07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 31, 2009

எழுத்து ஒரு இனிய விஷம்

ஒரு மதுக்கோப்பையினுள் எழுத்துக்கள் மிதந்து கிடக்கின்றன. அவை நன்கு ஊறிப்போய் நுண்ணிய குமிழ்களை அடக்கிய காகிதங்களாக மாறிவிட்டிருக்கின்றன. பருகுவதற்குத் தயக்கமாக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு மூச்சடக்கி, பருகிவிட்டேன். எழுத்து ஒரு இனிய விஷம். அது என்னை அரித்துக் கொண்டேயிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டேயிருக்கிறேன். முழுவதுமாக அரித்து தீர்ந்த பிறகு ஊறிய அவ்வெழுத்துக்கள் நன்கு உப்பி பெருத்து மிச்சமாய் இருக்கின்றன.

மதுவின் தீவிரத்தைப் பொறுத்து, அரிப்பும் அதன் பெருக்கமும் கணக்கிடப்படுகிறது. எல்லா சூழ்நிலைகளும் ஒத்த வலைஞர்கள் இணையத்தில் இருந்து எழுதிவருகிறார்கள். ஒருசிலருக்கு சூழ்நிலைகள் மட்டுமே எழுத்து நேரத்தை நிர்ணயிக்கின்றது. அவற்றுக்குள்ளாகவே வலைஞர்களின் நட்பு நெடுநாள்வரை நீடித்திருக்கிறது. சரி சில கவிதைகளைப் பார்ப்போம்.


டைரிக்குள் பதுக்கி 
வைக்கப்பட்ட ரோஜாப்பூ 
எனும் வாக்கியமானது
ஒரு ரோஜாச் செடியின்
ஆதி உணர்வை அழித்த கணத்தில்
ஆரம்பமாகியது..

பிரியத்திற்குரிய
மனுஷியின் கேசத்தில்
தவழ்ந்து திரிந்த ரோஜா
எனும் வாக்கியமானது
அவள் கேசத்தில் வீசும்
இயற்கையின் நறுமணத்தை
அழித்த கணத்தில்
ஆரம்பமாகியது...

பழைய டைரிக்குள் 
பதுக்கி வைக்கப்பட்ட
ரோஜா எனும் வாக்கியமானது
இயற்கைக்கு விரோதமானது..


- கவிஞர் ராம்பால் 

"சொல்" எனும் கவிதைத் தொடருள் சொற்களைக் கொண்டே சொல்லாக்கப்பட்ட கவிதைகள் இம்மாதிரி நிறைய கிடக்கின்றன. இவை சிறு சிறு முடிச்சுகளை அங்கங்கே முடிச்சிட்டு அவிழ்த்து காட்டிவிடும் கவிதைகள். சாதாரண விஷயத்தை அசாதாரண மையமாக்கிச் சொல்லுவது.

இக்கவிதையில் வாக்கியம் என்பது வாக்கியமல்ல. அது நிகழ்வுகள். டைரிக்குள் ரோஜா பதிக்கி வைக்கப்படும் ஒரு நிகழ்வு. ரோஜாவின் ஆதி உணர்வை அழிக்கிறது.. இரண்டாவது ப்ரியத்திற்குரிய மனுஷி - காதலி (மனைவியும்) அவளது கூந்தலில் திரிந்த ரோஜாவானது, அவளது கூந்தலின் இயற்கை நறுமணத்தை அழிக்கிறது. மூன்றாவதாக, பழைய டைரிக்குள் காய்ந்து கிடக்கும் ரோஜாவானது, ஒரு மலரைச் சிதைத்த, இயற்கைக்கு இழைத்த துரோகமானதாகிறது. கவிதையில் பெரியதாக ஒன்றுமில்லை. ஆனால் அதைக் கவிப்படுத்தலில் கவிஞர் அழகான கட்டமைப்பைக் கையாண்டிருக்கிறார். இக்கவிதையை மேலும் கவனியுங்கள். டைரிக்குள் பதுக்கி எடுத்து வரப்படும் ரோஜாவானது, காதலானால் காதலிக்குத் தரப்படுகிறது. அது காதலியின் கூந்தலில் அமர்ந்த பிறகு அவளது டைரிக்குள் பதுக்கி வைக்கப்படுகிறது.. கவிதை இறந்த காலத்தை நினைவுபடுத்துவதிலிருந்து நிகழ்காலத்திற்குள் உலவுகிறது. 

யாத்ராவின்  தவம் 

தவத்திலிருக்குமென்
விழிகளுக்கு பாலூட்டும்
கனத்து பருத்து மதர்த்து
திமிர்ந்த முலைகள்
தவப் பயண
இளைப்பாறலாய் மடிகிடத்தி
அனல் பறக்க
ஆவி பிடிப்பதாய்
கூந்தலைப் படர்த்தி போர்த்தும்
ஒளி புக முடியாமல் முழுதுமாய்
அடர் கானக இருள் வெளியில்
நாவின் கால்தடம் சரசரக்க
இலக்கற்று கிடந்தலைகிறேன்
யாத்ரீகனாய் வன மேனியெங்கும்
காற்றாய் விரல்களூர மெய் சிலிர்க்க
நரம்புகள் புடைத்து
கூடும் உதிர வேகம்
கரங்களில் இருமலை பிசைந்து
கசிந்து பாயும்
பால்நதியிடை கவிழ்ந்து
மூச்சடைகிறேன் மூழ்கி
மயிர்க்கால்களின் வேர்களை
மென்மையாய் வருடும்
நகத்துணுக்குகள்
திடீர்க் காற்றில் சட்டெனப்
புரளும் சருகுகளானோம்
எழுதியெழுதி தீராத
பிரபஞ்ச காவியத்தை
உழுதுழுது எழுதி
சற்றே ஓய்வெடுக்கையில்
ஓயாது படபடக்கும் தாள்
எழுதுகோலை மறுபடியும் ஊர்தலுக்கழைத்து
சற்றே பொறு
எழுதுகோல் விறைக்கட்டும்
உயிர்மை திரளட்டும்
அவிழ்த்தவிழ்த்து வாசித்து
ரசிக்கும் மற்றுமொரு
கவிதையை எழுதுகிறேன்.



நன்கு நன்கு கடைந்து விரசத்தைப் பிரித்து, தெளித்து காமக் கடும்புனலின் உட்புகுந்து எழுதிய இக்கவிதையை பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். படிக்கும்பொழுது கால்மயிர்கள் எழுந்து உச்சியில் காமம் பிறக்கும். எங்கும் சொற்கள் பிளந்து உறுப்பைக் காண்பிக்காத மொழிவீச்சு. யாத்ராவின் மொழிவீச்சை பலமுறை கண்டு சிலாகித்திருக்கிறேன். இக்கவிதையை எந்த சூழ்நிலையில் அமர்ந்து எழுதினார் என்று தெரியவில்லை. அவரது வார்த்தையைப் போலவே, அவிழ்த்தவிழ்த்து வாசிக்கப்பட பல கவிதைகள் உள்ளன. 

இருத்தல்

எங்கெல்லாமோ திரிந்து
சலித்துப்போய்
இறுதியில் நுழையும்
ஊர் நடுவிலிருக்கும்
காய்கறி மண்டியில் மாடு
உதிர்ந்த தழைகளுக்கும்
அழுகி நசுங்கிய காய்களுக்கும்
ஆசைப்பட்டுச்
செல்லும் நாவில் நீர் வடிய...
அதற்கெனவே
காத்திருந்தது போல் வந்து அடிப்பான்
வாழைத்தாரின் நடுத்தடியால்
கூலிக்கென ஓடும் பையன்
வியாபாரம் ஓய்ந்து
வீடு திரும்பும் வேளையில்
சேகரிக்கத் தொடங்குவான்
உருண்டோடிய காய்கறிகளையும்
உதிர்ந்து
குவியலாகக் கிடக்கும்
தழைகளையும்
யாருக்கும் தெரியாமல்.


கவிஞர் பொன்.வாசுதேவன் கவிதைகள்  கவிதை படித்தபிறகு எழும் நீண்ட மெளனத்தினிடையே இவரது கவிதைகள் சஞ்சரிக்கின்றன. இவரது மொழியாளுமை, கவிதையில் மட்டுமல்லாது, கதைகளிலும் கட்டுரைகளிலும் பரவலாகப் பரவிக் கிடக்கிறது. அசாதாரண விஷயத்தை, நிகழ்வை , உணர்வை கவிதையாக்குவதில் மிகவும் தேர்ந்தவராக இருக்கிறார். "இருத்தல்" எனும் இக்கவிதை 'பையனின் இயல்பான இருப்பைக் குறித்ததாக இருக்கிறது. உருண்டோடிய காய்கறிகளைச் சேகரித்து முடிக்கும் இந்நிகழ்வு, தவறான செயல் என்று சொல்ல முன்வரவில்லை. அது ஒரு இருப்பு. சூழ்நிலையின் நிர்பந்தம். ஒருவகையில் அந்த மாடும் பையனும் ஒன்றுதான்... மாட்டுக்குத் திருப்பியடிக்கத் தெரியாது. அவ்வளவே. இது எப்படி தொடர்பு ஏற்படுத்தலாம்? எனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் ஒருவர் உள்ளார். அவரது அலுவலகத்தில் வேலை செய்த ஒரு நிர்வாகி தொழிலதிபரின் தங்கையை யாருக்கும் தெரியாமல் மணந்து கொள்ள, ஆத்திரமுற்ற அவர் இருவரையும் ஊரை விட்டே துரத்திவிட்டார். அதே நேர்மையான தொழிலதிபர் ரிஷப்ஸனிஸ்டின் மடியில் இப்போது கிடப்பதை அலுவலகத்தின் ஊழியர்கள் கூறுகிறார்கள்.... இங்கே காமம் என்பது "காய்கறி" ஆகிறது.. மாடு திருட இருந்ததை மனுஷன் திருடியது போன்று!!

மீண்டும் நாளை!!
மேலும் வாசிக்க...

Thursday, July 30, 2009

இரவின் ஒளி

வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக ரசித்து, கற்பனையின் எல்லைக்கோட்டில் ஊர்ந்து சிந்தி அசாதாரண வாக்கிய அமைப்பின் மூலம் எளிய கவிதை எழுதும் வலைப்பதிவர்களுள் எனக்கு மிகவும் பிடித்தமானவர் ஆ.முத்துராமலிங்கம். நான் படித்தவரையிலும் அவரது கவிதையில் நிஜங்களுக்கு ஊடாக மனவோட்டத்தின் வெளித்தோற்றத்தை உலவவிடுகிறார். கூடவே உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தோரணையில் பூனையையோ, பல்லியையோ, ஏதாவது ஒரு ஜந்துவை உலவவிடுகிறார்.


நிசப்தம் கூடியிருந்த
அவ்விரவில் உன் கனவுகளை
விரித்துப் படுத்திருந்தேன்

இருளில் கரைந்திருந்த
நீ மெல்ல உருக்கொண்டு என்மீது
கவிழத் துவங்கினாய்

சாத்தி வைக்காத கதவைத் தாண்டிப்
பீறிட்டு வந்த அப்பூனையின் சப்தம்
நிசப்தத்தை உடைத்து விட்டு
உன்னைக் கொலை செய்திருந்தது.


இக்கவிதையை கவனியுங்கள்... ஒரு உச்சக்கட்ட (அல்லது விரக்தியின் காரணமென) கனவின் உலகொன்றில் சஞ்சரிக்கும் பொழுது யதார்த்த உலகின் இடையீடுகளை நுழைத்து கவிதையாக்கியிருக்கிறார். அதற்கு இரண்டு விஷயங்கள் இக்கவிதையில் தேவைப்பட்டிருக்கிறது. முதலாவது இழந்த, அல்லது தொடர்ந்த காதல்; இரண்டாவது குறுக்கீடான பூனை. உன்னை எண்ணிய கனவு பூனையால் கலைந்துவிட்டது என்ற ஒற்றை வரியை எவ்வளவு தூரம் அழகான சொல்வீச்சினால் இழுத்து கவிதையாக கட்டமுடியும் என்பதற்கு இக்கவிதை சாட்சியாகிறது. முறிந்து போன 'பதின்மரக்கிளை' யில் இக்கவிதை படித்த நாள் முதல் பலமுறை சிலாகித்திருக்கிறேன்!!

சட்டென்று காலத்தைக் குறைத்து நினைவுகளின் பின்னிழுப்பில் பாதை கடக்கும் பொழுது ரசனைக்கு அப்பாற்பட்ட அல்லது ரசனைக்கான நேரமில்லாத மனிதர்களின் தலையீடுதான் கீழ்காணும் இக்கவிதை..

சோம்பல் முரித்தபடி
பாதையின் இடவலம் தாவி
செல்கின்றேன்.
அதிகாலைப் பனியில் விறைத்த
உள்ளங்கையை சூடாக்கி
கன்னத்தில் பரப்புகின்றேன்
எனக்குள் இயங்கத் துவங்குகின்றது
ஒரு இரயிலின் அசைவுகள்.
சக்கரங்களின் சுவடு
பதிந்திராத தண்டவாளத்தின்
இருபுறமும் முட்டி நின்ற வானம்
நோக்கி இரயிலின் சப்தத்தோடு கத்தி
அழைக்கின்றேன் மோதித் திரும்பும்
அதிர்வோசை சக்கரங்களற்ற என் சிறு
பிராயத்து இரயிலொன்றை இழுத்து
வருகின்றது. நான் நீள்வட்டக் கயிற்றில்
இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்
மலம்கழித்தவன்.


இக்கவிதையில் இரு பாதைகள் உள்ளன. முதலாவது ஒரு பொருளை நினைத்து தன்னை இருப்பற்ற பாதையில் அலையவிடுவது ; இரண்டாவது இருப்பை உணர்ந்து, கழிக்க வசதியற்ற ஒருவனின் பாதையை அவலமெனச் சொல்லுவது.. இவர்கள் இருவருக்குமிடையேயான கோடுதான் கவிதையின் உட்சாரம். ஆ.முத்துராமலிங்கம் அதிகம் கவனிக்கப்படாத/ நன்கு எழுதும் கவிஞர்களில் ஒருவர். எழுதி வைக்கப்பட்ட நினைவுகளின் குவியல் எரிந்து விடுவதைப் போன்று இவரது பதின்மரக்கிளை எனும் வலை அழிந்து போனதில் அவரைக் காட்டிலும் வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன்.!!

சேரலின் காட்சிக் கவிதைகளின் மீது அளவில்லாத காதல் உண்டு. காட்சிப் படுத்துதல் என்பது சாதாரணமாகச் சொல்லாமல் வித்தியாசமாகச் சொல்லுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். நேரடிக் காட்சியாகச் சொல்லுதல், உவமை முடிச்சிட்டு காட்சி சொல்லுதல், நிகழும்/நிகழ்ந்த காட்சிகளின் நினைவில் போதல், போன்று பலவகையிலும் இவருடைய கவிதைகள் செல்லுகின்றன. கீழ்காணும் சில சுட்டிகளைச் சுட்டிப் பாருங்களேன்...

ஐஸ்க்ரீம் , காட்சிப்பிழை, பழையன போன்ற குறுங்கவிதைகள் ரசிக்கத்தக்கனவாக இருக்கின்றன. 

வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது 
சூரியன்

தன்னிரக்கம் எனும் சேரலின் இக்கவிதை காட்சிப்படுத்தலின் மிகச்சிறப்பாகக் கருதுகிறேன். இவர் அமைக்கும் உயர்வு நவிற்சிகள் சிலசமயம் இயல்பு நவிற்சியைப் போன்றே தோற்றமளிக்கிறது. மிதித்தல் எனும் பொதுச்சொல்லை மையமாக்கி தனக்கும் சூரியனுக்கும் உண்டான வித்தியாசக் "காலை" சொல்லியிருந்தது ரசிக்கத் தக்கது! இயற்கையின் மீதான நம் ஆக்கிரமிப்பைச் சொல்லுகிறாரா அல்லது நம்மீதான இயற்கையின் ஆக்கிரமிப்பைச் சொல்லுகிறாரா என்பது நாமாக யூகிக்க வேண்டியது!! இன்னும்... வண்ணத்துப் பூச்சி கவிதைகள் சலிப்பான சொல்லாக அல்லாமல், நன்கு சலித்த (பொறுக்கிய) சொற்களால் எழுதிய குறுங்கவிதைகள்! இவரது மதுவனத்தில் கொஞ்சம் மயங்கிப் பாருங்கள்!!!

வ்வளவு எளிதில் உதிர்ந்துவிடாதவர் மண்குதிரை. இவரது கவிதைகள் பேசும் சங்கேத பாஷை, மொழியற்றவனின் புரிதலுக்கும் உட்பட்டதாக இருக்கிறது. ஆ.முத்துராமலிங்கம், சேரல், பிரவின்ஸ்கா, வாசுதேவன், (விடுபட்டவர்கள் மன்னிக்க) போன்றவர்களின் கவிதைகளை மீள் வாசிப்பதைப் போல, மண்குதிரையின் கவிதைகள் மீள்வாசிப்பில் ஒரு மிகையான புரிதலையோ, சிலசமயம் மெளனம் கலந்த வாசிப்பனுபவத்தையோ உண்டாக்கிவிடுகின்றன. (சிலசமயம் முடி கொட்டிப் போவதுண்டு!!) 


இதே போன்றுதான்
பாலில்லாத தேநீரில்
இளைப்பாறிக்கொண்டிருந்தேன்

ஒரு உடைந்த நிலவு
வெளியில் மிதந்து கொண்டிருந்தது

பிரிந்து போன
பிள்ளைப் பருவக் கனவைப் போல
சிதறிக் கிடந்தன மேகங்கள்

இதே போன்றொரு ஓசை கேட்டுத்தான்
என் செல்ல நாய்க் குட்டி திரும்பியதும்
எதையோ நோக்கி வந்த
சிநேகமான சுவர்ப்பல்லி
அதிர்ந்து திரும்பிப் போனது

இதே போன்றுதான்
எங்கேயோ பார்த்த
பழக்கமான பெண்ணின் முகம் போல்
பிடிபடாமல் நழுவி
நிகழ்வை சுவாரஷ்யமாக்கிச் சென்றது
அந்தப் பொழுதும்

கருத்த இருட்டில் புகைந்து போகும் நிழலைப் பிடிக்க ஒரு தாவு தாவுவோமே, அப்படியான கவிதைதான் இது. நிழலுக்குப் பதில் பொழுது. இக்கவிதையில் மிகவும் கவனிக்க வேண்டிய அம்சம்.. ஒரு பொழுது அதாவது நிகழ்ந்த பொழுது, அதன் நுண்ணிய நிகழ்வுகளை மட்டுமே சிறைபிடிக்கிறது. அந்த நொடி, அந்த பொழுது, இயற்கை அதுவாகவே இருக்கிறது ; ஜந்துகள் அசைகின்றன. நினைவுகள் மீண்டு திரும்புகையில் கைக்ககப்படாமல் போகிறது.. 

கவிதைகள் படிக்கவோ எழுதவோ, ஒருங்கிணைந்த, எங்கும் அலையாத மனம் தேவை. கவிதையின் தீவிரம், அதன் தாக்கம், அப்பொழுதுதான் மனதின் மையத்தில் அழுந்த அமரும். இரவு அதற்குத் தகுந்த நேரம்... இதோ, இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் இரவு, ரம்மியமானது. மனதின் விசாலமான அறையில் எந்த விரிசல்களுமற்று வெளிச்சம் முழுக்க பரவி நன்கு உள்வாங்குகிறது. சொற்களை மட்டுமே உறிஞ்சும் மூச்சுக்காற்று பட்டு தடதடக்கிறது.. இந்த இரவின் ஒளி எப்பொழுதும் பரவட்டும்!!

மீண்டும் நாளை!!!
மேலும் வாசிக்க...

Wednesday, July 29, 2009

நகர்ந்து செல்லும் பாதை

இந்த பாதை நகர்ந்து 
சென்றுகொண்டிருக்கிறது. 
நாம்
நின்று கொண்டிருக்கிறோம்.

- ஆதவா.

நண்பர் கவிஞர் "அகநாழிகை" பொன்.வாசுதேவன்  அவர்களோடு ஆரம்பம் முதற்கொண்டு நல்ல தொடர்பிருக்கிறது. அவ்வப்போது படைப்பு எப்படி எழுதவேண்டும், படைப்புகள் எப்படி இருக்கிறது, எப்படி எழுதுகிறார்கள் போன்ற "எப்படி"களைப் பற்றி நிறைய பேசியதுண்டு. தன்னை நோக்கி, "எப்படி" என்று கேட்பவர்கள் தனக்குள்ளான படைப்பின் மாற்றத்தை நிச்சயம் உணர்வார்கள். கவனிக்க, தன்னைத்தானே யார் என்று கேட்பது தன்னை ஆராய்தல்... எப்படி என்று கேட்பது தன் படைப்பை ஆராய்தல்.. (ஏன் என்று கேட்பது தனது சூழ்நிலையை ஆராய்தல்) சிலரோடு பேசியபிறகு எழும் மெல்லிய புன்னகை இவரோடு பேசும்பொழுதிலும் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. பேச்சுக்கள், எழுத்தைக் குறிப்பதாகவே இருக்கிறது. எழுத்துக்கள் பேச்சைக் குறீப்பதாக இருக்கிறது. இரண்டுக்குமிடையே எழுத்தாளன் இருக்கிறான். 

வலைஞர்கள் தாங்கள் சந்திக்கும் பொழுது, முதல் சந்திப்பில் பலர் ஏமாற்றமடைகின்றனர். எழுத்தைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் மனப்பிம்பங்கள் யாராலும் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் மிகப்பெரிய முரண்பாடும், வித்தியாசமும் இருக்கிறது. எழுத்தெல்லாம் எழுத்தாளனாகிவிடுவதில்லை. பேனாவுக்கு முன்னர் வரைதான் எழுத்துக்கள் ஒருவனுக்குச் சொந்தமாகிறது. காகிதத்தை அடைந்ததும் எழுத்துக்கள் பரத்தையாகிவிடுகின்றன. நான் என்றுமே மனப்பிம்பங்களை சுமந்து திரிவது கிடையாது. ஏனெனில் ஏமாற்றம் எனக்குப் பிடிக்காதது. அதனால்தான் என்னவோ, வலைஞர்களைச் சந்திக்கும் ஆவல் அவ்வளவாக எழுவதில்லை...

1
கவிதைகளின் நீட்சி, சிறுகதைகள். கவிதைகள் எப்படி பரிணாமப்பாதையில் கடந்து வந்தனவோ அவை போன்றே கதைகளும் கடந்து வந்திருக்கின்றன. வெகு சில கதைகளைப் படிக்கும்பொழுது அதனுள்ளேயே நாமும் ஒரு பாத்திரமாக அமர்ந்திருப்பதைப் போன்று உணர்வு எழும். சில கதைகள் மனதில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன. கவிதைகளைக் காட்டிலும் கதை எழுதுவது சிரமமானது. அதிலும் சொல்லவருவதை குறுக்கி, குறுங்கதையாகவோ, சிறுகதையாகவோ சொல்லுவது இன்னும் கடினம். 
த.ஜார்ஜ் இன் என் நினைவாகச் செய்யுங்கள்  எனும் கதை, வலைத்தள கதைஞர்களுள் ஒரு நல்ல சிறப்பிடத்தைக் காண்பிக்கும் எழுத்து. கதைகளுக்கான இவரது யுக்தி இறுதி முடிச்சவிழ்ப்பது போன்ற யுக்தியைப் போன்று தெரிந்தாலும் சற்றே வித்தியாசமானது. பேருந்தில் பயணம் செய்யும் பொழுது கதை சொல்லப்படுவ்தாக இருப்பின், நமது இறக்கம் (Stop) வந்த பின்னும் பேருந்தோடே பயணிக்கும் கதை யுக்தி. முடிவின் முடிச்சை அவிழ்த்துவிட்டு, நம்மைத் தேடவைக்கும் யுக்தி. த.ஜார்ஜ் கதைஞர் மட்டுமல்ல, நல்ல கவிஞரும் கூட. (அவரது கவிதைகள் வலையில் காணப்படவில்லை) நண்பனோடு நடந்து செல்லுகையில் கதை கேட்கும் உணர்வு இவரது கதைகள் படித்த பிறகு எழுவதை தவிர்க்க முடியாது. மறக்காமல் நான் வாசிக்கும் "கதை" தளங்களுள் " த.ஜார்ஜ் கதைகள்" வலைத்தளமும் ஒன்று.


2.
கதை, கவிதை, விமர்சனம் என பலதுறைகளிலும் கலக்கும் வெங்கிராஜா  ஒரு பாதசாரி, பால்வெளியில் பயணிப்பதாகச் சொல்லுகிறார். அவரது எழுத்துக்களும் அப்படியொரு பயணத்தில் இருப்பதை பறைசாற்றவே செய்கின்றன. சமீபத்தில்தான் வலையுலக அறிமுகம் என்றாலும் நிறைவான புதுமுகம். ஆங்கிலப்படங்கள் நிறைய (குறிப்பாக எனக்கும் பிடித்த) பார்த்தும், விமர்சித்தும் வருகிறார். Vicky Christina Barcelona எனும் படத்திற்கான விமர்சனம் ஒன்றே போதுமானது


பாதசாரியின் எழுத்துக்களில் சிலமுறை எளிமை இருக்கும். சிலமுறை புரியாத வகையிலான நவீனத்துவம் இருக்கும். இன்னதென்று விமர்சித்து ஒரு கட்டத்தில் அடைத்துவிடமுடியாத எழுத்தாளுமையைக் கொண்டிருக்கிறார். அவரது வலைத்தளமும், பாதசாரி எனும் படமும் அழகாக இருக்கின்றன. புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான இவரது தளத்தில் அலைபேசியில் எடுத்த புகைப்படங்களை வெகு அழகான எடுத்து நமக்காகக் கொடுத்திருக்கிறார்.  சமீபத்தில் தமிழில் புகைப்படக் கலை  வலைத்தளத்தில் ஒரு பின்னூட்டத்தின் வாயிலாக அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். 

பூச்சிகளின்
ரம்மியமான உலகத்தில்
மனிதர்கள் அருவருப்பானவைகள்.


இந்த (ஹைக்கூ) கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டார். நுண்ணிய கவிப்பார்வை இவருக்கு உள்ளது. வளைக்கரம் எனும் இக்கவிதையில்  நினைவின் மீளுமை, இன்மையின் இருப்பு, மற்றும் நெகிழ்ந்த பாசம் கலந்து இருக்கிறது. வெங்கிராஜா தவறாமல் படிக்கவேண்டிய பதிவர்களில் ஒருவர்.


3. Intresting Blogger விருது கொடுக்கப்பட்டதிலிருந்துதான் விதூஷை எனக்குத் தெரியும். வீட்டில் தன்னை விதூஷ் என்று அழைப்பதாகக் கூறும் வித்யாவின் பக்கோடா பேப்பர்கள் ஆச்சரியமான சுவையில் இருக்கின்றன. ஒவ்வொருமுறையும் பதிவைப் படிக்கும் பொழுது வித்தியாசமான கண்ணோட்டத்தில் படிப்பதாக உணர்கிறேன். நம்மைப் பொறுத்தவரை சில வறட்டு விதிகள் உண்டு.. First look is best look என்று  சொல்வார்கள். அதன்படி விதூஷின் விரும்பாத கவிதை  முதன்முதலாக நான் படித்த மிகப் பிடித்த அவருடைய படைப்பு. கவிஞர். அகநாழிகை பொன்.வாசுதேவன் அதற்கு முதல் பின்னூட்டத்தில் 

//கடல் மறுத்த மணல் போல தாகமுள்ள கனவுகள்//
//இருக்கும் நிறங்கள் எல்லாம் வானில்//
//நீண்டதொரு இரவில் ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்//
//கருப்பும் வெள்ளையுமாய் உடைந்த நிலவு//
//யாருமே செலுத்தாமல் அலையாடும் படகு//


இவ்வரிகளை வாசிக்கையில் உணர்வலைகள் மீட்டப்படுகிறது

என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வரிகளை வைத்து மற்ற வரிகள் மூடியிருந்தது போன்று எனக்குப் பட்டது. என்னைப் பொறுத்தவரையில் கவிதையில் பொருள் எடுத்தல், உணர்வு மீளுதல், கவிதையின் அழகெடுத்தல், சொல்லெடுத்தல் எனும் விதிகளில் வாசிக்கிறேன். விதூஷின் சில கவிதைகளில் அழகெடுத்தல் அமைந்திருக்கிறது. சில கவிதைகளில் சொல்லாளுமை அழகாக இருக்கிறது. "கனவு"  எனும் இக்கவிதையில் இறுதி வரிகள் மிகவும் பிடித்திருந்தது. தலைப்பை அவர் யூகிப்பதைப் போன்று மாற்றியமைத்திருக்கலாம். சமீப அறிமுகமான இவரது பல பதிவுகள் என் பார்வைக்கு அகப்படாமல்தான் இன்னும் இருக்கிறது.


நாளை மீண்டும்....

மேலும் வாசிக்க...

Tuesday, July 28, 2009

எழுத்து நிறைந்த காடு

முன்னேபின்னே அறிந்திராத யாரோ ஒருவரின் எழுத்துக்கள் நமக்கு, புன்னகையை, அழுகையை, வியப்பை, ரசனையை, என எல்லாவிதமான உணர்வுகளையும் தருகின்றன. எப்படி இந்த பந்தங்கள் உருவாகின்றன? பால்யவயது முதலே பழகின நண்பனைப் போன்ற உணர்வு எப்படி வலைஞர்களை அல்லது எழுத்தாளர்களைச் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்றன? ஆச்சரியமான விஷயம்...

நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் தங்கை திருமணத்தின்போது சொல்லரசனும்  நானும் மதுரைக்குக் கிளம்பிச் சென்றோம். (இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்களென்பதாலும்,) செல்லும் வழியெங்கும் இருவரது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டோம். முன்பின் அறியாத மனிதர், அதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறேன். Buying House மேலாளர் என்பதால் என்னைப் போன்ற Designer கள் எளிதில் நுழைந்து நேரடியாக பேசிவிட இயலாது. அதைப் போன்று சென்னையில் உள்ள இணைய நண்பர்களுள் ஒருவர் ஒரு பெரிய துறையில் வேலை செய்கிறார். (பல காரணங்களால் பெயர் மறைக்கப்பட்டது) அவருடன் சேப்பாக்கம் மைதானத்தைத் தொட்டவாறு சேப்பாக்கம் கிளப்பில் அமர்ந்து உணவு உட்கொண்டதை நினைக்கும் பொழுது, எழுத்து எவ்வளவு பெரிய மனிதரையும் எளிமையாக்கிவிடுகிறது என்பதை உணர்ந்து கொள்ள நேர்ந்தது. எழுத்துக்கள் நிறைந்த காட்டில்தான் நமது பயணங்கள் நிகழ்கின்றன. அவ்வப்போது சில இளைப்பாறல்கள் (குழந்தை ஓவியம் போன்று ) காட்டு மரத்தின் மேல் நிகழ்கிறது. நன்கு அடர்த்தியான இக்காட்டில் திக்கற்று அலைவதுதான் எல்லோருக்கும் விருப்பமாக இருக்கிறது. இங்கே உயர்வுதாழ்வு எதுவும் இருப்பதில்லை.

1. நான் அடிக்கடி படித்து வியக்கும் வலைத்தளம் மோகன்தாஸின் செப்புப்பட்டயம்  சிலரின் எழுத்துக்கள் ரசிக்க வைப்பனவாக இருக்கும் ; வெகுசிலரது, சீரியஸ்னஸ், தேவையான பொழுது எடுத்து படித்துக் கொள்ளலாம்.. மிகச்சிலரது எழுத்துக்கள் கவர்ந்திழுப்பவையாகவும் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியனவாகவும் இருக்கும். மோகன்தாஸ் அப்படியொரு எழுத்தாளர். மலரினும் மெல்லிய காமம்  எனும் தொடர்(?)கதைக்காக அவரைப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கப்படிக்க கதையின் உள்ளே (தொபுகடீரென்று) விழுந்து தொலைந்தேன். அவ்வளவு நெருக்கமான, இயல்பான எழுத்துக்கள். அப்படியொரு யதார்த்தம் நிறைந்த வசனங்களை காமம் தோய்ந்த எழுத்துக்களில் அதற்கு முன்னர் படித்தது கிடையாது. (நாம படிச்சதே கம்மிதான்!!) காமத்தின் கரை தொட்டுத் தொட்டு வந்ததைப் போன்று.... இது ஒரு விளையாட்டாகத் தோன்றியது. தொடர்ந்து காதலாகி யாசிக்கிறேன் இல்  காதல், காமம் ஆகிய இரு விளையாட்டுக்கும் நடுவில் எழுத்தாகி அவர் ஊருவதை உணரமுடிந்தது. Very well impressed. தொடர்ந்து இக்கதைகள் முடிவற்ற முடிவோடு வெளிவரவில்லை.. காதலாகி யாசிக்கிறேனில் என்னைக் கவர்ந்தது இன்னுமொரு அம்சம் ஜீ-டாக் சாட் களை கதைக்குப் பயன்படுத்திக் கொண்டது (அவர் பேசியதா என்று அவரிடம்தான் கேட்கவேண்டும்..) தொடர்ந்து, கவிதைகளும் சிறப்பாக எழுதுகிறார். மோகனின் தளத்தில் கவிதையைக் காட்டிலும் கதைகளே எனக்கு விருப்பப் பிரதானமாக இருக்கிறது. திரை விமர்சனம் தனக்கேயுரிய பாணியில் சிறப்பாக செய்கிறார். இவரது எழுத்தைப் படிப்பவர்கள் நிச்சயம் பின் தொடர்வார்கள். அப்படியொரு மந்திரம் அவரது வலைத்தளத்தில் உள்ளது.


2. வலைத்தளங்களுக்கு அப்பாற்பட்ட இணையங்களில் தொடர்புள்ள பதிவர்களில் பூமகளும்  ஒருவர், கதை, கவிதை, அனுபவம், விமர்சனம், சினிமா, அலசல், விவாதம் என பலபடிகளில் பயணிக்கும் இவரது பூக்களம் பல வண்ணங்கள் பூசப்பட்ட எழுத்துக்களின் குவியலாக இருக்கிறது. எதிர்கவிதைகள், பதில்கவிதைகள், விமர்சனக் கவிதைகள் என பலவேறாக இவர் எழுதுவதைக் கண்டிருக்கிறேன். சமீபத்தில் "சர்தார்ஜியுடன் ஒரு பயணம்"  அவரது அனுபவக்கட்டுரைகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. யாமம் நாவல்  குறித்த புத்தக விமர்சனம் அவரது இலக்கிய ஆர்வத்திற்கு குறைவில்லாத எழுத்துக்கும் சான்றாக இருக்கிறது. பெரும்பாலும் எழுதுவதைக் குறைத்துக் கொண்டாலும் நிறைந்த எழுத்துக்களே வலையில் மின்னுகின்றன. அதிகம் யாராலும் வாசிக்கப்படாத, மனம்கவரும் வலைத்தளங்களுள் பூமகளின் வலைத்தளமும் அடக்கம்.

3. எங்கெங்கோ பறந்து வந்த புறா, களைத்திருப்பவன் கரங்களில் தவழ்வதைப் போன்றே கடல்புறா  தளம் எனக்குப் பட்டது. அதிகம் யாரையும் சென்றடையாத, சிறந்த படைப்புகள் மிகுந்த பல தளங்களுள் கடல்புறாவும் ஒன்று. அதன் படைப்பாளி பாலா, மிகச் சிறந்ததில் சிறந்தவற்றை உவமையாக்கி கவிதைகள் எழுதுவதை குறிக்கோளாகக் கொண்டிருப்பார் போலும். சங்கமம்  எனும் அவரது கவிதையின் முதல் வரிதான் அவரது தளத்தை என்னுள் ஈர்த்தது.

நிலாத்துண்டொன்று நழுவி 
இலையில் ஒழுகி 
சாளரம் வழி விழுந்து விட்டிருந்த 
அன்று


காட்சிபடுத்துதலில் ஆகச்சிறந்த இவ்வரிகளினூடாக கடல்புறாவைக் கொஞ்ச வேண்டியிருந்தது. இன்னொன்று சைட் அடித்தல் தவம்  சிக்கலில் விழுந்துவிட்ட எழுத்துக்களை ஒவ்வொன்றாகக் கோர்ப்பது போல முதலில் தலை கவிழ்ந்து உள்ளுள் நுழைந்து கவிதை படித்தேன். சிறு சிறு நிகழ்வுகளை எழுத்தின் மேல் எழுத்தென அடுக்கி வரையப்பட்டதென கவிதை இருந்தது. தலைப்பற்றவன்  கவிதையின் முடிவில் நம்மை பின்னோக்கி நகர்த்தலுக்கான ஆயத்தம் நிச்சயம் இருக்கிறது. எளிதில் பிரித்தெடுக்க முடியாத வகைகளை (Label) கவிதைகளுக்குக் கொடுக்கிறார். அதை மாற்றிவிட இச்சமயத்திலொரு அவருக்கு கோரிக்கை!!

மீண்டும்.....
மேலும் வாசிக்க...

Monday, July 27, 2009

ரசனையின் பின்புறம்

வணக்கம் நண்பர்களே!

வலைச்சரத்தில் ஆசிரியராக பதிவிட அழைத்த திரு.சீனா அவர்களுக்கு என் பணிவான நன்றிகள்! தொடர்ந்து இவ்வளவு தூரம் என்னைத் தூக்கி வைத்த நண்பர்களுக்கும் நன்றி!!

தொடர்பில்லாத கருப்பொருள், ரசனையின் தீண்டலில் கவிதையாகிவிடுவதைப் போலவே அறிமுகமில்லாத நபர்களின் எழுத்துக்களை உருவகித்து வலைத்தளங்களில் நட்பு கொள்ளுகிறோம். வலைத்தள நட்பு எழுத்துக்கும் எழுத்துக்கும் இடையிலான பாலத்தை நன்கு இறுக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. நண்பர்கள் ஆங்காங்கே சங்கமிக்கின்றனர். தம்மது கருத்துக்கள், விமர்சனங்கள் என சந்திப்பிடத்தை எழுத்துக்களின் கூடாரமாக்குகின்றனர். வலைஞர்கள், டிஜிட்டல் எழுத்துக்களிலிருந்து அச்சக எழுத்துக்களுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்து கொண்டு வருகின்றனர். ஊடகங்கள் வலைத்தளங்களை உற்று நோக்க ஆரம்பித்திருக்கின்றன. ஊடகவியலர், திரையுலகினர், அறிஞர், முதல் மாணவர்கள் வரை இணையமொழி அறிந்த அனைவரும் வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகின்றனர். தமிழ் வலையுலகம் அடுத்த கட்ட நகர்வுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

வலைஞர்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்பது வலைச்சரத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. எனக்குத் தெரிந்த எல்லா தளங்களையும் இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பிரபலமாகாத நல்ல எழுத்துக்கள் அடங்கிய வலைத்தளங்கள் பல இணையத்தில் உலவுகின்றன. எனக்குத் தெரிந்த வரையில் அதிகம் அறிமுகப்படுத்தியிராத சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

இணையத்தில் வந்தபிறகு எனக்கு பாதிப்பு ஏற்படுத்திய கவிதையொன்றைக் கூறிவிட்டுத் தொடர்கிறேன்.

ஒன்றுமில்லை!! 

அநேக திருமண வீடுகளில்
நானும் இருக்கிறேன்..
வித்தியாசமொன்றுதான்...நீ பந்திக்கு பின்..
நான் பந்திக்கு முன்

அடுத்தவேளை
உணவு யார் வீட்டில்..
எனக்குள்ளும்தான் வினா..
விருந்தினன் நான்!

நல்லவேளை தப்பிவிட்டாய்..
கிழிந்த உடையில் 
தைத்துக் கொண்டாய் வயிற்றை..
உருப்படியாய் 
உனக்குமொரு உடையிருப்பின்..
வறட்டுக் கவுரதையில் 
சுருண்டிருப்பாய்..என்போலே..

இரு கரங்களிருப்பதாய்
எள்ளி நகைப்போரிடம் சொல்..
நான்கு வயிறிருப்பவன்படும் 
வேதனைகளை..

உனக்கு வானம் கூரை..
எங்கு சென்றாலும் உடன்வரும்..
இருக்கும் கூரையை
பிரிக்கமுடியா நிலையெனக்கு..
இன்னொரு கூரைக்கு
உறுதியென்ன...

வீசியெறிந்து
வீதியில் நடக்க உம்மிடமெதுவுமில்லை..
என் கரங்களிலிருப்பது 
இரு பிஞ்சுகள்..

ஊழியமில்லாயுனக்கு
ஊறுவதைவிடவும்
குறைவென் ஊதியம்..

உம் கரங்கள் நீளுவதற்கு
யோசிப்பதில்லை..
நீளத் துடிக்குமென் கரங்களை 
யாசிக்கிறேன்..
நாலெழுத்து படித்தவன் நான்..
நல்ல உடை தரித்தவன் நான்..

என் பிரதியாயிருக்கும்
பிச்சைக்காரரே...
அடுத்த முறையேனும்
கை நீட்டியென்னை
சங்கடத்தில் ஆழ்த்தாதீர்!!

கவிஞர் பூ


விமர்சனம் என்பது படைப்பின் நிறைகுறைகளை அலசி ஆராயும் யுக்தி. ஒரு பொருளின், உணர்வின், நிகழ்வின் விமர்சனம் கதையாகவோ, கவிதையாகவோ படைப்புகளாக உருவாகிறது. விமர்சிக்கத் தெரிந்தவனுக்கு, ரசனையின் பின்புறம் நன்கு புலப்படும். படைப்பின் எழுத்தை மீறிய ரசனா சக்தி விமர்சனத்தின் எழுத்தெங்கும் ஊர்ந்து ஓடும். சினிமா விமர்சனத்தை, கவிதை விமர்சனத்தை, அரசியல் விமர்சனத்தை, சமூகத்தின் விமர்சனத்தை பலவேறாக, பலகோணங்களில் பல தளங்களில் நாம் பார்த்திருக்கலாம். அவைகளின் நிறைகுறைகளை அலசும் பொழுது, அந்தந்த துறை சம்பந்தப்பட்ட மனிதர்கள் அலசப்படுவார்கள். படைப்பின் விமர்சனம் எனும் பார்வை மறைந்து, படைப்பாளியின் விமர்சனம் என்ற பார்வைக்குள் ஒடுங்கி அலசுவார்கள். விமர்சனம் என்ற ஒரு யுக்தி இல்லையெனில் படைப்புகளுக்கான தரம் பலவாறாகப் பிரிந்து தாழ்ந்து போயிருக்கக் கூடும். முகஸ்துதியும், முகத்தில் அறைவதுவும் அடுத்தடுத்த படைப்புகளுக்கான ஏணிப்படிகளென ஏறிச் செல்லுபவர்களுக்கு விமர்சனம் நிச்சயம் ஒரு இடத்தைக் கொடுக்கும்.. இப்படி பலவுண்டு...சரி... 


இப்படி விமர்சிப்பதற்கென்றே கிருஷ்ணபிரபு ஒரு வலைத்தளம்  வைத்திருக்கிறார். கிருஷ்ணபிரபு வாசித்த தமிழ்புத்தகங்களை (மட்டும்) தனது எழுத்துக்களால் வலையெங்கும் நிரப்புகிறார்.  புத்தக விமர்சனத்திற்கென பிரத்யேக யுக்திகள் என்று பெரியதாக எதையும் அவர் கையாளுவதில்லை. ஆற்று நீரை கையால் மொண்டு எடுத்து குடிப்பதைப் போன்ற யுக்தி அவருடையது. வாசிப்பை அனுபவமாக்கி விமர்சிக்கும் யுக்தி அது. நேரடி சொல்லாளுமை மட்டுமே நிறைந்திருக்கிறது. சிறுவயதிலிருந்தே (சிறுவயது என்பது எதுவரை?) வாசிக்கும் அனுபவமிருப்பதால் அவ்வப்போது புதிய புத்தகங்களுக்குப் பின்னே அல்லது எழுத்தாளர்களுக்குப் பின்னே சென்றும் நினைவு மீள்கிறார். புத்தகங்கள் எனும் பூட்டின் துவாரமாக இவ்விமர்சனங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சென்றவார ஆனந்த விகடனில் இவரது தளம் குறித்த அறிமுக விமர்சனத்தைக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிறைய வாசிக்கும் இவர் சென்னையில் வசிக்கிறார். ஓரிருமுறை மடலில் பேசிய தொடர்புண்டு. புத்தக வாசிப்புக்கு நேரம் குறைவாக (இல்லாமலேயே) இருந்தாலும், புத்தகம் வாங்குவதற்கான எண்ணமே இல்லாமல் இருந்தாலும் மறக்காமல் நான் வாசிக்கும் தளம் " நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்"

2. 
நண்பர் கார்த்திகைப் பாண்டியன் வீட்டிற்கு வந்த பொழுது தந்தையின் மரபு சார் ஓவியங்களை எடுத்துக் காண்பித்திருந்தேன். நேரக்குறைவினால் எல்லாமே காண்பிக்க இயலவில்லை. ஓவியங்களைத் தவிர்த்து, என் தந்தை செதுக்குவதிலும் வல்லவர். கண்ணாடி ஓவியங்கள் (Glass Painting)  Emboss Painting  போன்றவைகளையும் செய்திருக்கிறார். அவற்றுள் பலவற்றை மழை தின்றிருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாம் இன்னும் மிச்சமிருக்கிறது. என் தங்கையும் ஒரு ஓவியர் தான். இணையத்தில் தமிழ் எழுதும் வலைஞர்களில் தர்ஷினி ஒரு நல்ல கலைஞராக இருக்கிறார். தான் செதுக்கி/செய்து வைத்த ஓவியங்களை படமெடுத்து இணையத்தில் வெளியிடுகிறார். எல்லாவிதமான கலைப்பொருட்களையும் உருவாக்குவதில் வல்லவராக இருக்கும் இவர், தனது தளத்தில் ஆயில் பெயிண்டிங், காஃபி பெயிண்டிங், பானை அலங்காரம், கண்ணாடி அலங்காரம், போஸ்டர்கலர் பெயிண்டிங், இலையலங்காரம் என வகைவகையான Art மற்றும் Craft களை சேமித்து வைத்திருக்கிறார். நுணுக்கமான விளக்கங்களை அவரது எழுத்துக்களில் காணமுடியாவிடினும் படங்கள் ஓரளவு தெளிவாக்குகின்றன. அவரது ஓவியத்திறம் நன்கு புலப்படுகிறது. ஒரேயொரு கவிதை அவரது அம்மாவுக்கென எழுதியிருக்கிறார். எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவரது தளத்திற்குச் சென்று பார்வையிட்டிருக்கிறேன். புதிதாக ஓவியம் கற்க முனைபவர்கள், Craft முறை செய்பவர்கள், இங்கே இவரிடம் கற்றுக் கொள்ளலாம்....

3. சமீபத்தில் வலைத்தளத்தில் எழுதத் துவங்கியிருக்கும் தூறல்வெளி கெளரிப்பிரியாவின் கவிதைகளைப் படிக்கையில் மழையில் நனைந்த குழந்தையைப் போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது. இவரது கவிதையொன்றை எடுத்துப் பேசுவது சிறந்ததாக இருக்குமென்று கருதுகிறேன்.  

(தாத்தாவின்..
அம்மாவின்...
அப்பாவின்...
தங்கையின்..)

அனைவரின் தகவலையும் 
தட்டச்சு செய்யும்
தங்கையின் இன்றைய மின்மடலைக் 
கூர்ந்து நோக்குகையில் 
தெரிகின்றன 
கணினித்திரையின் நுண்சதுரங்கள் .

காணாமல் போனவை என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இக்கவிதை நடப்பியலையும், தகவல் பரிமாற்றத்தின் பரிணாமத்தையும் வாஞ்சையோடு சொல்லுகிறது. கவிதையியலை அழகாக படிக்கிறார். 
சில கவிதைகளை ஆழ்ந்து பார்க்கையில், தேடல் அல்லது திரும்ப மீளுதல் போன்று இருக்கிறது பால்யத்தில் அவரது மனப்பொந்தில் அவர் தொலைத்த எண்ணவிதைகள் இன்று கவிதையென முளைத்து நிற்கின்றன. அதிக வாசகர் வாசனை அல்லாத இத் தளம்... வலைக்கிடங்கு முழுக்க கவர்ந்திழுக்கும் கவிதைகளோடு காத்திருக்கிறது.


நாளை சந்திப்போம் நண்பர்களே!
மேலும் வாசிக்க...

Sunday, July 26, 2009

வருக வருக ஆதவா

அன்பின் பதிவர்களே

27 சூலை துவங்கும் வாரத்திற்கு - வலைச்சர ஆசிரியர் வருகிறார் அருமை நண்பர் ஆதவா அவர்கள். இவர் 25 வயது இளைஞர். திருப்பூரில் இருக்கிறார். குழந்தை ஓவியம் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ 150 இடுகைகள் இட்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, இலக்கியம், அனுபவம், காதல் மற்றும் சினிமா என்ற பல்வேறு பகுதிகளில் எழுதி வருகிறார்.

இவரை வருக வருக - இடுகைகளைத் தருக தருக - பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வலைச்சரம் சார்பினில் வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் ஆதவா

சீனா
------
மேலும் வாசிக்க...

அகரம் அமுதா - ஒரு சிறு அறிமுகமும் - விடை அளித்தலும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்று பணியாற்றியவர் நண்பர் அகரம் அமுதா அவர்கள். இவரை ப் பற்றிய அறிமுகப் பதிவு இவர் இடுகை இடும் முன்னரே இட இயலாது போனது.

இவர் 30 வயது இளைஞர். பெரம்பலூரைச் சார்ந்தவர். அயலகத்தில் பணி புரிகிறார். இவர் அகரம் அமுதா, இலக்கிய இன்பம், தமிழ்ச் செருக்கன், தமிங்ழிஷ்.காம் என்ற வலைப்பூக்களிலும், இயன்ற வரையில் இனிய தமிழ் மற்றும் வெண்பா எழுதலாம் வாங்க என்ற குழுப் பூக்களிலும் இடுகைகள் இட்டு வருகிறார்.

வெண்பா எழுதுவதில் புலி. வெண்பாவில் புகழேந்தி என்பதற்கு இணையாக வெண்பாவில் அமுதா என்ற பெயரினைப் பெற்றவர். குறுகத் தரித்த குறளை - குறள்வெண்பா வடிவினில் இருந்து இன்னிசை வெண்பா வடிவினில் தருகிறார். நேரிசை வெண்பாவும் எட்டிப் பார்க்கிறது. இலக்கணம் இவருக்கு இன்பா வடிவில் குறளோவியம் தருகிறது.

இவர் கடந்த ஒரு வார காலம் வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். அப்பொழுது ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 125க்கும் மேலாக மறுமொழிகள் பெற்றுள்ளார்.

இவர் 25 பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்து - அனைவரும் வெண்பா எழுதுபவர்கள் - அவர்கள் எழுதிய வெண்பாக்களில் சிறந்தவற்றை அறிமுகம் செய்தார்.


ஏற்ற பொறுப்பினைச் சிறப்பாக நிறைவேற்றி மன நிறைவுடன் விடை பெறுகிறார். இவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.

நன்றி கலந்த நல்வாழ்த்துகள் அகரம் அமுதா

சீனா
----------




மேலும் வாசிக்க...

ஆ.ஞான சேகரன் - வாழ்த்துகள்

அன்பின் பதிவர்களே

கடந்த சூலை 13ம் நாள் துவங்கி 19ம் நாள் வரை வலைச்சரத்தின் ஆசிரியராகச் சிறப்புடன் பணியாற்றிய அருமை நண்பர் ஆ.ஞானசேகரனை வாழ்த்தி விடையளிக்கும் பதிவு இது.

சூலை 19 / 20 - இன்னாட்களில் நான் அயலகம் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்த படியாலும் - இணையம் - தமிழ் எழுத்துரு இல்லாத காரணத்தினாலும் அவருக்கு வாழ்த்துரை இடுகை இட இயலவில்லை.

நண்பர் ஞானசேகரனின் அயராத உழைப்பும் தளராத பொறுமையும் பாராட்டுக்குரியவை. ஏழு நாட்களில் ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிவர்களை அறிமுகம் செய்து அவர்களின் சிறந்த இடுகைகளாக இருநூறுக்கும் மேற்பட்ட இடுகைகளின் சுட்டிகள் கொடுத்து ஏற்ற பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றியதற்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளை வலைச்சரம் சார்பினில் பொறுப்பாசிரியர் என்ற முறையில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இவர் பெற்ற மறுமொழிகளோ ஏறத்தாழ 350.

நன்றி ஞான சேகரன் - நல்வாழ்த்துகள் ஞான சேகரன்

சீனா
-------------


மேலும் வாசிக்க...

Saturday, July 25, 2009

வெண்பா எழுதலாம் வாங்க! (3)

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!

11. சவுக்கடி! (யாரெனத்தெரியவில்லை)

மிகச்சிறந்த வெண்பா எழுதும் ஆற்றல் படைத்தவரான இவர் பலமுறை மறுமொழிப்பகுதியின் வழியாக, தாங்கள் யார் அறிவதற்கு விவரங்களைத் தாருங்கள் என்றாலும் கண்டுகொள்ளாதிருக்கிறார். இவரது வெண்பாக்களுக்கு இரசிகன் நான் என்றால் அது மிகையாகாது. அருள்கூர்ந்து இவரை அறிந்தவர்கள் இருப்பின் மறுமொழி வாயிலாகத் தெரியப்படுத்துவீர்களாக.

சொல்லே மிகவும் சுடும் என்ற, வழங்கப்பட்ட ஈற்றடிக்கு இன்றைய நாட்டுநடப்போடு எத்தனை அழகாகப் பொருத்திப் பாடுகிறார் பாருங்களேன்…

நம்மினத்தைக் காப்பரென நம்பி இருந்தோம்!
தம்மின் நலங்கள் தவிர்த்திடார் - நம்மிடம்
புல்லரைக் கோவ முறுத்தாதீ ரென்றுரைத்த
சொல்லே மிகவும் சுடும்.

இந்திய நாடேதான் ஈழத் தமிழர்களை
முந்தி அழிக்கிறது முக்காட்டில்! - இந்தநிலை
ஆழப் புரிந்தே அடுத்தவினை ஆற்றிடுக!
ஈழத் தமிழா எழு!


12. குரு (இவரையும் யார் எனக்கண்டு பிடிக்க முடியவில்லை)

அழகிய வெண்பாக்கள் யாக்கத்தெரிந்த இவர் வழங்கப்பட்டிருக்கின்ற ஈற்றடிகள் பலவற்றிற்கும் வெண்பாக்கள் செய்து மறுமொழியில் இட்டிருக்கிறார். இவரையும் அறிந்தவர்கள் உரைப்பீராக…

மெல்லினமே மின்னுமொளி மேகலையே தந்தேனே
உன்னிடமே உள்ளம் உணர்வாய்நல் -பொன்னினமே
திட்டவடி மேலழகி தின்ன இடையழகி
இட்டவடி நோவும் இவட்கு!

விஞ்ஞானம் ஓர்பக்கம் வேகமாய் வந்தாலும்
மெய்ஞானம் கொண்டாலும் மேதினியில்-அங்ஞானம்
வாழ்வு தருமோ?நல் வாழ்க்கை வருமோ?
உழவின்றி உய்யாது உலகு.

மெல்லினமே மின்னுமொளி மேகலையே தந்தேனே
உன்னிடமே உள்ளம் உணர்வாய்நல் -பொன்னினமே
திட்டவடி மேலழகி தின்ன இடையழகி
இட்டவடி நோவும் இவட்கு!

13. ஜீவ்ஸ்.

“இயன்றவரையில் இனிய தமிழில்” என்ற பெயரிலான வலையை நிறுவி எனக்கு முன்பாகவே வெண்பா வகுப்பெடுத்த பெருமை இவரையும் இவருடன் இணைந்து பதிவிட்டிருக்கின்ற சில நண்பர்களையும் சாறும். மிகச்சிறந்தமுறையில் எளிமையாகவும், அழகாகவும் வெண்பாக்கள் எழுத, பலருக்கும் கற்றுத்தந்துள்ளார். வெண்பா எழுதலாம் வாங்க வலையை நான் தொடங்கி நடத்தத்தொடங்கிய புதிதில் என்னையும் “இயன்றவரையில் இனிய தமிழில்” ஆசிரியராகப் பணிபுரிய அன்பழைப்பு விடுத்து இணைத்துக்கொண்டவர். இவரது வெண்பாக்கள் சில…

பழங்களும் பச்சைக்காய் கறிகளும் இன்றி
கிழங்குகள் திண்றிடும் காலம் வருமோ
இழந்திடல் இன்றி இனிதாய்நாம் வாழ
உழவின்றி உய்யா துலகு.

காண்பதெல்லாம் நல்லதுவோ காலம்தான் சொல்லிடுமோ
வேண்டியோ பெற்றிடுவோம் வேதனை - வான்போற்றும்
நன்னிலத்தில் காண்பதெலாம் கேடாம் நலம்பெறவே
கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

14. பாத்தென்றல் முருகடியான்…

சிங்கையின் முதன்மைக்கவிஞராகிய பாத்தென்றல் முருகடியான் அவர்களை நான் மூன்று நான்காண்டுகளுக்கு முன்பு காணாதிருந்திருந்தால் இன்று நான் உங்கள் முன் இல்லை. கோடுகள் போட்டுக்கொண்டிருந்த என்னை ஓவியம் தீட்டவைத்தவர். கிறுக்கிக் கொண்டிருந்த என்னைக் கொஞ்சுதமிழ் பாட வைத்தவர். இவர் எனக்கூட்டிய தமிழமுதிற்கு நன்றிக்கடனாக, வெண்பாவில் தமிழ்த்தாய் வணக்கம் பாடப்போந்தபொது அதில் இவரையும் புகுத்திப் பாடி எனது நன்றிக்கடனைச் செலுத்தினேன். அவ்வெண்பாக்கள் பலரது பாராட்டுக்களையும் எனக்குப்பெற்றுத்தந்தது. நீங்களும் அவ்வெண்பாக்களைப் படிப்பீராக…

தமிழ் வணக்கம்!

பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென்
பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் –மூத்த
மொழியென்று பேர்விளங்கும் முத்தமிழே! தாயே!
குழவி எனையெடுத்துக் கொஞ்சு!

கொடிக் கவிஞருள் கோமகளே! நீயென்னைத்
தேடிக் களைப்புறவுஞ் செய்வேனோ? –நாடியெனைக்
கோத்தள்ளிக் கொஞ்சக் குறிப்பொன் றுரைப்பதெனில்
பாத்தென்றல் மாணாக்கன் பார்!

இனி வெண்பா எழுதலாம் வாங்க வலையில் வழங்கப்பட்ட ஈற்றடிகளுக்கு எனதாசான் பாத்தென்றலார் வழங்கியுள்ள வெண்பாக்களைக் காண்போமாக.

பலகல் நிலத்தைப் பறித்தாரே சீனர்;
சிலகல்லை மீட்டுச் சிரிக்க! -உலகில்
இனிநம்மைக் காக்க இறையாண்மைப் பூக்க
அணுவாற்றல் வேண்டும் அறி!

வணிகப் பெருக்கம் வலிமை மிகுந்த
அணுவின் துணையாலு மாகும் -கணைகள்
எழுகின்ற காலம் இதுவென்ற போதும்
உழவின்றி உய்யா துலகு!

கண்டாலும் கேட்டாலும் கள்ளுண்ட போதைத்தரும்
பெண்டிற் பெருஞ்சிறப்பே பேரின்பம் -என்றிருக்கும்
மெய்யைப் புறமொதுக்கி மெய்யறிவுப் பெற்றவர்சொல்
மெய்யடா மெய்யடா மெய்!

15. இராம்குமார்

கிடைத்தற்கரிய நண்பராக எனக்குக்கிடைத்த இராம் குமார் அவர்கள் மிகச்சிறந்த பல்துறை சார்ந்த அறிவாற்றல் பெற்றவர். வள்ளுவன் வாக்கிற் கிணங்க, “வெல்லுஞ்சொல்லறிந்து” பேசக்கூடியவர். எனது மதியுரையாளர் என்றால் அது மிகையாகா. “இரகு வெண்பா” என்ற பெயரில் கம்ப இராமாயணத்தை வெண்பாவில் யாக்க முயன்று சிலபத்துப் பாக்கள் புனைந்து, பணிமிகுதியால் அதைத் தொடராது காலம் கடத்துபவர். (இவரைத் திட்டுவதற்கு வேறு வாய்ப்புக் கிடைக்காதென்பதால், செல்லமா திட்டுகிறேன் கட்டுக்காதீங்க). இவரது வெண்பா(க்கள்) கீழே:-

வெண்பா எழுதலாம் வாங்க எனஅழைத்து
வெண்பா வகுந்தீர் இணையத்தில் - கண்ணொற்றும்
வெண்பாக்கள் தூண்ட இதோநானும் உம்மிடத்தில்
வெண்பா விரித்தேன் விரைந்து.


15. அவனடிமை!

புதிதாக வெண்பா எழுதலாம் வாங்க வலையில் இணைந்து கலக்கும் இவர் மிகவிரைந்து கவிதைபாடும் ஆற்றலுடையவர். இவரது சிலவெண்பாக்களைப் படித்து மலைத்திருக்கிறேன். அத்துணை இயல்பாகவும், ஆழமாகவும் எழுதும் ஆற்றல் படைத்தவர் ஆவார். இவரது சில வெண்பாக்கள்:-

மாப்பூச்சும் மல்லிகையும் மங்கை யுனக்கேனோ
நீபோற்றும் தேகம் நிலையாமோ? - சாபோற்றும்
சீசதையிற்ச் செல்லரிக்குஞ் சாம்பல் சடலத்தில்
ஆசை அலங்கார மேன்?

சிற்றிடையாள் சற்றே சிரித்தாலும் சீர்குலையும்
பட்டுடையாள் பஞ்சில் படுந்தீ - மறைத்தார்
தலைமுதல் கால்வரை யென்றாலும் கண்கள்
நிலவினில் வீழ்ந்த நெருப்பு!

குறிப்பு:-

மேற்குறிப்பிட்ட பலருமே “வெண்பா எழுதலாம் வாங்க” என்ற ஆலின் கிளைகளாகவும், விழுதுகளாகவும், வேர்களாகவும் விளங்கிச் சிறப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். இனியும் சிறப்பிக்க விருக்கிறார்கள். அவர்களுக்கென் முதற்கண் நன்றிகளையும் வணக்கங்களையும் உரித்தாக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்றிகள் கோடி நவில்கின்றேன் என்னருமை
அன்றில்காள் ஏற்பீர் அமைவுடனே! –அன்றுமுதல்
இன்றும் இனிவரும் எந்நாளும் ஆதரித்துப்
பொன்றாப் புகழ்பெறுவீர் பூத்து!


இன்னும் பற்பலரும் ஓரிரு வெண்பாக்கள் யாத்து மறுமொழியிட்டு வெண்பா எழுதலாம் வலைக்கு மெருகேற்றியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இக்கட்டுரையின் வாயிலாக வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

என்பணி தமிழ்செய்து கிடப்பதன்றிப் பலரையும் தமிழ்செய்ய வைத்துவிடுவது என்ற குறிக்கோளோடு துவங்கப்பட்ட வெண்பா எழுதலாம் வாங்க வலை இதுகாறும் சீராகவும் சிறப்பாகவும் வெற்றிநடை போட்டுவருகிறது. இனிவரும் காலங்களிலும் அது தனது இலக்கு மாறாது வெற்றிநடைபோடச் செய்ய வேண்டியது வாசகர்களாகிய, பதிவர்களாகிய, வலைஞர்களாகிய, தமிழர்களாகிய, உங்கள் ஒவ்வொருவரது கடமையுமாகும். தங்களால் வெண்பாக்கள் எழுதமுடியவில்லை எனினும்கூட எழுதுபவர்களை (வெண்பா எழுதலாம் வாங்க –வலையில் மறுமொழிப்பகுதியின் வாயிலாக) ஒவ்வொரு முறையும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவீர்களாயின், முன்பிருந்து எழுதிவருபவர்களுக்கு புதிய தெம்பையும், தெளிவையும் பெற்றும்தரும் என்பதோடு, புதிதாக எழுத முனைபவரையும் ஊக்கப்படுத்துவதாக அமையும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு வலைச்சரத்தின் வாசகர்களாகிய, முந்நாள் பதிவர்களாகிய உங்களை அன்போடு வணங்கி வேண்டிக்கொள்கிறேன்.

வளர்வேன்…
அகரம் அமுதா
மேலும் வாசிக்க...

Friday, July 24, 2009

வெண்பா எழுதலாம் வாங்க! (2)

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!

1.சிக்கிமுக்கி (யாரெனத்தெரியவில்லை அறிந்தவர் உரைப்பீராக)

என்னைக்கவர்ந்த வெண்பா எழுதுபவர்களுள் இவரும் ஒருவர். இவரைப்பற்றி அறிந்தவர்கள் எனக்கு உரைப்பீர்களேயாயின் நன்றிக்கடன் பட்டவனாவேன். சிக்கிமுக்கி என்ற பெயரில் மறுமொழிப்பகுதியில் ஈற்றடிக்கு வெண்பாக்கள் எழுதுமிவரை யாரென என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. இவர் வலையல்லாத ஓர் வலைஅமைத்துக்கொண்டு மறுமொழியிடுவதே காரணம். இவர் என்னோடு வினா தொடுத்த வெண்பா.

எங்குற்றாய் இத்தனைநாள் என்னசெய்தாய் என்னி்னன்பா!
பொங்குமகிழ் வுன்பதிவைப் பார்த்தவுடன்- இங்கேநீ
ஈற்றடி தந்திலை ஏனோ குழப்பமென
சாற்றுக செய்தியினைச் சற்று.


அவர் தொடுத்த வினாவிற்கு நானுரைத்த பதில்…

நாட்கள் சிலவாக நான்ஆள் மடிக்கணினி
ஆட்கொண்ட நோயால் ஆவதியுற -மீட்டதனை
முன்போல் பொலிவாய் முகிழ்ந்துழைக்க செய்தற்கே
ஒன்றிரண்டு மாதமாச்(சு) ஓர்!

பூவைமேல் எத்தனை பூ! என்ற ஈற்றடியில் ‘பூவைமேல் எத்தனைப் பூ!’ எனவந்து ஒற்றுமிக வேண்டும் என்பதை அழவிய வெண்பாவாக்கித் தந்தருந்தார். அதைக் காண்போம்.

அகரம் அமுதா! அணிவிளக்கம் தந்தாய்!
மிகுவல் லெழுத்தது மேவல் - பகர்ந்தாயே!
தேவையன்றோ பூவின்முன் பகரமெய் திருத்தமுற
"பூவின்மேல் எத்தனை'ப்' பூ!

இவ்வினாவிற்கு எனது பதில்.

எண்ணுப் பெயர்முன் எழாதொற் றெனவுரைத்த
முன்னைப் புலவர் மொழியிலுள்ள –உண்மையினை
மேவிப்பார்; பார்த்து மிகாதென் றறிந்திடுக
பூவைமேல் எத்தனை பூ!

7. இரத்தினகிரி.

மரபுக்கவிதையில் மாலைமாற்றுப் பாடும் அளவிற்கு ஆற்றல் வாய்க்கப்பெற்ற இவர் எனது உற்ற நண்பரும் ஆவார். பலதுறை சார்ந்த எழுத்து வித்தகர் என்றால் அது மிகையாகாது. இவரது சில வெண்பாக்கள்.

பாயதில் புன்னகைப் பாங்குடன் பள்ளிகொள்
மாயவனாய்த் தூங்கி மகிழ்ந்திட்டுச் - சேயவன்நீ
தேம்புவதால் தொய்வுண்டாம்; மெய்முயற்சி கொள்ளாது
சோம்புவதால் உய்வுண்டா சொல்?

தோன்றப் புசித்திடார் தாண்ட வழியிலார்
ஈன்ற வலிதினங் கொண்டிறப்பார் - ஊன்நோக
வாயில் அரிசி வயிற்றுத்தீ வைப்பசித்
தீயிற் கொடியதோ தீ?

8. ஜீவா.

என் வாசகம் என்ற பெயரில் வலையமைத்து எழுதிவரும் இவர் ஆண்மீகம் சார்ந்த இடுகைகளை அதிகம் இட்டுவரும் அவர் மரபுப்பாக்கள் மீது தீராக்காதலுடையவர். அவ்வப்போழ்து வெண்பா எழுதுவதிலும் நாட்டமுடையவர். இவரது வெண்பா.

புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்
கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்
உள்ளிருள் நீக்கும் ஒளி.


அஞ்சி அவதியுற வேண்டா அவனியில்
விஞ்சி வல்லரசாய் மிஞ்சிட தஞ்சமிலா
தன்னிறைவு தந்திடும் ஒப்பம் இதனில்
அணுவாற்றால் வேண்டும் அறி.


9. இப்னு ஹம்துன்

அடிமைத் தனமதை ஆர்த்திடின் நம்மின்
குடிமையில் கூடும் குறைதான் - முடிவாய்
இணக்கத்தைப் பேணிடும் இந்தியர் கூற்றாய்
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அடகு நிலையினில் ஆட்படுத்தி னாரா?
இடறுகள் ஏனோ இயம்பு - மடமைப்
பிணக்கினைப் போக்கிடு; பிற்காலம் நன்மை
அணுவாற்றல் வேண்டும் அறி!

அழைத்தாரே நண்பர் அகரம் அமுதன்
இழையினில் வெண்பா இழைக்க - மழையென
நண்பரின் ஞானமும் நானறிவேன் அன்புடன்
வெண்பா விரிப்பேன் விரைந்து!


10. சங்கர் (யாரெனத்தெரியவில்லை அறிந்தவர் உரைப்பீராக)

எத்தனை தாக்கங்கள் எவ்வளவு சேதங்கள்
தீர்ந்ததோ தாகம் உயிர்நாசம் செய்வோர்க்கு
நண்பா, படைதிரட்டி நேர்நிறுத்தி நெஞ்சுயர்த்தி
வன்முறையை வேரறுப்போம் வா!

'பூவை உனையன்றி வாழ்வேது' என்றேன்நான்
பூரித்து 'நீயன்றி நானேது' என்றாய்நீ
பூவையுன் கண்தனில் பூப்பூத்(து) அருவியாக
பூவைமேல் எத்தனை பூ!



வளர்வேன்...
அகரம் அமுதா
மேலும் வாசிக்க...

Thursday, July 23, 2009

வெண்பா எழுதலாம் வாங்க! (1)

பொதுவாக மரபுக்கவிதைகள் புனைபவர்கள், ‘‘வெண்பா எழுதலாம் வாங்க’’ என்ற எனது வலையை அறிந்திருக்கும் வாய்ப்புள்ளது. இவ்வலையின் தோற்றத்திற்குக் காரணம் என்னவென்றால் வெண்பா எழுதத்துடிப்போருக்கும் புதிதாக வெண்பா பயிலத்துடிப்போருக்கும் ஊக்குவிப்பதாகவும், வழிகாட்டியாகவும் அமையவே துவங்கப்பட்டதாகும். இவ்வலையில் சற்றேறக் குறைய நாற்பதிலிருந்து ஐம்பது வரையிலான பாட இடுகைகள் வழங்கப்பட்டு பாடத்தின் முடிவில் வெண்பாவிற்கான ஈற்றடிகளும் வழங்கப்பட்டு வருகிறது. பாடங்களைப் படித்துப் பயனுற்றவர்கள் வெகுசிலரே எனினும் எந்தவொரு தொய்வுமின்றி இன்றுவரை ‘வெண்பா எழுதலாம் வாங்க’ வலை தன்பணியை இனிதே வழங்கிவருகிறது.

இக்கட்டுரைக்கான நோக்கங்கள் இரண்டு. 1.வெண்பா எழுதலாம் வாங்க வலைக்குத் தன் பேராதரவை வழங்குவதோடு மட்டுமல்லாது வழங்கப்படுகின்ற ஈற்றடிகளுக்கு புதியபுதிய நோக்கிலும், போக்கிலும் பாக்கள் வடித்து அவ்வலையை மெருகேற்றிவரும் வாசக, மாணவ, மாணவியர்க்கு இக்கட்டுரையின் மூலம் நன்றிநவில்வது. 2.இவ்வெண்பா எழுதலாம் வாங்க வலையைப்பற்றி வலைச்சரத்தில் எழுதுவதால் வலைச்சரத்தை வாசிக்கும் நேயர்கள் ஒருசிலரையேனும் வெண்பா எழுதலாம் வாங்க வலைக்கு இழுத்து வெண்பாப்பாட வைப்பது. ஆக இவ்விரு நோக்கங்களும் தன்னலம்போல் தோன்றினும் அஃதில் உண்மையில்லை. கவிதைகள் எழுதுகின்ற யாவரும் யாப்பறிந்து எழுதவேண்டும் என்னும் எண்ண மிகுதியாலும் வெண்பா எழுதலாம் வாங்க வலையைப்பற்றி இக்கட்டுரை புனையத்துவங்குகிறேன்.

பொதுவாக, புதுக்கவிதையைப்போல் மரபுக்கவிதைகளை அவ்வளவு எளிதில் கற்றுக்கொண்டு பாடவிட முடியாது. அதில் பல நெளிவு சுளிவுகள் உள்ளன. தளைகளைப்பற்றி அறிந்து கொண்டால் மரபுக்கவிதைகள் பாடிவிடலாம் என்ற எண்ணமும் பலரிடத்திலும் பரவலாக உள்ளது. அப்படிக்கருதுவதும் தவறேயாகும். ஐயமிருப்பின் எமது வலையின் ஈற்றடிக்குப் பாப்புனையும் அன்பர்களை வினவுவீர்களே யாயின் புரியும்.

சரி. இனி வெண்பா எழுதலாம் வாங்க வலையில் ஈற்றடிகளுக்குப் பாப்புனைந்த, புனைந்துகொண்டிருக்கிற அன்பர்களையுன் நண்பர்களையும் பற்றிய உரைப்பதோடு அவர்கள் வழங்கியுள்ள அளப்பரிய பாக்கள் சிலவற்றையும் கண்டுகளித்து அவர்களின் ஆற்றலை வியக்கவிருக்கிறோம்.

1. உமா!

(மகளிர் முதலில் என்பதாலும், இவ்வொரேயொரு பெண்பாற்கவிஞரே நம்வலையின் ஈற்றடிகளுக்குப் பாப்புனைந்து வருவதாலும் இவரைப்பற்றி முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன்.

சில கவிதைகள் என்ற பெயரிலான வலையமைத்து, புதுக்கவிதைகளும் மரபுக்கவிதைகளும் ஒருசேரக்கற்று சிறப்புற எழுதும் ஆற்றல் படைத்தவர். முதல்முதலாக இவர் வெண்பா எழுதலாம் வலைக்கு அதன் 37வது பாடத்தின்போது புதிய மாணவியாக ‘வணக்கம் திரு அமுதா. வெண்பா என்ற வார்த்தையே என்க்கு மகிழ்ச்சியை தரக்கூடியது.இன்று முதல் உங்கள் மாணவியாக கற்க போகிறேன்.’ என அறிமுகம் செய்துகொண்டு பாடங்களை நன்கு ஆய்ந்துபடித்துப்பாக்கள் புனையும் ஆற்றலும் கைவரப்பெற்றார். இனி இவரது கவிதைகள் சிலவற்றைப்பார்ப்போம்.

தொன்மைச் சிறப்பால் அமுதின் இனிப்பால்
எனைத்தன்பால் ஈர்த்தது நற்றமிழ் ஆதலால்
என்பால் எழுந்த விருப்பால் முயன்றொரு
வெண்பா வரைந்தேன் விரைந்து.

இதுவே இவரது முதல் வெண்பாவாகும். பால், பால் எனப்பல இடங்களில் வரச்செய்து சொற்பொருட்பின்வரு நிலையணியை எத்துணை அழகாக அமைத்திருக்கிறார் பாருங்கள்! முதலில் தயங்கத்தோடும் நடுக்கத்தோடும் வெண்பா எழுத்தத்துவங்கிய இவர் சொல்லிலக்கணம்1 என்ற தலைப்பிலான இடுகையில் என்னை வியக்கவைக்கும் அளவில் கவிதைபாடும் ஆற்றல் கைவரப்பெற்று சிறந்து விளங்குகிறார். அப்படிஎன்ன கவிதைபாடும் ஆற்றலைப்பெற்றுவிட்டார் என்கிறீரா? கீழ்வரும் கவிதை உரையாடலைப் பார்க்கவும்.

கருத்தமுகில் வாராமல் வெங்கதிரா லிங்கே
வெடித்து நிலமும்பா ழாகக் கறைப்படிந்த
மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி
வான மிருக்கே வரண்டு!

எனக்குறிப்பிட்டு சிங்கப்பூரில் பெய்துவரும் மழையைச் சென்னைக்கும் கொஞ்சம் அனுப்பக்கூடாதா என வினவியிருந்தார். ஈழச்சிக்களில் இந்திய அரசின் நடவடிக்கையால் இந்திய அரசின்மேல் வெகுளியுற்றிருந்த நான்

அழைத்தால் வருமோ அருந்தமிழர்க் குத்தீங்
கிழைத்தல் தகுமோ இழையாய்! -பிழைத்தார்
வடவர் அதனால் மழைவாரா தங்கே!
கிடந்தூர்க அன்றாடங் கெட்டு!


என்றேன். இக்கவிதைக்குப் பதில்கூறும் முகமாக எனது பாவரிகளையே முதிலிருவரிகளாக்கொண்டு என்னை மடகிய அப்பாங்கினைப்பாருங்களேன்.

ஓர்தாலி போனதற்(கு) ஊர்தாலி கொண்டதும்
ஒவ்வாதென் றாயுண்மை; ஆயின் ஒருவரால்
மற்றவர் துன்புறலா மோ‘புவியில் நல்லார்
ஒருவர் உளரேல் அவர்பொருட்டெல் லார்க்குமழை’
என்றவோர் கூற்றை மறந்து மனமுடைக்கும்
சொல்லால் சுடுதல் தகுமோ? பிழையிங்கே
ஒருபுறம் பாவம் மறுபுறமோ? தாய்வாட
மைந்தன் மகிழ்வதுவோ? மண்ணுலகில் மாமழை
வேண்டும் மனிதம் செழிக்கமன தாலும்
வசைச்சொற்கள் வேண்டாம் விலக்கு!

என்னை மடக்கினார் எனக்கொள்ளாது கவிதைக்குக் கவிதையாற் பதில் அளிக்கும் அவ்வாற்றலைக்கண்டு சுவைத்தேன், வியந்தேன். வாழ்க அவர். வளர்க அவர் புகழ்.

2. இரா. வசந்தகுமார்.

புதுக்கவிதை, மரபுக்கவிதை, சிறுகதை, நெடுங்கதை மற்றும் கட்டுரைகள் படைப்பதில் ஆற்றல் படைத்த பண்முக வலைஞர் எனலாம். இவர் முதல்முதலாக வெண்பா எழுதலாம் வாங்க வலைக்கு அதன் 20வது பாடத்தில் இருந்து பயிலத்தொடங்கி அழகிய பல வெண்பாக்களை யாத்திருகிறார். ஒரு கட்டத்தில் இன்பகவிதைகள் எழுதி, என்னால் அன்போடு இன்பகவி என்றழைக்கப்படுபவர். அவரது சில வெண்பாக்களைக் காண்போம்.

எதையெழுத யென்றெண்ணி ஏதும்தோன் றாமல்
கதையாவது வந்துவிழும தற்குமுன் - எதையாவது
நாலுவரி சொல்லிவைப்போம் நையுமன மேவருந்தா
நாளை நமதென்று நம்பு!

எனத்தொடங்கிய நண்பர் இரா.வசந்தகுமார் அவர்கள் வெகு விரைவிலேயே ஆசுகவி படைக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுவிளங்குகிறார் என்றால் அது மிகையாகாது. ‘தீயிற் கொடியதோ தீ’ என்ற ஈன்றடிக்கு வசந்த் எழுதிய வெண்பா இது.

"கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்
கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
தீஇல் கொடி!...அதோ தீ...!"


எனப்பயனிந்து, மிக ஆழமாகவும் எளிமையாகவும் மாறிமாறி எழுதும் ஆற்றலைக் கைவரப்பெற்றவர் வசந்த் ஆவார். எளிமைக்கு ஓர் காட்டைப்பார்ப்போம்.

இங்கிதம் இன்றி இயற்கை அழைத்திட
லுங்கியை தூக்கிச் சுவற்றிலே - அங்கிங்கே
கோடுபோட்டு ஒண்ணுக் கடித்திட்டால், வல்லரசு
நாடு மணக்குமா சொல்.

3. திகழ்மிளிர்.

தமிழை இலக்கண ஆழத்தோடு நன்கறிந்த அறியத்துடிக்கிற பாவாணரது எழுத்துக்களை அவ்வப்போது தன் வலையில் இடுகைகளாய் இட்டு வருகிற, தமிழின் கலைச்சொற்களைப் பரப்பும் மனம்படைத்த அருமை நண்பர் திகழ்மிளிர் ஆவார். 31வது பாடத்தின்போது அறிமுகமானார்.

மரபுக் கவிதை புதுக்கவி தையென
அருவியாய் கொட்டும் அழகுத் தமிழே
உன்னழகுக் காண்டுள் ளமுரைத் திடுமே
மனம்மயக்கும் மாயத் தமிழ்.


எனத்தொடங்கி அழகிய பல வெண்பாக்களைப் படைத்திருக்கிறார்.

சுட்டெரிக்கும் சூரியனைக் காட்டிலும் ,தினமிங்கே
வாட்டி வதக்கும் வறுமையைக் காட்டிலும்
நல்லிதயம் அற்றோரின் அம்பாய்த் துளைத்திடும்
சொல்லே மிகவும் சுடும்.

உடையில் சடையில் நடையில் இடையில்
எடையிலேசிந் தித்திடும் கண்மணியே ! உள்ளத்(து)
அழுக்கை அகற்றிடு ! அப்படியே கொஞ்சம்
எழுத்துப் பிழைநீக் கியன்று !

4.இராஜகுரு.

நெடுநாட்களாக எனது அருமை நண்பராகத்திகழும் இவர், இராஜகுரு என்ற பெயரிலான வலையை வடிவமைத்து மரபுப்பாக்கள் மட்டுமே படைத்தும் மரபுப்பாக்கள் எழுதுவோரை ஆதரித்தும் வருகிறார். கவிஞராக மட்டுமே பலருக்கும் அறியப்படுகிற இவர் சுறுங்கச்சொல்வதிலும் சுவைபடச் சொல்வதிலும் கைதேர்ந்தவர். வெண்பா எழுதலாம் வாங்க வலையில் என்னுடன் இணைந்து பாடங்களை நடத்தியும் ஈற்றடிகளுக்குப் பாக்கள் புனைந்தும் வருபவர். இவரது சில பாக்கள்.

என்னோடு கூட்டணியமைத்துப் பாடங்களை நடாத்திவரும் இவர் என்னிடம் உன் கூட்டணி யாருடன் கூறு என வினவும் இலாவகத்தைப் பாருங்கள்…

கழகங்கள் செய்யும் கலகத்தால் இங்கும்
குழப்பங்கள் வேண்டாம் தமிழ்க்கொஞ்சும் பாவலர்நாம்
நாட்டர சைமறந்து பாட்டரசு செய்வோம்உன்
கூட்டணி யாருடன் கூறு


நங்கைக்கு நாணமென்றால் நாயகன் முன்தானே
பொங்குமொரு காதலை இன்னும்கா ணதவன்நான்
செங்கவியில் நங்கையைப் பாடினாலும் பாடறியேன்
நங்கையர் நாண நயம்.

பாலாடை மேனிகாட்டி நாகரிகம் ஈதென்று
காலாடை யேயணியும் பாவை அறிவாளோ?
கச்சணிந்து நாகரிக வாழ்வறியா ளேயறிவாள்
அச்சமடம் நாணம் பயிற்பு!

எனப்பல சீரிய கருத்துக்களைப் பாவில் வழங்கும் ஆற்றல்வல்லார் ஆவார்.

5. மகேஷ்.

சிங்கைப்பதிவராகிய இவர் கட்டுரை மற்றும் கவிதைகள் எழுதுவதில் பேராற்றல் படைத்தவர் ஆவார். இவரது பல பயணக்கட்டுரைகளைப் படித்து வியந்திருக்கிறேன். குறிப்பாக நிழற்படமெடுப்பதில் வல்லவராகிய இவர் வெண்பா எழுதலாம் வாங்க வலையில் பல வெண்பாக்கள் எழுதிச் சிறப்பித்துள்ளார் அவற்றுள் சில…

பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர
யாரெங் கெதுவென் றுணர்ந்தே - ஊரெங்கும்
கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க
வெண்பா விரித்தேன் விரைந்து !

கோபமெனும் பெருந்தீ இறையெனக் களித்த
சாபமென் றுறுத்தும் போதெலாம் - லோபியின்
கண்மணி தாமரைக் கண்களால் சிரித்திடத்
தண்ணென மாறும் தழல் !

மண்ணை இழந்து மக்களை இழந்து
தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்
ஏழேழ் சென்மமும் தொடர்ந் திடுமோ
ஈழத் தமிழர் இடர்!


வளர்வேன்...
அகரம் அமுதா
மேலும் வாசிக்க...

Wednesday, July 22, 2009

எடக்கு மடக்கு!

நான் இணையத்தில் எழுதத் துவங்கிய காலந்தொட்டு, பிறர் வலைப்பதிவுகளைப் படிக்க நேர்ந்தால் மிகப் பிடித்த இடுகைகளுக்குப் பின்னூட்டமாக வெண்பாக்களைப் பாடி விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

பல்லாண்டு நீவாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவளே! –இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!

பொன்மானின் பின்போனப் பொய்யனவன் பூங்கதையைத்
தன்மானச் சிங்கமிவன் சாடிவிட்டான் –என்மானச்
சிந்தையின் நேருற்ற செந்தாழால்! என்னுடன்வா
செம்புலப் பெய்நீர்போல் சேர்ந்து!


---என்பன போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஓர்முறை நண்பர் இலதானந்த் அவர்கள் தனது இடுகையில் ஓர் கதையைக் குறிப்பிட்டெழுதியிருந்தார். (கதையைப் பார்க்க இங்குத் தட்டுக).

கதையைப் படித்த எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பின்னூட்டம் இட்டிருந்தேன். நண்பர் இலதானந்திடமிருந்து பதில்வந்தது இப்படி. ‘உரைநடையாகப் பின்னூட்டமிட்டால் எப்படி? அப்படியே ஒரு பாட்டுக்கட்டிவிட வேண்டியதுதானே’ –என்றார்.

சரி எனச்சொல்லி நானும்…

எண்ணனுக்கும் எக்காக்கும் என்றனுக்கும் கல்யாணம்
பண்ணலன்னு சொன்னாப் பரிகசிச்சி –முன்னவொங்க
ஆத்தாக்கும் அப்பனுக்கும் ஆச்சான்றே? ஓங்கியொண்ணு
போட்டாச் செவுல்பிஞ் சிடும்!
–என எழுதினேன்.

நண்பர் இலதானந்த் அவர்கள் ஓர்முறை வெண்பாப் போட்டியும்கூட அறிவித்தார். ‘உளறல்’ என்ற தலைப்பிலான போட்டியில்…

கட்டித் தழுவநாற் காற்சேர யாக்கையிரண்
டொட்டி உறவாடி உய்கையில் –மெட்டி
தளர்ந்து தவித்துத் தளிர்க்கொடியாள் செப்பும்
உளறல் மொழிக்குண்டோ ஒப்பு!
– என நானும் வெண்பா எழுதி முதற்பரிசையும் பெற்றேன்.

பரிசு வழங்கியமைக்காக நன்றியுரைத்து நண்பர் இலதானந்த் அவர்களுக்கு நன்றிகள் சொல்லிப் பின்னூட்டமாக ஓர் வெண்பாவும் எழுதியிருந்தேன். (இங்குக் காணலாம்).

பரிசுக்கான வெண்பாவையும், நன்றிநவிலும் வெண்பாவையும் படித்த சில நண்பர்களில் ஒருவர், ‘அடேங்கப்பா, நன்றியைக்கூட வெண்பாவிலேயே சொல்கிறாரே அமுதா! பெரீய தெறமயானவர்தாம்போல’ ன்னார். இன்னொருவர், ‘அட நீங்கவேற! வெளிக்குப் போவதைக் கூட வெண்பாவாக்கும் திறமை படைத்தவர் அமுதா’ அப்டின்னார்.

நான் ஏதோ மகிழ்ச்சிக்கு எழுதப்போக இவர்களாக ஒரு முடிவுகண்டிக்கொண்டு ஏதேதோ பேசுகிறார்களே, என எண்ணி நொந்துகொண்டபோது, இந்த அமளிதுமளிகளைக் கண்டுகொண்டிருந்த ஒரு தோழி (பெயர் வேண்டாம்) பரிசெல்லாம் (போட்டியில் கலந்துகொண்டு) பெற்றிருக்கீங்க போல. வாழ்த்துக்கள். வெளிக்குப் போவதைக் கூட வெண்பாவாக்கும் திறமை உங்களுக்கிருக்காம்ல, எங்க? ஒரு தேராத வெண்பா சொல்லுங்க பார்ப்பம்’ என்றார்.

எனக்குச் சங்கடமாகப் போய்விட்டது. என்னடா இது? இத்தனைக் காலமும் தேராத வெண்பாக்களாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இனியாவது நல்ல வெண்பாக்களை எழுதலாம் எனப்பார்த்தால் இந்த பெண் தேராத வெண்பா கேட்கிறாரே! ஒருவேளை, நம்மைத் தேராதவனே! என நேராக உரைக்கப் பயந்துகொண்டுதான் தேராத வெண்பா எழுதக் கேட்டிருப்பாரோ? எழுதாமல் விட்டுவிட்டால், ‘அமுதாவைத் தேராத வெண்பா எழுதக் கேட்டிருந்தேன், எழுதமுடியாமையால் தோற்றுவிட்டார்’ எனப் பறைசாற்றிவிடுவாரோ? என்கிற அச்சத்தில், அவருக்காக ஒரு தேராத வெண்பாக் கட்டினேன்.
கேட்டவர் பெண்ணல்லவா! நம்சுழி சும்மா இருக்குமா? உடனே எழுதினேன் இப்படி…

தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும்
தேராதே ஓர்முடிவும் தேராதே! –தேராதே
தேராதே என்பாயேல் தேராதே என்நெஞ்சம்
தேராதே ராதேரா தே!


பொருள் –

தேராதே நம்காதல் தேராதே என்றுமட்டும் –வெற்றிபெறாது நமக்கிடையிற் தோன்றிய காதல் வெற்றியே பெறாது என்றுமட்டும்
தேராதே ஓர்முடிவும் தேராதே! –ஆராயாமல் ஓர்முடிவையும் தேர்ந்தெடுக்காதே!
தேராதே தேராதே என்பாயேல் –ஆராயாது வெற்றிபெறாது என்பாயானால்
தேராதே என்நெஞ்சம் தேராதே –(அச்சொற் கேட்டால்) துன்பத்தில் மூழ்கிக்கிடக்கும் எனது நெஞ்சமானது அதிலிருந்து மீளாதே! மீளலேமிளாதே!
ராதே! ராதே! –ராதா! ராதா!

பொருளைப் புரிந்துகொண்ட அப்பெண் கோபத்தோடு உமக்கு வாய் ரொம்பத்தான் நீளம் என்றார். விடலாமா?

கனிவாய் மெதுவாய்க் கனிவாய்; உணவாய்
உனையே தருவாய் உயிரே! –இனிநம்
இருவாய் ஒருவாய் எனவாக் கிடுவாய்
வருவாய் வரம்தரு வாய்!


–என்றேன். அத்தோடு அப்பெண்ணை இணையப்பக்கங்களில் காணவில்லை. கண்டவர் சொல்வீராக.

இனி சில பதிவர்களைக் காண்போமாக!

1. தமிழநம்பி.

இவர் சிறந்த மரபுக்கவிஞர் ஆவார். குறிப்பாக ஈழத்தின்மீதும் புலிகளிம் மீதும் தீராப்பற்றுடையவர். கவிதை மட்டுமல்லாது கட்டுரைகளும் எழுதிக் கலக்கக்கூடியவர். இவர் படித்திருப்பது தொழில்நுட்பம் எனினும் தமிழை மிக நேர்த்தியாகக் கையாண்டு யாவரையும் வியக்கச்செய்கிறார். சிதறல்கள் என்ற தலைப்பிலான அழகிய நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார். இவரது வலைதளத்தைக் கண்டு களிக்க வேண்டுறேன்.

2. சுப.நற்குணன்.

மலேசியரான இவர் ஆசிரியராகப் பணிபுரிவதாக அறிகிறேன். மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். தமிழுக்கும், தமிழருக்கும் தீங்கிழைப்போரைச் சாடிக்கட்டுரைகள் பல தீட்டிவருகிறார். மிக நுட்பமான அறிவுபடைத்த இவரின் வலையைப்படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்..

3. கவிநயா!

எனதருமைத் தோழியான கவிநயா நினைவின் விளிம்பில் என்ற தலைப்பிலான வலைஅமைத்து எழுதிவருகிறார். மிகுந்த இறைநம்பிக்கையுடைய இவர் கடவுளர்களின் மீது நிறைய சந்தப்பாக்கள் தீட்டி வருகிறார். மரபுக்கவிஞரும் கூட. கட்டுரைகள் பலதீட்டி அனைவரையும் கவர்ந்திழுக்கும் எழுத்தாற்றல் படைத்தவர். படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

வளர்வேன் ...
அகரம் அமுதா
மேலும் வாசிக்க...

Tuesday, July 21, 2009

உவமையிற் புதுமை!

சிலநாட்களுக்குமுன் ஓர் நிகழ்வுக்குச் செல்ல நேர்ந்தது. கவிதை சார்ந்த நிகழ்வு ஆதலால் பலரும் கவிதைப் பாடினார்கள். ஒருவர் பெண்ணை புகழ்ந்து பாடலாகவே படித்தார். பொதுவாகப் புதுக்கவிதைப் படைப்பாளர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று பெண்ணைப்பற்றிப் பாடும்போது பலரும் படைத்த உவமைகளையே திரும்பத்திரும்பச் சொல்லிச் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். பெண்ணை மானென்பதும் மயிலென்பதும் விழியை மீனென்பதும் மலரென்பதும் தொன்றுத்தொட்டு வள்ளுவன் காலத்தில் இருந்து இன்றைய புதுக்கவிதையாளர்கள் வரை எந்த மாற்றமும் இல்லாமல் ஒப்பித்து வருகிறார்கள். இதனையும் கேட்டுக் கைத்தட்டவும் ஆராவாரம் செய்யவும் பலப் பேரறிவாளர்கள் இருப்பதே இத்தகையோரை மாற்றுக் கோணத்தில் பார்க்கவிடாது, எண்ணவிடாது தடுக்கிறது என்பேன்.

ஓர்முறை ஒருநண்பர் ஒரு திரைப்படப் பாடலைச் சொல்லி உயர்வாகப் பேசினார். ‘மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து மேகத்தில் குழைத்துப் பெண்ணென்றுப் படைத்து வீதியில் விட்டுவிட்டான்’ எத்துணை அருமையான வரிகள் எனப் பலவாறு புகழ்ந்தார்.

எழுதிய முறையில் மாற்றமுண்டே தவிர சொல்லவந்த உவமையிலோ, கற்பனையிலோ ஒருமாற்றமும் இல்லையே. இதைப்போய்ப் புகழ்கிறீர்களே? என்றேன். பெண்ணை மின்னல் என்று ஈராயிரம் ஆண்டுகளாப் பாடிவந்திருக்கிறார்கள் நம் முன்னோர். மேற்கண்ட பாடலில் கவிஞர் செய்த ஒரே மாற்றம் என்னவென்றால் முகிலில் பிறந்த மின்னலை மீண்டும் முகிலில் குழைத்தெடுத்ததே!

நான்கேட்டேன் நண்பரிடம், முகிலில் பிறந்த மின்னலுக்கு ஒட்டும் தன்மை இருக்குமானால் முகிலிடமிருந்து பிறக்கும்போதே கருமை நிறமுடையதாகப் பிறந்திருக்காதா? பிறக்கும்போதே முகிலுக்கு நேர்மாறான நிறத்தில் பிறக்கும் தன்மையுடைய மின்னலை மீண்டும் கொண்டுபோய் முகிலில் குழைப்பதால்மட்டும் முகிலின் கருமை ஒட்டிக் கொண்டுவிடுமா?

அதெல்லாம் இருக்கட்டும். மின்னல் தோன்றிய விரைவிலேயே மறையும் ஆற்றல் படைத்ததல்லவா? அப்படிப்பட்ட தன்மையுடைய மின்னலைப் பிடித்துப் பெண்ணாய்ச் சமைத்தால் பெண்ணும் தோன்றய விரைவில் மறைந்து விடமாட்டாளா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினேன். நண்பர் வாயடைத்துப்போய் விட்டார்.

இன்றைக்குக் கூறியது கூறல் உணர்வு திரைப்பாடலாசிரியர்கள் இடம்மட்டுமல்லாது பல புதுக்கவிதையாளர்களையும் தொற்றிக் கொண்டுவிட்டது. இது தவிர்க்கப் படவேண்டிய ஒன்று.

உவமைகளை நாம் உருவாக்க முனைவதற்குமுன்பு நமக்கு முன்னோர்கள் எவ்வகையில் உவமைகளைச் சிறப்புற அமைத்திருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.

பொதுவாகக் கூந்தலைப் பலரும் முகிலென்றும், அலையென்றும், மழையென்றும், கருநாகப் பாம்பென்றும், விழுதென்றும் பாடிவந்த காலத்தில் ஓர் சிற்றூர்க்கவிஞன் (கிராமியக்கவிஞன்) ‘தூக்கி முடிஞ்ச கொண்டை தூக்கனாங் கூடுபோல’ என்றான். இதைத்தான் உவமையிற் புதுமைக்காட்டுவது என்பது.

இடையைப் பற்றிப் பாடுகையில், ‘கொடியென்றும், ஆலிலை நுனியென்றும், நூலிழையென்றும் எழுதிவந்த காலத்தில், ‘இடையா இது இடையா அது இல்லாததுபோல் இருக்குது’ என்பதும், ‘இல்லாத கடவுள்போன்ற இடைகொண்டப் பெண்ணே!’ என்பதும் சற்றே மாறுபட்ட புதுமை எனலாம். இவ்விரண்டுவமைகளும் கம்பன் முன்பே பாடியது எனினும் மாற்றியெண்ணிக் கூறிய தன்மையால் சற்றே புதுமை எனலாம்.

பெண்ணின் புன்னகையை யாவரும், பளிங்குக் கல்லில் காசை இறைத்தாற்போல என்றோ, முத்துக்கள் சிதறினாற்போல என எழுதிவந்தபோது சற்றே மாற்றி இக்காலத்திற்கு ஏற்றாற்போல் கண்ணாடிக் கோப்பையில் பனிக்கட்டியை இடுதல்போல எனப் பெண்ணின் சிரிப்பொலிக்கு புதிய முறையில் உவமைகாணப் புகுந்ததைச் சற்றே புதுமை எனலாம்.

ஆக, இன்றைய இளையர்க்குக் கூறிக்கொள்வது என்னவென்றால் முடிந்தவரை உவமையில் புதுமைக் காணவேண்டும். அது முடியாதபோது முடிந்தவரை அடுத்தவர் ஆண்ட உவமைகளைத் தன்னுடையதுபோல் தருவதைத் தவிர்த்துவிடவும்.

சரி. வலைச்சரத்தின் விதிப்படி சில பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டிய கடமையும் உள்ளதால் கட்டுரையை மேலும் வளர்க்காமல் சிலப்பல பதிவர்களை என்பங்கிற்கு அறிமுகப்படுத்த விழைகிறேன்.

தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்!

இவரைப்பற்றி அறியாத்தமிழன் தமிழனாக இருக்க முடியாது. தமிழில் பேரறிவு படைத்த இவர் மேடைப்பேச்சாளர் என்பது யாவரும் அறிந்ததே. எனது கவிதைகளைப் இணைய வாயிலாகப்படித்துவிட்டு என்னைப் போற்றியும் அன்பு செய்தும் வருபவர். எளிமையாகவும் யாவரிடத்தும் இனிமையாகவும் பழகும் இவருடனான எனது பாவிளையாடல்கள் பல ஒன்றை இங்கே எடுத்துக்கட்ட விரும்புகிறேன்.

ஓர்முறை எனது வலையான அகரம் அமுதா வலையில் மௌனம் என்ற தலைப்பில் ஒரு வெண்பா எழுதியிருந்தேன். தமிழ்க்கடல் அவர்கள் படித்துப்பார்த்துவிட்டு வெண்பாவடிவிலேயே வினாதொடுத்திருந்தார். அவர் வினா தொடுத்ததும் அதற்கு நான் விடையறுத்ததும் கீழே!

மௌனம்!

மௌனத்தால் கொன்றென்னை மௌனத்தால் வென்றென்னை
மௌனத்தால் நம்காதல் வாழவைத்தாய் –மௌனத்தால்
சொன்ன மொழிமாற்றிச் சொன்னவளே! மௌனத்தால்
சொன்னது நீதானா சொல்!

என் மேற்கண்ட பாவைப்படித்த தமிழ்க்கடல் அவர்கள் விடுத்திருந்த வினா!

கொன்றவளே வென்றதுவும் வென்றதலால் வாழ்ந்ததுவும்
நன்றாகச் சொல்லிவிட் டீர்நீரும்; -அன்றவளும்
பேசவில்லை என்றாலும் பேசிநின்றாள் என்கின்றீர்
கூசுவிழிக் கண்ணாலோ கூறு!


மேற்கண்ட தமிழ்க்கடலாரின் வினாவிற்கு நான்உரைத்த பதில்!

உள்ளதைச் சொல்லுகிறேன் ஒப்பில் புலவரே!
தள்ளாமல் ஏற்பீர் தயவுடனே! –உள்ளபடி
பேசா மடந்தையவள் பேசும் விழியால்தான்
கூசாமல் கூறிவிட்டாள் கூர்ந்து!

செழுமையாகப் பாப்புனையும் ஆற்றலும் பேச்சாற்றலும் இலக்கிய நுண்ணறிவும் படைத்த தமிழ்க்கடலாரின் வலையைப்படித்து யாவரும் பயனுற வேண்டுகிறேன்.

பாத்தென்றல் முருகடியான்!

சிங்கப்பூரின் புகழ்பெற்ற கவிஞர்களுன் முதன்மையான கவிஞர் பாத்தென்றல் முருகடியான் ஆவார். அடியேனுக்குத் தமிழும் மரபுப்பாவும் பயிற்றுவித்து அறிவொளி பெறச்செய்த எழுகதிர் இவரேயாவார். சில நாட்களுக்குமுன்புதான் இவர் எழுதி வெளியிட்ட ‘சங்கமம்’ என்ற தலைப்பிலான கவிதைக்காவியத்திற்கு ‘கரிகாலன்’ விருதுவழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டார். நான் மரபுக்கவிதைகள் பாட இவரிடம் கற்றுக்கொள்ளும் போது, (வரம்வழங்கியவன் தலையிலேயே கைவைப்பதுபொல) பாவிலேயே பற்பல வினாக்கள் தொடுத்துள்ளேன். அத்தனைக்கும் சினம் கொள்ளாது பொறுமையாகப் பதில் வழங்கி என்னை ஊக்கப்படுத்தும் பொறுமையாளர் ஆவார். இவருடன் நான்தொடுத்த வினாக்களும் அதற்குப்பொறுமையுடன் அவர்அளித்த விடைகளும் கீழே!

கேள்வி:-
ஊரோடே ஒப்புரவாய் ஒன்றிக் கிடவாமல்
பேரார் தனித்தமிழைப் பேசுகிறீர் -காரேபோல்
நெஞ்சிருண்ட நீசர்கள் நிந்திக்கும் வாய்ச்சொல்லுக்(கு)
அஞ்சா(து) அருவியென்(று) ஆர்த்து!

பதில்-
காகம் கணக்கில்லைக் காசினியில்; கண்ணுடைய
தோகை விரிப்பதெது தொல்புவியில்? -மேகமதைக்
கண்டாடும் மாமயில்போல் கன்னித் தமிழனங்கைக்
கொண்டாடல் எம்முடைய கோள்!

கேள்வி-
தோகை மயிலுக்கோ சோறிட்டு வைக்கின்றார்?
காகத்திற்(கு) ஈந்தன்றோக் காக்கின்றார்? -தோகையில்லா
காகமதே ஒற்றுமைக்குக் காசினியில் ஏற்றயின
மாகவன்றோ போற்றிடுகின் றார்?

பதில்-
இரப்பார்க்கொன் றீயார் இரும்பு மனம்படைத்தார்;
கரப்பார்க் கிரங்கிக் களிப்பார்; -மரப்பாவை
காக்கைக்(கு) உணவீந்துக் கண்ணவிவார்; மாந்தரைப்போல்
யாக்கை எடுத்த விலங்கு!

கேள்வி-
தேமதுரப் பூந்தமிழைத் தேடிக் களிப்பதனால்
ஆவதென்ன? வேற்றுவரின் ஆங்கிலமோ -டேவடவர்
தாய்மொழியும் வந்தே தமிழில் கலப்பதனால்
தாழ்வேதும் வந்திடுமோ தான்?

பதில்-
காற்றில் கரிகலந்தால் காயம் கெடுமன்றோ?
சோற்றோடு கல்லைச் சுவைப்;பீரோ? -ஏற்ற
அமுத மொழியிருக்க ஆங்கிலத்தோ டாரியத்தை
நமதாக்கல் நன்றோ நவில்!

கேள்வி-
அழியாத் தமிழை அகிலத்தே நாட்ட
வழியுண்டோ? செய்யுள் மரபைப் -பழிக்கும்
புதுக்கவிதைப் பாரில் புரையோடல் போக்கி
சதுராடிச் சாய்க்கவழி சாற்று!
பதில்-
முறையாய்த் தமிழறியா மூடர்: புதுக்கவிதைக்
கறையானின் புற்றாய், களராய் -நிறைவதனால்
செந்தமிழுக் கென்ன சிறப்புண்டு? வெந்தவிதை
எந்தநிலம் ஏற்கும் இயம்பு?

கேள்வி-
பட்டுபோற் செய்யுள் பலநூறு யாப்பதனை
இட்;டமோ டேற்றீர் இருக்கட்டும் -மட்டமா
என்ன புதுக்கவிதை? யாண்டுமதை ஏற்காமல்
திண்ணமோ(டு) ஏன்எதிர்க்கின் றீர்?

பதில்-
மட்டமோ? மேலோ? மரபோ? புதுவரவோ?
திட்டுவதென் நோக்கில் தினையில்லை -சட்டமிடா(து)
எப்பொருளும் வாழும் இயல்பில்லை என்பதைத்தான்
செப்புகிறேன் செம்பொருளைச் சேர்!

புவியரசே! பூந்தமிழைப் போற்றுகின்ற சிங்கைக்
கவியரசே! கன்னற் கனிச்சொற் - சுவையரசே!
சேய்யான் தெரியாமற் செய்யும் பிழைபொறுக்கும்
தாயாம்நீர் சொன்னால் சரி!

இவரது வலையின் அனைத்துக்கவிதைகளும் நறுக்குத் தெரித்தாற்போல் அமைந்திருக்கும். எதையும் உணர்ச்சிப்பெருக்கோடு உரைத்துப் படிப்போரைக் கவரும் ஆற்றல் படைத்த கவிஞர் இவர். மரபுக்கவிதைகள் படிக்க விரும்புவோரும் மரபுக்கவிதை எழுதும் யாவரும் இவரது கவிதைகளைப் படித்துப் பயன்பெற அன்போடு வேண்டுகிறேன்.

முனைவர். இரத்தின புகழேந்தி!

அரியபல செய்திகளை தன் அறிவு நுட்பத்தால் மிகத் தெளிவாகவும், யாவரும் புரிந்து உவக்கும் விதத்திலும் அழகிய நடைகொண்டு கட்டுரைப்பதில் இவருக்கு இவரே நேர் எனலாம். அத்துணைத் தெளிவான கட்டுரை வடிக்கும் ஆற்றல்வல்லார். குறிப்பாக இவரைப்பற்றிக் கூறுவதெனில் நான்கிற்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சிறுகதை எழுதுவதிலும் கட்டுரைகள் புனைவதிலும் ஆற்றல்வல்லாரான இவரது வலைக்குச் சென்று படித்துப்பயன்பெற அனைவரையும் வேண்டுகிறேன்.

...வளர்வேன்
அகரம் அமுதன்
மேலும் வாசிக்க...

Monday, July 20, 2009

என்னைப்பற்றி!

அன்பனென் பேரமுதா! ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே!
தென்னவன்நான் செந்தமிழின் சீரெடுத்து -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன் வந்து!


நான்:-
கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதா கர்!

ஊர்:-
கெடுப்பதற் கோர்கூட்டம்; கெட்டாரைச் சார்ந்து
கொடுப்பதற் கோர்கூட்டம் என்றே -குடிசை
மிகக்கொண்ட குக்கிராம மேநான் பிறந்த
அகரம்சீ கூர்என்ப தாம்!

தாய்:-
சோறெனக்(கு) ஊட்டி பசிபொறுப்பாள்; தூங்கையிலும்
ஊறெனக் கென்றால் உயிர்துடிப்பாள்; -கூறுலகில்
பூமியி னும்பொறுமை போற்றிடுவாள்; என்றனுக்குச்
சாமியவள் பேர்அஞ் சலம்!

தந்தை:-
கற்கழனி போந்துக் கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்;பேர் முத்துசாமி;
ஊனெடுத்த தேவன் உரு!

பெயர்க்காரணம்:-
தாய்தந்தைப் பேர்முன் எழுத்துமென் பேரிடை
வாய்த்த நெடிலுமே யாம்அமுதா -ஆய்ந்ததன்முன்
தொக்கியே நிற்பதெல்லாம் தோன்றியஊர்ப் பேர்பாதி
அக்கறையாய்ச் சேர்த்த தறி!

என்னைப்பற்றி இதற்குமேல் விரிவாகச் சொல்ல சிறப்பாக ஒன்றும் இல்லை எனக்கருதுகிறேன். தமிழ்மீதும் மரபுப்பாமீதும் கொண்ட காதலால் மரபுப்பாக்கள் எழுத்துவங்கினேன் என்றால் அது மிகையாகா. என்னைப்போல் பலரும் மரபைப்படித்துக் கவிபுனைய வேண்டும் என்கிற அவாவில் வெண்பா எழுதலாம் வாங்க என்ற வலையை அமைத்துப் பலரும் பயன்பெறுமாறு வெண்பாப்பாடங்களை வழங்கிவருகிறேன். மேலும் இலக்கிய இன்பம் என்ற பெயரில் ஓர்வலை அமைத்து நான்சுவைத்த இலக்கியப்பாடல்களுக்கு விளக்கம் எழிதியும் வருகிறேன். மேலும் எனது முதன்மை வலையான அகரம் அமுதா என்ற வலையலேயே எனது அனைத்துக்கவிதைகளும் வெளிவருகின்றன. தற்பொழுது சிங்கப்பூரில் மின்னாளனாகப் பணிசெய்து வருகிறேன்.

மேலும் வலைச்சரத்தில் என்னைக்கட்டுரைக அழைத்த சீனா அவர்களுக்கேன் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் இங்கு எனக்குமுன் வருகைதந்து கட்டுரைத்த அனைத்து தோழதோழிகளுக்கும் எனது முதற்கண் வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.

இவண்
அகரம் அமுதா
மேலும் வாசிக்க...

Sunday, July 19, 2009

நட்பிற்கு நன்றி!.....வலைச்சரத்தில்

நட்பிற்கு நன்றி!.....வலைச்சரத்தில்

வணக்கங்களுடன் ஆ.ஞானசேகரன்
சூலை 13ம் நாள் - திங்கள் முதல் - 19 - ஞாயிறு இன்று வரை நான் உங்களோடு செய்துகொண்ட அறிமுகங்களின் மகிழ்ச்சியோடு நன்றிகள்.. மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சினா மத்தவங்கள மகிழ்விற்கின்றது. (இது பாக்கியராஜ் சாரோட பொன்மொழி) இப்படி என்னால நீங்களும், உங்களால நானும் கண்ட மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த வலைச்சரம் பொருப்பாசிரியர் சீனா ஐயா அவர்களுக்கு நாம எல்லோருடைய சார்பிலும் நன்றியை சொல்லிகிறோம். பணியின் அழுத்தம் அதன் பின் சோம்பலின் காரணமான வேத்தியன் போன்ற பதிவர்களையும், அறிமுகப்படுத்த முடியாமல் போனதிற்கு வருந்துகின்றேன்...

பல்வேறு பணியின் அழுத்தம் காரணமாக என்னால் இந்த பணியை செய்ய முடியாத நிலையிலும் உங்களின் ஊக்கங்கள் எனக்கு மருந்தானது. இப்படிப்பட்ட ஊக்கங்களை வழங்கிய நட்புகளுக்கு வலைச்சரம் சார்ப்பாக நன்றிகள் கோடி..... இதுபோல பணிகளை தொடர்ந்து செய்ய வலைசரத்திற்கும் அதன் பொருப்பாளர்களுக்கும் வாழ்த்துகள் சொல்லி என் பணியை நிறைவு செய்கின்றேன் மக்களே!!!!!!............

என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது