07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 3, 2013

மனசு பேசுகிறது - குலவைப்பாட்டு

எல்லோருக்கும் வணக்கம்.

பதிவுலகின் நண்பர்களை அறிமுகம் செய்யும் படலம் ஆரம்பம்... இனி ஒரு வாரத்துக்கு அறிமுகங்களின் ஆராவாரம்தான்...


கிராமங்களில் நடவின் போதும், திருவிழாக்களின் போதும் குலவைப் பாடல்கள் பாடுவார்கள். பாடுபவரின் குரல் அவ்வளவு அழகாக இருக்கும். ரோட்டோரத்தில் நடவு நடும் போது ரோட்டில் துண்டை விரித்து அதன் மேல் நாற்று முடியை வைத்து கேலி முறைக்காரர்கள், ஊரின் பெரிய மனிதர்கள் போகும் போது குலவைப் பாடலைப் பாடி பணம் போட வைத்து விடுவார்கள். எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் செவ்வாயின் போது தினமும் சாமி கும்பிடும் போது குலவைப்பாடல் பாடுவார்கள். சித்தப்பா பெண் அவ்வளவு அழகாகப் பாடும். ஆத்தா குலவை போடுங்கன்னு சொன்ன உடனே
'தெற்குத் தெருவிலே
தேரோடும் வீதியிலே
தேங்காய் குலைபறிச்சு
வாறாளாம் மாரியாத்தா'  

அப்படின்னு கணீருன்னு பாடும்.  பாட்டை நிப்பாட்டும் போது மற்றவர்கள் 'உலுலுலு'ன்னு குலைவை போடுவார்கள். கேட்பதற்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். இந்த முறை என் மனைவியின் அம்மா ஊரில் திருவிழாவிற்குச் சென்றபோது ஒரு சின்னப்பெண்... பத்து வயது இருக்கும்... அவ்வளவு அருமையாக மைக் இல்லாமல் கணீர்க்குரலில் பாடியதைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. இன்னும் கிராமங்களில் குலவைப்பாடல் இளவயதினரிடமும் தொற்றிக் கொண்டிருப்பது சந்தோஷமான விஷயம்தானே... எங்க ஸ்ருதி மொளக்கொட்டில் எல்லாக் காலும் போட்டு கொட்டும்... எனக்கே ஆச்சர்யமாக இருக்கும்.. நான் மொளக்கொட்டப் போறது இல்லைங்கிறது வேற கதை... இதைப் போல குலவைப்பாடல் நிறைய இருக்குங்க... இன்னும் சில உங்கள் பார்வைக்காக...
‘மதுவாம் மதுக்குடமாம்
மதுக்கேத்த தெம்மாங்காம்
மதுவ இறக்கி வைக்க
மனங்குளிர்வா மாரியாத்தா...’
***
‘எல்லாரு வீட்டுலயும் எண்ண
ஊத்தி விளக்கெறியும்
மாரியாத்தா வாசலிலே
எளநித்தண்ணி நின்னெறியும்...’

இப்படி நிறையப் பாடல்களைச் சொல்லமாம்... எங்க ஊர் மாரியம்மன் கோவில் கும்பாவிஷேகம் ஆவணி-15ல் வருகிறது. அதான் அம்மனின் குலவைப்பாடல் பகிர்வு. அப்புறம் இப்பவே சொல்லிக்கிறேன்... ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு பதிவருக்கு ஒரு இணைப்புக் கொடுத்தாலும் அங்கிருக்கும் பிடித்த பகிர்வுகளையும் படித்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்...


"...யோசனையோடவே போறியளே...ஏப்பு...மழை பேயுறது கூடவா தெரியல...செத்தவடம் நின்னுட்டுப் போங்கப்பு....வாணியவீட்டு முருகாயி பேத்தி கத்துன கத்துல நான் கிறுக்கோண்டே போயிட்டேன்....ஏத்தா.. ஏத்தா..இருக்கட்டுமத்தா...மழை வேணும்னுதானேத்தா காத்துக் கிடக்கேன்...பெய்யட்டுமத்தா... என்ன செஞ்சுப்புடும் இந்த மழை நம்மள...”

எழுத்தாளரின் பெயர்
தேவா சுப்பையா
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
இவன் ஜெயிக்கப் பிறந்தவன் என்று சொல்லும் எங்கள் மண்ணின் மைந்தர் அருமை அண்ணன் தேவா சுப்பையா அவர்களின் எழுத்தை ஒரு முறை சுவாசித்துவிட்டால் அந்த சுவாசம் காதலாக மாறி நம்மை கட்டிப் போட்டுவிடும்.



 

"...எதையோ அவசரமாக தேடினாள். தனது பேக்கில் இருந்து ஒரு சிவப்பு நிற பிஸ்கட்பாக்கெட்டை எடுத்து மூன்று கிரீம் பிஸ்கட்டை ஒவ்வொன்றாக ஊட்டிவிட்டாள். சுத்தமாக இருக்கும் தனது தண்ணீர்பாட்டிலை எடுத்து, எச்சிலாகவே குடிக்க வைத்தாள். குழந்தை மீண்டும் உறங்க ஆரம்பித்தது. மீண்டும் மார்போடு அணைத்துக்கொண்டு தனது கைகளை குழந்தையின் மேல் படுத்திக் கொண்டாள்."

எழுத்தாளரின் பெயர்
அகல்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
சிறகடிக்கப் பழகிக் கொண்டிருக்கும் காக்கையாக தன்னை முன்னிறுத்தி எண்ணங்களின் புதையலை ஒரு குவியலாய் கொட்டி பாதுகாக்கிறார். இவர் சிறுகதைகள், கவிதை, அரசியல், சமூகம் என எல்லாவற்றையும் பகிர்கிறார்.

***

"... நீலகண்டன் சிறிது நேரம் மொவுனம் சாதித்தார் பாவம் விசாலம் வாழ்க்கையில் எந்த சந்தோஷத்தையும் நின்னு நிதானிச்சு அனுபவிக்காமேன்னோடவே ஓடிகிட்டு இருந்திட்டா... அவ சொல்றபடி ..அவ நிம்மதிக்காகவும் கொஞ்சநாள் வாழ்வோமே "உன் இஷ்டம் விசாலம் .முதலில் எங்கே போகலாம் ?நீயே சொல்லு?..."

எழுத்தாளரின் பெயர்
சரஸ்வதி அம்மாள்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட "ரியலிசம்" என்பதே பொருத்தமாகும் என்று சொல்லும் இவர் கதைகளை குவித்து வைத்திருக்கிறார்.



  
"கற்பென்று சொன்னால் அருந்ததியாய்
அநீதி நடக்கையில் கண்ணகியாய்
இழிவொன்று நேர்ந்தால் அவ்வையாய்
போரென்று வருகையில் வீரநாச்சியாய்
நீ ஒவ்வொரு அவதாரம் எடுக்கையிலும்
உன் காதலன் போலுன்னை ரசிக்கிறேன்"


எழுத்தாளரின் பெயர்
கவிதா மேரி
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
கனவு மெய்ப்பட வேண்டும் எனச் சொல்லும் கவிதா மேரி, கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். 2009 முதல் எழுதுகிறார் என்றாலும் இதுவரை மொத்தம் பத்துப் பதிவுகளே... நேரமின்மையா அல்லது அலுப்பா தெரியவில்லை... உங்கள் எழுத்து நன்றாக இருக்கிறது தொடருங்கள்...

***

"அஞ்சுகமே   கீசுகீசெனும்  ஆகாத்தியம் மறந்தாயா?
அஞ்சிநிதம்  எனையெண்ணி ஆசைமுற்றி தகித்தாயா?
கொஞ்சுவதும் பேடுன்னை காலமழிய சிலிர்த்தே
மிஞ்சுவதும்   ஏதிங்கினி  நம்மிருவர் தவிர்த்தே?"

எழுத்தாளரின் பெயர்
மோகன்ஜி
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
கவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான் ஆதலால் நானோர் வானவில் மனிதன் என்று சொல்லும் மோகன்ஜி அவர்கள் எல்லா பக்கங்களையும் தொட்டுச் சென்றாலும் கவிதைகள் என்று வந்துவிட்டால் கலக்கல்ஜி ஆகி கலக்கிவிடுகிறார்.


 



"நாட்டு நடப்பு -  வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் பிரதமர் மன்மோகன்சிங்...
முணுமுணுப்பு –  அப்போ... ஊழல்வாத சக்திகளை அப்பிடியே வுட்டுறலாம்ன்றீங்களா?...!!!" 

எழுத்தாளரின் பெயர்
சாய்ரோஸ்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
எனக்குள் எழும் எண்ணங்களை பல்சுவையாய் கதம்பமாலையில் தருகிறேன். விரும்புபவர்கள் சூடிக் கொள்ளுங்கள்... விருப்பமில்லை என்றால் வீசியெறியுங்கள் என்று சொல்லும் சாய்ரோஸ் வாராவாரம் அவரைக் கவர்ந்த பதிவர்களின் கவிதைகளை டாப்-10 ஆகத் தந்து கொண்டிருக்கிறார்.




"கனமான அடி கொண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை முதலான மசாலவை போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி உடன் தக்காளியும், உப்பும் சேர்த்து வதக்கவும்."

எழுத்தாளரின் பெயர்
கீதா
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
என் சமையல் அறையில் என்ற தளத்தில் சமையலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து எழுதிவரும் கீதா அவர்கள் புது வகையான உணவுகளைத் தேடிப்பிடித்துச் செய்து பார்ப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். தான் செய்து ரசித்து ருசித்துச் சாப்பிட்டதை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பதிந்து வருகிறார்.




"தைம் மலைப் பாங்கான இடங்களில் நன்கு வளரும். தண்ணீர் தேங்கக்கூடாது. வடிகால் வசதி இருக்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் வளரக்கூடியது. இதன் தாயகம் ஸ்பெயின், தெற்கு ஐரோப்பாவில் இருந்தது. ரோமானியர் அதிகம் பயிரிட்டனர்."

எழுத்தாளரின் பெயர்
திரு.குப்புசாமி
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
மரம் வளர்ப்பதும் மூலிகைச் செடிகள் வளர்ப்பதும் இவரது முக்கிய விவசாயப் பணிகள் என்று சொல்கிறார் அணைக்கட்டிக்கு அருகில் வரகம்பாடியில் விவசாயம் செய்து வரும் குப்புச்சாமி, மூலிகைகள் குறித்துப் பகிர்கிறார்.


"...தூக்கமின்மை இருந்தால் உறங்குவதற்கு முன் உள்ளங்கால்களில் நன்றாக சூடான நல்லெண்ணெய் தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் உறக்கம் வரலாம்..."

எழுத்தாளரின் பெயர்
டாக்டர். சுனில்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
இன்னல் விளைவிக்காதவரை எதுவுமே தப்பில்லை என்று சொல்லும் காரைக்குடியைச் சேர்ந்த டாக்டர் சுனில் அவர்கள் எல்லாம் குறித்து எழுதினாலும் மருத்துவம் குறித்தும் எழுதுகிறார்.



"...உங்க பதிவு படிப்பவர்களின் விருப்பம் போல எழுத்து வகை மற்றும் அளவை மாற்றிக் கொள்ளலாம். ஆங்கிலப் பதிவு அல்லது பதிவில் வரும் ஆங்கில வார்த்தைகளில் இந்த மாற்றங்கள் நன்றாகத் தெரியும்..."

எழுத்தாளரின் பெயர்
கண்மணி
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
தானும் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்பவர் வலைப்பூவிற்கான தொழில்நுட்ப பகிர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
  

"...இப்டி ஒரு படத்த மசாலா தடவி எல்லாரும் பாக்கற மாதிரி எடுத்த சுசீந்தரனுக்கு ஒரு பெரிய பொக்கே பார்சல். படம் மொத்தமே 2 மணி நேரத்துக்கும் குறைவு தான். ஆனா சொல்ல வந்த விஷயத்த சும்மா நச்சுன்னு நெத்தியடியா சொல்லிட்டு போயிருச்சு. தியேட்டர்ல படம் முழுக்க கலாய்ச்சிகிட்டே இருந்த சில பேரு க்ளைமாக்ஸ் அப்போ அமைதியாகிட்டாங்க. படம் முடிஞ்சு சுசீந்தரன் பேரு வர்றப்போ அப்டி ஒரு மரியாதை..."


எழுத்தாளரின் பெயர்
ஆண்டிச்சாமி
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
ஆதலால் காதல் செய்வீர்
பரதேசி - பாலா செய்த மாபெரும் தவறு
என்னைப்பத்தி சொல்றதுக்கு என்னா இருக்குனு யோசிச்சுகினே இருக்கேங்க.. ஞாபகம் வந்ததும் லட்டர் போட்டு விடுறேன்.. இப்போதைக்கு "சினிமா பைத்தியம்", "ஆர்வக்கோளாறு" இந்த மாதிரி நினச்சுக்கங்க என்று சொல்லும் இவர் சினிமா விமர்சனங்களை எழுதிக் குவிக்கும் பதிவர்களில் முக்கியமானவராகத் தெரிகிறார்.

இதுவரை பதிவர்களைப் பார்த்தாச்சு... இனி சில உங்கள் பார்வைக்காக...


 எனது பேராசானின் கவிதை இந்த மாதம் ஓம் சக்தியில் வெளியாகியிருந்தது. நான் ரசித்தது... நீங்களும் ரசிக்க...

வகுப்பு வாரி
எட்டு வரைக்கும்
பட்டம்மாள் மட்டுமே
ஓவிய டீச்சர்
முதலாம் வகுப்பில்
மயிலைப் படமாய்
வரையச் சொன்னார்;
குழந்தைகள் எல்லாம்
குயிலைப் படமாய்ப்
போட்டிருந்தார்கள்!
இரண்டாம் வகுப்பில்
யானையைப் படமாய்
வரையச் சொன்னார்;
குழந்தைகள் எல்லாம்
பூனையைப் படமாய்ப்
போட்டிருந்தார்கள்!
மூன்றாம் வகுப்பில்
நிலவைப் படமாய்

வரையச் சொன்னார்;
à

குழந்தைகள் எல்லாம்
வட்டத் தொட்டியை
வரைந்திருந்தார்கள்!
நான்காம் வகுப்பில்
மாடு ஒன்றை
வரையச் சொன்னார்;
குழந்தைகள் எல்லாம்
ஆடு ஒன்றை
வரைந்திருந்தார்கள்
ஐந்தாம் வகுப்பில்
ஆற்றைப் படமாய்
வரையச் சொன்னார்;
குழந்தைகள் எல்லாம்
பாம்பைப் படமாய்ப்
போட்டிருந்தார்கள்!
ஆறாம் வகுப்பில்
வாழை மரத்தை
வரையச் சொன்னார்;
à


குழந்தைகள் எல்லாம்
வேப்ப மரத்தை
வரைந்திருந்தார்கள்!
ஏழாம் வகுப்பில்
கடலின் அலையை
வரையச் சொன்னார்;
குழந்தைகள் எல்லாம்
கறுப்பாய்க் கோடுகள்
வரைந்திருந்தார்கள்!
எட்டாம் வகுப்பில்
குரங்கு ஒன்றை
வரையச் சொன்னார்;
குழந்தைகள் எல்லாம்
டீச்சரின் படத்தை
வரைந்து காட்டி ஓடிப் போயினர்!

- பேராசிரியர் முனைவர். மு. பழனி இராகுலதாசன்,
 
தேவகோட்டை



குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களின் பொன்னான பேச்சு. தேவகோட்டையில் இருக்கும் போது அவருடன் நேரடித் தொடர்பில் இருக்கும் வாய்ப்பு இருந்ததால் அவரின் இலக்கியப் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் இருந்ததைவிட தற்போது அவரின் பேச்சில் வீச்சும் வசீகரமும் கூடியிருக்கு... நீங்களும் கேட்டுப்பாருங்கள்...






மாலை மரியாதை...
மல்லுக்கு நிற்கிறது
சாமி முன் சமூகம்..!

இன்றைய அறிமுகங்கள் அனைவரின் தளங்களுக்கும் சென்று இங்கு சொன்ன பதிவை மட்டுமன்றி அவர்களது எல்லாப் பதிவுகளையும் படித்து உங்கள் கருத்தைத் தெரிவித்து சந்தோஷமாய் மீண்டும் வாருங்கள்... அதற்குள் நானும் சென்று இன்னும் சில பதிவர்களோடு வருகிறேன்...

நன்றி.
மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.
மேலும் வாசிக்க...

Monday, September 2, 2013

மனசு பேசுகிறது- சுயம்


எல்லாருக்கும் வணக்கமுங்க...

முதலில் சில நன்றிகள்....

என்னை எழுத்தாளனாக்கிப் பார்க்க ஆசைப்பட்ட எனது பேராசான்... எனது அப்பா... எங்கள் அருமை ஐயா பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு முதல் நன்றி.

வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியர் பணியாற்றும்படி என்னை அழைத்த அன்பின் ஐயா சீனா அவர்களுக்கும் நண்பர் தமிழ்வாசி பிரபாகர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த முறை சீனா ஐயா அழைத்தபோது கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது. அதற்குக் காரணம் சில குடும்ப சூழல்கள் ஆனாலும் எங்கள் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு ஐயாவிற்கு ஒரு மின்னஞ்சல்தான் செய்தேன். அம்மாவுடன் மதுரையில் இருந்து வந்திருந்து வாழ்த்திச் சென்றார். அந்தப் பாசம்... நட்பு... உறவு எல்லாம் சேர்ந்து வென்றுவிட சரி என்று சொல்லிவிட்டேன்.

எனது எழுத்துக்களைப் படித்து நிறைகுறைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி என்னை மெருகேற்றும் வலைச்சர உறவுகள் அனைவருக்கும் நன்றி.

என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த அத்தனை முன்னாள் வலைச்சர ஆசிரியர்களுக்கும் கடந்த வாரத்தை கலக்கல் வாரமாக்கிய கபீரன்பன் அவர்களுக்கும் நன்றி,

---------

சரியாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வலைச்சர ஆசிரியனாய் ஒரு வாரகாலம் உங்களுடன்.... முதல் நாள் வலைச்சர ஆசிரியராய் தன்னைதானே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நம்மைப் பற்றி அறிமுகம் செய்யும் அளவிற்கு பெரிய சாதனையாளன் எல்லாம் கிடையாது.... சாதாரண கிராமத்தாந்தான்... இதோ என் அறிமுகம் சற்றே நீளமாக...

* நான்.... சே.குமார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் இருக்கும் பரியன் வயல் என்ற சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். அப்பா - திரு. சேதுராமன், அம்மா - திருமதி. சிவகாமி. என் அன்பு மனைவி நித்யா, மதுரை மண்ணைச் சேர்ந்தவர். ஸ்ருதி, விஷால் என்ற இரண்டு செல்லங்கள்.

* படித்தது எம்.சி.ஏ.,  கடந்த ஐந்து ஆண்டுகளாக அபுதாபியில் கணிப்பொறியை கவனமாய்த் தட்டி வருகிறேன்.ஆரம்பத்தில் தேவகோட்டையில் கணிப்பொறி மையம் + கல்லூரியில் பணி, அப்புறம் சென்னையில் கணிப்பொறியோடு ஓடிய வாழ்க்கை சிலகாலம் தினமணியில் இளைப்பாறியது.

* எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். மூன்று அக்கா, இரண்டு அண்ணன், ஒரு தம்பி என நாங்கள் மொத்தம் ஏழு பேர். நான் ஆறாவதாய் பிறந்தவன் என்பதால் வீட்டில் வைத்த பெயர் குமாரசாமி, பள்ளியில் சேர்க்கும் போது அம்மா கொடுத்த பெயர்தான் குமார். ராமசாமி என்ற அண்ணனை ரவிச்சந்திரனாகவும் உமையாள் என்ற அக்காவை பிரேமா என்றும் மாற்றிய பெருமை அம்மாவுக்கே.

* பனிரெண்டாவது படிக்கும் போது அப்பா படித்தது போதும் பஞ்சுமில்லில் வேலைக்குப் போ என்று அதற்கான ஏற்பாட்டில் இறங்க பெரிய அண்ணனிடம் சொல்லி அழுது அதன் பின் என்னையும் தம்பியையும் கல்லூரி வரைக்கும் படிக்க வைத்த பெருமை எங்கள் அண்ணனுக்கே... அவர் இல்லையென்றால் மில்லில் தொழிலாளியாகத்தான் வாழ்க்கை போய்க்கொண்டிருந்திருக்கும்.

* பள்ளிப் படிப்பு வரை எழுத்து எல்லாம் நமக்குள் இல்லை. கல்லூரி வந்து இரண்டாம் பருவம் ஆரம்பிக்கும் போது ஐயாவின் அறிமுகம், அதன் பின் எழுத ஆரம்பித்து எதோ கிறுக்கினேன்.... அப்ப கவிதை எல்லாம் பெரிதாக... ரொம்பப் பெரிதாக எழுதுவேன். நண்பர்களின் காதலுக்கு நிறைய கவிதைகள் எழுதிக் கொடுத்திருக்கிறேன். தவறாமல் அவர்களது பெயரைக் கீழே போடச் சொல்லிவிடுவார்கள்.

* ஆரம்பத்தில் கதை எழுத ஆரம்பித்தால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சவோ... உரம் போடவோ போகும் அப்பா கண்டபடி திட்டுவார். இடையில் கொஞ்ச நாள் நிறுத்தி.... பின்னர் எழுத ஆரம்பித்து... பின்னர் நிறுத்தி... இப்படி விட்டு விட்டுத் தொடர்ந்த எழுத்துடனான எனது நேசம் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்ததும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


* 'கட் அவுட் நிழலுக்கு கீழே' என்ற எனது முதல் கவிதையை ஐயாவே தாமரைக்கு அனுப்பி வைக்க அது பிரசுரமாகி திரு. பொன்னீலன் அவர்கள் பாராட்டியது என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. அதன் பின் பத்திரிக்கைகள் அப்பப்ப நம்ம கதை, கவிதைகள் வர ஆரம்பித்தது. கல்லூரி முடித்து வாழ்க்கைச் சூழல் மாறிய போது எழுத்தும் சிறைப்பட்டுப் போனது. திரு. இறையன்பு அவர்களை தேவகோட்டை கலையிலக்கியப் பெருமன்ற விழாவிற்காக காரில் கூட்டிச் சென்று கொண்டு வந்து விட்ட அந்த ஒரு மழைநாளில் கார் பயணத்தில் அவரது அற்புதமான சிந்தனைகளை எங்களுக்கு வாரிவழங்கியதை மறக்கமுடியாதது.

* கருத்தப் பசு’ என்ற எனது சிறுகதை வம்சி வெளியிட்ட 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்’ என்ற தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.

* அதீதம், சொல்வனத்தில் கதைகள் வெளிவந்திருக்கின்றன.

* ஆரம்பத்தில் நான்கு வலைப்பூவில் எழுதினேன்... பின்னர் ஒரு வலைப்பூவிற்கு மாறியாச்சு... ஆமா சொல்லவே இல்லையில்ல என்னோட வலைப்பூவின் பெயர்... 
மனசு பெயர்க்காரணம்.... கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயரே வலைப்பூவின் பெயராய்...

* எனது வலையில் நான் எழுதிய எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். இதில் இது நன்று... அது நன்று என்று தரம் பிரித்து பார்க்க மனமில்லை. இதுவரை 53 சிறுகதைகள், 62 கவிதைகள், 48 சினிமா, 41 படித்ததில் பிடித்தவை, 31 மனதில் பட்டது, 11 கிராமத்துநினைவுகள் இப்படியாக 400க்கும் மேல் எழுதியாச்சு. இருந்தாலும் சில இணைப்புக்கள் உங்களுக்காக இங்கே...

சிறுகதை : கூழாங்கல் 
கிராமத்து நினைவுகள் : கண்மாய் மீன் 
தொடர்கதை : கலையாத கனவுகள் 

* நான் ரசித்து எழுதும் கிராமத்து நினைவுகள் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது என்பது நண்பர்களின் பின்னூட்டத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.

* என்னைப் பற்றிச் சொல்ல அவ்வளவுதான் இருக்கு... என்னோட வலைப்பூவிற்கு வந்து உங்கள் கருத்தைச் சொல்லிச் செல்லுங்கள்.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க.... நம்ம சீனா அய்யாவுக்கு இன்று நாற்பதாவது திருமண நாள். ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

ஐயாவுக்காக இந்தப் பாடல்...



எனது பகிர்வு இப்படித்தான் வலம் வரும் என்று நினைத்துள்ளேன்... காத்திருங்கள்...

1
சிறுபகிர்வு
சின்ன பதிவாக ஒரு செய்தி
2
பிரபலம்
நான் பார்த்தவர்களிலல் பிரபலமான பதிவரின் தள அறிமுகம்
3
கதையாசிரியர்கள்
சிறுகதையில் கலக்கும் இரண்டு பதிவர்கள்
4
கவிஞர்கள்
கவிதையில் கலக்கும் இரண்டு பதிவர்கள்
5
பல்சுவை
கலந்து கட்டி ஆடும் ஆட்டநாயகர் ஒருவர்
6
சமையல்
சமைப்பதை ருசிக்கத் தரும் ஒருவர்
7
விவசாயம்
இந்தியாவின் உயிர்நாடி ஒருவர்
8
மருத்துவம்
உடல் நலம் காக்க ஒருவர்
9
தொழில்நுட்பம்
கணிப்பொறிக்கான மருத்துவர் ஒருவர்
10
சினிமா
சினிமாவைப் பற்றி எழுதும் ஒருவர்
11
கவர்ந்த கவிதை
பதிவரல்லாமல் கவர்ந்த கவிதை ஒன்று
12
வீடியோ
தமிழ் சம்பந்தமான வீடியோப் பகிர்வு
13
குறுங்கவிதை
எனது கவிதை ஒன்று

சரி உறவுகளே அடுத்த பதிவு முதல் பதிவுலகில் கலக்கி வரும் நட்புக்களின் பதிவுகள் அறிமுகத்தைத் தொடர்கிறேன். தொடர்ந்து இங்கும்... அறிமுகமாகும் நண்பர்களின் தளங்களுக்கும்... சென்று மறவாமல் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்...

மனசு இன்னும் பேசும்...
-'பரிவை' சே.குமார்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது