இன்றொடு ஐந்தில்- காரஞ்சன்(சேஷ்)
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்! வலைச்சரத்தில் இன்றோடு ஐந்து நாட்கள் நிறைவடைகிறது! தொடரும் உங்களின் நல்லாதரவு நிறைவு தருகிறது! ஊக்கமளிக்கும் வகையில் கருத்தினைப் பகிர்ந்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!
காதலில்லை என்று சொன்னால் பூமியும் இல்லை என்பார்கள்! , ஊடலும், பிரிவும் அதன் ஆழத்தை உணர்த்தும் தருணங்கள்! இன்று அணைத்திட வருவாயோ?என்னும் தலைப்பில் கவிதை ஒன்று படைத்துள்ளேன்!
அணைத்திட வருவாயோ?
ஆற்றின்
கரையினிலே
அந்திப்
பொழுதினிலே
சந்தித்த
பொழுதுகளென்
சிந்தையில்
தோன்றுதடி!
வண்ணமிகு
வான்நிறத்தை!
கண்ணிரண்டின்
நீர்காட்டும்
கவலையுறும்
என்னுளத்தை!
சுழித்தோடும்
நீர்போல
சுற்றுதடி
உன்நினைவு!
பகையாச்சு
பொழுதெல்லாம்
பாவை உன்
பிரிவாலே!
கனவென வரும்வேளை
விழிக்கிறதே
விழியிரண்டும்
விழிக்கையில்
நீயின்றி!
கோடையில்
மழையொருநாள்
குடைக்குள்
இருவருமாய்
பிடித்த
கதைகளெலாம்
பேசியே
நடந்திட்டோம்!
நனைந்தன
உடைகளொடு
நம்மிருவர்
இதயமுமே!
கூவிடும்
குயிலொன்று
இழையோடும்
சோகத்தை
இன்னிசையாய்
மீட்டுதடி!
மதிற்மேல்
படர்ந்தகொடி
மனதினை
வாட்டுதடி!
ஏக்கம்
எனும்தீயை
என்னுள்ளே
மூட்டுதடி!
ஏக்கப்
பெருந்தீயை
என்றணைக்க
வருவாயோ?
பட உதவி:கூகிளுக்கு நன்றி!
இறைவனை எட்டுதல்.
கடும் பசியுடன் இருந்த சிறுவன் ஒருவன் ஒரு வீட்டை தட்டினான். இளம் பெண் ஒருத்தி கதவைத் திறந்தாள்.
"குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்"
என்று கேட்டான். ஆனால் அவன் பசியுடன் இருப்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண் ஒரு கோப்பையில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள். நன்றியுடன் பெற்றுக்கொண்ட அந்த சிறுவன் கட கட வென குடித்து முடித்தான். பிறகு, " இதற்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்"
என்று கேட்டான்.
"ஒன்றும் வேண்டாம்,
அன்புடன் கொடுக்கும் எந்த பொருளுக்கும் பணம் பெறக்கூடாது என்பது என் தாயின் அறிவுரை"
என்றாள் அந்த பெண். அவன் நன்றியுடன் விடை பெற்றான்.
காலம் பறந்தது. அந்த பெண் திடீரென்று நோய்வாய் பெற்றாள். அந்த ஊர் மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவளது நோய் குணமடையவில்லை. நகரத்தில் உள்ள புகழ் பெற்ற மருத்துவரான ஹோவார்ட் கெல்லி என்பவரை ஆலோசனைக்காக அழைத்தனர்.
அந்த பெண்ணின் ஊர்ப் பெயரைக் கேட்டதும், அவளது அறைக்கு விரைந்தார்டாக்டர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவளைக் கண்டதும் அவர் கண்கள் வியப்பில் விரிந்தன. உடனடியாக, அந்த பெண்ணின் சிகிச்சையை தாமே முன்னின்று கவனிக்க தொடங்கினார். தனது அனுபவத்தால், கடும் போராட்டத்திற்குப் பிறகு, அவளை படிப்படியாககக் குணப்படித்தினார் அவர்.
அன்று மருத்துவமனையில் இருந்து அவள் வெளிவரும் நாள். தான் குணமடைந்தது குறித்து மகிழ்ந்தாலும், மருத்துவச் செலவு எவ்வளவு ஆகியிருக்குமோ என்ற கவலை அவளுக்கு!
மருத்துவமனை நிர்வாகத்திடம் சென்று நான் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கேட்டாள். எதுவுமில்லை என்று கூறி ஒரு கவரை அவளிடம் கொடுத்தார் அந்த ஊழியர். அவளுக்கு ஆச்சரியம். ஆர்வத்துடன் அந்தக் கவரைப் பிரித்தாள்.
உள்ளே ஒரு காகிதத்தில்..............
அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அதற்கான செலவுகள் ஆகியன பட்டியிலிடபட்டிருந்தன. அவை எல்லாவற்றுக்கும் கீழே சிவப்பு மையினால், கொட்டை எழுத்தில் இவ்வாறு எழுதபட்டிருந்தது.
"மருத்துவ செலவுகள் அனைத்தும், சூடான ஒரு கோப்பை பாலின் மூலம், முழுவதுமாக செலுத்தப்பட்டு விட்டன! இப்படிக்கு, டாக்டர் ஹோவார்ட் கெல்லி"
திகைத்து போனாள் அவள்.
அந்த ஏழை சிறுவனிடம் தான் காட்டிய கருணையும், அவனுக்கு அளித்த பாலும், இன்று ஓர் அரிய சிகிச்சையாக மாறி, தன்னை காப்பாற்றியதை நினைத்து அவளுக்கு பேச்சே எழவில்லை.
அவள், இறைவனின் பெரும் கருணையை மனித வடிவில் கண்டாள்.
வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும்,......
பிறர் மீது குற்றம் காண்பதை நிறுத்துங்கள். பிறரை தாழ்ந்தவராக எண்ணுவதை கைவிடுங்கள்.சக மனிதர்களை விட பொன்னையும் பொருளையுமே பெரிதாகக் கருதி, எவரையும் சொல்லாலோ செயலாலோ புண்படுத்தாதீர்கள். தவறுகளை மன்னித்து, மறந்து விடுங்கள். இவை போன்ற எளிய செயல்களால் , உங்களது வாழ்க்கை அன்பு மயமாகும்.
அப்போது இறைவனையே எட்ட முடியும்
( நன்றி: திரு K.N.RAJAN அவர்களின் மின்னஞ்சல்)
III) சிந்தனைக்கு!IV) இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்ப்போமா?
1. யாரும் திட்டம் போட்டு காதல் கொள்வதுகிடையாது. அது ஒரு இயற்கையான ஒன்று எனக் கூறும் திரு. திi, தமிழ் இளங்கோ அவர்களின்: எனது எண்ணங்கள்!
2. எல்லாமே எனக்கெதிராய் எனச் சொல்லும் தென்றல் சசிகலாவின் மற்றுமொரு கவிதைத் துளி துளித்துளியாய்!
3. கோவை 2 தில்லி: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது?.. பிரிந்திருந்த தோழியுடன் மீண்டும் இணைந்த கதை:என் இனிய தோழி:. இவரின் மற்றுமொரு ஆதங்கம் என்றுதான் திருந்துவார்களோ?
4. திரு மதுமதி அவர்களின் தூரிகையின் தூறலில் A வகை காதலர்கள்!
5 திரு. இரவி அவர்களின் மாயவரத்தான் MGR வலைப்பூவில் அருமையான பகிர்வுகள்
6. தளிர் சுரேஷ் அவர்களின் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முத்தான மூலிகைகள்
என்ன நண்பர்களே இன்றைய பதிவுகள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்! படியுங்கள்! தயவு செய்து தங்களின் கருத்தினைப் பதியுங்கள்! நாளை சந்திப்போம்!

அதுவரை தங்களிடமிருந்து விடைபெறும்
காரஞ்சன்(சேஷ்)


