சப்பாணிப் பருவம்!!!
கவியரசரின்
காவியமான வரிகள். வரவுக்கு மிஞ்சிய செலவு தான் நம்மில் பெரும்பாலானோருக்கு
ஏற்படும் நிதர்சனம். ஆயினும் அந்த செலவையும் தாண்டி நமக்கான வருமானத்தில்
இருந்து ஓரணா காசாவது எடுத்து நாளைக்கு வேண்டுமென்று சேர்த்துவைத்தல்
அவசியமென்று சிறுவயதில் இருந்து நமது மூளைக்குள் திணிக்கப்பட்ட தாய்வழிச்
சொத்து.
" சிறுதுளி பெருவெள்ளம்"
"சிறுதுரும்பும் பல்குத்த உதவும்.."
இப்படியாகச் சில பல பழமொழிகளைச் சொல்லி நம்மில் ஆழமாக சிறுசேமிப்பு எனும் ஆணிவேரை பதித்து விடுகின்றனர்.
மேலும்...
"கையில வாங்கினேன்
பையில போடல
காசு
போன இடம் தெரியல ...." எனவும்... பாடல்களால் நம்மில் பணத்தின் குணத்தையும்
அவற்றைக் கட்டுபடுத்தும் சாமர்த்தியத்தையும் வளர்த்து வைத்திருக்கின்றனர்
முன்னோர்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ஒரு பாடலில் " திருப்பதி
உண்டியலில் சேர்ந்து போனாயோ திருவண்ணாமலை குகை புகுந்தாயோ.." எனப் பணத்தை
தேடி கடைசியில் பணமே பணமே பணமே என்று புலம்புவார்... உற்றுக் கவனித்தால்
அங்கே பணமென்பது சிறகு முளைத்த பறவை விட்டால் பறந்துவிடும். சிறகு
முளைத்தபின்னும் பறக்கவிடாது கூண்டிலே அடைத்து வைத்திருத்தல் மிகுந்த
சாமர்த்தியம் எனப் புரிகிறது.
பொருளாதாரத்தின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தால் ஒன்று கிடைக்கும் வருமானத்தில் சிறுபகுதியைக் கூட செலவு செய்வதில் விருப்பம் இல்லாதவர்கள் இவர்களைப் பொதுவாக நாம் கஞ்சன் என்று அழைக்கின்றோம். இரண்டாவது குடும்பத்தை சிக்கனமாக நடத்தி சேமித்து வைப்பவராக இருப்பார். மூன்றாமவர் நல்ல செலவாளியாக இருப்பார் இவர்களை நாம் ஊதாரி என்று பெயரிட்டு அழைக்கின்றோம். இதில் நாம் எந்த பிரிவினர் என்பதை நாமே உணர்ந்து சரியான பாதையில் செல்தல் அவசியம்.
சிறுகச் சிறுகச்
சேர்த்து வைத்த - சிறுசேமிப்பு
குறுகக் குறுக
உன்னை வளர்த்து - நாளை
குறுநில மன்னனாக்கும்!!
கடந்த
2008 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிவைத்தது ஒரு வகையான
பொருளாதாரச் சரிவு. பங்கு வர்த்தகங்கள் அடியோடு மாறிப்போயின. சில நாடுகள்
அடுத்த அடி எங்கு வைப்பது என்றுகூட தெரியாமல் திக்குமுக்காடிப் போயின.
ஆனால் அந்த நிலையிலும் நம் இந்தியத் திருநாடு நிலைத்து நின்றதற்கு காரணம்
தெரியுமா?? நம் மக்களின் சேமிப்பு பழக்கமே அது. எந்த நாட்டிலும் இல்லாத
வகையில் நம் மக்களால் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்ட பணம் தான் அந்த
சரிவில் இருந்து நம் திருநாட்டை காத்தது.
சேர்த்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னகண்ணு
அவங்க ஆற நூறா ஆக்குவாங்க செல்லகண்ணு...==================================================================
சப்பாணிப் பருவம், இன்றைய வலைச்சர பிள்ளைத்தமிழ்ப் பருவம் சப்பாணிப் பருவம் ஆகும். குழந்தை இரு கைகள் கொட்டி சிரித்து கைகள் நீட்டி அழைத்து கொண்டாடி மகிழ்வதே சப்பாணிப் பருவம் ஆகும். "சப்" என்ற ஓசையுடன் "பாணி"-கைகள் கொட்டி சிரிப்பது சப்பாணிப் பருவம். அப்படி ஒரு அழகான பருவத்தில் இருந்துகொண்டு சிறுசேமிப்பு பற்றி பதிவுகள் புனைந்திருக்கும் பதிவர்கள் பற்றிக் காண்போம்.
===============================================================
தகவல்களைத் தேடித்தேடி அலைந்து அவற்றைத் தொகுத்து நம் கண் முன் பதிவுகளாய்த் தரும் தமிழ்க்காரன் இவர். இதோ சிறுசேமிப்புக்கான 100 எளிய வழிகளை நமக்காகத் தருகிறார். இவற்றில் சிலவற்றைக் கடைபிடித்தாலே சிறுசேமிப்பு பெருகும்.
எங்கெங்கு தேடினாயோ
ஏற்றுமானூர் மன்னவனே!
எமக்காக தந்தனையோ
எளிய பல வழிகளையே
சிலவற்றை கைகொண்டாலே
சிறுசேமிப்பு பெருகுமைய்யா!!!
=========================================================
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை என்று முழங்கிக்கொண்டே நண்பர் சக்திசுமி தனது அடேங்கப்பா வலைத்தளத்தில். சிறுசேமிப்பில் திட்டமிட்டு வெற்றிபெறுதல் அவசியம் என்கிறார், மிகநீண்ட கட்டுரை. அவசியம் நாம் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். படிப்போம் பயன்பெறுவோம்.
சக்கர வியூகம்
உடைக்கத் தெரிந்தவன்
உடைத்தான்!
வெளியே வர இயலவில்லை
போதாத திட்டமிடல்!
மாண்டான் அபிமன்யூ!
திட்டமிடல் அவசியமய்யா
திட்டமிட்டால்
திக்கெட்டும் நம் வசமே!!
=====================================================
என் மனதில் எழும் உணர்வலைகளை மடலாக எழுதுகிறேன் என்று விளம்பும் சகோதரி பவியின் தளம். சிறுசேமிப்பும் சிக்கனமும் இரண்டறக் கலத்தல் அவசியம் என்கிறார். சிக்கனம் மூலம் செய்யப்படும் சிறுசேமிப்பு நம்மை மலையேற்றி வாழவைக்கும் என்கிறார்.
ஒட்டிப்பிறந்த இரட்டையென
ஓங்கிச் சொல் பெண்ணே!
ஒன்றும் ஒன்றும் இணைந்துவிட்டால்
ஓராயிரம் யானை பலம்....
==============================================================
நண்பர் ஸ்ரீகிருஷ்ணன் தனது ஜோதிட சுடரொளி தளத்தில் எது மாதிரியும் இல்லாது புது மாதிரியாக சிந்தித்து பதிவியற்றி இருக்கிறார். நம் நாட்டில் சிறுசேமிப்பு அக்கறை ஓரளவுக்கு எல்லோருடைய வீட்டிலும் இருக்கிறது என்றே சொல்லலாம், ஆனால் அதிக சிரத்தையுடன் சிறுசேமிப்பில் ஈடுபடுவோர் சரிவர விசாரிக்காமல் சிலபல தனியார் நிறுவனங்களில் பணத்தை போட்டுவிட்டு ஏமாற்றப்படுகிறார்கள். அகலக்கால் வைத்தாலும் பார்த்து வைக்கவேண்டும் என்கிறார்.
ஆழமாக யோசித்து
அரையடி வைத்தாலும்
அரைக்காசு பிரயோசனம்!
நீளமாக யோசித்து
அகலக்கால் வைக்காதே
இருக்கும் காலும் நொடிபடுமே
இதை நீயும் மறக்காதே!!
===============================================================
அட.. சேமிப்பு என்றதுமே மலைக்காதீங்க. சேமிப்பு சின்ன விஷயம் தான் எனச் சொல்லி பதிவு ஏற்றியிருக்கிறார் தங்கை அனன்யா. இயக்குனர் சங்கர் அந்நியன் திரைப்படத்தில் போட்ட கணக்கு போல ஒரு கணக்கு போடுகிறார். அட... இதுவும் சரிதானோ என்று தோன்றுகிறது.
ஊத்துபட்டி போகப்போறேன்
உண்டியலு வாங்கப்போறேன்!
செலவுகளில் தொங்கிநிற்கும்
உதிரியான காசையெல்லாம்
உண்டியலில் போடப்போறேன் - நானும்
கோடீஸ்வரி ஆகப்போறேன்!!
==============================================================
இந்தச் செய்தியைப் பார்த்ததும் மனசுக்கு இனிமையாக இருக்கிறது. சிறுசேமிப்பு எனும் பழக்கம் பள்ளிப் பருவத்தில் இருந்து தோன்றவேண்டும் என்ற என் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்துவிட்டது இந்தச் செய்தி.ஒரு கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தில் உறைந்திருக்கிறார்கள். ஆசிரியர்களின் உதவியுடன். போற்றத்தகுந்த செயல்.
ஆஹா!! ஆசிரியரே
உமது தாழ் பணிகின்றேன்!
உம்மால் தானன்றோ
இச்செயல் சாத்தியமாயிற்று
உம்மைப்போல் வேண்டுமய்யா
உலகெங்கும் ஆசிரியர்கள் ......
==========================================================
சிக்கனம் வீட்டைக் காக்கும், சிறுசேமிப்பு நாட்டைக்காக்கும் எனும் பழமொழி பலமுறை உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது. உறுதியாக நெஞ்சினில் உரமேற்போம். சிக்கனத்துடன் சிறுசேமிப்பை உலகெங்கும் விதைத்து வைப்போம்.
மாடக்குள சந்தையில
மஞ்ச கிழங்கு வாங்கப்போனேன்!
மஞ்சளு இல்லேனுட்டான் - என்ன செய்வேன்
மக்கா நாளு வரச்சொன்னான் - போகணுமே!!
அவன்கேட்ட முன்பணத்துக்கு
முட்டாப்பய எங்கபோவேன்
கைல காசு வாய்ல தோசை - என்றானே
நானும் கையாளா ஆகாமத்தான் நின்றேனே!!
கையில காசுமில்ல
கால்வயித்துக்கு சோறுமில்ல
கண்ணம்மா என் கிளியே - நில்லம்மா
என்னிலைக்கு வழியை கொஞ்சம் சொல்லம்மா!!
அப்பனாத்தா பேச்சைக்கேட்டு
சிக்கனமா இருந்திருந்தா
சிக்கலொன்னு வந்திருக்குமா - சொல்லய்யா
சிக்கனம் தான் நல்லதின்னு இப்போ சொல்லய்யா!!
சேமிச்ச காசையெல்லாம்
பக்குவமா வைக்காம
ஊதாரியா விதைச்சிபுட்டா - செல்லப்பா
ஊரிங்கு மதிக்காதய்யா கண்ணப்பா!!
நல்லாவே புரிந்ததடி
நாலுமிங்கு தெரிந்ததடி
நாளைமுதல் தொடங்கப்போறேன் - பக்குவமா
சேமிப்பை தொடங்கபோறேன் சிக்கனமா..............
(வெளிநாடு வாழ் இந்தியன் என்கிற வகையில் இங்கே ஒரு செய்தியைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். தங்கள் நாட்டைவிட்டு
வெளிநாடுகளில் பணிபுரியும் ஏனைய நாட்டோர்கள் மத்தியில், தாங்கள் சம்பாதித்த
பணத்தை 99% தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பும் முதல் வரிசையில் முதல்
ஆளாகா நிற்கிறார்கள் இந்தியர்கள். பெருமைகொள்ளவேண்டிய செய்தி.)
அன்பன்
மகேந்திரன்