் ஆக்கிய
       
கூட்டாஞ்சோறு!
       
ஆயாவின் சுருக்குப்பை!
       
இப்படி எதுவும் இந்த பட்டினத்தில் இல்லை,
       
உன்னிடம் சுட்டிகாட்டி மகிழ... 

சகோதரி தென்றல் சசிகலா அவர்களின் இலக்கியப் பணி தொடரட்டும்.

பதிவின் பெயர்: புலவர் கவிதைகள்   www.pulavarkural.info
(புலவர் சா.இராமாநுசம் )

தனது 81 வய்தில் 350 பதிவுகளுக்கும் மேலாக எழுதிவரும் புலவர் சா.இராமாநுசம் அவர்கள் மரபுக் கவிதைகள் படைத்து வருபவர். கொண்ட கொள்கையில் தளராத உறுதி கொண்ட புலவர் அய்யா அவர்கள் கலப்பு  திருமணம் செய்து கொண்டவர். தமிழ், தமிழர் என்ற உணர்வோடு பல நல்ல வாழ்வியல் சிந்தனைகளையும் கவிதைகளில் படைத்து வருகிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பற்றி (http://www.pulavarkural.info/2011/11/blog-post_29.html ) புலவர் அய்யா எழுதிய வரிகள் இவை

கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்
      
கற்பனை வளமது கற்றிட வாரீர்!
புவிதனில் பலரும் படித்திட அவரே
      
புலமைக்கும் நிகரென உண்டா? எவரே
செவிதனில் இசையென விழுகிற சந்தம்
     
செம்மொழி உளவரை அதற்கிலை அந்தம்
நவிலவும் எளிய நற்றமிழ் சொற்கள்
      
நாவலர் சுவைக்கும் கற்கண்டாம் கற்கள்!

பதிவின் பெயர்:  எமது கவிதைகள் ...!
 http://kavidhaithuligal.blogspot.in  ( திருமதி. T.V. தங்கமணி )

எழுபத்துயிரண்டு வயது நிரம்பிய திருமதி. T.V. தங்கமணி அவர்கள். தானுண்டு தன் கவிதையுண்டு என்று எதனையும் எதிர்பாராது என் பணி அரன் துதிஎன்று வண்ண விருத்தங்களை இசையோடு வலைப் பதிவில் பாடுகிறார். எங்கள் ஊரான திருமழபாடியைப் பற்றிய இவரது கவிதையைப் பாடியதிலிருந்து இவரது கவிதைகளைப் படித்து வருகிறேன்..
திருமழபாடி வண்ணவிருத்தம் - "தனனா தனனா .. தனதான"    (http://kavidhaithuligal.blogspot.in/2011/10/blog-post.html)
வலைமீ தினிலே.. படுமீனாய்
...
வதையே செயுமூ..ழதுவீழும்
கலைசேர் மதிசூ.. டிடுநேசன்
...
கழலே தருவான்..துணையாக
நிலையா மிறைவோன்..அருளேதம்
...
நினைவா யடியார்..தொழுமீசன்
அலையார் புனல்சேர்.. மழபாடி
...
அகலா துறைமா..மணிதானே!...1

பதிவின் பெயர்: தூரிகையின் தூறல்
www.madhumathi.com ( திரு. மதுமதி)

கவிஞர் திரு. மதுமதி விதைகள் கட்டுரைகள் என்று பல சுவையான பக்கங்களை இங்கே படிக்கலாம். அண்மையில் சென்னையில் நடந்த வலைப் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு இவர் ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது. நாட்கள் போதவில்லை என்ற தலைப்பில் அழகாய் ஒரு சிந்தனைக் கவிதை தந்துள்ளார்.

பதிவின் பெயர்: கவிஞர் கி. பாரதிதாசன் http://bharathidasanfrance.blogspot.com

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இவர் தனது பெயருக்கு ஏற்ப தெள்ளு தமிழ் கவிதைகளை அள்ளித் தருகிறார். பிரான்ஸ் நாட்டில் கம்பன் கழக தலைவரான இவர் அங்குள்ள குறளரங்கம், கம்பன் கழகம் நிகழ்ச்சிகளையும் வண்ண புகைப் படங்களோடு விளக்குகிறார்.  பாட்டுக்கோர் புலவன் பாரதி http://bharathidasanfrance.blogspot.com/2012/12/1.html என்ற தலைப்பில்


வானூரும் நிலவிற்குத் தடையும் உண்டோ?           
                 மண்ணூரும் புழுவினிலே அடிமை உண்டோ?
தேனூறும் சொல்லெடுத்தே உரிமைத் தீயைத்
                திக்கெட்டும் பாரதியே ஏற்றி வைத்தாய்!
பாநூறு படைத்தாலும் உன்பாப் போன்று
                பழுதின்றிப் பாவலர்கள் படைக்கப் போமோ?
நானூறி உன்பாட்டில் திளைத்த தாலே
                நயமூறப் பாடுதற்குக் கற்றுக் கொண்டேன்!

என்று ஒரு தேனூறும் கவிதையைத் தருகிறார். கடல் கடந்து அயல்நாட்டில் தமிழ் மணம் பரப்பும்  கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் தொண்டு வாழ்க.

பதிவின் பெயர்: காரஞ்சன்(சேஷ்)   
http://esseshadri.blogspot.in  ( E.S.ஷேசாத்ரி )

அண்மையில் வலைச்சரம் ஆசிரியர் பணியைத் திறம்படச் செய்த தகவல் தொடர்பு துறையைச் சேர்ந்த திரு E.S.ஷேசாத்ரி அவர்கள் இந்த வலைப்பதிவினைத் தருகிறார். வலைப்பூ தேன் போன்ற கவிதைகளால் நிரம்பி வழிகிறது.

முதியோர் இருக்கும்
இல்லங்கள் பெருகட்டும்
முதியோர் இல்லங்கள்
பெருகாமலிருக்க!

என்ற கவிதையில் (http://esseshadri.blogspot.in/2012/11/blog-post_5.html முதியோர் இல்லம்!) உள்ள முரண்தொடை அருமை.

பதிவின் பெயர்: வேதா. இலங்காதிலகம்  

தமிழ்மணத்தில் வெளியாகும் இவருடைய கவிதைகளை படித்து வருகிறேன். நல்ல எழுத்தாளர். சிறந்த கவிஞர். இவரது பயணக் கட்டுரைகள் சுற்றுலா செல்பவருக்கு மிகவும் பயன்படுவன.

தொலைத்தவை எத்தனையோ என்ற தலைப்பில் நமது பழக்க வழக்கங்களில் நம்மோடு இருந்து காலமாற்றத்தால் மறைந்துபோன பொருட்களைப் பற்றியும் நடந்து முடிந்த நிகழ்வுகளைப் பற்றியும் எண்ணி எண்ணி ஏங்குகிறார். அவற்றுள் ஒரு பதிவு.... (தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மறைந்த தமிழறிஞர்  ஆறுமுக நாவலரை நினைவு கூறுகிறார்)
http://kovaikkavi.wordpress.com/2012/02/16/ தொலைத்தவை எத்தனையோ.6

பதிவின் பெயர் : திருவரங்கத்திலிருந்து http://thiruvarangaththilirunthu.blogspot.com (ரஞ்சனி நாராயணன்)

எங்கிருந்த போதும் திருவரங்கத்தை மறக்காதவர் சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்கள். தனது வாழ்க்கை அனுபவங்களை நகைச்சுவை உணர்வோடு சொல்பவர். கணபுரத்தென் கருமணியே....! http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/11/blog-post_17.html என்ற பதிவில்  //திருக்கண்ணபுரத்தில் கேட்ட திண்ணைப் பேச்சு: ஸ்ரீரங்கத்தில் பிறக்கணும். திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கணும். ரொம்ப விசேஷம். யார் செய்த புண்ணியமோ, ஸ்ரீரங்கத்தில் பிறந்து விட்டேன். // என்று பரவசப்படுகிறார். பேரக் குழந்தை பிறந்தவுடன் கையில் ஏந்தியவுடன் தனக்கு ஏற்பட்ட விவரித்துச் சொல்ல முடியாத மகிழ்ச்சியை  பாத கமலங்கள் காணீரே!  என்ற பதிவினில் சொல்லுகிறார். http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/12/blog-post_9.html  ரஞ்சனி நாராயணன் அவர்களின் பதிவுகளை அவரது பெயரிலேயே வரும்  http://ranjaninarayanan.wordpress.com  என்ற வலைப்பதிவில் அதிகம் காணலாம்.

பதிவின் பெயர் : கீதமஞ்சரி
கடல் கடந்து இருந்தாலும் தமிழை மறவாதவர் இவர். நல்ல கவிஞரும் ஆவார்.. இவருடைய திருச்சி பொன்மலை சந்தை பற்றிய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது அன்றிலிருந்து இவர் திருச்சிக்காரர் என்ற முறையில் இவருடைய பதிவுகளை வலையில் பார்க்கும் போதெல்லாம் படிப்பதுண்டு. அந்த பதிவு இதுதான். பொன்மலை என்பது என் ஊராம்.... http://geethamanjari.blogspot.in/2012/02/blog-post_27.html அந்த பதிவுக்கு நான் தந்த கருத்துரை // வணக்கம்! அட! நீங்க எங்க திருச்சியில் உள்ள பொன்மலை. மறக்க முடியாத ரெயில்வே ஆர்மரி கேட், சந்தை மற்றும் சாலை முழுக்க மரங்கள் உள்ள ரெயில்வே காலனி. இவைகளைப் பற்றி பசுமையான நினைவுகளோடு சுவையான பதிவு.

பதிவின் பெயர் : முத்துச்சிதறல்
http://muthusidharal.blogspot.in  (மனோ சாமிநாதன்)
தன்னைப் பற்றிய அறிமுகத்தில், “இளமைப்பருவம் தமிழகத்திலும் இல்லத்தரசியாய் 35 வருடங்கள் பாலைவன நாட்டிலுமாய் வாழ்ந்து வரும் அனுபவங்களில் கண்டெடுத்த எத்தனையோ முத்துக்களில் நல்முத்துக்களாய் தேடி எடுத்து முத்துக்குவியலாய் பகிர்ந்து கொள்ளவே இந்த இணையம்!என்று சொல்கிறார்.  இவர் எழுதிய  பாலைவனத்தில் பணிப்பெண்கள்!!  http://muthusidharal.blogspot.in/2012/07/blog-post_23.html என்ற பதிவில் சொல்லப்படும் தகவல்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.
கை மணம் என்றொரு பதிவையும் எழுதி வருகிறார்.



பதிவின் பெயர் : உஷா அன்பரசு,வேலூர் 



தமிழார்வம் மிகுந்த  இவர் தனது பதிவின் பெயரில் வேலூரையும் வலைப்பதிவின் முகப்பில்  அந்தவூர் கோட்டையையும் இணைத்துள்ளமை சகோதரிக்கு அவ்வூரின் மேலுள்ள அன்பை விளக்குகிறது. வேலூர் என்றாலே எனக்கு வேலூர் CMC  மருத்துவமனைதான் ஞாபகம் வரும் அந்த புகழ்பெற்ற மருத்துவமனை உண்டாக காரணமாக இருந்த பெண் டாக்டர் ஐடா ஸ்கடர் என்பவர் பற்றி ஒரு பதிவில் சொல்லி இருக்கிறார்.
( வேலூருக்கு பெருமை சேர்த்த வெளி நாட்டு பெண்மணி! http://tamilmayil.blogspot.com/2012/11/blog-post_23.html )
நன்றி’, ‘மன்னிக்கவும்’, ‘தயவுடன்எனற மூன்றினைப் பற்றி  அந்த மூன்று சொற்களை நீங்க சொல்வீங்களா..
என்ற பதிவில்   சொல்லுகிறார். 


பதிவின் பெயர் : மணிராஜ் 
http://jaghamani.blogspot.com இராஜராஜேஸ்வரி

மணிராஜ் என்ற பெயரில் எழுதி வருபவர் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள். கோயில் குளங்கள் என்று போவோருக்கு இந்த வலைப்பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். கோயில்களைப் பற்றியும் அங்குள்ள தெய்வங்களைப் பற்றியும் அழகான வண்ணப் படங்களுடன் தருகிறார். இடையிடையே அருமையான நாம் எப்போதும் கேட்கும் இன்னிசைப் பாடல்களின் வரிகள்.
அன்பென்ற மழையிலே என்ற தலைப்பில் 2011 இல் இவர் தந்த கிறிஸ்துமஸ் பற்றிய மறக்க முடியாத பதிவு இது.

வாரணம் ஆயிரம் என்ற தலைப்பில் ஆண்டாளின் திருப்பாவையை மையப்படுத்தி ஒரு பதிவு அழகிய படங்களுடன்.



 


















44 comments:

  1. குறிபிட்டுள்ள அனவைருமே நானும் ரசிக்கும் பதிவர்களே. நன்றி அய்யா!

    ReplyDelete
  2. அனைத்தும் அமர்க்களமான தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. புலமைப் பெற்றவர்களையும் (புலவர்கள் தமிழ் அறிஞர்கள் )கவிஞர்களையும் பாராட்டியமை நன்று.

    ReplyDelete


  4. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  5. பதிவின் பெயர் : மணிராஜ்
    http://jaghamani.blogspot.com இராஜராஜேஸ்வரி..//

    அருமையாய் எமது தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  6. மறுமொழி > // T.N.MURALIDHARAN said.. திண்டுக்கல் தனபாலன் said...
    கவியாழி கண்ணதாசன் said...//

    மேலே சொன்ன பதிவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  7. மறுமொழி > புலவர் சா இராமாநுசம் said...
    இராஜராஜேஸ்வரி said...
    நன்றி தெரிவித்த வலைப் பதிவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. தி.தமிழ் இளங்கோ சார்,

    நல்ல அறிமுகங்கள்,வாழ்த்துக்கள்!ஆனால் கவிதைகளை எல்லாம் படிக்கிறதில்ல,ஏன்னா படிச்சு அது கருத்துப்பிழையோட இருக்கிறது என் கண்ணில்ப்பட்டால் எதாவது சொல்லாம இருக்க மாட்டேன்,அப்புறம் வம்பாயிடும்,ஏன் கவிஞர்களின் கோவத்தை சம்பாதிக்கணும்னு ஒரு முன்னெச்சறிக்கை தான் :-))

    ReplyDelete
  10. அன்பு இளங்கோ ஐயா அவர்களுக்கு,

    நான் மிகவும் லயித்து எழுதிய பதிவு 'கணபுரத்தென் கருமணியே'.
    நெகிழ்ந்து எழுதிய பதிவு 'பாத கமலங்கள் காணீரே'.
    எப்படிச் சரியாகக் கணித்து இந்தப் பதிவுகள் மூலம் என் வலைத்தளத்தை அறிமுகம் செய்தீர்கள் என்று வியப்பாக இருக்கிறது, ஐயா!

    எனக்கு மிகவும் பிடித்த, வாசித்து மகிழும் வலைபதிவாளர்களான சகோதரிகள் வேதா, மனோ, உஷா, இராஜராஜேஸ்வரி இவர்களுடன் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருப்பது அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.


    திரு ரமணி, திருமதி சசிகலா அவர்களின் கவிதைகளை தொடர்ந்து படித்துவருகிறேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கவிதைகள் அற்புதமானவைகள்.

    புலவர் ஐயாவின் கவிதைகளைப் படிப்பது ஒரு இனிய அனுபவம்.

    புலவர் ஐயாவையும், திரு மதுமதி அவர்களையும் பதிவர் சந்திப்பில் சந்தித்தது மறக்கமுடியாத நிகழ்வு.

    கவிஞர் பாரதிதாசன், திரு காரஞ்சன்(சேஷ்) அவர்களது கவிதைகளையும் படித்து ரசித்து வருகிறேன்.

    இன்று எனக்குப் புதியவர்கள் திருமதி தங்கமணி, மற்றும் கீதமஞ்சரி அவர்களும்.
    உங்கள் அறிமுகத்தில் இருவரையும் வலைச்சரத்தில் சந்தித்தது மிகவும் சந்தோஷம்.

    இன்றைய நாளை மறக்க முடியாத நாளாகச் செய்துவிட்டீர்கள்!
    நன்றி, நன்றி நன்றி!

    ReplyDelete
  11. அன்புள்ள திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ, ஐயா அவர்களுக்கு,

    காலை வணக்கங்கள்.

    இன்றைய தங்களின் அறிமுகங்களான 13 பதிவர்களில் 11 பேர்களுடன் எனக்கு ஓரளவு நல்ல பரிச்சயம் உண்டு.

    எனவே என்னால் 85% மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்துள்ளது.

    அனைத்துமே முத்தான அறிமுகங்கள்.

    மிகவும் சத்தான பதிவர்கள்.

    அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள், மனமார்ந்த பாராட்டுக்கள்.

    தங்களுக்கு என் ந்ன்றியோ நன்றிகள்.

    வெற்றிகரமாகத் தொடரட்டும் தங்களின் இந்த வார வலைச்சரப்பணிகள்.

    இப்படிக்கு,

    " அ ன் பெ ன் ற
    ம ழை யி லே "

    அதிகமாக நனைந்துள்ள

    தங்களின் அன்பன்,

    VGK

    ReplyDelete
  12. வலைச்சரத்தில் என் வலைப்பக்கத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி! வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  13. மறுமொழி >வவ்வால் said...
    // நல்ல அறிமுகங்கள்,வாழ்த்துக்கள்!ஆனால் கவிதைகளை எல்லாம் படிக்கிறதில்ல,ஏன்னா ….. … //
    வவ்வால் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! இன்றைய தலைப்பு கவிதை என்று இருந்தாலும் கவிஞர் அல்லாத மற்றவர்கள் அறிமுகமும் உண்டு. ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னுரையாக எனது சில வரிகள் மட்டுமே! உங்களைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை, இருந்தாலும் எழுதி வைத்துள்ளேன். ( இனிமேல்தான் வரும்)

    ReplyDelete
  14. நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் எல்லா கவிஞர்களின் வலைகளிலும் நீந்தியிருக்கிறேன் என்றாலும்
    சில நீர் நிலைகள் நெஞ்சில் நிற்பவை.
    நினைத்தாலே தாகம் தீர்ப்பவை.

    திருமதி தங்கமணி , புலவர் திரு இராமானுசம் இவர்களை நான் குறிப்பாக
    பாராட்டியே தீரவேண்டும். என்ன தான் இருந்தாலும் எனக்கு மரபுக்கவிதைகள் மேல் தனியே ஒரு பாசம்.

    புதுக்கவிதைகளில் சில குறிப்பாக திருமதி சசிகலா அவர்களின் பாடல்கள்
    ஈர்க்கின்றன.
    கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கவிதைகளில் ஒரு உத்வேகம் உணர்கிறேன்.


    கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா என்றான் கவிஞன் ஒருவன்.
    புல் எல்லாம் வினை தீர்க்கும் அருகம் ஆகுமோ ?

    சொல் எல்லாம் திரண்டு வரின் பாடல் ஆகுமோ ? மனம்
    வெல்லாத வார்த்தைகள் தான் கவிதை ஆகுமோ ?

    மரபுக் கவிதைகள்
    அரபுப் புரவிகள் போல
    புதுப்புனலின் வேகம் போல
    துள்ளிக்குதிப்பவை.


    கவிஞன் ஒருவன் கவிதை எழுதவேண்டும் என்று எழுதத் துவங்குவதில்லை.
    கசக்கி கசக்கி அவன் எழுதியதை எறிவதும் இல்லை.
    எழுதுகிறான். அது கவிதை ஆகிறது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  15. அத்தனை பதிவர்களையும் ஒன்று சேர அறிமுகமாக்கியுள்ளது.திருமதி ரஞ்சனி சொன்னது போல மிக மகிழ்வாக உள்ளது. இதிலிருந்து தங்கள் ரசனையையும் அறிய முடிகிறது. இதில் என்னையும் அறிமுகப் படுத்தியுள்ளதும் மிக மகிழ்ச்சி. நன்கு கவனித்துள்ளீர்கள். மிக்க மகிழ்வும் நன்றியும். இன்று அறிமுகமாகிய எல்லா பதிவர்களுக்கும் இனிய நல் வாழ்த்து.
    உங்களைப் போல எத்தனை பேர் வலையை வாசித்திட்டு கருத்திடாமல் உள்ளீர்கள் அதனால் தான் எனக்கு 5,6 அல்லது 7,8 கருத்தாளர்களே உள்ளனர். பல தடவை வலைச்சரதில் அறிமுகமாகியுள்ளேன். ஒ.கே அது போகட்டும். தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து. இறையாசி நிறையட்டும். ( எனது அறிமுகத்தை-இதை முகநூலில் எனது சுவரில் இட்டுள்ளேன்)
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  16. வலைச்சரத்தில் அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. கவிதை படைக்கும் கவிஞர்களின் சில படைப்புக்களை இங்கே தொகுத்தளித்து குறிப்பிட்ட இன்றைய 2ஆம் நாளில் தங்களின் பணியை, செம்மையுறச் செய்தீர்கள். நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > Ranjani Narayanan said...
    தமிழ் இலக்கியம் பயிலும்போது ” ஆழ்வார்களும் தமிழும்” என்ற தலைப்பில் குறிப்புகள் எடுத்தபோது என்னை கவர்ந்த பாசுரங்களுள் இதுவும் ஒன்று.

    மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!*
    தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய்!* செம்பொன்சேர்
    கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே!*
    என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ. - குலசேகர ஆழ்வார்

    எனவே நீங்கள் எழுதிய “ கணபுரத்தென் கருமணியே” என்ற தலைப்பில் நான் லயித்து , சிறப்பான உங்கள் பதிவினை தேர்ந்தெடுத்தேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    // அன்புள்ள திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ, ஐயா அவர்களுக்கு, …. … //

    ஏற்கனவே எனது அப்பா தமிழ் மீது உள்ள ஆர்வம் காரணமாக பெயரை நீளமாக வைத்தார். நீங்களும் உங்கள் அன்பின் காரணமாக எனது பெயரை இன்னும் நீட்டி அழைத்தமைக்கு நன்றி! தி.தமிழ் இளங்கோவே போதும் (தங்கள் நண்பர் அப்பாதுரை மன்னிப்பாராக)

    ReplyDelete
  20. மறுமொழி > உஷா அன்பரசு said...
    நன்றி தெரிவித்த சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > sury Siva said...
    // மரபுக் கவிதைகள்
    அரபுப் புரவிகள் போல
    புதுப்புனலின் வேகம் போல
    துள்ளிக்குதிப்பவை. //

    உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஒரு காலத்தில் நானும் ஒரு குயர் நோட்டு புத்தகத்தில் பக்கம் பக்கமாக மரபுக் கவிதைகளை எழுதியதுண்டு.

    ReplyDelete
  22. மறுமொழி > kovaikkavi said...
    // உங்களைப் போல எத்தனை பேர் வலையை வாசித்திட்டு கருத்திடாமல் உள்ளீர்கள் அதனால் தான் எனக்கு 5,6 அல்லது 7,8 கருத்தாளர்களே உள்ளனர் //
    சகோதரி அவர்கள்து ஆதங்கம் புரிகின்றது. உண்மையில் WORDPRESS – இல் உள்ள பதிவு என்றாலே கருத்துரைகள் அதிகம் வருவதில்லை.(அதில் கருத்துரை இடுவதற்குள் போதுமடா சாமி என்று ஆகிவிடுகிறது) நேரம் கிடைக்கும்போது பழனி கந்தசாமி அவர்களின் பின்னூட்டம் போட இடைஞ்சல்கள் http://swamysmusings.blogspot.com/2012/11/blog-post_19.html என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > rajalakshmi paramasivam said...
    மறுமொழி > NIZAMUDEEN said..

    சகோதரி ராஜல‌ஷ்மி மற்றும் சகோதரர் நிஜமுதீன் இருவரது கருத்துரைகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  24. // சகோதரி அவர்கள்து ஆதங்கம் புரிகின்றது. உண்மையில் WORDPRESS – இல் உள்ள பதிவு என்றாலே கருத்துரைகள் அதிகம் வருவதில்லை.(அதில் கருத்துரை இடுவதற்குள் போதுமடா சாமி என்று ஆகிவிடுகிறது) //

    உண்மையோ உண்மை.

    இப்பொழுது தான் கோவைக்கவி அவர்கள் வலைக்குச் சென்று கருத்திட முயன்றேன். வெறுத்துப்போய் திரும்பும் நேரம்
    அப்பாடி என்று ஒரு தினுசா அலௌ செய்தது. நம்முடைய மெயில் ஐ.டி.கொடுத்து பாஸ் வெர்டு கொடுக்கவேண்டும். அப்பொழுது தான்
    வேர்டுப்ரஸ் கருத்திட அனுமதிக்கும். நான் நைஸா ஃபேஸ்புக் வழியாக டிமிக்கி கொடுத்து சைடு டோர் வழியாக சென்று
    அப்பாடா என்று அவர்கள் சொல்லும் அருவியிலே குளித்து , அடடா என்ன ஒரு ஜில்லுன்னு இருக்கு, ஹாய்யா திரும்பி வூட்டுக்கு வந்தேன்.

    லொக்...லொக்...லொக்...
    இன்னமும் இருமல் தீரவில்லை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  25. திருமதி. T.V. தங்கமணிஅவர்களைத் தவிர மற்ற அனைவரும் தெரிந்தவர்களே இங்கு தென்றலையும் அறிமுக படுத்தியது கண்டு மகிழ்கிறேன். தங்கள் கவிதை மீதான ஆர்வம் தெரிகிறது. புலவர் மற்றும் ரமணி ஐயா அவர்களுடன் தென்றலையும் அறிமுக படுத்தியது மிக்க மகிழ்வளித்தது. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி கூறி மீண்டும் நாளை தொடர்கிறேன்.

    ReplyDelete
  26. மறுமொழி > sury Siva said...

    WORDPRESS – இல் உள்ள வலைப்பதிவின் கருத்துரைப் பெட்டியில் கருத்துரையிடுவது சம்பந்தமான, தங்கள் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி > Sasi Kala said...

    எனது பார்வையில் வலைப்பதிவர்கள் – என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். வேறு தலைப்பில் தொடங்கிவிட்டேன். அப்படியே தொடர்ந்து முடித்துக் கொள்கிறேன்.
    கருத்துரை தந்த சகோதரி கவிஞர் தென்றல் அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete
  28. கீதமஞ்சரி அவர்களின் பொன்மலைப்பற்றிய பதிவொன்றில் பின்னூட்டம் ஒன்று இட்டிருந்தேன்.
    எல்லாவற்றிற்கும் பதிலளித்த ஆசிரியை என்னை மட்டும் மறந்து போனார்.

    இருந்தாலும் இன்னமும் பொன்மலையை என்னால் ( சார், எங்களால்) மறக்க முடியவில்லை.

    சுப்பு தாத்தா.
    மீனாட்சி பாட்டி.

    ReplyDelete
  29. வணக்கம்
    தி,தமிழ் இளங்கோ(சார்)

    இன்று அறிமுகம் கண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் (சார்)இன்று அறிமுகம் கண்ட தளங்கள் எல்லாம் எனக்கு தெரிந்தவை தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  30. வலைச்சரத்தில் என் வலைப்பூவினை இன்று அறிமுகப்படுத்தியதற்கு என் இதயங்கனிந்த நன்றி!

    வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக நிறைவேற்ற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    தற்போது தமிழ்நாடு வந்திருப்பதால் பல நாட்களுக்குப்பிறகு, சற்று முன்னர் தான் கணினியைத் திறக்க முடிந்தது. அதனால்தான் வலைச்சர ஆசிரியப்பணியில் அமர்ந்ததற்கு தாமதமாக வாழ்த்துக்கள் சொல்கிறேன்!

    அறிமுகம் பெற்ற‌ அனைத்து சகோதர உள்ளங்களுக்கு உளமர்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  31. மறுமொழி > sury Siva said...

    உங்கள் வருத்தத்தை அப்படியே நகலெடுத்து அவருடைய பதிவில் பதிந்துள்ளேன். அவர் ( கீதமஞ்சரி) பதில் தருவார்.

    ReplyDelete
  32. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி > மனோ சாமிநாதன் said...
    நன்றி தெரிவித்த சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > 2008rupan said...

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  35. திருமதி தங்கமணி அவர்கள் தமது பதிவில் தந்த பதில் இது. அவருக்கு நன்றி!

    Thangamani said...
    அன்புள்ள திரு.இளங்கோவிற்கு,
    மரபுக்கவிதை கற்கும் மாணவியான என்னை
    வலைச்சரத்தில் அறிமுகம் செய்த உங்களுக்கு
    என் மனமார்ந்த நன்றி! வாழ்த்துகள்!
    அறிமுகமான சகோதர சகோதரிகளுக்குப்
    பாராட்டுகள்!
    (வலைச்சரத்தில் பதிவை இடமுயன்றேன் இடமுடியவில்லை.
    தாமதத்திற்கு மன்னிக்கவும்.)
    February 19, 2013 at 11:46 AM

    ReplyDelete
  36. தங்கமணி கவிதைகள் சில, முதல் முறையாகப் படித்துப் பிரமித்தேன்.
    அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  37. மன்னிக்கவேண்டும் தி. தமிழ் இளங்கோ ஐயா. சமீப காலமாக தவிர்க்க இயலாத சில பணிச்சுமைகளால் என்னால் வலைப்பதிவுப் பக்கம் வர இயலவில்லை. அதனால் எனக்குக் கருத்திட்டப் பலருக்கும் பதில் அளிக்கவோ, பலருடைய பதிவுகளைப் படிக்கவோ இயலாமல் தவிக்கிறேன். அதற்காக என் வருத்தங்கள். விரைவில் வந்து வலையுலகில் சங்கமிப்பேன். என் பதிவைக் குறிப்பிட்டு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள். வலை அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சக பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    சுப்புத்தாத்தா அவர்களுடைய பதிவை என் கவனத்துக்குக் கொண்டுவந்தமைக்கு மிகவும் நன்றி. அவர்களுடைய வருத்தத்தைப் போக்கவேண்டியது என் கடமை.


    அன்பான சுப்புத்தாத்தா,
    பொன்மலை பற்றிய என் பதிவில் தங்களுடைய நெகிழவைத்தப் பின்னூட்டத்துக்கு நான் உடனே பதிலளித்திருந்தேன். என்னுடைய வலைப்பூவில் முதலில் இருந்த டெம்ப்ளேட்டில் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் கீழே பதிலளிக்கும் வசதி இருந்தது. ஒவ்வொரு கருத்துக்கும் கீழே பதிலளித்திருந்ததால் நான் எவர் கருத்தையுமே மேற்கோளிடவில்லை. மேற்கோளிட்டு பதிலளித்திருந்தால் இந்த ஐயம் வந்திருக்காது. இடையில் வேறு வேறு டெம்ப்ளேட் மாற்றியதில் அந்த வசதி போய்விட்டது. எல்லாப் பின்னூட்டங்களும் பதிந்த நேரம், தேதியின் அடிப்படையில் ஒன்றின்கீழ் ஒன்றாக மாறிவிட்டன. உங்களுக்கு நான் அளித்திருந்த பின்னூட்டமும் அப்படி இடம் மாறிவிட்டது. மன்னிக்கவும். தங்களுடைய அழகான நெகிழவைத்தக் கவிதைப் பின்னூட்டத்தையும், அதற்கு நான் அளித்திருந்த பதிலையும் இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்..


    தங்களுடைய கவிப்பின்னூட்டம்….

    \\திருச்சி மலைக்கோட்டை படத்தைப் போட்டு,
    திரும்பி வாரா அ ந் நாட்களை எல்லாம்
    திடுக் எனவே என் கண்முன்னே
    திருப்பி வைத்து விட்டீர்களே !!

    அந்தக் காலத்து ஆண்டார் தெரு
    ஆலமரம் ஒன்று அமைதியாய் வானளாவ
    அதன் முன்னே கருப்பண்ண சாமி ஒன்று குடியிருந்து
    ஆண்டாண்டு காலமாய் காத்து வரும் வீதியது.

    ஆடி பதினெட்டில்
    தேடி வரும் காவிரி வெள்ளம் .
    தைப்பூசத்திரு நாளில்
    தெருவெல்லாம் பக்தர் வெள்ளம் !!

    சித்திரை முதல் நாளில் நம்
    நித்திரை கலையுமுன்னே
    பித்துக்குளி முருகதாசின்
    நாலு வீதி ஊர்வலம்.


    காவேரி கரையங்கே என் பள்ளி. தெப்பக்
    குளமருகே என் கல்லூரி.
    கனிவே உருவான என் முதல்வர்.
    கடமையில் கண்ணாவார், எர்ஹார்ட் ஃபாதர்.
    இலக்கியத்தைப் பேச வந்த அதே நேரத்தில்
    நேயத்தையும் ஒழுக்கத்தையும் போதித்த ஸெக்யூரா

    எத்தனை சுவைகள் !!
    எத்தனை நினைவுகள் !!
    இத்தனைக்கும் நடுவிலே ....


    காலேஜ் படிக்கும்போதே காதல் வயப்பட்டு
    காலை மாலை பாராது
    கால் வலியும் பாராது
    மலை உச்சி வீதிகளில்
    மனங்கவரந்த அவள் வீட்டருகில்
    வலம் வந்த நேரங்கள், இனி
    வா எனினும் வருமா என்ன ?

    பாலக்கரை நெரிசல் ஊடே
    பொன்மலை ரயில் நிலையம் வந்து
    ஆள் இல்லா பெஞ்ச் ஒன்றில்
    அமர்ந்து பேசிய பேச்செல்லாம்
    அத்தனையும் சத்தியம் எனினும்
    அடுத்த சென்மம் ஒன்றிருந்தால்
    அப்போதுதான் சாத்தியம்.

    சுப்பு ரத்தினம்.\\

    மகிழ்வான என் பதில் பின்னூட்டம்…

    \\ஆஹா.... ஆழ்மனத்தில் உறங்கிக் கிடந்த பல நினைவுகளைத் தட்டி எழுப்பிவிட்டேன் போலும் இப்பதிவின் மூலம். சுமையா சுகமா தெரியவில்லை எனினும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் நிறைகிறது மனம். மிகவும் நன்றி.\\

    ReplyDelete
  38. வணக்கம் ஐயா..எப்படியிருக்கிறீர்கள்..தாமதமான எனது வருகைக்கு மன்னிக்கவும்.. தங்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்..

    ReplyDelete
  39. மறுமொழி > அப்பாதுரை said...
    // தங்கமணி கவிதைகள் சில, முதல் முறையாகப் படித்துப் பிரமித்தேன். அறிமுகங்களுக்கு நன்றி. //

    அவர் அவையடக்கமாய் குடத்திலிட்ட விளக்காய் , அரன் துதி என்று இருக்கின்றார். தங்கள் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  40. மறுமொழி > Madhu Mathi said...
    நன்றிக்கு நன்றி! அய்யா!

    ReplyDelete
  41. மறுமொழி > கீதமஞ்சரி said...

    பல்வேறு பணிகளுக்கு இடையில் எனது வலைத்தளம் வந்து கருத்துரை தெரிவித்தற்கும், சுப்பு தாத்தாவுக்கு பொன்மலை பற்றிய மறுமொழி அளித்ததற்கும் நன்றி!

    ReplyDelete
  42. அனைவரும் அருமையான பதிவர்கள்! அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  43. அறிமுகங்கள் அனைவரும் திறமையானவர்கள்.

    அனைவரையும் வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்.

    அறிமுகப் படுத்திய உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  44. மறுமொழி > s suresh said...
    மறுமொழி > மாதேவி said...

    பதிவர்களின் அன்பான வருகைக்கு நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது