07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 27, 2012

சப்தப்ராகாரம் - நிலம்



இன்று பெரிதாய் நிற்கும் ராஜகோபுரம் அந்த நாட்களில் எப்படி இருக்கு பார்த்தீங்களா..

ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிராகாரங்கள் நடுவில் இருக்கிறது உங்களுக்குத் தெரியும்..

மூலஸ்தானத்தைச் சுற்றி திருவெண்ணாழி சுற்று.  பாற்கடலில் பரந்தாமன் துயில்வதைப் போல..

உத்திரை வீதி, சித்திரை வீதி, அடையவளைந்தான் என்று அடுத்தடுத்து சதுரமாய் வீதிகள்.  உத்திரை வீதியில் ஒரு புறம் மட்டுமே வீடுகள். இந்த வீதியில்தான் தை மாதம் ஓடும் தேர் இருக்கிறது.

சற்றே அகலமான வீதி சித்திரை வீதி. இங்குதான் கோரதம் என்னும் தேரும், சித்திரைத் தேரும்.

வையாளி என்னும் சிறப்பான குதிரை ஓட்டம் ஸ்ரீரங்கத்தின் ஸ்பெஷல். அதிலும் கோண வையாளி என்று குறுக்கு நெடுக்காக பெருமாளைத் தூக்கிக் கொண்டு ஓடுபவர்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும். தேருக்கு முதல் நாள் நடக்கும் திருவிழா.

முன்பு சோலைகள் நிறைந்த ஸ்ரீரங்கம் இன்று பன்மாடிக் கட்டிடங்களால் நிரம்பி வழிகிறது.  நிலம் விற்கும் விலை குதிரை விலை.. யானை விலை.. !

நிலம்.. பஞ்ச பூதங்களில் ஒன்றாய்..

இந்த மண் எத்தனை பேரைத் தாங்கி இருக்கிறது.. எத்தனை சாதனையாளர்கள்.. போராட்டக்காரர்கள்.. மனித நேயர்கள்..

நிலத்தில் நட்ட செடி மரமாகி பல வருடங்களுக்கு (நட்டவர் யாரோ..) பயன் தருகிறது.. 

‘இமயம் சரிகிறது’ என்று மரண செய்தி சொல்லும் போஸ்டர்களை அவ்வப்போது பார்க்கும்போது, பூமிக்கு மேலே நிற்கும் போது அவர்களின் வாழ்க்கைப் போக்கும், புதைந்ததும் விலாசம் தொலைகிற விசித்திரமும் சொல்லாமல் சொல்கிற கதைகள்தான் எத்தனை.. எத்தனை..

இருக்கும் நாட்களை அன்பில் கழிக்கும் ஜீவன்கள் எந்த நாளிலும் நினைவு கூரப்படுகிறார்கள். முகஞ்சுளித்து நகரும் ஆத்மாக்கள், இருக்கும் போதே விலகிப் போக வைத்து விடுகிறார்கள்.

அன்பைச் சொல்வோம்.. எந்நாளும்.





இனி நம் மனம் கவர் பதிவர்களைப் பார்க்கலாமா..

தஞ்சாவூர் கோபாலி என்று செல்லமாய் அழைக்கப்படும் தஞ்சாவூர் கவிராயர் தமது கவிதை, கதை, கட்டுரை, பேட்டி என பன்முகத் திறமைகளில் ஜொலிப்பவர்.  எழுத்தில் வாசிப்பவனை ஈர்த்து அப்படியே இழுத்துப் போகும் சாமர்த்தியசாலி.
எப்போதாவதுதான் பிலாகில் வருகிறார் என்கிற குறையைத் தவிர.. வரும்போது எழுத்து விருந்து நிச்சயம் என்கிற மகிழ்ச்சியில் இதோ..
பெரிய எழுத்து  நிஜமாகவே பெரிய எழுத்துத் தான் அவருடையது.


அடுத்து   பூ வனம்   ஜீவி ஸாரை எனக்கு சமீபமாய்த்தான் அறிமுகம்.  உடன் அவரது பழைய பதிவுகளைத் தேடிப் போனால்.. ஆஹா.. அங்கே எனக்கு இலக்கிய விருந்து காத்திருந்தது. கவிதைகளும்.. ரசனையுமாக.. அவரது பழைய பதிவுகளில் நான் இப்போது சஞ்சரிக்கிறேன் உற்சாகமாய்.

உள்வாங்கி படிக்கும் மனிதர்களைக் கண்டால் எனக்கு பிரமிப்பு. ஜீவகீதம் என்னால் பலமுறை வாசிக்கப்பட்ட தொடர். கல்கியில் வந்ததை தாத்தா பைண்ட் செய்து வைத்திருந்தார். ஓவியங்களுடன் வாசிப்பதில பரம சுகம் உண்டு. தில்லானா மோகனாம்பாளை கோபுலு சித்திரங்களுடன் இன்னமும் ரசிக்கிறேன்.

இதோ வருகிறார் அப்பாதுரை..  ஒரு பிலாக் வைத்து மேய்ப்பதே சிரமம். நான்கு குதிரைகளை ஓட்டிக் கொண்டிருக்கும் எழுத்து சூரியன்.  மூன்றாம் சுழி  ம்ம்.  எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனா?  இல்லையெனில் இப்போது சொல்கிறேன். எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும்.  இப்படிச் சொல்கிறவரை எனக்குப் பிடிக்காமல் போகுமா..

இவரைப் பார்க்கணும் என்று எத்தனை நாளாய்த் தவம்.. போட்டோ பார்த்ததும் ஜென்ம சாபல்யம் ஆனது..   காமெடியில் இவரை பீட் பண்ண ஆளே இல்லை என்று சொல்லலாம். எழுத்தில் நகைச்சுவை மிளிர இவர் எழுதும் பதிவுகளைப் படித்து மிரண்டிருக்கிறேன்.. இப்படி எல்லாம் எழுத முடியுமா என்று.   சேட்டைக்காரன்  இவரைத்தான் சொல்கிறேன் என்று யூகித்தவர்கள் விலாசம் அனுப்பினால் என் சிறுகதைத் தொகுதி ஒன்று கூரியரில் அனுப்புகிறேன்.

நகைச்சுவையில் பிதாமகர் இவர்.  அதே போல சீரியஸ் ரைட்டிங்கும். என்னைப் பிரமிக்க வைத்த எழுத்தாற்றல் இவரிடமும்.  அத்தனை பெரிய எழுத்தாளர்...பழகுவதற்கு எத்தனை எளிமை..   கடுகு  பல புனை பெயர்களுக்குச் சொந்தக்காரரான இவரை வாசிப்பது நம் வாசிப்பனுபவத்தை மெருகேற்றும்.

கதை கவிதை என நேர்த்தியாய் எழுத்துத் தேர் ஓட்டி வரும் இவரை ரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  எழுதுவது அவ்வப்போதுதான் என்றாலும் தரமான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பதில் இன்னொரு கருத்துக்கு இடமில்லை.  ராகவன்  கவிதைகளும் தனி அனுபவம். போய்ப் படிங்க..


கேரக்டர் எழுதுவதில் இவரை மிஞ்ச ஆளில்லை..  எழுத்து இவரிடம் மண்டி போட்டு அமர்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்..
பாமரன் பக்கங்கள்  இவரின் பரம ரசிகனாய் நான் இருப்பதில் எனக்கு கூடுதல் சந்தோஷம்.

முள்ளும் இருக்கு, நிழலும் இருக்கு வாழ்வு போல..
ஹ்ம்ம்..  இவர் எழுத்தில் வாழ்க்கை இருக்கு.. வடிவும் இருக்கு..
ஏன் ஸார் எழுத்துல இடைவெளின்னு மனசு கெஞ்சுது இப்பல்லாம்..
கருவேல நிழல்  பா.ரா. ஸாரின் பரம ரசிகர் வட்டத்தில் கொஞ்சம் எட்டி நின்று ரசிக்கும் கற்றுக்குட்டியாய் நான்.


இவருக்கு என்னதான் தெரியாது என்று தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கு.. சொல் புதிது.. பொருள் புதிது.. சுவை புதிது.. சொல்லிக் கொண்டே போகலாம்..இவர் பதிவுகளில் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வட்டத்தில் அடைக்க முடியாதபடி பல ரசனைகளின் கூட்டாஞ்சோறாய்.. ஒவ்வொன்றுமே அதனளவில் சிகரமாய்.. 
சுந்தர்ஜி மோதிரக்கை குட்டிற்கு ஏங்கும் மனசு எனக்கும்.


இது பொறுப்பதில்லை என்று இவர் எழுதும் வரிகளில் தெரிகிறது பாரதியின் அக்கினிக் குஞ்சு.  சமகாலப் பிரச்னைகள் குறித்த இவரது அலசல் வாசிப்பவருக்கு யோசிக்கத் தூண்டும்.  எரிதழல்  வாசன் ஸாரின் கைவண்ணத்தில் தீவிர எழுத்துக்களின் சங்கமம்.

மின்னல் வரிகள் பால. கணேஷ் அனுபவ நடைவண்டி பயணிக்காத பிரதேசம் இல்லை. பழகுவதற்கும் இனிமையான அவர் எழுத்துக்களில் எப்போதும் இளமையின் நர்த்தனம்.


இவர்களை நான் அறிமுகப்படுத்தவில்லை.. உங்களோடு சேர்ந்து நானும் ரசித்ததைப் பகிர்கிறேன்..



தொடரலாம்..  நாளை.,

55 comments:

  1. சேட்டைக்காரன் காமடியன் மட்டுமல்ல பழகுவதற்கும் நல்ல நண்பர் இனியவர் குடும்பஸ்தர்.
    வாம்மா மின்னல் ......
    ஆமாம் மின்னலின் மிளினம் அருமை சரித்தர தொடருக்கு அவரைப்போல ஆளில்லை தற்போது நான் படிக்கவில்லை அவ்வளவு எளிமையான அருமையான வரிகள்.சிறியதாய் இருந்தாலும் விஷயம் அதிகம் .அவரை பாராட்டியமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அனைவருக்கும் தெரிவித்து விட்டேன்... தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    அனைத்தும் சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  3. இன்றைய வலைச்சரத்தில் குறிக்கப்பட்ட அனைவருமே சிறப்பானவர்கள் தான். ராஜகோபுரத்தின் முந்தைய தோற்றம் - அப்போதும் இப்போதும் பார்க்கும்போது எத்தனை எத்தனை வித்தியாசம்....

    ReplyDelete
  4. /// இருக்கும் நாட்களை அன்பில் கழிக்கும் ஜீவன்கள் எந்த நாளிலும் நினைவு கூறப்படுகிறார்கள். முகஞ்சுளித்து நகரும் ஆத்மாக்கள், இருக்கும் போதே விலகிப் போக வைத்து விடுகிறார்கள்... ///

    உண்மையான வரிகள்...

    ReplyDelete
  5. மீண்டும் நன்றி தனபாலன்...

    வாங்க கவியாழி கண்ணதாசன்.. முதல் முத்தான வருகைக்கு. நன்றி.

    நன்றி வெங்கட்.. ராஜகோபுரம் இப்போது ஸ்ரீரங்க அடையாளமாச்சே

    ReplyDelete
  6. இன்றைய அரிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி ரிஷ்பன் அவர்களே! அதென்னமோ தெரியவில்லை, வலைச்சரத்தில் என்னைப் பற்றி யார் குறிப்பிட்டு எழுதினாலும், மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றளவிலும் என்னை உற்சாகப்படுத்தி வருகிறவர்களில் நீங்களும் ஒருவர் என்பதால் இன்று அதிகப்படியான மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உங்களையும் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்தால்தான் எனக்கு ஜென்மசாபல்யம் நிகழும் என்றுமட்டும் இப்போதைக்குச் சொல்லி விடுகிறேன். :-)

    மிக்க நன்றி - என்பது understatement ஆகத்தான் இருக்கும். இருந்தாலும் மிக்க நன்றி!

    எனக்குத் தகவல் அளித்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  8. //வையாளி என்னும் சிறப்பான குதிரை ஓட்டம் ஸ்ரீரங்கத்தின் ஸ்பெஷல். அதிலும் கோண வையாளி என்று குறுக்கு நெடுக்காக பெருமாளைத் தூக்கிக் கொண்டு ஓடுபவர்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும். தேருக்கு முதல் நாள் நடக்கும் திருவிழா.//

    இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளவர்கள் யாவரும் அந்தப் ஸ்ரீரங்கம் பெருமாள் போலவே எழுத்துலகில், மிகவும் ஒஸத்தியானவர்களே! ;)))))

    அவர்கள் அனைவரையும் இணைத்து மிகச்சிறப்பான குதிரை ஓட்டமாகக் கொண்டு வந்து இன்றைய வலைச்சரத்தில் இணைத்து எழுதியுள்ளது, வையாளி அதுவும் கோண வையாளியை நேரில் பார்த்த மகிழ்ச்சியைத்தருகிறது.

    முதல் நாள் நடத்தியுள்ள திருவிழா
    ஜோர் ஜோர் ... ஒரே மகிழ்ச்சி.

    >>>>>>>>>>>
    தொடரும்
    >>>>>>>>>>>

    ReplyDelete
  9. //இவரைப் பார்க்கணும் என்று எத்தனை நாளாய்த் தவம்..//

    நானும் தவமாய்த்தவம் கிடந்தேன், ஒரு காலக்கட்டத்தில்.

    //போட்டோ பார்த்ததும் ஜென்ம சாபல்யம் ஆனது..//

    எனக்கு தன் ஃபோட்டோ + இயற்பெயர் + தன்னைப்பற்றி சுருக்கமாக + தன் கைபேசி எண் முதலியவற்றை எனக்கு மெயில் மூலம் அவரே அனுப்பி வைத்தார்கள்.

    அப்போதே எனக்கும் ஜன்ம சாபல்யம் ஆனது போன்ற திருப்தி ஏற்பட்டது.

    சென்னைப்பதிவர் மாநாடு நடைபெற இருந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அனுப்பியிருந்தார்கள். தானும் அதில் நேரில் கலந்து கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார்கள்.

    கொஞ்சம் முன்பே இந்தத்தகவலை எனக்கு அவர் அனுப்பியிருந்தார் என்றால், அவரை சந்திக்கவாவது நானும் அந்த மாநாட்டிற்குச் சென்றிருப்பேன்.

    ஆனால் திடீரென்ற அவரின் இந்தச் செய்தியால் என்னால் Up & Down Proper Reservation இல்லாமல் புறப்பட்டுச் செல்ல என் தேக செளகர்யம் இடம் கொடுக்கவில்லை.

    //காமெடியில் இவரை பீட் பண்ண ஆளே இல்லை என்று சொல்லலாம். எழுத்தில் நகைச்சுவை மிளிர இவர் எழுதும் பதிவுகளைப் படித்து மிரண்டிருக்கிறேன்.. இப்படி எல்லாம் எழுத முடியுமா என்று.//

    நான் தூங்காத பல இரவுகளில் இவரின் வலைப்பதிவைத்தான் படித்து ரஸித்து சிரித்து மகிழ்ந்துகொண்டு இருப்பேன்.

    // சேட்டைக்காரன் இவரைத்தான் சொல்கிறேன் என்று யூகித்தவர்கள் விலாசம் அனுப்பினால் என் சிறுகதைத் தொகுதி ஒன்று கூரியரில் அனுப்புகிறேன்.//

    சேட்டைக்காரன் அவர்களின் முன்அனுமதியை முதலில் நான் பெற்றுக்கொண்டு, அவரைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் [எனக்குத் தெரிந்த வரை] நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.


    >>>>>>>>>>
    தொடரும்
    >>>>>>>>>>

    ReplyDelete
  10. ஸ்ரீரங்கம் பத்தி பிரமாதமா எழுதி இருக்கீங்க. இப்பதான் கீதா சாம்பசிவம் அவர்கள் பதிவுல 'வையாளி சேவை' பத்தி பேசினோம். நீங்களும் இங்க அதை பத்தி அழகா எழுதி இருக்கீங்க. எப்படியாவது ஒரு தடவையாவது பாத்துடனும்னு இருக்கேன். பாக்கலாம். :) இனிமே எங்கேயுமே நிலமோ, வீடோ வாங்கறதை பத்தி கனவுல கூட நினைக்க போறதில்லை. நல்ல வீடா வாடகைக்கு கிடைச்சா போதும். :)

    'பெரிய எழுத்து', 'பாமரன் பக்கங்கள்', 'எரிதழல்', 'கருவேல நிழல்' அறிமுகத்துக்கு நன்றி!

    மீதி எல்லோருடைய பதிவையுமே நான் தொடர்ந்து, ரசித்து படித்து வருகிறேன்.
    சேட்டைக்காரன் அவர்களின் சில பதிவுகளை படித்து விட்டு வாய் விட்டு சிரித்திருக்கிறேன். கலக்கல்!

    ReplyDelete


  11. அறிமுகம் ஆன பெரும் பாலோர் எனக்கு அறிமுகம் உள்ளவர்களே அதிலும் குறிப்பாக திருமிகு, சேட்டைக்காரரும் மின்னல் வரி கணேசும் என் வீட்டின் அருகில் இருப்பவர்கள்! அடிக்கடி சந்திப்போம்!

    ReplyDelete
  12. //சேட்டைக்காரன் said...
    உங்களையும் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்தால்தான் எனக்கு ஜென்மசாபல்யம் நிகழும் என்றுமட்டும் இப்போதைக்குச் சொல்லி விடுகிறேன். :-)//

    அடடா!

    ”உனக்காக எல்லாம் உனக்காக .....
    இந்த உயிரும் உடலும் ஒட்டியிருப்பது உனக்காக ....... “

    என்ற பாடல் தான் எனக்கு இப்போது உடனே நினைவுக்கு வருகிறது.

    நம் மூவரின் சந்திப்பும் சீக்கரமாக நடைபெற்று, நம் மூவரின் ஜன்ம சாபல்யங்களும் இனிதே நிறைவேற வேண்டும்.

    அதே! அதே!! த தா ஸ் து !!!

    அன்புடன்
    VGK

    >>>>>>>>>>>>
    தொடரும்
    >>>>>>>>>>>>

    ReplyDelete
  13. ஸ்ரீரங்கம் படம் காணக்கிடைக்காதது. கண்டுகொண்டேன். நன்றி.

    அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. பாமரன் பக்கங்களும் , கருவேல நிழலும் தணியாத ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஒரு நட்பாக உரையாடும். அவர்களைக் குறிப்பிட்டத்ற்கு மிகவும் நன்றி ரிஷபன்.

    ஸ்ரீரங்கம் பற்றிய குறிப்புகள் எல்லோருக்கும் பயன் தரும். இன்னும் சொல்லவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.
    நிறையப் பதிவுகளை வாசிக்க ஆசைதான். நேரம் போதவில்லை.

    ReplyDelete
  15. இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டவர்களில் என்
    பேரன்புக்கு உரிய

    [1] பூவனம் ஜீவி ஐயா
    [2] மூன்றாம் சுழி
    [3] சேட்டைக்காரன்
    [4] சுந்தர்ஜி சார்
    [5] எரிதழல்
    [6] மின்னல் வரிகள் பால கணேஷ்

    ஆகிய ஆறு பேர்களும் எனக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயம் ஆனவர்களே.

    மீதி ஐவரையும் இனி நான் பரிச்சயம் செய்துகொள்ள முயற்சிப்பேன்.

    தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி, சார்.

    >>>>>>>>>>>>
    தொடரும்
    >>>>>>>>>>>>

    ReplyDelete
  16. //இன்று பெரிதாய் நிற்கும் ராஜகோபுரம் அந்த நாட்களில் எப்படி இருக்கு பார்த்தீங்களா..//

    நேரிலும் பார்த்துள்ளோம். இப்போது படத்திலும் மீண்டும் பார்த்தோம். பழமையை எடுத்துச்சொல்லும் மிகவும் ஆச்சர்யமான படம் தான்.

    இன்றைய மிக உயர்ந்த இராஜகோபுரம் நல்ல அழகாகவும் கம்பீரமாகவும் தங்களின் எழுத்துக்கள் போலவே காட்சியளிப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.


    //அன்பைச் சொல்வோம்..
    எந்நாளும்.//

    சபாஷ்!

    இன்றைய தங்களின் பதிவு மிகவும் அருமை.

    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    நன்றிகள்.

    பிரியமுள்ள
    வீ......ஜீ
    [VGK]

    ReplyDelete
  17. It makes me to cry with happiness to see in valaicharam through your intro. My heartful thanks Rishabanji. Because of job change, and unable to get net connection, i cant read n write net past two weeks. So, my special thanks To DD for informing this. will come back next week. tks.

    ReplyDelete
  18. எனக்கு பல தளங்கள் புதிதுதான் ஆனால் ரசிப்பிற்குரியவை நன்றி தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. வணக்கம்
    ரிஷபன்(அண்ணா)


    அறிமுக நாள் அன்று நான் ,இட்ட கருத்துக்கு நீங்கள் அளித்த பதிலை நான் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன் 2ம் நாள் வலைச்சரம் மிகவும் இறைகருத்துடன் ஆரம்பமாகியுள்ளது நீங்கள் தொகுத்து வழங்கிய தளங்கள் அனைத்தும் எனக்கு புதியவை ,அந்த தளங்களுக்குச் சென்று பல கருத்துக்களை எனக்காக பெற்றுக்கொண்டேன் இதைய போன்று 3ம் நாளும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் ரிஷபன்(அண்ணா)பதிவுகளை தொடருகிறேன்,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  20. இன்று வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டு திரு. ரிஷ்பன் அவர்களால் மிகவும் பாராட்டிப் பேசப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் [எழுத்துலக ஜாம்பவான்களுக்கும்] என் மனமார்ந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  21. ஆஹா அருமையான இரண்டாம் நாள்....

    முதல் நாள் நீர் பற்றிய அழகிய தெள்ளிய நடை என்றால்...

    இன்று நிலம்... அரங்கனின் ராஜகோபுரம் பழைய படம் எடுத்து போட்டு பிரம்மாண்டமாக பறைச்சாற்றுகிறது ஸ்ரீரங்கத்தின் பெருமையே இந்த ராஜகோபுரம் தான்....

    நிறைய விஷயங்கள் ஸ்ரீரங்கக்கோயிலைப்பற்றி உங்கள் பதிவில் தான் அறியமுடிந்தது ரிஷபன்.. நான் இரண்டு முறை போயிருக்கிறேன் இந்தக்கோயிலுக்கு... தெய்வானுக்ரஹம் இருந்து எனக்கு லீவ் சாங்ஷனாகி விடுமுறைக்கு இந்தியா வரும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஸ்ரீரங்கம் வந்து அரங்கனை தரிசிக்கவேண்டும்.. நீங்கள் விவரித்ததெல்லாம் அங்கே காணவேண்டும் கோயிலில்....

    அழகிய உவமைப்பா...

    ” மூலஸ்தானத்தைச் சுற்றி திருவெண்ணாழி சுற்று. பாற்கடலில் பரந்தாமன் துயில்வதைப் போல..”

    வையாளி என்ற குதிரை ஓட்டம் பற்றியும் இன்று தான் அறிகிறேன்பா.. கண்முன் நீங்கள் விவரித்த காட்சி விரிகிறது... பெருமாளைத்தூக்கிக்கொண்டு ஓடுவதை காணமுடிகிறது....

    உண்மையே.. சோலையாய் இருந்த இடங்கள் எல்லாம் இப்போது மாடிகளாகி கட்டிடங்களாகி அதில் மக்கள் வசிக்க ஆரம்பித்துவிட்டனர்... இன்னும் சில ஆண்டுகளில் நடப்பது கூட சிரமமாகிவிடும் என்று தோன்றுகிறது.. இனி நிலம் வாங்குவதா மூச் !!!!

    நான் பலமுறை நினைத்ததுண்டு கடைசி காலத்தில் பொறுப்புகள் எல்லாம் தீர்ந்தப்பின்னர் கோயில் அருகே ஒரு வீடு வாடகை எடுத்துக்கொண்டு கோயிலின் மணியோசை காலை நம்மை எழுப்ப அதிகாலை தரிசனத்திற்கு போய் திவ்யமாய் தெய்வதரிசனம் கண்டுவிட்டு.... ஒவ்வொரு நாளும் கோயிலின் பிரகாரத்திலேயே கண்மூடி அமர்ந்துக்கொள்ளவேண்டும் என்று..

    நீங்கள் எழுதியதை படிக்கும்போது ஆஹா எத்தனை திவ்யம்.... என்று நினைக்கத்தோன்றுகிறது....

    அருமையான சிந்தனை ரிஷபா.... ஆமாம்பா.. சாதனையாளர்கள், போராட்டக்காரர்கள், மனிதநேய நல்ல உள்ளங்களைத்தாங்கும் அற்புதமான மண்.....

    என்றோ எவரோ நட்ட மரங்கள் எல்லாம் நமக்கு நிழலும் உணவும் நிம்மதியும் உறக்கமும் அளிக்கிறது.. நம் சந்ததியருக்கு நாம் என்ன விட்டுச்செல்கிறோம்?? அழிவையா?? அருமையான சிந்தனைப்பா ரிஷபா....

    இமயம் சரிகிறது எனும்போது நாம் பிழைத்துக்கொண்டாலும் நமக்குப்பின் வரும் காலத்தில் இன்னும் என்னென்ன நடக்கப்போகிறது என்று நினைத்தாலே பயமாக தான் இருக்கிறது...

    ”பூமிக்கு மேலே நிற்கும் போது அவர்களின் வாழ்க்கைப் போக்கும், புதைந்ததும் விலாசம் தொலைகிற விசித்திரமும் சொல்லாமல் சொல்கிற கதைகள்தான் எத்தனை.. எத்தனை..”

    ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்கப்பா ரிஷபா.. உண்மையே...

    ஆஹா அன்பை நிறைமனதுடன் ஒருவருக்கொருவர் பகிரும்போது அங்கே சண்டை ஏது சச்சரவு ஏது பிரச்சனைக்கு வித்தே முளைக்காதே.... எத்தனை அற்புதமான சிந்தனை இது... நல்லவரை நாடி நாம் செல்வதும்... அல்லாதவரை விட்டு விலகுவதும் சரியான வார்த்தைப்பா...

    அன்பையே பகிர்வோம் முழுமனதுடன்...

    ReplyDelete
  22. ஹை... அட்டகாசமான மனம்கவர் பதிவர்கள்... இதில் நான் அறிந்தவர்கள்...

    அப்பாதுரை... அசகாயச்சூரர்.. யப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா எப்படி எழுதுவார்... நம்மையும் கைப்பிடித்துக்கொண்டு ஓடுவது போல் அத்தனை உற்சாகமும் உத்வேகமும் இருக்கும் அப்பாதுரையின் எழுத்தில்... சீற்றமும் இருக்கும்... சந்தோஷமும் இருக்கும்... அன்பும் இருக்கும்... எதற்கும் அசரவே அசராத அற்புதப்பிறவி அப்பாதுரை.. இவரின் எழுத்துகளில் ஆமாம் தைரியமும் மனத்திண்மையும் நான் பார்த்து வியப்படைந்ததுண்டு பலமுறை...

    பூவனம் ஜீவி சார் கமெண்ட்கள் நான் படிச்சு ஆச்சர்யப்படுவேன்... பயங்கரமா அசத்தலா யோசிப்பார்... எழுதுவரின் படைப்புக்கு இவரின் கமெண்ட் கண்டிப்பா கூடுதல் சர்க்கரை தான்... பஞ்சாமிர்தத்தில் இன்னும் கொஞ்சம் உடல்நலத்துக்கு ஆரோக்கியமான பனங்கல்கண்டு சேர்த்தால் எத்தனை சுவையோ அத்தனை சுவை.. இதுவரை நான் ஜீவி சாருடைய தளத்தில் படிச்சு கருத்திட்டதில்லை.. இனி கண்டிப்பாக இடுவேன்...

    சேட்டைக்காரன்.... இவரைப்பற்றி இவரின் நிகரில்லா நகைச்சுவையைப்பற்றி நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் எங்கள் ப்ளாக்கில் ஒரு கவிதைப்போட்டு சேட்டைக்காரன் சார் போல முயன்றதா போட்டிருந்ததை படிச்சப்பவே அவரின் உன்னதம் உணரமுடிந்தது.. இனி கண்டிப்பா இவரின் வலைதளம் சென்று பார்க்கவேண்டும்.. ஒருவரை சிரிக்கவைப்பது என்பது எத்தனை அற்புதமான விஷயம்.. அதை இவரின் இயல்பான பதிவுகள் செய்யவைக்கிறதுன்னா.. கண்டிப்பா இவரின் எழுத்துகள் படிக்கணும்...ஹை இந்தியா போனால் அட நம்ம இராமானுசம் அப்பா வீட்டுக்கு பக்கம் தானா.. பார்த்துடவேண்டியது தான் இவரையும்...

    எங்க கணேஷாவின் மின்னல் வரிகள்.... கரெக்ட்.. நான் பலமுறை இவரின் எழுத்து படித்துவிட்டு வாய்விட்டு சிரித்திருக்கிறேன்.. அட எப்படி வித்தியாசமா சிந்திக்கவும் எளிய நடையில் எழுதவும் நகைச்சுவையானாலும் சரி, தகவலானாலும் சரி எப்படி இத்தனை அழகாய் தொகுக்கமுடிகிறது என்று வியந்ததுண்டு... இவரின் எழுத்துகள் பாலைவனத்தில் சோலையைப்போல் ரம்மியமாக இருக்கும்...

    சுந்தர் ஜீ..... என்னமா எழுதுகிறார்... இவருக்கு தெரியாதது எதுவுமே இருக்காது என்பதே என்னுடைய வியப்பும்.. வியப்பின் உச்சக்கட்டமாக நான் இரண்டு நாள் முன்பு படித்த இவர் பதிவு... மன உணர்வுகளின் உணர்ந்து எழுதக்கூடிய வல்லைமைப்பெற்றவர் இவர்...இவர் எழுத்தைப்படித்து கருத்து எழுதவே பயந்தேன்.. அத்தனை அட்டகாசமாக எழுதுவார்.. உண்மையேப்பா...

    இனி நான் அறியாத தளங்களை அறிமுகப்படுத்தியதில்...பெரிய எழுத்து தஞ்சாவூர் கோபாலி சார், ராகவன் சார், பாமரன் பக்கங்கள், கருவேல் நிழல், கடுகு இதெல்லாம் சென்று பார்க்கிறேன்...


    நிலத்தைப்பற்றி இன்றுச்சொல்லப்போகிறேன் என்று நிலத்தின் அக்குவேர் ஆணிவேர் எல்லாம் மிக அழகாக துல்லியமாக விவரித்து இதிலும் எம்பெருமான் அரங்கனை இணைத்து அரங்கனின் இருப்பிடத்தை விவரித்து.. அவரை எடுத்துக்கொண்டு ஓடும் ஓட்டத்தை வர்ணித்து... நிலத்தின் மேல் இருக்கும் மனிதர்களின் நிலையைச்சொல்லி... அன்பை பிரமாதமாய் புரியவைத்து...

    அறியமுடிகிறது ரிஷபா எழுத்துகள் எப்படி எல்லோரையும் வசீகரிக்கிறது என்றால் எல்லோரையும் வசப்படுத்தும்படி எழுதும்போது...

    மிக அருமையான இரண்டாம் நாள் தொகுப்பு ரிஷபா....

    ஒவ்வொருவரைப்பற்றிய அறிமுகமே அவர் தளத்தைச்சென்று பார்க்கும் ஆர்வத்தை உண்டாக்குகிறதுப்பா.. அத்தனை அசத்தல்....



    ரசித்தவர்களின் தளங்களை எங்களுக்கும் ரசிக்க பகிர்ந்தமைக்கும் நிலத்தைப்பற்றிய மிக அருமையான விஷயங்களை அறியவைத்தமைக்கும் அன்புவாழ்த்துகள் ரிஷபா....

    ரசித்த தளங்களின் அத்தனைப்பேர்களுக்கும் அன்புவாழ்த்துகள்பா.. என்னுடைய ஃபேவரைட்ஸும் இருக்காங்கல்ல :) அதான் எனக்கு ஒரே சந்தோஷம்பா...

    அட்டகாசமான அறிமுகங்கள்பா ரிஷபா...

    ReplyDelete
  23. என்ன ஒரு துள்ளல் என மந்தில் இப்போது.. பின்னூட்டமிடும் அத்தனை பேரையும் நேரிலேயே சந்தித்து உரையாடிய நிறைவு மனசுக்குள். இதற்குக் காரணமான திரு வை,கோ., திரு. சீனா இருவருக்கும் மனம் கனிந்த நன்றி..
    லக்ஷ்மி மேடம்.. உங்கள் வாழ்த்திற்கு நன்றி.
    என் ஜென்ம சாபல்யமும் சேட்டைக்காரன் ஸார்.. உங்களைப் பார்த்தா எனக்கு பேச்சே வராது.. (எப்பவுமே அப்படித்தான்) அதனால பால. கணேஷை கூட்டிட்டு வரேன்.. ரெண்டு பேரும் பேசறதுல ஹாப்பி ஆயிடுவேன்..
    வாங்க மீனாக்ஷி மேடம்.. எந்த வீடு பிடிக்குதுன்னு சொல்லுங்க.. பிடிச்சிரலாம்..
    புலவர் அய்யா.. வருகைக்கு நன்றி..
    வாங்க மாதேவி .. நல்லா இருக்கீங்களா..
    நேரம் கிடைக்கறப்ப படிக்கலாம் வல்லிசிம் ஹன் மேடம்.. நாச்சியார்னு பெயரே ரொம்பப் பிடிச்சிருக்கு..
    பால. கணேஷ் ஸார்.. சீக்கிரமேவ நெட் ப்ராப்திரஸ்து..
    நன்றி கோவை சரளா மேடம்.. உங்கள் ரசனையைப் பகிர்ந்ததற்கு.
    தம்பி ரூபன். ஆர்வமாய்ப் படிக்கும் உங்கள் பேரன்பிற்கு நன்றி..
    வை.கோ. ஸார்.. உங்கள் பின்னூட்டங்கள் எத்தனை சுவாரசியம்.. படிக்கப் படிக்க.. (கை வலிக்கப் போவுதுன்னு தோணும்.. நீங்க, மஞ்சும்மா, இராஜராஜேஸ்வரி மேடம் எழுதும் போது..) ஆனா உங்க கருத்துக்களைப் படிக்கிறப்ப உண்டாகும் ஆனந்தம் விலை இல்லாதது.. உங்கள் மீதான அன்பும் எல்லை இல்லாமல் ..

    ReplyDelete
  24. என்னைப் போன்று பதிவுலகில் புதியவர்களுக்கு பதிவுலகின் முன்னனியில் உள்ளவர்கள் குறித்த பகிர்தல் சிறந்த அறிமுகமாக அமைந்துள்ளது நன்றி. அன்பைச் சொல்லுவோம் எந்நாளும் அருமை.

    ReplyDelete
  25. // எழுத்தில் வாசிப்பவனை ஈர்த்து அப்படியே இழுத்துப் போகும் சாமர்த்தியசாலி.//

    நிலத்திலே நேர்த்தி நஞ்சை.
    நஞ்சை நிலத்திலே புகழுடைத்து தஞ்சை.
    தஞ்சைத் தரணியிலே
    வசிப்பவர் பலரில் நமை
    வசப்படுத்தியவரும் உளர் எனின்
    அவர் ஒருவர் தஞ்சை கவிராயர்.

    எடுத்தேன், படித்தேன், முடித்தேன் என்றில்லாமல்
    கொடுத்தேன் நல்லிலக்கியம் எனக்கூறாது கூறும்
    கொம்புத்தேன்.

    சுப்பு தாத்தா.

    அது இருக்கட்டும்.
    திருவரங்கத்தான்
    கருட, சிம்ம வாகனத்தில்
    காட்சி அளிப்பான்.

    ரிஷப வாகனமும் உண்டோ ?

    ReplyDelete
  26. அருமையான அறிமுகங்கள். இதுவரை படிக்காதவர்களை பொறுமையாய் போய் படிக்கிறேன்.

    ராஜகோபுரத்தின் அன்றைய படம் ஆச்சரியப்படுத்துகிறது சார். வெறிச்சோடி இருக்கும் சாலை....இன்று அங்கு ஐந்து நிமிடம் நிற்கக் கூட முடியாது.....

    தேர் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete

  27. அந்தக்கால ராஜ கோபுரம் படம் எளிமை!

    பெரிய எழுத்து, ராகவன் பக்கங்கள் புதிது. மற்றவர்கள் அறிமுகமானவர்கள். ராகவன் பக்கம் கூட சென்று பார்க்கும்போது ஒருமுறை சென்று படித்து வந்த நினைவாய் இருக்கிறது! :))

    ReplyDelete
  28. வாங்க எழில்.. நிகழ்காலம் இனி உங்களுடையதுதான்.. விவசாயிக்கு வருகிற துக்கம் மனித இனத்துக்கான பொது வருத்தம்.. ரூபாய் நோட்டையா தின்னப் போறீங்கன்னு அருமையா அந்த உணர்வுகளை உங்க பதிவுல சொல்லி இருக்கீங்க..

    ReplyDelete
  29. வாங்கோ சுப்பு தாத்தா.. ரிஷப வாகனம் கிடையாதே.. கவித்தேன் அருந்தி அதே சுவையை உங்க எழுத்திலும் கொண்டு வந்துட்டீங்க நன்றி..

    ReplyDelete
  30. ''...இவர்களை நான் அறிமுகப்படுத்தவில்லை.. உங்களோடு சேர்ந்து நானும் ரசித்ததைப் பகிர்கிறேன்..''

    எவ்வளவு ஓரு அரிய வரிகள்!!!
    நிச்சயம் தெரியாதவர்களை சென்று சுவைப்பேன்.
    அறிமுகம், வார ஆசிரியர் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  31. நன்றி கோவை2தில்லி.. ராஜகோபுரம் பக்கம் இப்போது நெருங்கவே முடியாமல்தான் ..

    நன்றி ஸ்ரீராம்..

    ReplyDelete
  32. உணர்வு பூர்வமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் ரிஷபன் என்பதை

    மீண்டும்..மீண்டும் ..நிரூபித்து வருகிறீர்கள் ...

    உம்முடைய பசையான வரிகள் ...படிப்பவரை இழுத்தணைத்து கட்டிக்

    கொள்ளும் .....

    வாழ்த்துக்களுடன் ....

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  33. சின்ன வயதில் பார்த்த மொட்டை கோபுரம் என்னைக் கவர்ந்த அளவுக்கு இப்போதைய முழு கோபுரம் கவரவில்லை.
    நானும் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவள் தான். இன்னும் என் மாமாக்கள் அங்கு இருக்கிறார்கள்.
    கீழ சித்திரை வீதியில் தான் பாட்டியின் அகம்.
    உங்களது இன்றைய எழுத்துக்கள் என்னை என் சிறு வயதிற்குக் கூட்டிப் போய்விட்டது.

    அறிமுகமானவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  34. நன்றி வேதா மேடம்..

    மூவார் முத்தே.. உங்கள் அன்பை உணர்கிறேன் இந்த வரிகளில்.

    ReplyDelete
  35. ஆஹா நீங்களும் கீழ சித்திரை வீதியா.. நானும் அங்கே தான் இருந்தேன்.. சித்திரைத் தேர் சமீபம்.. நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்.

    ReplyDelete
  36. சிறப்பான தளங்களைப் பற்றி மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    காணக்கிடைக்காத, அந்நாளைய ராஜகோபுரப் படம் அழகு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  37. நன்றி ராமலக்ஷ்மி.. ஸ்ரீரங்கமே அழகுதான் :)

    ReplyDelete
  38. மிகவும் நன்றி ரிஷபன்! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிற பதிவர்கள் என் படிப்பாசையைத் தணிப்பது போல் தூண்டிவிடுபவர்கள். மீண்டும் நன்றி.

    ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் இன்றையத் தோற்றம் ஷைலஜா ப்லாக்கில் ஒரு கதையின் பின்புலத்தோடு படித்த ஞாபகம். தேடிப் பார்த்து கம்பேர் செஞ்சிடறேன். படத்துக்கு நன்றி ரிஷபன். ராஜகோபுரம் என்கிறது உள்ளே மூணாவது லேயரில் தெரிவது தானே? (எதுக்கும் கேட்டு வச்சுக்கறேன்).

    ஸ்ரீரங்கம் பத்தி எழுதி உங்கள் பங்குக்கு ஆர்வத்திரியை இன்னும் தூண்டிவிட்டீங்க. வரும் பயணத்தில் ஸ்ரீரங்கம் ஸ்டாப் நிச்சயம்.

    திண்டுக்கல் தனபாலனின் பரோபகாரம் வாழ்க. கிடைக்குற அஞ்சு நிமிச நெட் டயத்தில் இப்படி நற்செய்தித் தூதராக செயல்படும் இவருடன் ஒரு கப் நல்ல பில்டர் காபியைப் பகிர்ந்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன்.

    மஞ்சுபாஷிணி.. நிறுத்தாதீங்க, சொல்லிட்டே இருங்க. போதையாயிடுச்சு பாருங்க. ரொம்ப நன்றி.

    ReplyDelete
  39. //இந்த மண் எத்தனை பேரைத் தாங்கி இருக்கிறது..

    சுற்றிச் சுற்றை வரும் வரி. சொல்ல மறந்து போனது :)

    ReplyDelete
  40. வரிசையில் 39ஆவதா வந்து நன்றி சொல்லும்படி ஆகிவிட்டது அன்புக்குரிய ரிஷபன்.

    அடிக்கடி நாம் சந்தித்துக்கொண்டிருந்தாலும், இரண்டு நாள் சேர்ந்தாற்போல ஏதாவது அறிமுகமில்லாத இடத்தில் பேசி, சமைத்துச் சாப்பிட்டு, பாடி இன்னும் நெருங்க வேண்டும் போலத் தோன்றுகிறது.

    வரும்நாட்களில் ஒளிந்திருப்பது என்னவோ தெரியவில்லை.

    சகபாடிகளில் ஒருவரான நீர் விலகி நின்று எங்களைக் காட்ட விரல் சுட்ட நேர்ந்திருக்கிறது.மடங்கியிருக்கும் மீதி மூன்று விரல்களும் நல்ல எழுத்துக்கு நெருக்கமான உம்மைச் சுட்டி.

    ஸ்ரீரங்கத்துப் புழுதி என் அன்பு மனைவி உபயம். நுரையீரலில் இன்னும் நீடிக்கிறது என்றாலும் இன்னொரு தடவை சீக்கிரமாய் வர வேண்டும். மதுரகவியையும் பார்க்க வேண்டும்.

    வலைச்சரத்துக்கும், ரிஷபனுக்கும் இன்னும் ஒருமுறை நன்றி சொல்ல நினைக்கிறேன்.

    ReplyDelete
  41. அப்பாதுரையால் 39 இல்லை 40.

    தி.த.பா.வுடன் எனக்கும் ஒரு கோப்பை ஃபில்டர் காஃபியுடனான மாலை காத்திருக்கிறது. தகவலுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  42. //மடங்கியிருக்கும் மீதி மூன்று விரல்களும் நல்ல எழுத்துக்கு நெருக்கமான உம்மைச் சுட்டி.

    தோணாமப் போச்சே!! beautiful.

    ReplyDelete
  43. வையாளி பற்றி படித்தது சிறிது நேரம் கட்டிப்போட்டு விட்டது.
    Srirangapankajam website சென்று ஒரு முறை கோண வையாளி பார்த்துவிட்டேன்.
    இன்னும் பல ஸ்ரீரங்கம் சார்ந்த கதைகளுக்கான எதிர்பார்ப்புகளோடு...

    ReplyDelete
  44. முதலில் தெரியும் மொட்டை கோபுரமே இப்போது பெரிதாய் உருமாறியிருக்கும் ராஜகோபுரம்.. அப்பாதுரை ஸார்.

    இதான் சுந்தர்ஜி.. நான் சுருதி சேர்ப்பதற்குள் ராகவின்னியாசம்..

    வாங்க மாதங்கி.. சௌக்கியமா..

    ReplyDelete
  45. திருவரங்கத்தில் ரங்கநாத பெருமாள் வையாளி நடனத்தைப் பற்றி இன்று வலைச்சரத்திலே திரு ரிஷபன் அவர்கள் எழுதியிருந்தார் அதன் விவரங்கள் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டிருந்த எனக்கு திருமதி மாதங்கி மாலி அவர்கள் எழுதி இருந்த பின்னூட்டம் ஒரு சுவர்க்க வாசல் மாதிரி இருந்தது.

    ஆஹா..ஆஹா. என்னதொரு குதிரை வாகன ஆட்டம் !!
    திரு ரிஷபனுக்கும் , ஸ்ரீரங்கம் பங்கஜம் வலைப்பகுதியில் இருக்கும் விவரங்களைச் சுட்டிக்காட்டிய திருமதி மாதங்கி மாலிக்கும்
    ஆயிரம் தாங்க்ஸ்.

    Enjoy the Vaiyali Dance here.
    subbu thatha.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  46. திருவரங்கம் பற்றியும் சிறந்த வலைப்பதிவர்கள் பற்றியும் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  47. ஆறுமுகப் படுத்திய அத்தனை பெரிய ஜாம்பவான்களும் எழுத்தாலும் சிறந்தவர்கள்... என் வாத்தியார் பால கணேஷ் சார்...

    ReplyDelete
  48. மிகவும் மதிக்கத்தக்க பலரை இங்கே ஒன்றாய் அறிமுகம் செய்துள்ளீர்கள்

    ReplyDelete
  49. சிறப்பான அறிமுகங்கள்.

    ReplyDelete
  50. தேன் மாதிரி இருக்குமா அமுதம்? என தெரிந்ததை கொண்டு தெரியாததை அறிய முற்படுவதை போல் ஸ்ரீரங்கத்து கோண வையாளியை எங்க வீட்டுக்கருகே உள்ள பெருமாள் கோயில் வையாளியை வைத்து உணர முற்படுகிறேன்.

    உங்க தன்னடக்கமும் அன்பு கசியும் நட்புணர்வும் போற்றுதலுக்குரியது.

    ReplyDelete
  51. அன்பைச் சொல்வோம்.. எந்நாளும்.//
    அருமையான வார்த்தைகள்.
    அன்பு அதற்கு ஏங்கும் ஆதமாக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். நாளும் அனபை சொல்வோம்.

    ஜீவி சார் பதிவுகளில் அன்பு இழையோடும். சேட்டைக்காரன் அவர்கள் பதிவுகளை படித்து இருக்கிறேன் மற்றவர்கள் பதிவையும் படிக்க வேண்டும்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  52. ரிஷ்ப‌ன்ஜி வலைச்ச‌ர‌த்தின் பதிவர் அறிமுக‌த்தில் ம‌ற்ற‌ ஜொலிக்கும் வைர‌ங்களுக்கு இடையில் இந்த‌ "எரித‌ழ‌லை" யும் இண‌த்த‌து க‌ண்டான‌ந்த‌ம‌டைந்தேன். என் ப‌திவுக்கு முதன்முத‌ல் பின்னோட்ட‌மிட்ட‌ "முத‌ல்' நீங்க‌ள் எனக்கு. மாலை நேர‌ பில்ட‌ர‌ க‌ஃபிக்கும் தி,த‌.பால‌னைப் பார்க்க‌வும் ஆவ‌ல்.

    ReplyDelete
  53. அன்பு ரிஷபன்,

    நாலைந்து நாட்களாக தொலைபேசி வேலை செய்யவில்லை. அதனால்
    இணையமும் இல்லை.

    இன்று தான் பார்க்கக் கிடைத்தது. தங்கள் குறிப்புகளுக்கு நன்றி. ஜீவகீதம் பற்றிய நினைவுகூர்தல்களு க்கும் நன்றி. ஜெகச்சிற்பியன் அவர்கள் மறக்க முடியாதவர்.
    பதிவுலகில் மதுரை கிருஷ்ணமூர்த்தி சார் மாதிரி ஜெ.சி.யை மறக்காமல் நினைவில் கொண்டிருப்பவர்கள் பலர் உண்டு.

    திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு எனது நன்றியும். யார் இப்படிக் கூப்பிட்டுச் சொல்வார்கள், சொல்லுங்கள். என் கமெட்ண்டுகளை நினைவுகொண்ட மஞ்சுபாஷிணி அவர்களுக்கும், நெகிழ்வையே நெஞ்சமாகக் கொண்ட வை.கோ. சாருக்கும், அன்பு இழைகளை நேர்த்தியாய் நெய்து காட்டிய கோமதியம்மாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  54. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ வி சார்...

    ReplyDelete
  55. //என் கமெட்ண்டுகளை நினைவுகொண்ட மஞ்சுபாஷிணி அவர்களுக்கும், நெகிழ்வையே நெஞ்சமாகக் கொண்ட வை.கோ. சாருக்கும், அன்பு இழைகளை நேர்த்தியாய் நெய்து காட்டிய கோமதியம்மாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.//

    என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ஜீவி ஐயாவுக்கு அநேக நமஸ்காரங்கள். செளக்யமா ஐயா?

    தங்கள் பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள் ஐயா.

    பிரியமுள்ள
    கோபு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது