07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 5, 2010

வலைச்சர செவ்வாய் - சமையல்

எல்லா நகரங்களிலும்
சிற்றூர்களிலும்
இருக்கும் ஒரு பிரபல
உணவு விடுதி
எத்தனை ருசி என்றாலும்
ஒரு போதும் கிடைத்ததில்லை
அம்மாவின் கைப்பக்குவம்

அறிவிப்பு: தற்சமயம் திருவண்ணாமலையில் இருப்பதால் இந்தப் பதிவை மட்டும் முன் கூட்டியே (இது நாளைக்கானது) பதிவிடுகிறேன்.. என் அறிமுகப் பதிவில் பின்னூட்டம் இட்ட அத்தனை அன்பு உள்ளங்களையும் நான் மீண்டும் ஒருமுறை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.. உங்களால்தான் நான்..

முதலில் சமையலில் இருந்து ஆரம்பிக்கலாம்...சொந்த வாழ்க்கையில் இன்றுவரை மனைவிக்கு ஒரு டீ கூட போட்டு தந்தது கிடையாது.. ஆனால் கிட்டத்தட்ட பதினெட்டு வருட வெளிநாட்டு வாழ்க்கையில் எட்டு வருடங்கள் சுத்த சைவம் அப்போது சாப்பாட்டுக்கு நான் படும் சிரமம் அநேகம்.. ஒரு கட்டத்தில் தாக்குபிடிக்க முடியாமல் மீண்டும் அசைவ உணவுக்கு மாறிவிட்டேன்.. அதனால் முதல்நாள் சமையல் பற்றிய பதிவுகள்...

திருமதி.மேனகா அவர்களின் வலைபக்கத்தை பாருங்கள் பெரும்பாலும் வித்தியாசமான சமையல் முறைகள்..இந்த மாம்பழ அவகோடா சாலட் பாருங்கள் ..

கீதா ஆச்சல் வழங்கும் என் சமையல் அறையில் ஒரு சிம்பிள் மீன் குழம்பு வைத்திருக்கிறார் நீங்களும் செய்து பாருங்கள்..

சகோதரி ஆசியா ஓமர் சமைத்து அசத்தலாம் என சொல்கிறார்... அவரின் பேக்ட் சிக்கென் வித் வெஜிடபிள் ரெசிப்பியின் படங்களே நம்மை செய்து பார்க்க தூண்டும் ..

சின்னு டேஸ்டி(அவர் ரேஸ்ரி என்று சொல்கிறார்) இவரின் வழிமுறைகள் மிகவும் வித்தியாசமானது.. நீங்களே பாருங்களேன்.

ஜலீலா கமல் செய்யும் சமையல் அட்டகாசங்கள்.. அடேயப்பா எத்தனை வகைகள்...

இன்னும் நிறைய பதிவர்களை அறிமுகம் செய்ய முடியவில்லை... அதனால் மற்ற சமையல் ராணிகள் என்னை மன்னிக்கவும்..

இதில் ஜெய்லானி சமையல் குறிப்புகளை சேர்க்க முடியவில்லை.. நிறைய பேர் வெந்நீர் வைக்க தெரியாமல் சுட்டுகொண்டதால் சாரி ஜெய்லானி..


மேலும் வாசிக்க...

வலைச்சர திங்கள் - என் அறிமுகம்










ள்ளிரவில் சுடுக்காட்டில்
எரியும் பிணமொன்று
நரம்புகள் இறுகி எழுந்து அமர
அடித்து சாய்க்கும் வெட்டியானாய்
வாழ்வை
சாய்த்துக் கொண்டிருக்கிறேன்..

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றுகொள்ள அழைத்தவுடன் உடனே சம்மதித்தேன்.. ஜாம்பாவான்கள் அமர்ந்த இருக்கையில் இந்த வாரம் முழுதும் நான்.. சீனா அய்யாவுக்கு மீண்டும் நன்றி..

நான் கே.ஆர்.பி.செந்தில் சினிமாவுக்கு ஆசைப்பட்டு சென்னை வந்து அதன் அரசியல் வெறுத்து சிங்கப்பூர் சென்று கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் கோடிகளை சம்பாதித்து, எல்லாவற்றையும் இழந்து கடன்காரனாகிய ஒரு விசித்திரமான பொழுதில் வாழ்கையை அடையாளம் கண்டவன்.
நட்புகளாலும், துரோகங்களாலும் பின்னப்பட்ட என் வாழ்கையை தூக்கி நிறுத்தியது, இடைவிடா வாசிப்பும், என் மனைவியின் நேசிப்பும்தான். பள்ளி நாட்களில் நண்பர்கள் திருட்டு பட்டம் கட்டி விலக்கி வைத்தபோது என்னை அரவணைத்துக்கொண்டது நூலகம்தான்.

வலைப்பக்கங்களை படிக்கும் வாசகனாக இருந்த என்னை உள்ளே இழுத்துப் போட்ட என் பால்ய சினேகன் ராஜா O.R.B இப்போது ஏனோ எழுவது இல்லை.

வலைப் பக்கம் ஆரம்பித்த முதல் வருடம் என்ன எழுத என தடுமாறியபோது நான் எழுதிய ஒரு கட்டுரையை பார்த்துவிட்டு தொடர்கதை எழுதச்சொன்ன தமிழ்குறிஞ்சி ஆசிரியர் செந்தில் ராஜுக்கு என் வந்தனம்.

சென்னை அண்ணா சாலையில் பாட்டா கடை அருகே அடுத்து என்ன செய்யப் போகிறோம் எனத் திக்கற்று நின்ற ஒரு நண்பரையும், வாழ்கையை துவங்கிவிட்டு தங்கும் இடமற்று தவித்த ஒரு தம்பதியையும், இருந்த பணத்தை எல்லாம் சிங்கள தேசத்தில் தொலைத்துவிட்டு தட்டு தடுமாறிய ஒருவரையும் அரவணைத்துக் கொண்ட என்னை சென்ற வருடம் நவம்பர் 24 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டு (குற்றம் புரியாமலே) நான் நான்கு நாட்கள் சிறை வாசம் அனுபவிக்க இவர்களே காரணமாய் இருந்தார்கள் என அறிந்தபோது முகத்தில் அறைந்த மனிதம் என்னை மீண்டும் சிங்கபூருக்கு விரட்டியது. அன்றிலிருந்து இன்றுவரை என்னைத் தினமும் அரவணைப்பது என் எழுத்தும், என்னை வாசிப்பவர்களும்தான்.

இத்தனை நாள் நான் ஒளித்துவைத்த சினிமாவை மீட்டெடுத்த கேபிள் சங்கர் கிடைத்ததும், என் எழுத்தின் தன்மையைக் கொண்டே வாசிப்பின் ஆழத்தை புரிந்து கொண்ட நேசமித்திரன் கிடைத்ததும், என்னைப் புரிந்து கொண்டு நட்பு பாராட்டிய அப்துல்லா கிடைத்ததும், என்னை தன் பிள்ளையாக பார்க்கும் TVR ஐயா கிடைத்ததும், உரிமையுடன் வாடா தம்பி என அழைக்கும் ஜாக்கி அண்ணனின் பாசமும், பொது வெளியில் விமர்சனம் வைத்தபோதும் ஏற்றுகொண்ட மணிஜியும், என் கதை நேசன் அறிவுத்தம்பி ராஜாராமனும், மிக நெருக்கமான நட்பென உணரவைத்த ரமேஷும், மாப்பிள்ளை பிரியமான வசந்தும், அன்பு தம்பி சௌந்தர் கிடைக்க காரணமானதும் எழுத்தும் வாசிப்பும்தான்.

தொடர்ந்து பின்னூட்ட ஆதரவு அளித்த சகோதரிகள் சித்ரா,ஜெயந்தி, அன்னு, ஆசியா ஓமர், ஹேமா,சாந்தி ஆகியோருக்கும். சகோதரர்கள் கார்த்திக்,சௌந்தர்,சயேத், வசந்த், வாசன் சார், ஜெய்லானி, ரோஸ்விக், மங்குனிஅமைச்சர், கலாநேசன் மற்றும்அவ்வப்போது வந்து பாராட்டும் அனைத்து நண்பர்களுக்கும்.

இந்த வாய்ப்பினை வழங்கி என்னைக் கவுரவித்த சீனா ஐயாவுக்கும் தலை வணங்குகிறேன்.


மேலும் வாசிக்க...

Saturday, July 3, 2010

வலைச்சரம் - ஏழாம் நாள் - ஞாயிறு


சேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ், ஆறுமுகம் முருகேசன், சு.சிவக்குமார்

1. சேரல்

வெளியில் நனையும் மழை

மழை வந்துவிட்டது
போலிருக்கும் பொழுதின்
முந்தைய கணங்களில்
வீடு சேரும்
முனைப்பிலிருக்கிறேன்

மழை,
மழை கோட்,
ரோஜா வர்ணக்குடை,
மழைக்கதை பேசும் தோழி,
எப்போதோ மறந்துவிட்டு
நனைந்துபோன
கொடியுலர்த்திய ஆடைகள்,
என்பதாக வியாபிக்கிறது
மழை,
நினைவெங்கும்

முதல் துளி,
தலையோ,
தரையோ தொடுமுன்
பத்திரப்படுத்துகிறேன்
கூரைச்சுவற்றின் கீழ்
என்னை

வெளியில்
தன்னையே நனைத்துக்கொண்டிருக்கும்
மழை குறித்துச்
சிந்தனையில்லை

இனி நான்
நிம்மதியாகத்
தேநீர் அருந்தலாம்

***
(மழை, தேநீர், தேநீர் மழை, உள்ளும் வெளியும். வாவ், சேரல்!)
***

2. kartin

வட்டங்கள்

ங் அல்லது ல் அல்லது ப்
என்று முடியும்
சத்தத்தோடு
நீரில் அமிழ்கிறது கல்

நிலவைத் தழும்பச் செய்கிறது
முதல் வட்டம்

அலைக்கழிக்கின்றன
அடுத்தடுத்த வட்டங்கள்

தாலாட்டிப் போகின்றன
தொடர்பவை

தழுவித் துயில்கிறது
முடிவிலொன்று

நான் அடுத்த கல்லுக்கு
ஆயத்தமாகும் முன்
நீ வந்து விடுகிறாய்..
நிலா நகர்ந்து விடுகிறது

ங் அல்லது ல் அல்லது ப்
என்று முடியும்
சத்தத்தோடு
மீண்டும் தொடங்குகின்றன
வட்டங்கள்

***
(ஜலதரங்கம் பாஸ்!)
***

3. இளங்கோ கிருஷ்ணன்

ஒரு இரவல் காதல் கதை

இந்த வானத்தில் ஒரு நிலவுண்டு
பாதிநாள் வளர்வதும்
பாதிநாள் தேய்வதுமாய்
தன் பைத்தியத்தில்
அலைகளுக்குப்
பேய் பிடிக்கச் செய்யும்

இந்த ஊரில் ஒரு அக்கக்கா குருவியுண்டு
அக்கூ அக்கூ எனக் கதறி
காகத்தையும் உறவு சொல்லி
ஏமாந்து புலம்பும்

இந்த நிலத்தில் ஒரு மரம் உண்டு
கூடடையும் பறவைக்கு
தன் சதை பறித்து கனி திரட்டி
யாருமற்ற நேரத்தில்
பாம்பிற்கு முட்டை தரும்

இந்த நெஞ்சில் ஒரு முத்தமுண்டு
நிகழ்ந்த கணத்தின் பரவசத்தில்
மலர்ந்த பூக்களின் நறுமணத்தை
கனவில் எண்ணி
நீருலர்ந்த உதடுகளை வருடிக்கொள்ளும்

***
(அப்பா! புரட்டி அடிக்கிறீங்களே, இளங்கோ!)
***

4. சுந்தர்ஜி

எல்லா இடங்களிலும்
ஒருவனால்
பேச முடிவதில்லை.
பேச நினைக்கும்
இடங்களில்
இரைச்சல் மிகுந்தோ
பேரமைதியாகவோ
தடைசெய்யப்பட்டோ
பேசமுடியாது போகிறது.
பேச ஆசைகொள்ளும்
நள்ளிரவில்-
நூலக அலமாரிகள் இடையே-
ஒரு கலவிக்குப் பின்னே-
சாவு வீட்டில்-
ஏதோ ஒரு ஆசிரமத்தில்-

பேசமுடியாது போகிறது.
யாருமற்ற தனிமையில்
புற்களைப் பிடுங்கியபடி
பதட்டத்தாலோ
வசீகரத்தாலோ
மறதியாலோ
பேசமுடியாது போகிறது.
ஒரு தோல்விக்குப் பின்னே-
காரணமற்ற கோபத்தால்-
நியாயமற்ற பொய்களால்-
பல நேரங்களில்
பேச முடிவதில்லை.
எல்லாம் அமையும்போது
பேச எதுவுமில்லாது
போய்விடுகிறது.

***
(மௌனத்திற்கு ஒரு மொழி, நிறம், வாசனையுண்டு. வாய்ச்சுருக்கு உங்களுக்கு, சுந்தர்ஜி! )
***

5. கமலேஷ்

மெய்பொருள் காண்பதறிவு......

கொடிமரத்தை பற்றியதொரு
கவிதை எழுதியிருந்தேன்.
கவிதையில்
வந்தமர்ந்த ஓர் பறவை
வெகுநேரம் எதையோ தேடிவிட்டு
பறக்கும் போது சொன்னது,
உன் மரத்தில்
பழங்களே இல்லை....

***
(தேட தருவது தேடலுக்கு இணையானதே. பழமரத்தில் அப்பறவை கொடி தேடலாம், கமலேஷ்!)
***

6. ஆறுமுகம் முருகேசன்

அலட்சியமற்ற
இரு சக்கரமொன்றின்
டயர்கள் முகர்ந்த
நாய்குட்டியொன்றின்
இரத்தம் நுகர்ந்த நாசித்துளை
எதற்கேனும் எழுதி தீர்த்திருக்கலாம்
சாவுகவிதையொன்றை இந்நொடி .
கவன ஈர்ப்பற்ற
நாய்குட்டி கதையெழுதும்
விரல்களின் நகங்கள்
கண்ணீர் பீய்ச்சியடிக்கும் இவ்வேளை..
எதிர்பக்கமாய்
பிறிதொரு நாய்குட்டிக்கு
பிறிதொருவன் வழிவிடுவதையும்
சொல்லியே ஆகவேண்டும் ..!

***
(என்ன அருமையாய் balance பண்ணியிருக்கிறீர்கள் மாப்ள. ரொம்ப பிடிச்சிருக்கு!)
***

7. சு. சிவக்குமார்

முதற் குறிப்பேட்டிலிருந்து

கற்றுக்கொண்டிருக்கலாம்
குறிப்பெடுக்குமளவில்.
மின்சார கம்பிகள் மீது
இசைக்குறிப்புகளென அமர்ந்திருக்கும்
அந்த கருங்குருவிகளை ஓர்த்தாவது...

***

உச்சிவெயிலில் ஒற்றைப் பனைமரம்
பேசும் ஓயாமல்...
பொழுதுகளுக்குத்தக்கவாறு
அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நிழல்

***

பெருமழை பெய்யும் நாட்களிலும்
ஒயும் நாட்களிலும் முகிழ்க்கும்
சில நினைவுகள்..
ஒய்ந்த வாழ்க்கைக்கு
கைமண் பிடித்து காரியம் செய்ததும்
துவங்கிய வாழ்க்கைக்கு வேட்டி நுனி
தூக்கி, குடை பிடித்ததும்.

***
(குருவி, நிழல், மழை, ஆன்மாவில் தத்தி தத்தி அமர்கிறது சு.சி!)
***

ஆஹா! ஒரு வாரம் போனதே தெரியல. முழுப் பரீட்சை லீவை வீராயி அம்மாச்சி வீட்டில் முடித்து, புறப்படுகிற நாளின் மன நிலை.

பதிவுலகத்தில், சிற்றிதழுக்கு இணையான படைப்பிலக்கியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. பருகித் தீரல. தீரவும் தீராது. இந்த ஒரு வருடமாய், நான் வாசித்த எவ்வளவோ விஷயங்களை, படித்த மனசுகளை இங்கு பதிய முடியாமல் போயிருக்கிறது. காரணம், ஒரு வாரம் என்பது.

இந்த ஒரு வாரம் என்பதில் என்னை வெகுவாக சுறுக்கிக் கொண்டேன். கவிதை மட்டும் பேச முடிந்த காரணம் இதுவே. என் ஆதர்ச தளங்கள் என நிறைய...அவற்றைக் கூட பகிர்ந்து கொள்ள இயலவில்லை.

நண்பர்கள் சண்டைக்கு வருவார்கள். சட்டையை கழட்டி நின்றபடி,"ஒத்தைக்கு ஒத்தை வாடா" என்பார்கள். நானும் தயார்தான். ஆனால் இங்கில்லை. நாளை, கருவேல நிழலில்! (ஹி..ஹி..எங்க ஏரியாவுக்கு வாங்கப்பு வச்சுக்கிறேன்)

எல்லாவற்றையும் இழுத்து வைத்துக் கொண்டு பேசினால், எனக்கும் கீறியது போல் இருக்காது. உங்களுக்கும் வலிச்சது போல் இருக்காது. (இசுவினி?). இல்லையா?

சீனா சாரும் செறுமிக் காட்ட தொடங்கிவிட்டார். இதோ ஆச்சு சார்...

உங்கள் கைகளை பற்றியபடியான, மனசு நிறைந்த, நன்றி சீனா சார்!
வரப் போகும் நண்பருக்கும் என் வாழ்த்துகளை சொல்லுங்கள்...

ப்ரியங்களில் நிறைந்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்!

***
மேலும் வாசிக்க...

Friday, July 2, 2010

வலைச்சரம் - ஆறாம் நாள் - சனி

செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா

1. செல்வநாயகி

அவன் சென்றபின் பெய்த மழை

தலைவன்களும் பல்லக்கத்தூக்கிகளுமாய்
ஊர்வலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊரிலிருந்து

இவ்வனத்திற்குள் வந்து நாட்கள் பலவாகியிருந்தன

வனம் நிறையப்புற்களோடும் கொஞ்சம் மான்களோடும்
அழகாயிருந்தது.
தேன்சொரிந்தாலும் காய்கனிந்தாலும் வந்துபோக
பட்டாம்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும்
அங்கே சுதந்திரம் இருந்தது.

இயற்கையின்மொழி இதயமெங்கும்
கவிதைகளை நிறைத்துக்கொண்டிருந்தபொழுதில்
அவன் தயங்கித் தயங்கி வந்து நின்று
தானுமொரு வனம்விரும்பி என்றான்
வனம்விரும்பிகளின் ரட்சகன் என்றான்
மொழிக்காதலனுமென்றான்
நான் வனம் நிறைத்திருந்த கவிதைகளை
அவனுக்குச் சொல்லலானேன்
பூக்களில் தேன் சொரிந்திருந்தும்
அன்று பட்டாம்பூச்சிகள் வருகையை நிறுத்திக்கொண்டன

தன்பரப்பில் வாழும் உயிர்களுக்கான
வனச்சுனையின் பேதமற்ற நீரளிப்பை
நெக்குருகிச் சொல்லிக்கொண்டிருந்தபோது
தலையைச் சிலுப்பிக்கொண்டே
"இப்படித்தான் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்
அல்லது பேசிக்கொண்டிருப்பதே நம் பண்பாடு"
தன் அபிமான நடிகன்கூட
ஒருபடத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என்றான்
பறவைகள் அக்கணம்
வனத்திற்கெதிரான திசையில் பயணிக்கக் கண்டேன்

தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்
கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்
நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்
உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட
பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்
கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்
சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்
முகில்களோ, மான்களோ எதுவும்
தட்டுப்படாத வெறுமை சூழந்தது

அவனுடனான உரையாடலில்
என் சொற்கள் தீர்ந்துபோன சமயத்திலும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்
தான் இச்சமூகத்துக்கு
ஏதேனும் செய்தே தீருவேன் என்றான்
கலைரசிகர்கள்
வனம்வாழ்வது தகாதென்றான்
இலக்கியம், கலை, மொழிபரப்புதலில்
தானொரு தலைவனாவதற்கு
ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்
தன்பின்னே வந்தால் எதிர்காலம் சிறக்குமென்றும்
தன்னைச் சுமப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானவனென்றும்
இடைவெளிகளற்றுப் பேசிக்கொண்டேயிருந்தான்

மௌனத்தை மொழிபெயர்க்கத் தெரியாதவன்
பதிலுக்கு நச்சரித்தபோது நான்
நோய்க்கூறுகள் உருவானது இப்படித்தானென்றேன்
அவன் கோபம் கொப்பளிக்க என்னை
ஒரு சமூகத்துரோகியென முடிவுசொல்லி விடைபெற்றிருந்தான்
ஒரு நீள இரவு கடந்து
விழித்துக்கொள்கையில்
மழைபெய்திருந்தது
மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன
என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது.


***

(வணக்கம் டீச்சர்!) :-)

***

2. வித்யா(விதூஷ்)

மனக்கரை

வானைக் கிழித்த விமானக் கோடு
முயலாகும் மேகங்கள் - கருநீல அடிவானம்
திரும்பி வரும் தூரத்துப் படகுகள்
கை கோர்த்து கால் நனைக்கும்
காதல் மறக்காத மூத்தோர்
அவள் காலடி துரத்தும் காதலன்
கால் துடைத்த அலை நீர்
வாவென்றது மேகம் - கடல்
மூழ்கியது வெப்ப நிலா
அலை பேசியபடி காலணிக்குக்
காவலாய் மணலில்தான் அமர்ந்திருந்தேன்!

***

(காவலில் இருக்கும் போது போனில் என்ன பேச்சு சகோ?) :-)

***

3. தமயந்தி

தேர்

வெற்றிட‌த்தின் ஒலியை
இன்னும் யாரும் கேட்ட‌தாயில்லை.

ரெட்டை விநாய‌க‌ர் கோவில்தெருவில்
மின் க‌ம்ப‌ம் ச‌ரிந்து இர‌ண்டு நாளாகி விட்ட‌து.

ச‌ந்திபிள்ளையார் கோவில் ஸ்டாப்பில்
காந்தி சிலை உள்த‌ள்ளி நிற்கிற‌து.

க‌ட‌னில் ஊர் விட்டு ஓடிய‌ ப‌ர‌ணி
க‌டை முன் ஆடு ப‌டுத்திருக்கிற‌து.

என்றாலும்
நெல்லைய‌ப்ப‌ர் கோவில் தேர் ந‌க‌ர்கிறது
வ‌ருடாவ‌ருட‌ம்.

***

(வசூலிக்க வந்த ஆடு போல, தமயந்தி! ரொம்ப பிடிச்ச தேர்/ஆடு/ ச்சே..கவிதை/ பாஸ்!

***

4. கௌரி ப்ரியா

மார்கழி முன்னிரவில்
பனியொழுகும் தலைகளுடன்
படர்ந்திருக்கின்றனர் மக்கள்
கண்காட்சி யொன்றில்..
ஏந்தியவன் கழுத்தின்
இருமருங்கிலும் கால்களிட்டு
தோளமர்ந்திருக்கிறது குழந்தை.....
தந்தையின் கற்றைமுடியை
இறுகப் பிடித்திருக்கும் உள்ளங்கை
காற்றிலாடும் செடியொன்றின்
கிளை பற்றிய அணில்குஞ்சென
மிருதுவாய் இருக்கக்கூடும்...

கவியொழுகும் தலையுடன்
கடந்து செல்கிறான்
கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும்

***

(இப்படி, நிறைய தடவை அப்பா தலையை பற்றியிருக்கிறேன் கௌரிப் ப்ரியா. அப்பாவும் இல்லை. அவ்விரல்களும் இல்லை) :-(

***

5. அமிர்தவர்ஷிணி அம்மா

ஒப்புக்கு அழு

தூக்கு போட்டு செத்த
நாகராஜன் அண்ணா
சாவுக்கு அழவேயில்லை
ஜானகி அக்கா
மனைவியாக இருந்தபோதும்

தம் அப்பா செத்ததற்கு
அழவேயில்லை
ராணியும், ராஜேஸ்வரி அக்காவும்

எதிர்வீட்டு பெண்ணின்
அம்மா மஞ்சள் காமலையில்
செத்த போது
அந்தச் சின்னப்பெண்ணின்
அழுகையே அன்று முழுவதும்
பேச்சாக இருந்தது.
பிணத்துடன் மாலை மாற்றிக்கொண்ட
போதுமட்டும் கடைவிழி நீர் உகுத்த
கணவனை
வசைபாடித் தீர்த்தனர் பெண்கள்

அத்தை சொன்னாள்
செத்துப்போனது
அம்மா, அப்பாவாக
இருந்தால்
இடுகாடு எடுத்துபோகும்போது
தரையில் உருண்டு
அழவேண்டுமாம்
பொறந்த பெண்கள்
அந்தக் கஷ்டத்தை கூட
எனக்கு கொடுக்கவில்லை
என் அப்பா

செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு

யார் எப்படி அழுகிறார்கள்
என்ன சொல்லி அழுகிறார்கள்
என்ற ஒப்பீடு
சாவு வீட்டில் பின்னர் பேசப்படும்

வந்தா, ஒக்காந்தா
ஒப்புக்கு அழுதா
அப்படின்னு

இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்னு.

ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.

***

(ரிகர்சல் சக்சஸா அமித்தம்மா?) :-)

***

6. அனிதா

உருமாற்றம்

பனி படர்ந்த படித்துறையில்
என்னுடன் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவன்
எதிர்பாராததொரு கணத்தில்
பாசி வழுக்கி குளத்தில் விழுந்தான்

மூழ்கி அமிழ்ந்து திணறி தத்தளித்து
அலை வட்டங்களும் இல்லாது மறைந்தவன்
கரையோரம் என் கால் நிமிண்டி
தான் மீனாக மாறிவிட்டதாய் சொன்னான்

உடலெங்கும் படர்ந்த செதில்களையும்
திணராமல் நீந்தும் லாவகத்தையும் பார்த்து
சற்றே ஆசுவாசமானேன்

பறவைகள் கூடு திரும்பும் மங்கலில்
எனக்கு சொல்ல ஆயிரம் கதைகள் வைத்திருந்தான்
விருப்பம்போல சுற்றுகிறானென்றும்
பசி என்பதே இல்லையென்றும்
சலிக்காத அழகுகள் நிறைந்த குளமென்றும்
குளிர் கூட சுகமாயிருப்பதாயும்
நிறைய சொல்வான்
கேட்டுக்கொண்டிருப்பேன்

உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க‌
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள்
கிசுகிசுத்துக்கொண்டன‌.

போய் பார்க்கதான் நேரம் ஒழியவில்லை.

***

(மிரட்டல் பாஸ்! fantastic!)

***

7. தீபா

தளும்பித் தளும்பி
வழிந்த பாத்திரம் அது...
மூட முடியாமல்,
தீரவே தீராதோ எனும்படியாக.

என்றோ ஒரு நாள்
தடாலென்று கவிழ்ந்தது...

மிச்சம் மீதி இருந்ததும்
இன்னொரு பொழுதில் காய்ந்து போனது

வாசமாவது மிஞ்சட்டும்
என்று மூடி மூடி வைக்கிறேன்

***

(format சற்று மாற்றினேன் தீபா, மன்னியுங்கள். அருமையான கவிதை!)

***

அற்புதமான பெண் பதிவர்கள் நிரம்பிய உலகு இது. தேடுங்க மக்களே...

***


சரி, இன்னும் ஒரு எழுவர் பாக்கி. கூடவே விடை பெறலும்.

தூக்கத்தில் இருக்கும் போது, சீனா சார் கட்டை விரலை பத்திரத்தில் உருட்டி இவ்வீட்டை எழுதி வாங்கிரலாம்ன்னுதான் வருது. அவ்வளவு காற்றோட்டம், கிளி சத்தம், திறந்த ஜன்னலில் கசியும் பிச்சிப்பூ வாசனை.

ஆனாலும், அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா fool என எம்.ஜி. ஆர். சொல்லி தந்திருப்பதால், வரும் கருணாநிதிக்கோ/ ஜெ-விற்கோ விட்டுத்தந்திரலாம்.

***

நாளை சந்திக்கலாம் மக்களே..

***
மேலும் வாசிக்க...

வலைச்சரம் - ஐந்தாம் நாள் - வெள்ளி

நேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ராம் சுந்தர், அனுஜன்யா, நந்தா

போதும்! நாலு நாள் நான் பேசியாச்சு. இனி, நண்பர்கள் பேசட்டும். உம் கொட்டுறது என்னோட பொறுப்பு. சரியா?

1.நேசமித்திரன்

பின்ன உடலின் ஸ்கலிதங்கள்

நிலவில் ஹைட்ரசில் திரளும் கிரகண
மகாயாண இறுதியில்
திரிந்த விந்து மிடோசிஸ் பின்னி வளர்ந்து
பெஞ்சமினின் அளவுகோலுக்குள்
பொருந்தக் கண்டது உடல்

பியானோ கடல் மீட்டும்
இலக்கம் வளரும் மழை கருவிரல்
எலெக்ட்ரா காம்ப்ளெக்ஸ்
பாறைகளின் கிராபைட் நுனி ஒளிர
புலால் உண்ணும் தாவரம்
வசியம் முகிழ்த்து

உதிரத்துரு வாசம் வீசும் டிராகன் நாக்கு
வெப்புடனுப்புமிழ் காய சண்டிகை

குறுக்கு வெட்டாத கோளங்கள்
மடங்குகளாக தலை கீழ் விகிதங்கள்

குவாண்டம்
பெல்லிடம் தோற்ற
காந்தம் திருப்பிய அணுத்துகள்
தானறிகிறது திசை

யுரேனிய விரைப்பைகள் நீலம் பாரிக்க சுமக்கும்
கோமாளி மீனுக்கு பெண்ணுறுப்பு வால்புறம்

பின்ன உடலின் ஸ்கலிதங்கள்
துடிப்பிசை மாறும் கரு மற்றும்
அதைத்தாங்கும் உடல்

***

(நீ திறப்பு தந்துதான் இதற்குள் நுழைய முடிந்தது நேசா. திறந்த பிறகு வலி நிறைந்த அசைவு!)

***

2. அய்யனார்

கண்டறிதல்

இரண்டு பியர்களுக்கு மேல் குடித்துவிட்டால்
பழைய காதலிகளுக்குத் தொலைபேசி
இன்னும் அவள் நினைப்பிலேயே இருப்பதாய்
சத்தியம் செய்யலாம்..
உடன் வந்தவனை
ஐ லவ் யூ மச்சி
என குழறலாய் நேசத்தை சொல்லலாம்

என்ன செய்வது?
குடித்த பின்பெழும் நேசங்களை மட்டும்
சொல்லாமலிருக்க முடியவில்லை...

***

(ஐ லவ் யூ மச்சி, அய்ஸ்!) :-)

***

3. யாத்ரா

எதுவுமே நிகழவில்லை இன்று

புன்னகை ஒட்டிய முகங்கள்
நெகிழ வைத்த மேலாளர் நண்பர்கள்
காத்திருக்க வைக்காமல்
வந்துவிட்ட இவள்
காலியாயிருந்த பேருந்து
ஆழ்ந்து யோசிக்கிறேன்
ஒரு அவமானம்
ஓரேயொரு ஏமாற்றம்
வன்சொல்
எதிர்ப்பட்ட லாரிக்காரனும்
சாவுகிராக்கியெனவில்லை
இது ஒரு நாளா
மன்னிக்கவும்
இன்றைக்கு
கவிதையேதுமில்லை
உங்களை வெறுமனேயனுப்புவதில்
துயரம் மெல்ல கவிகிறது.

***

(சந்தோசமா இருங்க யாத்ரா! வெறுங்கையோடு ஒன்னும் திரும்பல)

***

4. மண்குதிரை

ஒரு கவிதை

என்னால் எதுவும் இயலாது
என்று அவர்கள் கூறுவதனால்தான்

கைமாறிப்போன சொந்த நிலத்தை
மீட்க முடியதனால்தான்

இரண்டுவருடமாக அடைகாத்த காதல்
ஒரு நொடியில் உடைந்து போனதால்தான்

எல்லா இடங்களிலும் தொடர்ந்து
நிராகரிக்கப்பட்டு கொண்டேயிருப்பதனால்தான்

நானும்
இந்தக் கவிதையை எழுதுகிறேன்.

***

(அதனால்தான் நானும் வந்து வாசிச்சேன் மண்குதிரை)

***

5. ஜ்யோவ்ராம் சுந்தர்

வயதான வண்டியிது
மிக மோசமான முறையில்
கழுத்தறுக்கும்
அடைய வேண்டிய இலக்கு
தொலைவில் இருக்க
இருக்கும் நேரமோ மிகச் சொற்பம்
மெதுவாகத்தான் செலுத்த இயலும்
இந்த வண்டியை
பாதியில் நின்றுவிடும்
என்னுடன் சண்டை போடும்
தூக்கியெறியும்
இது குடிக்கும் பெட்ரோலுக்கென
என் வியர்வையில் பாதியை அழுதிருக்கிறேன்
சோனியாக இருக்கும் இவ்வண்டி
துருப்பிடிக்கவும் ஆரம்பித்தாகிவிட்டது
என்றாலும்
எல்லார்க்குமான சாலையைக் கடக்க
வண்டியில்லாமல் தீராது
இன்னொன்று
இது என் வண்டி
எனக்கு மட்டுமேயான வண்டி

***

( குர்குரே மாதிரி கோணலா இருந்தாலும், உன்னுடையதாக்கும்?..கலக்குற சுந்த்ரு!) :-)


***

6. அனுஜன்யா

அழைப்பு மணி

அழைப்பு மணி ஓசை
பால் வந்து விட்டது
பேப்பர் போடப்படுகிறது
பணிப்பெண் வந்தாயிற்று
அடுத்தத் தெரு கலா
கியாஸ் சிலிண்டர்
அலுவலகத்திலிருந்து கணவன்
என்றெல்லாம் துல்லியமாகக்
கண்டுபிடித்து விடுவாள்.
அழுத்தும் விதம்,
அழுத்தப்பட்ட நேரம்
உள்வாங்கிய மனக்கணக்கில்;
மற்றவர்க்கெல்லாம்
மாயக்கண்ணாடியில் பார்த்தல்;
சிலருக்குச்
சங்கிலியைக் கோர்த்தல்
போன்ற சடங்குகளும்;
அவனும் கலா போலவே
மணி அழுத்துவான் என்று
கசிந்த உதிரத்தினூடே
நினைவு பிரிகையில்
அவளுக்குப் புரிந்தது.

***

(கொல்றீங்களே பாஸ்!..) :-)

***
7. நந்தா

மழை கேட்டல்

வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheetகளை
அவசரமாக வாசித்துக் கொண்டே போனது
அவ்வப்போது கேட்ட அசரீரிகளை
துக்க செய்தி கேட்டது போல பயந்தார்கள்
மண்ணில் வெடித்தது
தூள் தூளாய் சரிந்தது
கிணற்றில் குதித்தது
நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளி வடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசி தீக்குச்சியைப் பற்ற வைக்கும்
கவனத்தோடு.

(ரொம்ப பிடிச்ச கவிதை இது நந்தா! இப்பதான் ரொம்ப உயரமா போய்ட்டீங்க நந்தா. எட்டி தொட முடியல.)

***

நாளை இன்னும் ஏழு பேர் பார்க்கலாம் மக்கள்ஸ். கவிதைக்கென மிக சிறப்பான தளங்கள் இருக்கிறது. இனி வரும் இரண்டு நாட்களுக்குள் அவ்வளவையும் இங்கு சேர்க்க இயலாது. சாத்தியமும் இல்லை. போக, விரும்பியதை தானே தேடி அடைவதில் ஒரு சுகம் இருக்கிறது. அந்த உங்களின் சுகத்தை/ சுதந்திரத்தை நான் திருடலாகாது..

நாளை பேசுவோம்...

***
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது