07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 25, 2014

வாழ்க்கைப் பயணத்தினூடே சில வழிப்பயணங்கள்

வணக்கம் நண்பர்களே.


பயணங்கள் புதிய மனிதர்களை அறிமுகப்படுத்துகின்றன; பயணங்கள் புதிய இடத்தை புதிய உணவுகளை புதிய வாழ்க்கை முறையை புதிய மனவோட்டங்களைஎன்று ஏராளமான புதுப்புது விஷயங்களை நமக்கு அறிமுகப்படுத்தி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் கண்டுணர உதவுகின்றன. ரசிப்புத்திறனை மேம்படுத்துகின்றன. இயற்கையை நேசிக்கவும் அதனோடு இயைந்து வாழவுமான வழிமுறைகளைக் கற்றுத்தருகின்றன.

இல்லத்துச் சாளரங்களின் வழியாகவும் கணினிச் சாளரங்களின் வழியாகவும் காணும் புற உலகைப் பற்றிய நம் கணிப்பையும் மதிப்பீட்டையும் மாற்றுகின்றன பயணங்களும் பயண அனுபவங்களும். உறவுகளுக்குள் புதியதொரு பந்தமும் பிணைப்பும் உருவாகக் காரணமாயிருக்கின்றன சிற்றுலா மற்றும் சுற்றுலாப் பயணங்கள். 

உலகம் ஒரு புத்தகம். பயணங்களை மேற்கொள்ளாதோர் 
அதில் வாசிப்பது அதன் ஒரு பக்கம் மட்டுமே 
என்கிறார் செயின்ட் அகஸ்டைன்.

நம்மில் எத்தனைப் பேர் அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்துடனே வாசிப்பை நிறுத்திவிடுகிறோம்? மிஞ்சிப் போனால் ஒன்றிரண்டு பக்கங்கள் கூடுதலாய் வாசிக்க முனைந்திருக்கலாம். ஆனால் நம் பதிவர்களுள் பலர் தங்கள் வாழ்க்கைப் புத்தகத்தின் ஏராளப்பக்கங்களை தங்கள் பயண அனுபவங்களால் நிறைத்துக்கொண்டிருக்கின்றனர்.

பயணம், உங்கள் வாழ்க்கையில் 
அன்பையும் ஆளுமையையும் மீட்டுக் கொணர்கிறது 
என்கிறார் கவிஞர் ரூமி.

வழக்கமான இயந்திரத்தனமான இயல்புவாழ்க்கையின்று விலகி புத்துணர்வும் ரசனையும் கூடியதொரு மாற்றத்தை மனத்தில் ஏற்றி, பின்வரும் காலத்தை வாழ்வதற்கான சக்தியைத் திரட்டிக்கொண்டு வருகிறோம் ஒவ்வொரு பயணத்தின்போதும்.

பயணிப்பது ஒரு கலை. அந்தப் பயணத்தை வெகு அழகாக வாசிப்போரின் மனங்கவரும் வண்ணம் எழுதுவது மாபெரும் கலை. தானும் பயணத்தில் கலந்துகொண்ட உணர்வை வாசகரை அனுபவிக்கச்செய்யும் எழுத்துக்குரியவர்கள் ஒரு சிலரே. அவர்களுள் நானறிந்த சிலரை இங்கே அறிமுகப்படுத்த விழைகிறேன்.

1. பயணங்கள் என்றதுமே நம் நினைவுக்கு சட்டென்று வருபவரும் தம் பயண அனுபவங்களை சுவைபட பல தகவல்களோடும் புகைப்படங்களோடும் நாம் அறியத் தருபவரும் டீச்சர் என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படுபவருமான திருமதி துளசிகோபால் அவர்கள்தான். அவருடைய பயணக் குறிப்புகள் யாவும் அந்தந்த நாட்டுக்குச் செல்பவர்களுக்கு ஒரு கையேடு போல பயன்படக்கூடியவை. அவரோடு நாமும் சிங்கை சீனிவாசப் பெருமாளைத் தரிசிப்போம்  வாருங்கள்.

2. . பயணம் உங்களுக்கு வாழ்க்கையின் மீது வியப்பையும் காதலையும் உருவாக்கும் என்கிறார் கடல்பயணங்கள் என்றே தன் வலைப்பூவுக்கு பெயர் சூட்டியிருக்கும் திரு. சுரேஷ் குமார். உள்ளூர் வெளியூர் உலக நாடுகள் பலவற்றைப் பற்றிய அனுபவத் தகவல்கள் இவர் பதிவுகளில் இறைந்துகிடப்பதைக் காணலாம். ஜப்பானின் வெந்நீர் ஊற்றுக்கள் பற்றி அறிய ஆர்வமா?  வாருங்கள் அனுபவிப்போம்.

3. பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்துக்கு நீங்கள் தயாரெனில் திரு.பாரதிக்குமார் அவர்களின் வலையில் கொட்டிக்கிடக்கும் ஏராள அதிசயங்களின் இரகசியங்களைப் பார்வையிட வாருங்கள். பிரேசிலில் உள்ள முப்பது மீட்டர் உயர பிரும்மாண்ட ஏசு கிறிஸ்துவின் சிலையை அமைத்த விவரங்களை இங்கு காணலாம்சென்ற வாரப் புயலின்போது மின்னல் தாக்கி இச்சிலையின் வலக்கை விரலொன்று துண்டிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

4.   தான் பார்த்து ரசித்த சுற்றுலாப் பயண அனுபவங்களை சுவைபட சொல்வதுடன் பயணங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் பற்றியும் பிற குடும்பங்களுடன் கூட்டுப்பயணம் மேற்கொள்ளும்போது உண்டாகும் சிக்கல்கள் பற்றியும் சிறப்பாக எழுதியுள்ளார் தோழி புதுகைத் தென்றல். கூட்டுப்பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் கட்டாயமாய் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு இது.

5. இந்தியத் தலைநகரில் வசிக்கும் திரு. வெங்கட் நாகராஜ் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சுற்றுலா சென்றதோடு அவற்றைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் புகைப்படங்களுடன் தந்து நாமும் அங்கு சென்ற உணர்வை உண்டாக்குகிறார். அலகாபாத்தில் நடைபெறும் மகா கும்பமேளா பற்றி அறிய ஆர்வமா?  அவர் தளத்துக்கு வாருங்கள்

6. ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிப்பதென்றால் என்ன மாதிரி விசா விண்ணப்பிக்கவேண்டும், என்ன மாதிரி உடைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்னும் கூடுதல் தகவல்களோடு தனது ஐரோப்பியப் பயணத்தை, அழகழகான படங்களுடன் மிகவும் சுவைபட தனது ஊஞ்சல் தளத்தில் எழுதியுள்ளார் தோழி கலையரசி அவர்கள். இது மூன்றாம் கோணம் பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

7. ரயில் பயணங்களின்போது தான் சந்திக்கும் விதவிதமான அனுபவங்களை சிறப்பாகவும் தன் மனத்தில் தோன்றும் எண்ணங்களை மிகவும் ஆணித்தரமாகவும் பதிக்கும் தோழி அகிலா, பயணத்தில் இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டிய செய்திகளைப் பகிர்கிறார். பலருக்கும் பயன்படும் அவை என்னவென்று அறிந்துகொள்ள சின்ன சின்ன சிதறல்கள் தளம் சென்று பார்ப்போமா?

8. இளம்பதிவர்களோடு போட்டிப் போட்டுக்கொண்டு அசத்தலான பதிவுகளை வெளியிடுவதோடு பிற பதிவர்களின் பதிவுகளில் தான் ரசித்தவற்றைத் தனியே தொகுத்தளிக்கவும் ஒரு வலைத்தளம் பேணும், சுப்பு தாத்தா என்று பதிவர்களால் அன்புடன் அழைக்கப்படும், சூரி சுப்புரத்தினம் சிவா ஐயா அவர்கள் நியூயார்க்கில் தனது கலக்கலான அனுபவத்தை வழக்கமான நகைச்சுவையோடு பகிர்ந்துகொள்கிறார். ரசிக்க வாருங்கள்.

9. மடத்துவாசல் பிள்ளையாரடி, ரேடியோஸ்பதி, வீடியோஸ்பதி, உலாத்தல் போன்ற பல வலைத்தளங்களை நிர்வகிக்கும் திரு. கானா பிரபா அவர்கள் தனது பயணக்குறிப்புகளையும் அனுபவங்களையும் பதிவதற்கென்றே பேணும் தளம்தான் உலாத்தல். உலக நாடுகள் பலவற்றுக்கும் மேற்கொண்ட பயண அனுபவங்களை அழகாகத் தொகுத்தளித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஜெனோலன் குகைகளைப் பற்றிய பதிவைப் படங்களுடன் இங்கு காணலாம்.  குகைக்குள் தங்கள் திருமணம் நடைபெறவேண்டுமென்று மல்லுக்கட்டுபவர்களும் உண்டாம். 

10. லெபனான் போவதென்று முடிவான போதே எதைப் பார்க்கிறோமோ இல்லையோ கலீல் ஜிப்ரான் பிறந்த ஊரையும் அவர் வீடு மற்றும் மியூசியத்தையும் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்ட தோழி காயத்ரி சித்தார்த் அவர்களின் ஆசை நிறைவேறியதா? மிரட்டும் படங்களுடன் லெபனான் பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் அவரது பாலைத்திணை வலைத்தளத்தில்.


11. மலேசியாவின் மிக ரம்யமான மாநிலமான திராங்கனுவில் குடிநுழைவு குற்றச்செயல்களைக் கண்டறிந்து சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியிலிருந்த போது தனக்கேற்பட்ட அனுபவங்களையும் சந்தித்த நிகழ்வுகளையும் கடலின் மொழி – மரணம், கடத்தல், கொலைகள் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார் திரு. விக்னேஷ்வரன் அவர்கள். அறிந்துகொள்ள விக்னேஷ்வரனின்  வாழ்க்கைப்பயணத்தில் நுழைந்து பார்ப்போம் வாருங்கள்.

12. வழிப்பயணத்தில் தொலைத்தவற்றை மீளப்பெறும் சாத்தியமிருக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் தொலைத்தவற்றை?என்னைக் கவலைகள் தின்னத்தகாதென கன்னற் தமிழைச் சரணடைந்தேன் என்று சொல்லியபடி பால்யத்தின் நெருடலான தருணங்களை தமிழால் வருடி அழகுபார்க்கிறார் தொலைத்தவை எத்தனையோ என்ற தொடர்பதிவில் தோழி வேதா இலங்காதிலகம். பயண அனுபவங்கள் பல எழுதியிருந்தாலும் அவருடைய இந்த வாழ்க்கைப்பயணம் என்னை மிகவும் ஈர்த்தது.  

ஒரு தேர்ந்த வழிப்போக்கன் பயணத் திட்டங்களைத் தீட்டுவதுமில்லை,
திரும்பிவருவதைப் பற்றி சிந்திப்பதுமில்லை 
என்கிறார் அறிஞர் லாவோட்சு.

திட்டமிடாத பயணத்தின் நெருக்கடிகளில் சிக்கித்தவிக்க நாம் யாரும் விரும்புவதில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் பயணங்கள் அனைத்தையும் கூடுமானவரை முன்கூட்டியே திட்டமிட்டே செயல்படுத்துகிறோம்.  நம்மால் திட்டமிடவியலாத ஒரே பயணம் நம் வாழ்க்கைப் பயணமொன்றுதான். அதைத்தான் கவியரசர் இப்படிப் பாடுகிறார்,

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.

இன்றைய நாளை இனிதே பயணிப்போம். 
இனிவரும் நாட்களும் இனிதாய் அமையும் என்னும்
 நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.






நாளை சந்திப்போம்.
நன்றி. வணக்கம். 

(படம் நன்றி: இணையம்)

45 comments:

  1. வணக்கம்
    சிந்தனைக்கு விருந்தாக நல்ல கருத்துடன் சிறப்பான வலைத்தளங்கள் அறிமுகம் செய்துள்ளீர்கள்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கு நன்றி ரூபன்.

      Delete
  2. வணக்கம்
    இன்று அறிமுகமாகியுள்ள தளங்களில்.
    இலக்கம்-10
    இலக்கம்-11

    ஆகிய இரு தளங்களும் புதியவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு... நன்றிகள் பல....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கானா பிரபா அவர்களின் இந்த தளம் புதிது...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  4. திட்டமிடாத பயணத்தின் நெருக்கடிகளில் சிக்கித்தவிக்க நாம் யாரும் விரும்புவதில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் பயணங்கள் அனைத்தையும் கூடுமானவரை முன்கூட்டியே திட்டமிட்டே செயல்படுத்துகிறோம். நம்மால் திட்டமிடவியலாத ஒரே பயணம் நம் வாழ்க்கைப் பயணமொன்றுதான். //
    அருமையாக சொன்னீர்கள்.

    கானாபிரபாவின் இந்ததளம் தெரியாது படிக்கிறேன்.
    விக்னேஸ்வரன் அவர்கள் தளமும் புதிது.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    பயணத்தைப்பற்றி அருமையான விளக்கம் கொடுத்து பயணக்கட்டுரைகளை தொகுத்து கொடுத்தமைக்கு நன்றி , கீதமஞ்சரி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் குறிப்பிட்டமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  5. பயணங்கள் பற்றிய பதிவும் பயணத்தொடர் எழுதும் பதிவர்கள் அறிமுகமும் அருமை. திருமதி துளசிகோபால், திரு. வெங்கட் நாகராஜ், சூரி சுப்புரத்தினம் சிவா ஐயா அவர்கள்,சகோதரி திருமதி வேதா இலங்காதிலகம் ஆகியோரது பதிவுகள் எனக்கு முன்பே அறிமுகம் உண்டு. திரு. கானா பிரபா அவர்களின் மற்ற வலைத்தளங்களைப் படித்திருக்கிறேன். இந்த வலைத்தளம் எனக்கு புதியது. மற்றவர்களின் வலைத்தளங்களும் எனக்கு புதியவைகள் தான். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
    பயணங்கள் முடிவதில்லை என்பது சரிதான்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் நீண்ட கருத்திடலுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. அருமையான தளங்கள், பயணம் பற்றிய சிறப்பான கருத்துகள் என சிறப்பாக இருந்தது இன்றைய பதிவு.

    இப்பதிவில் எனக்கும் ஒரு இடம் கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  7. அன்பின் கீத மஞ்சரி,

    எனது பதிவை இங்கு அறிமுக படுத்தியதற்கு நன்றிகள் பல. தற்சமயம் அங்கோர் வாட் தொடர்பாக பதிவுகளை எழுதி வருவதால் திரங்கானு தொடர்பாக எழுத முடியவில்லை. கூடிய விரைவில் தொடர வேண்டும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நல்லது விக்னேஷ்வரன். தொடருங்கள். காத்திருக்கிறோம். வருகைக்கு நன்றி.

      Delete
  8. பயணங்கள் எப்போதும் எமது வாழ்க்கையை சுவாரஸ்யம் மிக்க அழகிய வரிகளால் எழுதிவிட்டு செல்கின்றன என்பது எனது அனுபவம்.

    பயணங்களை ஆழமாக ரசிப்பவன் என்ற வகையில் உங்களது இந்த பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்களுக்கு.

      Delete
  9. உலகம் ஒரு புத்தகம். பயணங்களை மேற்கொள்ளாதோர்
    அதில் வாசிப்பது அதன் ஒரு பக்கம் மட்டுமே
    என்கிறார் செயின்ட் அகஸ்டைன்.

    பயணங்கள் பற்றிய பகிர்வுகளை வலைச்சரப்பயயணிப்பில் பதிந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  10. வணக்கம் அன்பின் கீதமஞ்சரி

    மற்றைய சிறப்பான பயணப்பதிவுகளோடு என்னுடைய வலைப்பதிவையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி. வலைச்சர வாழ்த்துகள் உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி கானா பிரபா.

      Delete
  11. தோழி கலையரசி அவர்கள். இது மூன்றாம் கோணம் பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.///

    மூன்றாம் கோணம் பயணக்கட்டுரைப் போட்டியில் எமது "கொள்ளைகொள்ளும் கொல்லிமலைச்சாரல் " என்னும் பயணக்கட்டுரை முதல் பரிசு பெற்றது ..!

    ReplyDelete
    Replies
    1. அறிவேன் மேடம். மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு.

      Delete
  12. மனம் நிறைந்த நன்றிகள்!

    வாசகர்களைச் சும்மா விடப்போவதில்லை... அடுத்த தொடர் ஆரம்பமானது:-)

    இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் என் இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அற்புதம். காத்திருக்கிறோம். வருகைக்கு நன்றி டீச்சர்.

      Delete
  13. தோழி முகநூல் மூலமாக (அ)இங்கு புகுந்தேன். என்ன ஆச்சரியம் பயணங்களாக இருந்தது. ஓ! ஓரு வேளை எனது 3 பயணக்கதைகள் வந்திருக்குமோ என்று பார்த்தேன் .என்ன ஆச்சரியம் தொலைத்தவை எத்தனையோ பயணமாக இருந்தது. மிக்க நன்றி என்று கூறுவது தான் வழமை.
    இது அதற்கும் மேலாக.மிக மிக நன்றி கீதமஞ்சரி.
    .
    எனது முகநூல் சுவரிலும் இடுவேன். பயணம் தொடர வாழ்த்துடன் இன்றைய பயணக்காரர்களிற்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வோடு நன்றிகள் பல தோழி.

      Delete
  14. அருமையான அறிமுகங்கள்... அனைவருக்கும் பாராட்டுகள்..

    என்னவருக்கும் இதில் ஒரு இடம் கிடைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி...:)

    ReplyDelete
  15. //நம்மால் திட்டமிட இயலாத ஒரே பயணம் -
    நம் வாழ்க்கைப் பயணமொன்றுதான். //

    கவித்துவமான வரிகளுடன்
    நல்ல விஷயங்களைக் கொண்ட
    தளங்களின் அறிமுகம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  16. சிறப்பான அறிமுகங்கள்... பாராட்டுகள்.

    ReplyDelete
  17. தலைப்பும் தலைப்பை சார்ந்த அறிமுகங்களும் வெகு சிறப்புங்க தோழி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு மிக்க நன்றி சசிகலா.

      Delete
  18. பயணங்கள் தரும் படிப்பினையை அனுபவத்தை எழுதும் பதிவர்களையும் தளங்களையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. பயணம் பற்றிய அனைத்து தளங்களையும் ஒன்றிணைத்து அளித்தீர்கள் சகோதரி. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி தங்களுக்கு.

      Delete
  20. வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்து சில நாட்களான பின் இன்று கணினியைப் பொருத்தி வலைச்சரம் பார்த்த போது, வலைச்சர ஆசிரியர் கீத மஞ்சரி என்றறிந்ததும் சுவாரஸ்யம் மிகுந்தது. தமிழ்த்தேனில் எப்போதும் அமிழ்ந்து திளைப்பவராயிற்றே என்ற ஆவலில் அனைத்துப்பதிவுகளையும் படித்துப்பார்த்தபோது தான் என்னையும் அறிமுகப்படுத்தியிருப்பது தெரிந்தது! அன்பு நன்றி கீதமஞ்சரி!! வழக்கம்போல் செந்தமிழில் அனைத்தும் மிக அழகாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்! அறிமுகப்படுத்தப்பட்ட பல தளங்கள் மிக உபயோகமானவை. சுவாரஸ்யம் மிகுந்தவை! இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்புக்கு மனமார்ந்த நன்றி மேடம்.

      Delete
  21. அன்பின் கீதமஞ்சரி - (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_25.html) - இப்பதிவினில் - சுப்பு தாத்தாவின் பதிவினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி தெரிவிக்குமாறு எனக்கு மடல் அனுப்பி இருக்கிறார். அவரது இணையத்தில் ஏதோ பிரச்னையாம் - அவர் சார்பில் தங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மின்னஞ்சல் முகவரி : meenasury@gmail.com - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்களுக்கு. நன்றி அறிவித்த சுப்பு தாத்தாவுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      Delete
  22. en pathivin arimuhathuku mikka nandri

    ReplyDelete
  23. மிக்க நன்றி சகோதரி வலைச்சரத்தில் தினம் ஒரு தலைப்பில் அழகான அறிமுகத்தோடு பல வலைப்பூக்களை அறிமுகம் செய்தமைக்கு உங்கள் பட்டியலில் என்னுடைய வலைப்பூவுக்கும் இடம் தந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  24. அழகான அறிமுகங்கள்...என் வலைப்பூவையும் அதில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கீதா...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது