07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கவிஞர் கி. பாரதிதாசன். Show all posts
Showing posts with label கவிஞர் கி. பாரதிதாசன். Show all posts

Sunday, August 9, 2015

பெண்ணின் பெருந்தக்க யாவுள?



வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்


பெண்ணின் பெருந்தக்க யாவுள?



வெண்பாக் கொத்து




குறள் வெண்பா

பெண்ணின் பெருமையைப் பேணும் உலகினில்
மண்ணும் மணக்கும் மலர்ந்து!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் அழகால் பெருகிவரும் பாட்டாறு!
கண்ணுள் புகுந்து களிப்பூட்டும்! - தண்மலரின்
வண்ணம் மணக்கும் மலர்ந்து!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

பெண்ணின் விடுதலையைப் பேணாத் திருநாட்டில்
நண்ணும் இருளே! நரிகள் அரசாண்டால்
மாண்பு வருமோ மலர்ந்து?

நேரிசை வெண்பா

பெண்ணின் சிறப்பால் பெருகும் வளம்ஏற்பீர்!
பண்ணின் இனிய பயனேற்பீர்! - விண்ணருளின்
ஆட்சி மணக்கும் அழகேற்பீர்! அந்தமிழின்
மாட்சி மணக்கும் மலர்ந்து!

இன்னிசை வெண்பா

பெண்ணின் தவமுணர்ந்து பேசும் நிலத்தினிலே
எண்ணிலா ஏற்ற எழில்மேவும்! நல்லியற்கைத்
தண்மை தழைக்கும்! தமிழ்காட்டும் வள்ளலென
வண்மை தழைக்கும் மலர்ந்து!

பஃறொடை வெண்பா

பெண்ணின் வடிவமாய்ப் பேசும் மொழிகொண்டோம்!
மண்ணின் வடிவமாய் மாண்பளித்தோம்! - தண்ணதிக்கு
அன்னை பெயர்படைத்தோம்! அன்பு வயலென்றோம்!
பொன்னை நிகர்த்த பொலிவென்றோம்! - உன்னை
அளித்த அருமறையே அம்மா! இதனை
உளத்துள் பதித்தால் உயர்வாய்! - வளமெய்தக்
கண்ணின் மணியாய்க் கருந்தேந்தும்! இங்குரைத்த
உண்மை உணர்ந்தே உலகம் உருண்டால்
நலங்கள் மணக்கும்! நறுஞ்சோலை போன்று
வளங்கள் மணக்கும் மலர்ந்து!

இலக்கண விளக்கம்

வெண்பாத் கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

மேல் உள்ள வெண்பாக்கள் 'பெண்ணின்', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'மலர்ந்து' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.


------------------------------------------------------------------------------------------------------------

கவிஞர் சிமோன் இராசசேவரி - பிரான்சு

வலைப்பூ: பிரான்சு கம்பன் மகளிர் அணி

செம்மைத் தமிழ்ப்பூ! சிறக்கும் வழிகாட்டும்!
தம்மை அளித்துத் தமிழ்காக்கும் - கம்பன்
கழக மகளிர் நடத்துகின்றார்! காண்க
அழகின் சிகரம் அது!

http://francekambanemagalirani.blogspot.fr

 

------------------------------------------------------------------------------------------------------------



மாலதி - புதுக்கோட்டை
வலைப்பூ: Malathi

மணக்கும் தமிழ்த்தாயின் மாண்புகளை அள்ளி
இணைக்கும்! இனிமை இசைக்கும்! - குணமிகுந்த
மாலதி பின்னும் வலைப்பூ! செழுந்தமிழின்
பாலதில் ஊறும் படி!



------------------------------------------------------------------------------------------------------------


மு. கீதா - புதுக்கோட்டை

வலைப்பூ: Thendral

வண்ணத் தமிழை வலம்வரும் மு.கீதா!
எண்ணம் முழுதும் எழில்தமிழே! - தண்ணிலவு
பாட்டரங்கம் பாடிப் படைத்திடுவார்! பண்ணிசை
மீட்டரங்கம் என்பேன் வியந்து!

http://velunatchiyar.blogspot.com/2015/08/blog-post_7.html



------------------------------------------------------------------------------------------------------------


மைதிலி கஸ்துாரி ரங்கன் - புக்கோட்டை
வலைப்பூ: மகிழ்நிறை

மகிழ்நிறை வண்ண வலைகண்டேன்! அங்குப்
புகழ்நிறை ஆக்கம் புசித்தேன்! - அகழ்வினை
ஏந்தி அளித்த எழுத்துக்குள், இன்றமிழாள்
நீந்திக் குளிப்பாள் நெகிழ்ந்து!



------------------------------------------------------------------------------------------------------------


ஞா. கலையரசி
வலைப்பூ: ஊஞ்சல்

கலையரசி நற்பதிவைக் காணும் மனத்தார்
வலையரசி என்றுபுகழ் வார்ப்பார்! - மலையரசி
நற்றாள் திருவருளால் பொற்றமிழ்ச் சீர்யாவும்
கற்[று]ஆள் சிறப்பினைக் காண்!



------------------------------------------------------------------------------------------------------------

தேனம்மை லெக்ஷ்மணன்

வலைப்பூ:  சும்மா

தேனம்மை பூவலை! தென்தமிழின் பாவலை!
வானொண்மை கொண்ட மணிவலை! - நானும்மைக்
காண அழைத்தேன்! கவிதைக் கலையழகைப்
பேண அழைத்தேன் பிணைந்து!



------------------------------------------------------------------------------------------------------------



வேதா. இலங்காதிலகம்
வலைப்பூ: வேதாவின் வலை

வேதா தரும்எழுத்துள் வெல்லும் வியன்தமிழ்
மாதா இருந்து மகிழ்திடுவாள்! - ஓதுவதில்
காட்சி அளிப்பாள்! கனிக்கவிதை வந்தொளிர  
மாட்சி அளிப்பாள் மணந்து!



------------------------------------------------------------------------------------------------------------


மகேசுவரி பாலச்சந்திரன்
வலைப்பூ: பாலமகி பக்கங்கள்

கோலமிகும் வண்ணம் குளிர்தமிழ் கொண்டொளிரும்
பாலமகி பக்கங்கள் பார்த்துவந்தேன்! - ஞாலமிதில்
தொன்மை நிலையுணர்த்தும்! சொல்லும் சுவையுணர்த்தும்!
நன்மை நிலையுணர்த்தும் நன்கு!



------------------------------------------------------------------------------------------------------------


தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
வலைப்பூ: தேன் மதுரத் தமிழ்

தேமதுரச் செந்தமிழைச் செப்புகிறார்! உண்டுநான்
மாமதுரம் என்றே மயங்குகிறேன்! - பா..மதுர
பாரதி சொல்கின்றேன்! பாவை கிரேசிடம்
சீரதிகம் பொங்கும் செழித்து!



------------------------------------------------------------------------------------------------------------


மனோ சாமிநாதன்
வலைப்பூ: முத்துச்சிதறல்

முத்துச் சிதறல்! முகங்காட்டும் கண்ணாடி!
கொத்து மலர்குவிப்பு! கொஞ்சுதமிழ் - கத்துகடல்
போல்தொடரும்! கற்ற புலவரின் ஆற்றலுக்கு
மேல்படரும்! இன்பெய்த மேவு!



------------------------------------------------------------------------------------------------------------


உமையாள் காயத்ரி
வலைப்பூ: R.Umayal Gayathri

புதுக்கவிதை பூக்கும்! மதுக்கவிதை ஏந்தும்!
பொதுப்புவியைக் காணநடை போடும்! - புதுமையொளிர்
மின்பூவை மீட்டும் வியன்உமையாள் காயத்ரி
இன்பூவைக் காண்பீர் இனி!



------------------------------------------------------------------------------------------------------------


கீத மஞ்சரி
வலைப்பூ: கீத மஞ்சரி

நற்கீத மஞ்சரி நன்வலை! நற்றமிழின்
பொற்கீத மஞ்சரி! போற்றிடுவேன்! - கற்பனைக்கு
எட்டாத காட்சிகளை ஏந்தும்! மிகவிரைவில்
கிட்டாத தேனின் கிடங்கு!



------------------------------------------------------------------------------------------------------------


பவித்ரா நந்தகுமார் - ஆரணி
வலைப்பூ: பவித்ரா நந்தகுமார்

ஆரணி வாழும் அரும்பவித்ரா நந்தகுமார்
சீரணி கொண்ட செழும்மறத்தி! - பேரணிபோல்
கொஞ்சும் கவிதைகள் கோல விழாநடத்தும்!
நெஞ்சம் நெகிழும் நினைந்து!



------------------------------------------------------------------------------------------------------------


கோமதி அரசு
வலைப்பூ: திருமதி பக்கங்கள்

திருமதி பக்கங்கள்! தீந்தமிழ்த் தாயின்
பெருமதி பக்கங்கள்! பேணும்! - அரும்மதியார்
கோமதியார் தீட்டும் குளிர்ந்த எழுத்தெல்லாம்
பா..மதியார் தீட்டும் படைப்பு!



------------------------------------------------------------------------------------------------------------


மாலதி - சென்னை
வலைப்பூ: மாலதியின் சிந்தனைகள்

மாலதியின் சிந்தனைகள் மாண்புடைத்து! போராடும்
வேலதின் கூர்மை மிகுவுடைத்து! - ஆலதில்
உள்ள வலிமை உடைத்து! வலைமுழுதும்
அள்ளச் சுரக்கும் அமுது!



------------------------------------------------------------------------------------------------------------


நன்றி மலர் துாவுகிறேன்

நல்ல கருத்து நறுங்கவிகள் நல்கினார்
வல்ல வலைப்பணி மாண்பேந்த!  - சொல்லரிய
ஊமைக் கனவோதும் ஒண்சோசப்! என்நன்றி
ஆமை அடக்கம் அணிந்து!

நாளும் வருகையை நல்கிய அன்பர்முன்
தோளும் உயர்த்தித் தொழுகின்றேன்! - மூளும்
மொழியுணர்வு தந்தேன்! முதுதமிழ் காக்க
வழியுணர்வு தந்தேன் வடித்து!

புதுவை நகர்வேலு பொற்பணி யாற்றப்
புதுமைக் கவியெனைப் போந்தார்! - எதுகையொளிர்
பாக்கள் படைத்தேன்! பசுந்தமிழால் நன்றியெனும்
பூக்கள் படைத்தேன் புகழ்ந்து!

மேலும் வாசிக்க...

Saturday, August 8, 2015

மண்ணின் மணம்!



வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!

மண்ணின் மணம்!

புதுவையுள் ஓங்கிப் பொலிந்திடும் வலைகள்
     புகழினைக் கண்டுளம் பூத்தேன்!
புதுமையுள் நாட்டைப் புகுத்திடும் வண்ணம்
     போந்துள பதிவுகள் ஆய்ந்தேன்!
பொதுமையுள் உலகம் புறப்பட வேண்டிப்
     பொங்கிடும் மறவரைக் கண்டேன்!
எதுகையுள் சிறந்த என்கவி யாவும்
     எழில்தமிழ் மண்மணம் அன்றோ!

வலைத்தமிழ் வளர்க்கும் மறத்தமிழ்ப் புதுவை
     வளத்தினை வடிப்பதென் கடமை!
கலைத்தமிழ் கொஞ்சும்! கவித்தமிழ் மிஞ்சும்!
     கடல்வளம் போல்அதன் பெருமை!
இலையுறும் பசுமை! ஈடிலா வளமை!
     இசைத்திட இசைத்திட இனிமை!
மலைத்தமிழ் மாண்பைத் தலையெனக் காத்தால்
     வாழ்வினில் இலையொரு சிறுமை!

மறமியல் கற்ற மாண்புடைத் தமிழன்
     வலையியல் கற்றிட வேண்டும்!
அறமியல் கற்ற அன்புடைத் தமிழன்
     அறிவியல் ஆய்ந்திட வேண்டும்!
திறமியல் கற்ற சீருடைத் தமிழன்
     தீந்தமிழ் காத்திட வேண்டும்!
பொறியியல் கற்ற பொற்புடைத் தமிழன்
     புகழியல் புனைந்திட வேண்டும்!


பாட்டின் இலக்கணம்: எழுசீர் விருத்தம்


நால்விள மும்மா நடைபெறுங் கொடிய
நச்சுவேல் நயனமார் அமிழ்தே [விருத்தப்பாவியல் பக்கம் - 15]
 
விளம் + மா + விளம் + மா +
விளம் + விளம் + மா. 
ஐந்தாம் சீரில் மோனை வரும். 


--------------------------------------------------------------------------------------------------------


முனைவர் மு. இளங்கோவன்
வலைப்பூ: முனைவர் மு. இளங்கோவன்


முத்தமிழ் தீட்டும் மு.இளங் கோவர்
     மொழிந்துள பதிவுகள் கண்டேன்!
புத்தமுது ஏந்திக் புகழ்த்தமிழ் ஏந்திப்
     பொலிந்திடும் அழகினைக் உண்டேன்!
முத்தொளிர் வண்ணம் புத்தியுள் மின்னும்
     முதுமொழிப் பற்றினைக் கொண்டார்!
எத்திசை பாட இவர்பணி ஓங்க
     இறையவன் திருவருள் புரிக!



--------------------------------------------------------------------------------------------------------


இராஜ. தியாகராசன்
வலைத்தளம்: புதுச்சேரி

மின்னிதழ் ஒன்றை மீட்டிடும் நண்பர்
     வியன்வலை முன்னணி யாளர்!
பொன்னிதழ் போன்றே பூங்கவி யாவும்
     புனைந்திடும் நற்கவி சீலர்!
மென்னிதழ் உள்ளம் மேவிய ராசர்
     மேன்மையை உரைப்பதும் எளிதோ?
இன்னிதழ்ச் சுவையை இவர்வலை ஊட்டும்
     இனிப்புற அனைவரும் செல்வீர்!



--------------------------------------------------------------------------------------------------------


பேராசிரியர் அ. பசுபதி
வலைப்பூ: தேவமைந்தன்


மண்மணம் தேவ மைந்தரின் வலையை
     மகிழ்வுடன் கண்டுளம் பூத்தேன்!
தண்மணம் ஆக்கம் தமிழ்மணம் கொண்டு
     தழைத்திட இங்கதைச் சேர்த்தேன்!
ஒண்மணம் ஊட்டும் ஒப்பிலா நெறிகள்
     உலகுயர் வழிகளைக் காட்டும்!
பண்மணம் வீசும்! படர்நலம் பேசும்!
     பாங்கினைக் கண்டிடச் செல்வீர்!



--------------------------------------------------------------------------------------------------------


சொ. ஞானசம்பந்தம்
வலைப்பூ: இலக்கியச்சாரல்


இலக்கியச் சாரல் எனும்சுவை வலையை
     இயக்கும்,சொ. ஞானசம் பந்தம்!
உலுக்கிய மரமாய் உதிர்ந்திடும் கனிகள்  
     ஓதிய பதிவுகள் என்பேன்!
கலக்கிய வினையாய்க் கருத்தினை ஆய்ந்து
     கமழ்ந்திடத் தந்துள ஆக்கம்
குலுக்கிய பரிசாய்க் கொண்டிட வேண்டும்
     குதித்துடன் கண்டிடச் செல்வீர்!



--------------------------------------------------------------------------------------------------------


இரா. சுகுமாறன்
வலைப்பூ:  புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்


என்னுடை ஊரின் இன்றமிழ் வலைகள்
     இணைந்திடப் பணிபல ஆற்றும்!
தன்னுடைத் தோள்மேல் தமிழினை துாக்கித்
     தழைத்தட ஊர்வலம் போகும்!
பொன்னுடை மேன்மை! புதுவையின் சீர்மை!
     பூத்திடப் பதிவுகள் போடும்!
இன்னடை யாக உன்னுளம் மாறும்
     இவர்வலை கண்டிடச் செல்வீர்!



--------------------------------------------------------------------------------------------------------


கலைமாமணி
கவிஞர் தே. சனார்த்தனன்
வலைப்பூ:  கவிஞர் தே. சனார்த்தனன் கவிதைகள்


சிந்தையுள் இனிக்கும் செந்தமிழ் மணக்கும்
     தேன்மலர் சோலையே இப்பூ!
மொந்தையுள் உள்ள முதுசுவை போன்றே
     மொழிதனை அளித்திடும் இப்பூ!
சந்தையுள் உள்ள மந்தையாய் மக்கள்
     வாழ்வதை மாற்றிடும் இப்பூ!
எந்தையின் ஆக்கம்! இனமொழி காக்கும்!
     இன்றமிழ் இல்லமே இப்பூ!




--------------------------------------------------------------------------------------------------------


மேலும் வாசிக்க...

Friday, August 7, 2015

கணினி கற்போம்!




வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்



கணினி கற்போம்!



அறுசீர் விருத்த அணிவகுப்பு

1.
கணினி மின்கலை கற்றிடும் பேற்றினைக்
          களிப்புறக் கற்றிடுவீர்!
அணியும் பொன்னகை அழகினைப் போல்ஒளி
          அடைந்திட அறிவுறுவீர்!
பணியும் ஓங்கிடப் பயன்பல தேங்கிடப்
          பைந்தமிழ்ப் பண்புறுவீர்!
பிணியும் நீங்கிடப் பெருமையைப் தாங்கிடப்
          பீடுடன் தமிழ்காப்பீர்!


பாட்டின் இலக்கணம்:


குறிய வீற்றுமாக் கூவிள முவ்விள
காயொடுங் குறிகொள்ளே! [விருத்தப் பாவியல் பக்கம் - 9]
  
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + விளம் + காய்
முதல் சீரிலும் ஆறாம் சீரில் மோனை வரும்.

காய்வரும் இடத்தில் மாங்காய் மட்டுமே வைத்து எழுதுவார் உள்ளார்.


----------------------------------------------------------------------------------------------


2.
நாடு நலமுற வேண்டின்
     நற்றமிழ்க் கலைகளைக் கற்பீர்!
ஒடு நதியென நன்மை
     ஒளிர்ந்திட உளத்தினை ஏற்பீர்!
தேடு கணிப்பொறி தன்னில்
     தென்மொழி திகழ்ந்திடச் செய்வீர்!
பாடு கவிதையில் துாய
     பசுந்தமிழ் மணந்திட வைப்பீர்!


பாட்டின் இலக்கணம்:

ஒன்று மூன்றுடன் ஆறு
மா!விளம் பிறவிடம் உறுமே! [விருத்தப் பாவியல் பக்கம் - 10]
  
குறிலீற்றுமா + விளம் + மா + விளம் + விளம் + மா
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வரும்.


---------------------------------------------------------------------------------------------- 


திண்டுக்கல் தனபாலன்

வலைப்பூ: திண்டுக்கல் தனபாலன்

3.
திண்டுக்கல் தனபாலர் தெரியாதார் யாரிங்கே?
             வலையின் சித்தர்!
கண்டுச்சொல் உரையாளர்! கணிப்பொறியின் கலைநுட்பம்
             கற்ற சிற்பி!
பெண்ணுங்கொள் அழகாக மின்னுங்கொள் வலைப்பக்கம்!
             குறளின் பேற்றை
உண்ணுங்கள் சுவையாக மண்ணுங்கொள் வழியீந்தார்!
             உயர்ந்து வாழ்க!



பாட்டின் இலக்கணம்:


முதனாகும் காயாகிப் பின்னவை,மா
தேமாவாய் முடியும் அன்றே! [விருத்தப் பாவியல் பக்கம் - 9]
  
காய் + காய் + காய் + காய் + மா + தேமா
முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை வரும்.


---------------------------------------------------------------------------------------------- 


தமிழ்வாசி பிரகாஷ் - மதுரை

வலைப்பூ: தமிழ்வாசி

4.
வலையின் வழியே தமிழ்படிக்க
      வளமாய்ப் பதிவைத் தருகின்றார்!
சிலையின் அழகாய் ஆக்கங்கள்
      கலையின் தன்மை உரைத்தனவே!
மலையின் வன்மை! வயல்பசுமை!
      மண்ணின் பெருமை வழங்கினவே!
அலையின் அணியாய்த் தொடர்ந்திடுவோம்!
      அன்னைத் தமிழை வளர்த்திடுவோம்!



பாட்டின் இலக்கணம்:


இருமா காய்ச்சீர் அரையடிகாய்
இவையே மற்ற அரையடிக்கும் [விருத்தப்பாவியல் பக்கம் - 8]
  
மா + மா + காய் + மா + மா + காய்  
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வரும்.


அன்பு வேண்டுகோள்

தமிழ்வாசி பேரைத் தமிழ்படிப்பாய் என்றோ

தமிழ்பேசு எனச்சொல்! தழைத்துத் - தமிழோங்கும்!

அன்பால் அளித்த அரிய கருத்தினை

உன்பால் உணர்ந்தால் உயர்வு!

---------------------------------------------------------------------------------------------- 


அப்துல் பாசித்

வலைப்பூ: ப்ளாக்கர் நண்பன்

5.
மின்வலை நண்பன் என்று
     நன்வலை கட்டும் அப்துல்
மின்கலைக் கல்வி நுட்ப
     விந்தையை விரிக்கும் அன்பன்!
இன்வலை ஆக்கம் யாவும்
     எழிற்றமிழ் மாட்சி என்பேன்!
பொன்வலை பக்கம் கண்டு
     போற்றியே படிப்போம் வாரீர்!



பாட்டின் இலக்கணம்:


சீர்விள மாச்சீர் தேமாச்
சீரிணைந் திரட்டும் இங்கே! [விருத்தப்பாவியல் பக்கம் - 7]
  
விளம் + மா + தேமா + விளம் + மா + தேமா
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வரும்.


அன்பு வேண்டுகோள்


வலைநண்பன் என்றே வடிவாய்ப்பேர் இட்டால்

கலைநண்பன் என்றே கதைப்பேன்! - இலையென்றால்

எங்கும் தமிழழகைப் பொங்கும் புலவன்என்

அங்கம் துடிக்கும் அதிர்ந்து!


---------------------------------------------------------------------------------------------- 


சசிகுமார்

வந்தே மாதரம்

6.
மின்னார் வலையின் நுட்பம்
     விளைக்கும் இப்பூ! வியக்கின்றேன்!
தன்னேர் இல்லா வண்ணம்
     தழைக்கும் இப்பூ! தமிழ்காக்கும்!
பொன்னேர் உழுத அழகாய்ப்
     பொலியும் இப்பூ! புவியினிலே
தன்பேர் ஓங்கும் வினையைத்
     தாிக்கும் இப்பூ! சாற்றுகவே!



பாட்டின் இலக்கணம்:


மாச்சீர் ஐந்து காய தொன்று
வண்டார் குழன்மாதே! [விருத்தப்பாவியல் பக்கம் - 11]
  
மா + மா + மா + மா + மா + காய்  
முதல் சீரிலும் ஆறாம் சீரில் மோனை வரும்.


---------------------------------------------------------------------------------------------- 


பிரபு கிருஷ்ணா

வலைப்பூ: கற்போம்

7.
கற்போம் கணினிக் கலையைக்
     கன்னல் தமிழ்மொழி காக்க!
நற்பேர் படைத்த வலைப்பூ
     நவிலும் நலவழி பூக்க!
நற்றேன் அளிக்கும் சுவையாய்
     நல்கும் பதிவினை ஆக்க!
சொற்போர் நடத்தும் கவிநான்
     சொன்னேன் சிறப்பை இனிதே!


பாட்டின் இலக்கணம்:



கடையது மாவிள மாச்சீர்  
கலந்தது வெண்டளை என்ப [விருத்தப்பாவியல் பக்கம் - 10]
  
மூன்றும் ஆறும் மாச்சீர்.
ஒவ்வொரு அரையடியும் இயற்சீர் வெண்டளை பெறும்.
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வரும்.



---------------------------------------------------------------------------------------------- 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது