வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள்
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்
பெரிய ஜீயர் என்றழைக்கப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அரங்கனுக்கே ஆசார்யன் என்கிற பெருமை பெற்றவர். ஒரு வருட காலம் அரங்கன் தம் உற்சவங்களை எல்லாம் நிறுத்திக் கொண்டு இவருடைய திருவாய்மொழி காலட்சேபத்தை (சொற்பொழிவை) கேட்டு மகிழ்ந்தாராம். இறுதி நாளன்று ஒரு பாலகனாய் வந்து மேலே சொன்னதை குரு வாழ்த்தாய் அருளினாராம்.
வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
பாதியுமுறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பசி பிணி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே
ஆழ்வார் பாசுரத்தின் அழகைப் பாருங்கள். வேதம் சொல்லிய 100 வயதுக் காலம் ஒருவர் வாழ்வதாய்க் கொண்டால் அதில் எப்படி எல்லாம் வீணாகிறது என்கிற தவிப்பு.. பேதை.. பாலகன்.. அது ஆகும் என்று பருவங்களைப் பிரிக்கிறார். இளைஞனாய் இருக்கும் காலத்தை ‘அது’ என்றே குறிப்பிடுகிறார்.
ஒரு இளைஞன் எப்படி உருவாகிறானோ அதுவே அவன் பிற்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால்.. யவ்வன அவஸ்தையை.. அது என்று நயமாகக் குறிப்பிட்டு காட்டுகிறார்.
என் ப்ரிய எழுத்தாளர் லா.ச.ரா. அவர்கள் வார்த்தையைக் கேட்போமா..
ஒரு நல்ல புத்தகம் தூண்டி உன்னை ஆழ்த்தும் சிந்தனையும் சொகுஸுதான்.
நீ படிக்கும் புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்திலோ
அதில் ஒரு வாக்கியத்திலோ சொற்றொடரிலோ பதத்திலோ
அல்லது இரு பதங்களிடையே தொக்கி
உன்னுள்ளே நின்று கொண்டு உன்னை இடறி நிறுத்தும்
அணு நேர மோனத்திலோ
நீண்ட பெருமூச்சிலோ
உன் கண்ணில் பனிக்கும் கண்ணீர்த் துளியிலோ
அந்தத் தருணத்தோடு நீ ஒன்றிப் போய்
உன்னை அடையாளம் கண்டு கொள்வது
அதுவே சொகுஸுதான்.. பெரிய சொகுஸு !
இனி இன்றைய பதிவர்கள்...
பால கணேஷ் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்துகிறவர்.. இவருக்கு அலுப்பு என்பதே வராதா.. இவ்வளவு சுறுசுறுப்பாய் செயல்படுகிற இவரது ஆற்றலில் நூறில் ஒரு பங்கு எனக்கு வாய்த்திருந்தாலும் எவ்வளவோ சாதித்திருப்பேன்..
பதிவுகளில் இன்னதுதான் என்கிற வரையறைக்கு உட்படாதவர்.. இவரது வாசிப்போ அளவில்லாதது.. அந்த நாள் சமாச்சாரங்கள் முதல் இந்த நாள் லேட்டஸ்ட் டெக்னிக் வரை இவருக்கு எல்லாமே அத்துப்படி.
இவரை நான் அறிமுகம் செய்யவில்லை..இங்கே. யாரேனும் ஒருவருக்கு இவரைத் தெரியாமல் தற்செயலாய் விடுபட்டிருந்தால்.. அந்தக் குறை நீங்க வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தைகள்.
மேய்ச்சல் மைதானம் இவரது இன்னொரு தளம். நகைச்சுவையில் வல்லவரான இவர் சூழலை கலகலப்பாக்குவதில் சகல கலா வல்லவர்.
நான் பேச நினைப்பதெல்லாம் சென்னைப் பித்தன் அவர்களின் வலைத்தளம்.
பதிவர்கள் பலர் பதிவிடுவதைக் கைவிட்டு விடும் இந்நாட்களில் இப்போதும் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட சில பதிவர்களில் இவரும் ஒருவர். வலைத் தளத்தில் மூழ்கி இருப்பதை நையாண்டி செய்தே ஒரு பதிவிட்டிருக்கும் இவரைப் போன்றோரால் இன்னமும் பதிவுலகம் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. வணக்கம் சென்னைப் பித்தன் ஸார்.
சும்மா இருக்க முடியுமா.. சாதிக்கப் பிறந்தவர்களால் ? 5 வலைப்பூக்களுக்கு சொந்தக்காரரான தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் பதிவுலகம் நன்கறிந்த படைப்பாளி. முகநூலிலும் இவரது எழுத்துக் கொடி பறக்கிறது. கவிதை.. பயணம்.. சமையல்.. விமர்சனம் இப்படி இவர் தொடாத எழுத்து இல்லை.
வாழ்த்துகள்..
தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி அவர்களும் பிரபல பதிவர். இப்போதும் இவரது வலைத்தளம் சுறுசுறுப்பாய் இயங்குகிறது. ஒவ்வொரு தலைப்பிலும் கவி புனையும் இவரது திறமைக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டோ ?!
மேலே சொன்னவர்கள் சிலர்தான். இம்மாதிரியான உற்சாகமான பதிவர்கள்தான் வலைத்தளம் சிறப்பாகச் செயல்பட காரணமாய் இருப்பதோடு வாசிப்பவரையும் தூண்டி எழுத வைப்பவர்கள்.
ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டாம். ஒரு காலத்தில் வலைத்தளம் மிகவும் ஈர்ப்புடன் இருந்தது. அதன் ஜீவன் குலையாமல் காத்து வருகிற இவர்களைப் போன்றோர்க்கு நம் நன்றி வணக்கம் எந்நாளும் உரித்தாகட்டும்.
நாளையோடு எனது வலைச்சர ஆசிரியர் பணி நிறைவு பெறுகிறது.. என்னோடு இணைந்திருந்து உற்சாகப்படுத்தும் உங்கள் பேரன்பை நாளையும் எதிர்பார்க்கிறேன் என்று அன்போடு கூறிக் கொள்கிறேன்.



