07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 9, 2013

வாழ்த்துக்களோடு

விடை பெறும் நேரம் நெருங்கி விட்டது. 

உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு
முன்பு சில அறிமுகங்கள்.

நான் வலைப்பக்கம் எழுதத் தொடங்கிய காலம் முதல்
தவறாமல் பின்னூட்டம் இட்டு எனக்கு உற்சாகம் அளித்து
வருபவர் திரு பந்து . அவரது பதிவுகளுக்கு  நான்தான்
பின்னூட்டம் எழுதுவதில்லை. பெட் ரோல் விலை உயர்வு
தொடர்பாக அரசு தொடர்ந்து சொல்லி வரும் 
பொய்யை   அவர் இங்கே அம்பலப் படுத்தியுள்ளார்.

அவரது அமெரிக்க அனுபவம்  உங்களை சிரிக்க வைக்கும்.
இன்னும் ஒரு சிரிக்க வைக்கும் அனுபவமும் உங்களுக்காக.

சிறந்த எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா   எழுதியுள்ள
இந்த பதிவு  சிறப்பானது. 

எழுத்தாளர் பவா செல்லதுரை   எழுதிய இந்த பதிவை
படிக்கும் போது இயக்குனர் பாலா என்ற ஆளுமை 
மீது மரியாதையும் நேசமும் தானாகவே வரும். 
பாலகுமாரன், யோகி ராம்சூரத்குமார் பற்றிய
இந்த பதிவு மிகவும் சுவாரஸ்யமானது.  இந்த
குழந்தைகளின் கொண்டாட்டம்  நெகிழ்ச்சியளிக்கும்.

ஆனந்த விகடனில் சுகா எழுதிய மூங்கில் மூச்சு 
ரசிக்காதவர்கள் யார் இருக்க முடியும். இந்த ஆண்டு
சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகமாய் வாங்கி
ஒரே மூச்சில் படித்து முடித்தேன். எல்லோரையும்
எப்போதும் ஊக்குவிப்பதில் பெரியவர் தி.க.சி  
அவர்களுக்கு நிகர் யார் இங்கே. இளையராஜாவுடனான 
ஒரு பயணம் ரசனை மிக்கது. இதைப்  படித்து முடித்தவுடன்
நீங்களும் இந்த பாடலை தேடிச் செல்வீர்கள்.

இந்த ஒரு வார காலம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
பதிவுகள் அளிக்க வேண்டும் என்பதற்காக நினைவலைகளில்
மூழ்கி தேடிக் கண்டுபிடித்து அளித்துள்ளேன். அவை 
முத்தா இல்லை வெறும் சிப்பி மட்டும்தானா என்பதை
நீங்கள்தான் சொல்ல வேண்டும். 

வலைப்பக்கம் எழுதுவது, வலைச்சரத்தில் எழுத
வாய்ப்பு கிடைத்தது முதற்கொண்டு என்னைப் 
பொறுத்தவரை எனது வாழ்வும் வளமும் 
என்றுமே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் 
அளித்த பரிசாக கருதுகிறேன்.

இன்சூரன்ஸ் ஊழியர்கள் இன்று மற்றவர்களைக் காட்டிலும்
முன்னேற்றகரமான நிலையில் இருப்பதற்குக் காரணமான
இரு முக்கியத்தலைவர்கள்.தோழர் சுனில் மைத்ரா
மற்றும் தோழர் சரோஜ்சவுத்ரி.

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராய்
இருந்த தோழர் சுனில் மைத்ரா ஒரு சுதந்திரப் போராட்ட் வீரர்.
தன் வாழ்நாள் முழுதையும் தொழிற்சங்கப் பணிகளுக்காக
அர்ப்பணித்த அந்த மகத்தான தலைவர் சரோஜின்  இறுதி உரையை
அவசியம் படியுங்கள்.

இவர்களின் தியாகத்தால்தான் சரியான புரிதலோடு
தத்துவார்த்த பின்னணியோடு செயல்பட முடிகிறது. தேசம்
முழுதும் உள்ள உறுப்பினர்களிடம் ஒற்றுமையும் தோழமை
உணர்வும் பின்னிக் கிடக்கிறது. அந்த ஒற்றுமைதான் 
எல்.ஐ.சி யை இன்று வரை பாதுகாத்து வருகிறது. ஒரு
உதாரணம் சொல்ல முடியும்.

வேலூரில் நடைபெற்ற ஒரு சங்க நிகழ்வுகளின் 
புகைப்படங்களை வலைப்பக்கத்திலிருந்து எடுத்து
அதை வரைபடமாக்கி தனது வலைப்பக்கத்தில் 
வெளியிட்டார் பஞ்சாபைச் சேர்ந்த 
அனு மல்ஹோத்ரா என்ற ஒரு தோழர்
வெளிடிட்ட போது நெகிழ்ந்து போனேன்.. முகமறியாத,
குரலறியாத தோழர்களிடம் தோழமை உணர்வு எப்படி
சாத்தியம்? ஆனாலும் இங்கே அது நடந்து கொண்டுதான்
இருக்கிறது. 







இந்த  பெருமிதத்துடன் விடைபெறும் முன் இன்னும் ஒரு செய்தி.

நான் எங்கள் வெள்ளி விழா பற்றி முன்பே எழுதியிருந்தேன்.
அதன் ஒரு பகுதியாய் எங்கள் தோழர்களின் படைப்பாற்றல்
வெளிவர இன்று திருவண்ணாமலையில் கலை விழா 
நடைபெறவுள்ளது.

நான் பணியாற்றும் கோட்ட அலுவலகக் கிளை அரங்கேற்றவுள்ள
நாடகத்தை கீழே தந்துள்ளேன். இது எனது முதல் முயற்சி. 
வெற்றிக்கு வாழ்த்துங்களேன்.


என்ன பதில்?


காந்தி சிலையாக நிற்கிறார்.

கீழே உள்ள நாற்காலியில் பிரதமர் வந்து உட்கார்கிறார்

பிரதமர்  

அம்மாடி, இந்த நாடாளுமன்றம் முடிஞ்சதோ, நான் பிழைச்சேனோ,

யப்பப்பா என்ன சத்தம்? என்ன குழப்பம்?

வந்தோமோ, படிக்காசை வாங்கினோமா, காண்டீன்ல போய் டீ குடிச்சோமானு இல்லாம இதைப்பண்ணாத, அதைப் பண்ணாத னு போட்டு உயிர எடுக்கிறாங்க,

இன்னும் இரண்டு மாசம் நிம்மதி,

எங்கயாவது பாரீன் போக வேண்டியதுதான்.

எங்க போகலாம்?

ஸ்விஸ் போவோமா, மாதாஜி அங்க போட்ட பணமெல்லாம் பத்திரமா இருக்கானு கூட பாத்திட்டு வந்துடலாம்.

(பிண்ணனியில் “ போவோமா ஊர்கோலம் “ பாடல் ஒலிக்கிறது.

வியாபாரி உள்ளே நுழைகிறார்;

வியாபாரி : ஜீ இப்டி செஞ்சுட்டீங்களே, என் பொழைப்புக்கு என்ன வழி?

பிரதமர் : என்னாச்சு?

என் பெண்டாட்டி தாலியை சேட்டுகிட்ட அடமானம் வைச்சு மளிகைக் கடை வைச்சேன். நீ பாட்டுக்கு வால்மார்ட்டை திறந்து விட்டுவிட்டு என் கடைய மூட வைச்சுட்டியே, என் பிழைப்புக்கு என்ன செய்ய? என் பெண்டாட்டி தாலிக்கு என்ன பதில்?

பிரதமர்: எனக்கு தெரியாது.

விவசாயி உள்ளே நுழைகிறார்.

விவசாயி : ஐயா மவராசா, எனக்கு என்ன வேலை? எனக்கு என்ன வேலை?

பிரதமர் : என்னாச்சு?

விவசாயி: கஷ்டமோ, நஷ்டமோ, உயிரைக் கொடுத்து விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கோம். விதை விலை ஏறிப்போச்சு, உரம் விலை ஏறிப் போச்சு, காவிரியை நினைச்சா கண்ணீர்தான் வரும், மோட்டார் போடலாம்னா கரெண்டே கிடையாது. தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிச்ச நேரத்துலதான் ஐயா, வேற வேலைக்கு போகச்சொன்னீங்க, சொல்லுங்க, எனக்கு என்ன வேலை? எனக்கு என்ன வேலை?

பிரதமர் : எனக்கு தெரியாது.

விவசாயி.: தெரியாதா, அப்ப எதுக்கு வேற வேலைக்கு போகச்சொன்னே? என்னமோ பெரிசா வேலையெல்லாம் கொட்டிக் கிடக்கற மாதிரி! சரி நாங்க விவசாயத்த விட்டுட்டா நீ என்ன சாப்பிடுவே?

பிரதமர் : எனக்கு தெரியாது

குடும்பப்பெண்மணி உள்ளே நுழைகிறார்?

குடும்பப்பெண்மணி :  ஒரு வேளை கஞ்சி கூட கிடைக்காம பண்ணிட்டியே படுபாவி,

பிரதமர் : என்னாச்சு?

குடும்பப்பெண்மணி : ஏதோ ரேஷன் கடையில் இருபது கிலோ அரிசி கிடைச்சது. பூச்சியோ, புழுவோ சுத்தம் பண்ணி ஒரு வேளை கஞ்சி நானும் என் குழந்தையும் சாப்பிட்டுகிட்டு இருந்தோம். டைரக்டா பாங்கில பணம் போட்டே, அந்த பாவி மனுஷன் அதை அப்டியே எடுத்துக்கிட்டு டாஸ்மாக் போயிட்டான். இப்போ நாங்க பட்டினி. நாங்க வாழவா? சாகவா?

பிரதமர் : எனக்கு தெரியாது

மாணவி உள்ளே நுழைகிறாள்

மாணவி காந்தி சிலையைப் பாத்து : நடுராத்திரியில நகை போட்டுகிட்டு தனியா நாங்க பத்திரமா போனாதான் சுதந்திரம்னு சொன்னீங்க, வயசான பாட்டிங்களே  வெறுங்கழுத்தோட கூட பத்திரமா போக முடியல. இந்த மனுசனுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கானு பாரேன்.

பிரதமர் : என்னாச்சு?

மாணவி : என்னாச்சா? நாட்டில் என்ன நடக்குதேனு தெரியாதா? சுத்தம்..  நாங்க எல்லாம் தைரியமா நடமாட முடியுமா? முடியாதா?

பிரதமர் : எனக்கு தெரியாது

எல்.ஐ.சி ஊழியர் வருகிறார் :

எல்.ஐ.சி ஊழியர் : மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், நீங்க செய்யறது நியாயமா?

பிரதமர் : என்னாச்சு? நீ யாரு?

எல்.ஐ.சி ஊழியர் : நானா? எல்.ஐ.சி

அவர் முடிப்பதற்கு முன்பாகவே மன்மோகன்சிங் புலம்புகிறார்.

பிரதமர்  : வந்துட்டானுங்கய்யா, ஆ, ஊ னா கையில சிவப்பு கொடிய எடுத்துக்கிட்டு பிரச்சாரம், பிரசுரம், பேரணினு. இவங்க எங்க மனு கொடுக்க வந்திருவாங்களோனு பயந்து கிட்டே பாதி எம்.பிங்க தொகுதிக்கே போகறதில்லை.

எல்.ஐ.சி ஊழியர்: எல்.ஐ.சி, ஜி.ஐசி, பொதுத்துறை எல்லாம் நல்லாதான போயிட்டிருக்கு, அப்புறம் எதுக்கு விக்கப் பாக்கிறீங்க, நாங்களும் இல்லாம போனா, அப்புறம் பணம் வேணும்னா எங்க போவீங்க, நீங்களெல்லாம் படிச்சுதான  டாக்டர் பட்டம் வாங்கினீங்க? இல்ல

அதற்குள் உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

என்ற ரிங் டோனோடு தொலை பேசி அடிக்கிறது:

பிரதமர்  வாயில் விரலை வைத்து
பிரதமர்: உஷ் . யாரும் பேசாதீங்க, பாஸ் லைனில வராரு

தொலைபேசியில் ஒபாமா (தூரத்தில் அமர்ந்த படி)

ஒபாமா : யாரு இந்தியப் பிரதமரா?

பிரதமர் : பாஸ் குட் மார்னிங், இல்லையில்லை குட் ஈவினிங்
இல்லை குட் ஆப்டர்னூன்.

ஒபாமா: என்னயா தடுமாறிக் கிட்டே இருக்க?

பிரதமர் : இல்லை பாஸ், துரையோட குரல கேட்டாலே சும்மா அதிருது.

ஒபாமா? சரி சரி சொன்ன பேச்ச  கேட்கவே  மாட்டியா?

பிரதமர்  : என்ன பாஸ் அப்டி சொல்லிட்டீங்க? அணு ஒப்பந்தம் ஓகே, வால் மார்ட் ஓகே, பென்ஷன் ஒகே, ஈரான் ஓகே,  இன்னும் என்ன பாஸ் இருக்கு?

ஒபாமா? இன்னும் இன்சூரன்ஸ் இருக்கே, நீ செய்யறியா இல்லை நான் வேட்டி கட்டின யாரையாவது பி.எம் ஆக்கவா? இங்க பாரு, நான் எப்ப கூப்பிடுவேனு சாமியாருங்க வேற காத்துக்கிட்டே இருக்காங்க,

பிரதமர் : பாஸ், பாஸ் அப்படியெல்லாம் அவசரப்பட்டு எதுவும் செஞ்சிடாதீங்க, நானே என் கையால உங்களுக்கு மணக்க, மணக்க, எல்.ஐ.சி யையும் விருந்து வைக்கிறேன்.

எல்லோரும் சேர்ந்து : அடப்பாவி, நீ இந்தியாவுக்குத்தான் பிரதம மந்திரியா?

பிரதமர்  : எனக்கு தெரியாது.

சிலையாய் இருக்கும் காந்தி கீழே இறங்குகிறார்.

வெள்ளைக்காரன விட மோசமா இருக்கியே, உங்க கூட்டத்தையே துரத்தினாதான் இந்தியா உருப்படும் என்றபடியே கைத்தடியை ஓங்குகிறார்.

அப்படியே எல்லாரும் உறைந்து நிற்கிறார்கள்.

நாடகம் முடிகிறது.


ஒரு வார காலம் எனக்கு உற்சாகம் அளித்த, வாய்ப்பு அளித்த
அனைத்து நல்லிதயங்க்ளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

ரயில் சினேகமாக இல்லாமல் எப்போதும் தொடர்பு
எல்லைக்குள் இருப்போம்.

உங்கள் வாழ்வு ஓளி மிகுந்ததாய், வண்ணமயமாய் அமைந்திட
வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்
























2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது