செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா1. செல்வநாயகி அவன் சென்றபின் பெய்த மழை தலைவன்களும் பல்லக்கத்தூக்கிகளுமாய்
ஊர்வலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஊரிலிருந்து
இவ்வனத்திற்குள் வந்து நாட்கள் பலவாகியிருந்தன
வனம் நிறையப்புற்களோடும் கொஞ்சம் மான்களோடும்
அழகாயிருந்தது.
தேன்சொரிந்தாலும் காய்கனிந்தாலும் வந்துபோக
பட்டாம்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும்
அங்கே சுதந்திரம் இருந்தது.
இயற்கையின்மொழி இதயமெங்கும்
கவிதைகளை நிறைத்துக்கொண்டிருந்தபொழுதில்
அவன் தயங்கித் தயங்கி வந்து நின்று
தானுமொரு வனம்விரும்பி என்றான்
வனம்விரும்பிகளின் ரட்சகன் என்றான்
மொழிக்காதலனுமென்றான்
நான் வனம் நிறைத்திருந்த கவிதைகளை
அவனுக்குச் சொல்லலானேன்
பூக்களில் தேன் சொரிந்திருந்தும்
அன்று பட்டாம்பூச்சிகள் வருகையை நிறுத்திக்கொண்டன
தன்பரப்பில் வாழும் உயிர்களுக்கான
வனச்சுனையின் பேதமற்ற நீரளிப்பை
நெக்குருகிச் சொல்லிக்கொண்டிருந்தபோது
தலையைச் சிலுப்பிக்கொண்டே
"இப்படித்தான் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும்
அல்லது பேசிக்கொண்டிருப்பதே நம் பண்பாடு"
தன் அபிமான நடிகன்கூட
ஒருபடத்தில் அப்படித்தான் சொல்லியிருக்கிறான் என்றான்
பறவைகள் அக்கணம்
வனத்திற்கெதிரான திசையில் பயணிக்கக் கண்டேன்
தானென்பதழிந்து தன்னை உலகினுக்கு வழங்கும்
கனியீன்ற வனமரங்கள் காட்டினேன்
நேற்றைய மயில்களின் நடனத்தைச்சொல்லும்
உதிர்ந்த தோகைகளின் குறிப்புகளையும்கூட
பைகளில் பழங்களை நிரப்பிக்கொண்டவன்
கக்கத்தில் சொருகிய மயில்தோகைகளுடன்
சந்தையில் நல்ல விலைபோகுமென்றான்
முகில்களோ, மான்களோ எதுவும்
தட்டுப்படாத வெறுமை சூழந்தது
அவனுடனான உரையாடலில்
என் சொற்கள் தீர்ந்துபோன சமயத்திலும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்
தான் இச்சமூகத்துக்கு
ஏதேனும் செய்தே தீருவேன் என்றான்
கலைரசிகர்கள்
வனம்வாழ்வது தகாதென்றான்
இலக்கியம், கலை, மொழிபரப்புதலில்
தானொரு தலைவனாவதற்கு
ஆட்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்
தன்பின்னே வந்தால் எதிர்காலம் சிறக்குமென்றும்
தன்னைச் சுமப்பவர்களுக்கு மிகவும் விசுவாசமானவனென்றும்
இடைவெளிகளற்றுப் பேசிக்கொண்டேயிருந்தான்
மௌனத்தை மொழிபெயர்க்கத் தெரியாதவன்
பதிலுக்கு நச்சரித்தபோது நான்
நோய்க்கூறுகள் உருவானது இப்படித்தானென்றேன்
அவன் கோபம் கொப்பளிக்க என்னை
ஒரு சமூகத்துரோகியென முடிவுசொல்லி விடைபெற்றிருந்தான்
ஒரு நீள இரவு கடந்து
விழித்துக்கொள்கையில்
மழைபெய்திருந்தது
மான்கள், பறவைகள் எல்லாம் இருந்தன
என் வனம் என்னிடம் திரும்ப வந்திருந்தது.
***
(வணக்கம் டீச்சர்!) :-)
***
2. வித்யா(விதூஷ்)மனக்கரைவானைக் கிழித்த விமானக் கோடு
முயலாகும் மேகங்கள் - கருநீல அடிவானம்
திரும்பி வரும் தூரத்துப் படகுகள்
கை கோர்த்து கால் நனைக்கும்
காதல் மறக்காத மூத்தோர்
அவள் காலடி துரத்தும் காதலன்
கால் துடைத்த அலை நீர்
வாவென்றது மேகம் - கடல்
மூழ்கியது வெப்ப நிலா
அலை பேசியபடி காலணிக்குக்
காவலாய் மணலில்தான் அமர்ந்திருந்தேன்!
***
(காவலில் இருக்கும் போது போனில் என்ன பேச்சு சகோ?) :-)
***
3. தமயந்திதேர்வெற்றிடத்தின் ஒலியை
இன்னும் யாரும் கேட்டதாயில்லை.
ரெட்டை விநாயகர் கோவில்தெருவில்
மின் கம்பம் சரிந்து இரண்டு நாளாகி விட்டது.
சந்திபிள்ளையார் கோவில் ஸ்டாப்பில்
காந்தி சிலை உள்தள்ளி நிற்கிறது.
கடனில் ஊர் விட்டு ஓடிய பரணி
கடை முன் ஆடு படுத்திருக்கிறது.
என்றாலும்
நெல்லையப்பர் கோவில் தேர் நகர்கிறது
வருடாவருடம்.
***
(வசூலிக்க வந்த ஆடு போல, தமயந்தி! ரொம்ப பிடிச்ச தேர்/ஆடு/ ச்சே..கவிதை/ பாஸ்!
***
4. கௌரி ப்ரியாமார்கழி முன்னிரவில்
பனியொழுகும் தலைகளுடன்
படர்ந்திருக்கின்றனர் மக்கள்
கண்காட்சி யொன்றில்..
ஏந்தியவன் கழுத்தின்
இருமருங்கிலும் கால்களிட்டு
தோளமர்ந்திருக்கிறது குழந்தை.....
தந்தையின் கற்றைமுடியை
இறுகப் பிடித்திருக்கும் உள்ளங்கை
காற்றிலாடும் செடியொன்றின்
கிளை பற்றிய அணில்குஞ்சென
மிருதுவாய் இருக்கக்கூடும்...
கவியொழுகும் தலையுடன்
கடந்து செல்கிறான்
கூட்டத்தில் அத்தகப்பன் மட்டும்
***
(இப்படி, நிறைய தடவை அப்பா தலையை பற்றியிருக்கிறேன் கௌரிப் ப்ரியா. அப்பாவும் இல்லை. அவ்விரல்களும் இல்லை) :-(
***
5. அமிர்தவர்ஷிணி அம்மாஒப்புக்கு அழுதூக்கு போட்டு செத்த
நாகராஜன் அண்ணா
சாவுக்கு அழவேயில்லை
ஜானகி அக்கா
மனைவியாக இருந்தபோதும்
தம் அப்பா செத்ததற்கு
அழவேயில்லை
ராணியும், ராஜேஸ்வரி அக்காவும்
எதிர்வீட்டு பெண்ணின்
அம்மா மஞ்சள் காமலையில்
செத்த போது
அந்தச் சின்னப்பெண்ணின்
அழுகையே அன்று முழுவதும்
பேச்சாக இருந்தது.
பிணத்துடன் மாலை மாற்றிக்கொண்ட
போதுமட்டும் கடைவிழி நீர் உகுத்த
கணவனை
வசைபாடித் தீர்த்தனர் பெண்கள்
அத்தை சொன்னாள்
செத்துப்போனது
அம்மா, அப்பாவாக
இருந்தால்
இடுகாடு எடுத்துபோகும்போது
தரையில் உருண்டு
அழவேண்டுமாம்
பொறந்த பெண்கள்
அந்தக் கஷ்டத்தை கூட
எனக்கு கொடுக்கவில்லை
என் அப்பா
செத்தபின் அழவும்
அளவுகோல் உண்டு
யார் எப்படி அழுகிறார்கள்
என்ன சொல்லி அழுகிறார்கள்
என்ற ஒப்பீடு
சாவு வீட்டில் பின்னர் பேசப்படும்
வந்தா, ஒக்காந்தா
ஒப்புக்கு அழுதா
அப்படின்னு
இத்தனையும் கேட்ட, பார்த்த
பிறகு வந்த
சாவுத்தகவலுக்கு
பஸ்ஸுல போகும்போதே
ஒத்திகை பாத்தாச்சு
அங்க போய்
என்ன சொல்லி
அழணுமுன்னு.
எப்படி கதறுனுமுன்னு.
ஆகக்கூடி
அழுகை
ஆறுதலுக்கு இல்ல
ஒப்புக்குத்தான்.
***
(ரிகர்சல் சக்சஸா அமித்தம்மா?) :-)
***
6. அனிதாஉருமாற்றம்பனி படர்ந்த படித்துறையில்
என்னுடன் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவன்
எதிர்பாராததொரு கணத்தில்
பாசி வழுக்கி குளத்தில் விழுந்தான்
மூழ்கி அமிழ்ந்து திணறி தத்தளித்து
அலை வட்டங்களும் இல்லாது மறைந்தவன்
கரையோரம் என் கால் நிமிண்டி
தான் மீனாக மாறிவிட்டதாய் சொன்னான்
உடலெங்கும் படர்ந்த செதில்களையும்
திணராமல் நீந்தும் லாவகத்தையும் பார்த்து
சற்றே ஆசுவாசமானேன்
பறவைகள் கூடு திரும்பும் மங்கலில்
எனக்கு சொல்ல ஆயிரம் கதைகள் வைத்திருந்தான்
விருப்பம்போல சுற்றுகிறானென்றும்
பசி என்பதே இல்லையென்றும்
சலிக்காத அழகுகள் நிறைந்த குளமென்றும்
குளிர் கூட சுகமாயிருப்பதாயும்
நிறைய சொல்வான்
கேட்டுக்கொண்டிருப்பேன்
உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள்
கிசுகிசுத்துக்கொண்டன.
போய் பார்க்கதான் நேரம் ஒழியவில்லை.
***
(மிரட்டல் பாஸ்! fantastic!)
***
7. தீபாதளும்பித் தளும்பி
வழிந்த பாத்திரம் அது...
மூட முடியாமல்,
தீரவே தீராதோ எனும்படியாக.
என்றோ ஒரு நாள்
தடாலென்று கவிழ்ந்தது...
மிச்சம் மீதி இருந்ததும்
இன்னொரு பொழுதில் காய்ந்து போனது
வாசமாவது மிஞ்சட்டும்
என்று மூடி மூடி வைக்கிறேன்
***
(format சற்று மாற்றினேன் தீபா, மன்னியுங்கள். அருமையான கவிதை!)
***
அற்புதமான பெண் பதிவர்கள் நிரம்பிய உலகு இது. தேடுங்க மக்களே...
***
சரி, இன்னும் ஒரு எழுவர் பாக்கி. கூடவே விடை பெறலும்.
தூக்கத்தில் இருக்கும் போது, சீனா சார் கட்டை விரலை பத்திரத்தில் உருட்டி இவ்வீட்டை எழுதி வாங்கிரலாம்ன்னுதான் வருது. அவ்வளவு காற்றோட்டம், கிளி சத்தம், திறந்த ஜன்னலில் கசியும் பிச்சிப்பூ வாசனை.
ஆனாலும், அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா fool என எம்.ஜி. ஆர். சொல்லி தந்திருப்பதால், வரும் கருணாநிதிக்கோ/ ஜெ-விற்கோ விட்டுத்தந்திரலாம்.
***
நாளை சந்திக்கலாம் மக்களே..
***