07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label எம்.ரிஷான் ஷெரீப். Show all posts
Showing posts with label எம்.ரிஷான் ஷெரீப். Show all posts

Sunday, January 4, 2009

விடை பெறுகிறேன் நண்பர்களே..!

இந்த ஏழு நாட்களும் காலம் இழுத்துவந்து என்னை உங்களுடன் பேசவிட்டது. நான் இணையப் பெருங்கடலில் சந்தித்த மனிதர்களை, என்னைச் சிந்திக்க வைத்தவர்களை எனப்பலரைப்பற்றியும் ஒரு பழங்காலப் பாட்டியைப் போல உங்களையும் இருத்திவைத்துக் கதைத்துக் கொண்டிருந்த அற்புதமான வாய்ப்பைத் தந்த நண்பர் சீனாவுக்கு மீண்டும் நன்றி.

முன்பே சொன்னது போல இணையப்பெருங்கடலில் வலைப்பூ எனும் பெரியதொரு கப்பலில் கூடப்பயணிக்கும் சகபதிவர்களை சுற்றிவர இருக்கும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்த முயன்றிருக்கிறேன். எனக்கருகில் நெருக்கமாக இருக்கும் மற்றும் எனது கைகளை நீட்டினால் தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் அன்பு நெஞ்சங்களையெல்லாம் என்னாலியன்றவரை அறிமுகப்படுத்திவிட்டதாக ஒரு சிறு ஆசுவாசம் மனதை நிறைக்கிறது எனினும் என்னால் இங்கு குறிப்பிடப்படாத மற்றும் சுட்டிக்காட்டப்படாத இன்னும் பல சிறந்த பதிவர்கள் வெளியில் உலவுகின்றனர்.

அவர்கள் எனது நண்பர்களாகவோ, நான் விரும்பிப் பார்க்கும் பதிவுகளின் சொந்தக்காரர்களாகவோ இருக்கும் பட்சத்திலும் இங்கு வலைச்சரப் பதிவுகளில் சுட்டிக்காட்டப்படாவிட்டால் அதற்குக் காரணம் நேரமின்மையும், இணையமும்தான். இப்பொழுது இதை எழுதும் கணத்தில் கூட வழமையாகப் பாவிக்கும் கணனியில் இணையம் செயலிழந்து 'இண்டர்நெட் கபே'யை நாடச் செய்திருக்கிறது.

வலைச்சரப் பதிவுகள் ஒவ்வொன்றுக்குமாக இப்படி நாடிய பொழுதில், வழமையாகப் பாவிக்கும் கணனியில் சேமித்துவைத்திருக்கும் சுட்டிகளை மறந்து மற்றும் இழந்து புதுக்கணனியில் சுட்டிகளை யோசிக்கவேண்டியிருந்தது. எனக்குப் பின்னால் காத்திருக்கும் நீண்ட வரிசை யோசிக்கவும் அனுமதியளிக்க மறுத்து ஒரு சலிப்போடு நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கையில் அவசரம் அவசரமாக ஒவ்வொரு பதிவையும் எழுத வேண்டியிருந்தது. எனவே விடுபட்ட நண்பர்கள் புரிதல்கொண்டு என்னை மன்னியுங்கள்.

பதிவுகளைப் பார்த்து, படித்து பின்னூட்டமிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்..!

தொடர்ந்தும் உங்களுடன் பயணிக்கும் ஆவலெனக்குண்டெனினும் இந்த வருடம் தாய்நாடு திரும்பும் உத்தேசமும் உள்ளதென்பதால், உங்களுடனான பயணத்தினிடையில் எனக்கு இறங்க வேண்டியும் மீண்டும் கைகோர்க்கும் வாய்ப்புக்களற்றுமோ போய்விடின் என்னை மறந்துவிடாதீர்கள் !

என்றும் அன்புடன் உங்கள்,

எம்.ரிஷான் ஷெரீப்


மேலும் வாசிக்க...

Saturday, January 3, 2009

பல்துறைப் பதிவர்கள்

ஒருவரது எண்ணக் கருத்துக்கள் பலதுறைகளிலும், பலவிதங்களிலும் வெளிப்படுத்தப்படலாம். கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், பத்தி எழுத்துக்கள், நகைச்சுவை எழுத்துக்கள் எனத் தனது ஆற்றல்களைப் பலரும் பல விதங்களில் வெளிப்படுத்தலாம். நான் இன்று குறிப்பிட இருப்பவர்கள் மேற்கூறிய பல ஆற்றல்களைத் தமது ஒரே வலைப்பூவில் வெளிப்படுத்துபவர்கள். தேடிச் செல்லும் வாசகனை, அலுப்பூட்டாது விருந்து படைக்கும் வலைப்பூக்களுக்குச் சொந்தக்காரர்கள்.

கண்ணபிரான் ரவிஷங்கர் - ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் இருபது வலைப்பூக்களில் பங்கெடுத்து எழுதிவருகிறார். ஒரு பதிவு எழுதுவதற்குள்ளேயே விழிபிதுங்கி நிற்குமென்னைப் பெரும் ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தும் பதிவர் இவர். ஆன்மீகம், இசை, பாடல்கள், நகைச்சுவை, விமர்சனங்களெனப்பலதும் எழுதி அசத்துமிவர் அவ்வப்போது வாக்கெடுப்புக்களையும் நடத்திவருகிறார். கடந்த வருடங்கள் தந்த மிகச் சிறந்த பதிவர்களில் ஒருவர்.

ஜமாலன் - மிகக் காத்திரமான அரசியல் மற்றும் இலக்கியக் கட்டுரைகளை எழுதிவரும் இவரது நூலின் தலைப்பு 'மொழியும் நிலமும்'. வலைப்பூவும் அதுவேயாகி பல பதிவுகளைத் தாங்கி நிற்கிறது. இவரது 'காலக்குறி' வலைப்பூ இவரது கவிதைகள், இலக்கியம் சம்பந்தமான பதிவுகளைக் கொண்டிருப்பதோடு இவரது இன்னுமொரு வலைப்பூவில் உடலரசியல் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார்.

நண்பன் - அமீரகத்திலிருந்து வலைப்பதிந்து வருமிவர் மிகக் காத்திரமான அரசியல் கட்டுரைகளை எழுதிவருபவர். கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்களென இன்னும் பல குறித்தும் அருமையாக எழுதிவருகிறார்.

கார்த்திக் - பாரதியார் கவிதையைத் தனக்குப் பிடித்த கவிதையெனக் கூறும் இவரது வலைப்பூ பல தளங்களையும் சேர்ந்த பதிவுகளைத் தன்னுள் கொண்டது. கட்டுரைகள், விமர்சனங்கள், புகைப்படங்களென இவர் பல பதிவுகளை அருமையாக எழுதி வருகிறார்.

சதங்கா - 'நான் நான் என்று அலைந்தால் அகந்தை, நான் யார் என்று ஆராய்ந்தால் தத்துவம், நான் நீ என்றால் அன்பு ...' என அழகாகச் சொல்லும் இவரது வலைத்தளம் அழகிய ஓவியங்களால் மனம் நிறையச் செய்கிறது.

லதானந்த் - வித்தியாசமாகத் தனது ஒவ்வொரு பதிவோடும் தனது புகைப்படங்களையிட்டுப் பதிவெழுதிவருமொரு பிரபல எழுத்தாளரான இவர் தனது எழுத்துக்களால் குறுகிய காலத்திலேயே வலையுலகத்திலும் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுக்கொண்டவர். இவரது எழுத்துக்களில் பிரதிபலிக்கும் கொங்கு மொழிநடை எழுத வந்த விடயத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதோடு, நகைச்சுவை கலந்து எழுதுவதானது பதிவினை மனதுக்கு நெருக்கமாக்கிறது. அனுபவக் குறிப்புக்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றோடு பதிவர்களின் கேள்விகளுக்கும் அருமையாக பதிலளித்துவருகிறார்.

தாமிரா - இவரது பதிவுகள் எல்லாத் தளங்கள் நோக்கியும் பயணிப்பவை. பெரும்பாலானவை அனுபவக்குறிப்புக்கள். அவற்றையும் திருப்பங்கள் வைத்து நகைச்சுவை தொனிக்கும் நடையில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்.

தமிழ் பிரியன் - 'இது என்னோட இடம்' எனச் சொல்லும் இவரது வலைத்தளம் பல விதமான கட்டுரைகளால் நிறைந்திருக்கிறது . கவிதை, விமர்சனம், அனுபவக் குறிப்புக்கள் எனப் பலவற்றால் தனது வலைப்பக்கம் நோக்கிக் கவர்ந்திழுக்கிறார்.

தமிழ் பறவை - சிறந்த ஓவியரான இவரது வலைத்தளம் அழகான ஓவியங்களால் மின்னுகிறது. ஓவியம் மட்டுமல்லாது கவிதை, விமர்சனம், அனுபவக் குறிப்புகள் எனப் பலவற்றை எழுதிவருகிறார்.

அபி அப்பா - வலையுலகில் அனைவராலும் அறியப்பட்ட இன்னுமொரு சிறந்த பதிவர். இவரது பதிவுகளை, அனுபவக்குறிப்புக்களைப் படித்தால் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் அளவிற்கு மிகவும் சுவாரஸ்யமாக எழுதுகிறார்.

சஞ்சய் - 'ஒன்றா இரண்டா? எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா?' எனக் கேட்கும் பொடியனான இவரது வலைப்பூ Break the rule எனச் சொல்கிறது. எலலவிதமான பதிவுகளையும் சுவாரஸ்யமான முறையில் எழுதி விருந்து படைக்கிறார்.


மங்களூர் சிவா - பல பதிவர்களாலும் நகைச்சுவை தொனிக்க எழுதிவரும் பதிவரென அறியப்பட்ட இவரும் பன்முகம் கொண்ட ஒரு படைப்பாளி. பணம், பங்குச் சந்தை, இன்னும் பிற சந்தை நிலவரங்கள் எனவும் பல பயனுள்ள பதிவுகள் எழுதிவருகிறார்.

பிரேம்குமார் - இவரது கவிதைகளை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கக் கூடும். 'மொழியோடு ஒரு பயணம் ' எனும் இவரது இந்த வலைத்தளத்தில் கவிதைகளோடு இவரது அனுபவக் குறிப்புக்களை அழகாக எழுதிவருகிறார்.

வால்பையன் - வலையுலகிற்கு இவரைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. தன் சுவாரஸ்யமான பதிவுகளால் மிகவும் பிரபலமானதொரு பதிவர். எல்லாவிதமான பதிவுகளையும் எல்லோரும் விரும்பும் வண்ணம் சொல்லவந்த விடயத்தை வெகு திறமையாகச் சொல்கிறார்.

ச்சின்னப் பையன் - அனுபவக் குறிப்புக்களை வாய்விட்டுச் சிரிக்கும் படியாக எழுதி பலர் மனதையும் கவர்ந்தவர் இவர். தேர்ந்தெடுக்கும் விடயத்தை நகைச்சுவை மிகுந்த மொழிநடையோடு சொல்லி வருகிறார்.

நாடோடி - இவரது 'புய்ப்பம்' வலைப்பூ என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வலைப்பூக்களிலொன்று. அரசியல், சினிமா, கவிதை,விளையாட்டு, அனுபவங்கள் என எல்லாம் சார்ந்து அருமையாக எழுதுகிறார் இவர். சீன ஒலிம்பிக், இனக்கலவரம் குறித்த விரிவான பதிவுகள் நன்றாக உள்ளன.

சர்வேசன் - 'ஆக்கியவன் அல்ல அளப்பவன்' என தன்னைப் பற்றிச் சொல்லும் இவர் வலையுலகில் எல்லோராலும் அறியப்பட்ட ஒரு மூத்த பதிவர். அனுபவக் கட்டுரைகள், விமர்சனங்கள் எனப் பலவற்றை எழுதிவருகிறார்.

வடுவூர் குமார் - தனது தொழில்சார்ந்த அனுபவங்களை புகைப்படங்களோடு அருமையான பதிவுகளாக எழுதிவருகிறார் இவர். அத்தோடு தனது 'லினக்ஸ்' வலைப்பூவில் கணினி சம்பந்தமான பாடங்களை பயனுள்ள விதத்தில் கற்றுத் தருகிறார்.

மஹேஷ் - அரசியல் கட்டுரைகள், உலக சினிமாக்கள், அனுபவக் குறிப்புக்களெனப் பரந்துபட்ட எழுத்துலகம் இவருடையது. நல்ல பல கட்டுரைகளை காத்திரமாக எழுதிவருகிறார்.

பல்துறைகளிலும் எழுதிவரும் இன்னும் பல சுவாரஸ்யமான பதிவர்கள் அனேகர்கள் இப்பதிவுக்கு வெளியே இருக்கிறார்கள். எல்லோரையும் ஒரு பதிவில் இடம்பெறச்செய்ய ஆசைதான் எனினும் நேரமும் இணையமும் தற்சமயம் இடமளிக்கவில்லை. அவர்களை இன்னுமொரு பதிவில் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்.
மேலும் வாசிக்க...

இலங்கைப் பதிவர்களில் சிலர்..!

உள் நாட்டில் மனம் வருத்தும் ஓயாப் போர்ச் சத்தம் வாழ்வினை அலைக்கழிக்கச் செய்திடினும் சென்ற இடமெல்லாம் தமிழுக்குச் சிறப்பினைச் சேர்க்கும் எனது தாய்த் தேச அன்புப் பதிவர்கள் சிலரை இப்பதிவில் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.


கானா பிரபா - வலையுலகின் மூத்த பிரபல பதிவர். 'ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன் ' எனச் சொல்லும் வானொலி அறிவிப்பாளரான இவரது பிறப்பிடம் இணுவில், யாழ்ப்பாணம். தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வசித்துவருகிறார். பல வலைப்பூக்களுக்குச் சொந்தக்காரரான இவரது 'மடத்துவாசல் பிள்ளையாரடி' பல அனுபவக் கட்டுரைகளையும், புகழ்பெற்றவர்கள் பற்றிய கட்டுரைகளையும் கொண்டது. 'ரேடியோஸ்பதி' இசை,இசையமைப்பாளர்கள்,பாடகர்கள் பற்றிய குறிப்புக்களோடு , அவர்களது நேர்காணல்களும் உள்ளடக்கியது. அதில் இவர் கேட்கும் புதிர்க் கேள்விகள், வாசகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் பதிவுகள். 'உலாத்தல்' - இவரது பயண அனுபவக் கட்டுரைகளைக் கொண்ட வலைப்பூ. 'வீடியோஸ்பதி' பல பாடல்களின், படங்களின் ஒளித்தொகுப்புக்களையும், திரை விமர்சனங்களையும் கொண்டது. மிகச் சுவாரஸ்யமான பதிவரான இவரது பல பதிவுகள் வியப்புக்குள் ஆழ்த்துவதோடு, இன்னும் நிறைய எதிர்பார்க்கவும் வைக்கின்றன.

யோகன் - தற்பொழுது பாரிஸில் வசிக்கும் இலங்கையரான இவருக்குச் சொந்தமாக நான்கு வலைப்பூக்கள் உள்ளன. பார்க்கப்,படிக்கக்,கேட்கப் பிடிக்கும் எனச் சொல்லும் இவரது 'என் பார்வையில்', 'எனது பார்வை' என்பன எண்ணக்குறிப்புக்களையும் கட்டுரைகளையும் கொண்டிருப்பதோடு , 'பாட்டுக் கேட்போமா?' பிடித்த பாடல்களைப் பகிர்ந்துகொள்கிறது. 'My views through the lens' - இவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டிருக்கிறது. பன்முகப்பார்வை கொண்ட பதிவுகளுக்குச் சொந்தக்காரரான இவர் தற்பொழுது பதிவுகள் எழுதி பல மாதங்களாகிறது. இந்தப் பதிவின் மூலம் அவரைத் திரும்பவும் பதிவுகளையெழுத அன்பாக அழைக்கிறேன்.

நிர்ஷன் - '"அறிவில்லாதவன்" எனச் சொல்கிறார்கள் ' எனச் சொல்லிக்கொள்ளும் இவர் மலையக மண் ஈன்ற அறிவில் ஆதவன். 'புதிய மலையகம்', 'மேடை' என இரு வலைப்பூக்களைத் தனதாக்கி எழுதி வரும் இவர் இலங்கையில் இறக்குவானையைச் சேர்ந்தவர். இவரது கவிதைகள் 'மேடை'யில் மின்னுவதோடு பல காத்திரமான கட்டுரைகளும், அனுபவப் பகிர்வுகளும் 'புதிய மலையக'த்தில் நிறைந்திருக்கின்றன. இவர் தனது பதிவுக் கட்டுரைகளில் குறிப்பிடும் அனைத்தும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளக் கூடியதே. மலையகம் தந்த முதல் பதிவர் என நினைக்கிறேன். மிகவும் மகிழ்வுடனான வாழ்த்துக்கள் அவருக்கு உரித்தாகட்டும்...!

லோஷன் - வெற்றி FM முகாமையாளரான இவர் ஒரு வெற்றிகரமான  அறிவிப்பாளரும் கூட. இலங்கை, வெள்ளவத்தையிலிருந்து அண்மையில் வலைப்பதிய வந்திருக்குமிவர் அதற்குள்ளாகவே பல வாசகர்களைத் தன்பக்கம் ஈர்த்துக்கொண்டவர். பணிகள் மிகைத்திருந்த பொழுதிலும் தொடர்ந்தும் தவறாமல் எழுதிவரும் இவருடைய பல பதிவுகள் பயன்மிக்கவை. தனது ஊடக அனுபவங்களை நகைச்சுவை கலந்த நடையில் பகிர்ந்துகொள்வதோடு வலைப்பதிய வந்த நான்கு மாத காலத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதிவிட்ட ஒரு உற்சாகமிக்க படைப்பாளி.

தாசன் - இலங்கையின் பிரபல பத்திரிகையொன்றில் ஊடகவியலாளராக எழுதி  வந்த இவர் தற்பொழுது துபாயில் வசித்துவருகிறார். இவரது 'ஆரவாரம்' வலைப்பூவில் பத்திரிகையில் வெளிவந்த ஆக்கங்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள், நகைச்சுவைகள் எனப் பல பதிவுகளை எழுதியிருக்கிறார். இறுதிப் பதிவாக கடந்த மே மாதப் பதிவிற்குப் பின்னர் தனது வலைப்பூவில் இவர் எதையும் எழுதவில்லையெனத் தெரிகிறது . இந்தப் பதிவின் மூலம் அவரைத் திரும்பவும் பதிவுகளையெழுத அன்பாக அழைக்கிறேன்.

முரளிதரன் மயூரன் - தனக்கென நான்கு வலைத்தளங்களை உருவாக்கி, பல தரப்பட்ட விடயங்களை (கணனி, மென்பொருட்கள், கவிதைகள், கட்டுரைகள், பத்திகள் என ) எழுதிவரும் இவர் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்தவர்.

தமிழன் - கறுப்பி - ஒரு பெண்ணிடம் தோற்றவன் எனத் தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இவரது 'காதல் - கறுப்பி' வலைப்பூ முழுவதும் காதலின் குறிப்புக்களைத் தாங்கி நிற்கின்றன. குறிப்புக்களில் அனேகமானவை இழந்த நேசத்தின் துயரங்களைப் பாடுவதாகவே இருக்கின்றன . அவற்றையும் அழகாகவே எழுதுகிறார்.

தங்கராசா ஜீவராஜ் - இலங்கை, தம்பலகாமத்தைச் சேர்ந்த வலைப்பதிவரான இவர் ஒரு வைத்தியரும் கூட. தற்பொழுது திருகோணமலையில் வசித்துவரும் இவருக்குச் சொந்தமாக பல வலைப்பூக்கள் உள்ளன. அவற்றில் அருமையான மருத்துவக்குறிப்புக்கள், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல எழுதிவருகிறார்.

மயூரன் - பல வலைப்பூக்களில் பங்குகொண்டு அருமையான பதிவுகளை எழுதிவருமிவர் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆன்மிகம், புகைப்படம், கலைஞர்கள் பற்றிய குறிப்பு ,இன்னும் பல பதிவுகளை எழுதிவருகிறார்.

கிங் - இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான இவரது வலைப்பூவில் கவிதைகள், பத்தி கட்டுரைகள், அனுபவக் குறிப்புக்கள், வலியும் நிதர்சனமும் உரைக்கும் புகைப்படங்கள் என்பன இடம்பெற்றுள்ளன.

வந்தியத்தேவன் - "நான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை." எனச் சொல்லும் இவர் இலங்கை, கொழும்பிலிருந்து பதிந்து வருகிறார்.

மதுவதனன் மௌ - 'நா' எனும் வலைப்பூவைத் தனதாக்கிக் கொண்டுள்ள இவர்   ' "நா அசைய நாடே அசையும" என்று சொல்வார்கள். நான் நாடசைக்க இங்கு வரவில்லை. நாவுக்கு அகராதியிலே நாக்கு, தீயின் சுடர், சொல், அழகு மற்றும் நடு என வேறுபட்ட நல்ல அர்த்தங்களைப் பார்த்ததால்' எனத் தன் 'நா'வுக்கான விளக்கத்தை மிக அழகாகச் சொல்கிறார். தனது எண்ணக்குறிப்புக்களை சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்.

தங்க முகுந்தன் -  'கிருத்தியம்' எனும் தனது வலைப்பூவில் அரசியல் கட்டுரைகளை, ஆன்மிகக் கட்டுரைகளை எழுதி வரும் இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதிவர். தற்பொழுது ஸ்விட்சர்லாந்திலிருந்து பதிவுகளை எழுதிவருகிறார்.


கவின் - 'வேற்று கிரகவாசி' எனத் தன்னைச் சொல்லிக் கொண்டாலும் இவரது சுவாரஸ்யமான பதிவுகளில் பயன்படுத்தியிருக்கும் அழகு தமிழ் பிறப்பிடம் யாழ்ப்பாணமெனச் சொல்கிறது. தற்பொழுது பிரான்ஸில் வசித்துவருமிவர் அண்மையில்தான் வலையுலகிற்கு வந்தாரெனினும் அதற்குள்ளாகவே பல பதிவுகள் எழுதிவிட்டார்.


சித்தாந்தன் - 'நான் என் கடலில் இறங்கி நடக்கத்தொடங்கினேன் வெறும் படுக்கைதான் தெப்பமாக மிதந்துகொண்டிருக்கிறது' எனத் தன்னைப் பற்றிச் சொல்லும் கவிஞரான இவர் மிகச் சிறந்த மொழிக் கையாளுகையைத் தன்னுள் கொண்டிருக்கிறார். 'தமருகம்', 'தருணம்', 'விமர்சனங்கள்' எனும் வலைப்பூக்களைக் கொண்டுள்ள இவர் அவற்றில் தன் படைப்புக்களை எழுதிவருகிறார்.

 இலங்கைப் பதிவர்கள் இன்னும் பலர் வலையுலகில் இருக்கிறார்கள்.இப்போதைக்கு என் பார்வைக்கு வந்தவர்களை இப்பதிவில் சமர்ப்பித்திருக்கிறேன். இன்னுமொரு பதிவில் மற்றவர்களையும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...

Friday, January 2, 2009

வலையரசிகள் !


சமையல், தையல், கைவேலைகளெனச் சில குறிப்பிட்ட செயல்களை மாத்திரமே செய்பவர்கள் பெண்களென்று நம்பிவந்த காலமும் சொல்லிவந்த காலமும் மலையேறி விட்டது அல்லது சாதனைப் பெண்களால் துரத்தியடிக்கப்பட்டுவிட்டது .

வலைப்பதிவுலகம் எல்லோரையும் ஒன்று சேர்த்திருக்க, வீட்டு விடயங்களில் மட்டும் மூழ்கியிருந்த இல்லத்தரசிகளும், தொழில் புரியும் மாந்தர்களும் கூடத் தங்கள் ஆற்றல்களைக் கைவண்ணங்களைக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமிடமாக வலையுலகம் ஆகியுள்ளதின்று !

இது மிகவும் மகிழ்வுக்குரிய விடயம். காலங்காலமாய்ப் பூட்டி வைக்கப்பட்ட மனக்கிடங்குகளில் தூய ஒளி பாய்ந்து, உள்ளே மூச்சடக்கிக் கிடந்த திறமைகள் பல வெகு இயல்பாயும் ஆச்சரியம் தரக்கூடியதாயும் வெளிவரக் கணனியும் காலமும் பேருதவி செய்கிறது. அவ்வாறாகக் கணனியையும் காலத்தையும் பயன்படுத்தித் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, வாசகர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்துள்ள பிரபல வலையரசிகளை இன்று பார்க்கலாம்.

ஷைலஜா - பிரபல எழுத்தாளரான இவரது வலைப்பூ - எண்ணிய முடிதல் வேண்டும். இத் தலைப்பினைப் போலவே இவர் எண்ணியதெல்லாம் செய்து முடித்திருக்கிறார். எழுத்தாளராக, பாடகியாக, நடிகையாக, திரைப்படங்களில் பிண்ணனிக்குரல் கொடுப்பவராக, பதிவராக எனப் பலமுகங்கள் இவருக்குண்டு. இவரது வலைப்பூ முழுதும் அருமையான கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், பாடல்கள் என நிறைந்திருக்கிறது .


ராமலக்ஷ்மி - தனது கல்லூரிக்காலத்தில் எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்திய திறமைகளை முத்துச் சரமாய்க் கோர்த்திருக்கிறார் இந்த இல்லத்தரசி. பெரும்பாலான இவரது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என்பன சமூகச் சீரழிவுகளையே சாடி நிற்கின்றன. மிக அழகான புகைப்படங்களைக் கவிதைகளோடு சமர்ப்பித்திருக்கும் இவருள் மிகத் திறமையான புகைப்படக்கலைஞரும் ஒளிந்திருக்கிறார்.

துளசி கோபால் - வலையுலகின் மூத்தபதிவர். அறிமுகமே தேவையற்றபடிக்கு எல்லோராலும் அறியப்பட்ட இல்லத்தரசி. எனக்கும் இன்னும் பலருக்கும் நகைச்சுவை கலந்த மொழிநடையோடு அருமையான பாடங்கள் நடத்தும் கைகளில் பிரம்பற்ற பெண் வாத்தியார். இவருடைய துளசி தளத்தில் அனுபவக் கட்டுரைகள், பயணக்கட்டுரைகள், புதுப்புது சமையல் குறிப்புக்கள், தான் எடுத்த அழகிய புகைப்படங்களென எண்ணூறுக்கும் அதிகமான மிகச் சிறந்த பதிவுகள் நிறைந்திருக்கின்றன. தனது மறுமொழிப் பின்னூட்டங்களிலும் நகைச்சுவை மிதக்கப் பதிலளிக்கும் சிறந்த பதிவர்களில் இவரும் ஒருவர்.

கவிநயா - நினைவின் விளிம்பில் இவரது எழுத்துக்களின் சாம்ராஜ்ஜியம். கணனி வல்லுனரான இவரது பணி மிகுந்த நேரங்களுக்கிடையில் கிடைக்கும் தனது நேரங்களைப் பயனுள்ள வழிகளில் கழிக்கும் இவரொரு நடன ஆசிரியை, பாடலாசிரியை, பாடகியும் கூட. இவரது வலைப்பூ அழகிய கவிதைகள், சிறுகதைகள், பாடல்கள், ஆன்மிகக்கட்டுரைகளென நிறைந்திருக்கிறது.

சுவாதி சினேகன் - "யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனால் புலம் பெயர்ந்த தமிழ் பெண்; தமிழன்பினாலும் எழுத்தார்வத்தினாலும் கவிதை புத்தகமொன்றை அச்சேற்றியவள்; இன்னுமொரு கவியாக்கத்திலீடுபட்டிருப்பவள். சினேகம் என்ற ஒன்றிணைப்புக் குழுவொன்றை உருவாக்கி அதன் மூலம் புற்று நோய் , தொழுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கட்கு எங்களாலான உதவிகளைச் செய்வதற்காக இன்றும் முயன்று கொண்டிருப்பவள்." எனத் தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு வலம்வரும் இவரது புதிய கலித்தொகை போரின் பன்முக இன்னல்களைப் பாடும் கவிதைகளைக் கொண்டது. 'பிரவாகம்' எனும் தமிழ்குழுமமொன்றின் தலைவியாகவும் பல சிறந்த பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பல காத்திரமான கட்டுரைகளுக்குச் சொந்தக்காரரான இவர்.

சாந்தி ஜெயசிங் - கவிதைகள், சிறுகதைகள், குறுந்தொடர்களெனப் பல்சுவைகளையும் கொண்டது இவரது புன்னகை தேசம். இணைய வானொலியிலும் கலக்கும் இவரது குரல்வளத்தால் கல்கியின் படைப்புக்களை பலருக்கு அறியத்தருகிறார்.

திவ்யா - சோர்ந்து போயிருக்கும் கணங்களில் இவரது வலைப்பக்கம் போய் நின்றால் மனசுக்குள் மத்தாப்பூக்கள் இதழ்விட்டு மலரும். மிக ரசனை மிக்க இளமை சொட்டும் குறுந்தொடர்கள் கணனி வல்லுனரான இவரது சிறப்பு. அதுபோலவே இவரது அனுபவக்குறிப்புக்களும் கட்டுரைகளும் கூட நகைச்சுவையிழையோடச் சொல்லப்பட்டிருக்கின்றன.

மதுமிதா - பிரபல எழுத்தாளரான இவரது காற்றுவெளி, நீங்கா இன்பம், தழல் வீரம், பேசாப்பொருள் ஆகிய நான்கு வலைப்பூக்களிலும் கவிதைகளும் கட்டுரைகளும் மின்னுகின்றன. கவிஞர், எழுத்தாளர், பல நூல்களின் ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்ட சிறந்ததொரு படைப்பாளி.

பூங்குழலி - கவிதைகள், அனுபவக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் எனப் பலவற்றைத் தனது பூச்சரத்தில் தொடுத்திருக்கிறார் மருத்துவரான இவர். இவர் பகிர்ந்துகொண்டுள்ள மருத்துவ அனுபவங்கள் விழிகசியச் செய்பவை. மிகுந்த பணிகளுக்கும் மத்தியில் வலையில் எழுதிவரும் சாதனைப்பெண்மணி.

முத்துலட்சுமி கயல்விழி - இவரது சிறுமுயற்சி பயணக்கட்டுரைகள் , தான் ரசித்த திரைப்படங்களின் விமரிசனங்களெனப் பலவற்றை சுமந்தவண்ணம் இருக்கிறது. மிக இயல்பான , மனங்கவரும் எழுத்துநடை இவருடையது.

பாசமலர் - இவரின் பெட்டகத்தில் கவிதைகள்,சிறுகதைகள், கட்டுரைகள், டயறிக்குறிப்புக்கள், திரைப்பட விமர்சனங்கள், நகைச்சுவைகள் எனப்பலதும் நிறைந்திருக்கின்றன. இவரது மொழிபெயர்ப்புப் பயிற்சி ரசனைக்குரிய முயற்சி.

கயல்விழி - ரிலாக்ஸ் ப்ளீஸ் எனும் வலைப்பூவுக்குச் சொந்தக்காரரான இவரது எழுத்துக்கள் மிகவும் துணிச்சல்மிக்கவை. தன் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகத் தேவையற்ற தயக்கங்களின்றி வெளிப்படுத்தும் இவரது அருமையான எழுத்துக்கள் அதிரச் செய்வதோடு நாம் அறியா உலகொன்றின் கதவுகளைத் திறந்து காட்டுகின்றன. பிடித்திருக்கிறது இவரது எழுத்துக்கள்.

செல்விஷங்கர் - 'என் எண்ணங்கள்...நினைவுகள் இங்கே' எனச் சொல்லும் பட்டறிவும் பாடமும் இவரது வலைப்பூ. அழகான கவிதைகளை இதில் எழுதிவரும் பேராசிரியரான இவரது எண்ணச் சிறகுகள் அருமையான மரபிலக்கியப் பாடல்களின் விளக்கங்களைச் சொல்கின்றது. இவர் தனது எழுத்துக்களைப் பற்றிச்சொல்கையில் "ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்! ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது! என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்! இது தான் நான்! இது - மெய்! இதைத் தவிர வேறில்லை எனக்கு! " என்கிறார்.

இன்னும் பல வலையரசிகள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்திய வண்ணம் இப் பதிவுக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களையும் இன்னுமொரு பதிவில் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...

Thursday, January 1, 2009

வருக 2009 ; வாழ்நாள் முழுதும் பயன்தரும் இவற்றைப் போலப் பல பதிவுகளோடு !

Photobucket

புதியதொரு ஆண்டு அனைவருக்குமான எதிர்காலக் கணங்களைக் கைகளில் ஏந்தியபடி வந்திருக்கும் இந் நன்னாளில் என் சக பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனதும், வலைச்சரம் பொறுப்பாளர்கள் அனைவரினதும் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


பழையன கழிந்துவிட்டன. கடந்த வருடத்தின் நாட்களை நிறைத்த இனிப்பான, கசப்பான தருணங்களனைத்தையும் தாண்டிவந்து இப் புதுவருடத்தில் எல்லாம் மகிழ்வாகவும் நன்றாகவும் நிகழவேண்டுமென மனதிற்குள்ளும் வெளியிலும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் உங்களோடு எனது பிரார்த்தனைகளும் இணையட்டும்.

2008 இன் நாட்குறிப்பு எழுதி எழுதி அல்லது எழுதாமலேயே காலாவதியாகி விட்டது. புது நாட்குறிப்பில் தொடர்ந்து தினமும் எழுதவேண்டுமென்ற எண்ணம் மனதினை நிறைத்திருக்கும். எனக்கும் அப்படித்தான். ஆனால் நேரமின்மை என் விஷயத்தில் சிவப்புக்கோடிட்டு விட்டு " பதிவெழுதவே நேரமில்லை. டயறி எழுதப் போகிறாயா? எழுது பார்க்கலாம்" எனச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பதாகத் தோன்றுகிறது.

எப்படியோ...நாட்களின் கணங்களை அதன் போக்கில் விட்டுவிடலாமென்றும், நிகழ்வுகள் என் முன்னால் வரும்பொழுது எதிர்கொள்ளலாமெனவும் எண்ணியிருக்கிறேன். எப்படிச் சாத்தியப்படுகிறதெனப் பார்க்கலாம் :)

இப் புது வருடத்தின் முதல்நாளில் வருங்காலத்தின் ஒவ்வொரு நாளைக்கும் தேவைப்படும், பயன் தரும் பதிவுகள் பலவற்றைத் தங்களுள்ளடக்கியிருக்கும் நானறிந்த சில  வலைப்பூக்களைத் தருகிறேன். இவ் வலைப்பூக்களில் அடங்கியிருக்கும் பதிவுகள் பொக்கிஷங்களையொத்தவை. எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. இப்பதிவுகள் கொண்டிருக்கும் உள்ளடக்கங்களின் சிறப்பான , அன்பான வழிகாட்டல் பாமரரையும் விஷயஞானம் உள்ளவராக ஆக்கக்கூடியவை. பதிவுகளில் உள்ள  விடயங்கள் தொடர்பான சந்தேகங்கள் எழுமிடத்து சம்பந்தப்பட்ட பதிவாசிரியரைத் தொடர்புகொண்டால் உடனடியாகத் தீர்வுகள் கிடைக்கின்றன.


ஆரோக்கியம்


' ஹாய் நலமா?' எனக் கேட்டுத் தன் வலைத்தளத்தில் பயனுள்ள பல மருத்துவக்குறிப்புக்களை எழுதிவரும் இவர் ஒரு மருத்துவர். பிரபலமான சஞ்சிகைகளிலும் எழுதிவருவதோடு ஒரு இலக்கிய விமரிசகரும் கூட. காலத்திற்கேற்றவாறான நல்ல பல பதிவுகளை இவர் தொடர்ந்து தருவதோடு,  ஆரோக்கியம், நோய்கள், சுகாதாரம், மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்கள் பின்னூட்டங்களாகக் கேட்கப்படுமிடத்து உடனடியாகத் தீர்வு சொல்கிறார். மிகப் பயனுள்ள வலைத்தளம் இவருடையது.


பயனுள்ள மருத்துவக் கட்டுரைகளைத் தனது வலைப்பூவில் எழுதி வரும் இவர் ஒரு மருத்துவர்.  பின்னூட்டங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மிகவும் பயனுள்ள விதமாக உரிய மருந்துகளோடு விளக்கமாகவும் தெளிவாகவும் பதிலளிக்கிறார். பலரும் பேசத் தயங்கும் பாலியல் தொடர்பான விரிவான பதிவுகள் இவருடையதாக உள்ளது. பாலியல் அறியாமை, அது சம்பந்தமான நோய்களுக்கான தீர்வுகள் போன்ற பல பதிவுகள் பயனுள்ளவையாக உள்ளன.


கணினி
கணினி, அதற்குத் தேவையான மென்/வன் பொருட்கள், வைரஸ் நீக்கிகள், இணைய வலைப்பின்னல்,இணையம், கைத்தொலைபேசி, அதற்குத் தேவையான மென்/வன்பொருட்கள், பிற நுட்பங்கள், இலவசப் பதிவிறக்கங்கள் போன்ற கணினி, கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களுக்குத் தேவையான அத்தனை உபயோகமான தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது இவரது வலைத்தளம். கணனி சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவெனக் கேட்டால் உடனடியாகத் தீர்வுகள் கிடைக்கும் இவரது வலைத்தளத்தில் பிடித்த சலனப்படங்கள், ஒளிப்படங்கள், ஒலிக் கோப்புகள், மென்புத்தகங்கள், நகைச்சுவைகள், செய்திகள், வேலை வாய்ப்புகள், விமர்சனங்களெனப் பல பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மிக அருமையான பதிவுகளை எழுதிவரும் இவரது ஒவ்வொரு பதிவோடுமொரு இணைய மென்புத்தகம் இலவசமாக வழங்கப்படுவது சிறப்பு.


கணினி உலகின்  புதிய மென்/வன்பொருட்கள்,  இலவச பதிவிறக்கங்கள், இலவச கல்விச் சேவைகள் , புதுப்புது தொழிநுட்பங்கள் எனப் பல பயனுள்ள பதிவுகளைத் தன்னிடத்தில் கொண்டிருக்கிறது இவரது 'தமிழ்2000' வலைத்தளம். சந்தேகங்கள் எழுப்பப்படுமிடத்து தீர்த்துவைக்கும் இவரது பதிவுகள் தொழில்நுட்பம், சலனப்படம், ஒளியோவியம், இசை, ஐ பேப்பர், வாழும் கலை, பாட் காஸ்ட் ,மொழியாக்கம், ஒலி ஊடகம் என இன்னும் பல தலைப்புக்களில் வகைப்படுத்தப்படுத்தப்பட்டு எல்லோருக்கும் பயனளிக்கும் விதமாக உள்ளன. ஆங்கிலச் சொற்களுக்கிணையான புதிய தமிழ்ச் சொற்களைத் தன் பதிவுகளில் பயன்படுத்துவது சிறப்பு.


'நான் பார்த்து படித்து ரசித்த சில பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...ஏனென்றால்??? தேடலும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதுமே வாழ்க்கை! நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேலும் அழகு.' எனச் சொல்லும் இவர் பல புதுப்புது கணினி நுட்பங்களைத் தன் வலைத்தளத்தில் எழுதிவருகிறார் அத்தோடு கைத் தொலைபேசி, பங்குச் சந்தை நிலவரங்கள், சேமிப்புக்கள், இலவச மென்பொருட்கள், இலவச பதிவிறக்கங்கள் எனப் பல பயனுள்ள தகவல்களை வழங்குகின்றன இவரது பதிவுகள். இன்னும் புதுப்புது உலக நிகழ்வுகளும் இவ்வலைத்தளத்தில் இடம் பிடித்துள்ளன.


"ஐடி வலம் பகுதியில் கணினித் துறையில் எனக்குத் தெரிந்த விடயத்தை தெரிந்த பாசையில் சொல்லிவருகிறேன். அவ்வளவுதான். இந்த ஆக்கங்கள் யாவும் நான் எழுதியிருப்பது எழுதுவது அத்தனையும் என்னைப் போன்ற சாதாரண கணினிப் பயனர்களுக்கே " எனத் தன்னடக்கமாகச் சொல்லிக் கொள்ளும் இவரது பதிவுகள் அத்தனையும் கணினிப் பயனர்கள் அனைவருக்கும் மிகப்பயனுள்ளவையாக இருக்கின்றன. இணைய உலகில் அறிமுகமாகும் கணினி சம்பந்தப்பட்ட புதுப்புதுத் தகவல்களை நம் பார்வைக்கு உடனடியாகக் கொண்டுவந்து விடுகின்றன இவரது பதிவுகள்.


'கணித் துளி - கணினி பற்றிச் சில துளிகள்' எனச் சொல்லும் இவரது வலைத்தளம் கணினி பற்றிய பயனுள்ள பல பெருந்துளிகளை உள்ளடக்கியுள்ளது. இணையம், கணினி, யூனிக்ஸ், லீனக்ஸ், விண்டோஸ், வைரஸ், ஹைபர்நேட், XP எனப் பல பிரயோசனமான வழிகாட்டல்களோடு கணினி வன்பொருட்கள் பாவனை பற்றிய உபயோகக் குறிப்புக்களையும் கொண்டிருக்கின்றன. சம்பந்தப்பட்ட விடயங்களில் வினவப்படும் சந்தேகங்களுக்கு உடனடியாகப் பதிலளிக்கிறார்.



ஆங்கிலம்
ஒரு புது மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அனேகரிடமுண்டு. அதிலும் உலகப் பொது மொழிகளிலொன்றான ஆங்கிலமொழி அத்தியவசியமானதொரு மொழி. எந்த நாட்டிற்குச் சென்றாலும் உதவி புரியக்கூடிய மொழி. இந்த ஆங்கிலத்தைத் தன் வலைத்தளத் தலைப்பாக வைத்திருப்பதோடு அதில் ஆங்கில மொழியை இலக்கண முறைப்படி அடிப்படையிலிருந்து மிக எளிதாக விளங்கும் வண்ணம் கற்றுத் தருகிறார் இவர். எல்லாப் பாடங்களையும் உதாரணங்களோடு விளக்குவதால் இவரது பாடங்கள் சம்பந்தமான முதல் பதிவிலிருந்து தொடர்ச்சியாகப் படித்துவந்தால் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வது இலகுவாக இருக்கும்.


தொழில்நுட்பம்
புகைப்படக்கலை ஒரு அருமையான பொழுதுபோக்கு மட்டுமல்லாது சிறந்த வருவாயை ஈட்டித்தரக்கூடிய அற்புதமானதொரு கலை. பொதுவாக இக்கலையைக் கற்றுத்தர ஆங்கில இணையத்தளங்களே அனேகமுள்ளன. முதன்முதலாக இலகுதமிழில் புகைப்படக்கலையை இலவசமாகக் கற்றுத்தருகிறது இந்த வலைத்தளம். சிறந்த புகைப்படக் கலைஞர்கள் சிலர் ஒன்று கூடி உருவாக்கியுள்ள இவ்வலைத்தளத்தில் எல்லாப் பதிவுகளும் புகைப்படங்கள் சம்பந்தப்பட்டதாக உள்ளதோடு அக் கலையையும் கற்றுத்தருகின்றன. எப் பொருளை எந்த விதத்தில், எந்தக் கோணத்தில்  எடுக்கவேண்டும், எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிற்தயாரிப்புக்களின் மூலம் மேலும் அழகு படுத்துவது எப்படி, புகைப்பட ஒளிக்கருவிகளை வாங்கும் முன்பு, உபயோகிக்கும் முன்பு கவனத்தில் கொள்ளவேண்டியவையென எல்லாப் பதிவுகளும் பயனுள்ளவையாக உள்ளதோடு, விடயமறியாப் பாமரர்க்கும் விளங்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளன. வாசகர்களின் புகைப்படங்களை வைத்துப் போட்டிகள் நடத்திப் பரிசுகளும் வழங்குவதால் பலரதும் விருப்பத்துக்குரிய வலைத்தளமாகவும் இது உள்ளது.


சமையல்
இவரின் சமையல்கட்டு வலையுலகத்தில் மிகவும் பிரபலம். பல நாட்டு சமையல்கலைகளோடு சைவம், அசைவம் எனப் பல சுவைகளிலும் செய்ய இலகுவான குறிப்புக்களை புகைப்படங்களோடு தாங்கி நிற்கிறது இவரது வலைத்தளம். இதுவரை சமைத்தேயறியாத  பலருக்கும் கூட மிகவும் உதவியாக அமையக் கூடிய பல பதிவுகளை இவ்வலைத்தளம் கொண்டிருக்கிறது. எளிமையான மொழிநடையில் இலகுவான வழிகளில் சமையற்கலையைக் கற்றுத் தருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இவர் வலைப்பதிவுகளெழுத ஆரம்பித்திருக்கிறாரெனினும் பயனுள்ள இலகுவான சமையல் குறிப்புக்கள் பலவற்றை அதற்குள்ளாகவே எழுதிவிட்டார். ஒவ்வொரு குறிப்போடும் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் தருவது சிறப்பு.

 புது வருடத்தின் துவக்க நாளிதில் உங்களனைவரையும் வலைச்சரமூடாகச் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றதில் மகிழ்ச்சி.
மீண்டுமொருமுறை
Photobucket

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...

Wednesday, December 31, 2008

கதை சொல்லிகள் !

பிறந்த கணம் தொட்டுக் கதைகளோடு கலந்துவிட்டவர்கள் நாம். சூழவும் சொல்லப்பட்ட கதைகளிலிருந்தே மொழிகளைக் கற்றுக்கொண்டோம் என்பது உண்மையன்றி வேறென்ன ? நமது ஒவ்வொரு செயல்களும் கூடப் பிந்திய கணங்களுக்குக் கதைகள்தானே.

வரலாறுகள் புராதனக்கதைகள்.
வாய்மொழி, சுவடிகள், புத்தகங்களெனத் தொடர்ந்து இப்பொழுது இணையத்திலும் கதைகள் சொல்லப்படுகின்றன. வேற்று தேசமொன்றின் யுத்தக்கதைகளென அல்லது பேய்களலையும் கதைகளெனச் சொல்லப்பட்டவற்றின் யுத்தவீரர்கள், மனிதத்தலைக் குதிரை, விளக்குமாறில் பறக்கும் சூனியக்கிழவி, சிறகு முளைத்த தேவதைகள் எல்லாம் இன்னும் மூளையில் பத்திரமாகவும், பாத்திரமாகவும் உள்ளன எனில் அந்தக் கதைகளெல்லாம் சுவாரஸ்யம் மிகுந்தவை அல்லது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டவை என்றுதானே அர்த்தம்.

அவ்வாறாகத் தங்கள் வலைப்பூக்களில் சுவாரஸ்யம் மிகுந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்பவர்கள் பற்றி இன்று அலசுகிறேன்.

சாந்தினி வரதராஜன் - 'நாளைய உலகம்' எனும் வலைப்பூவில் இவரது நேற்றைய காலங்களில் தோய்ந்த உலகம் சிறுகதைகளாக முழுமை பெற்றிருக்கிறது. அனேகமான கதைகள் தனது தாய்த்தேசத்தைப் பிரிந்த வலிகளை, அம்மாவுடனான நாட்களை, சொந்த மண்ணில் கழிந்த இளமைப்பருவத்தை அசைபோடுகின்றன.ஈழ மொழிநடையைப் பாவித்துக் கதைகள் சொல்லப்படும் விதம் சிறப்பு.

கே.பாலமுருகன் - உண்மை நிகழ்வு, புனைவு, பின்னவீனத்துவம், நகைச்சுவை என எல்லாத்தளங்களிலும் சிறப்பாகப் பயணிக்கின்றன இவரது சிறுகதைகள். மிகவும் வித்தியாசமான நிகழ்விடங்களைக் காட்சிப்படுத்துகின்றன இவர் கொண்டு வரும் எழுத்துக்கள் .

நிலாரசிகன் - அறிவியல், விஞ்ஞானப் புனைகதைகள், அனுபவக் கதைகள், கிராமத்துக் கதைகள், காதல் தொடர்களெனப் பல தளங்களில் தனது எழுத்துக்களை சுவாரஸ்யமாகக் கதை சொல்லவைத்திருக்கிறார் இவர்.

டிசே - மனமதிரச் செய்யும் பால்யத்தின் காலங்களை இவரது 'ஹேமா அக்கா' சிறுகதையில் கண்டேன். ஒவ்வொரு வரிகளும் கண்முன்னே களத்தினையும் அம்மனிதர்களையும் காட்சிப்படுத்துகின்றன. போரின் வன்மப்பொழுதொன்றில் நிகழ்ந்த வன்முறை, பெருங்கோபமொன்றினால் வெளியிட்ட உக்கிரவார்த்தைகளெனக் கதை, வாசிப்பவர்களின் மனதை இழுத்துக் கொண்டு பயணிக்கிறது.

சந்திரவதனா செல்வகுமாரன் - சிறுகதையுலகின் நீண்ட கால எழுத்தாளர். வாழ்வின் எல்லாப்புள்ளிகளையும் இணைத்து சிறுகதைகள், குட்டிக்கதைகளென அழகிய கோலங்களைத் தாங்கி நிற்கிறது இவரது வலைப்பக்கம். தனது சிறுகதைத் தொகுப்பின் கதைகளையும் பதிவிட்டிருப்பது பிடித்திருக்கிறது.

அகிலன் - 'மரணத்தின் வாசனை'யென இவர் முகரச் செய்யும் பக்கங்களில் யுத்தமும் குருதியும் சமமாய்க் கலந்த வாடையடிக்கிறது. சிறுகதைகளெனச் சொல்லியிவர் எழுதவில்லையெனினும் இவரது இந்த இரத்தக்குறிப்புக்களின் தாக்கம் மிக நீண்ட நாட்களுக்கு நெஞ்சில் அதிர்பவை. சொற்களையும் எழுத்துக்களையும் அருமையாகக் கையாளும் திறன்படைத்தவரின் கதை சொல்லும் திறனும் அபாரம்.

சக்தி ராசையா - வாழ்வின் பக்கங்களிலிருந்து இவரது கதைகள் புரட்டப்படுகின்றன. மொழி நடையும் பேச்சு நடையும் இயல்பாக வருகிறது இவரது கதைகளில். மனதில் நிற்கும்படியான கருக்களைக் கொண்டு கதை சொல்ல முயல்வது மிக நன்று. நம்பிக்கையூட்டும் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.

பாண்டித்துரை - யதார்த்த வாழ்வின் கணங்களை, அவற்றின் நிகழ்வுகளைத் திறம்படச் சுவாரசியமாக சொல்கின்றன இவரது சிறுகதைகள். இக்கதைகளில் பயன்படுத்தும் வட்டார மொழி வழக்கு, கதைகள் செல்லும் நடை என்பன சிறப்பாக உள்ளன.

 ஆடுமாடு - நாட்டுப்புறக்கதைகளையே அதிகம் சொல்வதாலோ என்னவோ, இவரது புனைப்பெயராக ஆடுமாட்டினை வைத்துக்கொண்டிருக்கிறார். பெயருக்கேற்பவே சொல்லிப்போன கதைகளைப் பலமுறை அசைபோட வைக்கிறார். கிராமத்து வட்டார மொழிவழக்கு இவரது கதாபாத்திரங்களைக் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது.

ஜி -  மிகச் சுவாரஸ்யமான எழுத்துநடை இவருடையது. வாழ்வின் அனுபவங்களைப் பதிவாக்கும் சாயல் கூட அழகிய சிறுகதையை ஒத்திருக்கிறது. இவரது குறுந்தொடர்களும் அருமையாக உள்ளன.

விக்னேஷ்வரன் - நல்ல தரமான சிறுகதைகளைத் தந்த இவரது தற்போதைய பதிவுகள் ' 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்' எனும் தொடர் நவீனமாக இருக்கின்றன . வாசிக்கும் பொழுது மனதிலே இயல்பாகக் காட்சிகள் விரியும் படி எழுதியிருப்பது இவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

வே.பிச்சுமணி - இக் கதைகள் யதார்த்தக் குறிப்புகள். பெரும்பாலான கதைகள் குடும்பமும் அதன் உறவுகளையும் சார்ந்து சொல்லப்பட்டிருக்கின்றன. கதை சொல்லும் நடை சிறப்பாக இருப்பதோடு பயன்படுத்தும் மொழி, தன்பால் ஈர்க்கிறது.

பாஸ்கர் - அனுபவக் கதைகள், அறிவியல் புனைவுக் கதைகளென்கின்ற வெளிகளில் உலவிவருகின்றன இவரது எண்ணங்கள். சொல்லப்படும் விடயங்கள் சிந்திக்க வைப்பதோடு நல்ல மொழி நடையில் எழுதப்பட்டுமிருக்கின்றன.

கோசலன் - காத்திரமான சிறுகதைக்குச் சொந்தக்காரர், தனது வலைப்பூவில் இதுவரை ஒரு சிறுகதையைத்தான் எழுதியிருக்கிறார் எனினும் தொடர்ந்தும் இது போன்ற தரமான சிறுகதைகளை எழுதுவாரென எதிர்பார்க்கவைக்கும் எழுத்து இவருடையது.

இன்னும் வலையுலகில் நான் அடிக்கடி சென்றுவரும்  பல  பிடித்தமான கதை சொல்லிகள் இருக்கிறார்கள். இன்னுமொரு பதிவில் அவர்களையும் கதைசொல்லச் சொல்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...

Tuesday, December 30, 2008

இவர்களுக்குக் கவிதை முகம் !

கவிதை - ஏகாந்தத்தில், தனிமையில் அல்லது கூட்டத்துக்குள்ளும் , நீரின் சலசலப்பில், தாகத்தில் என எல்லாப் பொழுதுகளிலும், உணர்வுகளிலும், இடங்களிலும் வண்ணத்தைப் போலப் பரந்துகிடக்கிறது.
அவ்வண்ணங்களைத் தொட்டு ஓவியமாக்குபவர்கள் பலர். எனினும் ஒரு சிலரது கைவண்ணங்கள் மட்டுமே என்றுமே அழியாதனவாக, வனப்பு நிறைந்த ஓவியமாகப் பலர் மனதிலும் சட்டமிட்டுத்தொங்குகிறது ! எனவே காலங்களைத் திசைகளை
அளவிடும் கருவிகளுக்குள் கவிதையும் ஒன்றாக இருக்கிறது எனலாம்.

ஃபஹீமா ஜஹான் - அழகிய சொற்களை ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்துக் கோர்த்து, பார்த்துக்கேட்டு அனுபவித்தவைகளை வித்தியாசமான வடிவங்களில் கவிதைகளாகத் தருபவர். இவரது கவிதைகளின் முதல் வரியினை வாசிக்கத் தொடங்கும்பொழுதே, கவிதை குறித்து நிற்கும் விம்பம் மனதிலே உருவெடுத்து எழத் தொடங்குகிறது. கவிதை பூர்த்தியடைகையில் சொல்லொணா உணர்ச்சிகள் மனம் முழுதும் வியாபித்து கவிதையோடு நிரம்பி நிற்கின்றன. சமகால இலங்கைப் பெண் கவிஞரான இவரது கவிதைகளுக்குள்ளும் இலங்கைப் போர் குறித்தான வேதனை வரிகள் பல கலந்தேயிருக்கின்றன.

தமிழ்நதி - இவ் வலைத்தளத்தில் வாழ்வின் தனிமையும், போர் தந்த இடர்களும், இடப்பெயர்வு தந்த வலிகளும் காயங்களுமெனப் பல சுய அனுபவங்கள் புலம்பெயர்ந்து வாழும் சமகால இலங்கைப் பெண் கவிஞரான இவரது எழுத்துக்களில் வடிக்கப்பட்டுக் கவிதைகளாக மின்னுகின்றன. நான் அனுபவித்திராச் சில குரூர உலகங்களை இவரது கவிதைகள் எளிதாக வெளிக்கொணர்ந்து 'பார்' எனக் காட்டுகையில் அதிர்ந்துவிடுகின்றது மனது .

உமாஷக்தி - சிறு சிறு வரிகளுக்குள் பேரர்த்தங்கள் ஒளிந்திருக்கும் வண்ணம் கவிதைகளை மிகச் சிறப்பாக வடித்திருக்கிறார். மன உணர்வுகளையும் அனுபவங்களையும் கவிதைகளாகக் கோர்த்திருக்கிறார். சிந்திக்கவைக்கும் கவிதைகள் இவரது வலைத்தளத்தைப் பூரணப்படுத்துகின்றன.

தீபச்செல்வன் - சமகால யுத்த பூமியின் அத்தனை இன்னல்களையும் பார்த்தும் அனுபவித்தும் வரும் இக்கவிஞரின் வரிகளெல்லாம் குருதி பூசிய வலிகளைச் சுமந்தபடி நம்பிக்கையோடு எழுகின்றன. ஓங்கி ஒலிக்கும் குரலோடு நிகழ்காலத்தைப் புகைப்படங்கள் மற்றும் காத்திரமான கவிதைகளோடு முன்வைக்கிறார்.

சஹாராதென்றல் - ஒவ்வொரு கவிதையிலும் வேறுபட்ட புதுப்புதுச் சொற்கள், ஒரே கருவினைப் பலப்பலப் புது வடிவங்களில் காத்திரமாகச் சொல்லவிழைதல் போன்றவற்றை இவரது கவிதைகளில் காணலாம். ஏதோ ஒரு ஏக்கமும் தனிமையும் கவிதைகளினூடு தெரிகின்றது. வாசிப்பவருக்குத் தன்னை அக் கவிதைகளோடு ஒன்றிப் பயணிக்கவைத்தல் இலகுவாக இருக்கின்றது.

முபாரக் - சிந்திக்க வைக்கும் வரிகளைக் கொண்டனவான இவரது கவிதைகள் மனதிற்குள் சில முடிச்சுகளை விட்டுச் செல்பவை. சமூகக் கருத்துக்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் தொக்கிநிற்கின்றன. அவையே சிந்திக்கவும் வைக்கின்றன.

லக்ஷ்மி சாஹாம்பரி - பெரும்பாலான அழகுணர்ச்சிக் கவிதைகளைக் கொண்டது இவரது வலைப்பூ. துயரத்தைக் கூட மிக மென்மையான ஒரு நளினத்தோடு எழுதவிழைகிறது இவரது பேனா. சொல்லவந்ததை வேண்டாச் சொற்களின்றி அழகுறச் சொல்லிச் செல்கிறது.

இலக்குவண் - எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மன உணர்வுகளை அப்பட்டமாகக் கவிதைகள் வழியே வெளிக்கொணர்பவர் இவர். பல நேரங்களில், இவரது வரிகளைக் கண்டு வியந்திருக்கிறேன் . தனிமையின் கொடுங்கரங்கள் தன் கழுத்தை நெரிப்பது கண்டு வெகுண்டெழுகிறதிவர் எழுத்துக்கள்.

கோகுலன் - இயற்கை - அது சுமந்து நிற்கும் எழில் , ஈரம், வெப்பம், அழிவு ; வாழ்க்கை - அதில் தோன்றி மறையும் காதல், நேசம், தனிமை, வலிகளெனப் பல வகையான கவிதைகளால் நிறைந்திருக்கிறது இவரது வலைப்பூ. அழகான கற்பனைகள் மனதிலே கருவினைக் காட்சிப்படுத்துகின்றன. இவர் அனேகக் கவிதைகளில் ஒரே படிமங்களைக் கொண்ட, ஒரே சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால், இவர் சொல்வதைப் போல இத் தனிமை நேரப் புலம்பல்களும் கிறுக்கல்களும் அழகாகவே உள்ளன. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டார் பாடல்களெனப் பல படைப்புக்களைக் கொண்ட இவரது வலைத்தளம் கவிதை தொடர்பான பலதரப்பட்ட ரசனை கொண்டவர்களையும் தன்பால் ஈர்க்கும்.

ஷிப்லி - 'வாழ்க்கை என்பதும் ஒரு புதுக்கவிதைதான்..என்ன ஒரு புதுமை.. நம்மால் விளங்கவே முடியாத புதிர்க்கவிதை ' எனச் சொல்லும் இவரது கவிதைகளில் யுத்தப் பிரதேசங்கள் இருளச் சூழ்ந்த அடர் மேகங்களின் இருள் கொண்டுவரும் வலிகள் தெரிகிறது. வாழ்வின் தனிமையும் ஏகாந்தமும் தந்த சிறு தவிப்பும் பெருந்துயரமும் வரிகளில் இழையோடுவதானது கவிதைக்கு அழகூட்டுகிறது .

அன்புடன் புஹாரி - அழகிய வலைப்பக்கத்தின் கவிதைகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. கவிஞர் பல கருக்களைத் தன் கவிதைகளுக்குள் அடக்கியிருக்கிறார். அழகான, எளிமையான சொற்கள் சொல்லவந்த விடயத்தை மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. மெல்லிய தூறலாய் மனம் நனைக்கின்றன இவரது கவிதைகள்.

என்.சுரேஷ் - பல கவிதைத் தொகுப்புக்களுக்குச் சொந்தக்காரரான இவரது வலைப்பூவில் நூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களிலும் வீச்சுக்களிலும் உள்ளன. சுவாரஸ்யமான வலைப்பூ இவரது.

முகுந்த் நாகராஜன் - சின்னச் சின்னக் கவிதைகளில் பேருண்மைகளைப் புரியவைத்தலும், அனுபவங்களைப் பகிர்வதுமாக உள்ளது இவரது வலைப்பூ. சில கவிதைகள் மனதைப் பூவாய் விரியவைப்பதோடு, சில முகத்திலறைந்து நிதர்சனம் உணர்த்துகின்றன.

சரவணகுமார் - பெரும்பாலான கவிதைகள் காதல்துயர் குறித்து எழுதப்பட்ட அழகிய கவிதைகளைக் கொண்டது இவரது வலைப்பூ. இவரது கவிதைகளில் அனேகமான முடிவுகள் அதிர்ச்சியைத் தரவல்லன.

அனுஜன்யா - தான் கடந்துவந்த அனுபவங்களையே இவரது அனேகக் கவிதைகள் பாடுகின்றன . வாழ்வின் எல்லாப் பக்கங்களும் அருமையான கவிதைகளாக்கப்பட்டிருக்கின்றன.

கடற்கரய் -ஆழமான கவிதைகளைக் கொண்ட வலைப்பூ இவருடையது. அதிசயிக்கத்தக்க தளங்களில்தான் பயணிக்கின்றன இவரது கவிதைகள். இவரது கவிதைநடையும் மிக அழகாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.

குட்டிசெல்வன் - அடர்த்தியான தனிமையும், மழைநாட்களும் இவரது எல்லாக் கவிதைகளிலும் எட்டிப்பார்க்கின்றன. துலக்கி விட்டதைப் போல அழகான வரிகள் மின்னுகின்றன. இவரது சில கவிதைகளின் வரிகளினூடு பயணிப்பது இலகுவாக இருக்கிறது.

நிவேதா - அதிர்வைக் கிளறும் வரிகளைக் கொண்டவை இவரது கவிதைகள். பால்யகாலத்தில் கேட்கப்படும் கிழவியின் கதைகளாய் இவர் கவிதைகள் மனதிற்குள் விரிகின்றன.

தேவ அபிரா - மனதின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள் இவரது பாடுபொருளாகியிருக்கின்றன. 'துயரின் நிழலே படராப் பொழுதாய் நீழும் வாழ்வே நினதாய் ஆக! ' எனச்சொல்லும் இவரது கவிதைகள் துயர்களையும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஸ்நேகிதன் - காத்திரமான வரிகளைக் கொண்ட இவரது கவிதைகளுள் புகுந்து வெளிப்படும்பொழுது மீண்டும் மீண்டும் புதையவைக்கிறது இவரது கவிதை மொழி.


இன்னும் அழகிய, காத்திரமான வரிகளைத் தனதாக உடைய நிறையக் கவிஞர்கள் எனதிந்தப் பதிவுக்கு வெளியேயும் இருக்கிறார்கள். இந்த ஒரு வாரத்துக்குள் நேரமும் இணையமும் அனுமதித்தால் இன்னொரு பதிவிலும் பலரைப் பட்டியலிடுகிறேன்.


என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...

Monday, December 29, 2008

நீண்ட காலமாகத் தப்பித்து ஓடவிழைந்தவன், வந்திருக்கிறேன் !

நண்பர்கள் அனைவருக்குமான இனிய வணக்கங்களைச் சுமந்தவனாக இங்கு வந்திருக்கிறேன் !

பேராற்றல் மிக்கவர்கள் பலர் சூழ்ந்திருக்கும் 'வலைச்சரம்' எனும் மேடையில் ஏறத்தயங்கி, ஆறு மாதங்களுக்கும் மேலாகத் திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவனை ஒரு வார ஆசிரியரெனும் கிரீடத்தைச் சூட்டவெனத் தொடர்ந்தும் கைப்பிடித்து இழுத்து இன்று மேடையில் ஏற்றி, அன்பாய்ப் பார்த்து மகிழும் நண்பர் சீனாவுக்கு நன்றி !

வேலை செய்யும் நிறுவனத்தின் கணனியையும், இணையத்தையும் மட்டுமே நம்பிப் பதிவிட்டும், எழுதியும் வருமெனக்குப் பலராலும் பார்க்கப்படும் ஒரு இணையத்தளத்தில்  ஒரு வாரம் தொடர்ந்தும் பதிவிடுவதாக வாக்குக்கொடுத்துவிட்டு மேற்சொன்ன இரண்டும் அல்லது இரண்டிலொன்றேனும் ஏமாற்றிவிடுமெனில் , வாக்குமீறிவிட்டேனெனும் தவறான புரிதல்களுக்கு ஆளாகிவிடுவேனென்ற அச்சமே ஓடி ஒளிய விதித்தது என்னை.

இருப்பினும் எத்தனை காலம்தான் மறைந்தொளிதல் இயலுமெனக் கேட்டுக்கொண்டேயிருந்த ஆழ் மனதின் கேள்விக்கு துணிச்சலாகப் பதிலிட முனைந்திருக்கிறேன் இன்று..!

முதல் பதிவு என்னைப் பற்றிய அறிமுகம் எனச் சொல்லியிருக்கிறார்கள். பெரிதாகச் சொல்ல என்னிடம் எதுவுமில்லை தாய்த்தேசம் இலங்கையென்பதைத் தவிர..!

நாட்டின் நிலைமையும், எதிர்காலம் குறித்த அச்சங்களும், கனவுகளும் வேறொரு நாட்டினைப் பிழைப்புக்காக நாடச் செய்திருக்கிறது . முதன்முதலாகப் பிரிய நேரிட்ட தாய்மண்ணும், வீடும் குறித்தான பால்ய மற்றும் பழைய நினைவுகள் துரத்திவர அவற்றைத் திசைதிருப்பவென  எழுத்தின் கைப்பிடித்தேன். தனிமையின் கோரக் கரங்களில் நான் சிக்கிவிடாதபடி என்னை இழுத்துக்கொண்டு ஓடுகிறது இப்பொழுது அது.

கவிதைகள், சிறுகதைகள், எண்ணச் சிதறல்கள், விமர்சனக் கட்டுரைகள், புகைப்படங்கள், உலக நிகழ்வுகள் ஒரு பார்வை, சிந்திக்கச் சில படங்கள், ஆங்கிலப்பதிவுகள் என நேரம் வாய்க்கும் தருணங்களிலெல்லாம் எழுதிவருகிறேன். அவ்வளவே !


அடுத்த பதிவு முதல் பதிவுலகில் பிடித்த பதிவுகளை அறிமுகப்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள். நோக்கும் திசைகளிலெல்லாம் பிடித்த பதிவர்களே நிறைந்திருக்கிறார்கள். எனது சுவாசத்தில் அவர்களது மூச்சுக்காற்றும் வற்றாதவொரு அன்பும் நிறைந்திருக்க, ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும் அறிமுகப்படுத்துதல் எவ்வாறு தகும்? நேரம் வாய்க்கையில் தமிழ்மணம் காட்டும் எல்லாப்பதிவுகளுக்குள்ளும் ஓடி ஓடிப் போய்வருபவன் நான். அது போலவே எனது பதிவுகளுக்குள்ளும் எல்லா நண்பர்களும் வந்துபோய்க்கொண்டிருக்கிறீர்கள் எனும்பொழுது இன்று பெரும் சவாலை முன்வைத்து உங்கள் முன்னால் நிற்கிறேன். ஏதோவொரு சங்கடம் சூழ்ந்ததாய் நெஞ்சம் துடிக்கிறது. ஒரு வார அவகாசத்துக்குள் என்னாலியன்ற பதிவுகளையெல்லாம் உங்கள் முன்வைக்கிறேன்.

ஏற்றுக் கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு...

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது