வலைச்சரம் - ஏழாம் நாள்- பதிவர்கள் புத்தகங்கள் - சிறு அறிமுகம்
➦➠ by:
ஊஞ்சல்- கலையரசி
இப்புத்தாண்டில்
என் நூலகக் காட்டில் அடைமழை!
அன்பளிப்பாக பெற்ற
நூல்கள் சில! புத்தகக் காட்சியில் வாங்கியவை
பல.
என் அலமாரியில்
புதிதாக இடம் பெற்றவைகளுள், பதிவர்களின் நூல்களை மட்டும் சிறு அறிமுகம் செய்வதே, இன்றைய
பதிவின் நோக்கம்.
முழுமையாக வாசித்த
பின்னர், இவை பற்றிய பார்வையை, என் வலைப்பூவான ஊஞ்சலில் வெளியிட எண்ணியிருக்கிறேன்.
தம் எழுத்தை அச்சில்
பார்க்க வேண்டும் என்ற எழுத்தாளருக்கேயுரிய தணியாத வேட்கையால், தம் சொந்தப் பணத்தைச்
செலவழித்தாவது, பல சிரமங்களுக்கிடையில், புத்தக வெளியீடு செய்யும் பதிவர்களை ஊக்குவிக்க
வேண்டியே இப்பதிவு.
புத்தகம் வாங்குவதில்
மட்டும் கடுமையான கஞ்சத்தனத்தைச் கடைபிடிக்கும் நம்மவர்கள்,
இப்பதிவைப் பார்த்த பிறகு, ஒன்றிரண்டு
புத்தகங்கள் வாங்கினால் கூட என் நோக்கம் நிறைவேறும்.
1. என்றாவது
ஒரு நாள் - ஆஸ்திரேலிய
மொழி பெயர்ப்புச் சிறுகதைகள்
ஆசிரியர்:- கீதா மதிவாணன்
வலைப்பூ:- கீதமஞ்சரி
முதற் பதிப்பு டிசம்பர் 2014
விலை:- ரூ.150/-
மூலம் ஹென்றி லாசன்
(Henry Lawson)
(காடுகளில் வீடுகளை
அமைத்துக் கொண்டு வாழ்ந்த முன்னாள் கைதிகளும், சுரங்கத்துக்குள் தங்கள் அதிர்ஷ்டத்தைத்
தேடிக் கொண்டிருந்தவர்களும் தாம், ஹென்றி லாசனின் கதை மாந்தர்கள். நமக்கு
முற்றிலும் புதுமையானதும், பரிச்சயமில்லாததுமான இந்த ஆஸ்திரேலிய காடுறை மனிதர்களின்
கதைகளைச் சரளமான நடையில், மொழியாக்கம் என்று தெரியாதவாறு படைத்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்
ஆசிரியர்.
களமும், கருவும்
தமிழுக்குப் புதிது. வல்லமை இணைய இதழின் வல்லமையாளராகத்
தேர்வு பெற்றவர். அவ்விதழ் நடத்திய கடித இலக்கியப்போட்டி,
என் பார்வையில் கண்ணதாசன் போட்டி ஆகியவற்றில்
வென்ற பரிசுகள், இவரது இலக்கியத் தரமான எழுத்துத் திறமைக்குச் சான்று பகர்வன.)
2. அம்மாவின் தேன்குழல்
- சிறுகதைகள்
ஆசிரியர்:- மாதவன் இளங்கோ
வலைப்பூ:- ரசிக்கிறேன்...ருசிக்கிறேன்
வெளியீடு:- அகநாழி பதிப்பகம் சென்னை முதற்பதிப்பு:-
டிசம்பர் 2014 விலை ரூ.130/-
(வல்லமை நடத்திய சிறுகதைப் போட்டியில் இலக்கிய விமர்சகர் வெ.சாமிநாதன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஆகியோரால்
இவரது கதைகள் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவரும் வல்லமை இதழின் வல்லமையாளராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்.)
3. தாயுமானவள் - சிறுகதைகள்- வானதி பதிப்பகம் சென்னை முதற்பதிப்பு:-ஆகஸ்டு
2009 விலை ரூ45/-
4. வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் - சிறுகதைகள்
-திருவரசு புத்தக நிலையம் சென்னை. முதற்பதிப்பு
ஆகஸ்டு 2009 விலை ரூ.35/-
5. எங்கெங்கும் எப்போதும் என்னோடு - சிறுகதைகள் - மணிமேகலைப் பிரசுரம் முதற்பதிப்பு 2010 விலை ரூ.55/-
இவை மூன்றின் ஆசிரியர்:-
வை.கோபாலகிருஷ்ணன்
(பதிவுலகில் பிரபலமான
இவர், நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர்.
கடந்த ஆண்டு பத்து மாதங்கள் வெற்றிகரமாகத்
தொடர்ந்து இவர் நடத்திய சிறுகதை விமர்சனப்போட்டி பதிவுலகில் பிரசித்தி பெற்றது.
முதல் நூல் பழனியம்மாள்
அரங்கநாதன் தமிழிலக்கிய அறக்கட்டளை,பாரதி தமிழ்ச்சங்கம் & திருக்குறள் பேரவையால் முதற்பரிசு பெற்றது. இரண்டாவது திருச்சி மாவட்ட பொதுநலப்பணி நிதிக்குழுவால்
மாவட்ட அளவில் 2009 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பரிசு பெற்றது.மூன்றாவது புத்தகமான 'எங்கெங்கும், எப்போது, என்னோடு' உரத்த சிந்தனை எனும் தன்னம்பிக்கையூட்டும் மாத இதழால் முதல் பரிசுக்குத் தேர்வானது. பிரபல நடிகர் டெல்லி கணேஷ் இந்தப் பரிசை 15/05/2011 ல் சென்னையில் நடைபெற்ற விழாவில் கொடுத்தார். இவ்விழா பற்றிய விபரங்கள் படங்களுடன் இங்கே:-http://gopu1949.blogspot.in/2011/07/4.html- )
6. கவியரசு கண்ணதாசன் பாடல்கள் - காலத்தின் பதிவுகள்
ஆசிரியர்: கவிஞர் காவிரிமைந்தன்
இவரது தளம்:- தமிழ் நதி
வெளியீடு கவியரசு
கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், சென்னை
முதற்பதிப்பு:- அக்டோபர் 2006
விலை: ரூ 70/-
(கவிஞர் கண்ணதாசனுக்குச்
சென்னையில் திருவுருவச்சிலை அமையக் காரணமானவர்.
கவிஞர்பால் மாளாக்காதல் கொண்டுள்ள இவர் காலத்தின் பதிவுகள்
என்னும் தலைப்பில் அகவை எண்பதைக் கவிஞர் கண்ணதாசன் எட்டிய நாளில் எண்பது கவிதைகளைக்
கட்டுரையாகவும் ஆய்வாகவும் எடுத்துக் கண்டிருக்கிறார் என்று கவிஞர் வாலி வாழ்த்துரையில்
கூறுகிறார். தமிழ்நதியோடு வல்லமையிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்)
7. ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் - கவிதைகள்
ஆசிரியர்:- உமா மோகன்
வலைப்பூ:- குரல்
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம் சென்னை
முதற்பதிப்பு:-
டிசம்பர் 2014
விலை:- ரூ70/-
(இவரது கவிதைகளில்
பாரதி, பாவேந்தர் மூச்சுக்காற்று படிந்துள்ளது; கால்களில் இந்த மகாகவிகள் மிதித்த புழுதி
மண். புதுவை எனும் பூஞ்சோலையின் மண் மகளாய்,
இரண்டாவது பூக்கூடை ஏந்தி. இவரது கவிதைகள்
கார்பரேட், கணிணி யுகச் சூறாவளிக்கு நடுவேயும் அடக்கமான இனிய வாழ்க்கை உண்டு என்பதைக்
காட்சிப் படுத்தும் வண்ணக்கவிதைகள் என்கிறார் கவிஞர் புவியரசு. எழுதிய பிற நூல்கள் டார்வின் படிக்காத குருவி
& வெயில் புராணம்.)
8. சிறகு விரிந்தது - கவிதைகள்
ஆசிரியர்:- சாந்தி மாரியப்பன்
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம் சென்னை
முதற்பதிப்பு:- ஜனவரி 2014
விலை ரூ80/-
(சாந்தி மாரியப்பனின்
கவிதைகள் மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன. அன்றாட வாழ்வில் கவனிக்கத்தவறும் நுணுக்கமான கூறுகள்,
எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிப்பாடு என தனித்துவம்
வாய்ந்த பார்வையுடன் புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை இவை என்கிறார்,
வல்லமையின் நிறுவனர் அண்ணா கண்ணன்.)
9. இலைகள் பழுக்காத உலகம் - கவிதைகள்
ஆசிரியர்:- ராமலெஷ்மி
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம் சென்னை
முதற்பதிப்பு:-
ஜனவரி 2014 விலை ரூ 80/-
(அன்பு, பரிவு,
நேசம் இவைகளுக்காக ஏங்கும் மனிதருக்குத் தமது பேரன்பைக் கவிதையெனக் கொட்டிக்கொடுக்கிறார்கள்
கவிஞர்கள். கவிதை மரத்தில் இலைகள் ஒரு நாளும் பழுப்பதில்லை; அப்போது தான் விடிந்த விடியலின் வாசனையோடும், பிறந்த
குழந்தையின் எதிர்பார்ப்போடும் அது காத்திருக்கிறது. அப்படியான இலைகள் பழுக்காத உலகம் ஒன்றை கவிதை பரிசாக
நமக்குத் தந்திருக்கிறார் ராமலெஷ்மி என்கிறார் க.அம்சப்பிரியா)
10. அன்னபட்சி -
கவிதைகள்
ஆசிரியர்:- தேனம்மை லெஷ்மணன்
வலைப்பூ:- சும்மா
வெளியீடு:- அகநாழிகை பதிப்பகம் சென்னை
முதற் பதிப்பு:-
ஜனவரி 2014 விலை ரூ.80/-
(தேனம்மையின் கவிதைகள்
சமூகப்பார்வை, தனிமனித அவசங்கள் ஆகிய இரண்டுக்கும் ஒத்த இடம் தந்து, வெவ்வேறு உள்ளடக்கங்களுடன்
மலர்ந்திருப்பதால் சங்கத்தில் தூது சென்ற அன்னங்களும், நீரை ஒதுக்கிப் பாலை மட்டும்
பருகும் அன்னங்களும் நம் நெஞ்சில் நிலைத்திருப்பது போலத் இவரது அன்னபட்சியிலிருக்கும்
அருமையான சொல்லாட்சிகளும் பொருள் நுட்பங்களும், நம் உள்ளங்களில் என்றென்றும் கல்வெட்டாய்
உறைந்திருக்கும் என்கிறார் எம்.ஏ.சுசீலா.)
11. யாருடைய எலிகள் நாம்? - கட்டுரைகள்
ஆசிரியர்:- சமஸ்
வலைத்தளம்:- சமஸ்
முதற்பதிப்பு:-
டிசம்பர் 2014 விலை ரூ.300
(சமஸுடைய மொழிநடை
அபூர்வமானது. ஆழமான ஆற்றை மேலே நின்று பார்த்தால்
அது ஓடுவதே தெரியாது. அது போலத்தான் சமஸுடைய
எழுத்தும். ஆர்ப்பாட்டமில்லாமல் ஆழத்தில் பாயும்.
அ.முத்துலிங்கம்)
மேலே குறிப்பிட்டவைகளுள்
ஆறு புத்தகங்கள் அகநாழிகை பதிப்பகம் வெளியீடு. இதன் பதிப்பாளர் பொன்.வாசுதேவன் அவர்களும் சிறந்த எழுத்தாளராக விளங்குகிறார்.
அண்மையில் இவரது சாம்பல் வாசனைசிறுகதையை வாசித்தேன். சாவுக்குச்
செல்பவனின் மனவோட்டத்தைத் தேர்ந்த நடையில் கதையாக்கித் தந்திருக்கிறார்.
அவரது வலைத்தளம்:- அகநாழிகை பொன் வாசுதேவன் சரி நண்பர்களே! ஒரு விதத் தயக்கத்துடனே ஆசிரியப் பொறுப்பை ஏற்ற
என்னை, இந்த ஒரு வாரமும் என்னுடன் கூடவே பயணித்துத் தினமும் கருத்துக்கள் மூலம் ஊக்கமும் உற்சாகமும் அளித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
கிடைத்த நேரத்தில் என்னால் முடிந்தவரை
இப்பணியைச் செய்தேன் என்பதில் எனக்குத் திருப்தியே. தொகுப்புக்காக வலைப்பூக்கள் பலவற்றிக்குப் போய்
வாசித்ததில் பலருடைய எழுத்து எனக்குப் பரிச்சயமாயிருக்கிறது. பதிவர்கள் சிலரின் அறிமுகமும் கிடைத்திருக்கிறது.
இப்பணியை நான்
ஏற்கக் காரணமான திரு கோபு சார் அவர்களுக்கும் திரு சீனா சார் அவர்களுக்கும், திரு தமிழ்வாசி
பிரகாஷ் அவர்களுக்கும் நன்றி கூறி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபனின் எழுத்துப் படைப்பு வலைத்தளத்தில் நடைபெறவிருக்கும் உலகளாவிய சிறுகதை போட்டிக்கான இறுதி நாள் 15/02/2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து கொண்டு போட்டியைச் சிறப்பியுங்கள்.
நன்றியுடன்,
ஞா.கலையரசி












