07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கீதமஞ்சரி. Show all posts
Showing posts with label கீதமஞ்சரி. Show all posts

Sunday, September 21, 2014

புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்...

   மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும்
   மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்
   சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,
இனிதினிதாய் எழுந்துஉயர் எண்ண மெல்லாம்
   இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
   புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்.

பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப நூலகங்கள் பல அற்புதமான வாழ்க்கைத் தருணங்களை நமக்கு உருவாக்கித் தருகின்றன. இப்போது இணைய வழி நூலகங்கள் பல விரல் சொடுக்கிலேயே நம் வாசிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

1. தமிழ் இணையக் கல்விக்கழகம் அவற்றுள் பிரதானமானது. எந்த வித லாப நோக்குமின்றி அரிய சேவையாற்றும் அதில் ஏராளமான பழந்தமிழ் இலக்கியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. வாசித்து மகிழவிரும்புவோர்க்கு வரமாகும் தளமது. 

2. பஞ்சுவெட்டுங்கம்படோ என்னும் விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நம் தமிழ்நாட்டில் விளையாடப்பட்ட விளையாட்டுகளில் அதுவும் ஒன்றாம். குதிரைக்கு காணங்காட்டல், கிளிதட்டு, கால் தூக்குகிற கணக்கப்பிள்ளை, பூக்குதிரை, பச்சைக்குதிரை, ஓயாக்கட்டை, பேய்ப்பந்து, பிள்ளையார் பந்து, மரக்குரங்கு என்று இன்று நாம் அறிந்திராத பல விளையாட்டுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தேவநேயப் பாவாணர் தனது தமிழ்நாட்டு விளையாட்டுகள் கட்டுரையில். தேவநேயப் பாவாணர் எழுதிய அனைத்துப் படைப்புகளையும் தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாய் வாசித்து மகிழலாம்.

3. சென்னை நூலகம் என்ற தளத்தில் குறைந்த அளவு உறுப்பினர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றாலும் சங்க கால இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை பல நூல்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. கல்கி, நா.பார்த்தசாரதி, மு.வரதராசனார், பாரதியார், பாரதிதாசன், ராஜம் கிருஷ்ணன், சு.சமுத்திரம், அறிஞர் அண்ணா போன்றவர்களுடைய நூல்கள் பிடிஎஃப் வடிவில் கிடைக்கின்றன. சாவி அவர்கள் எழுதிய வாஷிங்டனில் திருமணம் வாசித்து மகிழ வாருங்கள். 

4. மதுரை மின்தொகுப்புத் திட்டத்தால் உருவான பல பயனுள்ள நூல்களைத் தெரிந்துகொள்ளவும் தேவையானவற்றைத் தரவிறக்கிக் கொண்டு பயனடையவும் தமிழகம் தளத்துக்கு வாரீர். தேவாரப் பாடல்கள் முதல் திருவிவிலியம் வரை அனைத்து நூல்களையும் நம் வாசிப்பின் வசப்படுத்தச் செய்யும் வகையான திட்டம். 

5. Anorexia Nervosa – கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குளறுபடியான உண்ணல் நோய் என்கிறார் மருத்துவர் எம்.கே.முருகானந்தன் அவர்கள். இந்நோய்க்கான அடிப்படைக் காரணம் தமது உடல் சம்பந்தமான தவறான கருதுகோள்தான். இது பொதுவாக இளம் பெண்களிடையே காணப்படும் பிரச்சனையாகும். இளைஞர்களிடையே காணப்படலாம் என்ற போதிலும் பெரும்பாலும் பெண்களே பாதிப்படைவது அதிகம் என்று கூறி நோய் குறித்த ஒரு விழிப்புணர்வை உண்டாக்குகிறார்.

நீரிழிவு பற்றிய தவறான கருத்துகளையும் மேற்கொள்ள வேண்டிய சரியான தகவல்களையும் பகிர்ந்துள்ளார். நீரிழிவு நோயாளிகள் அனைவருக்குமான பயனுள்ள பகிர்வு இது. ஹாய் நலமா என்பது மருத்துவம் தொடர்பான எந்த ஒரு ஐயத்தையும் நிவர்த்தி செய்யக்கூடிய மிக்க பயன்பாடு மிக்கதான வலைப்பூ என்பதை விடவும் மருத்துவக் கையேடு என்பதே பொருத்தம்.  

6. கொக்குச் சத்தகம், பிளா, கொட்டப்பெட்டி, கள்முட்டி, மூக்குப்பேணி, தட்டுவம், கால்தட்டம் இவையெல்லாம் என்ன? நம் முன்னோர் பயன்படுத்திய அன்றாடப் பொருட்களான, இன்று வழக்கிலிருந்து ஒழிந்துகொண்டிருக்கும் இவற்றைப் பற்றி அறிந்துகொள்ள விருப்பமா? வாருங்கள் இலங்கையின் தகவல் களஞ்சியமான யாழ்ப்பாணம் தளத்துக்கு.

7. உலகின் மிகச்சிறிய உயிரினங்கள் பற்றி தமிழன் சுவடு தளத்தில் DR. சாரதி அவர்களின் கட்டுரையில் சுண்டுவிரல் அளவுள்ள குரங்கு, 17 அங்குல உயரக் குதிரை போன்றவற்றைப் பார்த்து ரசிக்க இங்கு வாருங்கள். தாயுமான விலங்கின பறவைகள் பற்றிய பல அற்புத தகவல்களை அறிந்துகொள்ள இங்கு வாருங்கள். 

8. அரைகுறையாய் விட்டுவைத்தக் காரணத்தால் மனம்விட்டு அகலாத ஒன்று காலங்கடந்து முழுமையாய்க் கொண்டாடப்படும்போது எழும் உளக்கிளர்ச்சியை  உள்ளது  உள்ளபடியே பதிவு செய்திருக்கிறார் மனநல  மருத்துவர் ருத்ரன் அவர்கள்.

9. இந்தோனேஷியத் தீவுகளில் ஒன்றான மேடானுக்குப் பயணித்த தன் அனுபவத்தை அழகாக விரிவாக படங்களுடன் பதிவிட்டுள்ளார் ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி அவர்கள். இயற்கை அழகு சூழ்ந்த இந்தோனேஷியத் தீவு பற்றியும், நாய்க்கறி உண்பது, இறந்தவர்களைப் புதைத்து, பின் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு தோண்டியெடுத்து எலும்புகளை தனியிடத்தில் சேகரிப்பது போன்ற விநோத கலாச்சார பழக்கவழக்கங்கள் கொண்ட பாத்தாக் இன மக்கள் பற்றியும் ஒரே மூச்சாய் வாசிக்கத் தூண்டும் பதிவு.



10. எனது ஓவியத்தையும் அதன் பின்னணியையும் பதிவு செய்யவே இத்தளம் என்கிறார் ரஞ்சித் பரஞ்ஜோதி தனது விதானம் தளம் குறித்து. மேலே உள்ள ஓவியத்தைப் பாருங்கள். எவ்வளவு ரசனையுடன் வரையப்பட்டுள்ளது! இதைக் குறித்து ஓவியர் சொல்வதாவது - யு. ஆர். அனந்தமூர்த்தியின் சம்ஸ்காராநாவலில் வரும் ஒரு நிகழ்வு wacom tablet மூலம் வரைந்தது. விதானம் தளத்தில் இதைப் போன்ற பல ஓவியங்களைக் கண்டு மகிழலாம். 

11. பெரும்பாலானோரின் பார்வையில் நாகரிகமற்றவர்களாகவும் அசுத்தப் போக்கைக் கொண்டவர்களாகவும் பழங்குடியினர் வரையறுக்கப்படுகின்றனர். இதனை சுட்டிக் காட்டியே நகர வாழ் மக்கள் இவர்களை வன்மையாக ஒதுக்குவதுண்டு. இடைப்பட்ட காலத்தில் மலேசிய பழங்குடியினரைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க முற்பட்டேன் என்ற முன்னுரையுடன் பழங்குடியினர் பற்றிய தகவல்களையும் அவர்களுடைய காலம், வாழ்க்கை முறை, மொழி போன்றவற்றைப் பற்றிய ஆய்வலசலை முன்வைக்கிறார் நவீன் செல்லங்கலை அவர்கள் வல்லினத்தில். 

 12. ஜீ தொலைக்காட்சியில் ஒரு கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட தனக்கு உண்டான கசப்பான அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் திலகபாமா அவர்கள். சுயமரியாதை இயக்கத்தூண் எனப் போற்றப்படும் ஐயா சௌந்திரபாண்டியனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டார் என்பது சிறப்பு.

13. அப்புசாமி சீதாப்பாட்டியைத் தெரிந்தவர்களுக்கு பாக்கியம் ராமசாமி அவர்களைத் தெரிந்திருக்கும். அவர் எழுதிய ஆனியன் ரவாவும் மெனுதர்ம சாத்திரமும் வாசித்திருக்கிறீர்களா? ஆனியன் ரவாவின் நீள அகலங்களோடு கலை அழகை வர்ணித்து அதன் சிறப்பை சிலாகிக்கும் அழகை என்னவென்று சொல்வது? அப்புசாமி.காம் தளத்தில் அநேக நகைச்சுவைக் கதைகளை ஆசைதீர வாசிக்கலாம். அப்படியே எம்.பி.மூர்த்தி எழுதிய அப்பாவின் அரிவாள்மனை  பற்றியும் அறிந்துகொள்ளுங்கள். வாழையிலையில் சாப்பிட்டிருக்கிறோம். வாழைப்பட்டையில் சாப்பிட்டதுண்டா? கதையை வாசித்துப் பாருங்கள். உங்கள் வீட்டு அரிவாள்மனையை நேசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 

எனக்களிக்கப்பட்ட ஆசிரியப் பணியின் கடைசிநாளான இன்று உங்களிடமிருந்து நிறைவுடன் விடைபெறுகிறேன். இதுவரை நான் தொகுத்தளித்த தளங்கள் பலவும் உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். விடைபெறுமுன் ஒரு நினைவூட்டல்.

நம் பதிவுலகின் சாதனைத் திலகம் வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்கள் தளத்தில் வாராவாரம் சிறுகதை விமர்சனப்போட்டி நடைபெற்று வருவதை அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இங்கு சென்று அறிந்துகொள்ளலாம்.

இந்தவார சிறுகதை எலிஸபத் டவர்ஸ். எலியால் கிலிபிடித்து எலிபிடிக்க முயன்ற கதையை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார். அதற்கான விமர்சனம் எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் வரும் வியாழன் அன்றே ஆகும். இன்னும் ஐந்து வாய்ப்புகளே உள்ளன. இதுவரை பங்கேற்காதவர்களும் பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துகள்.

இதுவரை என்னுடன் பயணித்து கருத்திட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் என் அன்பான நன்றி. 

(படங்கள்:நன்றி இணையம்)
மேலும் வாசிக்க...

Saturday, September 20, 2014

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்


நம் வாசிப்பின் தளத்தை விரிவு படுத்துபவை புனைவிலக்கியங்களும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களும் என்றால் மிகையில்லை.  வாசிப்பு என்றால் என்ன? வாசிப்பின் உண்மையான பொருளை நமக்கு விளக்குகிறார் சுந்தர ராமசாமி அவர்கள்.

வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் இந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறபோது இது மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக எனக்குப்படுகிறது என்கிறார் அவர்.

வாசிப்புமுறையில் நிகழும் வளர்ச்சிதான் எழுதத் தூண்டும். எழுதுவதற்கு வாசிப்பே முக்கியம். அப்படி வாசிக்கும்போது சில புரிதல்கள் நமக்கு வேண்டும். பேச்சு வழக்குப் படிமங்கள் எழுத்தில் நுழைந்து கலாச்சாரமாய் மாறி இலக்கியமாக வடிவம் கொள்கிறது. இந்தப் புரிதலோடுதான் வாசிப்பு அமைய வேண்டும் என்கிறார் பாவண்ணன் அவர்கள்.


நம்முடைய வாசிப்பு அந்தப் புரிதலோடு அமைந்திருக்கிறதா என்பதை நாம்தான் ஆராய்ந்து தெளியவேண்டும். இன்றைய பதிவில் சில புனைவுகளையும் மொழிபெயர்ப்புப் படைப்புகளையும் காண்போம்.

1. பல பிரபல எழுத்தாளர்களின் வலைப்பூக்களின் முகவரியை அறிந்துகொண்டு உங்கள் வாசிப்பை விசாலமாக்க விருப்பமா? இதோ வழிகாட்டி உதவுகிறார் சசிதரன் அவர்கள். புத்தக விமர்சனங்கள், திரைப்படங்கள் குறித்த ஏராளத் தகவல்களைப் பற்றி அறிய அவரது தளத்துக்கு அவசியம் வாருங்கள்.

2. இரா.முருகன் அவர்களின் தளத்தில் கிடங்கு சிறுகதை. சுட்டுவிரலும் தொடமுடியாத ஒரு சதிராட்டக்காரியின் உடல் சவக்கிடங்கில் கிடக்க நேரிடும்போது எழும் அவலம் எழுத்துக்களின் வார்ப்பில் அடிவயிற்றைச் சுண்டுகிறது

3. சின்ன சம்பவம் என்று ஒன்றும் உலகத்தில் கிடையாது என்ற முன்னுரையுடன் துவங்குகிறது .முத்துலிங்கம் அவர்களின் சின்ன சம்பவம் என்னும் சிறுகதை. டொரண்டோவில் வாடகை டாக்ஸி ஓட்டுபவனின் அனுபவத்தொகுப்புகள் ஒரு சுவாரசியமிக்க கதையாக.. முடிவில் தொக்கும் கொக்கியுமாக..

4. மீன்பிடிக்கும் விஷயத்தில் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலுண்டாகும் உளச்சிக்கல்களை, அடிபடும் ஆளுமையுணர்வை, மனப்போராட்டத்தை அழகாக எடுத்துரைக்கும் கதை சா.கந்தசாமி அவர்களின்  தக்கையின் மீது நான்கு கண்கள். சிறுகதைகள்.காம் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன இன்னும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின்  சிறுகதைகள்.  

இரண்டாம் நிலைக் குடிமகன் என்பது போல மொழிபெர்ப்புகளை இரண்டாம் நிலைப் படைப்புகளாகத்தான் கருதுகிறார்கள். இந்த நூல்களை இரண்டாம் தட்டில்தான் வைப்பார்கள்.ஆனால் மகத்தான இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு மூலம்தான் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்கிறார் அசோகமித்திரன்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்கிறார் பாரதியும்.                 
  
5. நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாசிரியர்  மற்றும் திறனாய்வாளரான சினுவா ஆச்சிபியின் சிதைவுகள் என்னும் கதையை தமிழில் அழகாய் மொழிபெயர்த்த திரு.என்.கே.மகாலிங்கம் அவர்கள் பூரணி என்னும் சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.  உச்சரிக்கச் சிரமப்படுத்தும் ஆப்பிரிக்கப் பெயர்களையும், அவர்களின் ஆச்சரியமூட்டும் விநோதமான சடங்குகள், சம்பிரதாயங்களையும் கொஞ்சமும் அந்நியமாக உணராத வகையில் தமிழையும் வாசகர்களையும் படுத்தாமல்  வெகு அழகாய்த் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் என்று புத்தக விமர்சனத்தை வெகு அழகாய் முன்வைக்கிறார் தோழி காயத்ரி சித்தார்த் தன் பாலைத்திணை தளத்தில்.

6. கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். அந்நூல் குறித்து ஊரோடி தளத்தில் இன்றைய தமிழ்க் கவிதைகள் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள  விமர்சனம்.

7. ரஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய நெஞ்சை நெகிழவைக்கும் அற்புதமான கதையை ஆங்கிலம்  வழியே கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும் என்ற தலைப்பில் தமிழாக்கித் தந்துள்ளார் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள்.

8. ஆங்கிலத்தில் ஜான் சீவர் எழுதிய விநோதமான வானொலிப் பெட்டியைப் பற்றியும் அதனால் எழுந்த மனச்சீர்கேடுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள விருப்பமா? தமிழில் ப்ரமாண்ட வானொலிப்பெட்டி என்ற பெயரில் தோழி பத்மா எழுதி கல்குதிரையில் வெளியான கதையை வாசிக்க வாருங்கள்.
      
9. ஒரு குறிப்பிட்ட மொழிப் பிரதியில் உள்ளார்ந்து காணப்படும் உணர்வுநிலையை, அதன் கலாசாரப் பின்புலத்தை, அது உணர்த்தி நிற்கும் அரசியலை, அம்மொழி சார்ந்த குறியீட்டுப் படிமங்களை அல்லது உவம உருவகங்களை எல்லாம் கவிதைக்கே உரிய அழகியல் அம்சங்கள் கெடாத வகையில், மற்றொரு மொழிக்குக் கொண்டுவருதல் என்பது மிகப் பெரும் சவால்தான் என்கிறார் கவிஞர் லறீனா அப்துல் ஹக் தனது நிலாப்பெண் தளத்தில். கவிதை மொழியாக்கம் குறித்து கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச இலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையை இங்கு காணலாம்.

10. தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைதான் யார் அறிவார் என்ற பாடலைக் கேட்டிருக்கிறோம். மீன்கள் அழுமா? அப்படி அழும் என்றால் ஏன் அழுகின்றன? ஜப்பானியக் கவிஞர் மட்சுவோ பாஷோ எழுதிய கவித்துளிகளை அழகு தமிழில் பருகத் தருகிறார் தோழி ராமலக்ஷ்மி முத்துச்சரத்தில்.

11. பூத்தாலும் காய்க்காத மரங்கள் பற்றியும் பாத்தி கட்டி விதைத்தாலும் முளைக்காத விதைகள் பற்றியும் சிறுபஞ்சமூலப்பாடல் என்ன சொல்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிவது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால் அதை ஆங்கிலத்திலும் அறிய முடிவது இரட்டை மகிழ்ச்சி அல்லவா? சங்க இலக்கியப் பாடல்களை தமிழறியாதோரும் ரசிக்கும் வண்ணம் நேர்த்தியாய் ஆங்கிலமாக்கம் செய்யும் தோழி தேமதுரத் தமிழ் கிரேஸின் முயற்சி பெரிதும் பாராட்டுதற்குரியது.

12. ஷ்ரபணி பாசு எழுதிய விக்டோரியாவும் அப்துலும்  நூல் விமர்சனத்தை உஷா.வை அவர்களின் வரிகளில் வாசிக்க சொல்வனத்துக்குள் நுழையுங்கள். விமர்சனத்திலிருந்து சில வரிகள் கீழே

மகாராணி விக்டோரியாவை அதிகாரத்தால் திடப்படுத்தப்பட்ட ஓர் அரசியாய் அல்லாமல், ஒரு சுவாரசியமான பெண்ணாய், அவருடைய பலவீனங்கள், பிடிவாதங்கள், தாபங்களுடன் பார்க்கமுடிகிறது. 19 வயதில் முடியேற்று, 60 வருடங்களுக்கு மேல் ராணியாய் வாழ்ந்தவருக்கும் சராசரி மனிதர்களுக்கிருக்கும் பாசத்துக்கான ஏக்கம், நட்புக்கான தேடல், அவருடைய பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் தேவைப்படாத தாய்மைக்கான ஒரு வடிகால் இவையெல்லாம் தேவை எனப் புரிகிறது.




இன்றைய பதிவுகளை அனைவரும் ரசித்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி. வணக்கம். 



மேலும் வாசிக்க...

Friday, September 19, 2014

தமிழன் என்றோர் இனமுண்டு


தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும் ;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

மானம் பெரிதென உயிர்விடுவான் ;
மற்றவர்க் காகத் துயர்படுவான் ;
தானம் வாங்கிடக் கூசிடுவான் ;
'தருவது மேல்' எனப் பேசிடுவான்.
- நாமக்கல் கவிஞர் 



1. தமிழரின் பெருமைகளுள் ஒன்று விருந்தோம்பல். இன்று விருந்தோம்பல் என்றால் என்னவென்று தெரியாதது மட்டுமல்ல, வீட்டு உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து கொண்டிருக்கிறோம். துரித உணவுகளில் நாட்டம் பெருகி சத்து மிகுந்த பாரம்பரிய உணவுவகைகளைப் புறக்கணித்துக் கொண்டிருக்கிறோம். உணவே மருந்து என்ற வாழ்க்கை மாறி மருந்தே உணவு என்று வாழத் தலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம் வீட்டிலும் தோட்டத்திலுமே நம் நோய்களுக்கான மருந்துகள் உள்ளன என்பதை அறிந்திருக்கிறோமா? சமையலறையில் நம் கைக்கெட்டும் தூரத்தில் காணப்படும் ஏராளமான மருந்துகளை நமக்கு அடையாளம் காட்டுகிறார் திருமதி மனோ சாமிநாதன் அவர்கள்.

2. வர்மம், ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று. இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இருக்கும் இடத்தில் இருந்து 1000 கி.மீ. அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர்கள் நாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்ற கேள்வியுடன் துவங்குகிறது வர்மக்கலை பற்றிய பதிவு வரலாற்றுப் புதையல் தளத்தில்.

3. பாரம்பரியப் பெருமை வாய்ந்த நம்முடைய கலாச்சாரப் பழக்கவழக்கங்களை ஒத்த கலாச்சார மற்றும் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள் ஜப்பானியர் என்றால் வியப்பு ஏற்படுகிறது அல்லவா? சோற்றைப் பிரதான உணவாக உண்பது, காலணிகளை வாசலிலேயே விடுவது, பாயைப் பயன்படுத்துவது, கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை என்று தமிழ் கலாச்சாரத்துக்கும் ஜப்பானியக் கலாச்சாரத்துக்கும் உள்ள பல ஒற்றுமைகளைக் குறிப்பிடுகிறார் உண்மையானவன் தளத்தில் எழுதும் திரு. சொக்கன் அவர்கள்.

4. சங்க காலத்தில் தமிழர் திருமணம் எப்படி நடைபெற்றது என்ற ஆய்வினை மேற்கொண்டு அழகாக அளித்துள்ளார் முனைவர் ப.சரவணன் அவர்கள். சான்றுக்கு ஒரு பத்தி.

பெரிய பந்தல் அமைத்தனர். அதன் கீழே வேற்றிடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புதுமணலைப் பரப்பினர். வீட்டில் விளக்கினை ஏற்றி வைத்தனர். மாலைகளைத் தோரணமாகத் தொங்கவிட்டனர். உழுத்தம் பருப்புடன் சேர்த்துச் சமைத்த குழைதலையுடைய பொங்கலினை வைத்தனர். சந்திரன், ரோகிணி நட்சத்திரத்தை அடைந்த நன்நாளின் விடியல் காலையில் மணச்சடங்குகளைத் தொடங்கினர். மணம்செய்துவைக்கும் மங்கலமுடைய முதிய மகளிர் தங்களின் தலையில் குடத்தினையும் கைகளில் அகன்ற “மண்டை என்ற கலத்தினையும் வைத்துக்கொண்டு, ஆரவாரத்தோடு முறைப்படி பலவற்றை வழங்கினர். நன்மக்களைப் பெற்ற நான்கு மகளிர்கூடி, மணமகளைக் “கற்பினை வழுவாது நன்பேர் பெற்று கணவனை விரும்பிப் பேணுக என வாழ்த்தினர் என்ற செய்தினை அகநானூற்று 86ஆவது பாடலில் நல்லாவூர்க் கிழார் கூறியுள்ளார்.

5. காதலரைப் பிரிந்த பெண்கள் பசலை நோயால் பாதிக்கப்படுவதாக இலக்கியங்கள் பகர்கின்றன. காதலரைப் பீடிக்கும் மற்றொரு நோய் காம நோய். பசலை நோய் பற்றியும் காமநோய்க்குக் கண்கண்ட மருந்தாக தமிழ் இலக்கியங்கள் பகரும் தகவல்கள் பற்றியும் அறிய ஆவலாக உள்ளீர்களா? தோழி ஆதிரா முல்லையின் பார்வையில் அரங்கேறியுள்ள அழகான ஓர் இலக்கியப் பகிர்வின் மூலம் அறிவோம், வாருங்கள்.

6. அய்யாவழியினர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தென்தமிழகத்தில் சாமித்தோப்பு என்னும் அழகிய கிராமமானது, இந்துமதத்தின் வருணாசிரமம் என்னும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராகத் தனிக்களத்தை அமைத்த அய்யாவழியின் முக்கிய பதியாக இருக்கிறது. அய்யாவழியினரின் நூல் அகிலத்திரட்டு என்பதாம். "இந்த நாள் முதல், உங்களது நம்பிக்கையை வைகுண்டம் மீது மட்டும் வையுங்கள், வேறு எதற்கும் அச்சம் கொள்ளாதீர்கள். கோயில்களுக்கு காணிக்கை கொடுக்காதீர், நீங்கள் கடுமையாக உழைத்து சேர்த்த பணத்தை உண்டியலில் போடாதீர், உங்களது செல்வத்தை உங்களுக்காகவே வைத்துக்கொள்ளுங்கள்" என்கிறது அகிலத்திரட்டு. அய்யாவழியினர் பற்றி மேலும் அறிந்துகொள்ள முனைவர் இர.வாசுதேவன் அவர்களின் தமிழ்மன்றம் தளத்துக்கு வாருங்கள்.

7. காளைமாடுகள் ஏர் உழுவதைப் பார்த்திருக்கின்றோம். எருமைகள் ஏர் உழுவதும் சில இடங்களில் உண்டு. இப்போது சில இடங்களில் பால் மறுத்த ஆக்களையும் கூட ஏர் உழப் பயன்படுத்துவதையும் பார்த்து வருகிறோம். ஆனால், கழுதை ஏர் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? என்ற முன்னுரையுடன் பண்டைக்காலத்தில் நடைபெற்ற கழுதை ஏர் உழவு பற்றி நம்மை அறியச் செய்கிறார் தமிழநம்பி ஐயா அவர்கள். புறநானூறு முதல் சிலப்பதிகாரம், மணிமேகலை வரையிலும் கூட கழுதைகளைக் கொண்டு ஏர் உழும் வழக்கம் காட்டப்பட்டுள்ளது என்று ஆதாரம் காட்டுகிறார்.

8. சிலப்பதிகாரக் காப்பிய நாயகியான கண்ணகி தன் நல்வாழ்வைத் தொலைத்ததும், அவளுடைய தனிமைத் துயருமே நம் நெஞ்சமெங்கும் நிறைந்து நம்மை வருந்தச் செய்யும் வகையில் கதையின் நிகழ்வுகள் சிலம்பின் முற்பகுதியில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காரணத்தாலோ என்னவோ அருளும், வீரமும் நிறைந்த கோவலனின் இனிய மறுபக்கத்தை நாம் உணராதவர்களாயிருக்கிறோம் என்ற முன்னுரையோடு கோவலனின் மறுபக்கத்தை நாமறியத் தருகிறார் தோழி மேகலா இராமமூர்த்தி. கருணை மறவன் என்றும் செல்லாச் செல்வன் என்றும் இல்லோர் செம்மல் என்றும் கோவலனை சிலம்பு போற்றும் சிறப்பு, அதை அறியாதோர்க்கு வியப்பு அல்லவா?

9. அன்று கடல் கடந்து சென்று ஆட்சியை நிலைநாட்டினார்கள் தமிழக மன்னர்கள். இன்று பிழைக்கவோ, பிழைப்புக்காகவோ கடல் கடந்து சென்று வாழும் சூழலிலும் தாய்மொழியை மறவாது தம் சந்ததியினருக்குக் கற்பித்து உயிர்ப்பிக்கின்றனர் புலம் பெயர் தமிழர்கள்.

ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழ்ப்பணியாற்றும் திரு. அன்புஜெயா அவர்கள் ஆஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ்ப் பள்ளிகள் பற்றியும், தமிழ்க் கல்வி வளர்ச்சி, அதற்கான வாய்ப்புகள், மற்றும் சவால்கள் பற்றியுமான பல தகவல்கள் அடங்கிய கட்டுரை ஒன்றை தனது தமிழ்ப்பந்தல் தளத்தில் பதிந்துள்ளார். இக்கட்டுரையானது, இந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மாநகரில் நடைபெற்ற 'தாயகம் கடந்த தமிழ்' மாநாட்டில் படைக்கப்பட்டு மாநாட்டு மலரில் வெளியிடப்பட்டது என்பது சிறப்பு.

கம்பன் காட்டும் அற்புத உவமைகள் பற்றியும் ஒரு தொடர் எழுதிப் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்களையெடுக்கச் சென்று எடுக்காமல் தடுமாறும் உழவர்கள் பற்றிய கம்பனின் உவமையை ரசிக்க வாருங்கள்.

10. கம்பராமாயணத்து நிகழ்வுகளை ஒலி வடிவில் கேட்க வேண்டுமா? பல முனைவர்களும் தமிழறிஞர்களும் மிகவும் சுவைபட பேசிப் பதிவு செய்துள்ள கம்பன் வானொலியைக் காதுகுளிரக் கேட்டு மகிழுங்கள். கம்ப ராமாயணம் பற்றிய ஒலிப் பதிவுகளை ஒரே இடத்தில் தொகுத்துவைக்கும் முயற்சி என்கிறது தள அறிவிப்பு.

11. இராமாயணம் பார்த்தாயிற்று. அடுத்து மகாபாரதம் பார்ப்போமா? மகாபாரதத்தின் ஒவ்வொரு பாத்திரமும் தனித்துவ குணாதிசயத்துடன், தனித்த கிளைக்கதையுடன் சுவாரசியமாகப் படைக்கப்பட்டிருக்கும். மொத்தக் கதையும் ஒரு அழகிய பின்னலாய் எந்த இடத்திலும் இழை விடுபட்டுவிடாதபடிக்கு அழகாகப் பின்னப்பட்டிருக்கும். மகாபாரதத்தின் பாத்திரங்களை சிறப்பிக்கும் விதமாகவும் மகாபாரத வாழ்வியலை நமக்கு அறிமுகப்படுத்தும் விதமாகவும் நாகூர் ரூமி ஐயா அவர்கள் புதிய தரிசனம் இதழில் எழுதிவருகிறார். தந்தைக்காக பிரம்மச்சரியம் பூண்ட பீஷ்மனையும், காதலியை உடன்பிறந்தாளாய் ஏற்ற கசனையும் பற்றி அறிய பறவையின் தடங்களில் பறப்போம் வாருங்கள்

12. மஹாபாரதம் போன்ற இதிகாசங்களில் சொல்லப்பட்ட, ஆனால் பரவலாக அறியப்படாத ஜராசந்தன், ஜெயத்ரதன் போன்ற பாத்திரங்கள் பற்றி எழுதிய திரு.ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் கீதைப்பதிவு வலையுலகில் ஒரு வரப்பிரசாதம்.

இயற்கை எனும் கொலைக்களத்தில் வாழ்வு எனும் கொலைத் தொழிலை நன்கு இயற்றுவதற்கு பகவத் கீதை எனும் கொலை நூலை ஒவ்வொருவரும் கற்க வேண்டியது அவசியம். ஏனெனில் வலிவு படைத்தவனே வாழ்வுக்குரியவனென்பது கீதையின் கோட்பாடு என்ற முன்னுரையுடன் 
கீதையின் பதினெட்டு அத்தியாயங்களையும் தெளிந்த தமிழில் தொடராக எழுதிவருகிறார் திரு. ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள்

பகவத் கீதை பற்றி அறியாதவர்க்கு ஒரு அறிமுகத்தையும் அரைகுறையாய் அறிந்தவர்க்கு நல்ல தெளிவையும் தரும் அரிய தொடர் இது. இதுவரை ஏழு அத்தியாயங்களை எழுதியுள்ளார். போகிற போக்கில் வாசித்து போகும் பொழுதுபோக்குப் பதிவுகள் அன்று. இவற்றை வாசித்துப் புரிந்துணர பொறுமையும் நிதானமும் அவசியம் தேவை. முதல் அத்தியாயம் இங்கே 

இன்றைய பதிவுகளை இனிதே வாசித்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நாளை மற்றொரு பதிவுடன் சந்திக்கிறேன். நன்றி.



யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமர ராய் விலங்குகளாய் உலகனைத்தும்
      இகழ்ச்சி சொலப்  பான்மை கெட்டு,
நாமமது  தமிழரெனக்  கொண்டு இங்கு
     வாழ்ந்திடுதல்  நன்றோ?  சொல்லீர்!

- பாரதி

(படங்கள்; நன்றி இணையம்)

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது