07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 30, 2011

கனவு மெய்ப்பட வேண்டும்!

இந்த முறை நவராத்திரியில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமை தான்! கோயில்களில் கூட்டம் நெரியும்! நாம் நவராத்திரி நாயகியரை இங்கேயே தரிசிப்போம்!


என் அம்மாவுக்காக, பாரதியாரின் இன்னுமொரு நவராத்திரிப் பாட்டு இன்று இதோ: (இல்லையென்றால் உம்மாச்சி கண்ணைக் குத்தாட்டாலும் என் அம்மா என்னைத் திட்டுவார்! பாட்டு மூன்று தேவியரையும் குறித்துப் பாடுவதால், கொஞ்சம் நீளம்!)



தலைப்பைப் பார்த்து, திருப்பி நேற்றைய கனவுக்குப் போய் விட்டேனோ என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் கனவு மெய்ப்பட்டால் நன்றாகத் தான் இருக்கும்! இன்றைய என் பதிவர்களைப் பற்றிப் பார்ப்போம்! ஒவ்வொருவர் வலைப்பூ எழுதும் போதும் தம்மிடம் மற்றவர்களுடன் பகிரத்தக்க விஷயங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் எழுதுகிறார்கள். எழுதும் ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கும்! அவரவர் கனவு கட்டாயம் மெய்ப்பட வேண்டும் என்று எல்லாவற்றுக்கும் மேலான பரம்பொருளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்மையே நினைத்தும் செய்தும் வந்தால், நல்ல கனவெல்லாம் பலிக்கும் என்பதை அனுபவபூர்வமாக நம்மில் பலர் உணர்ந்தும் இருப்போம்!

முதலில் யாரைப் பற்றிப் பதியலாம் என்று 'உட்கார்ந்து யோசித்த' போது, மனங்கவரும் நடிகர் நாகேஷின் படத்தை அடையாளமாக வைத்திருக்கும் சேட்டைக்காரன் நினைவு வந்தது! 'இங்குள்ள மொக்கைகளைப் படிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல!' என்று சொல்வதைத் தாண்டி தைரியமாக உள்ளே நுழையலாம்! பொருத்தமாக அன்னை காளிகாம்பாள் பற்றி அவர் எழுதிய பாடல்கள் அழகு! அவருடைய 'சேட்டை' பதிவுகளுக்கு அறிமுகமே தேவையில்லை! சமீபத்தியது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

'நட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று !' - யாரைப் பற்றிச் சொல்கிறேன் என்று கண்டுபிடித்திருப்பீர்கள் - பத்திரிகை உலகிலே எழுத்தாளராகப் பிரபலம் ஆன ரிஷபன் - அவர் பதிவுகள் அத்தனையுமே அருமை! - கதையாகட்டும், கவிதையாகட்டும், ஒரு ரிஷபன் டச்சோடு இருக்கும்! சமீபத்திய அவர் இடுகைகள் - குட்டி நாய் சிறுகதை - இதில் யார் பரிதாபத்துக்குரியவர்? அன்பின் மொழி - கவிதை - கவிதை!!

கற்றலும் கேட்டலும் என்று அழகுப் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் ராஜி, எழுத்தின் பல துறைகளிலும் எழுதுகிறார்; கதை, கட்டுரை, ஆன்மிகம் என்று எழுதி வந்த இவர், கவிதைகளிலும் ஜமாய்க்கிறார்! பல வருடங்களுக்கு முன் வீதியில் வந்த மிட்டாய்க்காரர்கள் போன்ற தொலைந்த தொழிலாளிக்கு வருந்தும் அவருடைய ஒரு கவிதை! உறவுகளைப் பற்றி நெகிழச் செய்யும் ஒரு கதை! அழகில்லாத ஓவியமா-இதில் ஜெய்ப்பூர் ஓவியங்களை ரசிக்கலாம்!

அய்யம்மாளின் அழகுத் தமிழ் நினைவலை - இந்த வலைப்பூவில் எழுதி வரும் அய்யம்மாள் ஒரு புதிய பதிவர்! சில சமையல் குறிப்புகள் எழுதியிருக்கிறார். பூரண கொழுக்கட்டையும் உண்டு; பொள்ளாச்சி சிக்கன் பிரியாணியும் உண்டு இவர் இடுகைகளில்! இவர் தெய்வகுளத்து காளியம்மன்என்ற பெயரில் ஒரு கோவிலைப் பற்றியும் அழகாகப் பகிர்ந்திருக்கிறார்.

'ஃப்ரீயா ஒரு இடம் கெடைச்சா விடுவோமா... ஆரம்பிச்சுட்டோம்ல்ல ப்ளாக்க... ' என்று அதிரடியாகச் சொல்லும் ஸ்வர்ணரேக்கா, பூசலம்பு என்ற வலைப்பூவின் சொந்தக்காரர். நடுவில் காணாமல் போயிருந்த(!) அவருடைய சமீபத்திய பதிவு பார்க்க, கேட்கப் பிடிக்காத பாடல்கள்! சரியாகத் தான் படித்தீர்கள், அது பிடிக்காத பாடல்கள் தான்!

Mano - !¡...என் செய்வேன்...¡! என்ற வலைப்பூவைப் பார்ப்போம். டைரக்டர் கே.பாலச்சந்தர் பற்றி ஒரு இடுகையும் எழுத்தாளர் சுஜாதாவின் மின்னூல்களை அளித்து ஒரு இடுகையும் என்னை மிகவும் ஈர்த்தன.

கொஞ்சம் கனவு,கொஞ்சம் கண்ணீர்,கொஞ்சம் புன்னகை,நிறைய ஆசைகள் கொண்டவன்.. உலகையும் மனிதர்களையும் ரசிப்பவன்.. என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளும் Raazi !..யாதும் ஊரே...! என்ற பெயரில் ஜூலை 2011 முதல் எழுதுகிறார். இவருடைய லேடிஸ் பர்ஸ்ட் என்ற நகைச்சுவைப் பதிவு வலை மேய்கையில் கண்ணில் பட்டது.
பல நிறம் கொண்ட வானவில் போன்று விதவிதமான பதிவர்களின் இடுகைகளை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். வானவில்லின் ஐந்தாவது நிறமான மஞ்சள் ஆக்கசக்தியின் வெளிப்பாடாம்! இந்த நிற உடைகளை அணிந்து கொண்டால், எந்தப் பிரச்னையிலும் தீர்க்கமாக ஆலோசித்துத் தெளிவான முடிவை எடுக்க முடியுமாம்!


டிஸ்கி: பேரன்புடைய வலையுலகப் பெருந்தகையீரே! வலைச்சரப் பதிவுகள் தமிழ் மணத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள்/உங்களுக்குப் பிடித்த பதிவுகள் பலரைச் சென்றடைய ஓட்டுப் போட மறக்காதீர்கள்! நன்றி!
மேலும் வாசிக்க...

Thursday, September 29, 2011

வானகமிங்கே தென்பட வேண்டும்!

வானகமிங்கே தென்பட வேண்டும் என்று தட்டச்சும் போது என் மூத்த மகன் வந்தான். 'வானத்தை இங்கு தெரிய வைக்கணுமா, என்ன கண்ணாடி ஏதும் வைச்சு ரிஃப்லெக்ஷன் அது மாதிரி...' என்று கிண்டலாகவும் கொஞ்சம் பயத்தோடும் கேட்டான். காரணம், கணிணியில் ஏதாவது தெரிந்து கொள்ளணும் என்றால் அவனைத் தானே படுத்துவேன்!! 'இல்லையடா, இதன் அர்த்தம், சொர்க்கமே பூமிக்கு வரணும் - அதாவது பூமியே சொர்க்கமாக மாறணும்னு எடுத்துக்கலாம். இந்தத் தலைப்பில் எழுதப் போறேன்' என்று அவனிடம் சொன்னேன். 'ஏதோ பண்ணு, எனக்கு கொஞ்சம் கம்ப்யூட்டரில் பார்க்கணும், நீ வேலைய முடிச்சுட்டு கூப்பிடு' என்று சொல்லி விட்டுப் போனான்.

இன்று எந்தப் பதிவர்களைப் பற்றி இடுகையிடலாம் என்று யோசித்தவாறு, வலையை மேய்ந்து கொண்டிருந்தேன். கூடவே என் கணவர் பக்கத்து அறையில் கேட்டுக் கொண்டிருந்த மெல்லிசை, காதில் விழுந்து கொண்டிருந்தது. நானும் கம்ப்யூட்டரின் ஸ்பீக்கரை இயக்க வேண்டியிருந்ததால், கதவை ஒருக்களித்து மூடி விட்டு, தனிமையிலே இனிமையாய் வலைப்பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சொர்க்கம் இங்கு வந்தால் எப்படியிருக்கும் என்று யோசனை வேறு!

திடீரென்று பக்கத்தில் யாரோ என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல உணர்ந்து பார்த்தால், பாரதியார்! சுற்றி சுகந்தமான புகைமூட்டமாய் இருந்தது! 'யார், யார்..' என்று நான் உளற ஆரம்பிக்க, 'நான் தான் பாரதி..யார்! உன்னை பார்க்கணும்னு சொர்க்கத்தை இப்போது உன் அறைக்கு கொண்டு வந்திருக்கிறேன்!' என்றார். 'நிஜமாகவா, இது நிஜமா?' என்று நான் மேலும் உளற, அவர் புன்னகைத்தார்.

'நீங்கள் சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கீங்க, இங்குள்ள நடப்பெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க, அதற்கும் ஒரு தெய்வீகச் சிரிப்பு! என்ன செய்வதென்று தெரியாமல், பக்கத்தறையில் என் கணவரைக் கூப்பிட வாயெடுத்தேன். 'நாம் பேசுவது யாருக்கும் தெரியாது' என்று பதில் வந்தது. அப்படியும் எட்டிப் பார்த்தபோது, கதவு சாத்தப்பட்டு இருந்தது. இசைச் சத்தமும் இல்லை!

என்ன பேசுவது என்று தெரியாமல், பக்கத்திலிருந்த கணிணியைக் காட்டி 'இப்பல்லாம் எல்லாரும் எழுதலாம்! வலைப்பூ என்றொரு விஷயம் கணடுபிடித்து, விரும்பியவர்கள் தாம் சொல்ல நினைக்கும் கருத்தைச் சொல்லலாம்! கணிணியின் மூலம் பலவும் சாத்தியமாயிருக்கிறது' என்று சொல்லி, 'உங்களுக்கு, இந்தப் பாட்டைத் தெரிகிறதா?' என்று கொஞ்சம் வம்புடனே, முந்தாநாள் போட்ட 'நெஞ்சுக்கு நீதியும்' போட்டுக் காண்பித்தேன். 'பாட்டைத் திறப்பது பண்ணாலே!' என்று பண்புடனே பதில் வந்தது. 'உஜ்ஜயினி' பாட்டையும் ரசித்ததாகத் தெரிந்தது. பதிவுகளைப் பார்த்தவர், 'இன்று யாரைப் பற்றிச் சொல்லப் போகிறாய்?' எனக் கேட்டார்!

மகாகவியல்லவா, முதலில் ஒரு கவிதைப் பதிவரைக் காண்பிப்போம் என எல் கேயின் கவிச் சோலைக்கு கூட்டிப் போனேன். சங்கப் பாடல்களையும் அவற்றுக்கு புதுக் கவிதைகள் படைத்துக் கொடுத்திருப்பதையும் ரொம்பவே ரசித்தார்! சமீபத்திய பதிவு செங்கால் மடநாராய் பதிவைப் பாராட்டினார்!

அப்படியே அதே பதிவரின் பாகீரதி யையும் காண்பித்தேன். உறுதி கதையையும் ஹேப்பி பர்த்டே கிருஷ்ணாவில் பாடல்களையும் மற்ற சமூக அக்கறைப் பதிவுகளையும் காண்பித்தேன். 'பலே பாண்டியா' என்றார்!

இவர் தொடர்கதைகளும் எழுதுவாரே என்றவுடன், தொடர் நாயகர்கள் ஞாபகத்துக்கு வந்தார்கள்! அவர்களின் பதிவுகளையும் பார்த்தோம்.

பெரிய சிறு கதைகளைத் தொடர்களாக வெளியிட்டு, அடுத்த பாகம் எப்போ என்று தேட வைக்கும் வை.கோபாலகிருஷ்ணன் - சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று தன்னடக்கமாகச் சொல்லிக் கொள்பவர், இப்போதைய பதிவுகளில் கதைக்கான ஓவியங்களையும் அவரே தீட்டுகிறார். இவர் கதைகளைப் படிக்கும் போது கண்முன்னே அந்தக் காட்சிகள் விரிவது மாதிரி, அழகாகக் கதை சொல்லுவார். சமீபத்திய பதிவுகளான ஏமாறாதே, ஏமாற்றாதே சிறுகதையையும் ஓவியத்தையும் சகுனம் சிறுகதை இரண்டு பகுதிகளையும் காண்பித்தேன். பாரதியாருக்கு மிகவும் பிடித்திருந்தது, அதுவும் இரண்டாவது கதை - மூட நம்பிக்கைகளின் எதிரி அல்லவா?!

அப்படியே அவரை எங்கள் Blog பக்கம் கூடடிப் போனேன். ஸ்ரீராம், kggouthaman, raman, kg, Kasu shobana என்று ஐவர் ராஜ்ஜியம் இது என்றவுடன் அவருக்கு ரொம்பவே சந்தோஷம். அதுவும் 'நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படியுங்க! படியுங்க!! படிச்சுகிட்டே...இருங்க' என்ற வரவேற்பைப் பார்த்தவுடன் ஜாஸ்தியாகிவிட்டது! ஜே.கேயின் சிந்தனைகள், இந்த வார செய்தி அரட்டை எனப் பார்த்து ரசித்தார்! ஞாயிறு ஃபோட்டோக்கள், கேயைத் தே....டும் தொடர் எல்லாம் பார்த்தார்!

இப்போது பாரதி என்னை ஒரு கேள்வி கேட்டார் - 'நான் என்ன கடவுள் பாட்டுகள் மட்டுமா பாடியிருக்கிறேன்? கண்ணன், கண்ணம்மா பாடல்கள் உனககுப் பிடிக்காதா?' என்று! ஆகா, இப்படிக் கேட்டு விட்டாரே என்று வருந்தி, அவருடைய எல்லாப் பாடல்களும் பிடிக்கும் எனறும் உதாரணத்துக்கு ஒரு பாடலைப் போட்டுக் காடடுவதாகவும் சொல்லி, இந்தப் பாடலைப் போட்டேன்:



பாட்டை ரசித்துக் கேட்டபின், இன்னும் பதிவர்களைப் பார்க்கலாமா என்று பாட்டுக்கொரு புலவன் கேட்க, நானும் தயாரானேன். மோகன்குமார் என்றொரு சட்டம் படித்தவரின் வீடு திரும்பல் பார்க்கலாமா என்று கேட்டவுடன், 'ஆகா, என் நண்பர் வ.உ.சி. போல் வக்கீலா' என்று ஆனந்தப்பட்டார்! இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு? என்று கேட்கும் இந்தப் பதிவருடைய சமீபத்திய பதிவு நடிகர் நாகேஷ் பற்றி! வானவில் என்று பல்சுவைக் குறிப்புகளாக எழுதும் இவர், அவற்றில் சட்டச்சொல் விளக்கங்களும் எழுதுவது எனக்குப் பிடிக்கும்! (நடிகர் நாகேஷை சொர்க்கத்தில் தெரியுமாம் பாரதிக்கு!!)

பின்னர் அரசியல் பற்றி எழுதும் ஒரு புதிய பதிவரின் இடுகைகளை எடுத்தேன். ராஜன் என்பவரின் எல்லைகள் என்ற வலைப்பூவில் நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழைகளா என்ற பதிவைக் காண்பித்தேன். இன்றைய அரசியல் அவல நிலை சொர்க்கத்திலும் எல்லாரும் வருத்தப்படும் டாபிக் என்றுவிட்டார் பாரதி!

இன்னொரு புதிய பதிவரைச் சற்றே பெருமையுடன் அறிமுகப்படுத்தினேன், ஸ்டாலின் என்பவர் மார்ச் 2011 முதல் எழுதும் என்டர் தி வேர்ல்ட் -உனக்குள்ளே உலகம்! பற்பல செய்திகள் இருக்கிறது இந்த வலைப்பூவில், ஒரு செய்திச் சானலின் லிங்க்கும் இருக்கிறது! கூகுளில் சில நகைச்சுவைத் தேடல்களைப் பார்த்து நாமும் முயன்று பார்க்கலாம்! HTML தொடர்- லிங்க் பட்டன் உருவாக்குதல் பற்றித் தெரிந்து கொள்ளலாம்! சில வார இதழ்களின் பதிவிறக்கத்துக்கும் வழியிருக்கிறது! பாரதியார் 'பலே பாண்டியா' என்று மீண்டும் சொன்னது போல் காதில் விழுந்தது!


'வாருங்கள், இன்னொரு தளத்துக்குப் போகலாம்' என்று ஓம் சிவாய நம என்ற வலைப்பூவிற்கு அழைத்துச் சென்றேன். ஆன்மிகமாக பல திருத்தலங்கள் பற்றி பதிவுகள் உள்ளன. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பற்றி பதிவு அழகாய் இடப்பட்டுள்ளது. பங்குச் சந்தைக்குப் புதியவரானால் இந்தப் பதிவைப் படிக்கலாம்!

இவையெல்லாம் பார்த்த பாரதியார், நல்ல முன்னேற்றம் என்று சொல்ல, நானோ அவரிடம் என்னை ஆசீர்வதிக்குமாறு கேட்டேன். அவர் காலில் விழுந்து வணங்க, அவர், 'எழுந்திரம்மா' என்றார்! என்னை அவர் திருக்கரங்களால் தொட்டு எழுப்பவும் செய்தார்!

என்ன, திடீரென்று அவர் குரல் வேறு மாதிரி மாறிவிட்டது? எழுந்து பார்த்தால் என்னைத் தட்டி மறுபடி எழுந்திருக்கச் சொன்னது என் மகன்! 'அம்மா, பக்கத்து வீட்டு ஆன்ட்டி அப்புறம் சமயம் இருக்காது என்று உன்னை அவர்கள் வீட்டுக் கொலுவுக்குக் கூப்பிட வந்திருக்காங்க!' என்றான். 'பாரதி எங்கே,புகை...' என்று நான் மறுபடி உளற, 'நீ தூங்கிட்டே, அப்பா உனக்குத் தொந்தரவாக இருக்கும்னு பாட்டை நிறுத்திட்டு ஹாலில் ஐபாடு கேட்கிறார்! பாட்டி சாம்பிராணி பத்தி ஏத்தினது தான் புகை!' என்று விளக்கமும் கொடுத்தான். நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை!!

வானவில்லாக வர்ணஜாலம் காட்டும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! அப்புறம். வானவில்லின் நடுவில் அரசோச்சும் பச்சை நிறம், வளமை, ஒற்றுமை, இசைவு, வளர்ச்சி இவற்றைக் குறிக்கிறதாம்!!
மேலும் வாசிக்க...

Wednesday, September 28, 2011

மண் பயனுற வேண்டும்!!

நவராத்திரி கொலு ஆரம்பமாகி விட்டது. விக்கிபீடியாவின் கொலுவைக் கீழே பார்க்கலாம் (என்னிடம் இப்போதே சுண்டல் கேட்கக் கூடாது என்பதால் இந்த எச்சரிக்கை!! :-)) எங்கள் வீட்டு ஷோகேஸ் கொலுவுக்குச் சாயங்காலம் தான் சுண்டல் - எனவே மாலையில் எங்கள் வீட்டுச் சுண்டலையும் பகிர்ந்து கொள்ளலாம்!!):
கொலுவைப் பார்த்துவிட்டு நவராத்திரிப் பாட்டைக் கேட்காமலா? பாடல் பின்னணியில் ஒலிக்க ஆரம்பித்து விட்டதா?!:




'தேடி நிதஞ் சோறு தின்று' எனத் தொடங்கும் வேடிக்கை மனிதருக்கான பாடலைச் சிறு வயதில் என் புத்தக அலமாரியின் மேல் எழுதி ஒட்டியிருப்பேன்.நாம் இந்த மண்ணில் பிறந்தாயிற்று; வெறும் கதை பேசி, வேடிக்கை மனிதராய் வாழ்ந்தால்  போதுமா? பிறந்த மண்ணும் சுற்றியுள்ள மாந்தரும் பயன் பெற வேண்டாமா? தாம் பெற்ற பட்டறிவை எம் பதிவர்கள் எப்படியெல்லாம் அவர்தம் இடுகைகளில் சொல்கிறார்கள் என்பதை இன்று என் பார்வையில் பார்க்கலாம்:

ப்ரியமுடன் வசந்த் -தன்னை ப்ரியம்,கவிதை,கற்பனை, ரசனை,இசை, நக்கல் இவற்றால் கலந்த காபி நான்..! என்று வர்ணித்துக் கொள்கிறார் இவர். ஜோவெனப் பெய்யும் மழை எனும் இவரது கவிதைகளைப் படித்து இன்புறலாம். சினிமாச் செய்திகளும் உண்டு இவர் வலைப்பூவில்.

கோமாளி! செல்வா - நான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க என்று சொல்லும் இவர், பதிவுலகின் செல்லப் பிள்ளையாகவே எனக்குத் தெரிகிறார். இவரை எத்தனைப் பதிவுகளில் வம்பிழுத்து பதிவிட்டாலும், ஜாலியாகவே பதில் சொல்வார்!! செல்வா கதைகள் என்று தனியே எழுதுகிறார். அதற்கான லிங்க் பொம்மையைப் பார்த்தாலே சிரிப்பு வரும்! இவர் தன் வலைப்பூவில் நேர்த்திக்கடன் என்று முருகனை கைக்குள் போடும் வித்தையைச் சொல்கிறார்!

இராஜராஜேஸ்வரி - எனக்குப் பிடித்த இவருடைய பதிவுகளை அறிமுகப்படுத்தினால், அதற்குத் தனியாக ஒரு நாளை ஒதுக்க வேண்டும்!! ஆன்மிகமும், குடும்பமும் தன் விருப்பமான விஷய்ங்கள் என்று சொல்கிறார் இவர். பற்பல கோயில்கள், (அனைத்தும் வண்ணமயமான, சமயத்தில் அனிமேடட் படங்களுடன்!) சுற்றுலா செல்ல பலதரப்பட்ட இடங்கள் என்று விதவிதமான பதிவுகள்! மோட்சபுரி ஹரித்வார், இரயில் பயணங்களில், மெச்சத்தகுந்த மெல்போர்ன் நகர்,... என்று நான் ரசித்த பதிவுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்!

கோபி ராமமூர்த்தி, கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்து, தற்சமயம் பெங்களூரில் பணிபுரிவதாகத் தம்மை அறிமுகம் செய்து கொள்கிறார். இவர் புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம், கதைகள், கவிதைகள் என்று எல்லாப் பிரிவிலும் திறம்பட எழுதுகிறார்! தற்சமயம் வேலூர் புத்தகத் திருவிழா பற்றி எழுதியிருக்கிறார். காபி போடுவது எப்படி என்று கூடச் சுவையாக எழுதியிருக்கிறார்! சமீபத்திய சினிமா விமர்சனமும் பார்க்கலாம்!

கெக்கேபிக்குணி - எனக்குத் தோணினதைச் சொல்வேன் என்று சொல்லும் இவர், கெக்கே பிக்கேன்னு பேசறது என் ஸ்டைலுன்னு பெயர்க் காரணமும் சொல்லியிருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை என்று பல்துறைகளிலும் எழுதுகிறார்; இயற்கை உலகம் பற்றி படத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த வருடக் கோடை விடுமுறையில் தம் குழந்தைகளின் குறுமபுகளைப் பற்றி எழுதியுள்ளார். இந்தப் பதிவு போடும் சமயத்தில் புதிதாக 'வேப்பமுத்து' சிறுகதையை இடுகையிட்டுள்ளார்!

சம்பத்குமார் எழுதும் தமிழ் பேரன்ட்ஸ் என்ற வலைப்பூவைச் சமீபத்தில் பார்த்தேன். துன்பத்திலும் தோள் கொடுப்பான் தோழன் என்று தன் அறிமுகத்தில் அவர் சொல்லிக் கொள்கிறார்! பெற்றோர் குழந்தைகளிடம் கவனிக்க வேண்டியது பற்றி மிக நன்றாகச் சொல்லியிருக்கிறார். தேர்வெழுதும் குழந்தைகளின் பயம் நீங்க, பெற்ற குழந்தைகளை அவமானப்படுத்தும் பெற்றோர் என, பெற்றோர் படிக்க வேண்டிய பதிவுகள்.

மதுரகவி என்ற பதிவெழுதும் RAMVI தம்மை எது நடந்தாலும் நல்லதுக்குதான் என்று எடுத்துக்கொள்ளும் சுபாவம் கொண்டவள் என்கிறார். சமீப காலமாகத் தான் பதிவெழுதும் இவரது பதிவுகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் பதிவுகளாகவே இருக்கின்றன. எண்ணம், செயல் என்ற அவர் பதிவு ஆக்கபூர்வமாக உள்ளது. அறிந்து கொள்வோம் என்ற தலைப்பில் சில கடினமான ஆங்கில வார்த்தைகளுக்கு அழகாக விளக்கம் கொடுக்கிறார்!
இன்றைய வானவில் பதிவர்களுக்கு என் சார்பில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்!
வானவில்லின் நீல நிறம் - நீங்கள் நினைத்தது சரி தான்! - கடவுளைக் குறிக்கிறது! (அவதார்??!!) நீல நிறம் வானத்தையும் கடலையும் மட்டுமன்றி, அமைதியையும் புரிந்து கொள்ளுதலையும் குறிக்கிறதாம்! மன நிம்மதிக்கும் ஆறுதலுக்கும் உதவும் நிறம். (நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் என்று நீங்கள் பாட ஆரம்பித்தால் நான் பொறுப்பல்ல!!)
மேலும் வாசிக்க...

Tuesday, September 27, 2011

சொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது...

சொல் புதிது...சுவை புதிது... பொருள் புதிது... ஆம், இன்று நிலவும் புதியது! (New moon's day!).

இன்று மஹாளய அமாவாசை. இதற்கு முந்தைய 14 நாட்களை மஹாளய பட்சம் என்றும் சொல்கின்றனர். 'கர்ண' பரம்பரை(செவிவழி)க் கதையாக, கொடைக்கு ஒரு உதாரணமாக விளங்கிய கர்ணர், இறந்து சொர்க்கத்துக்குப் போன போது, அவருக்கு பொன்னும் பொருளும் நிறையக் கொடுக்கப்பட்டதே தவிர அன்னமோ நீரோ கிடைக்கவில்லையாம். காரணம் கேட்ட போது, அவர் அதற்கு முன் உணவைத் தானமாகக் கொடுத்ததில்லை எனத் தெரிய வந்ததாம். உடனே, மேலிடத்தில் கேட்டுக் கொண்டு, 14 நாட்கள் பூவுலகம் வந்து, உணவையும் நீரையும் தானமாகக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நாட்களில் முன்னோரை நினைத்து வழிபடுதல் நல்லது எனவும் பல்வேறு தானங்கள் (முக்கியமாக அன்னதானம்) கொடுத்தால் பற்பல நற்பலன்கள் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். இந்தப் 14 நாட்களில் செய்யாததை, நிறைவு நாளான அமாவாசை நாளன்று செய்யலாம் எனவும் சொல்கிறார்கள். பயத்தின் மூலமாகவும், பக்தியின் மூலமாகவும் நம் முன்னோர்கள் நம்மை நல்ல காரியங்கள் செய்ய வைக்கிறார்கள்!!
முக்கியமாக வரவிருக்கும் நவராத்திரிக்காக இன்று கொலு பொம்மைகளை எடுத்து அடுக்கும் நாள். பெண்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் அவரவர் கற்பனை வளத்துக்கு உருக்கொடுக்கும் நாள். நீங்கள் கொலு வைக்க ரெடியா? என்ன, வேலை செய்ய சோம்பலா? இந்தப் பாட்டைக் கேளுங்கள்:


எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராமல் சக்தி கொடுக்க நான் விரும்பிக் கேட்கும் பாடல் இது!
வலைச்சரத்தில் என் கொலு இன்றே ஆரம்பம். இதோ, கொலுவில் வீற்றிருப்பவர்கள் - இந்தப் பதிவர்களை வரிசைப்படுத்துவது என் ஞாபகத்தில் தான் - இந்த வரிசையில் ஏறுமுகமோ, இறங்குமுகமோ இல்லை.
ஆரம்பத்தில் நான் எனக்குப் பிடித்த பதிவர்களாகச் சொல்லப் போகிறவர்களை உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏனென்றால் இவர்கள் பிரபலப் பதிவர்கள். பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன? தொடர்ந்து மற்றப் பதிவர்களையும் பார்க்கலாம்

அவருடைய நிழலுடன் கூட வம்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லும் பரிசல்காரன்- ரசிப்போர் விழி தேடி அவர் தரும் இடுகைகளில் எனக்கு சமீபத்தில் பிடித்தது ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை. இன்னொரு பதிவான எமகிங்கரர்களில் பைக்கில் போகும் போது சந்திக்கும் பல்வேறு வகையானவர்களுக்கு பெயர் சூட்டியிருக்கிறார் பாருங்கள்!!

ஊர்ல சொல்றது சொலவடை, உண்மையைச் சொல்றது இட்லிவடை - இந்த வலைப்பூவில் அரசியல் நெடி அதிகம். அதற்குள் நான் இங்கு போகப் போவதில்லை (நெடி அலர்ஜி!) ஆனாலும் அதில் மஞ்சள் கமெண்ட்ஸ் ரசிககும்படி இருக்கும்! கிண்டல் பதிவுகளும் இருக்கும் - என்னங்க்ண்ணாவைப் பாருங்களேன்!

நம்பிக்கை இருக்கும்வரை தோல்விகள் வருவதில்லை என தன்னம்பிக்கை டானிக் கொடுக்கும் பனித்துளி சங்கர் - பயனுள்ள தகவல்கள், ஜோக்ஸ், கவிதைகள் என்று அவர் பதிவுகள் களைகட்டும். சிரிப்பைப் பற்றி அவர் எழுதியதை ரசிக்கலாம்! கடிகாரத்தைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம்!

கவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி... எனத் தன்னடக்கமாய்ச் சொல்லிக் கொள்ளும் மாணவன் எழுதும் எல்லா இடுகைகளுமே நன்றாக இருக்கும். குறிப்பாக, வரலாற்று நாயகர்கள் என்று சாதனை சரித்திரம் படைத்த சாதனையாளர்களைப் பற்றி எழுதுபவை சரித்திரப் பாடத்தில் வைக்குமளவுக்குச் சிறந்தவை. இந்தச் சுட்டியில் முதல் பாகத்தைப் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்! 25 பேரின் சரித்திரத்தைச் சொல்லும் இதனை நான் பதிவிறக்கம் செய்து என் மகன்களைப் படிக்கச் சொல்லியிருக்கிறேன்! சமீபத்திய பதிவு மைக்கேல் ஃபாரடே குறித்து.

சில தொழில் நுட்ப வலைப்பூக்களைப் பார்ப்போமா?
தெரிந்து கொளளலாம் வாங்க-வில் பல செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டரின் செயல் வேகம் அதிகப்படுத்த, ஜி-மெயில் செய்தியில் படங்கள் ஒட்டி அனுப்ப என்று பல விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 2011ல் பதிவுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் M.R. ன் இரண்டு வலைப்பூக்களை சமீபத்தில் ரசித்தேன். அன்பு உலகம் என்ற வலைப்பூவில் பல்வேறு மருத்துவக் குறிப்புகளையும் மற்றக் குற்ப்புகளையும் இவர் தருகிறார், இங்கே - யோகா கற்றுக் கொள்ளுங்கள்! ஒரே கிளிக்கில் அன்-இன்ஸ்டால் செய்யவும் சொல்லித் தருகிறார்!

இவரே பங்கு மார்க்கெட் என்று மற்றொரு வலைப்பூவிலும் தற்போது எழுதத் தொடங்கியுள்ளார்! பாராட்டுகள்.

சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது என்று சொல்லி சட்டப்பார்வை என்னும் வலைப்பூவில் எழுதும் அட்வகேட் P.R.ஜெயராஜன், சொல்வதற்கு நான் ஒன்றும் சாதிக்கவில்லை...... நேரம் வரும்.... காத்திருக்கிறேன் ... என்கிறார்! பேருந்து நடத்தனருக்குத் தேவையா என்று அவர் சட்டப் பார்வையில் கேட்கிறார்.


இன்று என் பார்வையில் சில பதிவர்களைச் சொன்னேன். மற்றவர்களைப் பின்வரும் நாட்களில் பார்ப்போம். வானவில்லும் வர்ணங்களும் எங்கே என்று கேட்பது காதில் விழுகிறது. மேலே உள்ள பல கண்ணோட்டங்களில் எழுதும் பதிவர்களே வானவில்! போதவில்லையென்றால், இந்த வரிகளின் வண்ணங்களைப் பாருங்கள்!

சொல்ல மறந்துட்டேனே, வானவில்லின் இண்டிகோ கலர் அறிவையும் தன்னம்பிக்கையையும் குறிக்கிறதாம்! மேலும் இது முதலுக்கும் முடிவுக்கும் முடிச்சுப் போடும் தன்மையுடையதாம்!
மேலும் வாசிக்க...

Monday, September 26, 2011

ஊருக்கு நல்லது சொல்ல...

என்னைத் தெரியுமா?
என்னை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்கலாம். ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பணிக்குச் செல்லும் பெண்மணி. மனைவியாக, இரண்டு மகன்களுக்கு அன்னையாக, வயதான ஒரு தாய்க்கு மகளாக, புகுந்த வீட்டுக்கு அவர்கள் வீட்டுப் பெண்ணாக, இதற்கு மேல் நேர்மையான, உண்மையான உழைக்கும் பெண்மணியாக ஒரு சராசரி குடும்பத் தலைவி. சுருக்கமாக, உங்களைப் போல ஒருத்தி!

மகாகவி பாரதியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பாடல்களை மிகவும் ரசிப்பேன். அடுத்து எழுத்தாளர் கல்கியின் எழுத்துகளை முடிந்தவரை திருப்பித் திருப்பி சுவாசித்து வாசித்திருக்கிறேன். எழுத்தார்வத்துக்கு இவர்கள் காரணம். மகாகவிக்கு சமர்ப்பணமாக எனக்குப் பிடித்த அவர் பாடல் முதலில்:
ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்
கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்துணராது
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்

எனக்கு இங்கே எழுத வாய்ப்பளித்த வலைச்சரக் குழுவினருக்கு நன்றி!

சென்ற வாரம் ஆசிரியப் பணியைச் சீரிய வகையில் செய்திட்ட திரு மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்! குவிக்கும் கவிதைக் குயிலாகச் சிறந்து பணியாற்றினார்!

இனி, என் வலைப்பூ பற்றி -

எனக்கு வலைப்பூவை அறிமுகம் செய்து, நான் எழுத ஆரம்பித்தது எப்படி என்பதை இந்தப் பதிவில் பாருங்கள். இதில் என் பெயர்க் காரணமும் இருக்கும். சில சமயம், ஞாபக மறதியை ஜெயிப்பது எப்படி?, மொக்கை -ஆராய்ச்சி என்று நகைச்சுவையாக எழுதுவேன். சில சமயம், உயில் எழுதுவதின் முக்கியம், தற்கொலையைத் தவிர்ப்போம் போன்ற பதிவுகளும் இடுவேன். காரட் கீர், புளிமிளகாய் ஊறுகாய் போன்ற சமையல் குறிப்புகளும் உண்டு. பல்வேறு சமயங்களில் என்னைப் பாதித்த விஷயங்களைத் தொகு(டு)த்து கதம்பம் என்றும் பதிவிடுகிறேன், (கொடுத்திருக்கும் லிங்க் சமீபத்தியது)

சிறுகதைகளுக்கு :தண்ணி, , 50-50, மொழிமாற்றக் கதை... கவிதையிலும் கைகளைச் சுட்டுக் கொண்டிருக்கிறேன் மூன்று வார்த்தைகள், சமமான கல்வி { ;-( }; என் முதல் சிறுகதை அனுபவத்தையும் பதிவிட்டிருக்கிறேன்! லாஜிக்கா, மொக்கையா என்றே தெரியாமல் சில சமயம் கேள்விகள் கேட்பதுமுண்டு! எனது பதிவுகளில் அதிகம் படிக்கப்பட்டது இந்தியா தோற்காது! - கிரிக்கெட்டும் நானும் மற்றும் சொந்த சரக்கில்லையும் தாம்!

என்னை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் எழுத வைத்த தோழமை உள்ளங்களுக்கு நன்றியாக 'தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?' சக பதிவர்களுக்காக நகைச்சுவையாக ச்சும்மா- காமெடிக்கு!

சுய புராணம் எனக்கு பழக்கமில்லை (?!!) எனவே அறிமுகம் போதும் என நினைக்கிறேன். ஏழு நாட்கள் உங்களுடன் என் பார்வையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பளித்தவர்களுக்கு மறுபடியும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை வரவேற்று வாழ்த்தளித்த உள்ளங்களுக்கும் நன்றி!

ஏழு என்றவுடன் என்ன ஞாபகம் வருகிறது? என்னைப் போன்ற ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு அது ஒரு மாய எண். ஆனால், எனக்கு இந்த சந்தர்ப்பத்தில் உடனே ஞாபகத்துக்கு வந்தது, வானவில் தான். என் பார்வையை வலையுலகில் வலைச்சர ப்ரிசம் (prism) மூலம் பார்ப்பதில் வானவில்லாகப் பதிவர்கள் தெரிகிறார்கள். வானவில்லின் ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டாம்! உதாரணத்துக்கு வயலட் நிறம் மனித நேயத்தையும் தெய்வீகத் தன்மையையும் காட்டுகிறதாம்!
என் பார்வையில் வானவில்லாக வர்ணஜாலம் காட்டும் பதிவர்களை நாளை முதல் காண்போம்! 

மேலும் வாசிக்க...

Sunday, September 25, 2011

மிடில் கிளாஸ் மாதவி மகேந்திரனிடமிருந்து பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் மகேந்திரன், தான் ஏற்ற பொறுப்பினை, தாயகம் வந்த மறு நாளே துவங்கி, ஏழு நாட்களிலும், கடுமையாக உழைத்து, ஏழு இடுகைகள் இட்டு, 38 பதிவர்களையும் அவர்களுடைய 50 இடுகைகளையும் அறிமுகப் படுத்தி, இது வரை 330 மறுமொழிகளும் பெற்று, மன நிறைவுடன், பெரு மகிழ்ச்சியுடன், எடுத்த செயலை வெற்றி கரமாக முடித்த பெருமையுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இடுகைகளை சுய அறிமுகம், உறவுகள், ஊரின் பெருமை, சமுதாயக் கொடுமைகளைச் சாடல், நகைச்சுவை, கதை, தமிழின் பெருமை என்ற தலைப்புகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஒரு முன்னுரை, ஒவ்வொரு பதிவரைப் பற்றியும் ஒரு சிறு அறிமுகக் கவிதை, பின்னர் இடுகை அறிமுகம் என்ற நிலைகளில் புதுமையாக எழுதி இருக்கிறார்.

நண்பர் மகேந்திரனை சென்று வருக என நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சகோதரி மிடில் கிளாஸ் மாதவி. இவர் மிடில் கிளாஸ் மாதவி என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். ஒரு ஆண்டு காலமாக எழுதி வரும் இவர் இது வரை நாற்பதற்கும் மேற்பட்ட இடுகைகள் இட்டு, எண்பதற்கும் மேற்பட்ட பதிவர்களை பின் தொடர வைத்திருக்கிறார்.

சகோதரி மிடில் கிளாஸ் மாதவி, பெற்றோர் கொடுத்த சொத்தாக தான் கல்வியினால் பெற்ற அறிவினைக் கருதுகிறார். இரு மகன்களுக்குத் தாயாகவும், அலுவலகப் பணிகளுக்கு இடையேயும், சிறந்த இல்லத்தரசியாகவும் விளங்குகிறார். சிறு வயதில் கல்கியின் படைப்புகளைப் படித்ததனால் ஏற்பட்ட ஆசையின் விளைவு - இவரது வலைப்பு.

சகோதரி மிடில் கிளாஸ் மாதவியை வருக வருக ! நல்ல அறிமுகங்களை அள்ளித் தருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மகேந்திரன்
நல்வாழ்த்துகள் மிடில் கிளாஸ் மாதவி

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

ஏழாம்நிலை மாடம்!!






கதைகதையாம் காரணமாம்
வாழைமரத் தோரணமாம்!!
பலபேரு சொன்ன கதை
காதார கேட்டுபுட்டு!
சிந்தனையில் இருப்போரே!
மீண்டுமிங்கே திண்ணைக்கு
பாய்ந்து ஓடியாங்க
இன்னுமொன்று பார்த்திடுவோம்!!

ஆயிரம் பேசினாலும்
அளக்காமல் கொட்டினாலும்
ஊரெல்லாம் அலைந்து
உல்லாசம் தேடினாலும்
வீட்டு வாசல் வந்ததும்
உற்சாகம் வருவதுபோல்!
எம்மொழியைப் பேசுகையில்
என்மனம் குளிருது!!


அன்புநிறை தோழமைகளே இன்று நம்ம அரட்டைக் கச்சேரி முடியும் நாள். இன்றைய நிறைவாய் நம் இனிய தாய்மொழியின் சுவை பற்றிக் காண்போம் என நினைத்தேன்.
பேசிக்கொண்டே போகலாம், தமிழின் வளம் பற்றி. இன்றைய காலகட்டத்தில் மொழியில் கலப்பின வார்த்தைகள் பல கலந்து கொஞ்சம் மொழியின் தன்மையை மாற்றி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. ஆயினும் இன்னும் நம் மொழி தரத்தில் இருந்து இறங்கவில்லை. முடிந்த அளவு தமிழைக் கலப்பு இல்லாமல் பேசுவதற்கு முயற்சி செய்வோம். நம் கண் எதிரே ஒரு தமிழர் வந்தால் தமிழில் பேசுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

திரைப் படங்களில் பல பாடலாசிரியர்கள் தங்களின் தமிழ்ப்புலமையை வெளிப்படுத்தி இருந்தாலும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு இணை அவர்தான். இருவர் என்ற திரைப்படத்தில் அவர் எழுதிய நறுமுகையே..நறுமுகையே.. என்ற பாடல் எங்கு பாடினாலும் அப்படியே அந்த பாடலின் கவிநயத்தில் ஆழ்ந்து விடுவேன்.




நாவின் சுழற்சியில்
நாவன்மை தெரியினும்!
ஈரேழு பக்கங்கள்
இறுமாந்து பேசினும்!
உன்புகழைச் சொல்கையிலே
உவகை பெருகியதே!

கோடிசுகம் கிடைத்திடினும்
தேடிவந்து யான்வேண்டும்!
எந்நாளும் என்நெஞ்சில்
நீக்கமற நிறைந்திடவே!
அருள்புரிய வேண்டுமே
தமிழ்ப்பெரும் கருணையே!!

...............................................................................................................................
இங்கே நம் பதிவர்கள் பலர் தமிழின் பெருமையையும், தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் வளர்ச்சி, இலக்கியம், இலக்கணம், நாட்டுப்புற இலக்கியம், சித்தர்கள் காவியம், மருத்துவம், சங்க காலம், இலக்கியக் கவிதைகள் ஆகிய இன்னபிற செய்திகளையும் நமக்கு எளிதாக புரியும் வகையில் அழகுற படைத்திருக்கிறார்கள். வாருங்கள் தமிழமுதம் பருகிவிட்டு வருவோம்...
...............................................................................................................................




வலைகளை சுற்றி வருகையில் சற்று தாகம் எடுத்து அருகே இருந்த தெளிந்த நீரோடையில் கைகள் அள்ளிய நீரை பருகி தாகம் தணித்தேன். அங்கே என் தாகத்தை தீர்த்ததற்கு முழு உரிமைபெற்றவர் சுந்தர்ஜி. நந்தவனத்தில் ஓராண்டி என்று குசப்பாத்திடம் போட்டுடைத்து பின்னர் காதற்ற ஊசிகொண்டு வாழ்வியல் தத்துவம் பேசிய பட்டினத்தார் பற்றி அழகாக ஒரு காவியம் படைத்திருக்கிறார்.. வாருங்கள் போய் பார்த்து வருவோம்..

இதோ அவருக்காக..

பட்டினத் துறவிகளின்
பாடம் உரைத்தாயே!
பாங்குடனே நீ இட்ட
பத்துப் பாடல்களையும்!
எழுத்துக்கூட்டி படித்த பின்னே
பட்டினத்து அடிகளின்
புலமை தெரிந்ததய்யா!!

................................................................................................................................




அன்னை பூமியின் அருள்மழையை புவனமெங்கும் பொழியச் செய்யும் தோழர்கள் கூறுகிறார்கள் பிற தொழில் செய்வாரை எல்லாம் இத்தரணியில் தாங்கிப் பிடிப்பவர்கள் உழவர்களே, உலகம் என்னும் தேருக்கு உழவர்களே அச்சாணி போன்றவர்கள் என்று. உழவுத் தொழில் தான் நம் நாட்டுக்கே முதுகெலும்பு என்பதை எவ்வளவு அழகாக தமிழ் நயத்துடன் இங்கே கட்டுரையாக போட்டிருக்கிறார்கள் பாருங்கள்...

இதோ அவர்க்காக..

சேற்றிலொரு கால்பட்டால்
செங்கழனி உழுதிட்டால்!
நாற்றங்கால் இறங்கியே
நல்லவிதை செய்வித்தால்!
சோற்றில் நாமும் கைவிடலாம்
செங்குருதி ஊறிடுமே!!

.................................................................................................................................




ஒளவையின் ஆத்திசூடி கண்டு சங்கத் தமிழின் வளத்தை எண்ணி பெருமித்திருந்த வேளையில், இதோ பார் வேதாவின் ஆத்திசூடி என்று தற்கால ஔவையாய் தரணியில் வளம் வருகிறார் சகோதரி வேதா.இலங்காதிலகம். இவரின் வேதாவின் வலை சென்றால் தமிழின் இனிமையை முழுமையாக பருகிவிட்டு வரலாம். செல்வோமா..

இதோ அவருக்காக..

அறம்செய விரும்பென
ஒளவையின் மொழியினை
பழகி வருகையில்
என்மொழியை பாரடியோ!
ஏற்றமிகு ஆத்தியை
மாற்றிப் புனைந்தேன்
வாழ்விற்கு ஏற்ப!
எனப் பகன்று வந்தாயே!
கலியுலக ஒளவையே!!
...............................................................................................................................




இது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் (cheers) அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்(cheers)... என மகிழ்வோடு தன் அறிவினை பகிர்ந்து கொள்கிறார் நண்பர் ஜனா தன் வலையில். அங்கே மண்ணின் பாடல்கள் என்று நம் தமிழின நாட்டுப்புற பாடல்களை எங்கே தொகுத்தளித்திருக்கிறார்.. வாருங்கள் பார்த்து வருவோம்..

இதோ அவருக்காக..

மொழியின் வளர்ச்சியோ
கலையாலே தானப்பா!
பண்பாடு பேசிவரும்
கலாச்சாரம் காத்து வரும்
கலைஞர்களின் வாய்மொழிதான்
மொழிவளர்த்து வந்ததுவே!!
அழகிய மொழியாய்
ஏட்டில் ஏறுமுன்
வாய்மொழியாய் வாழ்ந்தாயே
நாட்டுப்புறம் தன்னிலே!!
...............................................................................................................................




கடம்பவன நான்மாடக்கூடலாம் மாமதுரை நகரிலே விரிவுரையாளர் பணிக்கிடையே நம்மை தமிழின் இனிமையால் திகட்ட வைத்துவிட மகிழம்பூச்ச்சரம் தொடுத்து வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்ச்சரமாய் உலா வருகிறார் சகோதரி சாகம்பரி. அவரின் வலை முழுவதும் தமிழ் மனம் வீசும். அங்கே நான் கண்ட ஓர் பதிவு நின்னைச் சரணடைந்தேன்!! எந்தச் செயலைச் செய்தாலும் முழுவதுமாக உன்னை அங்கே அர்பணித்து சரணடைந்து விட்டால் அச்செயலில் வெற்றி உறுதி என அழகாக விளக்குகிறார். வாருங்கள் நாமும் சரணடைவோம்...

இதோ அவருக்காக..

அகண்ட அண்டமும்
அன்றே வேண்டுமென
முரண்டு கொள்ளாதே!
வாழ்வின் வெளியில்
தெரியும் பரப்பினில்
தேவையின் நிமித்தம்
முழுமையாய் பரவு!
அகமழித்து உந்தன்
செயலில் ஒன்றிட்டால்
வெற்றி நிச்சயம்!!
.........................................................................................................................



வலைப்பூக்களில் ஓர் வர்ணஜாலம். தமிழுக்காய் தன்னை முழுவதும்  அர்பணித்து வேர்களைத் தேடி  இவரிடும் ஒவ்வொரு பதிவுகளும் நமது மொழியின் சிறப்பினை எண்ணி மலைக்கும் வண்ணம் தலைசிறந்து நிற்கும். அன்புநிறை நண்பர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களின் தமிழ்ப்பணி வலைப்பக்கங்களிலும் இணையத்திலும் போற்றத்தக்க வணங்கத்தக்க ஒன்று. இதுதானென்று சொல்ல முடியா அளவுக்கு அத்தனை படைப்புகளும் நெஞ்சை வருடி தாலாட்டும் தமிழ்ப்புலமை. அங்கே மேற்கோள் காட்டிடப்படும் ஒரு சங்கப் பாடல் அதற்கான விளக்கம்.
இதோ இன்றைய பதிவு இரவலர் வாரா வைகல்.. சங்க காலத்தில் இரவலர் வராவிட்டால் வீட்டுப் பெண்கள் எவ்வளவு துன்பத்துக்கு ஆளானார்கள் என அவர் சொல்லும் விதமே அற்புதம் தான்.
அப்பப்பா.. முனைவரே. இங்கே நான் உம்மை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை. உம்மின் பெயருடன் என் வலைச்சரப்பணியை நிறைவு செய்வதே என் நோக்கம். செய்தேன்.. பாக்கியம் பெற்றேன்..

இதோ அவருக்காக ..

தமிழின் பெருமையை
எம் ஆசான் உரைக்க
பொறியில் ஏற்றினேன்!
எழுத்துலகில் நுழைந்ததும்
விரல்களின் நுனியில்
ஊறிவந்த வார்த்தையெல்லாம்
கவியில் ஏற்றினேன்!
என்று உன் வலை கண்டேனோ
அன்றே தருவித்தேன்
அழகாய் ஓர் முடிவை!
நினைத்ததை எழுதாதே
அதில் சிறந்ததை எழுது!!

............................................................................................................................




அன்புநிறை தோழமைகளே, இதோ இன்றுடன் என் வலைச்சரப்பணி நிறைவுற்றது. இந்த ஏழு நாட்களும் என் மனதில் உள்ளதை எழுதி சில பதிவர்களை அறிமுகப்படுத்தியும் வைத்திருக்கிறேன். இங்கே நான் ஏதும் தவறுகள் செய்திருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். நிறைவாய் செய்திருப்பின் என் வலை வந்து சிறப்பியுங்கள்.
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக்கொடுத்த வலைச்சர பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய சீனா ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றிகள். என்னை இத்தனை நாட்கள் ஆதரித்து கருத்துரைகளும் ஓட்டும் அளித்து வந்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அடுத்து வலைச்சரப் பொறுப்பேற்கும் இனியவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்பன்
மகேந்திரன். 
மேலும் வாசிக்க...

Saturday, September 24, 2011

ஆறாம்நிலை மாடம்!!






ஆகாய வீதியில்
ஆளில்லா கோளத்தில்
சிறகடிச்சு பறந்தோமே!
கிண்கிணி மணியொலியாய்
கிச்சுகிச்சு மூட்டிய
நகைச்சுவை கேட்டோமே!!

திண்ணைப்பேச்சு முடியல
திகட்டாம இருப்பதற்கு!
வில்லுப்பாட்டு கேட்பதுபோல்
கதைகேட்க போவோமுங்க!!




நகைச்சுவை பதிவுகளை பார்த்து படித்து நல்லா வயிறு குலுங்க சிரிச்சீங்களா? சிரிப்பும் அழுகையும் தான் நமக்கு கிடைத்த மாபெரும் புதையல். எப்போ வரும்னு நமக்கே தெரியாது. சூழல்களின் மாற்றங்கள் நிகழ்கையில் மாறிமாறி நமை ஆட்டுவிக்கும். நல்லா சிரித்துவிட்டு முகம் பார்க்கும் கண்ணாடி பாருங்கள் நாம் எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று. அதனால... எல்லோருக்கும் சொல்லிகிறது என்னான்னா ... நல்லா வாய்விட்டு சிரிக்க பழகுங்கோ.!

சிரிச்சு பேசிவிட்டோம், அடுத்து கொஞ்சம் மாறுதலுக்காக கதை கேட்கப் போவோமா? நாம எல்லோரும் சிறுவயதிலிருந்தே பழகி வந்த பழக்கம் கதை கேட்பது. சிறு வயதில் அம்மாவிடம், நான் தூங்கணும் கதை சொல்லு னு என்னா பாடு படுத்தி இருப்போம். இப்போ நம்ம பிள்ளைகள் கேட்கும்போதுதான் அதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆனாலும்.. வேலைகளை ஒதுக்கி வைத்து கதை கேட்பது என்பது ஒரு தனி சுகம் தான். அதுவும் சிலர் கதை சொல்கையில் சும்மா சேர்க்க வேண்டியதெல்லாம் சேர்த்து அருமையாக சொல்வாங்க.




காதலிக்க நேரமில்லை திரைப்படம் ... நம் வாழ்நாளில் மறக்ககூடியதா? அருமையான குணச்சித்திர நடிகர் பாலையாவிடம் நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் அவர்கள் கூறிய கதை இன்னும் காதுகளில் ரீங்காரமிடுகிறது.

கதைய சொல்லவந்தேன்
களத்துமேடு காக்க வந்தேன்!!
அந்திநேரம் கடந்துபோச்சு
கும்மிருட்டு கவிழ்ந்துருச்சு!
சுத்திநிக்கும் செல்ல மக்கா
சீக்கிரமா ஓடியாங்க!

ரெண்டுரூபா நாந்தாரேன்
நாலுமிட்டாய் வாங்கிவாங்க!
ஆளுக்கொண்ணு எடுத்துகிட்டு
நான் சொல்லும் கதைய நல்லா
காதை தீட்டி கேளுங்க!!
..........................................................................................................................

நம்ம பதிவர்கள் நிறைய பேர் கதை சொல்வதில் வல்லவர்கள். திக்காம திகட்டாம தேன் போல கருத்துக்களை நாசூக்காக தடவி நமக்கு கதை சொல்வதில் சூராதி சூரர்கள். அப்படிப்பட்ட சில பதிவர்களின் கதைகளை கொஞ்சம் கட்டுசோறு கட்டிக்கிட்டு படித்து வருவோம் வாருங்க...
..............................................................................................................................







பலபூக்களைக் கொண்டு மணமிக்க கதம்பம் தொடுப்பதுபோல பல்லுணர்வுகளை ஒருங்கே கூட்டி கதம்ப உணர்வுகளாய் சரம் தொடுத்து படிப்பவர்களின் மனதை சுண்டி இழுப்பவர் எமதருமை சகோதரி மஞ்சுபாஷிணி. இவரின் பின்னூட்டங்கள் படிப்பதற்கு மிக மகிழ்ச்சியாய் இருக்கும், பதிவிடும் படைப்புகளை நன்கு படித்து உள்ளுணர்ந்து ஆழ்ந்து கருத்தளிப்பதில் இவருக்கு இணை இவர்தான். அவரின் வலைப்பூவை முகரச் செல்கையில் அங்கே கதைப்பதிவுகள்
மனதை கொள்ளைகொண்டன. அதில் ஒரு வாசப்பூவான தொலைக்க விரும்பாத அன்பு... என்ற கதைப்பூ வாசமாய் இருந்தது... நீங்களும் சென்று முகர்ந்து பாருங்களேன்...

இதோ அவருக்காக...

பூவாலே புன்னகையாம்
பொதிந்துவைத்த சந்தனமாம்!
உள்ளுக்குள்ளே ஊற்றெடுக்கும்
உணர்சிகளை மாலையாய்
தொடுத்து இங்கு வந்தாயே!
கதம்பவாசம்  வீசும்
கடம்பவன சோலைக்குள்
கதைபடிக்க வந்தோமே!
ஜசீரா விமானத்தில
வாகாக ஏறிவந்து
குவைத்துல இறங்கிடுவோம்
வக்கனையா மாலைகோர்த்த
மஞ்சு அக்காவுக்கு
மலர்க்கொத்து கொடுத்திடத்தான்!!
........................................................................................................................



இயல்பான வார்த்தை கணைகளால் வில்லேந்தி வந்து மனதுக்குள் அதைப் பாய்ச்சும் சொல்வன்மை பெற்றவர் அன்புச் சகோதரி நிஹாஷா. நெஞ்சமெனும் சுவருக்குள் திறமை எனும் தூரிகையால் அழகிய ஓவியங்கள் வரைபவர். சென்று படித்தவுடன் சிக்கென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு பசையுள்ள பதிவுகளை தூவி
விட்டிருக்கிறார். தூரிகையின் அழகை ரசிக்கையில் என் கண்ணில் பட்ட கதை தான் அவள் அப்படித்தான்... இயல்பான வார்த்தை முத்துக்களால் அழகிய சரம் தொடுத்திருக்கிறார். உணர்வுகளை நாசூக்காக பகிர்ந்திருக்கிறார். வாருங்கள் தூரிகையின் வண்ணம் பார்த்து வருவோம்...

இதோ அவருக்காக...

சிங்காரத் தூரிகையால்
ஓவியங்கள் தீட்டியதை!
கண்காட்சி போலவந்து
காணத்தான் வந்தேனே!
அழகான ஓவியங்களை
கண்குளிர பார்த்துபுட்டேன்!
வரும்போது என்கிட்டே
ஓட்டிகிட்டு இருந்த மனம்
போகையிலே என்கூட
வராம போச்சுதம்மா!!
........................................................................................................................


வலைப்பூக்களை சுற்றி வருகையில் என் கண்ணில் பட்ட ஒரு அற்புதமான மனிதர் எஸ்.ஏ.சரவணக்குமார். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இவர் மாதமிருமுறை வெளிவரும் ஒரு பத்திரிகையில் கௌரவ ஆசிரியராகவும் இருக்கிறார். இத்தனை பணிகளுக்கிடையில் சில நண்பர்களோடு சேர்ந்து ஒரு ஆதரவற்றோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். இவரின் கதைகள் நிறைய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. இவரை அறிமுகபடுத்துகிறேன் என்று சொல்வதை விட, இவரின் கதை ஒன்றை இங்கே என் பதிவுக்கு பயன்படுத்திக்கொள்கிறேன் என்று சொல்வதே சிறந்தது. அவரின் கதை ஒன்று உங்கள் பார்வைக்கு.. பாக்யா வார இதழில் வெளியான கல்யாண சந்தையில் ...

இதோ அவருக்காக...

நல்ல மனம் படைத்தவரே
நாலு உதவி செய்வரே!
உன்னை இங்கு கண்டிடவே
இத்தனை நாள் ஆனதய்யா!!
நின் கதையை இப்பதிவில்
கொண்டுவந்து போட்டிடவே
என்ன தவம் செயதேனையா!!
................................................................................................................................






ஐயா இதை எழுத வேண்டாம் என்று சொன்னால் கூட இவரின் பேனா அதை கேட்காதாம். புலம்பல் என்கிற பெயரில் புலம்புகிறேன் ஆசாமி என்று சொல்லும் பி.அமல்ராஜ் எண்ணும் இவர்  எவ்வளவு அழகான புனைவுகளை கொடுத்திருக்கிறார் பாருங்கள். கதையென்று முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு படிப்பவர்களை அப்படியே தனது நகைச்சுவைத் திறனால் கதையை விட்டு வெளியே வராத படி கட்டிப்போட்டு வைக்கிறார். வெள்ளி பூஜை எண்ணும் இந்த சிறுகதையை படித்துப் பாருங்கள். சிரித்துக்கொண்டே படியுங்கள்...

இதோ இவருக்காக..

வெள்ளிக்கிழமை என்றாலே
ஆடிவெள்ளி மனதில்வரும்!
வெள்ளிஎல்லாம் வெள்ளியல்ல
வெள்ளியின்னா என்னதுன்னு
விளக்கமாக தெரிஞ்சுதய்யா!
வெள்ளிபூஜை கதையை இங்கே
படிச்சிபுட்ட பின்னால்தான்
வெவரமாக தெரிஞ்சுதய்யா!!
........................................................................................................................




என்னை நன்றாக படைத்தனன் இறைவன், தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என்று தமிழ் பேசி வருகிறார் அன்பு நண்பர் ராஜா MVS. பல்சுவைப் பதிவுகளில் அசத்தும் இவர் கதைகளை புனைவதில் வல்லவர். கும்பிடுறேன் சாமி... என்ற இவரின் கதையை படித்துப் பாருங்கள் கதைக்குள்ளே திருப்பங்கள் அருமையாக ஒளித்து வைத்திருக்கிறார். அவர்கிட்டே போய் நல்லா கதைச்சிட்டு வருவோமா??.....

இதோ அவருக்காக...

எட்டூரு ஆண்டவராம்
எங்ககுல ராசாவாம்!
எழுத்தாணி பிடித்து வந்து
கதைசொல்லும் ராசாவாம்!
கும்பிடுறேன் சாமியின்னு
கதைய வந்து படிச்சபின்னே
பட்டுன்னு சொல்லிடுறேன் - நீயோ
பத்தூரு ராசா தான்!!
..............................................................................................................................




கவிக்கோ.அப்துல்ரகுமானின் வரிகளை உரக்கக் கூறிக்கொண்டு பெருமழையாய் பொழியாமல் சின்னதூரல் போட்டுக்கொண்டு நம் வீட்டு தாழ்வாரம் நனைக்கவரும் அன்பு சகோதரியின் வலைப்பூவில் சுவைகள் கொட்டிக் கிடக்குது. அதில் நான் ரசித்த ஒருசுவை கதைச் சுவை. ஒரு 15 நிமிட பேருந்து பயணத்தை எவ்வளவு அழகாக விவரிக்கிறார் பாருங்கள். ஒவ்வொரு நிறுத்தமாக நிறுத்தி அங்கே ஒரு ஏற்றத்தைக்கூறி அப்படியே நம்மையும் பயணம் கூட்டிப் போகிறார். வாருங்கள் சற்று பேருந்து பயணம் போய் வருவோம்...

இதோ அவருக்காக..

அடைமழையாய் வந்திங்கே
ஆழ்மனதை நனைத்துவிட்டாய்!
சிறுதூரல் போட்டுவந்து
சிலிர்க்கவும் வைத்துவிட்டாய்!
சிட்டுக்குருவி போலநானும்
சிறகடிச்சி வந்தேனம்மா
உன்வலையில் சிதறிகிடக்கும்
நெல்மணியாம் பதிவுகளை
கொத்தித்திங்க வந்தேனம்மா!!
............................................................................................................................




கதைசொல்லிகளில் என மனதுக்கு பிடித்த எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் போல இங்கே ஆயிரம் ஆயிரம் கதைசொல்லிகள் இருக்கிறார்கள். இங்கே நான் சிலரை மட்டும் சுட்டியிருக்கிறேன்.
மற்ற ஏனைய பதிவாளர்களுக்கு அவர்களின் கதை சொல்லும் திறனுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்.


அன்பன்
மகேந்திரன் 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது