07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 20, 2014

பனியைத் தேடி - மலைப் பயணம்

பனியைத் தேடி - மலைப் பயணம்

புது டில்லி ரயில் நிலையத்தில் காத்திருந்த சமயம், எனது நண்பனின் அண்ணன், எங்களைப்போல் அங்கு ரயிலுக்காக காத்திருந்த ஒரு குடும்பத்துடன் சிநேகம் பிடித்துக்கொண்டார். அந்த சிநேகம் எங்களுக்கு பின் பேருதவி செய்ய காத்திருக்கும் என்பதை நாங்கள் அப்பொழுது அறியவில்லை. மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின் ஒரு வழியாக ரயில் வந்து சேர்ந்தது. மெட்ரோ ரயிலைக் கண்டு வியந்தது போலவே, ஷடாப்தி ரயிலின் உட்புறத்தைக் கண்டு வியந்தேன். மிகவும் சுத்தமாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. 

"'டாய் ரயிலுக்கு இந்த ரயிலுடன் கனெக்சன் இருக்கும். நமக்காக அது காத்திருக்கும்' என்று என் நண்பன் சொல்லிய மொழி சற்று ஆறுதல் தர எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். டிக்கெட் முன்பதிவுடன் காலை உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்தது எனக்கு ரயில் ஏறிய பின் தான் தெரியவந்தது. ரயிலில் ஏறியவுடன் எல்லா இருக்கைகளுக்கும் ஒரு தண்ணீர் பாட்டில், மற்றும் இரு மொழி ( ஹிந்தி & ஆங்கிலம்)   செய்தித்தாள் வழங்கினர். சற்று நேரம் கழித்து, காலை உணவு பரிமாறத் தொடங்கினர். பணியாளர்கள் அனைவரும் சுத்தமான சீருடைகளுடன் ராஜஸ்தான் மாநில சிப்பாய்கள் போல் காட்சியளித்தனர். 

இங்கும் பிரட் ஆம்லெட் மற்றும் வடை பொங்கல் தான். வட இந்திய பொங்கலை உண்ண விருப்பமின்றி, பிரட் ஆம்லெட் வாங்கிக்கொண்டேன். ஒரு ட்ரேயில் இரண்டு துண்டு கோதுமை ரொட்டி, ஒரு ஆம்லெட், அமுல் வெண்ணை, ஒரு பாக்கெட் ஜாம், கத்தி  மற்றும் முள் கரண்டியுடன் (fork) பரிமாறினார். அருகில் அமர்ந்திருந்தவர் ஸ்பூன் வைத்து பொறுமையாக அந்த ஒரு கரண்டி பொங்கலை செய்தித்தாள் வாசித்துக்கொண்டே உண்டார். எனக்கு கையில் உண்டுதான் பழக்கம் என்பதால், அந்த உணவை விரைந்து உண்டேன். இந்த இரண்டு துண்டு ரொட்டிகள் காலை உணவா, இதை உண்டு எப்படி உயிர் வாழ்கின்றனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தபொழுது, நான் புது டில்லி நடைமேடையில் உண்ட பூரி எனது ஏப்பமாக வெளிவந்தது.

சற்று நேரம் கழித்து, அனைவருக்கும் ஒரு பிளாஸ்கில் வெண்ணீர் கொடுத்து, உடன் காப்பி தூள், டீத் தூள், அமுல் பால் பவுடர், சர்க்கரை முதலியவை வழங்கினர். எனக்கு காப்பி டீ குடிக்கும் பழக்கம் இல்லாததால், எனது நண்பனுக்கு டபுள் ஸ்ட்ராங் காப்பி கலந்து கொடுத்தேன். என் வாழ்வில் நான் முதல் முறை தயார் செய்த காப்பியும் அதுவே (ஹி ஹி ஹி ...). சற்றும் பயண அலுப்பே தராத அந்த ஷடாப்தி ரயில் பயணம் கல்கா வந்த பொது முடிந்தது. 

கல்கா ரயில் நிலையத்தில் இறங்கிய பொழுது, அங்கு டாய் ரயில் நிற்பதைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். ஆனால் எங்கள் ஆனந்தம் தொடர வில்லை. டிக்கெட் வாங்க முற்பட்ட பொழுது, அனைத்து டிக்கெட்களும் புல் என்று எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். அங்கிருந்து சிம்லா செல்ல வாடகை டாக்ஸி தான் ஒரே வழி என்று வெளியே வந்தால், அங்கு பெருங் கூட்டம் இருந்தது. நண்பனின் அண்ணன் விசாரித்ததில் அங்கு சின்ன கார்கள் அனைத்தும் புக் ஆகி விட்டன என்றும், டெம்போ மட்டும் தான் உள்ளது என்றும் தெரியவந்தது. நால்வர் மட்டும் செல்ல டெம்போ எடுத்தால் கம்பெனிக்கு கட்டுபடியாகாது என்று நாங்கள் தயங்கி, சிம்லா எப்படி செல்வது என்று விழித்தோம். அடுத்து டாய் ரயில் மறுநாள் காலை புறப்படும் வரை ரயில் நிலையத்தில் தங்குவதுதான் ஒரே வழி என்று நாங்கள் முடிவு செய்யும் சமயம், ஒரு வழி பிறந்தது. 

புது டில்லி ரயில் நிலையத்தில் என் நண்பனின் அண்ணன் சிநேகம் செய்த குடும்பம் எங்களுடன் டெம்போவில் வர சம்மதிக்க, எங்கள் டாக்ஸி செலவு பாதியாக குறைந்து, சிம்லா நோக்கிய எங்கள் டெம்போ பயணம் தொடங்கியது. டாய் ரயிலில் செல்வதை விட டெம்போ விரைந்து சிம்லா சென்றுவிடும் என்று எங்கள் ஏமாற்றத்தை நாங்களே சமாதானம் செய்துகொண்டோம். ரயில் நிலையத்தில் இருந்து, ஊருக்குள் வந்தவுடன், டெம்போ ஒரு கடைக்கு அருகில் நின்றது. டிரைவர் மொழியை அண்ணன் மொழி பெயர்த்து 'சிம்லாவில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் வேண்டும் என்றால் இங்கே வாங்கிக்கொள்ளுங்கள்' என்றான். 

எனது ஏழாம் வகுப்பு ஆசிரியர் சாம், அடிக்கடி சொல்லும் 'If you can't break the rules, bend them' என்ற வாக்கியம் தான் என் நினைவிற்கு வந்தது. 'நீங்க எல்லாம் நல்லா வருவிங்க சாமி' என்று நான் அந்த டிரைவரை பார்த்து பல் இளிக்க, தமிழ் தெரியாத அவன்,  நான் எதோ அவனைப் புகழ்வது போல் எண்ணிக்கொண்டு பதிலுக்கு அவனும் இளித்தான். டெம்போவில் அந்தக் குடும்பம் பின் இருக்கைகளில் அமர, மலை சாலைகளில் வாகனம் செல்வதை எனக்குப் பார்க்கக் பிடிக்கும் என்பதால் நான் டிரைவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன்.  

பொதுவாக வகானம் ஓட்டுபவர்கள் கைபேசியில் பேசுவது எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் இவனோ மலைப் பாதையில் ஓட்டும் பொழுது பேசிக்கொண்டே வந்தான். பேச்சு பின் சண்டையாகவும் மாறியது, சண்டையில் வண்டியின் வேகம் அதிகரித்தது, எனக்கோ 'பக் பக்' என்று இதயம் துடித்தது. சிம்லா மண்ணில் கால் வைத்து, வாத்தியார் போல் 'புதிய வானம் புதிய பூமி' என்று பாட வேண்டும் என்ற ஆசை ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க, ஒரு வழியாக எந்த வித சேதமும் இன்றி எங்களை மலை மீது கொண்டுவந்து சேர்த்தான். சிம்லா நகரில் எங்கும் உறை பனி இல்லாதது கண்டு நான் அஞ்சியபோழுது, பனியைத் தேடி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நம்பிக்கை ஊட்டினர்.   

முதலில் அந்தக் குடும்பத்தை அவர்கள் தங்கவிருக்கும் விடுதியில் இறக்கிவிட்டு பின் நாங்கள் செல்வது என்று முடிவு செய்தோம். அவர்களை இறக்கிவிட்டு நாங்கள் திரும்புகையில் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர்களின் ஒரு பை மட்டும் வண்டியிலேயே தவறவிட்டார்கள் என்று. சிம்லாவில் இருக்கும் சாலைகள் மிக மிக குறுகியவை, அங்கு வாகனத்தை நிறுத்தினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகம். மற்றவர்களுக்கு உதவும் பெரும் குணம் கொண்ட அண்ணன், ஓடும் வண்டியில் இருந்து எதையும் யோசிக்காமல் அவர்கள் பையுடன் இறங்கினார். 

எங்கள் விடுதிக்கு அருகில் இருக்கும் டன்னலில் (tunnel), இடம் தெரியாத அந்த புதிய ஊரில், அவர் வழி தவறாமல் சரியான பாதையில் வர, மொழி தெரியாத நாங்கள் பீதியுடன் காத்திருந்தோம்.      

*********************************************************************************************************
இன்றைய அறிமுகங்கள்:

நகைச்சுவையாக தனது அனுபவங்களை பகிர்வதில் இவருக்கு நிகர் இவரே தான். நகைச்சுவை நயம்பட வெளிவரும் எழுத்து இவருக்கு இயல்பான ஒன்று. தனது பாலிய கால நினைவுகளை அழகா தொகுத்து அதை வலையில் பகிர்ந்தார்.

'மின்னல் வரிகள்' தளத்தில் பால கணேஷ் எழுதிய 'என் பழைய கணக்கு' என்ற பதிவு தான் அது.    
             
*********************************************************************************************************

நகைச்சுவை பற்றி சிந்திக்கும் பொழுது, 'திடங்கொண்டு போராடு  காதல் கடிதப் பரிசுப் போட்டி'யின் முன்னோட்டத்திற்காக இவர் ஒரு கலகலப்பு கலந்த காதல் கடிதம்.

'Ideas Of Harry' என்ற தளத்தில் வாசகர் ஹாரி எதுதிய 'லவ் லெட்டரு எழுத ஆசபட்டேன்' என்னும் பதிவு.

*********************************************************************************************************
காதல் கடிதம் பரிசு போட்டியில் என்னை மிகவும் கவர்ந்த கடிதம் ஒன்று உண்டு. இவர் தற்பொழுது முகநூலில் அதிகம் இருப்பதாலும், நாட்டைக் காக்கும் பனியில் இருப்பதாலும் வலையில் அதிகம் எழுதுவது இல்லை.

'தம்பி' என்னும் தளத்தில் சதீஷ் அவர்கள் எழுதிய 'திருட்டுப் பார்வை பார்ப்பவளுக்கு' என்ற பதிவு.      

*********************************************************************************************************
பள்ளி காலத்தில் காந்தத்தை வைத்து நான் செய்யாத ஆராய்ச்சிகள் இல்லை, நண்பர்களுடன் போடாத சண்டை இல்லை. எனது கந்த நினைவுகளை தட்டி எழுப்பியது இவரது பதிவு.

'கரை சேரா அலை' என்ற தளத்தில் அரசன் எழுதிய 'நினைவுப் பாசிகள்' என்ற பதிவு.    

பொதுவாக எனக்கும் கவிதைகளுக்கும் வெகு தூரம். ஆனால் இவர் கவிதைகள் எனக்கும் புரியும்படி இருப்பது சிறப்பு. நீங்களும் ஒன்றை படித்து தான் பாருங்களேன் . 'மல்லிகைப்பூ தோலொன்று...'

*********************************************************************************************************
ஒரு சரித்திர நாவல் எழுத வேண்டும் என்பது இவரது ஆசை. அதற்கான பணியையும் தொடங்கி நிதானமாக பயணித்து வருகிறார். இவர் செய்யும் வரலாற்று ஆராய்சிகளை பார்க்கும் பொழுது இவரது படைப்பு சிறப்பாக வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

'இரவின் புன்னகை' என்ற தளத்தில் வெற்றிவேல் எழுதிவரும் 'வானவல்லி' என்னும் சரித்திர தொடர்.      

*********************************************************************************************************

விளம்பரம் : இன்று வாசகர் கூடத்தில் நான் எழுதிய பதிவையும் வாசிக்கவும். 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவின் தோல்வியடைந்த முயற்சி'  
*********************************************************************************************************
மேலும் சில அறிமுகங்களுடன் நாளை சந்திப்போம்.

புன்னகையுடன் 
ரூபக்   

19 comments:

  1. பிளாஸ்டிக் கவர்கள் உற்பத்தியை தடை செய்தால் ஒழிய... ம்ஹீம்...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  2. டாய் ரயிலுக்கு டிக்கட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இல்லையோ? உடன் பயனிப்பவர்களுடன் சிநேகம் ஏற்படுத்திக்கொள்வது இதுபோன்ற சமயங்களில் உதவும்....

    அறிமுகங்கள் அனைவரும் அறிந்தவர்களே... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. முன்பதிவு வசதி இல்லை என்பது போல் தான் என் நண்பன் கூறினான்

      Delete
  3. ரயில் பயணத்தில் கிடைக்கும் எதிர்பாரா நட்புகளும் உதவும்கறது உண்மைதான். அப்புறம்.. வாத்யார் பாடின இடங்கள்ல போய் போட்டோ எடுத்துக்கிட்டீங்களா இல்லயா..? இன்றைய அறிமுபங்கள் எல்லாருமே சிறப்பானவர்கள். சிறந்த எழுத்தாளர்கள். (எனக்குத் த்ற்புகழ்ச்சி அறவே பிடிக்காது. ஹி... ஹி.. ஹி...) ரொம்ப டாங்ஸுங்கோ பிரதர்!

    ReplyDelete
  4. அறிமுகங்களுக்கு (?!!) வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. //(?!!)// குறியீடு விளங்குகிறது :)

      Delete
  5. அறிமுகத்திற்கு நன்றி அண்ணா...

    ReplyDelete
  6. அன்பு தோழா!
    இன்றைய கட்டுரையும் மிக அருமை. தங்களின் சமூக அக்கறைக்கு பாராட்டுக்கள்.
    #வாகனம் ஓட்டும் போது கவனம் மிக முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. தினமும் தவறாமல் வந்து கருத்து பகிர்வதற்கு மிக்க நன்றி

      Delete
  7. "அவர் வழி தவறாமல் சரியான பாதையில் வர, மொழி தெரியாத நாங்கள் பீதியுடன் காத்திருந்தோம். ...... .பக்....பக்..... பயணம்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி . தொடர்ந்து என்னுடன் பயணியுங்கள்

      Delete
  8. நன்றி ரூபக்.. வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க..

    ReplyDelete
  9. கல்கா-ஷிம்லா வண்டியில் முன்பதிவு உண்டு - மற்ற ரயில் போல இரண்டு மாதங்களுக்கு பதில் இதில் ஒரு மாதம் முன்னதாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். இருந்தும், இதில் இருக்கைகள் குறைவு என்பதால் விரைவில் முன்பதிவு முடிந்து விடும்.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தகவல்களுக்கு மிக்க நன்றி வெங்கட்

      Delete
  10. சிறப்பான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள் ரூபக்! சிம்லா தொடர் சுவாரஸ்யமாக செல்கிறது!

    ReplyDelete
  11. ரூபக்.....நானே மறந்தாலும் அந்த லெட்டரை மறுபடியும் படிக்க வைத்த வலைச்சர அறிமுகத்திற்க்கு நன்றிப்பா....
    இன்னைக்குதான் பார்த்தேன்.நன்றிடா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது