07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 20, 2013

சில நேரங்களில் சில பதிவர்கள் - ஓர் அறிமுகம்


பல்லாயிரம் அடி உயரமுள்ள மலை மீது ஏறவேண்டுமானாலும் , சில நூறு அடிகள் தூரமுள்ள பயணம் என்றாலும் , நாம் முதலில் எடுத்து வைக்க வேண்டியது ஒரே ஒரு சின்ன அடிதான் - ஜப்பானிய பழமொழி



  எழுத்தில் கில்லாடிகள், பல்வேறு துறை வல்லுனர்கள், பதிவுலக சக்கரவர்த்திகள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று திறம்பட தம் பணியை செய்து இருக்கிறார்கள்.  அவ்வப்போது என்னைப்பற்றியும் சிலர் எழுதி இருக்கிறார்கள்.

அவர்கள் வரிசையில் ஒரு சாதாரண பிச்சைக்காரனாகிய எனக்கு இந்த பொறுப்பு அளிக்க சீனா அய்யாவும் , தமிழ்வாசி பிரகாஷ் அவர்களும் முன்வந்தபோது , நான் பிகு எல்லாம் செய்யவில்லை. உடனே இந்த பொறுப்பை மனமுவந்து ஏற்று கொண்டேன்.

அதற்கு காரணம் இருக்கிறது.

செய்தி தாள்களை பார்க்கிறோம். கொலை , கொள்ளை என வருகிறது..இந்த சம்பவங்கள் நடப்பது உண்மைதான், அது செய்தியாவதும் நியாயம்தான்.

ஆனால் உலகில் கெட்ட சம்பவங்கள் மட்டுமே நடப்பதில்லை. எத்தனையோ நல்ல செயல்கள் , பணிகள் , தொண்டுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, அதைப்பற்றியெல்லாம் செய்திகள் வருவது அபூர்வம்.


அதாவது நமக்கு யாராவது ஒரு தீமை செய்து விட்டால் , பார்ப்பவர்களிடம் எல்லாம் சொன்னால்தான் மனம் ஆறும்.  ஆனால் நன்மை செய்வர்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வது இருக்கட்டும். நன்மை செய்தவருக்கு நன்றி சொல்வதே குறைவுதான்.

இறையன்பு ஐ ஏ எஸ் தன் புத்தகம் ஒன்றில் முக்கியமான சம்பவம் ஒன்றை சொல்கிறார்.

பண்டைய கிரேக்க நாட்டில் ஒரு பிராமாண்டமான சிலை ஒன்று அமைக்கப்பட முடிவு செய்யப்பட்டது. உலகம் அழியும் வரை பெயர் சொல்லும் வகையில் அந்த சிலை இருக்க வேண்டும் என்பது திட்டம். பல்லாண்டுகள் பல பேர் உழைத்து , நினைத்து பார்க்க முடியாத பெருஞ்செல்வம் செலவிட்டு , சிலை அமைத்தார்கள். ஒரு வழியாக அமைத்து முடித்து விட்டு ,  அடுத்த நாள் திறப்பு நாளுக்கு தேதி குறித்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றார்கள்.

அடுத்த நாள் சிலை திறப்புக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த சிலை சிதைக்கப்பட்டு இருந்தது, அவர்கள் கனவு , உழைப்பு நொறுக்கப்பட்டு இருந்தது.

யார் இந்த பாதகத்தை செய்தது.. அவர்கள் தேட அவசியம் இல்லாமல் அந்த பாவி தானே முன் வந்து மக்கள் முன் சரணடைந்து விட்டு சொன்னான்.

“  எனக்கு மரண தண்டனை கொடுப்பீர்கள் என நன்கு அறிவேன். எனக்கு கவலை இல்லை. ஆனால் உலகம் உள்ளவரை , கிரேக்க வரலாற்றை சொல்லும்போதெல்லாம் என பெயரும் இடம் பெறும் அல்லவா..  அந்த சிலையை பற்றி சொல்லும்போதெல்லாம் என் பெயர் சொல்லப்படும் அல்லவா ..அது போதும். “ என்று சொன்னான் ( அவன் எண்ணம் ஈடேறக்கூடாது என்பதற்காக அவன் பெயரை வெளியிடாமல் ரகசியம் காக்க முயன்றார்கள்.எப்படியோ அவன் பெயர் வெளிவந்து விட்டது, ஆனால் இறையன்பு தார்மீக அடிப்படையில் அவன் பெயரை வெளியிடவில்லை.  நானும் கூகிள் செய்து பெயரை வெளியிடாமல் தவிர்த்து இருக்கிறேன் )

இந்த சம்பவத்தை சொல்லி இறையன்பு சொல்கிறார்/ “ தீமை செய்வதுதான் ஹீரோயிசம் என்ற போக்கு அன்றே இருந்து இருக்கிறது. எவ்வளவோ க்‌ஷ்டப்பட்டும் அந்த தீயவன் பெயரை மறைக்க முடியவில்லை. ஆனால் அந்த சிலையை வடிமைத்த சிற்பி, முதல் கல்லை கொண்டு வந்த தொழிலாளி பெயரெல்லாம் வரலாற்று வெள்ளத்தில் காணாமலேயே போய் விட்டது. ”


நான் இதை எல்லாம் சொல்ல காரணம் , இணையத்தில் ஆக்கபூர்வமாக பலர் எழுதுகிறார்கள். பதிவர்கள் சிலர், இதற்கென நேரம் ஒதுக்கி , நேர்த்தியாக , பத்திரிகைகளின் தரத்துக்கு நிகராக எழுதுகிறார்கள். அவர்களை ஒரு ரசிகனாக ரசிப்பதுண்டு.

இவர்களில் சிலருடன் எனக்கு நேரடி பழக்கம் உண்டு. சிலர் குடும்பத்துடன்கூட அறிமுகம் உண்டு. அவர்க்ளை நண்பனாக நேசிப்பதுண்டு.

இன்னும் சிலர் நேரடி பழக்கம் இல்லாவிட்டாலும் , மெயில் மூலமோ போன் மூலமோ பேசி தேவையான தகவல்கள் அளிப்பார்கள். சந்தேகங்கள் தீர்ப்பார்கள்.. இவர்களை நிபுணர்களாக மதிப்பதுண்டு,

இப்படி எத்தனையோ பேர்..எத்தனையோ சிந்தனைகள். எத்தனையோ அனுபவங்கள்.

அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவர்களைப்பற்றி அவர்கள் பதிவுகள் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என நெடு நாளாக எனக்கு ஓர் ஆசை.

எனவேதான் வலைச்சரம் வாய்ப்பு வந்தபோது உடனடியாக ஏற்றேன். இந்த ஒரு வாய்ப்பில் என்னால் எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். கொஞ்ச கால இடை வெளிக்கு பின் இரண்டாவது இன்னிங்ஸ் சான்ஸ் தருமாறு வலைச்சர நிர்வாகிகளுக்கு இப்போதே வேண்டுகோள் வைக்கிறேன்.

       இதில் நான் வலைப்பதிவுகளை அறிமுகம் செய்ய போகிறேன் என சொல்வதை விட , பதிவுகளை பகிர்ந்து கொள்ள போகிறேன் என்றே சொல்ல விரும்புகிறேன்.

   உதாரணமாக என்னை எடுத்து கொண்டால் , பதிவுலகில் மூன்றாண்டுகள் இயங்கி வருகிறேன்,. என் மேல் பேரன்பு கொண்டவர்களும் உண்டு, கடும் வெறுப்பு கொண்டவர்களும் உண்டு.   ஆனால் இதை தாண்டி , என்னை யாரென்றே தெரியாதவர்களும் , என் எழுத்தை படித்தே இராதவர்களும் கணிசமாக உண்டு,

ஆக ஒரு விதத்தில் என்னை சிலருடன் அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டிய நிலை. அதே சமயம் சிலருடன் அறிமுகம் தேவையில்லாத நிலை.

     இது பலருக்கும் பொருந்தும் , குறிப்பிட்ட தளத்தில் இயங்குபவர்களுக்கு , இன்னொரு தளத்தில் இயங்குபவர்களை பற்றி தெரியாத நிலை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் , ஒரு பதிவரை நன்கு தெரியும். ஆனால் அவரது எல்லா எழுத்துகளையும் படித்திருக்க மாட்டோம், ஓரிரண்டு விட்டு போய் இருக்ககூடும். அந்த பதிவுகளை யாராவது சொல்லும்போது அட..படிக்காமல் விட்டு விட்டோமே . நன்றாக இருக்கிறதே என தோன்றும்.

எனவே , நான் எனக்கு பிடித்தவற்றை , படித்தவற்றை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்., சிலருக்கு அறிமுகமாக தோன்றலாம். சிலருக்கு பகிர்தலாக தோன்றலாம். ஆனால் கண்டிப்பாக அனைவருக்கும் வாசிப்பனுபவம் இனிதாக அமையும்.

புதிய பதிவர், பழைய பதிவர் , பெண் பதிவர் , ஆண் பதிவர், திரு நங்கை பதிவர் இந்து பதிவர்,. இஸ்லாமிய பதிவர் , நண்பர்கள் , எதிரிகள் என்றெல்லாம் பிரிக்க போவதில்லை. .   பதிவுகளை மட்டுமே பார்க்க போகிறோம்.

புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவதுதான் வலைச்சரத்தின் நோக்கம் .  ஆனால் புதிய பதிவர் என்பதை மட்டுமே தகுதியாக நான் வைக்கப்போவதில்லை. நேற்று எழுத ஆரம்பித்தவர்கூட ஒரு நல்ல விஷ்யம் சொல்லி இருந்தால் , அந்த பேசுபொருளின் அடிப்படையில் அவர் எழுத்துகளை பகிர்ந்து கொள்வேன் என்பதால் , இயல்பாகவே புதிய பதிவர்களையும் நாம் பார்த்து விடலாம்.

பதிவுலகம் எனும் கடலில் மூழ்கி , இலக்கியம் , ஆன்மீகம் , நாத்திகம் , சமூகவியல் , பொருளாதாரம் , இசை என முத்தெடுக்க போகிறோம். இந்த பயணத்துக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

*******************************************************************


         என்னை பற்றி சிறிய அறிமுகம். என் வலைப்பூ www.pichaikaaran.com

சிலருக்கு சொல்வதற்கு ஏராளமான விஷ்யங்கள் இருக்கும். அதனால் எழுதுவார்கள். ஆனால் நான் எழுத தொடங்கிய காரணம் கற்பிப்பதற்காக அல்ல. கற்பதற்காக.
ஒவ்வொரு நாளும் கற்கிறேன். ஒவ்வொரு  நபரிடம் இருந்தும் கற்கிறேன். குறிப்பாக சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் புத்தகங்களை ஆழ்ந்து படித்து விஷ்யங்களை கிரகிக்க முயல்கிறேன்.

இப்படி கற்றவற்றை பற்றி எழுதும்ப்போது , மேலும் சில அறிமுகங்கள் கிடைக்கின்றன.,குறைகள் சுட்டி காட்டப்படுகின்றன. மேலும் எழுதுகிறேன். மேலும் கற்கிறேன். இது ஓர் இனிய சுழற்சி.

இப்படி அறிவு பிச்சை எடுப்பதால் என்னை சிலர் பிச்சைக்காரன் என அழைக்க தொடங்கி இன்று அதுவே என் பெயராகி விட்டது. எனவே என்னை பிச்சை என்றோ பிச்சைக்காரன் என்றோ அழைக்கலாம். என் எழுத்துலக நண்பர்கள் அப்படித்தான் அழைக்கிறார்கள்.


இலக்கியம் , உலக சினிமா என பல விஷ்யங்களை அறிமுகம் செய்து வைத்தது இந்த  நண்பர்க்ள்தான்.

 நான் பார்த்த சில படங்களில் இரு உன்னத படங்களை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

*************************************************************8

காதல் என்பது விட்டு கொடுத்தல் , எந்த நிபந்தனையும் இன்றி என்பார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.

காதலின் வெற்றி என்பது திருமணமோ , ஊர் சுற்றலோ , கிளர்ச்சியோ அன்று. காதல் என்பதே காதலின் வெற்றி. காதலிக்க தெரிந்தாலேயே , அன்பு செலுத்த தெரிந்து விட்டாலேயே போதும் , வாழ்க்கை வெற்றி பெற்று விட்டது. அந்த காதல் மூலம்வேறு எதுவும் அடைய வேண்டியதில்லை. காதல் தன் அளவில் பூரணமானது என்பதை சொல்லும் அ ஷார்ட் ஃபில்ம் அபவுட் லவ் .


காதலா- காமமா? அலசி ஆராயும் வேற்று மொழி படம் ***********************************************************
தான் மணம் வீசினால் , எல்லோரும் பாராட்டுவர்கள் என நினைத்து ஒரு ரோஜா மணம் வீசுவதில்லை. அதன் இயல்பு  மணம் வீசுவது . இயல்புப்படி அது இருக்கிறது, அதேபோல மகான்கள் , சான்றோர்கள் இயல்பு அன்பு செய்வது. பாராட்டோ , தூற்றலோ அவர்களை மாற்றாது என சொல்லும் வித்தியாசமான படம் இது..




புரட்சி தலைவராக இயேசு - மறக்க முடியாத ஆங்கில திரைப்படம்  ஒரு மகான் அற்புதங்கள் செய்ய வேண்டியதில்லை,. மகான் என்பவனே ஓர் அற்புதம்தான்.


நான் தீயாக இருந்திருந்தால் எரித்து இருப்பேன், மரம் வெட்டியாக இருந்திருந்தால் வெட்டி இருப்பேன். ஆனால் நானோ அன்பாக இருக்கிறேன். அன்பைத்தவிர வேறு ஏதும் என்னால் செய்ய இயலாது

*********************************************************************
வெறுப்பு , அன்பு என நம் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப மாறும் தன்மை கொண்டது தண்ணீர் என ஆய்வுகள் நிரூபிக்கின்றன. நம் உடல் பெரும்பாலும் தண்ணீரால் ஆனது. ஆகவே , நம் உணர்வுகள் மேல் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லும் சூப்பர் புத்தகம் இது..
உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தண்ணீர்- ஆச்சர்யமளிக்கும் புத்தகம்...


29 comments:

  1. பகிர்வுகளைப் பற்றிய அறிமுகமும், சுய அறிமுகமும் நன்று...

    அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனிய அறிமுகம்... பதிவர்களைப் பிரிக்காதது புதுமை... நன்றி..

    ReplyDelete

  3. நன்றி தனபாலன்...

    ReplyDelete
  4. நன்றி ஸ்கூல் பையன்

    ReplyDelete
  5. பிச்சைக்காரருக்கு எப்படி , இப்படி தங்கமும் வைரமும் கலந்த எழுத்து நடை வாய்க்கப்பெற்றிருக்கிறது! இன்றுதான் முதன் முதலாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன். சந்தேகமே இல்லை...நீங்கள் ஒரு 'அம்பானி'!

    ReplyDelete


  6. உங்கள் வலைக்குச் சென்றேன்.
    தேடலில் பிச்சைக்காரனாய் இரு. உலகில் பார்வையாளனாய் இரு.
    என்று இரு வாக்கியங்களில் ஒரு சித்தாந்தத்தையே
    பொதித்து வைத்து இருக்கிறீர்கள்.

    பிச்சைக்காரன் இது தான் வேண்டும் என
    இச்சைப்படின் என்ன நடக்கும் ?
    கும்பி காயும். குவளை காலியாய் இருக்கும்.
    உண்மைதான். மறுப்பதற்கில்லை.

    உலகத்தை உன் நோக்கில் கொண்டு வருவது என்பதெல்லாம்
    லட்சிய வாதம்.
    உனக்கென எது கிடைக்கிறதோ அதைப்பெற்று ஒரு
    பார்வையாளனாகவே இருந்து போவது,
    அமைதியாக இருப்பது யதார்த்தம்.

    அதுவும் சரியே.
    ஆனால் ஒரு வினா.

    உங்கள் பசி அடங்கினால் போதுமா ?
    பிறர் பசித்திருக்க நாம்
    பார்வையாளராய் இருப்பதைத் தவிர்த்து
    பகிர்ந்துண்ண வேண்டாமோ ?

    உங்கள் யேசுபிரான் பற்றிய படம் குறித்த‌
    விமர்சனம் என்னை வெகுவாக ஈர்த்தது.

    நீங்கள் பார்வையாளராக மட்டும் இல்லை.
    எனக்கும் உங்கள் பார்வையில்
    பங்களத்திருக்கிறீர்கள் இல்லையா ?

    நன்றி பல.


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  7. அறிமுகம் மிக மிக அருமை
    தங்கள் பணிவான அறிமுகம்
    நீங்கள் செல்வந்தர் என்பதைக்
    காட்டிக் கொடுத்துவிட்டது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்...நல்ல படைப்புகளை அறிமுகம் செய்ய...

    ReplyDelete
  9. சுப்பு தாத்தா... உங்கள் பின்னூட்டமே ஒரு கட்டுரை போல அற்புதமாக இருக்கிறதே... கற்பதற்காகவே எழுதுகிறேன் என நான் அறிமுகத்தில் சொன்னது உங்களை போன்றோரை மனதில் வைத்துதான்... நன்றி

    ReplyDelete
  10. ரமணி சார்,,,உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி

    ReplyDelete
  11. ஹமீத் அவர்களே..ஒரு பிச்சைக்காரனை அம்பானி ஆக்கி விட்டீர்களே !! அன்புக்கு நன்றி

    ReplyDelete
  12. சமுத்ரா,,,ஊக்கமளித்ததற்கு நன்றி

    ReplyDelete
  13. முதிர்ந்த சிந்தனையின் வெளிப்பாடு. மிக அற்புதம்.

    ReplyDelete
  14. தங்கள் வலைப்பக்கம் சென்று பிறகே இங்கு வருகிறேன். "தேடுவதில் பிச்சைக்காரனாக இரு " எத்தனை அர்த்தங்களை உள்ளடக்கிய வார்த்தை அருமைங்க. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நன்றி சசி கலா மேடம்

    ReplyDelete
  16. என்னது...முதிர்ந்த சிந்தனையா...பெருந்தன்மைக்கு நன்றி ஜோதிஜீ

    ReplyDelete
  17. வாங்க பிச்சைக்காரன். இந்த ஒருவாரம் ஃபுல் மீல்ஸ் போடுவீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  18. அறிமுகம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. அறிமுகத்திலேயே வார்த்தைகளில் அடித்து ஆடுகின்றீர்கள் தொடரட்டும் பணி!

    ReplyDelete
  20. சிறந்த கண்ணோட்டம், வரவேற்கிறேன்.
    பத்திரிகைக்காரரைவிடத் தரமாக எழுதும்
    பதிவர்களும் இருக்கிறார்கள்!

    ReplyDelete
  21. தங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.பல புதிய தளங்கள் எனக்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  22. அறிமுகம் அருமை. தொடருங்கள்

    ReplyDelete
  23. பதிவர்களைப் பற்றிய உங்கள் கருத்துகள் நன்றாக இருக்கின்றன.
    உங்கள் பதிவையும் படித்தேன்.
    வலைச்சர ஆசிரியராக வெற்றிகரமாக வலம் வர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. அறிமுகம் அருமையாக இருக்கிறது. உங்கள் வலைத்தளத்தையும் பார்த்தேன். எழுத்து உங்கள் விரல்களில் விளையாடுகிறது..அருமை! வாழ்த்துகள்

    ReplyDelete
  25. அருமையான தொடக்கம்

    ReplyDelete
  26. வணக்கம்

    சிறப்பான அறிமுகம் இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  27. அறிமுகம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  28. பகிர்வுகளைப் பற்றிய அறிமுகம் வித்தியாசமாக இருக்கின்றது.

    வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது