காப்புப் பருவம்!!!
கண்ணே! கனியமுதே!
காணக்கிடைக்காத
கருங்கடல் முத்தே! - என
கருவினில் எனைச்சுமந்து
கருப்பொருட்களை
கனகத் தூரிகையில்
கருத்தாய் சமைக்கும்
சபைநிறை ஆன்றோர்கள்
புகழ்நிறை சான்றோர்கள் - நிறைந்த
நிகழ்நிறை வலைச்சரத்தில்
ஆசிரியனாய் என்னையும்
பணியாற்ற இப்புவியினில்
பிறவியெடுக்கச் செய்த - எனைப்
பெற்ற தெய்வங்களுக்கு
முதல் மரியாதை!!!!
சொற்களாலும் பொருட்செறிவினாலும் பல்சுவைப் படைப்புகளை இனிதாய்ப் படைக்கும் பல பிரம்மாக்கள் மத்தியில் நீயும் ஒரு எழுத்தாளன், என என் எழுத்துக்களை அங்கீகரித்து இரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியப் பணியினை எனக்கு உவந்தளித்த ஐயா.சீனா அவர்களுக்கும், நண்பர் தமிழ்வாசி.பிரகாஷ் அவர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகள் பல.
என்னைச் செம்மையாய் செதுக்கிய ஆசான்களுக்கும், என்னுடன் தோளோடு தோள்கொடுத்து தவங்கியபோது தாங்கியும் துவண்டபோது நம்பிக்கை கொடுத்தும் என் மெய்யோடு உயிராய் இருக்கும் என் மனைவிக்கும் இத்தருணத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிறந்தது அங்கயற்கண்ணி ஆட்சி செய்யும் நான்மாடக்கூடல். வளர்ந்ததும்
வாழ்வதும் முத்துநகராம் திருமந்திரநகர். படித்தது இளங்கலை வேதியியல்.
பணிபுரிவது அமீரகத்தில் கச்சா எண்ணெய் எடுக்குமிடத்தில். அன்பான மனைவி,
அழகான இரு குழந்தைகள் ஆதரவாக அன்னை இப்படி பன்னீர் சோலையில் ஆறுமாதம்,
ஆழ்கடலில் பணிநிமித்தம் ஆறுமாதமென விக்கிரமாதித்தன் போல வாழ்க்கை ஓட்டம்.
இடையிடையே தமிழின் தாகம் கொண்டு படைக்கும் படைப்புகளே வசந்த மண்டபம்.
முதன்முதலில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் கவிதைவீதி.சௌந்தர் அவர்களுக்கும், முதலில் என் எழுத்துக்களை அங்கீகரித்து இலக்கியச் சிந்தனையாளர் விருது வழங்கிய முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் பல விருதுகள் அளித்த நண்பர் நாஞ்சில்.மனோ, நண்பர் பாலகணேஷ், அன்புத் தங்கை சசிகலா, நண்பர் தனசேகரன், சகோதரி குழந்தைநிலா ஹேமா, மற்றும் அன்பிற்குரிய வேதம்மா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
என் எழுத்துக்களில் நம்பிக்கை வைத்து வசந்த மண்டபத்தை தொடரும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நாட்டுப்புறக் கலைகள் என் எழுத்துக்களின் உயிர்மூச்சு. அந்த பொன்னான கலைகளை ஆணிவேர் போல இல்லாவிட்டாலும் சல்லிவேர் போலவாவது இருந்து வாழ்விக்க தணியாத விருப்பம். பல கலைகளை பற்றி கவிதை வடிவில் எழுதிவிட்டேன். தெருக்கூத்து எனும் மிகப்பெரிய கலை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மிகப்பெரிய சமுத்திரம் அக்கலை. என்னால் இயன்ற அளவுக்கு செய்திகளைத் திரட்டிக்கொண்டிருக்கிறேன். முழுமையாக அக்கலை பற்றி எழுதி முடிக்கும் அந்த பொன்னான திருநாளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
நாட்டுப்புறக் கலைகள் பற்றிய என்னுடைய பதிவுகள்:
பொய்க்கால்குதிரை ஆட்டம்!!
முளைப்பாரிக்கும்மி!!
பூங்கரகம் ஆடிவந்தேன்!!
துடிப்பான புலியாட்டம்!!
தமிழன்னையின் பாதகமலங்களுக்கு நான் எழுதிய சில கவிதைகள்:
மருளும் மான்விழி!!
திணை மயக்கம்!!
ஆழிப்பேரலை அமைதி!!
நிழற்படக் கவிதைகள் சில:
நிழற்படக் கவிதைகள்...!!!
நிழற்படக் கவிதைகள்...3!!!
பூமிப்பந்தின் அங்கமடி
தீந்தமிழின் செல்வனடி!
தங்கமே தங்கம்!
பிள்ளைத்தமிழ் பாடவந்தேன்
தங்கமே தங்கம்!!
பாற்கடலின் நாரணனே
அலைமகளின் காதலனே!
தங்கமே தங்கம்!
பாடும் பிள்ளை காத்தருள்வாய்
தங்கமே தங்கம்!!
வலைப் பூந்தோட்டத்தில்
பூத்திருக்கும் பூக்கள் கொண்டு
தங்கமே தங்கம்!
வலைச்சரம் தொடுக்க வந்தேன்
தங்கமே தங்கம்!!
இந்த வாரம் முழுதும் உங்களோடு பயணிக்க இருக்கிறேன். குறைகள் ஏதும்
இருப்பின் அறிவுறுத்துங்கள். இதோ இன்றுமுதல் பிள்ளைத்தமிழ் நாட்டுப்புற
நடையில் வலைச்சரமாய் உங்களுக்கு. காப்புப் பருவத்துடன் தொடங்கும் இந்த வார
ஆசிரியப்பணி சிறக்க உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பையும் நன்றியுடன்
எதிர்நோக்கி தொடர்கிறேன்....
அன்பன்
மகேந்திரன் 



