அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள்.
முதலில் என்னை வலைச்சரத்தில் ஒரு வார ஆசிரியராக இருக்க அழைத்து இன்ப அதிர்ச்சி தந்த சீனா ஐயா அவர்களுக்கும் அறிமுக பதிவிட்ட கயல்விழி முத்துலெட்சுமி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல் பதிவு என்னைப்பற்றிய அறிமுகமாக இருக்க வேண்டும் என்பதால் இந்த பதிவு.
நான் மூன்று மாத காலத்திற்கு முன்பு பதிவுலகத்திற்குள் நுழைந்தேன். எழுத்தின் மீது இருந்த ஆசையால் எழுத வந்தவன். ஆரம்பத்தில் எனக்கு பிடித்த மூன்று இசைத்திரட்டுகள், என்னை அழவைத்த கருவாச்சி காவியம் என சில பதிவுகளை எழுதிவிட்டு யாராவது வந்து பார்ப்பார்களா? கருத்து சொல்வார்களா? என்று காத்திருப்பேன். philosophy prabhakaran அவர்களும் ரஹீம் கஸாலி(என்னை வலைச்சரத்தில் இரண்டாவது முறையாக அறிமுகம் செய்தவர்) அவர்களும் தான் முதன் முதலில் கருத்திட்டவர்கள். அவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
குறிப்பாக பிரபாகரனுக்கு நிச்சயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் 10 நபர்களாக இருந்த பின்தொடர்பவர்களை ஒரே நாளில் 38 நபர்களாக மாற்றியது அவர் என்னைப்பற்றி அவரது வலைப்பூவில் தனியாக இட்ட பதிவினால் தான். பலரிடம் என்னை கொண்டு சென்றது அவர் தான். நான் முன்னேற பலமுறை ஆலோசனை கூறியுள்ளார். இந்த வாரம் நான் எழுதப்போவது கூட அவரின் ஆலோசனையோடுதான்.
ரொம்ப நல்லவங்க என்னும் பெயரில் மூன்று பதிவுகள் இட்டுள்ளேன். அதில் ஒன்றைத்தான் திரு எல் கே அவர்கள் வலைச்சரத்தில் குறிப்பிட்டிருந்தார்(அவருக்கு என் நன்றிகள்). மேலும் நேரு குடும்பம் மற்றும் மு.க.குடும்பம் என இரு பதிவுகளும் இட்டுள்ளேன். என்னைப்பற்றி அதிகமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
இந்த ஒருவார காலத்தில் எனக்கு முன்பே வலைப்பூவை ஆரம்பித்தவர்களும் பல நாட்களாக எழுதிக்கொண்டிருப்பவர்களும் குறிப்பிடப்படுவார்கள். அதனால் அவர்கள் ஒரு சிறுவன் நம்மைப்பற்றி எழுதுகிறான் என்று எண்ணி வருந்தவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு என்றும் அன்புடன்,
உங்கள்
பச்சைத்தமிழன் பாரி தாண்டவமூர்த்தி
குறைகளோ, ஆலோசனைகளோ இருந்தால் தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் முகவரி-tpari88@gmail.com
மேலும் வாசிக்க...
வலைச்சரத்தின் இவ்வாரத்தில் பதிவர் Philosophy Prabhakaran அவர்கள் வலைப்பூக்களின் சுனாமியாக பல பதிவுகளின் இணைப்புக்களை வழங்கியுள்ளார். குறிப்பாக மருத்துவ சம்பந்தமான குறிப்புக்களின் தொகுப்பு மிக சிறப்பானது. அவருடைய உழைப்புக்கும் அனைத்து பதிவுகளின் இணைப்புகளுக்கும் வலைச்சரக்குழுவின் சார்பில் நன்றி .
------------------------------------------------------------
தொடரும் வாரத்தில் நாளை முதல் வலைச்சரம் தொடுக்க வருகிறார்
பாரி தாண்டவமூர்த்தி. பொறியியல் கல்வி பெற்று மேலும் நிர்வாகம் பற்றிய படிப்பினைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாணவர். நல்வரவு பாரி , தொடர்ந்து உங்களைக் கவர்ந்த நல்ல பதிவுகளின் இணைப்புக்களை அனைவருக்கும் அறியத்தாருங்கள் . நன்றி.
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
ஒருவழியாக என்னுடைய ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. வலைச்சரத்திலிருந்து (தற்காலிகமாக) விடைபெறுகிறேன். முதலில் நன்றி அறிவிப்புகள். எனக்கு இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்து எனது இந்த பதிவுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை அமைத்துக் கொடுத்த சீனா அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த ஒருவாரகாலத்தில் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த, பாராட்டிய, உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
முதல்முறையாக நேற்று சீனா அய்யாவுடன் பேசினேன். மட்டற்ற மகிழ்ச்சி. மீண்டுமொரு வாரம் தொடரச்சொல்லி அழைத்தார். மிகவும் வருத்தத்துடன் மறுப்பு தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை. அதற்காக சீனா அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் தொடர்ந்தால் வாசகர்களுக்கு ஒருவித சலிப்பு ஏற்பட்டு அது வலைச்சரத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதே உண்மை. எனினும், வலைச்சர விதிகள் அனுமதித்தால் மீண்டும் சில மாதங்கள் கழித்து எனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர விரும்புகிறேன்.
இது காலையிலேயே வெளியட வேண்டிய இடுகை. ஆனாலும், தமிழ்மண ரேங்க் பட்டியலுக்காக காத்திருந்தேன். தமிழ்மண பட்டியலில் இரண்டாவது இடம் பெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள். முக்கியமாக பன்னிக்குட்டி ராம்சாமியின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பெரும்பாலான இடுகைகளுக்கு தமிழ்மணத்தில் ஏழாவது வாக்கை பதிவு செய்தவர் அவராகத்தான் இருக்கும். அந்த ஏழாவது வாக்கின் அருமை பற்றி தெரியும்தானே...?
ஏராளமான வலைப்பூக்களையும் இடுகைகளையும் அறிமுகப்படுத்தியும் இன்னும் நிறைய வலைப்பூக்களை தவறவிட்ட ஒரு கவலை இருக்கிறது. நம் நண்பர்கள் தானே கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ரீதியில் நிறைய பேரை தெரிந்தே தவிர்த்துவிட்டேன். அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அடுத்து வர இருக்கும் வலைச்சர ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் சில வலைப்பூக்களை அறிமுகப்படுத்த தவறியதாக நண்பர்கள் மெயிலிலும் பின்னூட்டங்களிலும் தெரிவித்திருந்தார்கள். அந்த லிஸ்டை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நான் தவறவிட்ட தளங்களை நீங்கள் அறிமுகப்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மறுபடி ஒருமுறை சீனா அய்யாவுக்கும் நண்பர்களுக்கும் நன்றியையும் எதிர்கால வலைச்சர ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
இந்த வாரம் முழுக்க நிறைய புதிய வலைப்பூக்களையும் பயனுள்ள, ரசனையான இடுகைகளை பலவற்றையும் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று முற்றிலும் புதிய முயற்சியுடன் களமிறங்கி இருக்கிறேன்.
விஷயத்திற்கு போவதற்கு முன், என்னுடைய வலைப்பூ ஒன்றை விளம்பரப்படுத்திக்கொள்கிறேன். நான் கிட்டத்தட்ட நானூறு வலைப்பூக்களை பின்தொடர்ந்துவருகிறேன். இந்நிலையில் சமீபகாலமாக என்னுடைய DASHBOARDல் சில வலைப்பூக்களின் அப்டேட்ஸ் ஒழுங்காக வராமல் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எனவே, எனது சொந்த பயன்பாட்டிற்காக My Virtual Dashboard என்னும் இந்த வலைப்பூவினை தயாரித்தேன். இந்த வலைப்பூவில் நான் பின்தொடர்ந்து வரும் தளங்களின் இடுகைகள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இதையே நான் இப்போது எனது DASHBOARD ஆக பயன்படுத்தி வருகிறேன். விருப்பப்பட்டால் நீங்களும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
சரி, தலைப்பு கொண்ட கருவுக்கு போவோம். இதுவரைக்கும் ஒவ்வொரு வலைப்பூக்களாக அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தேன். இப்போது தங்க முட்டையிடும் வாத்து ஒன்றினை உங்களுக்கு பரிசளிக்க இருக்கிறேன்.

அதுதான் உலவு தளத்தின் இந்த ப்ரோபைல் பக்கம். இங்கே உலவு தளம் பின்தொடரும் அனைத்து வலைப்பூக்களும் இணைப்புகளோடு அகர வரிசைப்படி உள்ளன. இதுதான் ரகசியம், இங்கிருந்து தான் நிறைய புதிய வலைப்பூக்களை தேடி எடுக்கிறேன். நேற்றிரவு வரை இந்த ப்ரோபைல் பக்கத்தில் எல்லாம் சரியாக இருந்தது. திடீரென இன்று காலை வலைப்பூக்களின் லிஸ்ட் காணாமல் போயிருந்தது. பதறியடித்து உலவு நிர்வாகத்திற்கு மெயில் அனுப்பி, எங்களுக்காக மீண்டும் ப்ரோபைல் பக்கத்தின் செட்டிங்க்ஸை மாற்றும்படி வேண்டுகோள் வைத்தேன். எனது அந்த வேண்டுகோளை ஏற்று மீண்டும் வலைப்பூக்களின் லிஸ்டை கொண்டுவந்த உலவு தளத்திற்கு 2500 நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். என்ன புரியலையா...? இந்த லிஸ்டில் மொத்தம் 2500 வலைப்பூக்கள் உள்ளன. மேலும், இந்தப்பக்கம் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். இந்த பக்கத்தை புக்மார்க் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பயனுள்ளதாக இருக்கும். மேலும், இனி வலைச்சர ஆசிரியராக வருபவர்களுக்கு கண்டிப்பாக இது உதவி செய்யும்.
இந்த 2500 வலைப்பூக்களின் பெயர்களையும் இணைப்புகளையும் காப்பி பேஸ்ட் கூட செய்திருக்கலாம். ஆனால் இப்படி ஒரு பெட்டகத்தை நமக்கு தந்த உலவு தளத்தை பெருமைப்படுத்தும் வகையில் இந்த இணைப்பும், தலைப்பும். யாராவது இந்த இடுகைக்காக நன்றி சொல்ல விரும்பினால் உலவு நிர்வாகத்திற்கு உங்கள் நன்றிகளை தெரிவியுங்கள்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
எத்தனையோ வலைப்பூவை பார்க்கிறேன், படிக்கிறேன். ஆனாலும் சில பதிவர்களின் எழுத்துக்களை படிக்கும்போது மட்டும் எப்படித்தான் இந்தமாதிரி எல்லாம் எழுதுறாங்களோ...? கொலையா கொல்றாங்களே... என்றெல்லாம் யோசிக்கத்தோன்றும். அப்படி என்னை பொறாமைப்பட வைத்த சில பதிவர்கள் பற்றிய சிலாகிப்பு இடுகை இது. மிகவும் ரசித்து எழுதுவதால் இந்த ஒரு இடுகையில் மட்டும் படங்களை இணைக்க விரும்புகிறேன்.

பதிவுலகம் வந்த புதிதில் இருந்தே நான் சேட்டையின் தீவிர விசிறி. ஒரு வரிச்செய்தியை வைத்துக்கொண்டு அதனினை நகைச்சுவை புனைவாக எழுதும் அந்த நடை... சான்ஸே இல்லை. உ.பியில் மாயாவதி செய்த சில்லறைத்தனங்கள் பற்றி எழுதிய காக்கா... காக்கா... என்ற கட்டுரை இதற்கு ஒரு நல்ல உதாரணம். ரயில் பயண அனுபவங்கள் குறித்த இவரது எழுத்துக்களை அதிகமாக ரசிப்பேன். அவ்வாறான பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை பற்றிய பயணத்தில் ஓர் நாள்..! கட்டுரை நெகிழ வைத்தது. அப்பாவின் மேஜைவிளக்கு என்ற பெயரில் எழுதிய புனைவு பிரமாதப்படுத்தியது. அவ்வப்போது நெல்லைத் தமிழ்நடையில் எழுதும் இடுகைகள் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும். அப்புறம், சேட்டை டிவியை மறக்க முடியுமா...? இட்ஸ் கிரேட்.

கடவுளுக்கே பயோடேட்டா எழுதியவர். இவருடனான இணக்கத்தை இவரை சந்திப்பதற்கு முன், சந்தித்த பின் என்று இரண்டாக பிரிக்கலாம். இவரது இடுகைகளை காட்டிலும் இவரையே அதிகம் ரசிக்கிறேன். கே.ஆர்.பி பேச ஆரம்பித்தால் நாள் முழுக்க உட்கார்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவரை சந்தித்தபிறகு ஏற்கனவே படித்த இவரது இடுகைகளை இப்போது மீண்டும் படிக்கிறேன். ஊரே குடியரசு தின வாழ்த்துக்கள் என்று டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டிருந்த வேளையில் குடியரசுதினக் கொண்டாட்டங்களும் கிழிந்த கோவணங்களும்... என்ற இடுகை எழுதி என் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். அங்காடித்தெரு படம் பார்த்துவிட்டு ரங்கநாதன் தெரு பற்றி எழுதிய இடுகை நெகிழ்ச்சி.

அது ஒரு கனாக்காலம். அப்போது Followers Widget, Dashboard, தமிழ்மணம் என்று ஏதுமறியாத காலம். ஒருசில வலைப்பூக்களை மட்டும் புக்மார்க் செய்து வைத்திருந்து படிப்பேன். அதிலொன்று அண்ணன் “அ.ராசா” அவர்களுடையது. கோவாலு, மனைவி என்று இடுகைகளில் வரும் கேரக்டர்களை அதிகம் ரசிப்பேன். போடா கிறுக்குப் பயலே என்று தாய்ப்பாசத்தின் மகத்துவத்தை சொல்லும் இந்த இடுகையை படித்தால் உங்கள் கண்களில் கண்ணீர் துளிர்ப்பதை தவிர்க்க முடியாது. சேட்டைக்காரன் போலவே இவரும் பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை பற்றி பெயர் குறிப்பிட முடியாத ஒரு இடுகை எழுதி அதிர வைத்தார். கொஞ்சம் நகைச்சுவையாக என்று பார்த்தால் ஆத்தா... நான் பிரபல பதிவர் ஆயிட்டேன்…. என்ற இடுகையை சொல்லலாம். மிஸ் பண்ணிடாதீங்க...

முதன்முதலாக காமன் வெல்த் ஊழல், களவாணிப்பய கல்மாடி பற்றி கல் மாடி சாமியே காப்பாத்து !! என்னும் இடுகையின் மூலம் ஈர்க்கப்பட்டேன். கூட்டு களவாணிகள் என்று உலகநாடுகள் குறித்து எழுதியிருந்த இடுகையும் இவரது தெளிவான சிந்தனையை ரசிக்க வைத்தது. இவரது இடுகைகளைவிட பின்னூட்டங்களை வெகுவாக ரசிப்பேன். சமயங்களில் இவரது சமூக கோப வரிகளை படிக்கும்போது நாமெல்லாம் எதற்காக பதிவுலகில் இருக்கிறோம் என்றெல்லாம் தோன்றும். சில சமயங்களில் இசை பற்றிய இடுகைகள் எழுதுவார். எனினும் நான் ரசிப்பதெல்லாம் அரசியல், சமூகம் சார்ந்த இடுகைகள் தான். இது தவிர்த்து குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சைனாக்கார சனியன் – அஜினோமோட்டோ என்ற இடுகையை கூறலாம்.

ஒட்டுமொத்தமாக வெளியூர்க்காரனின் இடுகைகள் எல்லாமே பிரமாதமாக இருக்கும் என்றாலும் சைந்தவி குறித்து எழுதப்பட்ட இடுகைகளின் தீவிர ரசிகன் நான். ஒரு காலத்தில் I love you - by Sainthavi என்ற இந்த இடுகையையும் மீ டூ சைந்தவி...! - சைந்தவி புருஷன் என்ற இந்த இடுகையையும் தினமும் ஒருமுறையாவது எடுத்து மீண்டும் மீண்டும் படிப்பேன். என்ன ஒரு ரொமாண்டிக்கான இடுகைகள். நமக்கொரு சைந்தவி கிடைத்தால் நல்லா இருக்குமே என்று ஏங்கவைக்கும் இடுகைகள் அவை. அப்புறம் ஒருநாள் சைந்தவி கெடைச்சிட்டா... ன்னு ஒரு இடுகை எழுதி மீண்டும் எனது பொறாமைத் தீயை கிளறிவிட்டார். இப்போது அதிகம் எழுதுவதில்லை எனினும் நான் சைந்தவி குறித்த அடுத்த இடுகைக்காக காத்திருக்கிறேன்.

பர்சனலாக இவரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அவருக்கும் நான் என்ற ஒருவன் இருப்பதே தெரியாது என்றே எண்ணுகிறேன். ஆனாலும் அவருடைய தீவிர ரசிகன் நான். கேரக்டர் இடுகைகளை அனு அனுவாக ரசித்து படிப்பேன். கேரக்டர் இடுகைகளில் இது, அது என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல மனம் வரவில்லை. கேரக்டர் என்ற லேபிளுக்கு கீழ் இருக்கும் அனைத்துமே பாதுகாத்து வைத்து படிக்க வேண்டியவையே. பின்னர் ஒருநாள் நானும் கேரக்டர் இடுகை ஒன்றினை எழுத முயன்று தோற்றுப்போனேன் என்றே சொல்லவேண்டும். மேலும் பேச்சுவழக்கில் எழுதும் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த லிஸ்டில் சேட்டைக்காரனுக்கு அடுத்தபடியாக என்னை அதிகம் ஈர்த்தவர் என்றால் அது எஸ்கா தான். “அப்புறம்” என்ற ஒரு வார்த்தையின் மகத்துவத்தை நான் உணர்ந்துக்கொண்டதே இவரது இடுகைகளை படிக்க ஆரம்பித்தபின்பு தான். அதன்பிறகு எனது இடுகைகளிலும் ஆங்காங்கே அப்புறம் பயன்படுத்த ஆரம்பித்தேன். அப்பாடா டேட்டா கார்ட்... அப்புறம் சாருவின் "தேகம்" ஒரு இடுகையின் தலைப்பு என்னை அதிகம் கவர்ந்ததென்றால் அது இதுதான். இதிலென்ன இருக்கிறது என்றுகூட சிலருக்கு தோன்றலாம். இவர் எதை எழுதினாலுமே ரசிப்பேன் இருந்தாலும் மைனா - ஒரு புலம்பல்ஸ் என்ற திரை விமர்சன வகையறா இடுகையும், புத்தகக் கண்காட்சி அனுபவங்கள் குறித்து எழுதிய இடுகையும் அதிகம் கவர்ந்தன.
இவரும் தேஜூ உஜ்ஜைனும் ஒருவரே என்று நேற்றுதான் தெரிந்துக்கொண்டேன். உண்மையா எஸ்கா...???
முன்னவர் போலவே இவரும் தீவிர சுஜாதா விசிறி. இவர் எழுதிய கதைகளை எல்லாம் படித்துவிட்டு நாள் முழுக்க அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பேன். அவரே இவையெல்லாம் கற்பனையே என்று குறிப்பிட்ட பின்னரும் நிஜவாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்க வைக்கும். ஜடைமாட்டி... என்றொரு கதையின் மூலமாக முதன்முறை எனக்கு அறிமுகமானார் என்றேண்ணுகிறேன். அப்போதிலிருந்து ஜடைமாட்டியை பார்க்கும் போதெல்லாம் அந்தக்கதை தான் நினைவுக்கு வரும். அப்புறம் க்ரிப்டோகிராபியை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு ரகசியம் என்ற சிறுகதையும் அவ்விதமே மனம் கவர்ந்தது. காதலிப்பது எப்படி...? இடுகையும் ஜனரஞ்சகமான வகையில் ரசிக்க வைத்தது.
இன்னும்கூட சிலர் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி இங்கே எழுதமுடியாத சூழலில் இருக்கிறேன். பிறிதொரு நாளில் எனது தளத்தில் எழுதுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் நடுநிலை விமர்சனங்களை மறந்துபோய் நாட்கள் நகர்ந்த நிலையில் இப்பொழுதெல்லாம் தரமான, நடுநிலையான விமர்சனங்கள் தருவது பதிவர்கள்தான் என்று சொன்னால் மிகையாகாது. ஒரு திரைப்படம் வெளிவந்தால் பிரபல பதிவர்கள் மட்டும்தான் என்றில்லாமல் பலதரப்பட்ட பதிவர்களிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. சில படங்கள் வெளிவரும்போது சூடான விவாதங்கள், கருத்து மோதல்கள் கூட வருகின்றன. அவ்வாறாக அதிகம் பரிட்சயமில்லாத, ஆனால் நயமான விமர்சனங்கள் எழுதும் பதிவர்களைப் பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.
மூன்றாண்டு காலமாக பதிவுலகில் இருப்பவர் என்றாலும் இன்னமும் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கும் ஒரு பதிவர். இவர் எழுதியுள்ள விமர்சனங்களில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் விமர்சனத்தை சிறப்பானது என்று கூறுவேன். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தையும் தனது அழகான எழுத்துநடையில் விமர்சித்திருக்கிறார். சமீபத்தில் எழுதிய யுத்தம் செய் விமர்சனமும் உங்கள் பார்வைக்காக...
எல்லோரும் புதுப்படங்களுக்கு விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் போது இவர் மட்டும் புது ஸ்டைலில் மனம் கவர்ந்த பழைய படங்களைப் பற்றி விமர்சனம் எழுதுகிறார். இவ்வாறாக தில்லுமுல்லு படத்திற்கும் ரஜினியின் பில்லா படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார் பாருங்கள். கமல் படங்களில் மைக்கேல் மதன காம ராஜன் படத்திற்கும் நாயகன் படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார்.
வியக்கவைக்கும் வித்தியாசமான பர்சப்ஷன் கொண்ட பதிவர். யுத்தம் செய் புதிய யுத்தமல்ல என்ற தலைப்பில் தொட்ட கதை சுட்ட கதையை விவரித்திருக்கிறார். மேலும், அயன் படம் பார்த்துவிட்டு அய்யோ அம்மா என்று புலம்பியதைக் கேளுங்கள். இத்தகைய விமர்சனங்கள் எழுதியிருப்பவர் சுந்தர்.சியின் நகரம் படத்தை அசத்தலான மறுபக்கம் என்று வியப்பது வியப்பாகவே இருக்கிறது.
அரிதாக சில படங்களுக்கு மட்டும் விமர்சனம் எழுதுபவர் எனினும் தரமான வகையில். ஆடுகளம் படத்திற்கு விமர்சனம் எழுதியபோது தான் முதல்முறையாக இவரது விமர்சன நடையை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படியே கொஞ்சம் பழைய பக்கங்களை புரட்டிப் பார்த்ததில் வ குவாட்டர் கட்டிங் படத்திற்கும் எந்திரன் படத்திற்கும் தனது எளிமையான எழுத்துக்களில் விமர்சனம் எழுதியிருந்தார்.
இவர் ஒரு ஆல்-ரவுண்டர் என்று சொல்லலாம். மிஷ்கினின் யுத்தம் செய் படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். இன்னும் தேடிப் பார்த்ததில் பாலிவுட் படமான குஜாரிஷ் படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார். அதிமுக்கியமாக பார்த்தே தீரவேண்டிய படவரிசையில் நாம் தவறவிட்ட The Shawshank Redemption படத்திற்கும் விமர்சனம் எழுதியிருக்கிறார்.
மீண்டுமொரு திறமையான ஆல்-ரவுண்டர். சமீபத்தில் எழுதியது பயணம் – விமர்சனம். நிறைய பாலிவுட் படங்கள் பற்றி எழுதியிருக்கிறார் அவற்றுள் No One Killed Jessica விமர்சனத்தை முக்கியமானதாக குறிப்பிடலாம். ஹாலிவுட் படமான Tangled 3D விமர்சனத்தையும் கொஞ்சம் பாருங்கள். கூடிய விரைவில் உலகப்படங்களையும் ஒரு கை பார்ப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட ஐந்தாண்டு காலமாக பதிவுலகில் இருப்பவர், எனினும் சமீபத்தில் எந்திரனின் முன்னோடியான Bicentennial Man படத்திற்கு விமர்சனம் எழுதியபோது தான் இவரது தளத்தைப் பற்றி அறிந்துக்கொண்டேன். சமீபத்தில் வெளிவந்த நடுநிசி நாய்கள் படத்தைப் பற்றிய இவரது கருத்தைக் கேளுங்கள். இவரும் நாம் தேடிக்கொண்டிருந்த The Shawshank Redemption படம் பற்றி எழுதியிருக்கிறார்.
இவரும் ஒரு உலகசினிமா ஆர்வலர். உள்ளூர் சினிமா என்று பார்த்தால் எந்திரன் படத்தின் CGக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார். பல உலக சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதியிருந்தாலும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தக்கூடிய இடுகை என்றால் After Shock என்ற சீனப்படத்தை குறிப்பிடலாம். சினிமா தவிர்த்து இவர் எழுதிய இடுகைகளில் விசித்திரங்கள் அதிகம் பாதித்தது.
வித்தியாசமான சில உலகப்படங்களுக்கு விமர்சனம் எழுதி நம் கவனத்தை ஈர்க்கிறார். சமீபத்தில் எழுதிய Kundun என்னும் ஆங்கிலப்பட விமர்சனத்தின் வாயிலாக தள அறிமுகம் கிடைத்தது. மேலும் Samsara, Himalaya என்று திபெத்திய படங்கள் இரண்டிற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். இங்கே இணைப்பு கொடுத்துள்ள மூன்று படங்களுக்குமே ஒரு ஒற்றுமை இருக்கிறது தெரியுமோ...?
பதிவுலகிற்கு புதியவர். இதுவரை எழுதியுள்ள ஆறு இடுகைகளில் ஐந்து உலக சினிமா பற்றியவை. டெத் நோட் என்ற ஜப்பானிய பட விமர்சனத்தையும், ரெக் என்ற ஸ்பானிஷ் பட விமர்சனத்தையும் தவறவிடாதீர்கள். சினிமா தவிர்த்து நிலவில் கால்வைத்தது உண்மையா..? என்னும் இடுகை பிரமாதப்படுத்துகிறது. எழுத்துப்பிழைகளை மட்டும் தவிர்த்தால் நலம்.
போனஸ்:
டிஸ்கி: இன்றைய இரண்டாவது இடுகையாக வலைச்சரத்திற்காக நான் மிகவும் ரசித்து எழுதி ஒரு இடுகையை தயார் செய்து வைத்திருக்கிறேன்... மற்றபடி கன்டென்ட் சர்ப்ரைஸ்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
இன்றைக்கு ஏன் இந்த மூன்றாவது இடுகை என்று கேட்டீர்களானால் போட்டு வைத்திருந்த திட்டத்திற்கு அப்பாற்பட்டு நண்பர் இக்பால் செல்வன் வேர்ட்பிரஸ் பதிவர்கள் பற்றியும் எழுதவேண்டுமென அன்போடு கேட்டுக்கொண்டார். எனவே கூடுதலாக இந்த இடுகை அவசியமாகிவிட்டது.
சரி, அப்படியே இன்றைய அறிமுகங்களை பார்ப்போம் என்றால் இவர்கள் ப்ளாக்கர் வட்டத்திற்கு வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் வேர்ட்பிரஸ் வட்டத்தை பொறுத்தவரையில் அறிந்தமுகங்களும் பிரபலங்களுமே. (அதென்ன ப்ளாக்கர் வட்டம் – வேர்ட்பிரஸ் வட்டம் பாகுபாடு என்றெல்லாம் கேட்கப்பிடாது). தொழில்நுட்பரீதியாக வேர்ட்பிரஸ் பதிவர்களைப் பின்பற்றுவதில் இருக்கும் சிக்கலே இந்நிலைக்கு காரணம். ஓகே கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்...
சமூகக்கோபம் கலந்த கட்டுரைகளை வழங்கிவரும் சூடான வலைப்பூ. பரிசோதனை எலிகளாக மக்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று ஏன் கூறுகிறார்கள் என கேளுங்கள். பேராண்மை பாடம் குறித்த அவரது பார்வையை மயில் வாகனன் பகிர்கிறார். நான் கடவுள் இடுகையில் சீரியஸாக ஒரு கருத்து சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்.
கவிதை, கட்டுரை, சிறுகதை, தொழில்நுட்பம் என்று கலந்துகட்டி அடிக்கும் ஆல்-ரவுண்டர். படைப்பாளி என்று பெயர் வைத்துக்கொண்டு சைக்கோ என்று கவிதை எழுதியிருக்கிறார் பாருங்கள். குவாட்டர் கோவிந்தன் பற்றிய சிறுகதை யதார்த்தம். நீங்கதான் ஹீரோ என்று நவீன தொழில்நுட்பம் பற்றி சொல்லித்தருகின்றனர்.
பெரும்பாலும் அனைவருக்கும் தோழர்.மதிமாறன் அவர்களின் இந்த வலைப்பூவைப் பற்றி தெரிந்திருக்கும். இங்கே சூடான இடுகைகள் கிடைக்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் பற்றி இவரது பார்வை. அப்படியே பேராண்மை படம் குறித்தும் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். காதலர் தின சிறப்பு இடுகை இங்கே.
இது ஒரு ட்ரைலர் மட்டுமே. இன்னும் ஏராளமான வேர்ட்பிரஸ் பதிவர்கள் மீது நம் பார்வை படாமல் இருக்கிறது. இனி வரும் வலைச்சர ஆசிரியர்கள் வேர்ட்பிரஸ் பதிவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்து இப்போதைக்கு விடைபெறுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...
(கவிஞர்கள் அறிமுகம் – 02)
வணக்கம் மக்களே...
நேற்றைய தொடர்ச்சியாக இன்றும் சில கவி பாடும் பதிவர்களை காண்போம்.
ட்விட்டரில் நண்பர் ஒருவர் மூலமாக இவரது தளத்திற்கு அறிமுகம் கிடைத்தது. காதல் கவிதைகள் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட். காதல் தேவதை என்னும் இடுகையில் தனது காதலியைப் பற்றி சிலாகித்திருக்கிறார் பாருங்கள். ஃபீனிக்ஸ் ஜாதி என்னும் கவிதையில் காதல் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்றது என்று கூறுகிறார். ஆனால் மற்றொரு கவிதையில் காதல் ஒரு குறைப் பிரசவக்குழந்தை என்று குறிப்பிடுகிறார்.
ஆறு வலைப்பூ வைத்திருப்பவர் என்றெண்ணும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. அவற்றில் கவிதைக்காக அர்ப்பணிக்கப்பட்டது இந்த வலைப்பூ. இவரும் முன்னவரைப் போல தன் கனவு நாயகி குறித்து ஒரு கவிதை வடித்திருக்கிறார். சிகரெட், விலைமாதர் போன்றவற்றைப் பற்றி இவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள். மேலும் ஒரு வரிக்கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கும் புதுக்கவிதைகள் கலக்கல்.
இவருக்கு அறிமுகம் தேவையில்லை. றோஜாக்கள், தகவல் தொழில்நுட்ப செய்திகள் ஆகிய வலைப்பூக்களின் உரிமையாளர் தோழி பிரஷாவின் மற்றொரு வலைப்பூ இது. படங்களுடன் கூடிய கவிதைகள் இந்த வலைப்பூவின் ஸ்பெஷாலிடி. நட்பின் பெருமையையும், ஒருதலைக்காதலின் மகத்துவத்தையும் கவிதையாய் சொல்லியிருக்கிறார் பாருங்கள். மேலும், மறுமணம் பற்றிய தனது எண்ணத்தை மூன்றே வரிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறார்.
இவரும் ஒரு பெண் கவிஞர். கவிதைகள் மட்டுமல்லாமல் சிறுகதைகள் கூட எழுதுகிறார். பருவம் தப்பிய மழை என்ற விவசாயிகள் குறித்த கவிதை நெகிழ்ச்சி. குறுங்கவிதைகள் என்ற பெயரில் எழுதியிருக்கும் ஹைக்கூ கவிதைகள் ரசிக்க வைக்கின்றன. கடவுளும் காருன்யமும் என்ற கவிதையில் மிகவும் சீரியஸாக ஒரு மேட்டர் சொல்லியிருக்கிறார். அது என்னவென்று பாருங்களேன்.
பெரும்பாலும் காதல் கவிதைகள். அவ்வப்போது சிறுகதைகளும் எழுதுகிறார். இவர் எழுதிய காதல் கவிதைகளில் மழையனப் பெய்தாய் நீ…! என்னும் கவிதையை நான் அதிகம் ரசித்த கவிதை என்று சொல்லுவேன். விசித்திரி என்னும் இடுகையில் தலைப்பிற்கேற்றார்போல வித்தியாசமாக ஒரு மரபுக்கவிதை எழுதியிருக்கிறார். மீன் தொட்டி – மூன்று கவிதைகள் என்ற இடுகையும் ரசிக்க வைக்கின்றன.
இயற்கை, காதல், சமூகம் என்று வகை வகையாக கவிதைகள் வடிக்கிறார். இவரது கவிதைகளுக்கு இணையாக அதற்கேற்ப இணைக்கும் படங்களும் ரசிக்க வைக்கின்றன. புத்தக வழி உறக்கம் என்னும் கவிதை தலைப்பைப் போலவே இதமாக இருக்கிறது. தேவதை என்னும் கவிதையில் தோழியைப் பற்றியும் கறிகடையின் விளிம்பில் என்னும் கவிதையில் கோழியைப் பற்றியும் எழுதியிருக்கிறார் பாருங்கள்.
பதிவுலகிற்கு மிகவும் புதியவர் என்று சொல்லலாம். இன்னும் ஒருமாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. இவர் எழுதியுள்ள கவிதைகளில் காதல் வியாபாரம் என்னுடைய பேவரிட். நட்பு என்னும் சொல்லுக்கு நான்கே வரிகளில் விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள். யாரை இவர் சர்வாதிகாரி என்று சொல்கிறார் தெரிந்துக்கொள்ள இந்தக் கவிதையை படியுங்கள்.
கவிஞர்கள் அறிமுகம் இந்த இடுகையோடு நிறைவடைகிறது. சீனியர் பதிவர்கள் என்பதாலும் நமது நண்பர்கள்தானே என்பதாலும் சிலரை தெரிந்தே தவறவிட்டேன். அவர்கள் மன்னித்தருள வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...
வணக்கம் மக்களே...
திரைவிமர்சனங்கள் எழுதும் பெண்பதிவர் என்ற முறையில் இவர்மீது அதிகப்படியான மரியாதை உள்ளது. தமிழ் சினிமா மட்டும் என்றில்லாமல் உள்ளூரிலிருந்து உலகம் வரை பொளந்து கட்டுகிறார். தமிழ் சினிமா விமர்சனங்களில் பூவும், பாலிவுட் விமர்சனங்களில் தாரே ஜமீன் பர் படமும், ஹாலிவுட் விமர்சனங்களில் அவதாரும் அதிகம் ரசிக்க வைத்தன.
இவரும் ஒரு ஆல்-ரவுண்ட் பர்பாமன்ஸ் காட்டும் பென்பதிவரே. சவால் சிறுகதை போட்டிக்காக இவர் எழுதியிருக்கும் சவாலே சமாளி சிறுகதை பிரமிக்க வைக்கிறது. இங்கே ஒரே இடுகையில் புத்தக விமர்சனம், எழுத்தாளர் பாலகுமாரனின் வலையுலக அபிப்ராயம் கடி ஜோக் என்று கதம்பம் தொகுத்திருக்கிறார் பாருங்கள்.
இவர் ஒரு பதிவர் அல்ல, எழுத்தாளர் என்றுதான் சொல்லவேண்டும். அது ஏன் என்பது இவருடைய வலைப்பூவில் நுழைந்ததும் உங்களுக்கே புரியும். இவரது இடுகைகளில் துரு துரு துப்பாண்டி எனும் இடுகை என்னுடைய பேவரிட். மேலும், 2010ம் ஆண்டில் இவரது ஹீரோ யாரென்று சொல்கிறார் கேளுங்கள்.
டிஸ்கி 1: பெயர் குறிப்பிட மறந்த பதிவுலக சகோதரிகள், தாய்மார்கள் அடியேனை மன்னித்தருள வேண்டுகிறேன்.
டிஸ்கி 2: எங்கேயாவது மேடம், அக்கா வகையறா சொலவடைகளை தவற விட்டிருந்தால் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...
(கவிஞர்கள் அறிமுகம் – 01)
வணக்கம் மக்களே...
இன்றைய அறிமுகங்கள் அனைவரும் கவிதை சொல்லும் பதிவர்கள். மேலும் இவர்களில் சிலர் இப்போது வாடிக்கையாக பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் அவர்களது கவிதைகள் என்னை கவர்ந்ததால் சம்பந்தப்பட்ட இடுகைகளை முன்னிலைப்படுத்துகிறேன். அவர்கள் மீண்டும் பதிவுலகம் திரும்ப வேண்டுமென்பதே எனது விருப்பம்.
யோகா, பலே பிரபு என்ற இருவர் இந்த வலைப்பூவின் உரிமையாளர்கள். பலே பிரபு ஏற்கனவே நமக்கு பரிட்சயமானவர். யோகா கிபி கவிதைகள் என்ற லேபிளின் கீழ் எழுதியிருக்கும் காதல் கொஞ்சம் காரம் கொஞ்சம் என்ற கவிதை தலைப்பிர்கேற்றபடி இருந்தது. மேலும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கவிதையும் அவரது ஐம்பது வயது தந்தை பற்றிய கவிதையும் நெகிழ வைக்கின்றன.
காதல், காதல், காதல் மட்டுமே இவரது கவிதைகளில் தென்படுகிறது. மேலே குறிப்பிட்ட பதிவுலகத்தில் இருந்து விலகியிருப்பவர்களில் இவரும் ஒருவர். என் இனிய இனியா என்று அவரது காதலியை நினைத்து உருகுகிறார். ஊமைத்தொலைபேசி...! என்ற பெயரில் வித்தியாசமாக ஒரு காதல் கவிதை வடித்திருக்கிறார் பாருங்கள். இதய நோய் என்றிவர் எழுதியிருப்பது மருத்துவம் சார்ந்த இடுகை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்.
இவரைப் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை. மரபுக்கவிதை, ஹைக்கூ கவிதை என்று ஆல்-ரவுண்ட் பெர்பாமான்ஸ் காட்டுபவர். கனவுகள் என்ற பெயரில் நம் பழைய நினைவுகளை கிளறிவிடும் விதமாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார் பாருங்கள். அதுதான் என்னுடைய பேவரிட். மேலும் இவர் ஹைக்கூ கவிதைகள், காதல் வெண்பாக்கள் என்ற தலைப்புகளின் கீழ் எழுதியிருக்கும் கவிதைகள் அட போட வைக்கின்றன.
பெயரைக் கேட்டாலே விஜய் டிவி காத்துகருப்பு நிகழ்ச்சிதான் நினைவுக்கு வருகிறது. இவர் ஒரு ஆசிரியர். இவருடைய கவிதைகள் கொஞ்சம் மற்ற கவிதைகளை நையாண்டி செய்யும் விதமாக நகைச்சுவையாக எழுதியிருப்பார். கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!! என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கும் அத்தனை கவிதைகளும் அந்த ரகத்தில் குபீர் சிரிப்பை வரவழைக்கக்கூடியவை. தன் மகனால் ஏற்பட்ட வலி என்னவென்று நம்மோடு பகிர்ந்திருக்கிறார் பாருங்கள்.
இவர் கவிதைகள் மட்டுமல்லாமால் கட்டுரைகள், மருத்துவம் என்று பல துறைகளிலும் முத்திரை பதிப்பவர். இவர் சுயநலம் என்ற பெயரில் எழுதியுள்ள கவிதை என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் ஒன்று. மேலும் தற்கொலை பற்றி பிரமாதமாக ஒரு கவிதை சொல்கிறார் கேளுங்கள். இதயம் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள கவிதையும் நம் இதயத்திற்கு இதமாகவே இருக்கிறது.
இவர் தனது கோபம், கவலை, மகிழ்ச்சி என்று எல்லாவற்றையும் கவிதையாக வெளிப்படுத்துபவர். மல்லிகைப்பூவுக்கும் ரோஜாப்பூவுக்கும் ஏற்பட்ட போட்டியை பெருமை என்ற கவிதையில் அழகாக சொல்லியிருக்கிறார். நடப்பு செய்திகளை மையமாக வைத்து எழுதிய ஊழல் என்ற கவிதை சிந்திக்க வைக்கிறது. அவளின் வருகை என்று குட்டியாக இவர் எழுதிய காதல் கவிதையும் கடுகாக காரம் தருகிறது.
ஓவியங்களில் மாடர்ன் ஆர்ட் எப்படியோ அதுபோல இருக்கின்றன இவருடைய கவிதைகள். எனது கவிதையின் கடைசி வரி என்று இவர் எழுதியிருக்கும் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுதவிர்த்து இன்னும் நிறைய கவிதைகள் பிடித்திருந்தன. அவற்றுள் அதிமுக்கியமாக சாத்தான் குகை மற்றும் இனியுமொரு பாதை என்ற தலைப்புகளின் கீழுள்ள கவிதைகளை கூறலாம்.
வசன கவிதை என்ற இந்த வலைப்பூற்கு மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகள் தான் இன்ஸ்பிரேஷன் என்று கூறுகிறார். தந்தை பெரியார் பற்றி இவர் பகுத்தறிவு பகலவன் என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. மேலும் எயிட்ஸ் எனும் எமன் என்று விழிப்புணர்வூட்டுகிறார். தன் காதலி மழையில் நனைந்த அழகை ரசித்தபடி என் தேகத்தில் சந்தேகம்...! என்ற கவிதையை எழுதியிருக்கிறார் பாருங்களேன்.
கவிஞர்கள் லிஸ்ட் இன்னும் நிறைவடையவில்லை. மீண்டும் நாளை மாலை கவிஞர்கள் குழுவோடு வருகிறேன்.
என்றும் அன்புடன்,
N.R.PRABHAKARAN
மேலும் வாசிக்க...